பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 29, 2015

80. சமூகம் - மாலை


                நமக்கு முடியாத காரியத்தைக் கைவிடலாகாது. நம்மைக்காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே கொடுத்து அவன் கீழே சிற்றாளாயிருந்து தொழில் பழகிக் கொண்டு, பிறகுநாமாகச் செய்ய வேண்டும். இதை நாட்டுக் கோட்டைச் செட்டிகளும் கவனிக்கலாம். காங்கிரஸ் சபையாரும் கவனிக்கலாம்.     
  
                 *                  *                *                 *               *                *                *

              ஒரு தரம் ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போனால் பிறகு அதை மாற்ற முடியாது. ஆதலால் புதிய வழக்கத்தைத் தொடங்குவோர் பின் வரக்கூடிய பலாபலன்களைத் தீர யோசனை செய்தபிறகு தொடங்க வேண்டும்.

             இது அனேகமாக எல்லா மனிதருக்கும் நினைப்பூட்டவேண்டிய விஷயம். மாறுதல் இயற்கை, நல்லபடியாக மாறிக்கொண்டுபோதல் புத்திமான்களுக்கு லக்ஷணம்.     

                  *                   *                 *                   *                 *                 *                 *

            மஹம்மதிய புஸ்தக சாலைகள், வாசகசாலைகள் கல்விச் சங்கங்கள் முதலியவற்றிலே ஹிந்து பண்டிதர்களும், ஹிந்துக்களின் கல்விக் கூட்டங்களிலே முஹம்மதிய வித்வான்களும் வந்து உபந்யாஸங்கள் செய்யும் காட்சி சில நாளாக நமது தேசத்தில் அதிகப்பட்டு வருகிறது. நமது ஜனங்களுக்குக் கொஞ்சம்கொஞ்சம் கண் திறக்கிறது. எல்லா வித்தைகளும் கலந்தால் தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். "ஒரு குழம்புக்குள்ளே இரண்டு "தான்" போட்டாளாம்; ''தான்'' தெரியாதா, குழம்புத் தான்; ஒன்று கத்திரிக்காய், ஒன்று உருளைக் கிழங்கு! இதிலே கத்திரிக்காய், உருளைக்கிழங்கைத் தின்று விட்டதாம்" என்றொரு பச்சைக் குழந்தைக் கதையுண்டு. கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம்.

                  முஹம்மதிய சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டால்ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.   
  
                      *                  *                   *                  *                *                  *

                 ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது. ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும். திரும்பத்திரும்ப நேராக்கிக் கொள்ள வேண்டும். நமது தேசத்திலே (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேக்ஷிக்கிறார்கள். இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது. ஊதுகிறபோது ஊதினால் விடிகிறபோது விடியும். சாஸ்திரப்படிப்பு முக்கியம்.  அதிலேதான் நன்மை யெல்லாம் உண்டாகிறது. ஸயின்ஸ் மனித ஜாதியை உயர்த்திவிடும். அது இஹத்துக்கு மாத்திரமேயன்றி பரத்துக்கும் ஸாதனம் ஆகும். காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி காட்டுவானோ?

                நமது பூர்விகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாமல் விளங்கினார்கள். அந்தக் காலத்து லௌகீக சாஸ்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்குந் தெரியாது இந்தக் காலத்து ஸங்கதிதான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு.

               பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது. இதைக் கருதி அறிவுடைய தகப்பன்தன் பிள்ளைக்கு வயிறு நிறைய சோறு சேர்த்துக் கொடுத்த பிறகு தான் பக்ஷணம், பழம், மிட்டாய் ல்லாவிட்டால் ஊதுகுழாய் வாங்கிக் கொடுக்கவேண்டும். ஒருவன் ஊருடன் கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம் போட வேண்டும். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தம தர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்குக் கஞ்சிகாட்ட  முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரிய வித்வானிருந்தும் பிரயோஜனமென்ன?  நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம் அவசியமில்லை.  சில நாட்டுக் கோட்டைச் செட்டிகள் நாகரீகமாகி இந்தக் காலத்தில் பணம் செலவு பண்ணும் மாதிரியைப் பார்க்கும்போது பழைய காலத்து அநாகரீகமே விசேஷமென்று தோன்றுகிறது. முன்பெல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோயில் கட்டுவார், சத்திரங்கள் வைப்பார், பள்ளிக்கூடம் வைப்பார். இதெல்லாம் அநாகரீகமென்று தள்ளிவிட்டுச் சில புது நாகரீகச் செட்டிகள் காட்டு நெருப்பிலே பசு நெய்யைக்கொண்டு கொடுக்கிறார்கள். வேசைக்கும், கூத்துக்கும், வீண் விருந்துக்கும் செலவிடுகிறார்கள். நாகரீகம் வேண்டியதில்லை; முதலாவது சகல ஜனங்களுக்கும் சோறு கண்டுபிடி. நாட்டுக்கோட்டையார் மாத்திரமில்லை. எல்லாச் செட்டியாரும் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

ஒரு விரத மெடுத்தால் அது கலையவிடக்கூடாது. இன்னொருதரம் எதற்காகச் சொல்ல வந்தேன் தெரியுமா?ஒருவன் யோக சாஸ்திரம் பழகப்போய் மௌனவிரதம் எடுத்தான். அப்போது அவனுக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. பல கடன்காரர்கள் வந்தார்கள். ஒரு புது சிஷ்யன் வந்தான். இராத்திரியில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். இரண்டு விருந்துகள் வந்தன. ஒரு கல்யாணம் வந்தது, அவசியமாய்ப் போய்த் தீரவேண்டியது. இன்னும் பல விஷயங்கள் வந்தன, ஒரே நாளில்! அவன் மௌன விரதத்தைக் கலைத்துவிட்டான். உடனே வயிற்றுக் கடுப்பு திர்ந்து போய்விட்டது. கடன், சிஷ்யன், திருடன், கல்யாணம் தீர்ந்து போய்விட்டன. மறுநாள் ஒரு தொல்லையுமில்லை.

பிறகு "ஹா! இந்த ஸங்கடங்களெல்லாம் இத்தனை விரைவாகத் தொலைந்து போமென்று தெரிந்தால் நான் மௌன விரதத்தைக் கலைத்திருக்கமாட்டேனே" என்று சொல்லி அந்த மனிதன் வருத்தப்பட்டான். எல்லா விரதங்களுக்கும் இதுதான் விதி. நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத் தக்க மன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத் தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும்.அந்த ஸங்கடங்களை யெல்லாம் உதறி யெறிந்து விட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்றவேண்டும். விரதம் இழந்தார்க்கு மானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.


No comments: