பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

59. கலைகள் - ஸங்கீத விஷயம்


                 இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மன நிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும், உள்ளத்தைத் திசை வெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது, இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது.

ரஸங்கள் ஒன்பது:
(1) வீரம்,                                (2) ரௌத்திரம் (கோபம்),      (3) அத்புதம் (வியப்பு),                        (4) சாந்தம் (நடுவுநிலை),     (5) பயாநகம் (அச்சம்),          (6) பீபத்ஸம் (வெறுப்பு),                   (7) ஹாஸ்யம் (நகை),          (8) கருணை, சோகம் (துயரம்): இதை 'அவலம்' என்பது பழைய தமிழ்    வழக்கு.                    (9) சிருங்காரம் (காமம்).

          வெளிப்பொருள்களைக் காணும்போது அல்லது நினைக்கும் போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும். இரண்டு மூன்று கலந்தும் தோன்றக்கூடும். ரஸ உணர்ச்சியிலே உள்ளத்தை முழுதும் ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை, பாட்டு. சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படைகிறார்கள். ரஸ உணர்ச்சி இல்லாவிடின், இக்கலைகள் நசித்துப் போகும்.

                பிறர் துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான்; இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியேதான ஒவ்வொன்றிலும்.

              ரஸ ஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் 'ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர்' என்பதை அறியாதவர்.
முத்துவாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே 'முதல்தர வித்துவான்.'  இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி 'வித்வான்'களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு 'ரஸம்' தெரிய நியாயம் இல்லை.

நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார். 'ராமநீ ஸமான மெவரு'  'மரியாத காதுரா' 'வரமு லொஸகி'...........ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த 'வித்வான்' வந்தாலும், இதே கதைதான் தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

'பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும்' என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்லவேண்டும். விழுங்கி விடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லை யாகச் செய்து விடக்கூடாது.

புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

'பூர்வ காலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரஸாதமிருந்தது. எங்களுக்கில்லையே. என்ன செய்வோம்?' என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்பதிலே பின் வாங்கக்கூடாது. தெய்வங்கள் இறந்து போகவில்லை. இப்போதும் அவற்றை உபாஸனை செய்து அவற்றின் அருள் பெறலாம். தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும், இடைவிடாத உழைப்பினாலும் ஸம்பாதிக்க முடியும்.

"நாட்டிலே ஸங்கீதத்திற்குச் சரியான போஷணை செய்யும் ராஜாக்களும் பிரபுக்களும் இல்லை. எங்களுக்கு ஜீவனமோ கஷ்டமாயிருக்கிறது. மனக்கஷ்டம் இல்லாமல் இருந்தா லன்றோ ரஸஞானத்தை வளர்த்துக் கொண்டு போகலாம். சில வருஷங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களை வரப்படுத்திக்கொண்டு ஜீவனத்திற்கு வழிதேடவேண்டிய ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம்?" என்று நினைத்து மனமுடைந்து போகவேண்டாம்.
இப்போது உலக முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடையகடமை. பிறகு, நல்ல போஷணை கிடைக்கும். ஒரு பிரபு மாதம் ரூபாய் 100 கொடுப்பான். ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக வசூல் பண்ணி மாதம் 1000 ரூபாய் கொடுக்கும்.  ஊரையே யஜமானாகக் கொள்ள வேண்டும்.

                ஊர்தான் ராஜா. இந்த ராஜாவுக்கு ஆரம்பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங்கொடுத்தால், வித்தைகளுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாது. நவரஸங்களும் சேரவேண்டும். கருணா ரஸமும் (அதாவது சோகரஸமும்) சிருங்கார ரஸமுந்தான் நமது தேசத்தில் நடைபெறுகின்றன. மற்ற வீரம், கோபம் (ரௌத்ரம்) வியப்பு, வெறுப்பு, அச்சம், நகைப்பு, சாந்தம் என்ற ரஸங்களின் விலாஸம் பாட்டிலே காணப்படவில்லை. நல்ல பாட்டுப் பாடினால்நல்ல மதிப்புத் தானாகவே வரும். அதிலிருந்து நல்ல வரும்படி ஏற்படும்.
திருஷ்டாந்தமாக: ஹாஸ்ய ரஸம் தோன்றும்படி ஒரு ராகத்தை விஸ்தரிக்கும்போது, அதிலே அர்த்தச் சேர்க்கையில்லா விடத்தும் ஜனங்கள் கடகடவென்று சிரிக்க வேண்டும்.
ரௌத்ர ரஸம் தோன்றும்படி பாடினால், அதைக் கேட்கும்போது, ஜனங்களுக்கு மீசை துடிக்கவேண்டும்; கண்கள் சிவக்கவேண்டும்.

