பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி)


40.இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி)

அவர் வாழும் அதே ஊரில் பிறந்து, வளர்ந்து படித்து வேலையும் பார்த்தவர். திருமணமாகி குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்கள் பிழைப்பு தேடி, வெளி நாடுகளுக்கும், வெளி ஊர்களுக்கும் சென்று விட்டார்கள். ஒரே பெண் திருமணமாகி புகுந்த வீடு சென்று விட்டாள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவரை அவரது மகன்கள் தங்களுடன் வந்துவிடுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை. அப்படி இந்த ஊரில் என்னதான் இருக்கிறது. ஆணி அடித்தது போல இங்கேயே உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறீர்களே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அவர் கேட்கவில்லை. அவருக்கு அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஊரில். அதற்கு அவரது மனதைப் புரிந்து கொண்டால்தான் விடை காண முடியும். அவர் நினைவு தெரிந்து பார்த்தது அந்த ஊரில் அந்தத் தெரு, செடி, கொடி, மரங்கள், மனிதர்கள் இவைகளைத்தான். அவர் பழகியது, படித்தது அனைத்தும் அங்கேதான். தான் வாழ்ந்து முழுமையாகப் பூர்த்தியடைந்த பிறகும் அந்த ஊரைப் பிரிந்து வாழ முடியாது என்று அவர் மனம் உணர்ந்தது. தனது முடிவும் அதே ஊரில் அதே சூழ்நிலையில்தான் இருக்க வேண்டுமென்று கருதினார். அதில் என்ன தவறு? மனைவியும் போய்ச்சேர்ந்த பிறகும் அவர் அந்த மண்ணில் வாழ்வதையே விரும்பினார். மகாகவி பாரதி பாடினார்:-

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலையள் ஈன்று அமுதூட்டித் தழுவியதும் இந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வ்ளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

இந்த கருத்துக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல, ஊர்களுக்கும் உண்டு என்பதை இவர் மெய்ப்பித்து வந்தார். பல்பொருள் கொடுத்து வலிய அழைத்தாலும் இவர் தன் சொந்த மண்ணை விட்டு அகலாமல் வாழ்ந்த வாழ்க்கை இனியது.

பெரிய புராணத்தில் வரும் ஒரு அடியாரின் வரலாற்றில் சிவபெருமான் அந்தத் தொண்டரைச் சோதிக்க விரும்பி ஒரு நாள் இரவு, கடும் மழை பொழியும் நேரத்தில், அகாலத்தில் அவரிடம் வந்து தனக்குப் பசிக்கிறது உணவு கொடு என்கிறார். அந்த அடியோரோ சிவனடியாருக்கு உணவு தருவதையே தனது கடமையாகக் கொண்டவர். அப்படி சிவபெருமான் வந்து கேட்கும் நேரத்தில் அவர் வீட்டில் உணவுக்கு எதுவும் இல்லை. அன்று மாலைதான் விதை நெல்லைக் கொண்டு போய் வயலில் தூவிவிட்டு வந்தார். ஆகவே அந்த சந்நியாசியை உட்காரவைத்துவிட்டு இருட்டில் மழையில் வயலுக்குச் சென்று அன்று வயலில் தூவிய நெல்லைத் துழாவி எடுத்து வந்து குத்தி சோறாக்கி உணவு படைத்தாராம். அப்படிப்பட்ட சோதனை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது. விதை நெல் என்பது ஒன்றை நூறாக்கி பலமடங்கு பெருக்குவதற்காக ஏற்பட்டது. அதைக் குத்தி, புடைத்து சோறாக்கித் தின்றுவிட்டால் பின்னர் விளைச்சல் இல்லாமல் போகாதா? செடி கொழுந்துவிட்டு வளரும் நேரத்தில் அதனைக் கிள்ளி விட்டால் அது வளர்ந்து பலன் கொடுப்பது எப்படி? ஆகையால் விதைக்கான தானியங்களை விதைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைக் குத்தி உண்ணக் கூடாது என்பது இனியது.

சிலர் இருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றால், சும்மா இருக்கிறேன் என்பார்கள். சும்மா என்றால் எதுவுமே செய்யாமல் இருப்பது. அப்படியானால் அவரது மனம் சோம்பித் திரியும். சோம்பல் உள்ளவன் மனம் இஷ்டம் போல் உலாவும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Idle man's brain is devil's workshop என்று. சோம்பித் திரிபவனின் மனம் பிசாசின் இருப்பிடம் என்பது உண்மை. ஆகவே சோம்பித் திரிந்து, நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல் நல்ல நூல்களைப் படித்துப் பண்பட்டு நல்ல மனிதனாக வாழ முயற்சிக்க வேண்டும்.

"பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்."

பொருள்: பத்துப் பொருள் கொடுத்தாலும் தன் சொந்த ஊரில் வாழ்வது இனியது; விதைக்கான நெல்லைக் குத்தி உண்ணாத இயல்பு இனியது; நாளை வீணாக்கி வெட்டிப் பொழுது கழிப்பதிலும், நல்ல நூல்களைக் கற்பது இனியது.

இதுவரை இனியவை நாற்பதைப் பார்த்தோம். இவற்றில் சில இந்த காலத்துக்கு ஒத்துப்போகாமல் இருந்தாலும், இவையெல்லாம் பொதுவான நீதி என்பதால் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் என்றும் இன்பம், எதிலும் இன்பம். வாழ்க்கைப் பயனுடையதாக அமையும்.


"இனியவை நாற்பது" (39)

39. இனியவை முப்பத்தியொன்பது.

ஒரு நாள் நடு வயது பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாகச் சென்று 'அம்மா! பிச்சை போடுங்க' என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான். பல வீடுகளில் ஏதோ காசோ, அல்லது அரிசியோ கொண்டு வந்து போட்டார்கள். அவனைப் பார்த்தால் உடலில் ஊனம் எதுவும் இருப்பதாகவோ, அல்லது வயதானவனாகவோ தெரியவில்லை. நன்றாக 'கிண்'ணென்று ஆரோக்கியமான உடலோடுதான் இருந்தான். பின் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் செய்வானோ, அருகில் வந்ததும் அந்த வீட்டுக்காரர் கேட்டார், இந்தாப்பா, இந்த தோட்டத்தைக் கூட்டிக் குப்பையை எடுத்துப் போய் தொட்டியில் போடு, காசு தருகிறேன் என்றார். அதற்கு அவனுக்குக் கோபம் வந்ததே பார்க்க வேண்டும். பிச்சை போட இஷ்டம்னா போடு, இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எனக்கு வேலை கொடுக்கச் சொல்லி உன் கிட்டே கேட்டேனா என்று படு சண்டைக்குப் போய்விட்டான். அதற்கு அவர் நீ உடல் நிலை நன்றாகத்தானே இருக்கிறாய் பின்னே எதற்காகப் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான் அவன் அவரைப் பிடி பிடியென்று பிடித்து விட்டான். அவருக்கு இவனிடம் போய் ஏன் வாயைக் கொடுத்தோம் என்று தலை குனிந்து உள்ளே போய்விட்டார். அவன் அங்கிருந்து கண்ணுக்கு மறையும் வரை திட்டிக் கொண்டே போனான். அப்படி அவன் திட்டும்படியாக அவர் அவனை என்ன கேட்டுவிட்டார்? வேலை செய் கூலி தருகிறேன் என்றது தவறா? இல்லை பிச்சை எடுப்பது என்பது அவனது பிறப்புரிமை, போட வேண்டியது மக்கள் கடமை என்ற எண்ணத்தை அவன் மனதில் ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு முறை ஒரு முதியோர் இல்லத்து நிர்வாகிகள் அவர்கள் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்த வயதானவர்களை நேர்முகம் காண்பதற்காக வரச்சொல்லி யிருந்தார்கள். பலர் வந்திருந்தனர். அதில் ஒருவன் சுமார் 35 அல்லது 40 வயதிற்குள் இருக்கும் நல்ல திடகாத்திரமான ஆள். திருமணம் ஆகவில்லை. எப்போதாவது சமையல் வேலைக்கோ அல்லது பரிமாறவோ கூப்பிட்டால் போவானாம். அவன் முதியோர் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்தான். இல்லத்து நிர்வாகி அவனிடம் உனக்கென்ன அவசியம் முதியோர் இல்லத்துக்கு வந்து சேருவதற்கு. நீ இன்னும் ஐம்பது வருஷம் இருக்கலாம். அதுவரை முதியோர் இல்லத்தில் இலவசமாக சாப்பிட்டுப் பொழுது போக்கவா என்றார். அவன் சொன்னான், சேர்த்துக் கொள்வதாக இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள், அநாவசியமாகப் பேச வேண்டாம் என்று சண்டைக்கு வந்து விட்டான். இப்படியும் சில மனிதர்கள். கேட்பது பிச்சை. அப்படிக் கேட்குமிடத்தில் கோபப்பட்டு சண்டைக்குப் போவது சரியா? அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது இனியது என்கிறது இந்தப் பாடல்.

ஒருவர் மிகச் சிறிய குடிசை வீட்டில்தான் வாழ்ந்து வந்தார். விவசாயக் கூலி வேலைக்கு யார் கூப்பிட்டாலும் சென்று வருவார். தினமும் சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு யாரிடமும் போறாமையோ, வருத்தமோ இல்லை. பொதுக் காரியங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொள்வார். பெரிய வீட்டுக்காரர்கள் கலந்து கொள்கிறார்களே என்று இவர் எங்கும் ஒதுங்கிப் போவதில்லை. எல்லோரிடத்தும் அன்போடு பழகுவார். ஆகவே இருக்கும் இடம் குடிசை என்றாலும், மனத்தால் ஆரோக்கியமாகவும், மாட்சிமையோடும் வாழ்ந்த வாழ்க்கை இனியது.

அரசுப் பணியில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும் ஒருவருக்குத் தான் மேலும் பதவி உயர்வு பெற்று அதிகாரியாக வந்து பணியாற்ற வேண்டுமென்கிற ஆசை நிறைய இருந்தது. ஆனால் அவர் நேர்மையானவராகவும், லஞ்ச லாவண்யங்களில் ஆர்வமில்லாதவராகவும், மக்கள் பணியில் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார். இவருக்கு மேல் நிலையில் இருப்பவர்களை இவர் மகிழ்ச்சியடைய வைக்கவில்லை, மாறாகத் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்றினார். இப்படி நேர்மை தவறாமல் இருந்தால் உயர்வுகள் கிடைக்குமா? கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளறவோ, உற்சாகம் இழக்கவோ இல்லை. அவருடைய பணிகளிலும் எந்தவித குறைவும் இல்லாமல் வழக்கம் போல நடந்து கொண்டார். அற வழியிலிருந்து நீங்க வைக்கும் மனத் தளர்ச்சி ஏற்படாமல் வாழ்ந்த அவரது வாழ்க்கை இனியது.

"பிச்சை புக்குண்பான் பிளிறாமை முன் இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்ற பேராசை கருதி அறனொரூம்
ஒற்கம் இலாமை இனிது"

ஒற்கம்: மனத் தளர்ச்சி

பொருள்: பிச்சையெடுப்பவன் கோபம் கொள்ளாமல் இருப்பது இனிது; எளிய குடிசையில் வாழ்ந்தாலும் துன்பமோ வருத்தமோ இல்லாத மாட்சிமை இனியது; தன் ஆசை நிறைவேறு வதற்காக அறவழி பிறழ்ந்து மனத் தளர்ச்சி அடையாமை இனிது.


"இனியவை நாற்பது" (38)

38. இனியது முப்பத்தியெட்டு.

ஒரு மனிதனுக்கு அவனுக்கென்று உறவு, நட்பு என்று பெருந்திரளானவர்கள் சுற்றியிருந்தால் அவனுக்கு இருக்கும் தைரியமே தனிதான். தனி மனிதனாக இருந்தால் எங்கு, எப்போது, யாரிடமிருந்து ஆபத்து வருமோ என்கிற அச்சம் இருக்கும். ஆட்கள் சூழ இருப்பவனுக்கு அந்தக் கவலையே கிடையாது. எவர் எதிர்த்து வந்தாலும் அவர்களைச் சமாளித்து அனுப்ப மனிதர் கூட்டம் சுற்றிலும் இருக்கிறதே. ஆகவே தனி மரமாக இருப்பதைக் காட்டிலும் தோப்பாக இருப்பது நன்று. நம்மைச் சுற்றி நட்பும், சுற்றமும் சூழ்ந்து இருந்தால் அவனுடைய ஆயுதம், படைக்கலம் பெருமையுடையது. அந்த நிலைமை இனியது.

இப்படி உறவும் நட்பும் சூழ இருப்பவனுக்கு பகை ஏற்படுவது கிடையாது. அப்படி யாரேனும் பகைவர் இருந்தாலும் இவனைச் சுற்றி இருக்கும் படை பலத்தைப் பார்த்து, இவனிடம் மோதக் கூடாது இவனுக்கு ஆள்பலம் அதிகம் என்று விலகி விடுவார்கள். ஆகையால் யாரையும் விரோதித்து ஒதுக்கி விடாமல் எப்போதும் மக்கள் சூழ, உறவும் நட்பும் சூழ இருப்பது இனியது. அவனது எதிர்ப்பை சமாளிக்கும் தன்மை இனிதாகும்.

முன்பெல்லாம் கிராமங்களில் அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசுவும் கன்றும் கட்டாயம் இருக்கும் இன்று போல காகிதப் பொட்டணங்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப் பட்ட பாலுக்காக வரிசையில் நிற்கும் வழக்கம் அப்போதெல்லாம் கிடையாது. ஒன்று அவரவர் வீட்டில் ஒரு பசு வளர்ப்பார்கள். அல்லது அடுத்துள்ள இல்லத்தில் பசு இருப்பவரிடம் பால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது பசு வளர்ப்பது என்பது அரிதாகப் போய்விட்டது. வீட்டுக்கு திடீரென்று விருந்தாளி வந்து விடுகிறார். உடனே நாம் குளிர்சாதனப் பெட்டியில் வாங்கி வைத்திருக்கும் பால் பொட்டணத்தைத் தேடுகிறோம். இல்லாவிட்டால் கடைக்குச் சென்று அங்கு குளிர்சாதனப் பெட்டியிலுள்ள பாலை வாங்கி வருகிறோம். சற்று இருங்கள் இதோ பால் கறந்து வருகிறேன். பால் அருந்திச் செல்லுங்கள் என்று சொல்லுவார் இல்லை. இடமும் வசதியும் இருக்குமானால் ஒவ்வொரு வீட்டிலும் கன்றோடு ஒரு பசுவையும் வளர்ப்பது இனியது. அப்படிப்பட்ட இல்லத்தில் விருந்தினராகப் போவது அதனினும் இனிது.

"சிற்றாளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன் இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து."

பொருள்: ஆள்பலம் உள்ளவனின் ஆயுதம் பலம் உள்ளது. உறவினர்கள் அதிகம் உள்ளவர்களால் பகையை எளிதில் சமாளிக்க முடியும் என்பது இனியது; கன்றும் பசுவும் உடையவன் வீட்டில் விருந்தாகப் போவது இனியது.

"இனியவை நாற்பது" (37)

37. இனியவை முப்பத்தியேழு

ஒரு முதியவர் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தார். ஓட்டுனர் பேருந்தை அவசரமாக நிறுத்தும் போதெல்லாம் இவர் தடுமாறி விழப்போனார். ஐயோ பாவம் என்று உட்கார்ந்திருந்த எவரும் இவருக்கு இடம் தரவில்லை. ஆனால் உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன், இவர் ஒருமுறை விழப்போன தருணம் சொன்னான், "ஏ பெரிசு, நல்லா பிடிச்சுக்கிட்டு நில்லு" என்று. அவனுக்கு ஒரு நினைப்பு; தான் என்றும் இப்போது போலவே சிறிசாகவே இருக்கப் போகிறோம் என்ற எண்ணம். மூப்பும், முதிர்வும் அனைவருக்கும் வந்தே தீரும் எனும் உண்மையை அவன் புரிந்து கொள்ளவில்லை. இன்று 'பெரிசு' என்றழைக்கப்பட்டவரும் ஒரு காலத்தில் இவனைப் போல் திமிர் பிடித்து அலைந்திருக்கலாம். இளமை சாசுவதமல்ல என்பதை உணர்ந்து கொண்டால் தோற்றத்தை, மூப்பை, உடல் ஊனத்தை இழிவாகப் பேசத் தோன்றாது. ஒவ்வொருவரும் தனக்குள்ள இளமை ஒரு நாள் மாறும் என்பதையும், மூப்பு இவனையும் வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் இனிமை.

நமக்குச் சொந்தங்கள் அதிகம். பிறந்த தாய் வழி, தந்தை வழி, கொண்ட மனைவி வழி, மக்கள் வழி என்று உறவு அதிகரித்துக் கொண்டே போகும். அப்படி அதிகரிக்கும் உறவினர்களிடமிருந்த நான் நலம், நீங்கள் நலம்தானே என்று செய்தி வந்தால் மனம் மகிழ்ச்சியடையும். மாறாக வருகின்ற செய்திகள் எல்லாமே ஏதாவது துன்பத்தைத் துயரத்தைத் தாங்கி வந்தால் என்ன செய்வது? அப்படி இல்லாமல் துன்மம் இல்லாத செய்தியை அவர்களிடமிருந்து கேட்பதே இனிமை.

பெண்களைப் பற்றி கவிஞர்கள் வர்ணித்திருப்பதை நாம் அறிவோம். பட்டினத்தார் போன்றவர்களும், அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலும் பெண்களைப் பற்றிக் கூறியிருப்பதையும் நாம் அறிவோம். இந்த இலக்கியம் தோன்றிய நாளில் இதன் ஆசிரியரின் எண்ணம் எப்படி இருந்ததோ நாம் அறியோம். ஆனால் அவர் மேலே சொன்ன இருவரின் வழியில் பெண்களைப் பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார். கூரிய கத்தி இருக்கிறது. அது காய், கனிகளை நறுக்கவும் உதவுகிறது. ஆளைக் காயப்படுத்தவும் செய்கிறது. ஆகவே கத்தி என்பது காயப்படுத்துவது என்றோ, கனிகளை நறுக்குகிறது என்றோ நிச்சயப்படுத்திச் சொல்ல முடியாது அல்லவா? அது போலத்தான் நாம் பார்க்கும் பார்வை, நடந்து கொள்ளும் முறை இவற்றிலிருந்து பெண்ணைப் பற்றிக் கருத்துக் கூற முடிகிறது. சிலர், குறிப்பாக சக்தி உபாசகர்கள் பெண்களை சக்தியின் வடிவம் என்கிறார்கள். பெண்களின் தாய்மைதான் மிக உயர்ந்த பேறு என்பது சிலரது கருத்து. ஆனால் இளயோர் வட்டத்தில் காதல் என்ற உறவு, அதில் கிடைக்கும் தோல்வி, அப்படி பிரியும்போது ஆணின் மனம் வருந்துவது போல பெண் வருந்துவதில்லை. கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் மனத் திட்பம் அவர்களுக்கு இருக்கிறது, அதற்கு முந்தைய காதல், கீதல் இதெல்லாம் தொடர்ந்து மனத்தில் கொண்டு வருந்துவதில்லை. தாடி வைப்பது, போதைக்கு அடிமையாதல் இவையெல்லாம் ஆண்களுக்குத்தான். எங்காவது காதலில் தோல்வியடைந்த பெண் போதைக்கு அடிமையாகி வருந்தியதாகப் படித்திருக்கிறோமா? ஒரு தேவதாஸ் கதை போதாதா நமக்கு. சரி இந்தப் பாடலில் இவர் சொலும் கருத்து மென்மையான மூங்கில் போன்ற தோள்களையுடைய தளிர் போன்ற மென்மையான மகளிரை நஞ்சு என்று எண்ணுதல் இனிது என்கிறார். பிரச்சினைக்குரிய கருத்து. அவரவர் அனுபவத்துக் கேற்ப இந்த வரிக்குப் பொருள் கொள்ளுங்கள். காரணம் நஞ்சு அளவோடு இருந்தால் மருந்து. அளவுக்கு மிகுந்தால் இறப்பு. இதில் எதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படிப் புரிந்து கொண்டால் சரி.

"இளமையை மூப்பென் றுணர்ந்தல் இனிதே
கிளைஞர் மாட்டச் சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தனிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது."

பொருள்: ஒவ்வொரு இளைஞனும் தனக்கும் ஒருநாள் முதுமை வரும் என்பதை உணர்தல் இனிது; சுற்றத்தாரிடமிருந்து அச்சம் தரும் துன்பமில்லாத செய்தியைக் கேட்பது இனிது; மென்மையான மூங்கில் போன்ற தோளையுடைய மெல்லியலாரை நஞ்சு என எண்ணிதல் இனிது.


"இனியவை நாற்பது" (36)

36. இனியவை முப்பத்தியாறு.

"அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

என்கிறது திருக்குறள். அழுக்காறு என்பது பொறாமை, அவா என்பது பேராசை, வெகுளி என்பது கோபம், இன்னாசொல் என்பது கடுமையான சொற்கள், இப்படி இந்த தீய குணங்களை வெறுத்து நீக்கி வாழ்வதே அறம் என்கிறது தமிழ் நூல். நாம் அன்றாட வாழ்வில் பலருடன் பழகுகிறோம், அவர்களோடு சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மன வருத்தப்பட்டும் நடக்கிறோம். ஒரே மாதிரியான பதவி, ஒரே மாதிரியான வருமானம், குடும்ப நிலையிலும் சமத்தன்மை இத்தனையும் இருந்தும் அடுத்தவனுக்கு ஏதாவதொரு உயர்வு கிடைத்து விட்டால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று அவன் மீது பொறாமை ஏற்படுகிறது. ஏற்றத் தாழ்வு அதிகம் உள்ள சமுதாயத்தில் நம்மைவிட மிக உயர்ந்த நிலையில் இருப்பவனிடம் நாம் அவனிடம் அதிகம் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்பதாலோ, அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பதாலோ அதிகமாக பொறாமை ஏற்படுவதில்லை. சம நிலையில் இருந்து நன்றாகப் பழகி வருபவனிடம்தான் இந்தப் பொறாமை அதிகம் வருகிறது. அப்படி நேரும் சந்தர்ப்பங்களில் பொறாமை காரணமாக நாம் வேண்டுமென்றே அவன் ஏதோ குறுக்கு வழியில் இந்தப் பெருமையைப் பெற்று விட்டான். எழுத்தாளனாக இருந்தால் இவன் யாரையோ பிடித்துத் தன் நூலுக்குப் பரிசு வாங்கிவிட்டான் என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். வேண்டாம். பொறாமையில் அப்படிப்பட்ட இல்லாத பொல்லாத சொற்களைத் தவிர்த்து விடலாம். அப்படித் தவிர்த்துவிடுவது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

கோபம் என்பது உடன் பிறந்த வியாதி. நமது முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு முன்கோபக்காரர். சட்டென்று கோபம் வந்துவிடும். அது வந்தது போல சட்டென்று நீங்கியும் விடும். கோபப் படாதவர்கள் யார் சொல்லுங்கள். ஒருவரைப் பற்றி நாம் ஆகா ஓகோ என்று புகழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட புகழ்ச்சியெல்லாம் வெளிப்பார்வைக்குத்தான் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் அத்தகையோர் மனதில் ஆழ்ந்திருக்கும் கோபமும், கெட்ட எண்ணங்களும். வெளிப்பார்வைக்கு யாரும் நல்லவர்கள் போலத்தான் இருப்பார்கள். ஆழ்மனத்தை உணர்ந்து கொண்டால்தான் அவர்கள் யார் என்பது தெரிய வரும். சிலர் கோபத்தில் தங்கள் தகுதிக்குச் சம்பந்தமில்லாமல் மிகக் கீழ்த்தரமாகக்கூட பேசி விடுவார்கள். என்ன செய்வது? கோபம் என்கிற பேய் மனத்தைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. கோபப் படுபவனுக்கு அதிகம் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நாளடைவில், வேண்டாம், அவனிடம் போகாதீர்கள் அவன் கோபக்காரன். ஏதாவது கோணா மாணாவென்று பேசிவிடுவான் என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிடும். ஒருவன் மிகவும் சிரமப்பட்டு கோபப் படுவதை கட்டுப் படுத்திக் கொண்டாலும், அவனுடைய இயற்கை குணம் சில நேரங்களில் பிளந்து கொண்டு வெளிப்பட்டு விடும். சிலர் ஆலோசனை சொல்வார்கள். கோபம் வரும்போது ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கு, கோபம் அடங்கிவிடும் என்று. இதெல்லாம் செயலுக்கு ஒத்து வருமா? ஒரே வழி. மனதை அமைதியாக இருக்கும்போது இனி கோபப்படக் கூடாது என்று சொல்லிச் சொல்லி, நாளடைவில், பல ஆண்டுகள் பழகியாவது கோபத்தை அடக்கிவிட வேண்டும். அது இனியது.

ஒரு பொருளின் மீது ஒருவனுக்கு ஆசை. அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம். ஆனால் அந்தப் பொருள் மீது அவனுக்கு உரிமை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பொருளுக்குச் சரியான காவல் இல்லை. யாரும் கவனிக்கப் போவதுமில்லை. இதுதான் சரியான நேரம் அதை அமுக்கிவிட்டால் என்ன என்ற கெட்ட எண்ணம் இல்லாமல் இருப்பது இனிமை.

"அவ்வித் தழுக்கா றுரையாமை முன் இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது."

பொருள்: மனமாறுபாட்டல் பொறாமை கொண்டு பேசாமை இனிது; மனத் தெளிவோடு கோபத்தை நீக்கி வாழ்தல் இனிது; மனத்தில் ஆசை கொண்டு தான் காமுற்ற பொருளை விரும்பி தக்க சமயம் பார்த்து கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது.



"இனியவை நாற்பது" (35)

35. இனியவை முப்பத்தைந்து

மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதைய குடியரசு ஜனநாயக நாடுகளிலும் சரி, ஒரு நாடு தன்னை வெளிநாட்டு நடப்புகளில் தங்கள் நாட்டுக்கு ஏதாவது எதிரான நடவடிக்கைகள் இருந்தால் தெரிந்து கொள்ளவும், ராஜாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் உளவு அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் உளவு வேலை என்பது மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டிய வேலை. இந்த ஒற்றர்களாக யார் இருப்பார் என்பதைக் கூட அனுமானிக்க முடியாதபடி இவர்கள் பல வேடங்களில் இருப்பார்கள். மன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் படைவீரர்கள் மட்டுமல்லாமல், நாட்டு குடிமக்களில் பல தரப்பாரும் இந்த வேவு வேலை செய்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள உடையார் எனும் புதினத்தில் நடனம் ஆடும் மங்கையரும், வேதம் ஓதும் பிராமணரும் கூட ஒற்றர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இப்படி ஒற்று பார்ப்பது என்பதை யாருக்கும் எதிரானது அல்ல. நம் நாட்டை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்றவும், நம்மைச் சுற்றி என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது, ராஜாங்க ரகசியங்கள் எவையெவை என்பதையெல்லாம் ஒரு நாட்டின் மன்னன் அறிந்திருக்க வேண்டும்.அப்படி ஒற்றர்கள் நாலாபுறமும் சென்று கொண்டு வரும் செய்திகளை மன்னன் தன்னுடைய அந்தரங்கமான அமைச்சர்களுடன் உட்கார்ந்து பகிர்ந்து கொண்டு அவற்றிலுள்ள உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்வது என்பது இனிமை.

எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்பாக ஒன்றுக்கு பலமுறை நன்கு ஆலோசனை செய்தபின் தொடங்க வேண்டும். அதில் ஏதாவது ஐயப்பாடு இருக்குமானால், அறிவில் சிறந்த பெரியோரின் துணையையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு தெளிவு பெற்றபின் தொடங்க வேண்டும். ஆராயாமல் அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் தோல்வியடையும். ஆகவே ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஆராய வேண்டியவைகள் எவை என்பதை தீர்மானித்து அவற்றை நன்கு ஆராய்ந்து முறைப்படி செய்து முடித்தல் இனியது.

இராமாயணத்தில் சீதையின் தந்தை ஜனக மகாராஜன். இந்த ராஜாவை ராஜரிஷி என்பர். இவர் தவத்திற் சிறந்த ஒரு முனிவருக்கு ஒப்பானவர். தான், தனது என்பதெல்லாம் இல்லாமல் மக்களின் உணர்வை பிரதிபலிப்பவராக, சுயநலமில்லாதவராக, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை உள்ளவராக இருந்தார் என்கிறது இராமகாதை. இதனால்தான் கம்பர் பெருமானும் தசரத சக்கரவர்த்தியைப் பற்றி அறிமுகம் செய்யும் போது நாட்டுமக்கள் எல்லாம் உயிர் என்றால் அந்த உயிர்களுக்கான உடம்பாக தசரதன் இருந்தான் என்கிறார். அப்படி மக்கள் அனைவரின் பிரதிநிதியாக அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் தலைவனாக மன்னன் இருத்தல் அவசியம். தான் எதிலும் பற்று கொள்ளமல் இருந்து கொண்டு, மக்களின் பற்றை உணர்ந்து அவர்களாக வாழ்தல் ஒரு மன்னனுக்கு இனிமை என்கிறது இந்தப் பாடல்.

"ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது."

பொருள்: ஒற்றறிந்து உண்மையை உணர்தல் ஒரு மன்னனுக்கு இனிது; ஆராய்ந்து பார்த்து ஒரு செயலைச் முறைப்படி செய்தல் இனிது; தான் பற்று இல்லாதவனாய், பற்று கொண்ட மக்களின் பற்றைப் பகிர்ந்து கொண்டு வாழ்தல் மன்னனுக்கு இனிது.


"இனியவை நாற்பது" (34)

34. முப்பத்திநான்காம் இனிமை

இப்பொழுதெல்லாம் இரவு நேரம் என்பது பகல் பொழுதைப் போலவே மாறிவிட்டது. எங்கும் விளக்குகள். வெளிச்சம். இரவெல்லாம் போக்குவரத்து, ஜன நடமாட்டம் இப்படி வளர்ந்து விட்டது. ஆனால் இந்த நூல் இயற்றப்பட்ட காலம் அப்படிப்பட்டதல்ல. இரவானால் ஊர் அடங்கிவிடும். எங்கும் இருட்டு. வழிப்பயணம் செய்ய அஞ்சுவர். இப்படிப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும் பெண்கள், குழந்தைகள் இப்போதும் கூட தனியாக இரவில் பயணம் செய்வது ஆபத்து ஏற்படக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆகவே தான் அந்த நாட்களில் இரவில் பயணம் செய்யாதிருப்பது இனிமை தரும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

வகுப்பில் ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கிறார். நீண்ட நேரம் பல விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லி மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர் தொடங்கும் போது இருக்கும் வேகம் நேரம் ஆக ஆக குறைந்து போகுமானால், மாணவர்களின் கவனமும் சிதறுண்டு போகும். ஆகவே தொடங்கிய வேகத்திலேயே அவர் தொடர்ந்து பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போக வேண்டும். சில விழாக்களில் தொகுப்பாளர்கள் என்பவர் இருப்பர். இவர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை சோர்வின்றி விறுவிறுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். தொய்வு ஏற்பட்டால் விழாவின் சிறப்பு மங்கிவிடும். ஆகவே தொய்வின்றி சோர்வு இல்லாமல் சொல்வது இனிமை தரும்.

நம் அண்டை வீட்டுக்கு ஒருவர் புதிதாகக் குடி வருகிறார். நமது பண்பாடு யாராவது புதியவர் நம் பகுதிக்கு குடிவருகிறார் என்றால், அவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது என்பது நமது பாரம்பரியமான குணம். அதன்படி அந்த அண்டை வீட்டாரிடம் சென்று நம்மை அறிமுகம் செய்துகொண்டு விசாரிக்கிறோம். ஏதாவது உதவிகள் தேவையென்றால் செய்யவும் தயார் என்பதை தெரிவிக்கிறோம். ஆனால் அந்த மனிதர் நம்மை ஏதோ பூச்சி புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்து, எனக்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக நம்மை அனுப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் அதன் பிறகு பழக விரும்புவோமா? ஏதோ ஒரு அசம்பாவிதம் அந்த வீட்டில் நடந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், நாம் ஓடிப்போய் உதவி செய்வது என்பது நம் உடம்போடு பிறந்த குணம். ஆனால் இந்த மனிதருக்கு அப்படிச் செய்யத் தோன்றுமா? அப்படிப்பட்டவரின் நட்பை உதறிவிடுவது இனிமை தரும்.

"எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது"

எல்லி: இருள் வழங்காமை: இயங்குதல் பொருளல்லார்: நேர்மையில்லாத (பொருள் எனும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு)

சூரியன் மறைந்த பின் இருளில் அலையாமல் இருப்பது இனிமை; சோர்வின்றி சொல்லும் திறம் உடைமை இனிது; நம்மை பொருட்டாய் மதியாத நேர்மையற்றோரிடம் நட்பு கொள்ளாமல் இருதல் இனிது.


"இனியவை நாற்பது" (33)

33. இனியவை முப்பத்திமூன்று 

அந்த இளைஞன் மிகவும் சுறுசுறுப்பானவன். அந்த கிராமத்தில் எந்த பொது வேலையென்றாலும் முன்னின்று செய்யக் கூடியவன். ஓடியாடி அவன் சோம்பலின்றி செயலாற்றும் திறமையை அனைவருமே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவனிடம் ஒரு குறையும் உண்டு. தேவையில்லாத சில கொண்டாட்டங்களை இவன் முன்னின்று நடத்தத் தொடங்குவான். ஏதோ யாரோ ஒரு நடிகரின் பெயரால் ஒரு மன்றத்தை வைத்துக் கொண்டு அவருக்குப் பிறந்த நாள் என்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த கிராமத்தில் கொண்டாடுவான். அந்த நபரின் படத்தைப் பெரிதாகப் போட்ட பேனர்களைக் கட்டுவான். ஊரில் வசூலில் இறங்கிவிடுவான். இவன் நல்லவன் என்பதால் இவன் கேட்கிறானே என்று விரும்பாவிட்டாலும் ஒழியட்டும் என்று ஏதாவது ஒரு தொகையை இவனுக்குக் கொடுப்பார்கள். ஆனால் இவன் நடத்தும் இந்தத் தேவையில்லாத விழாவை மக்கள் விரும்பவில்லை. வேறொரு நல்ல காரியத்துக்கு இவன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டார்கள். பேனர் வைத்து, வாழைமரங்கள், தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை ஒலிபரப்பி இவன் செய்யும் அட்டகாசம் சகிக்கவில்லை. இதை சிலர் அவனிடம் சுட்டிக் காட்டி நல்லவனான நீ ஏன் இப்படி வீணான காரியங்களில் உன் சக்தியைச் செலவிடுகிறாய் என்று சொன்னபிறகு தன் தவற்றைத் திருத்திக் கொண்டு நல்வழிப்பட்டான் அந்த இளைஞன். ஊரில் உள்ளவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்ட அவனது மன எழுச்சி இனிமையுடையது.

மனிதனின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கெடுப்பது சோம்பல். இது குழந்தைப் பருவத்திலிருந்தே உடம்போடு தங்கி விடுகிறது. அந்த சோம்பல் எனும் பேயை உடலைவிட்டு விரட்டினால் மட்டுமே ஒருவன் முன்னேற முடியும். முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் ஒரு பாடல் இருக்கும். அந்தப் பாடல் சோம்பலால் செய்ய வேண்டிய காரியங்களைத் தள்ளிப் போடாதே என்பதை வலியுறுத்தும் பாடல். அது:- "நாளை நாளை என்னாதே! நாளை வீணில் போக்காதே! நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே முடிப்பாயே!" என்று இருக்கும். இப்படி காரியத்தைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் சோம்பல் அல்லவா? ஒரு இளைஞனுக்கு காலையில் தூக்கம் விழித்துப் படுக்கையை விட்டு எழுவது என்பதே பிரம்மப் பிரயத்தனம். அதாவது முடியாத காரியம். அப்படி அவன் எழுந்து விட்டாலும் ஆதவன் உச்சிக்குச் சென்றிருப்பான். அத்தனை நேரம் தூக்கம். இந்தக் கெட்டப் பழக்கம் அவனுக்குப் பல துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. பலமுறை வேலைக்கு இவனுக்கு நேர்காணலுக்கு அருகில் பத்து மைல் தூரத்தில் உள்ள நகரத்துக்கு வரச் சொல்லியிருப்பார்கள். இவன் தூங்கி எழும்போதே அந்த நேரம் முடிந்திருக்கும். இதைக் கண்டு அவனுக்கு வேண்டியவர்கள் உன்னைக் கெடுப்பது இந்த சோம்பல்தான் இதை உதறினாலொழிய நீ முன்னேற முடியாது என்று எடுத்துரைத்தார்கள். அதையடுத்து அவன் இரவு படுக்கப் போகும் முன்பே நாளை காலை சரியாக ஆறு மணிக்குள் எழுந்துவிடுவேன் என்று மனதிற்குள் பலமுறை சொல்லிக் கொண்டு படுப்பான். அன்றே அது முடியாவிட்டாலும் மன உறுதியினால் சிறுகச் சிறுக அவனால் அப்படி எழுந்திருக்க முடிந்தது. காரியங்களைச் சோம்பலின்றி முடிக்க முடிந்தது. தன் மன உறுதி காரணமாக அவன் படிப்படியாக முன்னேறி நல்ல பதவியை அடைகிறான், இது இனிமையானது இல்லையா?

ஒரு சிற்றரசன். அவன் நாட்டுக்கும் அண்டை நாட்டுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் ஒவ்வொரு முறை போர் நடக்கும் போதும் இவனது நாட்டுக் குடிமக்கள் போரில் அதிகம் மடிந்து போவார்கள். இதனால் இவன் நாட்டில் போர் என்றால் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த மன்னனுக்கு மட்டும் ஏன் எதிரிகள் அதிகம் இருக்கிறார்கள். இவன் தன்னுடைய போக்கை, அயலாருடனான உறவை மேம்படுத்திக் கொண்டால் போரைத் தவிர்க்கலாமே, இவன் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்று மன்னனிடமே போய் முறையிட்டார்கள். மன்னனும் தன் தவற்றை உணர்ந்து அண்டை அயல் நாட்டாருடன் நட்புடன் இருக்கப் பழகி போரைத் தடுத்து வந்தான். இப்படி உயிரிழப்பை தவிர்க்கும் நிலைமை இனிமையானது தானே!

"ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே
வாள் மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது."

பொருள்: ஊரார் வெறுக்கும் காரியத்தைத் தவிர்த்துவிடுதல் இனிமை; சோம்பரை நீக்கி சுயமுயற்சியால் தன்னை ஆளும் திறம் இனிமை; உயிர்ப்பலி கொள்ளும் போரைத் தவிர்க்கும் மன்னனின் செயல் இனிது.

"இனியவை நாற்பது" (32)


32. இனியவை முப்பத்தியிரண்டு

நாம் எந்தக் காரியத்தைச் செய்யும் முன்பாக நன்கு கற்றறிந்த பெரியோரிடம் சென்று அவர்களிடம் விளக்கிவிட்டு, நாம் செய்யப் போகும் காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும், எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தவொரு காரியத்தையும் நாமாக அரைகுறையாகச் செய்துவிட்டுத் தோல்வியைச் சந்திக்கக்கூடாது. கற்றறிந்த பெரியோர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரிந்து வைத்திருப்பார்கள். எதை யாரால் செய்து முடிக்க வேண்டும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள்; அத்தகைய பெரியோர்கள் கூறும் வழிகாட்டுதலின்படி நாம் காரியத்தைச் செய்யத் தொடங்குவோமானால் நிச்சயம் வெற்றிதான் கிட்டும். அது இல்லாமல் போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் நாம் செய்யப்போகும் காரியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தோமானால், அவரவர்க்கு மனம்போனபடி ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விட்டால் நஷ்டம் நமக்குத்தானே தவிர அவர்களுக்கு அல்ல. ஆகையால் கற்றறிந்தவரிடம் ஆலோசனை கேட்டுச் செய்தால் நல்ல பயன் கிட்டும் என்பது இனிமை அல்லவா?

ஒரு அரசன். சுகவாசி. அரண்மனையில் இருந்து கொண்டு வெளியே மக்களின் இன்ப துன்பங்களைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும். முன்பெல்லாம் தெருக் கூத்துக்களில் வரும் ராஜா அமைச்சரைப் பார்த்துக் கேட்பார், 'மந்திரி! நாட்டில் மும்மாரி மழை பொழிகிறதா?' என்று. நாட்டில் மழை பொழிவது கூட தெரியாத மன்னன் இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன? மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவனாக மன்னன் இருக்க வேண்டும். மெக்சிகோ எனும் நாட்டில் இப்படியொரு கொடுங்கோல் சர்வாதிகாரி இருந்தான். அவனுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. மழையின்றி, மக்கள் விளைச்சல் இல்லாமல், உணவுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வரிப்பணம் கொடுக்கச் சொல்லி அவர்களைத் துன்புறுத்தி வசூலித்தான். இதனை எதிர்த்து விவசாயப் பெருங்குடி மக்கள் அவனிடம் சென்று முறையிட்டுத் தங்கள் துன்பத்தை எடுத்துரைத்தனர். அவனோ கல்நெஞ்சுக் காரனாக இருந்து அடித்து உதைத்து சிறையிலிட்டு கொடுங்கோல் புரிந்தான். மக்கள் துன்பம் தாங்காமல் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அவனை எதிர்த்து விவா சபாட்டா எனும் இளைஞன் வீறுகொண்டு எழுந்தான். மக்களை ஒன்று திரட்டி மன்னனை எதிர்த்துப் போரிட்டு அவனை நாட்டை விட்டு ஓடவைத்தான். பின்னர் அந்த விவா சபாட்டாவை மன்னனாக மக்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று மெக்சிகோ நாட்டுக் கதையொன்று கூறுகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலன் ஆட்சியில் வாழ்வதைக் காட்டிலும் வெளியேறி வேறிடங்களுக்குச் சென்றுவிடுவது இனிமை தரும்.

நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள் ஒரு காரியத்தை நன்கு புரிந்து கொண்டு நல்ல வழியைக் காண்பிக்க வேண்டுமே தவிர, நமக்கென்ன ஆயிற்று என்று ஏதோ போகாத ஊருக்கு வழி காட்டுவது போல நடந்து கொள்ளக் கூடாது. அப்படி தவறாக வழிகாட்டப்பட்டுத் துன்பங்களுக்கு ஆனானவர்கள் பின்னர் அப்படி நடந்து கொள்பவர்களிடம் வன்மம் வைத்துக் கொள்வது தேவையில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இனிமேல் அப்படிப்பட்டவர்களிடம் எந்த ஆலோசனையையும் கேட்கக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களை விரோதிகளாகக் கருதத் தேவையில்லை. நாம் சிக்கித் தவிக்க வேண்டுமென்றுகூட சொல்லியிருக்க மாட்டார்கள்; அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அவர்களிடம் வன்மம் இல்லாமல் அன்பைத் தொடருவது இனிமை தரும்.

"கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்."

பொருள்: கற்றறிந்தவர்கள் கூறும் செயலின் பயன் இனிமையுடையதாகும்; குடிமக்களிடம் அன்பு பாராட்டாத மன்னனின் கீழ் வாழாமை இனிதாகும்; ஆராய்ந்து பார்க்காமல் தன்னை ஒரு செயலைச் செய்ய வைத்தவரிடம் தீங்கு பாராட்டாமல் அன்புடமை இனியது.

"இனியவை நாற்பது" (31)

31. இனியவை முப்பத்தியொன்று. 

நமது பாரதத் திருநாட்டின் இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோலவே இந்த இதிகாசக் கதைகளும் அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரிந்திருக்கும். இதில் முதல் இதிகாசமான இராமாயண காப்பியத்தில் தன் உற்றார், உறவு இவர்களிடமிருந்து பிரிந்து போய் வேறொருவரிடம் அடைக்கலம் என அடைந்தவர்கள் சுக்ரீவனும், விபீஷணனும் ஆவர். இவர்களில் சுக்ரீவனுக்குத் தன் அண்ணன் வாலியினால் ஏற்பட்ட தொல்லைகள் தீர இராமனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் புகுந்தான். விபீஷணன் நன்னெறிகளில் ஊறித் திளைத்தவன். இராவணனின் 'பிறன் மனை நோக்கும்' பிழையை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தும் அவன் திருந்தாததோடு, விபீஷணனின் உயிருக்கும் ஆபத்தாக இருந்த காரணத்தால், அவன் இராமனிடம் வந்து சரணடைந்தான்.

இப்போது இராமனுக்கு இரட்டைப் பொறுப்பு. தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதோடு தன்னிடம் அடைக்கலம் என்று வந்தவர்களின் பாதுகாப்பும் சேர்ந்து கொண்டது. இப்படி அடைக்கலம் வந்து அடைந்தவர்களின் உயிருக்கு எப்போதும் அவர்கள் யாரிடமிருந்து பிரிந்து வந்து இங்கு சேர்ந்தார்களோ அந்த முந்தைய உறவிடமிருந்து உயிருக்கு ஆபத்து வரும் அச்சம் இருந்து கொண்டே இருக்கும். வாலி இறக்கும் தருவாயில் இராமனிடம் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா? இராமா! என் தம்பி சுக்ரீவனைச் சுற்றிலும் எப்போதும் பாதுகாப்புக்காக வீரர்களை இருக்க ஏற்பாடு செய் என்பதுதான். அதுபோலவே விபீஷணனின் உயிருக்கு ஆபத்து வராதபடி இராவணாதியரிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும் இராமனுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடுமையான செயல்.

அப்படி எதிரிகளிடமிருந்து சுக்ரீவனைக் காக்க அவன் அண்ணனான வாலியை இராமன் வந்தம் செய்ய நேர்ந்தது. விபீஷணனுக்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இராமன் உதவி செய்ததோடு இராவணன் இருக்கும்போதே விபீஷணனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டியும் வைத்தார். இப்படித் தம்மிடம் அடைக்கலமாக வந்தவர்கள் துன்பம் அடையாமலும், நன்மை செய்தும் காப்பது இனியது என்கிறது இந்த நூல்.

நம்மிடம் நெடுங்காலம் பணியாற்றிய பணியாளர் ஒருவர். நம்மையே நம்பி இருப்பவர். அவருக்கு உலகமே நாம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நன்மையைக் கருத்தில் கொண்டு அவருக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அப்படி நம்மிடம் பணியாற்றும் ஒரு கணக்குப் பிள்ளை, அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் அந்தத் திருமணத்துக்கு வேண்டிய பொருள் அவரிடம் அப்போது இல்லை. நிச்சயம் நமது எஜமானர் நமக்கு வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் செய்து விடுவார் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அந்த எஜமானருடைய நிதி நிலைமை அந்த நேரத்தில் சரியாக இல்லை. தன் ஊழியரின் மகள் திருமணத்துக்கு வேண்டிய பொருளுதவி செய்யப் போதிய பணம் இல்லாத காரணத்தால், அது தன் கடமை, அவர் தன்னையே நம்பி இருப்பவர் என்பதால் வெளியில் கடன் வாங்கி தன் ஊழியரின் மகள் திருமணம் நன்கு நடைபெற ஏற்பாடு செய்து விட்டார். தன் நிதி நிலைமை சரியானதும் வாங்கிய கடனைத் திரும்ப அடைத்து விடலாம்; ஆனால் இவரது மகள் திருமணம் இந்த காரணத்துக்காக நின்று விடக்கூடாது என்கிற நல்ல எண்ணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியில் கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காகச் செய்து முடித்தல் இனியது.

அவர் நன்கு கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். கற்றவர்களால் மதிக்கப்படுபவர். மற்றவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சரியான தீர்வு கண்டு சொல்பவர். அவரிடம் ஒரு தர்ம சங்கடமான பிரச்சினை வந்தது. அது குறித்து அவர் தீர்க்கமான ஆலோசனைக்குப் பிறகு எது சரி எதைச் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். அப்படி அவர் சொல்லும் ஆலோசனையினால் யாரும் பாதிக்கப்படவும் கூடாது, யாருக்கும் எதிராகவும் போய்விடக்கூடாது. ஆனால் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் அவர் நிதானமாக ஆற அமர ஆய்ந்து பார்த்துத்தான் தன் தீர்வைச் சொல்ல வேண்டுமே தவிர எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் அறிவித்துவிட முடியாது அல்லவா? எதிலும் ஆராய்ந்து பார்த்து முடிவு சொல்வது என்பது நன்கு கற்றுணர்ந்தவராயினும் அதுவே நன்மை தரும்; இனிமையானது.

"அடைந்தார் துயர்கூரா ஆற்ற இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது."

தம்மிடம் அடைக்கலம் என்று வந்தவர்கள் துன்பப்படாமல் காப்பது இனிமை தரும்; செய்யத் தகுந்த காரியங்களுக்காக கடன் வாங்கியாவது அந்தக் காரியத்தை முடிப்பது இனிமை தரும்; சிறந்த கேள்வி ஞானம் உடையவராயினும் நன்கு ஆராய்ந்தறிந்து முடிவைச் சொல்லுதல் இனிமை தரும்.

"இனியவை நாற்பது" (30)

30. முப்பதாம் இனிமை. 

ஒருவன் தான் எளியவனாக இருந்த காலத்தில் தனக்கு உதவி செய்தவர்களை, கல்வி பயிலவும், வேலை கிடைக்கவும், சில நேரங்களில் இவனுடைய தேவைகளுக்கு பண உதவி செய்தவர்களையும் நன்றியோடு எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று எனும் குறள் சொல்லும் நெறியில் வாழ்ந்து வருவது இனிமை தரும்.

ஒரு நீதிமன்றத்தில் தவறு செய்தவன் மீது வழக்கு. அவன் செய்தது தர்மத்துக்கு எதிரான செயல். அவன் இவனுக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ எப்படியிருந்தாலும், அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல நேரும்போது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தர்மமும் நீதியும் நிலைபெற வேண்டுமென்ற நோக்கத்துடன் நியாயமாக சாட்சி சொல்ல வேண்டும். ஒரு சார்பில் நின்று பொய் சாட்சி சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட மாட்சிமை இனிமை தரும்.

ஒரு அவசர தேவைக்கா தெரிந்தவர் ஒருவர் தன்னிடம் ஒரு பொருளை அடமானமாகக் கொடுத்து இதை வைத்துக் கொண்டு எனக்கு அவசரத் தேவைக்காக பொருள் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றார். அவர் கொடுத்து வைத்ததோ, தான் பணம் கொடுத்ததோ யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் அவர் திரும்பக் கொடுக்கும்போது அப்படி எந்தப் பொருளையும் அடமானமாக என்னிடம் தரவில்லையே என்று பொய் சொல்லி அபகரிக்காமல் இருப்பது இனியது.

"நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
மன்றக் கொடும் பாடுரையாத மாண்பு இனிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்."

ஒருவருக்குச் செய்த உதவியின் பயன் கருதி நன்றியோடு நினைந்து வாழ்தல் இனிது; அறம் கூறும் அவையில் ஒருபக்கச் சான்று அளியாத மாட்சிமை இனியது; தன்னிடம் வைத்த பொருளை யாருக்குத் தெரியும் என்ற எண்ணத்தில் அபகரிக்க நினைக்காமல் பண்போடு திரும்பக் கொடுத்தல் இனியது.

"இனியவை நாற்பது" (29)


29. இருபத்தியொன்பதாம் இனியது.

ஒரு நல்லவன் வாழ்கின்ற பகுதியில் சுற்றுப் புறத்தில் பல கீழ் மக்களும் வாழ்ந்தனர். சுற்றிலும் இருக்கிற இவர்கள் போன்ற தீயவர்களிடமிருந்து இவன் ஒதுங்கி இருக்க நினைத்தாலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். அவர்கள் கெட்டவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிந்து, கூடிய வரையிலும் அவர்கள் முகத்தில் விழிக்காமல் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அப்படி சந்தர்ப்ப வசத்தால் அந்த தீயவர்கள் கூடியிருக்கும் நேரத்தில் இவன் வீட்டைவிட்டு வெளியே போக நேரும் சந்தர்ப்பங்களில் அவர்களோடு நட்புரிமை பாராட்டாமல், மிகவும் சாமர்த்தியமாக அவர்களை விரோதப் பார்வையும் பார்க்காமல் நழுவிவிடுதல் நலம். கூடியவரை அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிமை தரும்.

சாதாரணமாக கீழ் மட்டத்தில் இருந்த ஒருவன் தன் உழைப்பினாலும், நேர்மையினாலும் மெல்ல மெல்ல தான் பணிபுரியும் இடத்தில் உயர்வுகளைப் பெற்று வந்தான். தனக்குக் கிடைத்திருக்கிற இந்த உயர்வுக்குக் காரணம் தன்னுடைய வசதிகளோ, சிபாரிசுகளோ இல்லை என்பதும் தன்னுடைய உழைப்பு, நேர்மை இவைகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு மேலும் உயர்வதற்காக கடின உழைப்பைக் கொடுத்து, நேர்மைத் திறத்தை வளர்த்துக் கொண்டு தன் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது இனிமை தரும்.

இவனுக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே மிக மிகச் சாதாரணமானவர்கள். இவனுக்குக் கிடைத்த வசதிகள்கூட இல்லாதவர்கள். மிக எளிமையானவர்கள், வறுமையில் வாடுபவர்கள் என்றாலும் செம்மையாக வாழ்பவர்கள். இவர்கள் வறியவர்கள்தானே என்று எண்ணாமல் அவர்களை மதித்து பண்போடு பாராட்டி நடப்பது இனிமை தரும்.

"கயவரைக் கையிகந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது."

கயமைக் குணம் படைத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனியது; தன்னுடைய உயர்வுக்குத் தேவையான உள்ள எழுச்சியோடு வாழ்தல் இனியது; வறியவர்களை இகழ்ச்சியாக எண்ணாமல் கெளரவமாக நடத்துதல் இனியது.

. "இனியவை நாற்பது" (28)

28. இனிமை இருபத்தியெட்டு

மகாகவி பாரதி கண்ணன் என் சீடன் என்றொரு பாடலை எழுதியிருக்கிறார். அது தத்துவார்த்தமான பாடல் என்றாலும் அந்தப் பாடலில் முதலில் காணப்படும் அந்த கவைக்குதவாத சீடனைச் சற்று நினைத்துப் பார்ப்போம். எதைச் சொன்னாலும் அதற்கு மாறாகச் செய்வது; அல்லது செய்யாமல் இருப்பது; அல்லது செய்யத் தெரியாமல் விழிப்பது. இப்படி. இந்தப் பாடலின் கருத்து வேறு. 'நான் செய்வேன்", இந்த சீடனை நான் மாற்றிக் காட்டுவேன் என்று அகந்தை மிகுந்திருந்த போது கண்ணனாகிய அந்த சீடன் குருவின் சொல்லை கேட்கவேயில்லை. கடைசியில், நான் உன்னிடம் தோற்றேன் என்று சொன்னதும், உடனே அந்த சீடன் எள் என்றவுடன் எண்ணெயாக அத்தனை வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கிறான்.

ஆனால் இங்கு நாம் பார்க்கப்போகும் ஆள் எதற்கும் ஆகாதவன். எந்தச் செயலையும் செய்ய வக்கில்லாதவன். சாமர்த்தியம் கிடையாது. அவசரமாக ஒரு பொருள் வேண்டுமென்று சொன்னால் அவன் போனவன் போனவந்தான் திரும்பி வருவதே கிடையாது. நம் வேலையும் கெட்டுப் போகும். அவனை நம்பினால் மண்குதிரையை நம்பிய கதைதான். அப்படிப்பட்ட கவைக்குதவாத மனிதனிடம் எந்தப் பொறுப்பையும் ஒப்படைத்து இதனைச் செய்து முடி என்று சொல்லாதிருத்தல் இனிமை தரும்.

வாழ்க்கை நிலையாமையை மனிதன் முதுமையை அடையும்போதுதான் உணர்கிறான். அது வரை 'ரத்தத் திமிர்' என்பார்களே அந்த இளமைக் காலத்தின் அகம்பாவமும், அலட்சியமும் அவனைத் தானே எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் மிக்கவன், தனக்கு மிக்கவன் யாரும் கிடையாது என்றெல்லாம் நினைக்கிறான். கிடைத்த பொருளை அபகரித்துச் சேகரித்துக் கொள்கிறான். பொய்யும், களவும், பிறர் பொருளை ஏமாற்றி அபகரிக்கும் வஞ்சகமும் அதிகரித்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொள்கிறான். ஆனால் இளமையும், பேராசையும் இருக்கும் வரை இவனுக்கு வாழ்க்கை நிலையாமை குறித்த அறிவே இருப்பதில்லை. தன் தேவைக்கு மேல் ஒரு சிறிது ஆபத்துக்கு உதவட்டுமே என்று சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் கொண்ட மட்டும், ஆகாயமே எல்லை என்று கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொள்ளும் கயமைத்தனம் தேவையில்லை. எதற்காக இத்தனை? இவைகள் எல்லாம் இவன் போகும்போது கொண்டு போகப் போகிறானா? அல்லது இவன் வாரிசுகள் அவைகளைக் கட்டிக் காக்குமா? எமன் ஒரு நாள் வரப்போகிறான். நம்மைக் கொண்டு சென்று விடுவான். நம் வாழ்க்கை சாசுவதம் இல்லை என்கிற வாழ்க்கை நிலையாமையைப் புரிந்து கொண்டால், தானும் வாழ்ந்து, பிறரும் வாழ உதவி அனைவரும் போற்றும் குணவானாக இருப்பதே நன்று. அப்படிப்பட்டவனின் வாழ்வும் எண்ணமும் இனிது.

