பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 28, 2010

தியாகராஜ சுவாமிகள் வரலாறு.

தியாகராஜ சுவாமிகள் வரலாறு.
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

தியாகராஜ சுவாமிகள்

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் "சங்கீத விஷயம்" எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான். அப்படி இவருடைய பாடல்களில், அதிலும் அந்த மொழி நமக்கெல்லாம் அன்னியமாயிருந்தபோதிலும், மனங்கவரும் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல. மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரஸத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும். அவருக்கு முன்பாகவும் பக்தி ரஸத்தோடு பலர் பாடியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அந்தந்த காலங்களில் பாடல் ரஸத்திற்காகவும், பொருளமைதிக்காகவும், இறைவனது பெருமையையும், புகழையும் பாடியிருப்பதனால் அவை பிரபலமாகியிருந்தன. நமது முன்னோர்கள், மகான்கள் இவைபற்றி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதித்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்தியங்கள் என்றென்றும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஸாகித்தியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவரது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கீர்த்தனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவை, அவற்றைப் பாடுகையில் அவர் மனப்பாங்கு எங்ஙனம் இருந்தது என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏற்பட்ட சோதனைகள், மன வேதனைகள், குடும்பத்திலிருந்த சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டோமானால், அவரது கீர்த்தனங்களில் இழையோடும் அந்தந்த பாவங்கள், ரஸங்கள் நமக்குத் தெளிவாகும். ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து 'இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய், அன்று நீ அப்படிச் சொன்னாயே' இப்படியெல்லாம் அவர் சொல்வது அவர் வாழ்ந்த உலகம் தனி, அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவரும். ஸ்ரீ தியாகராஜர் எந்த உணர்வில் இருந்தார், லோகாயதமான விஷயங்களில் அவருக்கு அக்கறை இருந்ததா என்பது போன்ற கேள்விகள்கூட நமக்கு எழலாம். இல்லாவிட்டால் சரபோஜி மன்னன் அவரை அழைத்துப் பொன்னும் பொருளும் தர விரும்பியபோதும், அதற்குச் சம்மதிக்காமல், இவைகள் சுகம் தரக்கூடியவைகளா, அல்லது இராமா உனது சேவடி கைங்கர்யம் சுகம் தருமா என்றெல்லாம் பாடியிருப்பாரா? வேதங்கள் எப்படி எழுதப்படாமல் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக் கிறதோ, அப்படியே, மகான்களின் பாடல்களும் வரிசைப்படுத்தியோ, ஸ்வரப்படுத்தியோ, எழுதிவைத்தோ பிற்கால தலைமுறையினருக்கு கொடுக்கப்படாமல், குருமார்களிடம் கற்றுக்கொண்ட சீடர்களின் மூலமே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தானோ என்னவோ, ஒருசிலர் அவர் பாடிய தெலுங்கு மொழிச் சொற்களைச் சில இடங்களில் தவறாகக்கூட உச்சரிக்கிறார்கள்.

இதற்கு முன்பு ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை வரலாற்றைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். திருவையாறு க்ஷேத்திரத்தைப் பற்றிக் கூற வரும்போது, ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கையையும் சாதனைகளையும், அவருடைய பெருமையையும் சொல்லாவிட்டால் முழுமையடையாது. பிழைகள் இருக்குமானால் பொருத்தருள வேண்டும்.

நாதத்தின் பெருமை.

நாதம் அல்லது ஒலி என்றால் என்ன பொருள்? இதற்கு மகான்கள் நல்ல விளக்கங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். "நா" என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், "த" என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள். இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே "நாதம்" எனப்படும். இந்த நாதமே "ஓம்" எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் எனப்படும். எனவே குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் ஸங்கீத ஞானம் இல்லாமல் மோக்ஷம் கிடைக்குமா?

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் "மோக்ஷமு கலதா" எனும் ஸாரமதி இராகக் கீர்த்தனையில் இப்படிச் சொல்லுகிறார். "உன்னுடைய சிறந்த பக்தியோடு கூடிய ஸங்கீத ஞானம் இல்லாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்குமா? அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம். "இந்தப் பூவுலகில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்களுக்கு மோட்ச கதி கிடைக்குமா? எப்பொழுதும் பிரத்தியட்சமான உருவத்தை உடையவனே! ராமா! உன்னிடம் பக்தியும் ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால் பிரணவநாதம் சப்தஸ்வரங்களாகப் பெருக, வீணை வாசிப்பதன் மூலம் நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்க்கு மோட்சம் உண்டா?" என்கிறார். ஆகவே இசை மார்க்கமே மோட்சத்துக்கு வழி என்பது அவரது முடிவு

வரலாறு

இந்த வரலாறு முழுவதும் பெரும்பாலும் ஸ்ரீ தியாகராஜரின் சீடர்களில் ஒருவரான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி பாகவதரின் மகனுமான ஸ்ரீ இராமசாமி பாகவதர் 1935இல் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கை வரலாற்று நூலான "ஸ்ரீ தியாக ப்ரஹ்மோபநிஷத்" முதல் நூலிலிருந்து கொடுக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஸ்ரீ தியாகராஜர் பற்றி எழுதியுள்ளவற்றுக்கும் இதற்கும் சற்று மாறுபாடுகள் இருக்கலாம். எனினும் இது தியாகராஜ சுவாமிகளின் சீடரின் பரம்பரையினர் எழுதியதால் இதுவே சரியானது என்று ஏற்றுக்கொள்ளலாம்.

நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்; ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து "திருத்தொண்டத்தொகை" பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி. இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது "சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி" எனும்பாடலில் ஸ்ரீ இராமபிரானை மட்டுமல்ல, தனது தாய்தந்தையரையும் வணங்கிப் போற்றுகிறார். இவர்கள் அறவழியில் பூஜை, தியானம் என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு ஸந்தான பாக்கியம் கிடைக்கப்பெற்று மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு ஜல்பேசன் என்கிற பஞ்சநதம், ராமநாதன், தியாகராஜன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார்கள். ராமநாதன் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களில் மூன்றாவது, இளைய மகவாகப் பிறந்தவர்தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகராஜன் எனப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இவர் கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4--5--1767) பிறந்தார்.

சில ஆண்டுகள் கழிந்தபின்னர் ஸ்ரீ ராமபிரம்மம் திருவாரூரை விட்டு நீங்கி காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். தந்தைவழி ஊர் என்பதால் அவர் திருவையாற்றில் வாழ்ந்து வரலானார். தஞ்சாவூர் அப்போதைய மராட்டிய மன்னர்களின் தலைநகர் என்பதால் பண்டிதர்களும் பல்வேறு கலைஞர்களும் தலைநகருக்கு அருகில் வாழ்வதையே விரும்பினர். தியாகராஜனுக்கு அவரது தந்தையார் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தாயாரிடம் ஜெயதேவரது அஷ்டபதி, ராமதாஸர் கீர்த்தனைகள் மற்றும் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். ஸ்ரீ தியாகராஜரின் எட்டாவது வயதில் அவருக்கு பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது. அப்படி பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நேரத்தில் தந்தை குரு உபதேசமாகத் தன் மகனுக்கு "ஸ்ரீ ராம" நாம உபதேசமும் செய்வித்தார். அதுவரை ராமப்பிரம்மம் தான் பூஜை செய்துவந்து ஸ்ரீ ராம, லக்ஷ்மண, சீதா, அனுமன் விக்கிரகங்களை அவரிடம் கொடுத்து அவரே அதற்கு நித்ய பூஜைகளைச் செய்துவருமாறு பணித்தார். அதுமுதல் ஸ்ரீ தியாகராஜர் தினசரி கர்மானுஷ்டானங்களை கடமை தவறாமல் செய்துவந்ததோடு ஸ்ரீ ராமருடைய விக்கிரகங்களுக்கும் நித்ய பூஜைகளைச் செய்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின்னர் அப்போது திருவையாறு க்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜருக்கு "ஸ்ரீ ராம ஷடாக்ஷரி" எனும் மந்திரோபதேசம் செய்வித்தார்.