            வீர ரஸமுள்ள பாட்டை ஒரு வித்வான் பாடும்போது, ஜனங்களெல்லாம் தம்மை யறியாமல் முதுகு நிமிர்ந்து தலைதூக்கி உட்காரவேண்டும். அவர்கள் விழியிலே வீரப் பார்வை உண்டாகவேண்டும். அப்போதுதான் பாட்டு ஸபலமாகும்.

           பொருளிலும், ஓசையிலும் 'ரஸம்' கலக்காத பாட்டு இனிமேல் தமிழ்நாட்டிலேயே வழங்கலாகாது.

             முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர்-இந்த மூன்று பெயருடைய கீர்த்தனைகளைத் தான் வழக்கத்தில் அதிகமாய்ப் பாடுகிறார்கள். இவற்றுள்ளே, தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸமஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப்போலே கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்த போதிலும், ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பொது ஜனங்கள் ரஸானுபவத்துடன் பாடுவதற்குப் பயன்படமாட்டா.
தியாகையர் தெய்வ வரம் பெற்றவர். தியாகையர் ரஸக்கடல். கர்நாடக ஸங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்கு அவரே காரணம். பூர்வகாலத்து ஞானிகளைப் போலே, இவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்து, தான் அற்று வித்தை வடிவாகி விளங்கினர். இவருடைய பாட்டுக்களை இக்காலத்துப் பாடகர் அதிக 'ஸங்கதி'களாலும் ரஸநாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்குதல் முதலிய செய்கைகளாலும் இயன்றவரை ஆபாஸமாக்கி விட்டபோதிலும், இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது. குப்பையிலே கிடந்து மாசேறி ஒளி மங்கிப் போயிருந்தபோதிலும், மாணிக்கத்தின் குணம் ரத்னப் பரீக்ஷைக்காரனுக்குத் தெரியாதா? அதுபோலவே, ரஸ உண்மை தெரிந்தோர் இத்தனை குழப்பத்துக்கிடையே தியாகையருடைய தொழிலின் ஸ்வரூபத்தை நன்கு கண்டு பிடித்துக்கொள்ள முடியும். கீர்த்தனத்தில் ராக தாளங்களை இசைத்திருக்கிற மாதிரியிலேயே அர்த்தம் தொனிக்க வேண்டும். அதைத்தான் ரஸச்சேர்க்கை என்றுசொல்லுகிறோம். இதிலே தியாகையர் மிகவும் சிறப்புக் கொண்டவர்.

திருஷ்டாந்தமாக, 'சக்கனி ராஜமார்க்கமு' என்ற கீர்த்தனத்தை எடுத்துக் கொள்வோம். அதிக ஸங்கதிகளும், பின்னல்களும் இல்லாமல் இதன் பல்லவியை சுத்தமாகப் பாடிப் பாருங்கள். "நல்ல ராஜமார்க்கம் இருக்கும் போது சந்துகளில் ஏன் சுற்றுகிறாய், மனதே?"  என்று அர்த்தம் இந்த இசையிலே அகப்படும்.

'மாருபல்க குன்னாவேமி' (ஏன் மறுமொழி சொல்லாமல் இருக்கிறாய்?) என்ற கீர்த்தனத்தின் பல்லவியைப் பாடிப் பாருங்கள், அந்த அர்த்தம் இசையிலே தொனிக்கும்.

