பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 27, 2011

வேதநாயக சாஸ்திரியார்


சுவிசேஷ கவிராயர் வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864)

கிறிஸ்தவ மத தோத்திரப் பாடல்கள் பலவற்றை இயற்றியவர் இந்த வேத நாயகசாஸ்திரியார். இப்போதும்கூட வேதநாயக சாஸ்திரியார் பாடல் என்ற அறிவிப்போடு பல பாடல்களைக் கேட்டு வருகிறோம் அல்லவா? அந்த வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாளர் மரபில் தோன்றியவர். இவருக்குப் பன்னிரெண்டு வயது ஆகும்போது, தஞ்சை ராஜா சரபோஜிக்கு போஷகராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார்.

தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பிரதேசமான தரங்கம்பாடியில் இருந்த ஒரு கல்வி நிலையத்தில் இவரைக் கல்வி கற்க வைத்தார் ஸ்வார்ட்ஸ். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார். அதன் பின் இவர் தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

அந்த நாளில் தஞ்சையை அரசு புரிந்தவர் மகாராஜா சரபோஜி IV ஆவார். அவர் கலை இலக்கியங்களில் ஆர்வம் உடையவர். வேதநாயகர் ஒரு சிறந்த கவிஞர். இவர் 52 நூல்களை இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1956இல் வெளியிட்ட தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் எனும் டாக்டர் தா.வி.வேதநேசன் எழுதிய நூலில் இருக்கிறது.

தஞ்சை மராத்திய வம்சத்தில் வந்தவரும், துளஜா ராஜாவின் சகோதரர் முறை உள்ளவரும், தஞ்சையை சரபோஜிக்கு முன்பு சில காலம் ஆண்டவரும், பின்னாளில் திருவிடைமருதூரில் வாழ்ந்தவருமான அமரசிம்மன் என்பவரின் மகன் பிரதாபசிம்மன் என்பவருக்கு வேதநாயகர் 1-2-1828இல் எழுதியுள்ள கடிதமொன்றில் "சிறிதும் பெரிதுமான அறுபது பொஸ்தகங்களை உண்டு பண்ணினேன்" என்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இவருடைய நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவது "பெத்தலேஹம் குறவஞ்சி". மற்றொரு சிறந்த நூல் "பேரின்பக் காதல்". இது 1813இல் இயற்றப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நூல் 1815இல் திருச்சியில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு "வேத சாஸ்திரி" எனும் பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்குப் பிறகு தஞ்சையில் இருந்தவர் Rev. Kohlhoff என்பவர். இவருடைய பரிந்துரையின் பேரில் மன்னர் சரபோஜி இவருக்கு ஒரு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, மன்னரை மாதம் இருமுறை பார்க்கவும் அனுமதி வழங்கப் பட்டது. இவருடைய பணியைப் பாராட்டி சரபோஜி மன்னர் இவருக்கு மாதச் சம்பளமும் கொடுக்க ஆணையிட்டார்.

வேதநாயக சாஸ்திரியார் மராத்திய போன்ஸ்லே வம்சத்து வரலாற்றை செய்யுளாக இசைத்துக் கொடுத்திருக்கிறார். 1-2-1828இல் இவர் திருவிடைமருதூரில் வாழ்ந்த பிரதாபசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில், "Rev.Kohlhoff எனக்காகச் சிபாரிசு செய்ததன் பேரில் மகாராஜா எழுதி வைத்த போன்ஸ்லே வம்ச ராஜ சரித்திரத்தில் சிறிது விருத்தமாகப் பாடிய சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் செய்து கொடுத்தார்கள்" என இருக்கிறது.

ஆக, இவர் போன்ஸ்லே வம்ச சரித்திரத்தை பாடலாக வடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மன்னர் சரபோஜி இவரை பிரஹதீஸ்வர ஸ்வாமியின் பேரில் ஒரு குறவஞ்சி பாடும்படி கேட்டதாகவும், அதற்கு வேதநாயகர் மறுத்து விட்டதாகவும், அதன் விளைவாக இவ்விருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது என்றும் தெரிகிறது.

இந்த வேதநாயக சாஸ்திரியார், சில காலம் கர்னல் மெக்கன்சியிடம் சுவடி தயாரிப்பில் ஈடுபட்டு வேலை செய்ததாகத் தெரிகிறது. இவர்24-1-1864இல் காலமானார்.

Monday, September 26, 2011

மராத்தியர் வரலாறு - Part 22


FINAL PART

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 22

தஞ்சாவூரின் மாமன்னராக விளங்கிய சரபோஜி IV காலமான செய்தியைச் சென்ற பகுதியில் பார்த்தோமல்லவா. அவருடைய ஆட்சியின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சி நிர்வாகத்தைத் தாங்களே வைத்துக் கொண்டு மன்னருக்கு செலவுக்கும், கோட்டை நிர்வாகம், பாதுகாப்பு இவற்றுக்காகவும் கணிசமான தொகையினை கொடுத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். ஆக, சரபோஜி IV காலத்திலேயே தஞ்சாவூர் ஆங்கில கம்பெனியார் வசம் போய்விட்டது. இவருடைய காலத்துக்குப் பிறகு ராஜ்யம் இருந்த நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதையும்,  சரபோஜி IV இன் ஆட்சி அதிகாரமில்லாத ஆட்சி என்பதையும்பார்க்கலாம்.

சரபோஜி IVஇன் இரண்டாம் மனைவி அகல்யாபாயிக்குப் பிறந்தவர் சிவாஜி II. 1808ஆம் வருஷம் பிரபவ வருஷம் மாசி மாதம் 23ஆம் தேதி 22-3-1808இல் இவர் பிறந்தார். அதே வருஷம் செப்டம்பர் 30இல் அன்னப் பிராச்சனம், குடுமி கல்யாணம், வித்யாரம்பம், இடுப்பில் சிறு கத்தி அணிதல் ஆகியவை 1811இல் நடைபெற்றது.

இவருக்கு 1818இல் இவரது 10ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது. முதலில் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சைதம்பா பாயி. ராமச்சந்திர சூர்வேயின் மகள் காமாட்சி அம்பாபாயி எனும் பெண்ணை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சரபோஜி IVஇன் மகள் வயிற்றுப் பேத்தி. மாமனைத் திருமணம் செய்து கொண்டார் இந்த சைதம்பாபாயி. மூன்றாவதாக ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார் இவர், அவள் பெயர் பத்மாம்பாபாயி. இவர்கள் அனைவருமே சிவாஜி IIக்கு முன்னதாகவே காலமாகிவிட்டனர்.
                                                              Shivaji II Raja
இவை தவிர 1852இல் 44ஆம் வயதில் ஒரே நாளில் இவர் 17 கல்யாணங்களைச் செய்து கொண்டாராம்.இவருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. 1838இல் இவரைப் பற்றி ரெசிடெண்ட் ஒரு புகாரை அனுப்பினார். 1848இல் ரெசிடெண்ட் சிவாஜி II தன்னை அலட்சியம் செய்து விட்டதாகப் புகார் அனுப்பினார்.

சிவாஜி II மகாராஜாவுக்கு கூடா நட்பு அமைந்திருந்தது. மாதுசாமி மாடிக் என்பவனுடைய நட்பினால், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இவர் கடங்காரர் ஆனார். தாயாருடைய நகைகளை வாங்கி அடகு வைத்துப் பணம் வாங்கி செலவு செய்தார். ஸர்க்கேல் தேவாஜி ராவ் என்பவர் அரண்மனையில் ஒரு கெளரவமான அதிகாரி. அவரை இவர் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

இப்படி பல வகைகளிலும் நல்ல பெயர் எடுக்காமல் சிவாஜி II ராஜா 1855இல் தனது 48ஆம் வயதில் அக்டோபர் 25ஆம் தேதி காலையில் இறந்து போனார். சிவாஜி IIவின் மனைவியான காமாட்சியம்பாபாயி, கம்பெனிக்கும் மற்ற பாயிமார்களுக்கும் எதிராக ஒரு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 1857இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அப்போது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சராக இருந்த நார்ட்டன் துரை என்பவர் வக்கீலாக இருந்த நடத்தினார். இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் காரணமாகத்தான் மராத்திய மன்னர் பரம்பரையினருக்கு அவர்களுடைய சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததாகவும் தெரிகிறது.

1857 ஏப்ரல் 20ஆம் தேதியிட்ட ஒரு ஆவணத்தில் கீழ்கண்ட பாயிமார்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

சையம்பா உமாம்பா ஜயதாம்பா ஜீஜாயி
தீபாம்பா ராமகுமாரம்பா சகுணாம்பா அபரூபாம்பா
யஷ்வந்தம்மா அனசாம்பா கெளராம்பா அருணாம்பா
சுகுமாராம்பா கிரிஜாம்பா சீமாம்பா

ராஜா இறந்த போது இவருடைய இரு மனைவிமார்களின் வயது 20ம் 12ம் ஆகியிருந்தது. இப்படியாக புகழ் பெற்ற தஞ்சை மராத்திய ராஜ்யம் இந்த சிவாஜி IIஇன் காலத்தோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் ஆங்கிலேயர்கள் தஞ்சையை நேரடியாக ஆளத் தொடங்கிவிட்டனர்.

முடிவுரை:

தஞ்சை மராத்திய மன்னர்கள் இங்கு சுமார் 180 வருஷங்கள் அதாவது கி.பி. 1676 தொடங்கி 1855 வரையில் ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம், மருத்துவம் ஆகிய கலைகளில் நாடு சிறந்து விளங்கும்படி செய்தார்கள். சரபோஜி IV காலத்தில்தான் சிறப்பாக இருந்தது. இந்த நான்காம் சரபோஜி 1798 தொடங்கி 1832 வரை மிக உன்னதமான நிலையில் தஞ்சை ராஜ்யத்தை வைத்திருந்தார். மன்னருக்கும் பல மொழிகள் தெரியும். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கலைஞர்களையும் ஆதரித்து வந்தார்.

இவர் காலத்தில் வைத்திய சாஸ்திர கல்விக்காகவும், மேன்மைக்காகவும் "தன்வந்த்ரி மகால்" எனும் மருத்துவ சாலை இயங்கி வந்தது. இவரது மகன் சிவாஜி II காலத்திலும் இது போற்றி பாதுகாக்கப் பட்டது. இங்கு ஆங்கில முறை வைத்தியம் தவிர சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் கொடுக்கப்பட்டன. மனிதர்கள் தவிர பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மருத்துவங்களும் இங்கு கவனிக்கப் பட்டன. அஸ்வ சாஸ்திரம் (குதிரை வைத்தியம்) கஜ சாஸ்திரம் (யானை) போன்றவற்றுக்கும் வைத்தியம் கற்பிக்கப் பட்டது.

தஞ்சாவூரின் கடைசி மன்னர்கள் பரம்பரை நாயக்க மன்னர்கள் அவர்களை யடுத்து மராட்டி மன்னர்கள் இருந்தார்கள். அவர்களுடைய காலம்
வருமாறு:

நாயக்க மன்னர்கள் 1532 முதல் 1673 வரை சேவப்ப நாயக்கர் தொடங்கி விஜயராகவ நாயக்கர் வரையிலான 141 ஆண்டுகள்.
மராத்திய மன்னர்கள் ஆட்சி 1676இல் தொடங்கி 1855 சிவாஜி II காலம் வரையிலான காலம் வரையிலான 179 ஆண்டுகள்

* இந்த வரலாறு மெக்கன்சி சுவடிகளைப் பின்பற்றி எழுதப் படுகிறது. இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது.

** மகாராஜா சரபோஜி IV தனது அன்பிற்குரிய முக்தாம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க அன்ன சத்திரம் கட்டியது ஒரத்தநாடு எனுமிடத்தில். அந்த சத்திரமும், இன்னம் வேறு பல ஊர்களிலும் கட்டப்பட்ட சத்திரங்களும் பலகாலம் சேவை செய்தன. அவற்றின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருவாய்த் துறையில் சத்திரம் இலாகா என்று ஒன்று இன்றும்கூட பல ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றன. முக்தாம்பா சத்திரத்தில் தங்கி இலவசமாக உணவும், இருப்பிடமும் தந்து படித்தவர்கள் ஏராளம்.

***மகாராஜா சரபோஜி திருவையாற்றில் சம்ஸ்கிருதம் கற்பதற்கென்று ஒரு கல்லூரியை உருவாக்கினார். அந்தக் கல்லூரி முதலில் சம்ஸ்கிருதம் மட்டும் கற்பிக்கப் பயன்பட்டது. பின்னர் தமிழ் படிக்கவும், அதன் பின் இப்போது அது ஒரு கலைக்கல்லூரியாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. கல்வியிலும் கலைகளிலும் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
வரலாற்றில் குறிப்பிடப்படும் இரண்டு நிகழ்ச்சிகள் ருசிகரமானவை. அதில் ஒன்று:--

***காஞ்சி காமகோடி மடத்தை அலங்கரித்த சந்திரசேகரேந்திர சுவாமிகள் என்பவர் திருவானைக்காவில் இருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடகம் செய்து, ஆலய குடமுழுக்கையும் முடித்து வைத்தார். அப்போது அவர் காஞ்சியில் இல்லாமல், கும்பகோணத்துக்கு வந்து விட்டார். அவர் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகிப் போனது. ஆகையால் அவர் காவிரியின் வடகரையோடு திருக்காட்டுப்பள்ளி, திருனெய்த்தானம், திருவையாறு வழியாக கும்பகோணம் திரும்பும் வழியில் தஞ்சை மன்னரிடம் நிதியுதவி கேட்டனுப்பினார். அப்போதைய மன்னர் (துளஜேந்திர ராஜாவாக இருக்க வேண்டும்) மறுத்துவிட்டார். சுவாமிகளை அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிகள் பணம் இல்லாமையால் தஞ்சைக்கு விஜயம் செய்யாமல் காவிரிக் கரையோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மன்னர் சில வீரர்களை அனுப்பி சுவாமிகளின் பரிவாரத்தை வழிமறித்துச் சிறைப்பிடித்து மரியாதையுடன் தஞ்சைக்கு வரவழைத்தார். ஊருக்குள் நுழையும்போது சுவாமிகளுக்குப் பூரணகும்ப நாதஸ்வர மரியாதைகளுடன் அவரை வரவேற்று உபசரித்து, அவர் ஊர் செல்லும்போது நிறைய பணமும் கொடுத்தனுப்பினாராம். மடத்துக்கு இருந்த கடங்கள் அனைத்தும் இந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டு மீதம் இருந்தது. அதை நிலம் வாங்கி முதலீடு செய்ய நினைத்த போது, திருப்பனந்தாள் அருகில் ஒரு கிராமத்தில் நிலங்கள் விற்பனைக்கு வந்ததால் கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் (நமது ஜி.கே.மூப்பானாரின் பாட்டனார்) தலையிட்டு அந்த நிலங்களை வாங்கி மடத்துக்குக் கொடுத்து நிரந்தர வருமானத்துக்கு வழிவகை செய்தாராம்.

***மற்றொரு நிகழ்ச்சி, திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். சதாசர்வ காலமும் ஸ்ரீ ராமபிரானையே நினைத்துப் பாடி வந்தவர். அவருடைய புகழ் நாடெங்கும் பரவிவந்த போது அவரைத் தன் அரசவைக்கு அழைத்துப் பாடப் பணித்ததாகவும், ஸ்ரீ சுவாமிகள் மறுத்து "நிதிசால சுகமா?" எனும் கீர்த்தனத்தைப் பாடினார் என்றும் கூறப்படுகிறது. திருவையாற்றிலும் காவிரியாற்றுக் கரையில் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு ஓர் அரண்மனை இருந்தது. காவிரிக் கரையில் அமைந்த புஷ்ய மண்டபத் துறையும் புனிதமாக அவர்களால் போற்றப்பட்டது. அங்கு இசைக் கல்லூரி ஒன்றையும் நிறுவி அது இப்போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
***

*** சரபோஜி IV பதவிக்கு வருவதற்கு முன்பு துளஜாவின் தம்பி முறையான அமர்சிங் (அமரசிம்மன்) பதவி வகித்தார். இவரைப் பற்றி இரு வேறு விதமான செய்திகள் காணப்படுகின்றன. அமரசிம்மனின் ஆட்சி காலத்தில் சில சிறப்புகளையும் சில செய்திகள் கூறுகின்றன. அவருடைய காலத்தில் மழையில்லாமல் நாடு வரண்டு கிடந்ததாம். குறைகளை முறையிட மக்கள் வந்தபோது மன்னர் அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார். அரசர் எந்த ஊருக்குப் போகிறாரோ அங்கெல்லாம் மழை பெய்ததாம். அதனால் இவருக்கு மழைராஜா என்ற பெயர் வந்தது.

(*இது அமரசிம்மனை தெய்வீக அருள் பெற்றவராகக் காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் எழுதி வைத்தக் குறிப்புகள் என்றும், இவை போன்ற செய்திகள் 'திருவிடைமருதூர் பதிவுகள்' எனும் சுவடிகளில் இருப்பதால், இவை அமரசிம்மனின் ஆதரவாளர்களால் எழுதப் பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு.)



*அவருடைய சமஸ்தானத்தில் புலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அரசர் புலி வேட்டைக்குச் சென்று 22 வேங்கைப் புலிகளைச் சுட்டு வீழ்த்தினாராம்.

*கம்பெனிக்குத் தரவேன்டிய சுபா அதிகமாகவே தஞ்சையின் நான்கு சுபாக்களில் இரண்டை கம்பெனி தன்வசப்படுத்திக் கொண்டதாம்.அப்படியும் ராஜா தர வேண்டிய தொகை பாக்கி இருந்ததாம்.

*1795இல் அமரசிம்மன் ராமேஸ்வரம் யாத்திரை சென்றார். வழியெல்லாம் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆனாலும் இவர் போகுமிடங்களில் மழை பெய்ய பஞ்சம் தீர்ந்ததாம். குடிமக்கள் ஏராளமானோர் இவரோடு அந்த யாத்திரையில் பங்கு கொண்டனராம். ராமேஸ்வரத்தில் இவர் துலாபாரம் செய்து கொண்டதும், அங்கு நாகப் பிரதிஷ்டை செய்ததும் வரலாற்றின் ஏடுகளில் இருக்கின்றன.

இந்த அமர்சிங்கின் பதவி நீக்கத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை:

1. துளஜாவின் மனைவியர் சரபோஜிக்கு பட்டம் கிடைக்க வேண்டி சென்னைக்குச் சென்று ஆங்கில அதிகாரிகளிடம் வேண்டினர்.

2. அப்போது ரெசிடெண்டாக இருந்த டூரியன் என்பவர் சரபோஜிக்கு ஆதரவாக இருந்தார்.

*அமரசிம்மனுடைய மூன்றாவது மனைவியாகிய பவானிபாயி சாஹிபுக்கு கி.பி.1798இல் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன்.

*அமரசிம்மன் அரச பதவியை இழந்த பிறகு கோட்டையின் மூலையில் 22 மாதங்கள் தங்கியிருந்தார், பிறகு திருவிடைமருதூருக்கு 1800இல் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஆலங்குடியில் 25 நாட்கள், கும்பகோணத்தில் 57 நாட்கள் தங்கியிருந்தார்.

*அமர்சிங் 1802இல் இறந்தார். அவர் இறந்த பொழுது சந்தன மழை பெய்ததாம். அவரோடு அவரது நான்காம் மனைவி பார்வதிபாயி உடங்கட்டை ஏறி மாண்டு போனாள். அவள் தவிர அவருடைய போகஸ்திரி ருக்குமணி தீக்குளித்து இறந்தாள்.

*அமரசிம்மனுக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வூதியம் 25000 வராகன். அவருடைய மகனுக்கும் அது பின்னர் கொடுக்கப்பட்டது.

*அமரசிம்மனின் மகன் பிரதாபசிம்மன் தன் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக இருந்தான். ஆனால் அதற்கு முன்பு அவன் இறந்து போகவே அந்தப் பெண் திருமணம் ஆகாவிட்டாலும் கடைசி வரை கைம்பெண்ணாகவே இருந்தாள்.

*மராட்டிய வம்சாவளியில் சுஜான்பாயி ஆட்சி புரிந்த தகவலை சில ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.



தஞ்சை போன்ஸ்லே வம்ச மரம்.

ஏகோஜி IV
(1.தீபாபாயி 2. சயிராபாயி 3. அண்ணுபாயி 4. அபிமான மனைவியர் 9 பேர்.)
|
ஷாஜி
|
சரபோஜி III
|
துக்கோஜி
|
பாவா சாஹிப் பிரதாப சிம்மன்
|
துளஜா ராஜா அமர்சிம்மன்
|
ஸ்வீகாரம் சரபோஜி IV
|
சிவாஜி II


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு நிறைவு பெற்றது.

குறிப்பு: இந்த வரலாறு முழுவதும் மெக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொன்டது. பல வரலாறுகள் இருந்த போதும் சுருக்கமாக தஞ்சை வரலாற்றைக் குறித்த நூல் எதுவும் இல்லை. இதனைப் படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுத வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

குறிப்பு:-- மெக்கன்சி சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அல்லவா? யார் இந்த மெக்கன்சி என்பதை இப்போது பார்க்கலாம்.

கர்னல் காலின் மெக்கன்சி (1754 - 1821)

"மெக்கன்சி சுவடிகள்" எனக் குறிப்பிடப்படும் சுவடிகள் சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் (Government Oriental Manuscripts Library) பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சுவடிகளை எழுதி வைத்து தமிழ் நாட்டில் மராத்தியர்களின் சரியான வரலாற்றைத் தொகுத்துத் தந்திருப்பவர் இவர்.

Alphabetical Index of Tamil Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, Vol. III parts I and II (Mackenzie's collection) Madras 1951.

இந்த கர்னல் மெக்கன்சியின் வரலாற்றை இப்போது பார்ப்போம். இவர் ஸ்காட்லாந்து நாட்டில் Island of Lewis எனும் தீவில் Storno நகரத்தில் 1754இல் பிறந்தவர். தன்னுடைய முப்பதாவது வயதில் 1783இல் இந்தியாவுக்கு வந்தார். 1821இல் இவர் காலமாகும் வரையிலும் இந்தியா, இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து தனது திறமை காரணமாகப் பல பதவி உயர்வுகள் பெற்று சிறப்பாக வாழ்ந்தார். ஸ்காட்லாந்தைவிட்டுப் புறப்பட்ட பின் இவர் இறக்கும் வரை தாய் நாட்டுக்குத் திரும்பவில்லை.

இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. ஒரு சகோதரர் அலெக்சாண்டர் என்பவர் கனடா நாட்டிலும், கென்னத் என்பவர் வேறொரு நாட்டிலும், சகோதரி மேரி என்பவர் தன் சொந்த ஊரிலும் இருந்தார்கள்.

அப்போது கிழக்கிந்திய கம்பெனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் செய்ய கப்பல்களில் புறப்பட்டு வந்தனர். அப்படி சிறப்புப் பெற்ற கிழக்கிந்திய கம்பெனியில் இவர் 2-9-1783ல் வேலைக்குச் சேர்ந்தார். இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த காலத்தில் இவர் ஒரு                     பொ றியாளராக பணியாற்ற இந்தியா வந்து சேர்ந்தார்.

பொறியாளராக இருந்த போதும், அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் போர்களில் ஈடுபட்டு வந்ததால், இவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு இவருடைய திறமையால் இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.

முதலில் நில அளவைத் துறையில் பணியாற்றியபோது 1810இல் இவர் தலைமை நில அளவையாளராக பதவி உயர்வு பெற்றார். அந்த நாளிலேயே இவர் ரூ.1500 ஐ மாத ஊதியமாகப் பெற்றார். 1816இல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொசைடியில் உறுப்பினரானார். 1811இல் இவர் ஜாவாவுக்குச் சென்று பணியாற்றினார்.

1796இல் இலங்கைக்குச் சென்றபோது அங்கு ஈழம் பற்றிய செய்திகளைத் தொகுத்தார். Cavelly Venkata Boriah என்பவர் இவருக்கு இந்தப் பணிகளில் உதவி வந்தார். இந்தியா திரும்பிய பின் இவர் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து வந்தார். அவை அனைத்தும் நாட்டின் வரலாற்றையொட்டியப் பதிவுகள் ஆகும்.

பல மொழி பேசுபவர்கள் இவருக்கு உதவி புரிந்தார்கள். அப்படி ஊழியம் புரிந்தவர்களுக்கு இவர்கள் நல்ல ஊதியமும் வழங்கினார். இவருக்கு உதவியர்கள் முறையே: Cavelly Venkata Boriah, Cavelly Venkata Letchumaiya, Abdul Azeez, Bhaskaraiah, Babu Rao, Ramasamy, Srinivasaiah, Sivaramaiah ஆகியோராவர். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர்கள் வல்லவர்கள். இவர்களுக்கெல்லாம் மாதம் 40 முதல் 50 வராகன் வரை ஊதியம் வழங்கப்பட்டது.

இவருடைய இந்த வரலாற்றுத் தொகுப்புப் பணியைப் பாராட்டி கம்பெனியார் இவருக்கு மாத ஊதியம் 200 வராகனுடன் மேலும் 100 வராகன் சேர்த்துக் கொடுத்தனர். ஒரு முறை கம்பெனியின் இயக்குனர்கள் இவரது பணியைப் பாராட்டி 9000 வராகன் நன்கொடை அளித்தனர்.

இந்தத் தொகுப்புப் பணிக்காக இவர் செலவிட்ட தொகை 15000 பவுண்டுகள் எனத் தெரிகிறது. வெங்கட லெட்சுமையா என்பவர் உதவியாளர்களுள் முதன்மையானவர். இவருடைய தொகுப்புக்களை அந்த நாள் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கம்பெனி சார்பில், மெக்கன்சியின் மனைவியிடமிருந்து 10000 பவுண்டு விலைக்கு வாங்கினார்.

இவருடைய அறுபதாவது வயதில் 1812இல் பெட்ரோனெல்லா ஜாகோமினா பார்டெல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1820இல் உடல் நலம் குன்றி கல்கத்தாவிலுள்ள செளரங்கீ எனுமிடத்தில் தனது 68ஆம் வயதில் உயிரிழந்தார்.

நன்றி: "தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு" ஆசிரியர் கே.எம்.வெங்கடராமையா,                    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.
"சரபோஜி மஹாராஜா" சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் வெளியீடு.
"போன்ஸ்லே வம்சத்து வரலாறு" சரஸ்வதி மஹால் வெளியீடு, தஞ்சாவூர்.

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய "தஞ்சாவூர் நாயக்கர்கள் வரலாறு" சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

மராத்தியர் வரலாறு - Part 21


Serfoji II
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 21

சென்ற பகுதியில் துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சிறுவன் சரபோஜி இங்கிலீஷ் கம்பெனியாரின் துணையோடு அமர்சிங்கைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தஞ்சாவூர் ராஜயத்தின் ராஜாவாகப் பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இந்த அமர்சிங்கைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தேசபக்தன் எனவும் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் இப்போது போக வேண்டாம். தஞ்சாவூர் ராஜதானியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம். இனி....

சரபோஜி, இந்தப் பெயர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாற்றில் பெருமைக்குரிய பெயராக விளங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது காலம் தஞ்சையின் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது என்பதையும் அனைவரும் அறிவர். அவர் காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்து வந்தனர். அதிலும் அவர்கள் அனைவரும் சரபோஜியின் ஆளுகைக்குட்பட்ட ஊர்களில்தான் இருந்தனர் என்பதும் பெருமைக்குரிய விஷயம். வைத்திய சாஸ்திரத்தில் வல்லவர்களும், தமிழ்ப் புலவர்களும் இவருடைய சபையில் ஆதரிக்கப் பட்டனர். இவர் செய்த ஒரு புதுமை என்னவெனில், வைத்திய சாஸ்திர நுணுக்கங்களை வைத்தியர்கள் எழுத, அதனைக் கவிதை வடிவில் புலவர்கள் வடித்து வைக்க, இன்றும்கூட "சரபேந்திர ராஜ வைத்திய முறைகள்" எனும் கவிதை நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவை சரஸ்வதி மகால் நூலகத்தின் வெளியீடுகள்.

சரபோஜி II என்ற அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்படும் மன்னர் சின்னஞ்சிறு இளைஞனாக பதவிக்கு வந்து நீண்ட காலம் பதவி வகித்து முதிர்ந்த வயதில் காலமானார். இவர் பதவிக்கு வந்தவுடன் தான் பதவுக்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற அநியாயங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்தார். மக்கள் பல தொல்லைகளை அனுபவித்த காரணத்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும் பல காரியங்களை நடைமுறைப் படுத்தினார். ராஜாங்கத்தின் கணக்கு வழக்குகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த பெரும் பெருச்சாளிகளைத் துரத்திவிட்டு, அவற்றைச் சீர் செய்தார்.

தனக்குச் சமமான அந்தஸ்து உள்ள காட்டிகே குலத்திலிருந்து யமுனாபாயி, அகல்யாபாயி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு வரவேண்டியிருந்த பாக்கி பணத்தைத் திரும்பப் பெற்றார். தஞ்சாவூரில் அப்போது Resident எனும் பதவியில் இருந்தவரான Macleod என்பவர் சரபோஜியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இவர் மீதான புகார்களை சரபோஜி மன்னர் 1800ஆம் வருஷம் மே மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதம் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதன் பேரில் தஞ்சை அரசாங்க அதிகாரிகள் சிலரை கம்பெனியார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அதன்படி தத்தாஜியப்பா என்பவருடைய தலைமையில் மேலும் இரண்டு அதிகாரிகளைச் சென்னைக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார் சரபோஜி. கம்பெனி அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ரெசிடெண்ட் மெக்லோட் மீது தவறு இருப்பது தெரிய வந்தது. ஆகையால் அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரெசிடெண்ட் மெக்லோட் பதவி போனதும் மிகவும் மனம் நொந்து போனார். சரபோஜிக்குத் தான் இழைத்த தீங்குகள் அவரது மனச்சாட்சியை வருத்தியிருக்க வேண்டும். அவரும் அவருடைய மனைவியும் ராஜாவிடம் சென்று தங்கள் பதவி போனபிறகு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லி வருத்தப் பட்டனர். ராஜாவும் மிகவும் பெருந்தன்மையுடன், அவர் தனக்குச் செய்த தீங்குகளை நினையாமல் அவருக்கு பதினாயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார்.

ராஜா சரபோஜியின் இரண்டாவது மனைவி அகல்யாபாயிக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுலட்சணாபாயி என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். சரபோஜிக்கு முன்பாக ராஜ்யத்தை ஆண்ட அமர்சிங் சரியான முறையில் ஆட்சி செய்யாததால் மக்கள் வருத்தமடைந்ததை யொட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் தாங்களே ராஜ்யத்தை ஆள முன்வந்த போது சரபோஜியும் அதற்கு சம்மதித்து ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனி கவனித்துக் கொள்ள அனுமதித்தார்.