சிறு பிள்ளையாயிருந்த காலந்தொட்டே ஸ்ரீ தியாகராஜருக்கு இராமபிரான் மீது அபாரமான பக்தி. அதிலும் தன் எட்டாவது வயதில் பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நாளிலிருந்து ஸ்ரீ ராம விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்வித்து வந்ததாலும், பக்தி, அன்பு, பாசம், ஈடுபாடு ஏற்பட்டு, தானும் இராமனும் இணைபிரியாதவர்கள் என்ற உணர்வுபூர்வமான எண்ணத்தில் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ இராமனுக்கு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யும் காலத்தில் உளப்பூர்வமாக, உணர்ச்சி பூர்வமாக மெய்மறந்து பூஜா கர்மாக்களில் தன் மனத்தை ஈடுபடுத்திச் செய்து வந்தார். அப்படி பூஜை செய்யும்போது, ஸங்கீத ஞானமுடையோர் நல்ல பாடல்களைப் பாடி வழிபடுவது முறை. அப்படியே ஸ்ரீ தியாகராஜரும் தான் பூஜை செய்யும்போது, ஸ்ரீ ராமபிரான்மீது புதிய புதிய கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவரலானார். அப்படி இவர் முதன்முதலில் செய்த கீர்த்தனையாக "நமோ நமோ ராகவாய" எனும் கீர்த்தனை சொல்லப்படுகிறது. இராமபிரானிடம் அபாரமான பக்தி கொண்டு அந்தப் பெயரைத் தொண்ணூற்றாறு கோடி முறை ஜெபித்து முடித்தவுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்ததாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் மீது அபரிமிதமான பக்தி ஏற்பட்டு அவருடைய கவிதா ஊற்றுக்கண் திறந்து ஏராளமான பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர். அத்தகைய சிறப்புப் பெற்ற தலைமை வித்வானிடம் நமது தியாகராஜர் முறைப்படி ஸங்கீத சிக்ஷை பெறலானார்.

ஸொண்டி வெங்கடரமணய்யா:

ஸ்ரீ தியாகராஜரின் குருவான ஸொண்டி வெங்கடரமணய்யா பற்றி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் கூறும் விவரங்களைப் பார்ப்போம்:- தியாகராஜர் சிறுவனாக இருக்கும்போது காலையில் மலர் கொய்வதற்கு நந்தவனம் செல்வார். அது திருவையாற்றையடுத்த அந்தணக்குறிச்சி எனுமிடத்தில் இருக்கிறது. போகும் வழியில் ஸொண்டி வெங்கடரமணய்யாவின் வீடு. அங்கு சீடர்களுக்கு அவர் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வீட்டு வாயிலில் நின்று தியாகராஜர் சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியொருநாள் இவர் நின்று கேட்பதை ராமப்பிரம்மம் கவனித்துவிட்டு, குருநாதரிடம் சென்று தன் மகனுக்கும் சங்கீத சிக்ஷை சொல்லிக்கொடுக்க வேண்டினார். அவரும் உவகையுடன் ஒப்புக்கொண்டாராம். சொல்லிக்கொடுக்க வேண்டியதனைத்தையும் சீடன் மகா மேதை என்பதை உணர்ந்து ஒரே ஆண்டில் சொல்லிக்கொடுத்து விட்டார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய தாய்வழித் தாத்தா வீணை காளஹஸ்தி அய்யர் என்பவர். அவர் பல ஸங்கீத நூல்களைத் தன்வசம் வைத்திருந்தார். அவைகளையெல்லாம் வாங்கி வந்து தியாகராஜர் படிக்கலானார். அந்த நூல்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக்கொள்ள இவர் அப்போது திருவையாற்றிலிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணாந்தா ஸ்வாமிகளிடம் சென்று பாடம் கேட்கலானார். அப்படி பாடம் சொல்லிக்கொடுக்கும்போது ராமகிருஷ்ணானந்தர் தியாகராஜரிடம், நாரத மஹரிஷியை உபாசனை செய்துவந்து வழிபட்டால் ஸங்கீதக் கலை வசப்படுவதோடு, மனதில் தோன்றும் ஐயப்பாடுகள் அனைத்தும் நீங்கிப்போகும் என்று எடுத்துரைத்தார். அதற்கான "நாரத உபாஸனா" மந்திரத்தையும் அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் குருநாதர் கூறிய மந்திரத்தைத் தலைமேற்கொண்டு உபாசனை செய்து வந்தார்.

இவரது மந்திரோபாசனையையும், பக்தியையும் பாராட்டி நாரத மஹரிஷியே இவர்முன் தோன்றி, ஸங்கீத ஸ்வர ரகஸ்யங்களடங்கிய "ஸ்வரார்ணவம்" எனும் அரிய நூலைக் கொடுத்து மறைந்தார். ஸ்ரீ நாரத பகவான் தரிசனமும், அவர் அளித்த நூலின் சிறப்பாலும், தியாகராஜர் நிரம்ப ஸங்கீத ஸ்ருதி ஆதாரங்களைக் கொண்ட பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி இவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவப் பரவ பல்வேறு இடங்களிலிருந்தும் சீடர்கள் இவரை நாடிவந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை இப்படி ஸங்கீதம், பூஜை, தியானம், சீடர்களுக்கு இசை ஞானத்தை உபதேசிப்பது என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு பார்வதி எனும் கன்னிகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய மணவாழ்க்கை என்பது வெறும் ஐந்தே ஆண்டுகள் நடந்தன. பிறகு பார்வதி அம்மாள் ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகிவிட்டார். பார்வதி இறந்த சிலகாலம் கழித்து அன்னாருடைய தங்கையான கமலாம்பாள் (கனகம்மாள் என்று திரு வி.ராகவன் குறிப்பிடுகிறார்) என்னும் கன்னிகையை இவருக்குத் திருமணம் செய்வித்தார்கள்.

அதன்பின்னர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சிலகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். தினமும் ஸங்கீதம் பாடுவது, ஸாஹித்யங்கள் இயற்றுவது, வேதங்களைப் பாராயணம் செய்வது, புராணங்களைக் கற்பது, பின் அவற்றைப் பிறருக்கு ஓதுவது, ஜோதிஷ சாத்திரத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது, கணித சாத்திரத்தைக் கற்பது, இப்படிப் பற்பல கலைகளிலும் விற்பன்னராக விளங்கி வந்தார். இவர் பாடுவதோடு, வீணை வாசிப்பதிலும், கின்னரீ எனும் தந்தி வாத்தியத்தை வாசிப்பதிலும் நிகரற்று விளங்கினார். இவருடைய இசை ஞானத்தைப் பற்றி கேள்விப் பட்டவர்கள் இவரை பூலோக நாரதர் என்றே பெருமைப் படுத்திப் பேசினர். நாட்டில் மக்கள் இறையருளை மறந்து, பாவங்களைச் செய்து பாழ்நரகக் குழிக்கே செல்லும் பான்மை நீங்க மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல பல பக்தி கீர்த்தனைகளை இவர் இயற்றி மக்களுக்குப் பயன்பட வைத்துக் கொண்டிருந்தார். சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது. சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார். திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார். கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில் அவர் பாடும் பாடல்கள், காவிரியின் பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. இசை இன்பம் ஊரை நனைக்கிறது.

இவர் சீடர்களிடம் பணம் வாங்குவது கிடையாது என்பதையும் முன்பே குறிப்பிட்டோம். இவரது ஸாஹித்யங்களில் ஸ்ருங்கார ரஸம்கொண்ட பாடல்கள் கிடையாது. இவர் நெளகா சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தைப் படைத்திருக்கிறார். இதில் ஸ்ருங்கார ரஸ வருணனைகளுக்கு இடமிருந்தும் அவர் அப்படிப் பாடவில்லை. இவரது நோக்கமே மக்களுக்கு பக்தி ரஸத்தை அள்ளி வழங்க வேண்டுமென்பதுதான் என்பது தெரிகிறது.

இவர் சிறு வயதுமுதலே ஸ்ரீராம நாம ஜபத்தைச் செய்துகொண்டு வந்தார். தினம் தினம் இவர் ஜபிக்கும் ராமநாம ஜபம் பல கோடிகளைக் கடந்ததாக இருந்தது. இவர் எந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தாலும், இவரது நா ஸ்ரீராமநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கும். இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார். இவர் ஸ்ரீ ராமனை வழிபட்டாலும், இதர தெய்வங்களின்மீது பற்றும் பக்தியும் குறைந்தவரில்லை. தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிற மொழிகளின் மீது துவேஷம் இல்லை. தன் பாடல்களை மட்டுமின்றி பூஜையின் போது மற்ற பல பெரியோர்களின் கீர்த்தனைகளையும் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி இவர் பாடிய பெரியோர்கள் ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ ராமதாஸ், ஸ்ரீ வேங்கடவிட்டலஸ்வாமிகள், ஸ்ரீதாளபாக்கம் சின்னையா, ஆகிய பெரியோர்களின் பாடல்களும் இவரால் பாடப்பட்டன.