'நன்னு ப்ரோவ நீகிந்த தாமஸமா' (என்னைக் காக்க உனக்கு இத்தனை தாமஸமா?) என்ற பல்லவி எடுத்த வுடனேயே அர்த்தம் பளீரென்று வீசும்.

இப்படியே எல்லாக் கீர்த்தனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி ஏற்படுத்த வேண்டும் என்று தியாகையர் சிரமப்பட்டு வேலை செய்யவில்லை. நெஞ்சிலே உண்மை யிருந்ததால் ஸங்கீதம் இயற்கையிலே இவ்விதமாகப் பிறக்கும்.

பிற்காலத்தில், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலானவர்களின் பாட்டிலே இந்த லக்ஷணம் இல்லை. 'வரமுலொஸகி' என்ற பாட்டை எடுத்தீர்களானால்,  இசைக்கும் பொருளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது விளங்கும். சொற்கள், 'வரங்கொடுத்துக்காப்பது உனக்கு அரிதா?' என்று கேட்கின்றன. இசை சண்டைத் தாளம் போடுகிறது. இது நிற்க.

வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுகளை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும். 

          மேலும், 'பாட்டுக்குத் தாளமே யொழிய தாளத்திற்குப் பாட்டில்லை' என்ற விஷயத்தைப் பாடுவோர் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். சிலவிதக் கூத்துக்களிலே, தாளத்திற்குப் பாட்டுப் பாடுதல் பொருத்தம். அங்கேகூட, முழுதும் தாள நயத்தையே கருதி இசை நயத்தை நாசம் செய்துவிடக்கூடாது. அப்படியிருக்க, 'பாட்டுக் கச்சேரி' என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கே இசையின்பங்களைக் கொன்று தாள முழக்கத்தைப் பிரதான மாக்குதல் தகாது. அதிலும் கீர்த்தனங்களைப் பாடும்போது இசையின்பங்களைக் காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ளவேண்டும்.

சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீ காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றப்படி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். "வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலே தான் தொண்டை கேட்டுப் போகிறது" என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், 'மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்' என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆஹார ஸாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவுபட்டிருக்கிறது.

தவிரவும், உள்ளத்திலே வீரம் இருக்கவேண்டும். உள்ளத்திலே ஸத்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. உள்ளத்திலே தைர்யம், ஸந்தோஷம், வலிமை முதலிய சுப லக்ஷணங்கள் தமிழரைக் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன. முன்னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்த குணங்கள் மிகவும் விசேஷமாக விளங்கின. இப்போது சில வருஷங்களாகக் குறைவு பட்டிருக்கின்றன. இந்த குணங்களை நமது ஜனங்களெல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத வித்வான்கள் இவற்றைப் பழக்கப் படுத்தினால் தான், அவர்கள் கண்டத்தில் உவகையும் வீரமும் பிறக்கும்; பாட்டிலே களையுண்டாகும்.

             தமிழ்நாட்டு வித்வான்களுடைய ஸங்கீதத்தைப் பற்றி மேலே எழுதினேன். மற்ற சாதாரண ஜனங்கள் பாடும் பாட்டைப்பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். இந்தப் புதிய பகுதி தொடங்கு முன் மேற்படி சங்கீத வித்வான்களிடம் உள்ள நன்மையையும் சொல்ல வேண்டாமா? பெயர்கள் குறிப்பிடாதது பற்றி மன்னிப்பு வேண்டுகிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாட்டில் உள்ள ஜில்லாக்களிலே ஒவ்வொன்றிலும் இக்காலத்தில் கருவிகளிலும்வாய்ப்பாட்டிலும் புகழ்பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர்.