ஒருவன் வாழ்ந்த காலத்தில் நல்ல செல்வாக்கும், செல்வமும், இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் படை குடிகளும் இருக்கும் வரை முகத்தில் நிம்மதியையும், புன்னகையையும் சிந்திக் கொண்டிருந்துவிட்டு, இவை அனைத்தும் போய் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் காலத்தில் இவனிடம் உதவி கேட்டுப் பெற்றவர்களையெல்லாம், திருட்டுப் பயல்கள் இருந்த காலத்தில் பிடுங்கித் தின்றார்கள். இன்று எனக்கு இல்லை என்றதும் ஒரு பயலும் என்னைக் கவனிக்கவில்லை. கேடுகெட்ட மனிதர்கள் செய்நன்றி கொன்ற அயோக்கியர்கள். இவர்களுக்கெல்லாம் போய் நான் உதவிகளைச் செய்தேனே. இன்று என்னை கவனிக்க ஒருவரும் வரவில்லையே என்றெல்லாம் பிறர் மீது கடும் சொற்களை வீசாமல், பாவச் சொற்களை சொல்லாமல், தெளிவோடு, அறிவு பூர்வமாக தாழ்ந்திருந்த போதும் பெருந்தன்மையான சொற்களை உபயோகித்துப் பேசுவது இனிமை தரும். இல்லையா?

"ஆற்றானை யாற்றென் றலையாமை முன் இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்."

"செயல் திறன் இல்லாத ஒருவனிடம் இந்த காரியத்தைச் செய் என்று ஒப்படைத்துவிட்டு அவன் செய்யாதது கண்டு மனம் வருந்துவதைக் காட்டிலும் அவனிடம் வேலையை ஒப்படைக்காமல் இருப்பது இனியது. கூற்றுவன் நம் உயிரை ஒரு நாள் கொண்டு போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு நல்ல வண்ணம் சிந்தித்து ஒழுங்கோடு வாழ்வது இனியது; செல்வங்களை இழந்து வரிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் பாவச் சொற்களைச் சொல்லாமல் தெளிவோடு வாழ்வது இனியது.

"இனியவை நாற்பது" (27)

27. இனியவை இருபத்தேழு. 

இந்தப் பாடலின் கருத்தைச் சற்று விவரமாக பார்க்க வேண்டும். இந்தப் பாடலின் கருத்துக்கு தஞ்சை மராத்தியர் வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆற்காட்டு நவாப் அன்வர்தீன் கானின் மகனான முகமது அலியை அவனது உறவினன் சந்தா சாஹேப் பிரெஞ்சுக் காரர்களின் உதவியோடு ஆற்காட்டைவிட்டுத் துரத்திவிட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். பின்னர் முகமது அலி தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்ம ராஜாவின் உதவியோடு சந்தாசாஹேபை தோற்கடித்து ஆற்காட்டை மீட்டு முகமது அலியிடம் கொடுத்தார். பின்னர் சந்தா சாஹேப் பலத்த படையுடன் தஞ்சைக்கும் திருச்சிக்கும் படையெடுத்து வந்தான். அவன் படைகள் திருவரங்கத்தில் தங்கி போரிட்டது. அவனை எதிர்த்து ஆங்கில கம்பெனி படைகளும், மைசூர் படைகளும், கிழக்கிலிருந்து தஞ்சை மராத்தியர் படையும், இராமநாதபுரம் சேதுபதி படைகளும் போரிட்டன. மராத்தியர்களின் படை தளபதி மானோஜி ராவ் தலைமையில் கோயிலடி எனும் இடத்தில் (கல்லணைக்குப் பக்கத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகில்) தங்கியிருந்தது. இடையில் மாட்டிக் கொண்ட சந்தா சாஹேப் தப்பிக்க வழியின்றி இரவோடு இரவாக கோயிலடி வந்து மானோஜி ராவிடம் சரணடைகிறான். முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் சித்திரவதை செய்துவிடுவான் என்று மானோஜி ராவிடம் அடைக்கலம் கேட்டான். மன்னர் பிரதாபசிம்மரும் இந்த சந்தாசாஹேப் தஞ்சையை கொள்ளை யிட்டவன், அக்கிரமங்கள் புரிந்தவன் என்றாலும் அடைக்கலம் என்றதும் வேறு வழியில்லை. நமது தர்மப்படி அடைக்கலம் அடைந்தவனைக் காப்பது நம் கடமை என்று அவனுக்கு அடைக்கலம் கொடுத்து தஞ்சையில் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு வீட்டில் சிறை வைத்தார். அப்படிப்பட்ட பிரதாபசிம்மருடைய வீரம் இனிமையுடையது.

சந்தா சாஹேப் தஞ்சையில் அடைக்கலம் புகுந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும், முகமது அலியும், ஆங்கிலேயர்களும் அவனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரதாபசிம்மரை வற்புறுத்தினர். தாங்கள் அவன் உயிரைக் காப்பதாகச் சொன்ன வாக்குறுதிக்காக மன்னரும் பெரும்பாடுபட்டு அவனை அனுப்பாமல் இருந்தார். ஆனால் இறுதியில் அவனை அவர்களிடம் ஒப்படைக்கும்படியான கட்டாயம் வந்தது. சந்தா சாஹேபும் தான் இருந்த இருப்பும் இன்று அடைந்த தோல்வியும் அவமானமும் ஒன்று சேர்ந்து, அவர்களிடம் சித்திரவதை அனுபவித்து இறப்பதைக் காட்டிலும் உங்கள் கையால் கொன்று விடுங்கள் என்றான். அதன்படியே அவன் தலை வெட்டப்பட்டு முகமதலியிடம் அனுப்பப்பட்டது. மானம் போனபின் வாழ்வதிலும் உயிர் விடுவதே மேல் என்று சந்தா சாஹேப் முடிவு செய்து விட்டான். அந்த முடிவு இனிது.

இழந்த ஆட்சியை மீட்டுக் கொடுத்து, எதிரியான சந்தா சாஹேபைப் பிடித்துக் கொடுத்து ஏராளமான உதவிகளை தஞ்சை பிரதாபசிம்ம ராஜா செய்திருந்தும் ஆற்காட்டு நவாப் சலுகை கொடுத்திருந்த கப்பப் பணத்தை முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டுமென்று தஞ்சைக்குத் தன் படைகளை அனுப்பி தஞ்சை ராஜாவாக இருந்த துளஜாவை சிறையில் அடைத்துவிட்டு தஞ்சையைப் பிடித்துக் கொண்டான். துளஜா ராஜா ஆங்கில கவர்னருக்கும், அவர்கள் மூலம் இங்கிலாந்துக்கும் முறையிட்டு மீண்டும் தஞ்சை ஆட்சியை ஆங்கில கம்பெனியார் மீட்டுக் கொடுத்தனர். தான் செய்த நன்றியை மறந்து தங்கள் ராஜ்யத்தையே அபகரித்துக் கொண்ட ஆற்காட்டின் மீது துளஜாவோ, தஞ்சை மன்னர்களோ குற்றம் கண்டு விரோதம் பாராட்டவில்லை என்பதும் இனிதுதானே.

பாடல்:
"தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை
கோள் முறையாற் கோடல் இனிது."

பொருள்: அடைக்கலம் என்று வந்தவர்க்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் பெருமையுடைய வீரம் இனியது; மானம் அழியும் நிலை உருவானால் உயிர் வாழாமை இனிமை தரும்; பிறர் குற்றங்களை பெரிது படுத்தாமல் நல்லவைகளை மட்டும் மனதில் கொள்ளுதல் சாலவும் இனிமை தரும்.

"இனியவை நாற்பது" (26)


26. இனியவை இருபத்தியாறு.

சிறு வயது முதல் ஒரு பொருளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பி காத்திருந்தான் அவன். அந்த பொருள் நேபாளத்தில் கிடைக்கும் அரிய வகை சாளக்கிராமம் எனும் கருமையான கல். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு சுவாமியை அடையாளமாகக் காட்டும் என்பார்கள். அவற்றை பக்தி சிரத்தையோடு வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படியொரு சாளக்கிராமக் கல்லை வாங்கி வரவேண்டுமென்று அவருக்கு நெடுநாள் ஆசை. ஒரு முறை அவர் பத்ரிநாத், நேபாளம் முதலிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டபோது கண்டகி நதியில் கிடைத்த அரிய வகை கல்லொன்றை வாங்கி வந்து தன் பூஜை அறையில் வைத்துக் கொள்வதற்காகக் கொண்டு வந்தார்.

சுற்றுப்பயணம் செய்து வந்த இவரைப் பார்ப்பதற்காக இவரது நண்பர்கள் பலர் இவரது இல்லத்துக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் இவர் வாங்கி வந்த அரிய சாளக்கிராமத்தையும் பார்த்து வியந்தனர். அதில் ஒருவர் குறிப்பிட்ட இறைவனை வழிபடுபவர். அவர் சொன்னார் இந்தக் கல் நான் வழிபடும் இறைவனைக் குறிக்கும் கல். இது எனக்குக் கிடைத்தால் தினசரி பூஜைகளைச் செய்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்வேன் என்றார். அவரது ஆசையை உணர்ந்த தான் விரும்பி வாங்கி வந்த அந்த சாளக்கிராமத்தை அவருக்கு மனம் உவந்து கொடுத்தார். அந்தச் செயல் இனிமையானது அன்றோ.

சோழநாட்டு சிறிய ஊர் ஒன்றிலிருந்து சென்னைக்கு வேலை கிடைத்துப் போன ஒருவர் தனக்குத் தெரிந்த நண்பர் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். உணவை வெளியில் ஓட்டலில் வைத்துக் கொண்டாலும், தனக்குத் தனியாக அறையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளாமல் தூரத்துச் சொந்தக்காரரான அவருக்குத் தெரிந்தவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர் போய்விடுவார் போய்விடுவார் என்று காத்திருந்த அந்த நண்பரும் அவரது குடும்பத்தாரும் இவரிடம் வெறுப்பை உமிழத் தொடங்கினர். இவர் வந்தவுடனேயே படுக்க இடம் இல்லை, தூங்க இடம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் காட்டியும் இந்த நண்பருக்குப் புரியாமல் அங்கேயே டேரா போட்டிருந்தார். அந்த நிலையில் இவருடைய அலுவலக நண்பர் ஒருவர் இவரோடு இவர் இருந்த வீட்டுக்கு வந்தபோது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த மரமண்டைக்குப் புரியும்படியாக, அடே! நீ தங்கியிருக்கும் வீட்டில் நீ இருப்பதை விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளவில்லையா? ஏன் இப்படி பிறர் விரும்பாத இடத்தில் இருக்கிறாய். வேறு அறை பார்த்துக் கொண்டு போய்விடு என்று சொன்ன பிறகு இவரும் போய்விட்டார். மதிப்பு இல்லாத இடத்தில் வாழாத வாழ்க்கை இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

தான் விரும்பி வாங்கிவந்த அரியவகை கல்லை வேறொருவர் கேட்டார் என்பதற்காக மனம் உவந்து கொடுத்த இவரது பண்பை எல்லோரும் பாராட்டினார்கள். அதைவிட இனியது வேறு என்ன இருக்கிறது.

"நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிக இனிதே
எத்திறத்தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்."

தன்னை நாடிவந்து எனக்கு உன்னிடம் உள்ள இந்தப் பொருளைக் கொடு என்று கேட்பவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பண்பு இனியது; மதிப்பு இல்லாத இடத்தில் வாழாதிருத்தல் மிகவும் இனியது; தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் கேட்டவருக்குத் தரும் அன்பு மிக இனியது.

Friday, March 2, 2012

                                   கொஞ்சம் செளகரியமா உட்கார விடுங்களேன்!

                                எனக்கு ஒரு ஹாஃப், என் இன் ஜினுக்கு ஒரு ஹாஃப்!

                                       அட! கொஞ்சம் நின்னு தொலைங்களேன்யா!
                                                   தெரு ஓர குளியலறைகள்!

Great concession to senior citizens

Posted by Picasa

Posted by Picasaஇதுக்குப் போயி தனியா வண்டி வாடகை கொடுக்க முடியுமா?

Sorry! We missed it those days!


  கொஞ்சம் கண்ணை முடிக்குங்க தம்பிகளா! அந்தக் காலத்திலே முடியலை.

Finish it quickly, Mike Set & shamiana are mine


Posted by Picasa                அட! சீக்கிரம் முடிச்சுத் தொலைங்க! மைக் செட் என்னோடது.

Posted by Picasa ஊரே முழுகிப் போனாலும் சீரியல் முடிவு தெரியாம எந்திரிக்க மாட்டோம்!

Thursday, March 1, 2012

"இனியவை நாற்பது" (25)


25. இனியவை இருபத்தைந்து 

மனிதனை வழிநடத்தும் இயந்திரங்களை ஐம்பொறிகள் என்கிறோம். அதாவது மெய் (உடல்) வாய், கண், மூக்கு, செவி ஆகியவையாகும். உடலால் பல உணர்வுகளை அடைகிறோம். வாய் சுவைக்கிறது, பேசுகிறது, சிரிக்கிறது, அழுகிறது, குரல் எழுப்புகிறது, கண்கள் பார்க்கின்றன, மூக்கு நுகர்கிறது, செவி கேட்கிறது. இப்படி மனிதனுக்கு வேண்டிய அத்தியாவசியமான செயல்கள் அனைத்தையும் செய்வது இந்த ஐந்து பொறிகள். இவை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாட்டை இழந்து அவை தன் போக்கில் செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்? ஒரு பழைய திரைப்பட பாடல் உண்டு. 'கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனிதன் போகலாமா?' என்று அந்த பாடல் இருக்கும். இந்த ஐம்பொறிகளும் தன் இயல்பினாலே அவற்றுக்கு உகந்த வகையில் நடந்து கொள்ளும். ஆனால் அவை அப்படி நடக்காமல் அவற்றைத் தன் மனம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய புராணத்தில் 'எறிபத்த நாயனார்' என்பவரின் வரலாறு உண்டு. அவர் தேவார மூவரைப் போல பாடிப் பரவியவர் அல்ல. ஆனால் அசைக்கமுடியாத முரட்டு சிவபக்தி அவருக்கு. சிவனடியார்களுக்கு யாராவது தீங்கு செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார். அப்படியொருநாள் சிவகாமியாண்டார் எனும் சிவநேசச் செல்வர் கருவூரில் கோயில் கொண்டுள்ள ஆநிலையப்பருக்கு மலர்கள் கொய்து பூந்தாமத்தை ஏந்தி ஆம்பிராவதி நதிக் கரையிலிருந்து ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்த புகழ்ச்சோழ மன்னன் கருவூருக்கு வருகை தந்து தன் அரண்மனையில் தங்கி இருந்தான். அவனுடைய பட்டத்து யானையை பாகர்கள் ஆம்பிராவதி நதிக்குக் கொண்டு சென்று நீராட்டி, கரும்பு, வாழை முதலிய உணவுகளைக் கொடுத்து அதற்குச் சிவச் சின்னங்களை அணிவித்து, பட்டத்து யானை அல்லவா? அதனால் அதன் மேல் ஒரு பாகன் இரு புறமும் இரு பாகர்கள் ஆக மொத்தம் ஐந்து பாகர்கள் அதனை வழிநடத்தி வந்தனர். நீராடிய மகிழ்ச்சி, உணவு உண்ட திருப்தி அந்த யானை வழியோடு போன சிவகாமியாண்டாரின் பூந்தாமத்தைப் பறித்து வீசி காலால் துவைத்துவிட்டது. இதனைக் கண்ட எறிபத்தர் தன் கையிலிருந்த மழு எனும் கூரிய ஆயுதத்தால் அந்த யானையின் துதிக்கையை வெட்டினார். யானை பிளிறி அலறியது. பாகர்கள் சண்டைக்கு வந்தனர். அந்த ஐந்து பாகர்களையும் எறிபத்தர் வெட்டி வீழ்த்தினார். செய்தி கேட்டு எதிரி நாட்டு படைதான் வந்து தன் யானையைக் கொன்றுவிட்டதோ என்று மன்னன் தன் குதிரை மீதேறி வேகமாக வந்தான். இங்கு பார்த்தால் உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியார் ரத்தம் சொட்டும் மழுவுடன் நிற்கிறார். மன்னன் புகழ்ச்சோழனும் சிறந்த சிவபக்தன், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவன். அவன் உடனே குதிரையினின்றும் கீழிறங்கி சிவனடியாரான எறிபத்தரிடம் சிவனடியாரான தாங்கள் தவறு செய்திருக்க முடியாது. என் யானைதான் தவறு செய்திருக்க வேண்டும். அடியேனின் யானை செய்த தவற்றுக்கு என்னை தண்டியுங்கள் என்று தன் வாளை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி தங்களைப் போன்ற சிவனடியாருக்கு நான் செய்த தவற்றுக்கு என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன் என்று எறிபத்தர் தன்னை வெட்டிக்கொள்ள முயல சிவபெருமான் தோன்றி இரு சிவனடியார்களையும் வாழ்வித்தார் என்கிறது கதை.

இதில் மதங்கொண்ட யானைதான் ஆணவ மலம். அதனைக் கட்டுப்படுத்த தவறிய பாகர்கள் ஐவரும் ஐம்பொறிகள். சிவதீட்சைதான் எறிபத்தர். ஆகவே மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட கதைகளை உண்மை வரலாற்றோடு கலந்து கொடுத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். ஆகையால் இந்த இனியவை நாற்பது பாடலில் சொல்வது போல ஐம்பொறிகளைக் கட்டுக்குள் வைப்பது இனிது.

ஒரு காரியத்தைச் செய்வதால் கை நிறைய செல்வம் வரும் என்றாலும், அப்படிச் செய்யக் கூடிய காரியம் கல்லாத புல்லர் ஒருவரின் மூலம் கிடைக்கிறது என்றால் அதனை வேண்டாம் என்று ஒதுக்கி அப்படிப்பட்ட செல்வத்தைப் பெறாமல் தவிர்ப்பதும் இனிமைதான்.

ஊரில் ஒருவன் எல்லோரிடமும் மரியாதையின்றி நடந்து கொள்வான். அடக்கமின்றி செயல்படுவான். நல்லவர்களும், பெண்மணிகளும் அவனைக் கண்டு அஞ்சுவார்கள். ஒரு நேரம் போல மறு நேரம் இல்லாமல் நிலையற்ற மனம் கொண்டவன். அத்தகைய தீயவனைக் கண்டு அஞ்சி அவனோடு சேராதிருத்தல் நன்மை தரும். அதுவும் இனிமைதான்.

"ஐவாய வேட்கை அவாவடக்கல் முன் இனிதே
கைவாய்ப் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வினிதே
நில்லதே காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது."

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியாக வரும் ஆசைகளையும், நினைவுகளையும் அடக்கிக் கொள்ளுதல் இனிமை; கை நிறைய பொருள் பெருவதாயினும் கல்லாதவரைச் சேரா விடுதல் இனிமை. நிலையற்ற அறிவையுடைய அடக்கமில்லாத வீணனைச் சேராதிருத்தல் இனிமை தரும்.