இவரை குருவாக ஏற்றுக்கொண்டு சீடர்கள் எனும் பெருமையைப் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் முறையே, வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், தில்லைஸ்தானம் ராமய்யங்கார், திருவொற்றியூர் வீணை குப்பையர், ஐயா பாகவதர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமய்யர், நெய்க்காரப்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர், ஸொஜிரி சீதாரமையர், நங்கவரம் நீலகண்டய்யர், கணேசய்யர் காரு, செவுனா வெங்கடாசலபதி பாகவதர் ஆகியோராவர்.

ஸங்கீதத்தை கிரமப் படுத்தி அதனை முறையாகப் பயிலுவதற்கு ஏற்ப அதற்கு ஸரளிவரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், ஸ்வரஜதி, கீர்த்தனம் என்று வகைப்படுத்திக் கொடுத்தவர் ஸ்ரீ புரந்தரதாஸர். அப்படி அவர் ஏற்படுத்திக் கொடுத்த இலக்கணப் பாதையில் பற்பல ராகங்களில் அபூர்வமான சாஹித்தியங்களைச் செய்தருளியவர் தியாகராஜர். மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருப்பதைப் போல, சாஹித்தியத்தின் ரஸம் அந்தந்த ராகத்தில் வெளிப்படவேண்டும். அப்படி வெளிப்படும்படியான பாடல்களைப் பாடியவர் ஸ்ரீ தியாகராஜர். தற்காலத்தில் சிலர் தங்கள் மனதுக்கேற்றவாறு இவற்றை மாற்றியும், அழகு செய்தும் பாடமுயற்சிக்கிறார்கள், அங்ஙனம் செய்தல் கூடாது என்று பல பெரியோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ தியாகராஜரை சந்தித்த ஆன்றோர்கள்.

சியாமா சாஸ்திரிகள்:- சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் (1762-1827) தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் பூஜை உரிமை பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவர். தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அம்பிகையைப் பாடியவர். தியாகராஜரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு வந்து தியாகராஜரைக் கண்டு அளவளாவுவது வழக்கம். அத்தகைய சந்திப்புக்களில் தம்முடைய பாடல்களைத் தியாகராஜரிடம் பாடிக்காட்டுவாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியார்:- இவர் மாயூரத்தில் வசித்து வந்தார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை காலத்தில் வாழ்ந்தவர். அவரோடு நல்ல பழக்கம் உள்ளவர். நந்தனார் சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தையும், வேறு பல தமிழ் சாகித்யங்களையும் இயற்றி பெரும் புகழ் பெற்றவர். இவர் காலம் 1811 முதல் 1881 வரையிலானது. தமிழ்த்தாத்தா என்று பிற்காலத்தில் புகழ்பெற்று பழைய சங்க இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து பதிப்பித்து தமிழ் வாழ பாடுபட்ட உ.வே.சாமிநாதய்யர் ஸ்ரீமான் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்று வந்த காலத்தில் மாயூரத்தில் சில காலம் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்று வந்திருக்கிறார். பிறகு பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் நீ தமிழ் படிக்க வேண்டுமா, அல்லது சங்கீதம் பயில வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள் என்று சொன்னபின், கோபாலகிருஷ்ணபாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டு, பிள்ளையவர்களிடம் தமிழை மட்டும் படிக்கலானார் என்று அவரது 'சுயசரிதை' கூறுகிறது. கோபாலகிருஷ்ணபாரதியார் சற்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறு வந்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் வீட்டில் சீடர்களுக்கு ஆபோகி ராகக் கீர்த்தனையைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருநாதர் பாடம் சொல்லிவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவதற்காக வாயிற்புறம் வந்தபோது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரை யார் என்று விசாரித்தார். தான் மாயூரத்திலிருந்து வருவதாக பதில் சொன்னார். அப்படியானால் அங்கு தமிழில் சிறப்பான பாடல்களை இயற்றிப் பாடுகிறாரே கோபாலகிருஷ்ண பாரதியார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அடியேன்தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றார் இவர். தியாகராஜருக்கு மிக்க மகிழ்ச்சி. வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று உபசரித்தார். நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் இயற்றிப் பாடியிருக்கிறீர்களா என்றார். இதுவரை இல்லை என்று இவர் பதிலிறுத்தார். சரி இருங்கள் நான் போய் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பியதும், பாரதி சொன்னார் நான் இப்போது ஆபோகியில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் என்று. அப்படியா சரி பாடுங்கள் என்றார் தியாகராஜர். கோபாலகிருஷ்ண பாரதியார் பாடினார். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை சபாபதிக்கு" என்று தொடங்கும் பாடல் அது. தான் காவிரிக்கு ஸ்நானம் செய்து திரும்புமுன் இப்படியொரு கீர்த்தனையை இவர் இயற்றியது கண்டு சுவாமிகளுக்கு பேரானந்தம். அவரை மனதாரப் பாராட்டினார். (இந்த வரலாற்றை டாக்டர் ராமநாதன் அவர்கள் "தியாகையருடன் ஒரு நாள்" என்ற தலைப்பில் இசைப் பேருரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டது) இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள சான்றோர்கள் சிலர், நிகழ்ச்சி பற்றிய சந்தர்ப்பங்களை வேறு விதமாகவும் எழுதியிருந்தாலும், நிகழ்ச்சியின் கருப்பொருள் இதுதான் என்பதால் நடந்தது இதுதான் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவர்களைத் தவிர வேறு பல பெரியோர்களும் ஸ்ரீ தியாகராஜரை வந்து தரிசித்து உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். சுவாதித் திருநாள் மகாராஜா ஸ்ரீ தியாகராஜரின் பாடல்களை கன்னையா பாகவதர் பாடக் கேட்டிருக்கிறார். ஆகவே அவரை நேரில் காண விரும்பினார். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சை மூவர் எனப்படுபவர்களில் ஒருவரான வடிவேலு என்பவர் மகாராஜாவின் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரை மகாராஜா அழைத்து திருவையாறு சென்று ஸ்ரீ தியாகராஜரை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவரும் திருவையாறு வந்து தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டில் வந்து தங்கினார். தினமும் ஸ்ரீ தியாகராஜர் காலை மாலை இரு வேளைகளிலும் காவிரிக்குச் செல்வார். அப்படிச் செல்லும் வழியில் இருந்த ஒரு வீட்டில்தான் வடிவேலு தங்கினார். தியாகராஜர் காவிரிக்குச் செல்லும் நேரத்தில் வடிவேலு தன் இல்லத்தில் பாடிக்கொண்டிருப்பார், அது சுவாமிகளின் காதுகளில் விழும். அந்த இசை நயமாக இருந்ததால் தியாகராஜர் சற்று நின்று அவர் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் நகருவார். ஒருநாள் தியாகராஜர் அந்த வீட்டினுள் நுழைந்து வருவதைக் கண்ட வடிவேலு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ஐயனே, தாங்கள் சொல்லியனுப்பி யிருந்தால் நான் வந்திருப்பேனே என்றார். அவரது இசையை தியாகராஜர் பாராட்டிவிட்டு மறுநாள் தன் இல்லத்துக்கு வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார். பாடியபிறகு அவருக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேட்கலாம் என்றார் தியாகராஜர். இவரும் தியாகராஜரிடம் தான் திருவையாற்றுக்கு வந்த விவரத்தைச் சொல்லி விட்டு அவர் திருவாங்கூர் வந்து மகாராஜாவைச் சந்திக்க வேண்டுமென்றார். குருநாதர் தயங்கிவிட்டுச் சொன்னார், எங்கள் சந்திப்பு நிச்சயம் நடக்கும், ஆனால் அது வைகுண்டத்தில் நிகழும் என்றார். இப்படி பலர் கோவிந்த மாரார் என்பவர் உட்பட பலர் ஸ்ரீ தியாகராஜரை வந்து சந்தித்தனர்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி என்று பெயர் சூட்டி வளர்த்தார். பருவம் வந்த காலத்தில் அந்தப் பெண்ணை திருவையாற்றையடுத்த அம்மாள்அக்ரஹாரத்தில் வசித்து வந்த குப்புசாமி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்தத் திருமணத்துக்காக பலரும், சீடர்கள் உட்பட பல்வகை பரிசுகளை வழங்கினார்கள். அதில் ஸ்ரீ ராமபிரான் சீதா லக்ஷ்மண அனுமன் சமேதராக இருக்கும் ஒரு படமும் வந்தது. அந்தப் படத்தை வாங்கிக் கொண்ட சுவாமிகள் உடனே அதனைத் தன் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று "நனுபாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத" என்னும் கிருதியைப் பாடினாராம். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆனந்த பரவச நிலையடைந்தார்கள். இந்தப் படம் சுவாமிகளின் உறவினர் ஸ்ரீ பட்டாபிராம பாகவதர் என்பவரின் இல்லத்தில் நெடுங்காலம் இருந்ததாகத் தெரிகிறது. சுவாமிகளின் பெண் சீதாலட்சுமிக்கு தியாகராஜன் என்றொரு மகன் பிறந்தார். சங்கீதத்தில் தேற்சியடைந்த இந்த தியாகராஜன் வயலின் வாத்தியத்திலும் மிகத் தேற்சி பெற்றிருந்தார். குரவம்மாள் என்னும் பெண்ணை மணந்துகொண்ட இவர் தனது முப்பதாவது வயதில் வாரிசுகள் எதுவும் இல்லாமலேயே காலமாகிவிட்டார். எனவே ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு வம்சாபிவிருத்தி யின்றியே போயிற்று.

ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கொண்டு சொல்லப்படும் நிகழ்வுகள்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பெருமையையும், அவரது ஸங்கீதத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு அவர் தங்கள் சபையில் வந்து பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டும், ஸ்வாமிகள் போகவில்லையாம். அப்போது "நிதிசால ஸுகமா" எனும் கீர்த்தனையைப் பாடியதாகக் கூறுகிறார்கள். "நிதிசால" எனும் கீர்த்தனையில் எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார். "நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?" இதுதான் அந்தப் பாடலின் கருத்து. தஞ்சை மராட்டிய மன்னன் தன்னை அழைத்தபோது வரமறுத்து இந்தப் பாடலைப் பாடினார் என்று பலரும் எழுதுகிறார்கள். இதைப்போல பல சம்பவங்கள் இவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்கள் கூறியிருந்த போதிலும், பல இவரது பாடல்களின் கருத்தின் அடிப்படையில் யூகித்து எழுதியிருக்கிறார்களே தவிர இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பது சிலரது கருத்து. இது போலவே பல சந்தர்ப்பங்கள் இவர் வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.. பெரிய மகான்களின் வரலாற்றை எழுதும்போது கூடியவரை உள்ளது உள்ளபடி எழுதுவது சிறப்பு.

ஸ்ரீ தியாகராஜர் திருப்பதி சென்றபோது திருவேங்கடத்தான் சந்நிதியில் திரைபோட்டு மறைத்திருந்ததாகவும், அது அறுந்து விழ வேண்டி "தெர தீயகராதா" எனும் பாடலைப் பாடினார் என்றும் கூறுகிறார்கள். சிறந்த இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பெருமாள் சந்நிதிக்குச் சென்று அங்கு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைக்காகத் திரை விலகும்வரை காத்திருக்காமல், திரை அறுந்து விழும்படியாக பாடியிருப்பாரா என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பு அல்லவா? திரை போடப்பட்டு வேங்கடவனின் தரிசனம் உடனே கிடைக்கவில்லையே என்று அவர் வருந்தியிருக்கலாம். அந்த நேரம் பார்த்து திரை விலக்கப்பட்டு இவருக்குத் தரிசனம் கிடைத்திருக்கலாம். அதுதான் சரியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமே தவிர, திரை அறுந்து விழும்படி இவர் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தப் பாடலின் உட்கருத்து என்னுள்ளே இருக்கும் பொறாமை எனும் திரையை நீ விலக்கலாகாதா? பரமபுருஷா! அந்தப் பொறாமை எனும் திரை தர்மம் முதலான நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணுகாத வண்ணம் விரட்டியடிக்கிறதே. கடவுளை உணராமலும், காணாமலும் மத, மாற்சர்ய, காமக்குரோதத் த்ிரைகள் நீங்கி இறை தரிசனம் கிட்டாதா என்ற கருத்தில்தான் இப்பாடல் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற வேறு சில நிகழ்ச்சிகளையும் இங்கு பார்க்கலாம்.

பிலஹரி ராகத்தில் அமைந்த "நா ஜீவாதாரா" எனும் கீர்த்தனையில் இறந்து போன குழந்தையை எழுப்புவது பற்றி குறிப்பு எதுவும் இல்லை. அதுபோலவே தர்பார் ராகத்தில் அமைந்த "முந்து வேனுக" என்பதில் ஸ்ரீ தியாகராஜரை வழிப்பறி செய்யக் கொள்ளைக் கூட்டத்தார் முயன்றதாகவோ முன்னும் பின்னும் இராம இலக்குவர்கள் அவரைக் காத்து வந்ததாகவோ குறிப்பு எதுவும் இல்லை. இராமா, நீ என் முன்னும் பின்னும், இரு புறங்களிலும் எழுந்தருளி வருக. பாகவதர்களின் நேசனே என்னை நன்கு காப்பாற்ற வருக எனும் பொதுவான கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இந்தப் பாடல் அமைந்திருக்கிறதே தவிர கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற எனும் குறிப்பு எதுவும் இதில் இல்லை.

இந்தப் பாடலின் நேரடியான கருத்து இதுதான்:-- "முரனையும், கரனையும் கொன்றவனே!, என் முன்னும் பின்னும் இரு புறங்களிலும் நீ எழுந்தருளி வருக! எங்கேயும் உன் திருவழகைப் போல கண்டதில்லை ரகுநந்தனா! நீ விரைந்து வருக!!

புகழ்வாய்ந்த சூரிய வம்சம் எனும் கடலில் உதித்த சந்திரனே! கோதண்டத்தைக் கையில் ஏந்தி வா! அளவிடமுடியாத பலத்தைக் கொண்டவனே! உன் அருகில் இருந்து கொண்டு தொண்டு செய்யும் இலக்குவனோடு கூட வா!

ஓ! கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்றியவனே! ஓ! சக்கரவர்த்திக் குமாரா! ஓங்காரம் எனும் பிரணவத்தில் வாழ்பவனே, வா! பாகவதர்களை நேசிப்பவனே! தியாகராஜனைக் காப்பாற்ற வா!".

இராமனுக்குரிய ஒரு பொதுவான வழிபாட்டினையே இது சுருக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில் இது ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் தெலுங்கு வடிவம் என்று கூறப்படுகிறது.

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி, தியாகராஜரின் அண்ணன் தியாகராஜரைக் கொடுமைப்படுத்தி இராம இலக்குவ சீதாபிராட்டி விக்கிரகங்களை எடுத்து காவேரி வெள்ளத்தில் வீசி எறிந்தது பற்றியது. இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே பல சோகரஸக் கீர்த்தனைகள் எழுந்தன என்பது உயர்வு நவிற்சி எனக் கூறப்படுகிறது. புகழ்வாய்ந்த பெரியோர்களுடைய பெருமைகளை பரப்ப வேண்டுமானால் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டு அதனால் வருந்துவது போலவும், அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட மாட்டோமா என்று கதறுவது போலவும் கதைகள் சொல்வது இயல்பு. அப்படிப்பட்ட தீங்குகளை விளைவிக்க யாராவது ஒருவரை சிருஷ்டித்துக் காட்டுவதும் புனைந்துரைத்து கதாநாயகனின் பெருமையை நிலைநாட்டுவதும் வழக்கம். காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தியாகராஜர் அந்த விக்கிரகங்களைத் தேடி அலைந்தார், அழுதார், புலம்பினார் என்கின்றனர். "நே நெந்துவெத குதுரா" முதலான கீர்த்தனைகள் அவர் அழுது புலம்பி தேடியதன் விளைவு என்கின்றனர். கர்நாடகபெஹாக் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் பொருள் வருமாறு:- "ஹரி! உன்னை நான் எங்கெல்லாம் தேடுவேனடா? நான்முகனான பிரமன் இட்ட முறைகளைக் கேட்டும் வராத உன்னை நான் எங்கே தேடுவேனடா? தியாகராஜனால் துதிக்கப்படுபவனே! பாவம் நிறைந்த உள்ளத்துடன் தீய செயல்கள் புரிந்து பல தடவைகள் தகாத மொழிகளைப் பேசிக்கொண்டு, உலகத்தில் சிறந்த பக்தனைப் போல் வெளி வேடமிட்ட நான் உன்னை எங்கே தேடுவேனடா?" கடவுளைக் காண்பதிலுள்ள கஷ்டங்களைப் பற்றிய மேலான குறிப்புகள்தான் இந்தப் பாடலில் காணப்படுகின்றன. தவிர, ஆற்று வெள்ளத்தில் தேடித் துழாவினார், ராமவிக்கிரகம் கிடைக்காமல் அழுது புலம்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கே இக்கதை நிகழ்ச்சி ஸ்ரீ தியாகராஜரின் உடன்பிறந்த சகோதரரை கொடுமைக்காரராகக் படம்பிடித்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட மகானுக்கு, இவ்வளவு கொடுமை மனம் படைத்தவரா தமையனாராக இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா. அவரது தமையனார் இவரைப் போலன்றி மாறுபட்டவராகவும் இருக்கலாம், இவர் குடும்பத்து வருமானத்துக்கு வழிதேடாமல் இப்படி பொழுதெல்லாம் இராமநாம ஜெபத்திலும் பாட்டிலும் ஆழ்ந்திருக்கிறாரே, இவரால் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம். இவை அனைத்தும் உண்மையாக இருந்த போதிலும் நம் மனத்தில் ஒரு உறுத்தல் ஏற்படாமல் போகவில்லை. இவ்வளவு சிறந்த பக்தரின் பெருமைகளையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வரும் தமையனார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியுமா என்பதுதான் அது. மன்னரே அழைத்துத் தன் தம்பிக்குப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அவற்றை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இராம நாமமே தனக்குப் போதும் என்று இப்படி யாராவது இருப்பார்களா என்று அவர் ஆதங்கப் பட்டிருக்கலாம். கஷ்டப்படும் தன் குடும்பத்துக்குத் தம்பி செல்வம் எதையும் தேடிக் கொடுக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம் மனக்கஷ்டப் பட்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீ தியாகராஜர் வரலாற்றை உணர்ந்தவர்களே ஊகித்து உணர்ந்து கொள்வது நலம். ஒருவருடைய பெருமைகளையும் ஏற்றங்களையும் போற்றி வணங்கும் அதே நேரத்தில் மற்றவர்களைத் தாழ்த்திப் பார்க்க வேண்டுமா? இவற்றையெல்லாம் நாம் மனதில் கொண்டே மகான்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

ஸ்ரீ சுவாமிகளின் சீடர்களில் தஞ்சாவூர் ராமராவ் என்பவர் ஒருவர். இவர் மாத்திரம் சுவாமிகளிடம் அதிகமான உரிமையையும் அன்பையும் உடையவர், சில சமயங்களில் தான் விரும்பியபடி சுவாமிகள் கிருதிகளை இயற்றித் தரவேண்டுமென்று அடம்பிடித்து பாடச் செய்வாராம். சுவாமிகளும் அவர் விரும்பியபடியே செய்து தருவாராம். ஸ்ரீ தியாகராஜருடைய பெற்றோர்கள் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர் ராமராவ் எனும் இந்த சீடர் அவர்களைக் கேட்டு தியாகராஜருடைய ஜாதகக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார் என்று திரு டி.எஸ்.பார்த்தசாரதி தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரை ஆஞ்சநேயரின் அம்சம் என்றும் கூறுவதுண்டு.

திருவையாற்றுக் கீர்த்தனைகள்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தன் இளம் வயது முதல் வாழ்ந்து வந்த திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்சநதீஸ்வரர் பெயரிலும் அம்பாள் தர்மசம்வர்த்தனியின் பெயரிலும் எட்டு கீர்த்தனங்களைப் பாடியிருக்கிறார். இதில் ஸ்வாமியின் பேரில் நான்கும் அம்பிகையின் மீது எட்டும் அமைந்திருக்கின்றன. அந்தக் கீர்த்தனைகள் வருமாறு:-

பஞ்சநதீஸ்வரர் பேரில்: 1. அடாணா ராகத்தில் 'இலலோ பிரணதார்த்திஹருடு'
2. மாளவஸ்ரீ ராகத்தில் 'எவருந்நாரு பிரோவ'
3. ஸாரங்கா ராகத்தில் 'ஏஹி த்ரிஜகதீச'
4. மத்யமாவதி ராகத்தில் 'முச்சட பிரஹ்மாதுலகு'

தர்மஸம்வர்த்தனி பேரில்: 1. தோடி ராகத்தில் 'கருணஜூடவம்ம'
2. ஸாவேரி ராகத்தில் 'பராசக்தி மநுபராத'
3. ஸாவேரி ராகத்தில் 'நீவுப்ரோவவலெ'
4. ரீதிகெளளை ராகத்தில் 'பாலே பாலேந்து'
5. அடாணா ராகத்தில் 'அம்ம தர்மஸம்வர்த்தநி'
6. யமுனாகல்யாணி ராகத்தில் 'விதி சக்ராதுலகு'
7. கல்யாணி ராகத்தில் 'சிவே பாஹிமாம்'
8. ஆரபி ராகத்தில் 'அம்ப நின்னு நம்மிதி'

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை நாடகங்கள்.

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராமபிரான் மீது தவிர பல தலங்களில் எழுந்தருளியிருக்கும் சுவாமி அம்பாள் பற்றியெல்லாம் பாடியதைத் தவிர இரண்டு இசை நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். அவை 'பிரஹலாத பக்தி விஜயம்' மற்றும் 'நெளகா சரித்திரம்'. இவை தவிர சீதாராம விஜயம் என்றொரு நாடகமும் இயற்றியதாகத் தெரிகிறது ஆனால் அது கிடைக்கவில்லை. இறைவனின் புகழ்பாடி ஆடும் நாட்டிய நாடகமே 'நாட்டிய மேளா' என நடத்தப்பட்டு வந்துள்ளது. மராட்டிய மன்னர்கள் காலத்தில் 'பாகவத மேளா' என இவை நடித்துக் காட்டப்பட்டன. தஞ்சை மராட்டிய மன்னர்கள் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் கலை இலக்கியங்களைப் போற்றி வளர்த்தார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்த பல கலை, இசை, நாட்டியக் கலைஞர்கள் தஞ்சை ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இவர்கள் மெலட்டூர், சாலியமங்கலம், சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. மெலட்டூரில் இந்த பாகவத மேளா இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

காஞ்சி, திருவொற்றியூர், திருப்பதி விஜயம்.

இப்படி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாற்றில் இசை உண்டு, தன் இராமனுண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில், காஞ்சிபுரம் ஸ்ரீ உபநிஷத் பிரஹ்ம சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைத் தன் ஊருக்கு வருமாறு அழைக்கிறார். இந்த உபநிஷத் சுவாமிகள் தியாகராஜரின் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் மட்டுமல்லாமல் நூறு வயதைக் கடந்தவரும்கூட. சென்னை நகரத்தில் வசித்து வந்த பெரும் வணிகரும் பக்திமானுமான கோவூர் சுந்தர முதலியார் என்பவர் ஸ்ரீ தியாகராஜரைத் தன் கிராமத்துக்கு வரவழைத்துவிட வேண்டுமென்று விரும்பி உபநிஷத் பிரம்ஹ சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள அவரும் அங்ஙனமே இவரை வரச்சொல்லி தகவல் அனுப்பினார். திருவையாற்றில் மிகவும் பிரபலமாகவும், ஸ்ரீ ராமபிரான் மீது கொண்ட பக்தியால் பற்பல பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதையும் கேள்வியுற்ற உபநிஷத் சுவாமிகள் கோவூர் சுந்தர முதலியார் வேண்டுகோளுக்கிணங்க இவரை அழைக்கிறார். திரு வி.ராகவன் அவர்கள் தன் நூலில் சோழ நாட்டில் 18ஆம் நூற்றாண்டில் காமகோடி பீடத்தில் விளங்கிய அத்வைத சந்நியாசியாகிய திரு போதேந்திரர்தான் தியாகராஜரை காஞ்சிபுரம் வருமாறு அழைத்ததாகக் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிடுகிறார்.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார்களில் 6ஆவது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் (1813 முதல் 1875) ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் இருந்தவர். மேலும் இவர் அப்போது காஞ்சிபுரத்தில் இல்லாமல், முகலாயர் படையெடுப்பு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தனது மடத்தை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அப்போது இவர் கும்பகோணம் அல்லது திருவிடைமருதூர் இங்கு எங்காவது இருந்திருக்க வேண்டும். மேலும் ஸ்ரீ தியாகராஜர் ஊர் சுற்றிப் பார்க்கவோ, பல தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றோ விரும்பியது கிடையாது. அவர் திருவையாற்றைத் தவிரவும் தன் இராம பக்தி சாம்ராஜ்யத்தை விட்டும் எங்கும் போகவிரும்பாவிட்டாலும், சில நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் ஸ்ரீரங்கம், லால்குடி, திருப்பதி, கோவூர், திருவொற்றியூர், நாகப்பட்டணம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறாரே தவிர ஊர்சுற்றும் ஆசை அவரிடம் இல்லவே இல்லை. ஸ்ரீ உபநிஷத் சுவாமிகள் அழைத்த காரணத்தால் காஞ்சி சென்றார் அவ்வளவுதான் அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் அவசியம் நேர்ந்ததால் சென்றார்.

ஸ்ரீ தியாகராஜர் காஞ்சிபுரம் தலயாத்திரை சென்றார் என்கிறார்கள். "History of Kanchi Sankaracharya Math and Acharyaparampara" எனும் ஆங்கில வரலாற்று கட்டுரையை "Make History" மூன்று மாதத்திற்கொருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகையில் 2003ஆம் வருஷம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இதழில் வெளியாகியிருக்கிறது. இந்த கட்டுரையில் காஞ்சி மடம் தோன்றிய காலம் தொட்டு இப்போது 70ஆவது பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1813 முதல் 1875 வரை ஸ்ரீ 6ஆம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஆகவே ஸ்ரீ தியாகராஜரை காஞ்சிக்கு அழைத்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் இல்லை, தியாகராஜரின் உறவினரான உபநிஷத் சுவாமிகள்தான்.

காஞ்சிக்குப் புறப்பட்ட சுவாமிகள் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ வீணை குப்பய்யர் வேண்டுகோளுக்கிணங்க கோவூர் சுந்தர முதலியாருடைய பந்தர் தெரு கிரகத்தில் ஏழு நாட்கள் தங்கினார். அந்த செல்வந்தருடைய இல்லத்தில் மாலை நேரங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடந்தன. அங்கிருந்து தன்னை வரவேற்ற சுந்தர முதலியாரின் கோவூருக்குச் சென்றார். அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சுந்தரேச்வரரைப் பற்றி பாடினார். அங்கு ஐந்து கிருதிகளைச் செய்து அவை 'கோவூர் பஞ்ச ரத்தினங்கள்' எனும் பெயர் பெற்றன. அந்த செல்வந்தர் தியாகராஜருக்குத் தெரியாமல் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டி அவரது பல்லக்கில் மறைத்து வைத்திருந்தாராம். தெரிந்தால் சுவாமிகள் வாங்கிக் கொள்ள மாட்டார் என்ற எண்ணம். சீடர்களுக்கெல்லாம் நல்ல சன்மானங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தாராம்.

ஸ்வாமிகள் பற்றி கூறப்படும் நிகழ்ச்சிகள்.

இந்த இடத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் தீவிரத் தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் வாசகர்களுக்கு உரியது. சிலரது பெருமையை உயர்த்திக் காட்டும் வகையில் சில புனந்துரைகள் புகுந்துவிடுவது இயல்பு. இந்தக் கதையும் அதுபோன்ற புனந்துரையா, அல்லது நடந்ததா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுவதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ சுவாமிகள் பயணம் செய்துகொண்டிருந்த போது வில்லில் கற்களை வைத்து அடித்து வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை வழிமறித்ததாம். நாகலாபுரம் கள்வர்கள் எனப்படும் அவர்கள் வழிப்பறி செய்யும்போது அவர்கள் சீடர்களில் ஒருவர் சுவாமிகளிடம் சென்று முறையிட்டார். அதற்கு சிவாமிகள் நம்மிடம் என்ன இருக்கிறது கொள்ளையடிக்க என்கிறார். அப்போது அந்த சீடர் கோவூர் முதலியார் ஆயிரம் பொற்காசுகளைப் பல்லக்கில் வைத்திருப்பதைச் சொல்கிறார். அப்படியானால் அந்த காசுகளை எடுத்து அந்த கொள்ளையர்களிடம் கொடுக்கச் சொல்லி சுவாமிகள் சொல்கிறார். அதற்கு சீடர் கோவூர் முதலியார் அந்த பொன்னை அவரது சொந்த செலவுக்குக் கொடுக்கவில்லையென்றும் ஸ்ரீ ராமபிரான் உற்சவங்களுக்கென்று கொடுக்கப்பட்டவை என்றும் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் அப்படியானால் அது ஸ்ரீ ராமனின் சொத்து, அதனை அவனே காத்துக் கொள்வான் என்கிறார். அப்போது இரண்டு வில்வீரர்கள் தோன்றி அம்புகள் எய்து அந்த திருடர்களை விரட்டியடிக்கின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர். அவர்கள் யார் என்று விசாரிக்க அவர்கள் அங்கு காணப்படவில்லை. வந்தவர்கள் இராம லக்ஷ்மணர்களே என்று அனைவரும் மகிழ்ந்து போற்றுகின்றனர். இப்படியொரு வரலாறும் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கையில் பேசப்படுகிறது.

திருப்பதியை விட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் புத்தூர் அருகில் ஒரு கிணற்றங்கரையில் பலர் நின்றுகொண்டு வருந்துகின்றனர். விஷயம் என்னவென்று சுவாமிகள் விசாரிக்க, சேஷய்யா எனும் பிராமணர் ஒருவர் அந்த கிணற்றில் விழுந்து உயிர் துறந்துவிட்ட செய்தியையும், அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுகின்றனர் என்றும் அங்கிருந்தவர்கள் சொல்ல, ஸ்ரீ தியாகராஜர் தனது சீடர்களைவிட்டு "லோகாவன சதுர பாஹிமாம்" எனும் பாடலையும், "ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ" எனும் கிருதியையும் பாடச் சொல்லுகிறார். வேங்கடரமண பாகவதர் "நாஜீவாதார நா நோமுபலமா" எனும் பிலஹரி ராகக் கிருதியைப் பாடுகிறார். இந்தப் பாடலின் பொருள்: "என் உயிருக்கு ஆதாரமே! நான் நோற்ற நோன்புகளின் பயனே! பங்கயக் கண்ணனே! ராஜாதி ராஜருள் முதல்வனே! என் பார்வையின் ஒளி நீயே! என் நாசி நுகரும் நறுமணமும் நீயே! நான் ஜபம் செய்யும் அக்ஷரங்களின் உருவம் நீயே! நான் செய்யும் பூஜைக்கு மலரும் நீயே!" இவ்வளவுதான் அந்த பாடல். இறந்து கிடந்த அந்தணர் உயிர் பெற்றெழுகிறார். அனைவரும் ஸ்ரீ தியாகராஜரை வணங்கி வாழ்த்துகின்றனர்.

பின்னர் சுவாமிகள் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ஸ்ரீரங்கம் முதலான இடங்களுக்குச் சென்றுவிட்டு திருவையாறு திரும்புகிறார். 1845 விச்வாவசு வருஷம் அவரது தர்மபத்தினியாரவர்கள் மோட்ச கதியை அடைகிறார்கள். அதற்கடுத்த பராபவ வருஷம் புஷ்ய சுக்ல ஏகாதசி ராத்திரியில் பஜனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஸஹானா ராகத்தில் "கிரிபை நெலகொன்னராமுனி" எனும் கிருதியைப் பாடி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து "அன்பர்களே! வரும் (1857) பகுள பஞ்சமி தினத்தில் ஓர் விசேஷம் நடக்கப் போகிறது. எல்லோரும் அந்த தினத்தில் அதிகாலை வேளையில் இங்கு வந்துவிடுங்கள்" என்று அழைப்பு விடுத்தார். அதன்படியே அன்றைய தினம் எல்லோரும் வந்து கூடினார்கள்.

ஆபத் ஸந்நியாசமும் முக்தியும்

அன்றைக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாக சுவாமிகள் ஸ்ரீ பிரம்மானந்த ஸ்வாமிகள் என்பவரை வரவழைத்து அவரிடம் ஆபத் ஸன்யாசம் வாங்கிக் கொண்டார். பகுளபஞ்சமி தினம் அதிகாலை ஸ்நானம் முதலான நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு பக்தர்களும் சீடர்களும் புடைசூழ ஸ்ரீ ஸீதாராமச்சந்திர மூர்த்தியை ஆராதித்தார். அதனைத் தொடர்ந்து பஜனை நடைபெறுகிறது. அப்போது சுவாமிகள் பஜனையை நிறுத்திவிட்டு அனைவரும் ஸ்ரீராம நாம ஜபத்தை இடைவிடாமல் செய்து வரச் சொன்னார். அதன்படியே அங்கு ஸ்ரீ ராம நாமத்தை அனைவரும் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீ சுவாமிகள் மனோஹரி ராகத்தில் "பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ" எனும் கிருதியைப் பாடி, கரத்தில் சின்முத்திரை காட்டி முக்தியடைந்தார். அந்த சமயம் அவர் கபாலத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி விக்கிரகத்திலும், மேலே சென்றதையும் சிலர் பார்த்ததாகக் கூறுகிறார்கள்.

சமாதியும் குருபூஜை ஆராதனைகளும்.

பிறகு பக்தர்கள் சீடர்கள் ஒன்றுகூடி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அவர் உடலுக்கு மஹாபிஷேகம் முதலானவைகளைச் செய்து, பிருந்தாவன வடிவாக ஒரு ஸமாதியைக் கட்டி முடித்தார்கள். இவர் தனது சீடர்களிடம் தான் மறைந்த பிறகு 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் கீர்த்தி பிராபல்யமாகுமென்று கூறிவந்தாராம். அதன்படி சுவாமிகள் சமாதியடைந்து 60 ஆண்டுகள் கழித்து, அதே பராபவ ஆண்டில் ஆங்கில வருஷம் 1907இல் வாலாஜாபேட்டை ஸ்ரீரங்கதாம பாகவதர் அதிவிமரிசையாக புஷ்ய பகுளபஞ்சமி முதல் 10 நாட்கள் குருபூஜை உற்சவத்துக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த 1908ஆம் வருஷம் தில்லைஸ்தானம் ஸ்ரீ நரசிம்ஹ பாகவதர், பஞ்சு பாகவதர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் திருவையாற்றில் ஆராதனைகளை அதிவிமரிசையாக நடத்திவரலானார்கள்.

அதன்பிறகு புஷ்ய பகுளபஞ்சமியை சென்னையில் தில்லைஸ்தானம் ஸ்ரீ ராமய்யங்கார் வாரிசுகள் சிறப்பாகக் கொண்டாடலாயினர். சென்னை 'சுதேசமித்திரன்' ஆசிரியராக இருந்த C.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதன் வார இதழில் ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளை வாரம் ஒன்றாக வெளியிட்டு பிரபலப் படுத்தி வந்தார். மதுரை செளராஷ்டிர மக்களும், காஞ்சிபுரத்தில் நாயனாப் பிள்ளையும், திருவல்லிக்கேணி மிருதங்கம் பீதாம்பர தேசாயி அவர்களும் ஒவ்வோராண்டும் ஆராதனைகளைச் செய்து வந்தார்கள்.

மைசூர் ராஜ்யத்தில் பிறந்து பெங்களூரில் வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரின் சீடர் முனுசாமி அப்பா என்பவரிடம் இசை பயின்று சென்னையில் வாழ்ந்த ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் என்பவர் ஸத்குரு சுவாமிகளின் ஸமாதியைத் தன் சொந்த செலவில் அழகிய சிறு கோயிலாகக் கட்டி, சுவாமிகளின் விக்கிரகத்தை 1925 ஜனவரி 7ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.

பெங்களூர் நாகரத்தினம்மாள்.

சற்குரு தியாகராஜ சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இவர் மைசூரில் பிறந்தவர், எனவே மொழியால் கன்னடர். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு முதலான மொழிகளோடு சங்கீதமும் கற்றுத் தேர்ந்தார். நாட்டியக் கலையும் இவர் பயின்றார். தியாகராஜ சுவாமிகளிடம் அபார பக்தி கொண்டவர். அவருடைய பாடல்களைப் பாடி இவர் சங்கீதக் கச்சேரி நடத்துவார். இவருக்கு மைசூரைச் சேர்ந்த ஒரு அன்பர் கடிதம் எழுதியிருந்தார். அதில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் சமாதியையொட்டி சுகாதார சீர்கேடு அடைந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதற்கு விடிவுகாலம் பிறக்காதா என்றும் கேட்டு எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் கண்டவுடன் நாகரத்தினம்மாள் சென்னை சென்று அங்கு சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவர்கள் ஆலோசனையின்படி இவர் திருவையாற்றுக்குப் பயணமானார். அங்கு சென்று இவர் தஞ்சை மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாராம் மன்னோஜி கர்வே என்பவரிடம் பேசி சமாதி நிலத்தை கையகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான சமாதிக் கோயில்கள் இருந்தமையாலும், அசுத்தமும், அடர்த்தியான செடிகொடிகளும் வளர்ந்திருந்ததாலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி எது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. பின்னர் இதுதான் சற்குருவின் சமாதி என்பது உறுதி செய்துகொண்டபின் தன் சொந்தப் பணத்தில், வீடு, நகை முதலான ஐஸ்வர்யங்களை விற்றுக் கிடைத்த பணத்தில் சுவாமிகளுக்கு சமாதி மீது கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்வித்தார்கள். அங்கு காணப்படும் கல்வெட்டில் கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டது.

"ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆலயமும் பிரகாரமும், மடப்பள்ளி முதலிய கட்டடங்களும் இவைகள் அமைந்திருக்கும் ஆஸ்ரமும் மேல்படி சுவாமிகளின் அடியாளும், மைசூர் புட்டலெக்ஷ்மி அம்மாளின் புத்திரியுமான வித்யாசுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாளின் கைங்கர்யமாகக் கட்டப்பெற்று 7-1-1925இல் கும்பாபிஷேகம் நடைபெற்று 1930ல் கட்டடம் பூர்த்தியாகியுள்ளது"

திருமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் திருவையாற்றுக்கு வந்து தியாகையருடைய சமாதியில் கோயில் எழுப்பவும், இடத்தை வாங்கவும் மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாரிடமிருந்து அவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தை விலைக்கு வாங்கவும், சட்டப்படியான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்தவர் திருவையாற்றில் வழக்கறிஞராக இருந்த சி.வி.இராஜ கோபாலாச்சாரியார் என்பவராகும். சற்குரு தியாகராஜ சுவாமிகளின் சமாதிக் கோயிலும் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவையும் கண்டு கேட்டு ரசிக்கும் இந்த வேளையில் இவர் போன்ற மகான்களை நினைவுகூறுவது அவசியம்.

ஒவ்வோராண்டும் தை மாதம் பகுள பஞ்சமி திதியில் சுவாமிகளின் குருபூஜையை சங்கீத உற்சவமாகக் கொண்டாடி வந்தார்கள். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் நடைபெற்ற கச்சேரிகளில் பெண் வித்வான்களை மேடையில் அமர அனுமதிப்பல்லை என்ற வழக்கம் இருந்து வந்தது. நாகரத்தினம்மாள் வந்த பிறகு இந்த நிலையை மாற்ற நினைத்தார். அவர் பெண்களை மட்டுமே வைத்து சமாதியின் பின்புறம் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். இதற்கான செலவுகளை நாகரத்தினம்மாளே ஏற்றுக் கொண்டார். மற்ற இரு பிரிவினரான சின்ன கட்சி, பெரிய கட்சி இவர்களில் வாய்ப்பு கிடைக்காத ஆண் வித்வான்களுக்கும் நாகரத்தினம்மாள் தனது கச்சேரி மேடைகளில் வாய்ப்பு நல்கத் தொடங்கினார். இவர்கள் நடத்திய இசை ஆராதனை பெரும்பாலும் பெண்களே பாடும் நிகழ்ச்சியாக இருந்தது. சுவாமிகளின் ஆராதனையை மூன்று கட்சிகளாகப் பிரிந்து தனித்தனியே நடத்தி வந்தார்கள்.

சமாதிக்கு அருகே மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு மணல் நிரப்பி மேடாக்கி அந்த இடத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். முதலில் ஒரு கட்சி தனது ஆராதனை விழாவை உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும், மற்றொரு கட்சி கல்யாண மகாலிலும், மூன்றாவதாக நாகரத்தினம்மாள் குழுவினரின் ஆராதனை சமாதிக்கருகிலும் நடத்தினார்கள். இப்படித் தனித்தனியே பிரிந்து நடத்தியதன் விளைவு விபரீதமாகப் போகக்கூடாது என்று கருதி 1940ஆம் வருஷத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, முசிரி சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் கூடிப்பேசி அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் ஆராதனையை நடத்துவதென்று தீர்மானித்து அதுமுதல் அங்ஙனமே நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா.

அவரது ஆராதனை விழா முன்பே கூறியபடி தை மாதம் பகுள பஞ்சமி தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இசைக் கலைஞர்களும், வாத்தியக் கலைஞர்களும், இசை ரசிகர்களும் பெருமளவில் வந்து கூடுகின்றனர். சற்குருவின் சந்நிதியில் பாடுவது தங்களுக்கு அவரது ஆசி பரிபூரணமாக அமைவதாக அனைவரும் நம்புகின்றனர். ஒரு வாரம் வரை நடைபெறும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். நாள் முழுவதும், நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதுவரை பந்தல் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் அமைதியாக ரசிக்கிறது.

புஷ்ய பகுள பஞ்சமி அன்று காலை திருமஞ்சன வீதியில் ஸ்ரீ தியாகையர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி புறப்படுகிறது. மிக மூத்த இசைக்கலைஞர் இதற்குத் தலைமை தாங்கி உஞ்சவிருத்தி எடுக்கிறார். பின்னால் வேத கோஷங்கள் முழக்கிக் கொண்டும், ஸ்ரீ தியாகையர் கீர்த்தனைகள் பாடிக்கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் ஸ்ரீ தியாகராஜர் சமாதி சந்நிதிக்கு வரும் சமயம் ஆராதனை நடைபெறும் பந்தல் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். மேல்சட்டை அணியாமல் மேல் வஸ்த்திரம் மட்டும் அணிந்தவர்கள் சமாதிக்கு எதிரே இரு வரிசையாக நடுவில் வழிவிட்டு அமர்ந்துகொண்டு ஆராதனையைத் தொடங்குகிறார்கள். காலை முதல் மங்கள் இசை வாசிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையைத் தொடர்ந்து பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. தமிழகத்தின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இந்த பஞ்ச ரத்தினத்தைப் பாடுவதைக் கேட்பதே ஒரு இன்ப அனுபவம். இந்த பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய ராகங்களில் அமைந்தவை. இது பாடி முடிந்ததும் சுவாமிகளுக்குத் தீபாராதனை நடைபெறும்.

ஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை சபா சார்பில் மிகச் சிறப்பாக ஆராதனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவையாற்றுக்குப் பெருமையும், புகழும் சேர்த்துக் கொடுப்பதில் இந்த ஆராதனை விழாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது கபிஸ்தலம் ஸ்ரீ ரங்கசாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சென்னை தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி அவர்கள் இங்கு வருகைதரும் பக்தர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் விழாவின் எல்லா நாட்களிலும் உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். விழாவின் எல்லா நாட்களிலும் திருவையாறு நகரமே மக்கள் கூட்டத்தால் குலுங்கும்.

இசைவிழாவின் போது சமாதிக்கெதிரே இசைக்கச்சேரிகள் நடைபெறும் கொட்டகைக்குச் செல்லும் வழியெங்கும் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இசை நூல்கள், இசை வாத்தியங்கள், கேசட்டுகள் குறுந்தகடுகள் இவை விற்பனை தவிர அரசாங்க, வங்கி அலுவலகங்களும் திறக்கப்பட்டிருக்கும். தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியும் இங்கு செய்து தரப்பட்டிருக்கிறது. அஞ்சல் துறையின் அலுவலகமும், தொலைத் தொடர்புத்துறை சார்பில் தொலைபேசி, டெலக்ஸ் ஆகிய வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வளாகத்திலேயே தற்காலிக அலுவலகம் திறக்கப்படுகின்றன. கலைஞர்கள் வந்து தங்குவதற்கு அறைகளும், உணவுக்காக பெரிய ஹாலும் கட்டப்பட்டுள்ளன. திருவையாறு பாரதி இயக்கம் பல்வேறு பதிப்பகத்தாரின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதோடு விற்பனையும் செய்து வருகிறார்கள். ராமகிருஷ்ண மடத்து நூல்கள் மற்றும் பல புத்தக வெளியீட்டாளர்களும் தங்கள் புத்தகங்களை இங்கு விற்பனை செய்கிறார்கள். நிறைவு நாளன்று இரவு ஆஞ்சநேயர் உத்ஸவமும், நாதஸ்வர வித்வான்களின் மல்லாரி இசையுடனும் விழா நிறைவு பெறுகிறது.

9 comments:

N V Subbaraman said...

I was deeply immersed in t6he thoughts about the great soul Thiyagabrahmam! What a lovely presentation!Thanks in tons and I wish the author hundred years of such great useful service in the cause of religion, literature and the society.

csekar2930 said...

Very Interesting Good effort. Only a few peopple to know all these informations.One of kirthi Sri. Thygaraja swamigal said, the name "Rama" is derived from the two Pachashra mantra. word " RA" is taken from the mantra of Narayanaya. here, second letter "Ra" is jeva ashram. similarly, word "MA" is taken from namashivaya. here , letter "MA" is jeva ashram. Ra for Vishnu and Ma for Ambal. both of them born in the earth during the kaliuga. You can update this information in the above.
Jai Shri Ram.
Chandrasekaran, Allentown, Pennsylvania, USA

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

Pl. go to this link :
http://natarajadeekshidhar.blogspot.in/2010/01/blog-post_6927.html

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

Pl. go to this link
http://natarajadeekshidhar.blogspot.in/2010/01/blog-post_6927.html

Veerarajan said...

Good Work.....
Meisilithu poiittru...
Athunai arumaiyaana padhivu.....
Ethanai paarattukkal sonnaalum thagum..
Nandri...nandri..
SRI RAMA JAYAM

Veerarajan said...

Good Work.....
Meisilithu poiittru...
Athunai arumaiyaana padhivu.....
Ethanai paarattukkal sonnaalum thagum..
Nandri...nandri..
SRI RAMA JAYAM

Unknown said...

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான சத்குரு ஸ்ரீ தியாக ப்ரம்மம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழல் எழுதி இணையத்தில் வெளியிட முயற்சி மேற்கொண்ட தஞ்சை பாரதி பயிலகத்தின் இயங்குநர் தஞ்சை திரு. வெ. கோபாலன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்க்கை என்பது எத்தனை முறை படித்ததாலும் தெவிட்டாதாது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஸ்ரீராம பக்தி, தெய்வீகமான சங்கீதம் ஆகியவற்றின் மகத்துவம் பற்றிய நமது புரிதல் விரிவாகிக் கொண்டே போகின்றது. கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆங்கிலத்தில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் வராலாற்றை ”செயின்ட் தியாகராஜா தி டிவைன் மாஸ்டர்” என்ற தலைப்பில் அருமையாக எழுதி வழங்கியுள்ளார்கள். அந்த நூலில் ஸ்ரீ தியாகராஜரின் பிரபலமான கீர்த்தனைகளுக்கு ரத்தினச் சுருக்கமாக ஆங்கிலத்தில் விளக்கமும் தந்துள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழிலும் ஸ்ரீ தியாகராஜர் பற்றிய ஓர் புத்தகம் எழுதியுள்ளார்.

Anonymous said...

There is certainly a great deal to learn
about this issue. I like all of the points you've made.


Here is my web site; seo Google

துளசி கோபால் said...

வணக்கம் கோபாலன் ஐயா.

நான் துளசி. நியூஸிலாந்து நாட்டில் வசிக்கின்றேன். சமீபத்தில் தமிழ்நாட்டுப்பயணத்தில் சத்குரு தியாகராஜரின் சமாதிக் கோவிலுக்குப் போயிருந்தேன். என்னுடைய பயணக்கட்டுரைத் தொடரில் இதைப்பற்றி எழுத வேண்டும். அதற்குமுன் குருஜியின் வாழ்க்கை வரலாறு பற்றி இணையத்தில் தேடியபோது, தங்களின் இந்தக் கட்டுரை கிடைத்தது.

அத்தனை தகவல்களும் அருமை!

விவரிக்கச் சொற்கள் ஏது கிடைக்கவில்லை. என் மனம் நிறைந்த நன்றிகள்.