காலத்தின் சீர்க் கேட்டாலும், ஸம்ப்ரதாய பழக்கத்தினாலும் நவரஸங்களுக்கும், பாட்டுக்கும் உள்ள  தொடர்பை மறந்து விட்ட போதிலும், இவர்களிலே சிலர் (ஆணும் பெண்ணும்) ஸரஸ்வதி கடாக்ஷத்தினால் தம்மை அறியாமலே அற்புதமான வேலை செய்கிறார்கள். சிலர் சமயங்களில் ஓரிரண்டு ரஸங்களைத் தெரிந்தே பாட்டில் இசைக்கிறார்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம் மிகவும் உயர்ந்த நிலையடைகிறது. ஸமீப காலத்தில் இறந்துபோன மஹா வைத்யனாதய்யர், புல்லாங்குழல் சரப சாஸ்திரி முதலிய மஹான்களுக்கு இப்போது தக்க பின்காப்பாளர் இல்லாமற் போகவில்லை.

ஆனால், இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறிப்பிட்ட செய்திகளையும் தயவுசெய்து கவனிக்கும் பக்ஷத்தில் தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்துவரும் உபகாரம் பலமடங்கு அதிகப்படுமென்பதும் அப்படி அதிகப்பட வேண்டுமென்பதும் என்னுடைய கருத்து; அதைத் தெரிவித்துக் கொண்டேன்.

இனி சாஸ்திரோக்தமாகப் பாடும் வித்வான்கள் அல்லாமல், ஸாமான்யமாகப் பாடும் பொது ஜனங்களுடைய செய்தியைப் பார்ப்போம்.

            முதலாவது, நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டையெடுத்துக் கொள்வோம். கல்யாணப் பாட்டுக்கள், கும்மிப் பாட்டுகள் முதலியவற்றுடன் நமது பெண்கள் "கீர்த்தனை" வகைகளும் கொஞ்சம் பாடுகிறார்கள். இதில், ஒரு சில பெண்கள் நல்ல லக்ஷணத்துடன் பாடுகிறார்கள் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால், பெரும்பான்மையோர் ஸங்கீத லக்ஷணமே தெரியாமல் தவறாகப் பாடுகிறார்கள். பெரும்பான்மையோருக்குத் தொண்டை நன்றாகப் பழகவில்லை. பெரும்பான்மையோருக்குப் படிப்பு மிகவும் குறைவாகவும் சூனியமாகவும் இருப்பதால் இவர்கள் பாடும் பாட்டுக்களிலே சொற்பிழையும் பொருட்பிழையும் மொய்த்துக் கிடக்கின்றன. அதிலும், இவர்கள் திக்ஷிதர், தியாகையர் முதலியவர்களின் கீர்த்தனங்கள் பாடும்போது, தாளம், சுருதி ஒன்றையும் கவனிக்காமல் பதங்களைச் சூறையாடி மிகவும் விகாரப்படுத்தி விடுகிறார்கள். ஆனாலும், ஆனாலும், ஆனாலும் தமிழ் நாட்டு ஸ்திரீகளின் ஸங்கீதத்தை நாம் புகழா திருக்கலாகாது. இவர்கள் பாடும் பாட்டிலே பெரும்பான்மைக் கீர்த்தனங்களும், பத்யங்களும் தெலுங்கில் இருந்த போதிலும், தமிழ்ப் பாட்டுத்தான் அதிகமாகப் பாடுகிறார்கள். இந்தத் தமிழ்ப் பாட்டிலே பலபிழைகள் மலிந்து கிடந்தாலும், ஒரு சில பாட்டுக்கள் மிகவும் நன்றாக அமைந்திருக்கின்றன. 'ஓடம்' முதலியவற்றில் அதிஸமீப காலத்துப் பாட்டுக்கள் மிகவும் விகாரமாயிருந்தாலும், பழைய காலத்துப் பாட்டுக்களிலேயே "சொல் நயம் அதிகம் இருக்கிறது. பின்னிட்டு "ரயில் வண்டி ஓடம்" முதலிய அசுத்தங்கள் அதிகமாகச் சேர்ந்து விட்டன. இங்கிலீஷ் படித்த புருஷர்கள் கேட்டு மடத்தனமாகச் சந்தோஷப்பட்டதிலிருந்து பெண்களுக்கு இந்த மாதிரி விரஸங்களிலே பற்றுதல் உண்டாயிற்று.

கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப் பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ணமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா?

தமிழ்ப் பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கின்றன.


No comments: