பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 26, 2018

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.





                                          
இரண்டாம் உலகப் போரை ஜெர்மனியின் ஹிட்லர் தொடங்கி வைத்து ஐரோப்பிய நாடுகளை வென்று தன்னகப் படுத்திக் கொண்ட அதே நேரத்தில் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ஆப்பிரிக்க நாடுகளை பிடித்துக் கொண்டு முன்னேறிய நேரம். ஜப்பான் பெர்ள் துறைமுகத்தில் குண்டு வீசி கிழக்கு முனையில் யுத்தத்தைத் தொடங்கியது. ஹிட்லர் மேற்கிலிருந்து முன்னேறி வரும் நேரத்தில் ஜப்பான் கிழக்கத்திய நாடுகளையெல்லாம் மின்னல் வேகத்தில் பிடித்துக் கொள்ள, அங்கெல்லாம் ஆக்கிரமித்திருந்த பிரிட்டன் அந்தந்த நாட்டை ஜப்பான் வசம் விட்டுவிட்டு தனது ஆங்கில படைகளுடன் பின்வாங்கத் தொடங்கி விட்டது. தங்கள் தலை தப்பினால் போதும் என்ற பிரிட்டனின் எண்ணம் சுபாஷ் சந்திர போசுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. பிரிட்டனின் சுயநலம், துரோகம் இவற்றைக் கண்டு பொங்கினார். பிரிட்டனால் கைவிடப்பட்ட ஆசிய நாடுகளின் படைகளில் இருந்த இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதற்கு அவரே தலைவரானார். ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட நேதாஜி ஜப்பான் சென்றார், அங்கு அவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அங்கிருந்து அவர் மலேயா, பர்மா, சிங்கப்பூர் ஆகியவிடங்களில் ஏராளமானோர் ஐ.என்.ஏ.வில் சேர்ந்தது மட்டுமல்லாமல், ஏராளமான பணம், நகைகள் இவற்றையும் கொண்டு வந்து குவித்தனர். இந்தியர்கள் கொடுத்த பணத்தில் அவர் ஒரு வங்கியையும் தொடங்கினார். ஒரு இஸ்லாமிய நண்பர் அவருக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வங்கிக்கு நன்கொடையாகவும், சில பெண்கள் அவரவர் எடைக்கு எடை பொன்னும் கொடுத்தார்கள்.

     ஐ.என்.ஏ. எனும் இந்த்ய தேசிய ராணுவத்தில் காந்தி பிரிவு, நேரு பிரிவு, ஆசாத் பிரிவு, ஜான்சி ராணி பிரிவு என்றெல்லாம் ராணுவப் பிரிவுகளைக்குப் பெயரிட்டார். அவரும் ராணுவ உடை அணிந்து ஒட்டு மொத்த ஐ.என்.ஏ.வுக்கும் தலைமை தளபதியாக விளங்கினார்.

1943 அக்டோபர் மாதம் நாட்டுக்கு வெளியே சுதந்திர இந்திய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். அதற்கு அவர்தான் பிரதம மந்திரியும் பிரதம தளபதியுமாவார். இந்த சுதந்திர இந்திய அரசு அடுத்த சில தினங்களில் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தது. நேதாஜி உருவாக்கிய சுதந்திர இந்திய அரசு வெளி மண்ணில் இயங்கி வந்த போதே ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. சுதந்திர இந்திய அரசாங்கத்தின் தலைமையகம் முதலில் சிங்கப்பூரில் இருந்தது, பின்னர் பர்மாவுக்கு மாற்றப்பட்டது.

ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் தீவுகள் நேதாஜியின் சுதந்திர இந்திய அரசு வசம் அளிக்கப்பட்டது. 1943 டிசம்பர் 30 அன்று நேதாஜி அந்தமான் தீவிற்கு விஜயம் செய்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இந்திய நாடு இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அது இன்றளவும் நமக்கு ஒலிவடிவத்திலும் கிடைக்கிறது. நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற தியாகசீலர்களைச் சிறையில் அடைத்து வைத்து கொடுமைகள் புரிந்த இடம் அந்தமான். அந்த பூமியில் முதல் சுதந்திர இந்திய அரசு பிறந்தது மகிழ்ச்சிக்குரியது.

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கிழக்காசிய நாடுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். பெருமைப் படுத்தினார்கள். இவர் அணிந்த மாலையொன்று 12 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் ஏலத்தில் எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1945இல் இவர் தொடங்கிய வங்கியின் மூலதனம் 36 கோடியைத் தாண்டியது (இது அந்த காலத்தில்). சிங்கப்பூர் வானொலியிலும், பர்மாவிலிருந்தும் நேதாஜி வானொலி மூலம் உரையாற்றினார்.

இந்திய தேசிய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை இவர் ஜப்பானிடமிருந்து விலைக்கு வாங்கினார். சிலர் நினைப்பது போல ஜப்பான் இவ்வுதவிகளைச் செய்து நேதாஜியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது பொய். ஐ.என்.ஏ.வின் போர்க்கள கோஷம் “டெல்லி சலோ” என்பதுதான்.

1944ஆம் வருஷம் ஜனவரி 26ஆம் தேதி (அப்போதெல்லாம் தேசியவாதிகள் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்றே முடிவு செய்து வைத்திருந்தனர்) நேதாஜி ஐ.என்.ஏ.வின் ராணுவ அணிவகுப்பைப் பார்வை யிட்டார். அதில் “ஜெய்ஹிந்த்” கோஷமும் “டெல்லி சலோ” சூளுரையும் வானைப் பிளந்தன.1944 பிப்ரவரி 4 அன்று ஐ.என்.ஏ. மேஜர் மிஸ்ரா என்பவர் தலைமையில் இந்தியாவின் பிரிட்டிஷ் படைகளை அரக்கான் மலைப் பகுதியில் தோற்கடித்தது. தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று, அந்த போரில் தோற்ற பிரிட்டிஷ் இந்திய படைகளில் இருந்த இந்திய வீரர்கள் ஐ.என்.ஏ.வில் இணைத்துக் கொள்ளப் பட்டனர். இந்தியாவின் பகுதிகளாக விளங்கிய மணிப்பூர், அசாமின் கொஹிமா போன்ற இடங்களுக்குள்ளும் நேதாஜியின் படை நுழைந்து விட்டது.

இந்த காலகட்டத்தில் போரில் ஜப்பான் ஆயுதங்கள் சப்ளை செய்யாததால் நேதாஜி தன் ஐ.என்.ஏ.படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டார். அமெரிக்கா ஜப்பான் மீது ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகளைப் போட்டு பேரழிவை உண்டாக்கியது. ஜப்பான் கையொடிந்த நிலைமையில் தவித்த நேரத்தில் இந்திய பிரிட்டிஷ் படைகள் பர்மாவின் உட்புகத் தொடங்கியது. நேதாஜி தன் படைகளைப் பின்வாங்கச் சொல்லிவிட்டு தான் ஜப்பான் செல்வதற்காக 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானத்தில் ஏறிப் பயணம் மேற்கொண்டார்.

அவர் பயணம் செய்த விமானம் பார்மோசா தீவிற்கருகில் பறக்கும் போது தீப்பற்றி கடலில் விழுந்தது. நேதாஜிக்கு பலத்த தீக்காயங்களுடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிர் நீத்தார்.. இந்த செய்தியை அவருடன் பயணம் செய்த காயத்துடன் உயிர் பிழைத்த ஐ.என்.ஏ.கர்னல் ஹபிபுர் ரெஹ்மான் உறுதி செய்தார்.



Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 28

                       வரலாறு பேசும் பயணம் பகுதி 28
கொடும்பாளூர்.   
     
கொடும்பாளூர் எனும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலைக்கருகில் கிழக்காக சில கி.மீ. தூரம் சென்றால் காணப்படும் சிறு கிராமம். இது ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாக விளங்கிய வேளிர்குலத் தலைவர்கள் ஆண்ட ஊர். பல வேளிர்கள் இருந்தார்கள், அவர்களில் இங்கிருந்த வேளிர் தலைவன் பெயர் பூதி விக்ரம கேசரி என்றும் அவர் மகள்தான் வானதி என்றும் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதுகிறார். அந்த ஊருக்குள் நுழையும்போதே ஒரு சிறு கோயில் அதன் வாசலில் ஒரு பெரிய நந்தி. இதென்ன அதிசயம் என்று கிட்டே போய் பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த கோயில் ஒரு நாயன்மாருக்கானது. நந்தி எங்கோ கிடைத்ததாம், அதைக் கொண்டு வந்து இங்கே வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து ஊருக்குள் சென்றால் அங்கு பரந்து விரிந்து கிடக்கும் வெட்ட வெளிக்கு நடுவில் நாங்களும் இருக்கிறோம் என்று இரு கற்றளிக் கோயில் காணப்படுகிறது. அது தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருபவை. தூரத்தில் தொல்லியல் துறை காவலர் ஆழ்துளைக் கிணற்றில் நீரெடுத்து நீராடிக் கொண்டிருந்தார். இரு பெண்கள் அங்கிருந்த புல்வெளியைச் சரிசெய்து கொண்டிருந்தனர். பாரதி இயக்கத்தினர் சென்று அவ்விரு கற்றளியையும் பார்த்தபின் அருகில் ஒரு கிணறு இருப்பதைப் பார்த்தனர். தண்ணீர் இல்லை, ஆனால் அருகில் ஒரு பள்ளம், அதில் படிகள் அந்தப் படிகள் வழியாக நுழைந்து சென்றால் கிணற்றின் அடிக்குச் செல்லலாம். பிரேமசாயியும் ரமேஷ் நல்லுவும் கூடவே வந்தவர்களைக் காணோம் என்று தேடினால், இருவரும் கிணற்றினுள் படிகள் வழியாக இறங்கி நிற்கின்றனர்.

அருகில் மிகப் பரந்து விரிந்த புல்வெளியுடன் கூடிய புதிய பூங்கா அமைத்திருக்கின்றனர். கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தினுள் இருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இந்த ஊர் எவ்வளவு பழமையான ஊர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த ஊரின் பெயர் சிலப்பதிகாரம் காப்பியத்திலும் வருகிறது. கோவலன் கண்ணகி இருவரும் கவுந்தி அடிகளுடன் பூம்புகாரிலிருந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழியில் கொடும்பை எனும் ஊரை அடைகின்றனர். அந்த கொடும்பைதான் கொடும்பாளூர். பெரிய புராணத்தில் இவ்வூர் கோநாட்டுக் கொடிநகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

இங்கு அரசாண்டவர்கள் வேளிர் என்றோமல்லவா? இந்த வேளிர் குலத்தை தமிழ் இலக்கியங்களில் இருக்குவேள் என்கின்றனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையை அடுத்த திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். முத்தரையர்கள் வடக்கில் இருந்த பல்லவர்களோடும், தெற்கில் இருந்த பாண்டியர்களோடும் மாற்றி மாற்றி நட்பு கொண்டிருந்தனர்.
இவர்களுக்குள் நடந்த பல சண்டைகள் 8ஆம் நூற்றாண்டில் இந்த கொடும்பாளூரில் நடந்திருக்கின்றன. மதுரையை 740 முதல் 765 வரை ஆண்ட மாறவர்மன் ராஜசிம்மன் என்பான் பல்லவ மன்னன் நந்திவர்மனைப் போரில் தோற்கடித்தான். அந்தெ வெற்றி இந்த கொடும்பாளூரில் பெற்றதாகத் தெரிகிறது. முத்தரையர்களின் தலைவன் பெயர் பெரும்பிடுகு சுவரன்மாறன். இவன் பாண்டியர்களையும் சேரர்களையும் வென்றதாக வரலாறு இருக்கிறது.

கி.பி.880இல் திருப்புறம்பியம் எனுமிடத்தில் நடந்த பெரும் போரில் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் கடுமையான யுத்தம். அதில் பல்லவர்களுக்கு உறுதுணையாக இருந்த சோழ மன்னன் விஜயாலய சோழன். பாண்டியர்களுக்குத் துணையாக இருந்தவன் முத்தரையர் மன்னன். பல்லவன் முத்தரையர் ஆண்ட நாட்டைச் சோழர்களுக்குக் கொடுத்துவிடுகிறான். விஜயாலயன் முதலாகக் கடைச்சோழ மன்னர்கள் ஆளத் தொடங்குகிறார்கள். அதுவரை செந்தலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்தரையர்கள் தோற்றுப் போகிறார்கள். அது முதல் வேளிர்கள் சோழர்களின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தலைநகரம் கொடும்பாளூர்.
கொடும்பாளூரை ஆண்ட வேளிர்களை இருக்குவேளிர் என்கின்றனர். இவர்களது பங்கு சோழ சாம்ராஜ்யத்தில் மிக முக்கியமாக இருந்திருக்கிறது. கர்நாடகத்திலுள்ள துவாரசமுத்திரத்திலிருந்து வந்த யாதவ வம்சம்தான் வேளிர்கள் என்கிறது ஒரு செய்தி. அறுபத்தி மூவரில் ஒருவரான இடங்கழி நாயனார் என்பார் இந்த வேளிர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய கோயில் வாசலில்தான் பெரிய நந்தியைப் பார்த்தோம் என்று சொன்னோம்.
                    
                             இடங்கழி நாயனார் கோயிலும், பெரிய நந்தியும்


கொடும்பாளூரில் கருங்கல்லால் ஆன பல சிறு கோயில்கள் இருக்கின்றன. பல கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தபோதும் மூவர் கோயில் எனப்படும் முசுகுந்தேஸ்வரர் கோயில் சிறப்பானதாக இருந்திருக்கிறது. ஐவர் கோயில் என்ற தொகுப்பும் அங்கே காணப்படுகின்றது. மூவர் கோயில், ஐவர் கோயில் ஆகிய இவ்விரண்டும் தான் இவ்வூரின் பழமையை, பெருமையை இன்றும் பறைசாத்திக் கொண்டிருக்கிறது.
                          To be continued...............

வரலாறு பேசும் பயணம் பகுதி 27

                            வரலாறு பேசும் பயணம் பகுதி 27
கீழப்பழூர்            
                                 கீழப்பழூரிலுள்ள ஆலந்துறையார் ஆலயம்

தஞ்சை அரியலூர் மார்க்கத்திலும், திருச்சி அரியலூர் வழியிலும் சந்திப்பாக விளங்குவது இந்தக் கீழப்பழுவூர். இங்கே பழமை வாய்ந்த, திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலமாக விளங்குவது கீழப்பழுவூர். சமீபத்தில் இவ்வாலயத்துக்கு குடமுழுக்கி நடைபெற்று அழகொழுகக் காட்சி தருகிறது. இந்தப் படத்தில் இருப்பது பழைய தோற்றம்.
அமரர் கல்கி எழுதியுள்ள பொன்னியின் செல்வன் நெடுங்கதையில் சோழ சக்கரவர்த்திகளுக்கு பக்க பலமாக இருந்து சுந்தர சோழர் காலத்தில் போர்க்களங்கள் பல கண்டு விழுப்புண் ஏந்தியவர்களாகப் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் எனும் பாத்திரங்களைப் படைத்திருந்தார். அந்த பழுவேட்டரையர்கள் கற்பனை பாத்திரங்கள் அல்ல. இந்தப் பகுதியை ஆண்டுகொண்டே தஞ்சை சோழ சாம்ராஜ்யத்துக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் இந்த மாவீரர்கள். இவர்கள் இந்தப் பகுதியில் பழுவூர் எனும் பெயரோடு விளங்கும் தங்கள் நாட்டில் மூன்று சிவாலயங்களைச் சிறப்பாகக் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

இம்மூன்று ஆலயங்களும் பழுவூர் பிரதேசத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் இன்றும் பழமையும் புதுமையுமாக நம் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றிக்கொண்டு காட்சியளிக்கின்றன. பழுவூர் மேலப் பழுவூர் என்றும் கீழப்பழுவூர் என்றும் அடையாளம் காணப்படுகிறது. இவ்வாலயங்களில் ஜமதக்னி முனிவரும் அவருடைய புதல்வரான பரசுராமனும் வழிபட்டதாக தலபுராணங்கள் கூறுகின்றன.

உறையூர் சோழ சாம்ராஜ்யத்தைன் தலைநகராக இருந்த காலத்தில் சுற்றுப்புறங்களை ஆண்ட பல குறுநில மன்னர்கள் அவர்களுடன் நட்புறவு பூண்டிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு சிற்றரசர்தான் பழுவேட்டரையர். பெரிய பழுவேட்டரையரின் பெயர் அம்பலவாணன் என்பதாம். பழுவேட்டரையர் என்பது பட்டப் பெயர். சோழ சாம்ராஜ்யத்துக்கு பணிவிடை செய்த பழுவேட்டரையரின் பெயர் மறவன் கந்தனார் என்பதாம். இவர் சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு கருவூலக் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவருடைய மகன் குமரன் மறவன் உத்தமசோழனுக்கு உழைத்திருக்கிறார். உத்தம சோழன் என்பார் ராஜராஜனுக்கு சித்தப்பா முறை ஆகவேண்டும்.

பழுவேட்டரையர்கள் சோழ மன்னர்களுடன் திருமண உறவு கொண்டவர்கள். இவர்கள் காலத்தில் இவ்வூர் சிவாலயங்களுக்கு இவர்கள் ஏராளமான கொடைகளை அளித்திருக்கிறார்கள். கீழப்பழுவூர் ஆலந்துறையார் ஆலயத்தில் திருஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரப் பதிகத்தில் இங்கு பூஜைகளைச் செய்து வந்த அர்ச்சகர்கள் சேரநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கிறார். ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர் இங்கு வழிபட்டார் என்பதைப் பார்த்தோமல்லவா? அவர்தான் சேரநாட்டு மலைப்பிர தேசத்திலிருந்து இந்த கீழப்பழூரில் பூஜைகள் செய்ய இவர்களை அழைத்து வந்திருக்கலாம் என்கின்றனர்.

கீழப்பழூரிலிருந்து மேற்கில் மேலப்பழூர் 15 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இவை சோழர் காலத்தில் பெரும்பழூர் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
                           
                                  மேலப்பழூர் சிவாலயம்

கீழப்பழூர் ஆலயத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து திருச்சி சாலையில் சுமார் 15 கி.மீ. பயணம் செய்து மேலப்பழூரை அடைந்தனர் பாரதி இயக்கத்தினர். அங்கு சாலையின் வலது புறம் வாசல் கேட் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது பழைய தோற்றம் மாறாத கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயம். அருகிலிருந்த உள்ளூர்காரர் ஒருவர் வந்து ஆலயத்தின் பொறுப்பாளர் இருக்குமிடம் தனக்குத் தெரியுமென்று சொல்லி இவர்களில் ஒருவரை கூட அழைத்துச் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல அந்த பழமையான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழுவூர் ஆலயத்தைப் பார்க்காமலே சற்று தூரத்தில் குடமுழுக்கு ஆன நிலையில் அதுவும் பூட்டிக் கிடந்த ஒரு ஆலயத்தைக் கண்டனர். அது மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், அதுவும் மூன்றாவது ஆலயம். அங்கும் உள்ளே சென்று தரிசிக்க முடியாமல் தொடர்ந்து பயணப் பட்டார்கள்.

திருவானைக்கா.   

ஜம்புகேச்சரம் என்றும் திருவானைக்கா என்றும் அழைக்கப்படும் இந்த பிரபலமான ஆலயம் திருச்சி திருவரங்கம் இடையே வலப்புறம் இருக்கிறது. இது பஞ்சபூதத் தலங்களுள் நீருக்கு உரியத் தலம் அப்புத் தலம் என்பர். சுவாமி ஜம்புகேச்வரர், அம்மை அகிலாண்டேஸ்வரி. பல கோபுரங்கள் கொண்ட பெரிய ஆலயம். அம்பாளுக்குத் தனி ஆலயம் இடப்புறமாகச் சென்று வடபுறத்தில் கோயில்கொண்ட அம்மனைக் காணலாம்.                       
                            ஜம்புகேஸ்வரத்தின் சில தோற்றங்கள்.

இந்தத் தலம் குறித்த திருநாவுக்கரசரின் தேவாரத்தில் “துன்பம் இன்றித் துயரின்றி என்றும் நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே” என்கிறார். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்த ஆலயம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞானசக்தி பீடம் எனப்படுகிறது.

மூலத்தானத்தில் ஜம்புகேச்வரர் அமர்ந்திருக்கும் இடத்துக்கு நேராக வாசல்படி கிடையாது. ஒன்பது துளைகள் உள்ள கல்லால் ஆன பலகணி மட்டுமே உண்டு. பக்தர்கள் இந்த பலகணி வழியாகத்தான் உள்ளே சுவாமியை தரிசிக்க வேண்டும், உடுப்பியில் ஜன்னல் வழியாகக் கண்ணனை வழிபடுவதைப் போல. இதன் தத்துவம் மனிதன் உடலிலுள்ள ஒன்பது வாசலையும் தன்வசப்படுத்திக் கொண்டு இறைவனை வழிபட வேண்டுமென்பதாம்.

சிவாலயங்களில் ஐப்பசி பெளர்ணமி அன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். இங்கு வைகாசி பெளர்ணமியில் நடைபெறுகிறது. கருவறையில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். (இவர்கள் போனபோது தமிழ்நாடே வறண்டு கிடக்கும்போது சுவாமியின் கருவறையும் வறண்டே காணப்பட்டது).

கவி காளமேகத்துக்கு கவித்துவத்தை அம்பிகை அகிலாண்டேஸ்வரி இந்த ஆலயத்தில்தான் கொடுத்ததாக வரலாறு இருக்கிறது. சக்தி உபாசகர் ஒருவர் தனக்கு எல்லா கல்விச் செல்வங்களும் கிடைக்க வேண்டுமென்பதற்காக அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் கடும் தவம் இருந்தார். அதே கோயிலில் பணியாற்றிக் கொண்டிருந்த தாசி காளமேகத்துக்கு அன்பிற்குரியவள். காளமேகம் அங்கு மடைப்பள்ளியில் சமையல்காரன். ஒருநாள் தாசி அர்த்தஜாமத்துக்கு நாட்டியமாடி சுவாமியைப் பள்ளியறைக்குக் கொண்டு விட்டபிறகு வந்து காளமேகத்தை எழுப்பி அழைத்துப் போவதாகச் சொல்லி அங்கிருந்த மண்டபத்தில் தூங்கச் சொல்லிவிட்டுப் போனாள்.

அங்கு தவமிருந்த உபாசகரின் தவத்தை மெச்சி அன்னை அகிலாண்டேஸ்வரி ஒரு சிறு பெண் உருவம் தாங்கி வாயில் தாம்பூலத்துடன் மெல்ல அவரைத் தட்டி எழுப்பி அவர் வாயைத் திறக்கச் சொன்னாள். அவர் தன் தவம் கலைந்த கோபத்துடன் ஏன்? எதற்கு> என்றார். சிறு பெண்ணாக வந்த அகிலாண்டேஸ்வரி தன் வாயிலுள்ள தாம்பூலத்தைத் துப்ப வேண்டுமென்றாள். அவருக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. சீ! போ! வந்து விட்டாள் தாம்பூலம் துப்ப இடம் தேடி என்று அம்பாளை விரட்டிவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.

அப்போது பக்கத்தில் மண்டபத்தில் படுத்து நன்றாக குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த காளமேகத்தைத் தட்டி எழுப்பினாள் அம்பாள். அவனும் எழுந்து தூக்கக் கலக்கத்தில் அன்னையைப் பார்த்தான். அவள் வாயைத் திற, என் தாம்பூலத்தை உன் வாயில் துப்ப வேண்டுமென்றதும், அவன் வாயை அகலத் திறந்து அண்டாவைப் போல் காட்ட, அன்னை அவன் வாயில் தாம்பூலத்தைத் துப்ப, அந்த விநாடி அவன் தெய்வீக கவிஞனானான்.

திருவானைக்கா தரிசனம் முடிந்தபின் பாரதி இயக்கத்தார் திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருட பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் அரங்கநாதனைக் காணச் சென்றனர். அங்கு பெரிய வரிசை. அதில் நின்று பெருமாளை தரிசனம் செய்ய எத்தனை காலம் பிடிக்குமோ என்று விசாரித்ததில், அது தாயார் சந்நிதிக்கான வரிசையாம். பெருமாள் அன்று பங்குனி உத்தரம் என்பதால் ஆலயத்துக்கு வெளியே எங்கோ போயிருக்கிறார் என்று சொன்னார்கள். சரி பெருமாளையும் தரிசிக்க முடியவில்லை, தாயாரைக் காணவோ ஏராளமான கூட்டம், நேரமோ வெயில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று அருகில் விற்ற ஆலய பிரசாதம் புளியோதரையை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விட்டனர்.

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்துக்கு அருகில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிகள்:
                     
1930இல் ராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டு நடந்தே சென்று பதினைந்து நாட்களுக்குப் பிறகு வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளி உப்பளத்தில் உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்து சிறை சென்றார்கள் அல்லவா? அந்த சத்தியாக்கிரகிகள் ஊர்வலம் திருச்சியில் புறப்பட்ட இடம், திருச்சி கன்டோன்மெண்ட் எனப்படும் புதிய பேருந்து நிலையம் எதிரில் இருந்த ராஜாஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களின் இல்லத்திலிருந்து தான். அந்த இல்லத்தின் வாசலில் சுதந்திர இந்தியாவில் இரு முறை நினைவு ஸ்தூபிகளை அமைத்திருக்கிறார்கள். டாக்டர் ராஜன் திருஈங்கோய்மலைக்குப் போய் அங்கேயே காலமாகி விட்டாலும், அவருடைய பரம்பரையினர் இருந்த வீடு இங்கே இருக்கிறது. இப்போது அஞ்சல் துறை அலுவலகமாக இருக்கும் அந்த இல்லத்தின் வாசலில் இரு ஸ்தூபிகள் விளம்பர போர்டுகளுடன் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு காணப்படுகின்றது. அங்கு சென்று அந்த இடத்தைப் பார்த்துவிட்டு உப்பு சத்தியாக்கிரகம் பற்றி சிறிது விவாதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

                        To be continued...........



வரலாறு பேசும் பயணம் பகுதி 26

                              வரலாறு பேசும் பயணம் பகுதி 26
சதுரங்கப்பட்டினம் (Sadras)

சதுரங்கப்பட்டினம் என்று இப்போது வழங்கப்படும் இவ்வூர் முன்பு ஆங்கிலத்தில் SADRAS  என்று வழங்கப்பட்டது. கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து கிழக்காம 4 கி.மீ. தூரத்தில் கடற்கரையோரம் இருக்கும் இது முன்பு டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாகச் செல்பவர்கள் வெங்கம்பாக்கம் எனுமிடத்தில் இடது புறமாகச் சென்று இவ்வூரை அடையலாம். அங்கிருந்து புதுப்பாக்கம் வழியாக மீண்டும் கடற்கரைச் சாலையில் இணைந்து விடலாம்.

இந்து நவீன யுகத்தின் வசதிகள் எவையும் கிடைக்காது. தங்கும் அறைகளோ, நல்ல உணவுக்கான உணவு விடுதிகளோ இங்கு இல்லை. கல்பாக்கம் அருகில் இருப்பதால் அங்கு போனால் எல்லாம் கிடைக்கும். மாமல்லபுரத்திலிருந்து இந்த இடம் சுமார் 10 கி.மீ. போகவேண்டும். ஐரோப்பியர்கள் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்க புறப்பட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் ஆகியோருடன் டென்மார்க்கிலிருந்து டச்சுக்காரர்களும் வந்தார்கள். அவர்கள் வந்து தங்கி ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிய இடம் தான் இந்த சதுரங்கப்பட்டினம் எனும் சாட்ராஸ். இங்கு டச்சுக்காரர்கள் மெல்லிய மஸ்லின் துணிகள், முத்து, உணவு எண்ணெய் ஆகியவற்றைக் கொணர்ந்து வியாபாரம் செய்தார்கள். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது இந்தக் கோட்டையின் உட்புறம் எதுவும் இல்லை. அங்கு ஒரு காவலாளி இடத்தைச் சுத்தம் செய்து நல்ல நிலையில் பாதுகாத்து வருகிறார். பாரதி இயக்கத்தினரை அந்தக் காவலாளி அன்போடு வரவேற்று உட்புறம் அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினார். அவருடன் இவர்கள் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
                    
இந்த இடத்தில் ஐரோப்பியர்களுக்குள் அதாவது ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டு இரண்டு முறை மோதிக்கொண்டார்கள். இரண்டாவது யுத்தத்தில் இந்த கோட்டை சின்னாபின்னப் படுத்தப்பட்டு டச்சுக்காரர்கள் ஆளை விடுங்கடா என்று பிரிட்டிஷாரிடம் கோட்டையை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அது நடந்த ஆண்டு 1818.

இந்த கோட்டை கடலுக்கு மிக அருகில் இருப்பதால் கடலில் கப்பலில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் கடற்படை குண்டுமாரி வீசியிருக்கிறது. சின்னஞ்சிறு கோட்டை தாங்குமா அவர்களது ராட்சச தாக்குதலை. அழிந்தது கோட்டை, அழுந்த உட்கார்ந்தார்கள் ஆங்கில வர்த்தகர்கள் நம்மையும் அடக்கி அடிமையாக்கிட.

இந்த வளாகத்தில் பலருடைய கல்லறைகள் காணப்படுகின்றன. அதன் மீது இறந்த வீரனின் பெயர் ஆண்டு அனைத்தும் காணக்கிடைக்கின்றன. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் ஐரோப்பியர்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னிறுத்திக் கொள்வதற்காகத் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்ற கொடுமைகளையெல்லாம், நம்மவர்கள் எதுவும் செய்யமுடியாத அப்பாவிகளாகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்ற வகையில் நம் மக்கள் எப்படிப் பின்தங்கி இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கனத்த மனதுடன் பாரதி இயக்கத்தார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இடைக்கழி நாடு.  

           1.ஆலம்பாறை கோட்டை இடிபாடுகள்  2. கோட்டை இடிந்த மதில்சுவர்

18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முகலாயர் பாணி கட்டடக் கலையில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. சதுரங்கப்பட்டினத்துக்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கே சில கல் தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலம்பாறை கோட்டை. கோட்டையின் பாதங்களை கடல் அலைகள் வந்து மோதிக்கொண்டிருக்கும் அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம். அருகில் சொல்லும்படியான கிராமமோ, வேறு முக்கியமான கட்டடங்களோ கிடையாது. சிலர் மீனவர்கள் குடியிருப்புகள் மட்டுமே இந்த இடிபாடுகளுக்கருகில் உள்ளது. அதில் குழந்தைகள் விளையாட ஒரு பூங்காவும் கட்டப்பட்டு அதில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறது. அமைதியான அந்த சூழலில் கடற்காற்றை சுவாசித்துக் கொண்டு இடிந்து கிடக்கும் இந்த மாபெரும் கோட்டையின் அழிவினைக் கண்டு வந்தனர் பாரதி இயக்கத்தினர்.

15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோட்டை. முகலாய மன்னர்கள் கட்டிய இந்தக் கோட்டையை அவர்கள் பிரெஞ்சு குடியேறிகளிடம் 1750இல் கொடுத்திருக்கின்றனர். ஏதோ நன்றிக்கடனுக்காக இது கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, எந்தவகை நன்றிக்கடன் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். பத்தாண்டுகளுக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சு நாட்டு வியாபாரக் கழகத்துக்கும் யுத்தம் நடைபெற்றபோது, இந்தக் கோட்டையை ஆங்கிலேய கும்பினியார் பிடித்துக் கொண்டதோடு அதனை அழிக்கவும் செய்தனர். முழுமையாக அதனை அழிக்க முடியாததால் அரைகுறையாக விட்டுச் சென்றதன் எச்சத்தைத்தான் நாம் இப்போது காண்கிறோம். இது அழிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலேயர்களும் சரி, நம்மவர்களும் சரி இதில் அதிக அக்கறை செலுத்தவில்லையாயினும், இங்கு தயாரிக்கப்பட்ட நாணயங்களும், பலவிதமான யுத்த தளவாடங்களும் இங்கிருந்து கம்பெனியார் மீட்டிருக்கின்றனர்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் இழைத்த அழிவு போதாதென்று, 2004இல் இந்தப் பகுதியில் வந்த ஒரு பூமியதிர்ச்சியும் சுனாமியும் இதனை மேலும் கவிழ்த்துப் போட்டு விட்டது. ஐரோப்பிய நாடுகளின் வியாபார கம்பெனிகளுக்குள் நடந்த சண்டையும், இயற்கையின் பேரழிவுகளும் தவிர இந்தப் பகுதி மக்களின் அலட்சியமும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு ஒரு அழகிய வரலாற்றுச் சின்னம் இன்றும் இருந்திருக்கும். மக்களின் அலட்சியத்தால் இந்த அழகிய உறுதியான கோட்டையின் மீதி மிச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அலைகளின் வீச்சில் அழிந்து கொண்டு வருகின்றன. எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாத நிலையிலும் இந்த கோட்டை இடிபாடுகள் இன்னமும் தாக்குப்பிடிப்பது இதன் உறுதித் தன்மையைத்தான் காட்டுகின்றது. இந்த பழமைவாய்ந்த நினைவுச் சின்னம் பற்றிய அறிவிப்புப் பலகைகள் இங்கு காணப்பட்டாலும், அதுவுமே அழிந்து சிதைந்து கோட்டைக்குப் போட்டியாக கேவலமாக நின்று கொண்டிருப்பது அவமானச் சின்னம் போல் இருக்கிறது.
                
           ஆலம்பாரா கோட்டையின் இடிபாடுகள் அனாதையாகக் காட்சியளிக்கின்றன.


கோட்டையின் மிகப் பெரிய சுவர்கள் பெயர்ந்து விழுந்து கோட்டையிலிருந்து விடுபட்டு கடல் அலைகளால் மண்ணில் புதையுண்டு கிடப்பதைக் காணமுடிகிறது. இடிபாடுகளின் இடையே கடல்வாழ் ஜீவராசிகள் சுகமாக வாசம் செய்து வருகின்றன. 

கரையோரமெங்கும் மீனவர்கள் தங்கள் படகுகளை இழுத்து வந்து பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்கின்றனர். இந்த இடம் பற்றி ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும் வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் பாருங்கள்: “Out in the Indian Ocean somewhere, there is a former army post; abandoned now just like the war and there is no doubt about it. It was the myth of fingerprints. Thatis what that old army post was for.”

                       To be continued.............

வரலாறு பேசும் பயணம் பகுதி 25

                         வரலாறு பேசும் பயணம் பகுதி 25
சாந்தோம் கதீட்ரல். 

சென்னையில் சாந்தோம் எனும் பகுதியில் எழிலொழுக வானுயர்ந்து நிற்கும் தேவாலயம் தான் சாந்தோம் சர்ச் என வழங்கப்படும் பழம்பெரும் தேவாலயம். இந்த கதீட்ரல் எனப்படும் தேவாலயம் 16ஆம் நூற்றாண்டில் இங்கு முதன்முதலில் வந்திறங்கிய போர்த்துகீசிய வணிகர்களால் கட்டப்பட்டது. பிறகு இந்தப் பகுதிகள் எல்லாம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் வசம் வந்தபோது இதனை அவர்கள் 1893இல் முற்றிலுமாகப் புதுப்பித்துக் கட்டினார்கள்.
                 
                          தேவாலயத்தின் உட்புறத் தோற்றம்

தூய தாமஸ் பாலஸ்தீனத்திலிருந்து இந்திய மண்ணில் கேரள மாநில கடற்கரையில் தான் கி.பி. 52இல் முதன்முதல் கால் பதித்தார். கி.பி.72 இல் அவர் மரணம் அடைந்த போது அவர் உடல் இங்குதான் சமாதி வைக்கப்பட்டது, அதனை இப்போதும் இந்த தேவாலயத்தின் அடித்தள அறையில் சென்று பார்க்கலாம். இந்தப் பகுதி முழுவதும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அனைவரும் சென்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பாகவைக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்புற சாலையில்தான் 13 கி.மீ தூரமுள்ள மெரினா கடற்கரை எழிலொழுகக் காட்சி தருகிறது. இதனை 1886இல் வடிவமைத்தவர்கள் போர்த்துகீசியர்கள். இந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு அன்றிரவு கோவிளம்பாக்கத்திலுள்ள நவீன்ஸ் கிரீன் ஃபீல்டு எனும் குடியிருப்பில் தங்கிவிட்டு விடியற்காலையில் புறப்பட்டனர்.
                  
                                  திருக்கழுக்குன்றம்.

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வந்து திருக்கழுக்குன்றம் அடைந்தனர். அங்கு இரு பிரிவினராக பாரதி இயக்கத்தினர் வந்து சேர்ந்தனர். திருவையாற்றுப் பகுதியிலிருந்து ஒரு குழுவினர் இரா.முத்துக்குமார், பஞ்சநதம், பாரத் தலைமையிலும் மற்றொரு பிரிவினர் சென்னையிலிருந்தும் வந்து சேர்ந்தனர். மலை அடிவாரத்திலிருந்து மேலே சென்று சுவாமி தரிசனம் செய்வதற்குள் பலருக்கும் மூச்சு வாங்கிவிட்டது.
 
                                      வேதகிரீஸ்வரர் ஆலயம்
வேதகிரீஸ்வரர் ஆலயம் மலையிலிருந்து தோற்றம்

திருக்கழுக்குன்றத்தை விட்டு நீங்குமுன் அங்கிருந்த மிகப் பெரிய தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு மகாபலிபுரம் நோக்கிச் சென்றார்கள். மகாபலிபுரம் சென்றடையும்போது நல்ல வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

மகாபலிபுரம்      

அங்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியின் உதவியோடு மகாபலிபுரத்தின் சிறப்புகளான ஐந்து ரதம், அர்ஜுனன் தவம் முதலான புகழ்வாய்ந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு கடற்கரைக் கோயிலுக்குச் சென்று அங்கு அலைகளின் அழகில் மூழ்கித் திளைத்தனர். மாமல்லன் எனும் நரசிம்ம பல்லவனின் பெயரால் உருவான இந்த கடற்கரை நகரம் பல்லவ சாம்ராஜ்யத்தின் முக்கியமான துறைமுகமாகவும், இங்கு முட்டு முட்டாகக் காட்சியளித்த மொட்டைப் பாறைகளையும், சிறு குன்றுகளையும் சிற்றுளி கொண்டு சீரிய கோபுரங்களை எழுப்பிய பெருமை மாமல்லன் நரசிம்ம பல்லவனுக்கும் அவனது தந்தையான மகேந்திரவரம பல்லவனையும் சேரும். பிரபல பத்திரையாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய “சிவகாமியின் சபதம்” நாவல் முழுவதுமே இந்த ஊரையும், இந்த சிற்பங்களையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் ஆயனர் எனும் ஓர் சிற்பி அவருடைய குமாரி சிவகாமி, அவளைக் காதலித்த நரசிம்ம பல்லவன் என்று அந்த நாவலின் சிறப்பு முக்கியமானது. பின்னர் கடற்கரை மணலை நடந்து கடந்து, கடற்பொருட்கள் விற்பனை செய்யும்

கடைகளின் முன்பாக நடந்து மீண்டும் கடல் மல்லை உணவு விடுதிக்குச் சென்று பகல் உணவு முடிந்து கிளம்பினர்.
                                To be continued..........

                  

வரலாறு பேசும் பயணம் பகுதி 24

                                  வரலாறு பேசும் பயணம் பகுதி 24
திருவண்ணாமலை.  
   
பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக வழிபடப்படுவது திருவண்ணாமலை. இங்குதான் சிவபெருமானின் அடி முடி தேடி மகாவிஷ்ணுவும், பிரம்மனும் மேலும் கீழுமாகச் சென்றும் கண்டு பிடிக்கமுடியவில்லை எனும் செய்தியை நமது பக்தி இலக்கியங்கள் எல்லாம் பகருகின்றன. அப்படிப்பட்ட புண்ணிய பூமிக்குச் சென்றனர் பாரதி இயக்கத்தினர். அந்த நகரத்தை நெருங்கும் போதே வானுயர்ந்த அண்ணாமலையார் மலையும், அந்த மலையின் பின்னணியில் முன்புறம் நாற்புறமும் ராஜகோபுரங்கள் அமைந்த அற்புதமான அண்ணாமலையார் ஆலயமும் நம் கண்களையும் கருத்தையும் ஒருசேர கவர்ந்திழுக்கின்றன.

பண்டைய காலத்திலிருந்து இந்தப் பகுதியை பல்லவ மன்னர்களும், இடைக்கால சோழர்களும், பிற்கால சோழர்களும், ஹொய்சாளர்களும், விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளும், கர்நாடக நவாபுகளும், மைசூரின் திப்பு சுல்தான் இவர்களையெல்லாம் தொடர்ந்து பிரிட்டிஷாரும் இந்தப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள். ஹொய்சாள மன்னர்களுக்கு இவ்வூர் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. இதுவும் காஞ்சி, கும்பகோணம் போல ஒரு கோயில் நகரம். அண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயம் இவைகளைச் சுற்றிதான் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

இந்த ஊருக்கு ஒரு புராண வரலாறு உண்டு. சிவபெருமான் உறையும் கயிலை மலையில் இனிமையானதொரு பொழுதில் சிவபெருமான் சற்று வேறு ஏதோ கவனமாக இருந்த நிலையில் பார்வதி பின்னால் இருந்து அவர் கண்களை விளையாட்டாகப் பொத்துகிறாள். கைலாயத்தில் நடந்த இந்த ஓரிரு விநாடி நிகழ்ச்சியின் காரணமாக இந்த பூமியெங்கும் பல ஆண்டுகள் இருளில் ஆழ்ந்தனவாம். மனம் வருந்திய பார்வதி தேவி தேவ கணங்களுடன் சேர்ந்து உலகுக்கு ஒளி தரவேண்டுமென்று பெருந்தவம் இயற்றத் தொடங்கினார். அப்போது சிவபெருமான் அக்னி வடிவமாக இந்த அண்ணாமலை மலையின் மீது தோன்றினாராம். அப்போது இவ்வுலகுக்கு மீண்டும் ஒளி பரவியதாம். பார்வதியின் இந்த பக்தியை மெச்சி இறைவன் அன்னையைத் தன்னுடலின் ஒரு பாகமாக ஆக்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தாராம்.  இதுதான் இவ்வூரின் சிறப்பு.

இந்த அண்ணாமலை மலைச் சிகரமே சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. அருணாசலம் என்ற பெயர் இந்த மலைக்கு உண்டு. அருணன் என்றால் நெருப்பு, அசலம் என்றால் மலை. முந்தைய யுகத்தில் இது நெருப்பு மலையாக இருந்து குளிர்ந்து இப்போது இப்பூவுலகில் காட்சியளிக்கிறது என்கின்றனர்.

இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து குவிகிறார்கள். அண்ணாமலை யாரையும் உண்ணாமுலை அம்மனையும் கண்டு தரிசித்து மகிழ்கிறார்கள். இங்குதான் முருகன் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் வாழ்ந்தார். அவர் கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒரு கிளி உருவம் எடுத்தபோது அவருடலை எதிரிகள் எரித்துவிட்டதால் அவர் கிளியாகவும் இருந்து பாடல்களைப் பாடினாராம். அருணகிரி தவிர இவ்வூர் பல மகான்களைக் கவர்ந்திருழுத்து வந்திருக்கிறது. அவர்களில் ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார் இவர்கள் போன்ற பல சித்த புருஷர்கள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ரமண மகரிஷியின் ஆசிரமம் அவருடைய பக்தர்களால் நிரம்பி வழிகிறது. பாரதி இயக்கத்தாரும் ரமண மகரிஷி ஆசிரமம் சென்று தரிசித்து மகிழ்ந்தார்கள். அப்போது நமது திருவையாறு நாட்டியாஞ்சலியில் பங்குபெறும் பரதநாட்டியக் கலைஞர் திருமதி கலைச்செல்வி கங்காதரன் என்பார் அங்கிருப்பது அறிந்து அவரை தொலைபேசியில் அழைத்தோம். அவரும் உடனடியாக வந்து இவர்களை சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சந்தித்து பிறகு திருவண்ணாமலையை விட்டு நீங்கும் வரை உடனிருந்து வழிகாட்டி உதவினார். அவருக்கு நன்றி.

அவரும் மற்றொரு நண்பரும் இவர்களை அண்ணாமலையார் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்விக்க மிகவும் முயன்று பார்த்தார்கள். ஆனால் அதற்கு சில நாட்கள் முந்திதான் அந்த ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றிருந்தது. அதனால் அன்று ஏராளமான மக்கட் கூட்டம். உள்ளே நுழைய முடியவில்லை. இவ்விருவரும் அவ்வாலயத்துடன் தொடர்பில் இருந்தும், திருமதி கலைச்செல்வி அந்த ஆலயத்தில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்த போதும், அங்கிருந்த காவலாளிகளின் கெடுபிடியால் இவர்கள் தரிசனம் செய்யமுடியாமல் திரும்ப நேர்ந்தது மனதுக்கு வருத்தமளித்தாலும், அண்ணாமலையார் இவர்களை மறுபடி ஒருமுறை வரச்சொல்லி இப்படி செய்திருப்பாரோ என்கிற எண்ணத்தோடு நீங்கினர்.

நண்பகலில் திருவண்ணாமலையை விட்டு நீங்கி செஞ்சி நோக்கி விரைந்தனர் பாரதி இயக்கத்தினர்.

செஞ்சிக்கோட்டை.

தமிழகத்துக் கோட்டைகளில் செஞ்சிக் கோட்டைக்குத் தனிப் பெருமை உண்டு. ராஜா தேசிங்கு என்று பால பாடங்களில் படித்த நினைவை யாரும் மறந்து விட முடியாது. தேசிங்குராஜன் டெல்லிக்குச் சென்று முகலாய மன்னர்களின் குதிரையை அடக்கியதாக பாட்டுகூட ஒன்று உண்டு. கோட்டை என்றதும் நமக்கு சத்திரபதி சிவாஜிதான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் அவர்தான் மராட்டியப் பிரதேசத்தில் யாரும் உட்புகமுடியாத கோட்டைகளைக் கட்டி முகலாய மன்னர்களுக்கும் தட்சிண சுல்தான்களுக்கும் தண்ணீர் காட்டியவர். அந்த சத்ரபதி சிவாஜியே சொல்கிறார் “யாராலும் சுலபமாக உட்புக முடியாத வலுவான அற்புதக் கோட்டை இந்த செஞ்சி கோட்டை” என்கிறார். பிறகு வேறெவர் சாம்றிதழ் கொடுக்க வேண்டும்? ஐரோப்பியர்கள் இந்தக் கோட்டையை “கிழக்கின் டிராய்” என்கின்றனர். கிரேக்க புராணத்தில் வரும் டிராய் எனும் கோட்டை பற்றிய வரலாற்றினை புகழ்வாய்ந்த ஹாலிவுட் படமான “ஹெலன் ஆஃப் டிராய்” படத்தில் பார்த்திருக்கலாம். அந்தப் புகழுக்குரிய கோட்டை செஞ்சிக் கோட்டை.
தமிழகத்தின் வடமாவட்டமான திருவண்ணாமலை அருகில் அமைந்தது இந்தப் பகுதி. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று பெரிய மலைகள். இடையில் இரு சிறிய குன்றுகள். இவை அனைத்தையும் சுற்றி 12 கி.மீட்டர் தூரத்துக்கு மதிற்சுவர் கட்டி பாதுகாக்கப்பட்டது செஞ்சி. இன்று சாலையில் நின்றுகொண்டு இரு புறமும் பார்த்தால் இதன் கம்பீரம் தெரிகிறது. அடே அப்பா! எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான மலைகளை இணைத்துக் கோட்டைகளைக் கட்டி அதற்கு மதிற்சுவரும் கட்டி பாதுகாத்திருப்பதை நம்மால் நம்பமுடியவில்லை, ஆனால் கண்களால் பார்க்கிறோமே அதனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

பண்டைய தமிழகத்தில் இப்பகுதி சிங்கபுரி என வழங்கப்பட்டது. இதுவே மருவி செஞ்சியாக மாறியிருக்க வேண்டும். மேலும் இங்கு சிங்கவரம் என்ற பெயரில் ஒரு கிராமமும் இருக்கிறது. அது செஞ்சியாக மாறியிருக்கலாம். 13ஆம் நூற்றாண்டில் யாதவ வம்சத்தினர் இந்தக் கோட்டையைக் கட்டத் துவங்கினர். பின்னர் பல மன்னர்களும் இதனை வலுவாகக் கட்டினர். விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுகையின் போது 1509 தொடங்கி 1529 வரையில் செஞ்சியை விரிவு படுத்தினர். செஞ்சியின் சிறப்புகளுக்குக் காரணமான கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், பாடி வீடுகள், நெற்களஞ்சியம், ஆழமான அகழிகள் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
பல்லவ மன்னர்கள் காலத்தில் செஞ்சியில் பல கோயில்கள், குகைக்கோயில்கள் உருவாக்கப் பட்டன. சோழர்கள் ஆதித்த கரிகாலன், ராஜராஜன் ஆகியோரும் இந்த இடத்தை சிங்கபுரம் எனும் பெயரில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோரும் இங்கு வருகை புரிந்திருக்கின்றனர். மராத்தியர்கள் இந்த கோட்டையைத் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தபோது பீஜப்பூர் சுல்தான் இதை கைப்பற்றியிருக்கிறார். பிறகு சத்ரபதி சிவாஜி இதனை அவர்களிடமிருந்து மீட்டிருக்கிறார். சத்ரபதியின் தம்பி ராஜாராம் இங்கு முகலாயர்களுடன் போரில் ஈடுபட்டிருக்கிறார். முகலாயர்களின் ஏழு ஆண்டு முற்றுகை வெற்றியை அவர்களுக்குத் தரவில்லையாம். 1698இல் இந்தக் கோட்டையை முகலாயர்கள் கைப்பற்றியபோது உள்ளே இருந்த ராஜாராமை அவர்களால் கைது செய்யமுடியவில்லை. இந்தக் கோட்டையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதே பெரும்பாடு. அப்படியிருக்கும்போது ராஜாராம் தப்பிவிட்டதில் வியப்பேதும் இல்லை.

செஞ்சியை விட்டு நீங்கி பயணத்தைத் தொடர்ந்தனர் பாரதி இயக்கத்தினர்.
                       
                                    தூய மேரி தேவாலயம்

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.

பாரதி இயக்க அறங்காவலர் திரு இரா.மோகன் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிபவர். அவர் சென்னை சேப்பாக்கத்திலுள்ள அவர்களது தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரது பணி நிறைவு நாள் வந்தது. அதற்காக சென்னைக்குச் சென்று அவர் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டபோது அந்த அலுவலகத்துக்கு அருகில்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகாம் இருக்கிறது என்பதால் அங்கு சென்று பார்க்கலாம் என்று சென்றார்கள். அப்போது கோட்டியினுள் நுழைய நிறைய கெடுபிடிகள் இருந்தன. அதன் பின்புறம் சுமார் 335 ஆண்டிகள் பழமையான செயிண்ட் மேரீஸ் சர்ச் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அந்த தேவாலயத்தைச் சென்று பார்த்து வரலாம் என்று அனைவரும் அங்கு சென்றார்கள்.

எப்போதும் மக்கட் கூட்டம் நிரம்பி வழியும் தலைமைச் செயலக வளாகத்தின் ஒரு மூலை, வேம்பு மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. அந்த மரக்கூட்டங்களுக்கிடையே ஓங்கி உயர்ந்ததொரு தேவாலய கோபுரம், முன் வாயிலில் இரும்பி கேட். அதனுள் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக எழும்பி நிற்கும் தேவாலயம் தான் செயிண்ட் மேரீஸ் தேவாலயம் என வழங்கப்படும் சென்னையின் முதல் ஐரோப்பியர் கட்டிய தேவாலயம்.

இது1680 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் கோட்டையில் வசித்த ஆங்கிலேயர்களின் வழிபாட்டுக்காகக் கட்டப்பட்டது. 1678 மார்ச் 25ஆம் தேதி இந்த கட்டடம் கட்ட துவக்கப்பட்டது. அப்போது சென்னை கவர்னராக இருந்தவர் ஸ்டிரேன்ஷாம் மாஸ்டர். சென்னையில் அப்போது இருந்த ஆங்கிலேயர்களின் நன்கொடையால் கட்டப்பட்டது இது. இது 80 அடி நீளம் 50 அடி அகலமும் மூன்று வராந்தாக்களுடன் அமைந்தது. செங்கல் சுண்ணாம்பு கொண்டு கட்டியிருக்கிறார்கள். 1680 அக்டோபர் 28இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேவாலய வளாகத்தில் 104 கல்லறைகள் இருக்கின்றன. இதில் 1777இல் இருந்த பிகாட் பிரபுவின் கல்லறையும் அடங்கும். இப்போது உயர்நீதி மன்றம் இருக்குமிடத்தில்தான் ஐரோப்பியர்களின் கல்லறைகள் முன்பு இருந்தன. பின்னர் அது இங்கு மாற்றப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியாரின் தேவாலயம் என்று முதலில் அழைக்கப்பட்ட இது பின்னர் 150 ஆண்டுகள் ராஜதானி தேவாலயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.


ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஐஸ் ஹவுஸ் எனப்படும் சுவாமி விவேகானந்தர் இல்லம் நோக்கிப் போய் அந்த பிரம்மாண்டமான வளாகத்தைக் கண்டு அங்குதான் சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தபோது தங்கியிருந்த செய்திகளைத் தெரிந்து கொண்டு கிளம்பினர்.
                              To be continued.............

வரலாறு பேசும் பயணம் பகுதி 23

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 23
திருவெள்ளறை.   

மெல்ல மெல்ல இருளில் மூழ்கும் அந்த முன்னிரவு நேரத்தில் திருவெள்ளறை எனும் சோறூழியர்கள் எனும் சோழியர்கள் நிர்வகிக்கும் இந்தப் பெருமாள் ஆலயத்தைச் சென்றடைந்தனர். மிகப் பழமையான உயர்ந்த நுழைவாயில் கொண்ட ஆலய முன்கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இரவு நேர இனிமையான காற்று, ஒளி பரவிய பிரகாரம், அமைதியாக பெருமாளைச் சேவித்துவிட்டு வரும் பக்தர்கள் கூட்டம் அந்த அனுபவமே இனிமையானது. நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கத்தை யடுத்து முக்கியமான வைணவத் தலம் இந்தப் பகுதியில் இதுதான் என்று கருதப்படுகிறது. இவ்வூருக்கு ஸ்வேதகிரி, ஆதிவெள்ளறை, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் பெயர்கள் உண்டாம்.

இந்தக் கோயிலுக்கும் ஒரு பழமையான வரலாறு உண்டு. சிபிச்சக்கரவர்த்தி இந்தப் பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த காலம். ஒருநாள் வேட்டைக்குக் கானகம் வந்த சிபியின் கண்களில் ஒரு வெள்ளைப் பன்றி பட்டுவிட்டது. வேட்டைக்கு வந்த அரசர் அதைத் துரத்திக் கொண்டு போனாராம். அது ஓடிப்போய் காட்டில் மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்த இடத்துக்கருகில் ஒரு புற்றில் மறைந்து கொண்டதாம். அதைத் தேடிப்போன மன்னன் மகரிஷியிடம் அங்கு ஓடிவந்த பன்றி என்னவாயிற்று என்று வினவ அவர் புற்றில் பாலை ஊற்று என்றாராம். அதன்படி மன்னன் புற்றில் பாலை ஊற்ற புற்றுமண் கரைந்து அதனுள் இப்போதைய பெருமாளின் விக்கிரகம் அங்கு இருந்ததாம். அதைக் கொண்டு போய் ஒரு ஆலயம் அமைத்து அதில் பிரதிஷ்டை செய் என்றாராம் மகரிஷி. அதன்படி கட்டப்பட்ட ஆலயம் இது, இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளும் அங்கு கிடைத்த பெருமாள் தானாம்.

தலபுராணத்தின்படி கருடபகவான், மார்கண்டேய மகரிஷி, இலக்குமி, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலமாம் இது. நான்கு சதுர் யுகங்களுக்கு முன்னால் பெருமாள் இங்கு மார்கண்டேயரையும், பூதேவியையும், சிபி சக்கரவர்த்தியையும் ஆசீர்வதித்ததாகக் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தில் மூலவர் புண்டரீகாக்ஷபெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலம்; தாயார் செண்பகவல்லி, பங்கயவல்லி என்றும், பங்கஜவல்லி என்றும்கூட சொல்கிறார்கள். ஸ்வேதகிரி என்றால் வெள்ளைமலை என்று பொருள். இது திருவரங்கக் கோயிலுக்கும் முந்தையது என்பதால் இதனை ஆதிவெள்ளறை என்று அழைக்கிறார்கள். ஆலயத்துக்கு இரண்டு நுழைவாயில்கள். உத்தராயண வாசல், தட்சிணாயன வாயில் என்று பெயர். உத்தராயண வாசல் தைமாசம் தொடங்கியும், தட்சணாயண வாயில் ஆடி மாதம் முதலும் பயன்படுத்துகிறார்கள். இதனைத் தவிர நாழி கேட்டான் வாசல் என்று ஒன்று உண்டு. இதற்கும் ஒரு விளக்கம் சொல்கிறார்கள்.

இந்த ஆலய தரிசனம் செய்துகொண்டு மன நிறைவோடு பாரதி இயக்கத்தினர் திருச்சியை அடைந்து அங்கு கனரா வங்கி ஜி.ஸ்ரீதரன் இல்லத்தில் உணவருந்திவிட்டு ஊர் திரும்பினர்.

திருக்கோயிலூர்.

திருக்கோயிலூர் சென்றவுடன் ஒருவர் இங்குதான் கபிலர் குன்று இருக்கிறது என்றார். அது எங்கே இருக்கிறது என்று விசாரித்தபோது அவ்வூரின் மத்தியில் ஓடுகின்ற பெண்ணையாற்றின் இடையில் இருக்கிறது என்றனர். இங்கு ஓடும் ஆறு தென்பண்ணை ஆறு. ஆந்திரப்பிரதேசம் நெல்லூர் அருகில் வடபெண்ணை ஆறு ஓடுகிறது.
தமிழ்நாட்டில் அட்டவீரட்டானத் தலங்கள் மொத்தம் எட்டு. அதில் திருக்கோயிலூர் ஒன்று. சிவபெருமான் தன் வீரத்தை வெளிப்படுத்திய இடங்கள் என்று இதற்கு இந்தப் பெயர் வந்தது. சிவபெருமான் தீமையை அழிக்க பல உருவங்களை எடுத்தார் அவை மொத்தம் எட்டு. திருக்கடவூரில் எமசம்ஹாரம், வழுவூரில் கஜசம்ஹாரம், கண்டியூரில் பிரம்மன் அகம் அழித்தது, திருவதிகை இப்படி பல ஊர்கள்.
              
                              கபிலர் குன்று

கபிலர் என்பார் ஒரு சங்ககாலத் தமிழ்ப் புலவர். கரிகால் சோழன், பாரி வள்ளல் ஆகியோர் வாழ்ந்த காலத்தவர். வேள்பாரியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கபிலர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர். பாண்டியன் அவையில் அரசவைப் புலவராக இருந்த இவர் பல அரசர்களிடமும் சென்று தன் தமிழை ஓதிவந்தார். பரம்பு மலை வேள்பாரியிடம் சென்ற போது அவரோடு நெருக்கமான நண்பரானார். பரம்பு நாட்டில் அரசனுக்குச் சமமாக இவரும் வாழ்ந்து வந்தார்.

அந்த சமயம் தமிழகத்தின் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒன்று சேர்ந்து சிற்றரசர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். அப்படி அவர்கள் பரம்பு மலையைப் பிடிக்க முயன்றபோது பாரி வீரத்துடன் போராடி உயிர் துறந்தார். பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியின் இரண்டு பெண் பிள்ளைகளான அங்கவை, சங்கவை எனும் இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்களுக்குத் தகுந்த மணமகன்களைத் தேடலானார். இதர வேளிர்குல மன்னர்களையெல்லாம் அணுகினார், அவர்கள் மூவேந்தர்களுக்குப் பயந்து கொண்டு மறுத்துவிட்டனர். அதில் இருங்கோவேள் என்பான் அவரை அவமரியாதை செய்து வெளியே தள்ளி கதவை மூடினான். பின்னர் அவ்விரு பெண்களையும் அந்தணர்கள் சிலரிடம் பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டுப் போனார்.
தன் நண்பன் பாரியின் மரணம் அவரை மிகவும் பாதித்துவிட அவர் வடக்கிருத்தல் எனும் வழக்கப்படி உண்ணாவிரத நோன்பிருந்து இந்த ஆற்றில் அமைந்துள்ள இந்தச் சிறு குன்றின்மேல்தான் உயிர் துறந்தாராம். அங்கு ஒரு சிறு ஆலயமும், நெடிய படிகளும் இருக்கின்றன. அற்புதமான இடம், ஒரு உயிர் உண்ணா நோன்பினால் பிரிந்த இடம், அதைச் சென்று பாரதி இயக்கத்தார் பார்த்து கபிலருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கபிலர் குன்றிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கிச் செல்வதற்காக பெண்ணையாற்றைக் கடந்து செல்கையில் வழியில் ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆசிரமம் காணப்பட்டது. அங்கு சந்நிதிகளில் மந்திர ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தோம் சுவாமிகளின் சந்நிதியில் ஹோமம் நடந்து கொண்டிருந்தது. தஞ்சையில் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய சீனிவாசன் என்பார் வயது முதிர்ந்த நிலையில் அங்கு இருப்பதைக் கண்டு அவரை நலம் விசாரித்தார்கள். இந்த ஆசிரமம் மிகவும் பிரபலமானது. இந்த ஆசிரமத்தில் ஞானானந்த கிரி என்பார், ரமண மகரிஷி அவர்களோடு சமகாலத்தில் இருந்தவர் இங்கு இருந்தார். இவர் ஒரு அத்வைத வேதாந்த ஜீவன்முக்தர். இவ்விடத்தை தபோவனம் என்கிறார்கள்.
   
ஞானானந்தகிரி சுவாமிகள், திருக்கோயிலூர்

ஞானனந்தகிரி சுவாமிகளுக்கு என்ன வயது என்பது யாருக்குமே தெரியாதாம். இவர் 1974இல் சமாதியடைந்தார். இவர் ஒரு சித்தர் என்பது மக்கள் எண்ணம். பாரதி குறிப்பிடும் குள்ளச்சாமி என்பவர் இவர்தான் என்பது சிலருடைய கருத்து.

                             To be continued...............

                       

வரலாறு பேசும் பயணம் பகுதி 22

                               வரலாறு பேசும் பயணம் பகுதி 22
ரஞ்சன்குடிக்கோட்டை 

சாத்தனூரிலிருந்து மெல்ல திருச்சி சென்னை பெரும்பாதையை அடைந்தனர். பெரம்பலூரில் ஒரு உணவு விடுதி பயணிகளின் பசியை ஆற்றி வழியனுப்பி வைத்தது. அங்கிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சில கல் தூரம் பயணித்ததும் சாலையின் இடதுபுறம் சில நூறு மீட்டர் தூரத்தில் ஒரு கோட்டை கண்களில் பட்டது. அது என்ன கோட்டை என்று விசாரித்தபோது, அதுதான் ரஞ்சன்குடிக் கோட்டை என்பது தெரியவந்தது. சாலையின் ஓரிடத்தில் திரும்பிய சிறிய சாலையொன்றில் அந்தக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் விசாரித்ததில் சாலைக்கும் வட புறம் ஒரு வழி இருப்பதாகவும், அதில் போனால் கோட்டைக்குள் செல்ல முடியும் என்றனர்.
ஒரு வழியாக ஊரார் காட்டிய பாதை வழியாக கோட்டையினுள் வந்தார்கள். அந்தக் கோட்டை திப்பு சுல்தான் தன் பெரும் படைகளுடன் தங்கி இருந்த இடமாம். அடே அப்பா! கோட்டைதான் எத்தனை பிரம்மாண்டம். தூரத்திலிருந்து பார்த்தால் சின்ன கோட்டை போல காட்சியளித்தது நெருங்க நெருங்க எத்தனை பெரிய பிரம்மாண்ட கோட்டை என்பது புரிந்தது.

ரஞ்சன்குடிக்கோட்டை எனும் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் “சந்திரலேகா” படத்தில் வில்லனாக நடித்த வில்லன் நடிகர் ரஞ்சன் பெயர்தான் நினைவுக்கு வந்தது. அதில் எம்.கே.ராதா கதாநாயகன், அவருடைய தம்பி ரஞ்சன். அரண்மனை வாசலில் எம்.கே.ராதா தன் தம்பியை அன்போடு வா தம்பி என்பார், தம்பியோ எதிரியாகக் கருதிய அண்ணனை “இந்தா வாங்கிக்கொள்” என்று தன் குத்துவாளை அண்ணன் மீது வீசுவார். அருமையான காட்சி இப்போது நினைவுக்கு வருகிறது. ஆனால் அந்த ரஞ்சனுக்கும் இந்தக் கோட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது பின்புதான் தெரிந்தது.

இந்த ரஞ்சன்குடிக்கோட்டை என்பது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூருக்கும் வடக்கில் 22 கி.மீ. தூரத்தில் சாலையை யொட்டி அமைந்துள்ளது. இந்த கோட்டையின் வரலாறு என்னவென்று விசாரித்தபோது தெரியவந்த செய்திகள் பிரமிக்கத் தக்கவை. 1751இல் இங்கு நடந்த ஒரு யுத்தம், பிரிட்டிஷ்காரர்களின் கிழக்கிந்திய படைகளின் ஆதரவோடு ஆற்காட்டு நவாப் முகமது அலிக்குக்கும், எதிரணியில் ஆற்காட்டு நவாபின் எதிரியும் ஆற்காட்டு வம்சத்தைச் சேர்ந்தவனுமான சந்தாசாஹேபுக்கும் நடந்த யுத்தம். இதில் சந்தா சாஹேபை பிரெஞ்சுக்காரர்கள் ஆதரித்தனர். இரு இந்தியர்கள் ஆற்காட்டு நவாப், எதிரில் இன்னொரு ஆற்காட்டு நவாப் உறவினர் இவ்விருவரையும் ஆதரித்து இரு ஐரோப்பிய படைகள் ஒன்று கிழக்கிந்திய கம்பெனி இன்னொன்று பிரான்ஸ் நாட்டுப் படை. இந்த யுத்தத்தில் ஆங்கிலேயர் ஆதரவுடனான முகமதி அலிக்கு வெற்றி கிடைத்தது. சந்தா சாஹேபும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் தோல்வி.

ரஞ்சன்குடிக்கோட்டை நீண்ட சதுர வடிவில் அமைந்தது. அதனைச் சுற்றி பெரிய ஆழமான அகழி. கோட்டை முதல் சுற்று, பாதுகாப்புடனான இரண்டாம் அடுக்கு, அதன் மேல் அதிக பாதுகாப்புடனான உயர்ந்த அடுக்கு என்று மிக அருமையான அமைப்பு. பாறைகளை வெட்டி எடுத்து அடுக்கி வலுவாகக் கட்டப்பட்ட கோட்டை. கோட்டியினுள் ஒரு அரண்மனை இருக்கிறது. குடியிருப்பு வீடுகளும் நிறைய இருக்கின்றன. போர் என்று வந்தால் பதுங்கிக் கொள்ள சுரங்க அமைப்புகள் நிறைய உண்டு. கோட்டியின் அடிவாரத்திலிருந்து மேல் பகுதிக்குச் செல்ல மலையைக் குடைந்து ஒரு சுரங்கப் பாதையும் உண்டு. இந்தக் கோட்டை இப்போது இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இது ஒரு சுற்றுலா இடம்.
இந்தக் கோட்டையை நஞ்சன்குடிக்கோட்டை என்றும் சிலர் சொல்கிறார்கள். இதனுள் ஒரு சிவாலயமும், அனுமன் கோயிலொன்றும் இருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபின் ஆணையின்படி அவ்வூர் ஜாகீர்தார் கட்டியதாகத் தெரிகிறது. இங்குதான் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும், இரு பக்கங்களிலும் இரு இந்திய அரசர்கள் ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர் இருந்து போரிட்டனர். போர் நடந்த இடம் வலிகொண்டா என்றாலும் அது இந்தக் கோட்டையில்தான் மையம் கொண்டிருந்தது. வலிகொண்டா என்பதுதான் இப்போது வாலிகண்டபுரம் என்றழைக்கப்படுகிறது, இது மிக அருகில் இருக்கிறது. 1752இல் பிரெஞ்சுப் படைகள் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் சரணாகதி அடைந்தனர். பிரெஞ்சுப் படையின் தளபதியாக இருந்தவர் டியாட்டீல் என்பவர்.

மிக உயர்ந்த செங்குத்தான பாறைகள் வழியே இந்த கோட்டையின் உச்சியைத் தொடப் புறப்பட்ட பாரதி இயக்கத்தினர் ஓரிருவர் தவிர அனைவரும் மேல் பகுதி வரை சென்று அங்கிருந்து நீர்தேக்கத்தையும் அரண்மனையையும் பார்த்துத் திரும்பினர். வழிநெடுக இவர்களுக்கு இடையூறு செய்யாமல் ஏராளமான வானரங்கள் திரிந்து கொண்டிருந்தபோதும் சற்று ஏமாந்தால் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை இவர்களைக் கேட்காமலே பறித்துச் சென்று கொண்டிருந்தன.

வாலிகண்டபுரம்.   

பெரம்பலூருக்கும் ரஞ்சன்குடிக்கோட்டையும் இடையில், நெடுஞ்சாலைக்கு மிக அருகில் ஒரு கோபுரம் தெரியும் அதுதான் வாலிகண்டபுரம் சிவாலயம். வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்த இடம் இது. வேப்பந்தட்டை தாலுகாவின் எல்லைக்குள் அமைந்தது. சோழ மன்னர்கள் காலத்தில் இது சோழநாட்டினுள் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. ராமாயண காப்பியத்தோடும் தொடர்புடையதாகச் சொல்லப்படும் ஒரு புராதன நகரம். வாலி, சுக்ரீவன் இவர்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியுமல்லவா. அதில் வாலி சிவனை வழிபட்ட தலம் இது. அது குறித்தே இங்குள்ள அழகிய சிவாலயத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் வாலாம்பிகா. ராஜராஜசோழன் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இந்த ஆலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அழகிய இந்த கோயிலின் அமைப்பும், நந்தி மண்டபமும் நந்தியும், அருகில் வைக்கப்பட்டிருந்த சேதமுற்ற பழைய நந்தியும் நம்மைக் கவர்கின்றன.


வாலிகண்டபுரத்திலிருந்து பெரம்பலூர் சென்று அங்கிருந்து துறையூர் செல்லும் சாலையில் நெடுந்தூரம் பயணம் செய்து, வழியில் பெருமாள் மலை எனுமிடத்தில் மலைமீது பாதை அமைத்து ஆலயம் கொண்ட அந்தப் பகுதியின் அழகையெல்லாம் கண்டுகொண்டு அனைவரும் திருவெள்ளறை எனும் கிராமத்தைச் சென்றடைந்தனர்.

                            To be continued.............