மெக்கன்சி சுவடிகளின் படியும், மராத்திய வரலாற்றுச் செய்திகளின்படியும், பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படியும் அமர்சிங்கின் மீது பல குறைகள் கண்டுபிடிக்கப் பட்டாலும், நிலைமை அப்படி இல்லை என்பதும் வேறு பல வழிகளில் தெரிய வருகிறது. அமர்சிங்கைப் பற்றிய ஓர் ஆங்கில வரலாற்றாசிரியரின் கூற்றைப் பாருங்கள்.

"A liberal prince (Amar Singh) no doubt, he worked for the welfare of his people. Anxious to promote cultivation, he granted an increase of the ryot's share of the produce, suspended the colletion of duties on grain exported for the relief of the famine sticken Ramnad in 1794, set up a Court and introduced individual settlement in the place of the village settlement."

அமர்சிங் காலத்தில் அவர் அமைச்சர் சிவராயரை தற்போது குடிவாரம் எவ்வளவு என்று கேட்க அவர் 'அனேக நாட்களாக குடிமக்கள் 100க்கு 30 வாரம் பெறுகின்றனர்' என்றார், உடனே அமர்சிங் இனி 100க்கு 40 வீதம் கொடுங்கள் என்று உத்தரவிட்டாராம். இதிலிருந்து ராஜா மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. எனினும் சரபோஜியையும், ஆங்கில கம்பெனியாரையும் ஆதரிப்போர் அமர்சிங் பற்றி ஒரு அவதூறான செய்தியைப் பரப்பி அவரை நீக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அமர்சிங்குக்கு அரசுரிமை இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால் அவர் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினாரா இல்லையா, மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இருந்ததா இல்லையா என்பது வேறு. எனவே அவரை பூதம் போல உருவகப் படுத்தும் முயற்சி நடைபெற்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் கணிக்க முடிகிறது. இல்லையா?

தஞ்சாவூருக்கு ராஜா சரபோஜி மன்னனாக வந்த பிறகு ஆங்கிலேய கம்பெனியார் தங்கள் படைகளை கோட்டையிலிருந்து விலக்கிக் கொண்டு காலி செய்து கொடுத்தனர். அது வரையிலும் தஞ்சை ராஜாவை நம்பாதவர்கள் சரபோஜி வந்ததும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். தஞ்சை ராஜாங்கப் பணிகளை கம்பெனியார் எடுத்துக் கொள்ள வேண்டுமெங்கிற முடிவை எடுத்த போது கல்கத்தாவிலிருந்து கம்பெனியின் இந்திய தலைமை அகம் சென்னை கம்பெனியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதன்படி சரபோஜியின் சம்மதத்தைப் பெறும்படி கூறியிருந்தனர். ராஜாவும் தனது மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்.

தஞ்சை மன்னர் சரபோஜியும் ஆங்கில கம்பெனியாரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஆங்கிலப் படை தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறிவிடும் என்றும், அதன் பின் ராஜா கோட்டையைத் தன் விருப்பப்படி வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த ஒப்பந்தம் சொல்லியது. அந்த ஒப்பந்தப்படி கம்பெனியார் ராஜாவின் செலவுகளுக்காக ஒரு லட்சம் நட்சத்திர பகோடா பணமும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கையும் எல்லா செலவுகளும் போக மீதியை அமர்சிங்கை ஆதரிப்பதற்காகக் கொடுப்பதென்றும் தீர்மானித்தது. ஆண்டுக்கு 25000 பகோடா அமர்சிங்குக்குக் கொடுக்க முடிவானது. இந்த ஒப்பந்தம் 1801இல் செய்து கொள்ளப் பட்டது.

இனி கொஞ்சம் ராஜாங்க சமாச்சாரத்துக்கு மாறான சில சொந்த விவகாரங்களைப் பார்க்கலாம். ராஜா சரபோஜி இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோமல்லவா. அந்தத் திருமணத்துக்கு முன்பாக அவருக்கு ஒரு நல்ல அழகியும், குணவதியுமான பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணும் ராஜாவுக்கு மனதுக்கு உகந்த வகையில் நடந்து கொண்டு அன்னியோன்னியமாக இருந்து வந்தாள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. இரண்டாவது பிரசவத்தின் போது அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.

அவள் ஒரு நாள் ராஜாவிடம் தன் நினைவாக அன்னசத்திரம் ஒன்றை கட்ட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்படியொரு விருப்பத்தைத் தெரிவித்திருந்த காரணத்தால், அவள் காலமானதும் ராஜா அவள் விருப்பப்படி ஒரு அன்ன சத்திரம் கட்ட முடிவு செய்தார். அந்தப் பெண்ணின் பெயர் "முக்தாம்பாள்". அவளுடைய பெயரில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரத்தநாட்டில் ஒரு அக்ரகாரம், கோயில், குளம், தோட்டம் இவற்றையும் அமைத்து அங்கு வேத பண்டிதர்களையும் குடியமர்த்தி அங்கு "முக்தாம்பாள் சத்திரம்" நிறுவப் பட்டது.

இந்த சத்திரம் தொடர்ந்து நன்றாக நடைபெறும் வகையில் அதற்கென்று நிலபுலங்கள் நிவந்தங்களாகத் தரப்பட்டன. இந்த ஆவணம் 1802 ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி துன்மதி வருஷம் துவக்கி வைக்கப்பட்டது. அந்த சத்திரத்தின் வாசலில் இருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகின்ற செய்தி இதோ:--

"ஸ்ரீமத் போஸ்லே வம்சோத்தம இந்த்ரபதி சிரேஷ்டப்ரஸாத ஜனித ப்ரதாப ஸ்வீக்க்ருததில்லீ வானுபாக ஸ்வாதந்தர்ய வ்பட்சக்ருத தில்லி ராஜ்ய ஸார்வபெளம க்ஷோணீச குலலாம சோளாவனீ நாயக தஞ்சபுராதீச ஸ்ரீமந்த மகாராஜா சத்ரபதி சரபோஜி ராஜே ஸாஹேபயானி ஸ்த்ரீ ஸெளபக்யவதி முக்தாபாயி அம்மாசே நாவே ஸ்ரீஸேது மார்க்கீந்த தஞ்சபுரவ பட்டுக்கோட்டை யாதினீஸ்தலாச மத்யபூமீந்த அன்ன ஸத்ரவ, அக்ரஹாரவ, சிவாலயவ, விஷ்ணுஸ்தல இத்யாதி அமோக தர்ம ப்ரதிஷ்டிலா தாரீக -- சாலிவாஹன சகம் 1722 துன்மதி நாம ஸம்வத்ஸரம் புஷ்ய சுத்த த்ரயோதஸி ஸ்திர வாஸாதிகளீ தை மாசம் பான்சு / ஆங்கிலம் 16-1-1802 ஆகும்."

இன்றும் அந்த சத்திரம் உத்தமி முக்தாம்பாள் நினைவாக ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியாக நிர்வகிக்கப் பட்டு வருகிறது.

இதன் பிறகு ராஜா தீர்த்த யாத்திரைக்காக சோழ மண்டலம் முழுவதும் ஒரு முறையும், ஸ்ரீரங்க யாத்திரை ஒரு முறையும், காவிரி கடலில் கலக்கும் பூம்புகாருக்கு ஒரு முறையும், பழனி மலைக்கு ஒரு முறையும், கங்கை நதியில் புனித நீராடுவதற்கு ஒரு முறையும் பயணம் செய்தார். அப்படி அவர் யாத்திரை செல்லும் வழியெல்லாம் ராஜாவுக்குத் தகுந்தபடி மரியாதைகள் செய்ய ஏற்பாடுகள் செய்து வைக்க தஞ்சை ரெசிடெண்டும் கூடவே வந்தார். கம்பெனி ஒப்பந்தப்படி ராஜாவுக்கு ஏற்ற மரியாதைகளை செல்லுமிடங்களில் எல்லாம் கம்பெனி ஏற்பாடு செய்து தரும்.

மேலும் அந்த ஒப்பந்தப்படி கம்பெனியாருக்கு யுத்தம் காரணமாகத் தேவைப்படும் போதெல்லாம் கோட்டையை உபயோகிக்க அனுமதியும் கொடுக்கப் பட்டிருந்தது. ரெசிடெண்ட்டாக இருந்த Blackburn என்பவர் ராஜா கம்பெனிக்கு உறுதுணையாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டிருப்பதாகக் கம்பெனி உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார்.

இந்த ரெசிடெண்ட் Blackburn பணிக்காலம் முடிந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்ற பிறகும் சரபோஜியிடம் அன்பு கொண்டு அவருக்குச் சில புத்தகங்க்கள், பூகோளப் படங்க்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார்.

பழனிக்கு யாத்திரை போகும் முன்னதாக ராணி அகல்யாபாயிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ராஜகுமாரபாயி என்று பெயர் வைத்தார்கள். இவர் காலத்தில் ஓர் அபூர்வமான பறவை எங்க்கிருந்தோ அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

மகாராஜாவின் மனைவி அகல்யாபாயிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பாயம்மாபாயி என்று பெயரிட்டார்கள். ராஜா எல்லா மதத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இவர் எப்போதும் சிவபூஜை செய்வார். புராண இதிகாச சரித்திர பிரவசனம் கேட்டுக் கொண்டிருப்பார். இந்த மராட்டிய மன்னர்களின் வரலாற்றை சிட்னீஸ் பாபுராயர் என்பவரைக் கொண்டு மன்னர் எழுதச் செய்தார். 1803 மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப் பட்டது.

1832 மார்ச் 8ஆம் தேதி சரபோஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மாடியிலிருந்து கிருஷ்ண விலாசம் என்கிற அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்த எல்லா மஹால்களும் சீல்வைத்து மூடப்பட்டன. அரண்மனைக்கு பலத்த காவல் போடப்பட்டது. இரவு 6 நாழிகையில் பிராயச்சித்தம் எனும் இறப்பதற்கு முன்பு செய்யப்படும் சடங்கு நடந்தது. இரவு 11 நாழிகைக்கு ராஜா உயிர் நீத்தார். காலையில் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கப் பட்டது. காலையில் படைகளின் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கோட்டைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது. வடக்கு வாசலில் அலிதர்வாசாவில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க்க அக்னி மூட்டப் பட்டது. அவருடைய அப்போதைய வயது 54 என்பதைக் குறிக்கும் வகையில் 54 குண்டுகள் முழங்கின. அவரது மகன் சிவாஜி II அவருடைய சிதைக்கு தீ மூட்ட மன்னரின் உடல் தீக்கு இறையானது. அவரைத் தொடர்ந்து சிவாஜி II பட்டத்துக்கு வந்தார்.

(நிறைவை நோக்கி வந்து விட்டோம்)

Sunday, September 25, 2011

மராத்தியர் வரலாறு - Part 20


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 20

துளஜேந்திர ராஜா தனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதால், தன் உறவில் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியை சென்னையில் இருந்த ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதிய செய்தியை முந்தைய பகுதியில் பார்த்தோம். இனி.....

தஞ்சாவூர் ராஜ்யத்தில் அரண்மனையில் துளஜா ராஜா செய்துவந்த இதுபோன்ற செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு இவரது நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இவருடைய நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களது எதிர்பார்ப்புகள் வேறு. துளஜா மிக சீக்கிரத்தில் இறந்து போவார். வாரிசு இல்லாமல் அவர் இறந்து போனதும் ராஜாங்கம் யாருக்கு என்று போட்டா போட்டி நடக்கும். அப்போது அவரவர்க்குக் கிடைத்ததைச் சுருட்டலாம் என்று காத்திருந்தார்கள் அவர்கள். அரண்மனை நிறைய இதுபோன்ற துர்புத்தி படைத்தோர் நிறையவே இருந்தார்கள்.

அவர்களுடைய குறை, முறைப்படியான, எல்லா தகுதிகளும் படைத்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதோடு, அவனை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேறு ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்கு நல்ல கல்வியைக் கற்பித்து, உத்தமமான ராஜாவாக ஆக்கிவிட்டார்களானால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கவலை அவர்களுக்கு. துளஜாவின் இயலாமை காரணமாக அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு கிடைத்ததைச் சுருட்டித் தின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சில சுய நலக்காரர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதானும் மாற்று கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்கள். பிரதாபசிம்மராஜா இருந்த போது அவருடைய ஆசை நாயகி அன்னபூரணாபாயி என்ற ஒருவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தது என்பதையும், அதில் கிருஷ்ணசாமி என்கிற ஒருவன் இறந்து போனதையும் ராமசாமி என்ற மற்றொருவன் அமரசிம்மன் என்ற பெயரில் இருந்து வந்ததையும் பார்த்தோம் அல்லவா? அவன் துளஜா ராஜாவுக்குத் தம்பி முறை ஆகிறது. . இவன் திருவிடைமருதூரில் இருந்து வந்தான். அந்த அமரசிம்மனைத் தேடிப் பிடித்தார்கள் அரண்மனையில் இருந்த தீயமனம் படைத்தோர். இவனுக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்ற போதிலும், இளைய வயதுக்காரன், மேலும் பிரதாபசிம்ம ராஜா விட்டுச் சென்றிருக்கிற ஒரு வாரிசு. இவனை முன்னிருத்தி ராஜாவாகக் கொண்டு வர வேண்டும். அதிலும் துளஜா இருக்கும் போதே அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் துளஜா ராஜா மனச்சோர்வோடு இருந்த ஒரு நாள், அமர் சிங்கை அவர் முன்பாகக் கொண்டு வந்து நிருத்தினார்கள். அந்த அமர்சிங் தான் ராஜாவுக்கு வாரிசு, தனக்குத் தம்பி முறை என்று சென்னை கவர்னருக்கு மன்னர் எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படி கடிதம் எழுதிய மறு நாள் அதாவது 1787 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ராஜா இறந்து போனார்.

மாண்டு போன ராஜாவுக்கு உத்தரகிரியைகளை அமர்சிங்கை விட்டுச் செய்யச் செய்தார்கள். ஒப்புக்காக உடன் சரபோஜியையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு தஞ்சை பேராசைக் காரர்கள் சென்னைக்குச் சென்று கவர்னரை சரிக்கட்டுவதற்காகப் போய் முகாமிட்டார்கள். அங்கு கவர்னர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் அவருடைய மனைவி லேடி ஆர்சிபால்டு கேமல் என்பவரை மெதுவாக நயிச்சியம் பேசி தன்னக் கட்டிக் கொண்டார்கள். அவர் மூலம் கவர்னரையும் சரிக்கட்டி விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. கவர்னர் இந்த விஷயம் குறித்து கல்கத்தாவில் இருந்த அவர்களது தலைமை பீடத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார்.

துளஜா ராஜா இறந்து போன செய்தி குறித்து பியர்சன் என்பவர் எழுதியிருக்கும் பகுதி இது: --

"The next morning Rajah who was rapidly sinking requested the attendance of the Resident Mr.Hudleston, Col. Stuart, the Commandar of the Garrison and Mr.Swartz. The dying prince then sent the following message to them. After stating that in compliance with the suggestion of Mr.Swartz, he has appointed Amar Singh to the Guardian of the Child and regent of the Country, till he should be capable of succeeding to the throne."

"In the course of the evening after the preceding conversation the Rajah's mother visited him and earnestly interceded on behalf of Ramasamy, afterwards called "Amar Singh". This combined with the advice of Father Swartz determined Thulaja Raja to adopt the plan proposed. He accordingly sent for his brother delivered his adopted son into his hands, desired him to be his guardian and earnestly commended him to his care and affection.

But before his death he wanted to adopt some one to succeed him and for that purpose, he chose Serfojee from a collateral branch and appointed his brother Amar Singh as Regent till the boy came of age."

இதற்கு முன்பாக அமர்சிங்கின் ஆதரவாளர்கள் தஞ்சை அரண்மனையில் இருந்த ஆங்கில அதிகாரிகளைச் சரிக்கட்டி வைத்திருந்தார்கள். ஆங்கில அதிகாரிகளும் இவர்கள் எண்ணப்படி நடந்து கொள்ள சம்மதித்திருந்தார்கள். கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், தஞ்சாவூருக்கு வந்து, சரபோஜி, அமர்சிங் இவர்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அழைத்து விசாரித்து விட்டு 12 பேர் கொண்ட ஒரு குழுவை விசாரித்தார்கள். அந்தக் குழு அமர்சிங்கின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள். அவர்கள் எந்த சாத்திரமும், ராஜ்ய சாஸ்திரமும் அறியாதவர்கள். நியாயம், தர்மம் இவற்றையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த பன்னிருவர் குழு தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆளும் உரிமை அமர்சிங்குக்குத்தான் உண்டு என்று கவர்னரிடம் ஒப்புதல் அளித்தார்கள்.

இந்த விசாரணைக்குப் பின் கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், அமர்சிங்கை அழைத்து 1787 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தஞ்சை ராஜாவாக பட்டம் கட்டி அமரவைத்தார்.

அமர்சிங்.

அமர்சிங் தஞ்சாவூர் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார். ராஜாங்க நியாயப்படி சரபோஜிதான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் செய்த சூழ்ச்சியினால் அமர்சிங் அந்தப் பதவியில் அமர்ந்தார். தான் அரசனாக ஆனதும் இந்த அமர்சிங்கினால் சிறுவன் சரபோஜிக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. துளஜா ராஜா தான் இறக்கும் தருவாயில் தனது ஸ்வீகார மகன் சரபோஜிக்கு பாதிரியார் ஸ்வார்ட்சை பாதுகாவலராக நியமித்துவிட்டிருந்தார் அல்லவா? அதனால் அவர் அடிக்கடி அரண்மனை வந்து சரபோஜியைக் கவனித்துக் கொண்டார். அப்படி அவர் அரண்மனையில் இருந்த போது கவனித்த வகையில் அங்கு சரபோஜிக்குச் சரியான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கோண்டு சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதினார்.

அந்த நிலையில் தஞ்சாவூருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னர் புதிய ரெசிடெண்ட் ஒருவரை நியமித்திருந்தார். அவர் மூலம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தின் விவரங்களை கவர்னர் இங்கிலாந்தில் இருந்த கம்பெனி டைரக்டர்களுக்குத் தெரியப் படுத்தினார். அதன் பேரில் கம்பெனியார் பிறப்பித்த உத்தரவு ஒன்று தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த உத்தரவில், சரபோஜியை அமர்சிங்குடைய தொல்லையிலிருந்து விடுவித்து, அந்தச் சிறுவனை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசம் ஒப்படைத்து அவனுக்குத் தனி அரண்மனையை ஒதுக்கி அங்கு அவனுக்குத் துணையாக சில பண்டிதர்களையும் நியமிக்க வேண்டுமென்று இருந்தது.

"The next morning he (Serfojee) for the first time, since his confinement saw the Sun." வெளி உலகைக்கூட பார்க்கமுடியாதபடி உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சரபோஜி அன்றுதான் சூரியனைப் பார்த்தான் என்று எழுதுகிறார்கள் என்றால், அப்போதிருந்த நிலைமையை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா?

"Having noticed that the house, was nearly cleaned out and Serfojee's furniture removed there. I (Resident) conducted him to it and placed a guard of 12 sepoys over him. I have ordered a proper person, recommended by Mr.Swartz, a Maratha Brahman named Dhada Rao to attend to his education." தஞ்சையின் ஸ்தானீகர் (Resident) 1789 அக்டோபர் மாதம் எழுதிய குறிப்பு இது.

கிழக்கிந்திய கம்பெனியார் சரபோஜிக்கும், அவனுடைய குடும்பத்தாருக்கும் செலவுக்கு ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். "An establishment was formed amounting to one thousand and seventy seven star pagodas monthly for Serfojee and his relatives and one thousand star pagodas each to the three widows of the deceased Rajah." இது 24-9-1790இல் எழுதப்பட்ட குறிப்பு.

அதன் பிறகு சரபோஜி வீணாக பொழுதைப் போக்காமல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜியிடம் காட்டிய அன்பும், அரவணைப்பும், பரிவும் ஒரு தந்தை மகனிடம் காட்டிய அன்பைப் போன்றது. இந்த அன்புப் பிணைப்பினால் சரபோஜி பல கலைகளையும், மொழிகளையும், பண்பாடுகளையும் கற்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது.

ஆங்கிலம் தவிர சரபோஜியின் தாய் மொழியான மராத்தியையும் படிக்க, எழுத, பேச மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் மொழியும் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. இப்படி சரபோஜி பல மொழிகளில் பாண்டித்தியம் பெறுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயனுடையதாக இருந்தது.

சென்னை கவர்னரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அமர்சிங் சரபோஜிக்குக் கொடுத்து வந்த தொல்லைகளை நிறுத்தச் செய்தார். இப்படி எத்தனை நாட்கள் சரபோஜியைத் தஞ்சையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு கொடுக்க முடியும். அவனை சென்னைக்குக் கொண்டு வந்து கல்வி பயிற்றுவித்து, வீரம் செறிந்த ஓர் மன்னனாக உருவாக்க வேண்டும் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முடிவு செய்தார். கம்பெனி அதற்கு சம்மதித்தது.

ஸ்வீகாரத் தாயாரும் துளஜாவின் மனைவியுமான சுலட்சணாபாயி காலமானதை அடுத்து அவருடைய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மற்ற இரு தாயார்களுடன் சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் துணையோடு சென்னைக்குச் சென்றனர். அங்கு இவர்கள் கவர்னரின் மாளிகைத் தோட்டத்து பங்களாவில் தங்கிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்.

சென்னையில் கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வசித்து வந்த சரபோஜிக்கு கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு Gerick (கெரிக்) என்பவரை பொறுப்பாளராக நியமித்துவிட்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்குத் திரும்பினார். சென்னையில் புதிய காப்பாளருடன் விடப்பட்ட சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தன்னுடன் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பாரோ, அதே மகிழ்ச்சியுடன் கெரிக் என்பவருடனும் பழகிக் கொண்டு வாழ்ந்தார்.

இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியார், தஞ்சை அரசுக்கு வாரிசு அமரசிம்மனா, சரபோஜியா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு பண்டிதர்களின் குழு பரிசோதித்து அமர்சிங் தான் என்று முடிவு செய்தார்களல்லவா? அந்த குழுவினர் ஆதாரமாகக் காட்டிய சாத்திர நூல்களைக் கொண்டு வாருங்கள் என்றனர் கம்பெனியார். அமர்சிங்கையும் இது குறித்து விசாரித்தார்கள். இந்த ஆவணங்களை யெல்லாம் காசியில் இருந்த மகா பண்டிதர்களுக்கு அனுப்பி அவர்களுடைய முடிவைக் கேட்டிருந்தனர் கம்பெனியார்.

"The Board resolved to call on the most learned Pandits in Bengal and Benaras for answers to the substance of the questions put to the Pandits at Tanjore that those questions were translated by the late Sir William Jones into Sanskrit and transmitted to the Pandits of bengal and Benaras whose answers had been duly received and translated for the use of the Board."

சரபோஜியையும் பாதுகாப்பு கொடுத்து அமர்சிங் தொல்லை கொடுக்க முடியாதபடிக்கு தஞ்சையில் தங்கியிருக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தனர். அவரும் அதன்படி Gerick உடன் சென்னையிலிருந்து கிளம்பி வருகின்ற வழியில் திருக்கழுக்குன்றம் சென்று அங்கு பறவை தரிசனம் (அங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது இருக்கிறது. அங்கு தினமும் கோயில் பிரசாதம் அருந்த இரு கழுகுகள் வந்து அந்த கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும். இதனை மக்கள் கூடியிருந்த தரிசனம் செய்வர்.) செய்து கொண்டு வந்தார்.

முன்பு அமர்சிங்கிடம் இருந்த பயத்தாலும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு எந்த சாஸ்திரமும் தெரியாத 12 பேர் பொய்யான சாஸ்திரங்க்களைச் சாட்சியாகக் காட்டினார்களல்லவா? அவர்களில் இறந்து போனவர்கள் போக, மீதமுள்ளவர்கள் தங்களுக்கு எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது என்றும், பொய்யாக அப்படி எழுதிக் கொடுக்கச் சொன்னபடி எழுதிக் கொடுத்தோம் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டார்கள். இந்தச் செய்தியையும் பாதிரியார் சென்னை கவர்னருக்குத் தெரியப் படுத்தினார்.

பொய்யான தகவல்களைச் சொல்லி சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்தது செல்லாது என்று அமர்சிங்கை அரச பதவியில் உட்கார வைத்த அந்த 12 மகா பண்டிதர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?

1. பாடலாச்சார்யா
2. மாதவாச்சார்யா
3. தாதா ராவ்
4. ஜனாச்சாரி
5. அப்பா சாஸ்திரி
6. ராமா சாஸ்திரி
7. சத்யநிதி ஆச்சார்யா
8. நரசிம்மாச்சாரி
9. ஜனாச்சாரி (2)
10. புஜங்க ராவ்
11. பாப்பண்ணா
12. மாதவாச்சாரின் மருமகன்

இவர்களுள் ஜனாச்சாரி சன்னியாசியாகி விட்டார். தாதா ராவை விசாரித்த போது தான் பொய் சொன்னதாக அழுது கொண்டே சொன்னார். ஜனாச்சாரி (2) தனக்கு உண்மையில் எந்த தர்ம சாஸ்திரமும் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அப்பா சாஸ்திரி தனக்கும் தர்ம சாஸ்திரம் தெரியாது, மற்றவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டதாகச் சொன்னார். இப்படி பலரும் தாங்கள் போலி ஆசாமிகள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

இந்த விவரங்களையெல்லாம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் கம்பெனி அதிகாரிகளுக்கு எழுதினார். அவர்கள் அமர்சிங்கை பதவி நீக்கம் செய்து அனுப்பி விட்டு சரபோஜியை அரசராக ஆக்கும்படி எழுதினார்கள். அதன்படி சரபோஜி 1798 ஜுன் மாதம் சரபோஜி II எனும் பெயரோடு அரச பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில கம்பெனியார் நீதி நெறி முறைகளுக்குப் புறம்பாக அரசபதவிக்கு வந்த அமர்சிங்கை நீக்கிவிட்டு சரபோஜியை அரசராக அறிவித்த செயலுக்கு தஞ்சை ராஜ்யத்து மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

(இன்னும் வரும்)

மராத்தியர் வரலாறு - Part 19


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 19

துளஜா ராஜா தனது ஆட்சி காலத்தின் தொடக்கத்திலேயே பல சிக்கல்களைச் சந்தித்தான். அவன் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளும் இறந்து போன செய்திகளையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி ....
Thulaja Raja

துளஜா ராஜாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகளை எட்டு வயது ஆகும்போது காட்டிகே ராவ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த மகளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மாருதிசாமி என்று பெயர். அதற்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாந்தம்மாள் என்று பெயரிட்டனர். சாந்தாபாயி என்று சொல்வார்கள் அந்தக் குழந்தையை. இவ்விரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டு ராஜாவின் இரண்டாவது பெண் காலமாகிவிட்டாள்.

தன் மகள் வழியில் பிறந்த இவ்விரு பேத்தி குழந்தைகளையும் ராஜா அன்போடு வளர்த்து வந்தார். அவ்விரு குழந்தைகளும், ராஜாவின் தந்தையார் பிரதாபசிம்மர் காலமான ஆண்டிலேயே இறந்து போயினர். இப்படி துளஜா ராவாவுக்கு தனக்குப் பிறந்த பிள்ளைகளும் இறந்து, மகள் வழியில் பிறந்த பேரப் பிள்ளைகளும் இறந்து தனிமைப் பட்டுப் போனார். ராஜாவின் மனம் வருத்தமடைந்தது. குடும்பத்தில் நேர்ந்த இந்த இழப்பை நினைத்து நினைத்து ராஜா ராப்பகலாம உணவு சரியாக உண்ணாமல், தூக்கம் சரியாகத் தூங்காமல் மூன்று வருஷங்கள் படுத்த படுக்கையில் கிடந்தார்.




ஆற்காடு மீண்டும் தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தஞ்சை மராத்திய மன்னர்கள் தங்களுக்கு இனி கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்று முதலில் நவாப் முகமது அலி அறிவித்திருந்த போதிலும், சில நாட்கள் கழித்துத் தங்களது நிதி நிலைமை சரியில்லாமல் போகவே, தஞ்சாவூர் ராஜ்யம் தங்களுக்குக் கப்பம் செலுத்தத்தான் வேண்டும், அதிலும் விட்டுப்போன ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டது. அதன் காரணமாக நவாபின் மகன் தலைமையில் ஒரு படையை அனுப்பித் தஞ்சையைப் பிடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் பண்ணியதையும், ஆங்கில கம்பெனியாரின் தலையீட்டின் பேரில் நவாப் படைகள் திரும்பப் போன பிறகு துளஜா ராஜா ஆட்சியைப் பெற்ற வரலாற்றையும் பார்த்தோம்.

அப்படி அவர் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற போதிலும் அவருடைய பிரச்சனைகள் தீர்ந்துவிடவில்லை. மைசூரின் ஹைதர் அலி 1781இல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் தஞ்சையை ஆட்சி செய்யும்படி ஆயிற்று. அந்த காலகட்டத்தில் தஞ்சை ராஜ்ய மக்கள் அனுபவித்தத் துன்பங்களுக்குக் குறைவில்லை. மக்களைத் துன்புறுத்தி கடுமையான வரிவசூல் நடைபெற்றது. நாட்டில் பஞ்சம் ஒரு புறம். விளைச்சல் மிகவும் குறைந்து போனது. 1780இல் விளைந்த நெல்லின் அளவைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக விளைச்சல் இருந்தது. மைசூர் படையெடுப்பின் காரணமாக தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல பகுதிகளில் விளை நிலங்கள் பயிரிடப்படாமல் போயிற்று. நீர் நிலைகளும் சேதப்பட்டிருந்தன. ஆகையால் நீர் வரத்தும் இல்லை. மக்களில் பெரும் பகுதியினர் பிழைப்பு நாடி வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. . தஞ்சாவூர் ராஜ்யத்தின் ஊர்களையெல்லாம் ஹைதரின் படைகள் சூழ்ந்து கொண்டன. அந்த காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் ஒரு கொடிய பஞ்சம் தோன்றியது. மக்களுக்கு உண்ண உணவில்லாமல், நாளொன்றில் அறுனூறு எழுனூறு பேர் இறக்கலாயினர். கொடுமைகளில் எல்லாம் கொடுமை சிலவிடங்களில் நரமாமிசம் சாப்பிட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்த கோளாறுகளை யடுத்து 1782இல் திப்பு சுல்தானும் தன் பங்குக்குத் தஞ்சை மீது படையெடுத்து வந்தார். பிரெஞ்சுக்காரர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். இவர்கள் இணைந்து ஆங்கில கம்பெனியாரின் படையைத் தோல்வியுறச் செய்து மாயூரம், சீர்காழி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளை யடித்தார். இந்தத் தொல்லைகளுக்கு விடிவு காண்பதற்காக துளஜா ராஜா ஆங்கிலக் கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தஞ்சை அரண்மனையில் ஆங்கிலேயர் படையை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். மராட்டிய மன்னர் ஆங்கிலப் படைகளை நம்பி வாழ வேன்டிய ஒரு சூழ் நிலையும் உருவாயிற்று.


"On the 20th July 1780 Hyder Ali with a formidable army descended into the Carnatic Payenghat through the Chengamma Pass. Slowly extending his depradations, he crossed Coleroon river in May 1781 and entered Tanjore Kingdom. He over ran the entire country. Closely following this devastation famine broke out in the Tanjore country. Many thousands have died of want."

தஞ்சை ராஜ்யத்தில் பஞ்சமும், ஹைதர் அலியின் படையெடுப்பும், இங்கிருந்த சூழ்நிலைகளின் காரணமாக முடிவுக்கு வந்தது. துளஜா ராஜாவுக்குத் தான் இனி நிரம்ப நாட்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது புரிந்து விட்டது. தனக்குப் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ பிறந்தும் தங்கவில்லை. தன் உயிரும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தனக்கு இறந்த பிறகு கொள்ளியிடவோ, ராஜ்யத்தைக் ஆட்சி புரியவோ வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்ற தவிப்பு ஏற்பட்டது.


துளஜா தனது தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தார். தந்தை பிரதாபசிம்மர் ஒரு ராஜரிஷி போல வாழ்ந்தார். புகழையும், வெற்றியையும், பெருமையும் அடைந்திருந்தார். எண்ணற்ற உறவினர்களை யெல்லாம் அனுசரித்துக் கொண்டு ஆதரித்து வந்தார். மாலையானால் பறவைகள் மரங்களை நாடி வருவது போல எங்கெங்கிருந்தெல்லாமோ உறவினர்கள் ராஜாவை நாடி வந்து சேர்ந்தனர்.

இவ்வளவு பெருமை அவருக்கு இருந்த போதும், அவர் பற்றிய ஒரு நெருடல் மட்டும் துளஜாவுக்கு இருந்து வந்தது. அதாவது பிரதாப சிம்மருடைய தந்தையாரான துக்கோஜி திருமணம் செய்து கொள்ளாமல் வைத்துக் கொண்டிருந்த மனைவிக்குப் பிறந்தவர் இவர் என்பதுதான் அது. அப்படியொரு அவப் பெயர் தனக்கு ஏற்படும்படியாகத் தான் நடந்து கொள்ளவில்லை என்பதில் துளஜாவுக்கு திருப்தி. தனக்கு வாரிசு சட்டப்படியும் இல்லை. உரிமையில்லாத வகையிலும் இல்லை. ஆகையால் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைய குலத்தில், மராட்டியத்தில் இருக்கும் தனது தாயாதியர், உறவினர்களின் வகையில் நல்ல அழகும், நற்குணங்களும், ராஜ வம்சத்துக்கு ஏற்ற லட்சணங்கள் உள்ள ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அதற்கு ஜாதக கர்மாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

(ஜாதக கர்மா என்றால், பிள்ளை பிறந்தவுடன் தந்தை வடக்கு திசை நோக்கிச் சென்று ஸ்நானம் செய்து, எள், நெல், பொன், வஸ்திரங்கள், பசு, நிலம் இவைகளையோ, அல்லது இவற்றில் சிலவற்றையோ தானமாகக் கொடுத்து, சுப கிரகத்தின் நேரம் அமைந்ததும், தன் சொந்த பந்தங்களோடு, ஸ்வீகாரம் எடுக்கப் போகும் பிள்ளையின் முகத்தைப் பார்த்தல், பிறகு ஒரு சுப நட்சத்திரம், சுப நாள், சுப ராசி பார்த்து ஜாதகர்மா செய்து கொள்வது.)

மராத்தியர்களின் பூமியான புனா, சதாரா முதலான பகுதிகளுக்குத் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ராஜாவுக்குத் தகுந்த வாரிசு அங்கு ராஜ வம்சத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வரப் பணித்தார்கள். அப்படி சதாரா பகுதிக்குப் போன தூதர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது. அந்த பிள்ளையை ராஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று. அந்தப் பிள்ளைக்கு "சரபோஜி" என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. யார் இந்த 'சரபோஜி'?

சத்ரபதி சிவாஜி, தஞ்சை மராட்டிய வம்சத்தில் முதல் ராஜாவாக இருந்த ஏகோஜி ஆகியவர்களின் தந்தை ஷாஜி. அவருடைய மனைவி ஜீஜா பாயிக்குப் பிறந்தவர் சத்ரபதி சிவாஜி. மற்றொரு மனைவிக்குப் பிறந்தவர்கள் ஏகோஜி, விட்டோஜி ஆகியோர். இந்த விட்டோஜி சதாராவிலும், புனாவிலும் ஆட்சி புரிந்தார்.

இந்த விட்டோஜிக்கு எட்டு பிள்ளைகள். அவர்கள் சம்பாஜி, கெலோஜி, மாளோஜி, பரகோஜி, நாகோஜி, மம்பாஜி, கக்காஜி, திரயம்பகராஜா ஆகியோர். இந்த எட்டாவது பிள்ளையான திரயம்பகராஜாவுக்கு கெங்காஜி என்று ஒரு மகன் இருந்தான். கெங்காஜிக்கு பூவாஜி, தாபூஜி என்று இரண்டு மகங்கள். பூவாஜிக்கு கெங்காஜி என்று மகன். கெங்காஜிக்கு சுபான்ஜி என்றொரு பிள்ளை. சுபான்ஜிக்கு பூவாஜி, ஷாஜி என்று இரு பிள்ளைகள். இவ்விருவரில் ஷாஜி என்பவரின் பிள்ளைதான் இப்போது துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளும் பிள்ளை சரபோஜி. என்ன குழப்புகிறதா? சரி. இந்த குடும்ப மரத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு குழப்பம் தீரலாம்.

                                  ஷாஜி ராஜா
-------------------------------------------------------------
ஜீஜாபாய்
         |                                                      துக்காபாயி
சத்ரபதி சிவாஜி
                                                 ஏகோஜி விட்டோஜி
                                                                |
                                                திரயம்பகராஜா (8வது)
                                                                |
                                                  கெங்காஜி
                                                                |
                                    தாபூஜி-------------- பூவாஜி
                                                                              |
                                                                     கெங்காஜி
                                                                              |
                                                                      சுபான்ஜி
                                                                              |
                                                          பூவாஜி ஷாஜி
                                                                              |
                                                                      சரபோஜி

இப்படி போன்ஸ்லே வம்சத்தில் ஏகோஜியின் வாரிசுகளின் வழியில் பிறந்த குழந்தை ஒன்று துளஜாவுக்கு ஸ்வீகாரப் புதல்வனாக அமைந்தது அவருக்கு மனத் திருப்தியை அளித்தது. அந்த குழந்தையை முறைப்படி சாஸ்திரோக்தமாக, சம்பிரதாயங்களை அனுசரித்து "நெளபத்" அடித்துக் கொண்டு அழைத்து வந்தனர். 'நேளபத்' அப்படியென்றால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சகலவிதமான வாத்திய கோஷ்டிகள் முழங்க ஊர்வலமாக வருவது என்று பொருள்.

Noubet: Cerimonial music, the right to use which was specially granted by the Government.

குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் வழி நெடுக மக்களுக்குச் சர்க்கரை இனிப்பு வழங்குவர். உறவினர்கள் அனைவரும் ஊர்வலமாக உடன் வர, எல்லா சடங்க்குளையும் செய்து குழந்தையை மகனாக ஸ்வீகாரம் ஏற்றுக் கொண்டார்கள். 1787 ஜனவரி 22ஆம் நாள் துளஜா ராஜா சரபோஜியைத் தனது ஸ்வீகார மகனாக ஏற்றுக் கொண்டார்.

அது சரி, இந்த ஸ்வீகார நிகழ்ச்சி பற்றி எதற்கு இத்தனை build up என்றுதானே நினைக்கிறீர்கள். புரிகிறது. இந்த சரபோஜிதான் தஞ்சை மராத்திய மன்னர்களில் கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சிகள், இசைக் கலைஞர்களை ஆதரித்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட முதன்மையான ராஜாவாகத் திகழப் போகிறார். அதனால்தான். பிரதாபசிம்மர் போர்க்களத்திலும், வீரத்திலும் சிறந்து வின்றார் என்றால் சரபோஜி மேற்சொன்ன கலை, இலக்கியஸ் சமாச்சாரங்களில் சிறந்தவராக இருந்தார் என்பதால்தான் இத்தனை செய்திகள்.

சாஸ்திர முறைப்படி துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட போதும், அரசியல் ரீதியாக ஆங்க்கில கிழக்கிந்திய கம்பெனியார், சென்னை கவர்னரின் உத்தரவுப்படி அதனை அங்கீகரிக்க வேண்டும். ஆகையால் துளஜா ராஜா, ஜான் ஹடுல்ஸ்டன், சேனைத் தலைவர்கள், கர்னல் இப்ஸ்லி, கமாண்டர் இஷ்டோட், கிறிஸ்தவ மத போதகரான பாதிரியார் ஸ்வார்ட்ஸ் ஆகியோரிடமும் தனது தத்து பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஹடுல்ஸ்டன் என்பவர் தஞ்சாவூரில் ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக Resident எனும் பதவியில் இருந்தவர்.

துளஜா தனது தத்துக் குழந்தையான சரபோஜியை அந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கையில் ஒப்படைத்து, இனி அவனை வைத்துத்தான் ராஜ்ய பாரம் நடத்த வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாலைந்து நாட்களில் வசந்த பஞ்சமி தினத்தில் ஒரு சிறந்த முஹூர்த்த நேரத்தில் பிரதாப ராமசாமி மகால் (மால்) எனும் சபையில் தர்பார் நடத்தி, நாட்டியம் உட்பட கலா நிகழ்ச்சிகள் நடத்தி அரசாங்க சிம்மாசனத்தில் குழந்தை சரபோஜியை உட்கார வைத்து அவையோர் அனைவரும் அவனை ஆசீர்வதித்தனர். அந்தக் குழந்தைக்கு ராஜாவுக்கு உண்டான மரியாதைகள் செய்த பின்னர் துளஜா மனது அமைதி அடைந்தார். சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம்:--

Letter dated January 26, 1787 to Sir Archibald Campbell, Governor of Madras as translated by Maratha Interpreter.

"It has been my wish for two or three years past to adopt a son; but as I have had no opportunity of carrying it into execution, it has hitherto been delayed. Having now resolved to choose one out of my near relations, I have fixed upon the son of Shahajee (the son of Soubajee Rajah, my near cousin by lineal descent) who is ten years old and proper in all respects. Accordingly on the 2nd of Rubbi Sanni (22nd Jan.) in consequence of my wishes, I adopted and named him Serbojee Rajah with all the forms of our religion; this has afforded great relief to my mind. As your Excellency is my friend and favourer, I have written a letter to give you this pleasing information. I am firmly convinced that whatever favour and protection I have received from the Hon'ble Company and from your Excellency will hereafter be continued to my child Serbojee without deviation."

இப்படியொரு கடிதத்தை துளஜா ராஜா சென்னை கவர்னருக்கு அனுப்பினார்.

(இன்னும் தொடரும்)

மராத்தியர் வரலாறு - Part 18


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 18

மராத்திய போன்ஸ்லே வம்சத்தாரின் ஆளுகை தஞ்சாவூரில் அதுவரை சுமார் நூறு ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது. இது வரை மராத்திய மன்னர்கள் ஆளுகையில் மற்றவர்கள் எப்படியிருந்த போதிலும், மன்னருடைய பாதுகாப்பு படை வீரர்கள் மாவீரர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படைகள் மட்டும் யுத்த களத்துக்கு அனுப்பப் பட்டிருந்தால் எத்தனை பெரிய சேனையையும் இவர்கள் துவம்சம் செய்திருப்பார்கள். அப்படியிருந்தும் தஞ்சாவூர் கோட்டை மராட்டியர் கையிலிருந்து நவாபின் கைக்குப் போக காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு ஒரு காரணத்தை மக்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட குற்றம்தான் என்ன? பார்ப்போம்.

துளஜா ராஜா தஞ்சாவூர் ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்ட நாள் முதலாக பெரிய அளவில் தான தர்மங்கள் எல்லாமும் செய்து வந்தார். வேத விற்பன்னர்களுக்கு சர்வ மான்னியங்கள் அளித்து, குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, கோயில்கள், கிறிஸ்து தேவாலயம், மசூதிகள் இவைகளை அவரவர் விரும்பியபடி கட்டிக் கொடுத்தும் வந்திருக்கிறார். அப்படிப்பட்டவைகளுக்கு நிரந்தரமான மான்யங்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

துளஜா நல்ல அறிவாளி. நன்றாகக் கல்வி கற்றவர். நல்ல தோற்றமும் உடையவர். மகா வீரன். இப்படியிருந்தும் இவருக்கு அமைந்த மந்திரிகள் துர்மந்திரிகளாகப் போய்விட்டனர். இதனால் ராஜாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல தவறான தீய காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

இப்படிப்பட்ட தீய கும்பலில் லிங்கோஜி போன்ஸ்லே என்று ஒருவன். இவனை தஞ்சை வட்டாரத்தில் 'கிளிப்பிள்ளை அண்ணா' என்று குறிப்பிடுவார்கள். இவனுக்கு ராஜ்ய நிர்வாக அறிவோ, விஷயங்களை நன்கு கிரகித்துக் கொள்ளும் சாமர்த்தியமோ கிடையாது. சதாராவிலிருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக இவனை ராஜா தன் மந்திரியாக வைத்துக் கொண்டிருந்தார். ராஜாவைச் சுற்றியிருந்த துர்மந்திரிகளில் இவந்தான் தலைமையானவன்.

கோனேரி ராவ் என்றொரு ஆரணி பிராமணன். இவன் ராஜாவிடம் ஜமேதாராகப் பணி புரிந்து வந்தார். ஏதோ அரசாங்க காரியமாக அரண்மனைக்கு வந்த கோனேரி ராவ் இந்த லிங்கோஜியிடம் வாதம் புரிய நேரிட்டது. அப்போது லிங்கோஜியின் ஆட்கள் சிலர் அவனோடு இருந்தனர். அவர்களில் ஒருவன் கோனேரி ராவை அவமரியாதையாகப் பேசினான். இதைக் கேட்டு கோபங்கொண்ட கோனேரி ராவ் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவனோடு சண்டை செய்யப் போனார். அப்போது லிங்கோஜியும் அவனோடு இருந்த மற்றவர்களும் ஒன்று சேர்ந்து கோனேரி ராவைக் காயப்படுத்தி வீழ்த்தி விட்டார்கள். கடுமையான காயத்துடன் கோனேரி ராவ் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தான்.

அங்கு அவன் கிடந்த நிலையை யார் பார்த்தாலும் லிங்கோஜியும் அவனது நண்பர்களும் வேண்டுமென்றே தவறு செய்திருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். அந்த குற்ற உணர்வும் லிங்கோஜிக்கு இருந்தது. இந்த செய்தி மன்னனுக்கு எட்டியவுடன் அவர் உடனே அந்த மனிதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்திருந்தால் பிழைத்திருப்பான். ஆனால் லிங்கோஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் உள்ளே சென்று ராஜாவிடம் கோனேரி ராவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கோள் மூட்டிவிட்டு, அவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அரண்மனை சேவகர்கள் அவரைத் தாக்கிவிட்டார்கள் என்று பொய் சொன்னான். ராஜாவும் தன் மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற கவலையில் இருந்ததால், அந்த கோனேரி ராவை கால்களைப் பிரியால் கட்டி இழுத்துக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே போட்டுவிடும்படி உத்தரவு இட்டார். அதன்படியே கடைநிலை ஊழியன் ஒருவன் அவர் கால்களைக் கட்டித் தெருவோடு இழுத்துச் சென்றான். போகும் வழியில் பாதியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. இது மிகவும் கொடூரம், இதனால் இந்த நாட்டுக்கு ஏதோ கேடு வரத்தான் போகிறது என்று மக்கள் பேசினார்கள்.இந்த சோக நிகழ்ச்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தனர். இப்படி ஒருவனை அநியாயமாகக் கொலை செய்த பாவம் தான் இப்போது ராஜா பதவியை இழந்து தவிக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

தஞ்சாவூர் ராஜ்யத்தை தங்களுக்கு கப்பப் பணம் வரவேண்டுமென்பதற்காக ஆற்காடு நவாப் பிடித்துக் கொண்டு ஆக்கிரமித்திருக்கும் செய்தியை ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்த Court of Directors க்கு தகவல் அனுப்பினார்கள். எப்போதும் சென்னையிலிருந்து ஆங்கில அதிகாரிகள் கம்பெனி மேல் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் ஆற்காட்டு நவாப் பற்றிய செய்திகளை எழுதுவார்கள். ஏனென்றால் தென் இந்தியா முழுவதிலும் உள்ள பாளையக்காரர்களிடமிருந்தெல்லாம் கப்பத் தொகையை வாங்கும் அதிகாரத்தை கம்பெனிக்கு ஆற்காட்டு நவாப்தான் கொடுத்திருந்தார். அப்படி நவாப் முகமது அலிகானுடைய விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆங்கில கம்பெனியார், இதுவரை தஞ்சாவூர் ராஜாவால் இந்த ஆற்கட்டு நவாப் நன்மைகளைத்தானே அடைந்து வந்திருக்கிறான். அப்படியிருக்க கப்பப் பணம் செலுத்தவில்லை என்பதைக் கூறி தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீது தன் மகன் தலைமையில் படை அனுப்பி சண்டையிட்டு அவர்களிடம் கப்பப் பணமும், யுத்த செலவுகளையும் வாங்கிக் கொண்ட பிறகும், நவாப் நியாயமில்லாமல் தஞ்சாவூர் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டது மிகவும் அநியாயம். தஞ்சாவூர் ராஜா நெடுங்காலமாக செய்து வந்த உதவிகளையெல்லாம் மறந்துவிட்டு, நன்றிகெட்டத் தனமாக நவாப் நடந்து கொண்டதால், ஆங்கிலேய கம்பெனியார் லார்டு பிக்கெட் (Lord Pigot) என்பவரைச் சென்னைக்கு கவர்னராக நியமனம் செய்து அவரைப் போய் தஞ்சாவூர் ராஜ்யத்தை மீட்டு மராட்டிய ராஜாவிடமே ஒப்படைத்துவிட்டு வரும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்கள்.

கம்பெனியாரின் உத்தரவுப்படி சென்னை வந்த லார்டு பிக்கெட் தஞ்சாவூருக்கு வந்து நவாபிடமிருந்து ராஜ்யாதிகாரத்தை மராத்திய ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்து கம்பெனிக்கும் தகவல் அனுப்பி வைத்தார். இதெல்லாம் நடந்தது ஏப்ரல் 1776இல்.

துளஜா ராஜாவுக்கு இந்த ஏற்பட்டினால் மிகுந்த சந்தோஷம். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருடைய கருணையினால், நீதி, நேர்மை இவற்றல் தனக்கு ராஜ்யத்தை மீண்டும் அடைந்ததற்காக ஆங்கில அதிகாரிகளிடம் தஞ்சை கோட்டையின் கிலேதார் Foujdar ஆகிய சேனாதிபதி பதவிகளை ஒப்படைத்தார். அந்த அதிகாரிகளின் ஆங்கில படைகளுக்கான செலவுக்கு என்று பல நிவந்தங்களையும் ராஜா செய்து வைத்தார். இது தவிர ஆங்கிலேயர்களுக்கு லட்சம் பொற்காசுகளும், நாகூர் பிரதேசத்திலுள்ள 277 கிராமங்களையும் இனாமாகக் கொடுத்தார்.

தானமாகத் தரப்பட்ட கிராமங்களின் விவரம்:--
கீவளூர் பிரதேசம் ... 41 கிராமங்கள்
சிக்கல் ... ... 62 கிராமங்கள்
செம்பியன்மாதேவி ... 34 கிராமங்கள்
பாலக்குறிச்சி ... 27 கிராமங்கள்
மாகிளி ... 27 கிராமங்கள்
கிள்ளுக்குடி ... 25 கிராமங்கள்
தேவூர் ... 31 கிராமங்கள்
அடியக்கமங்கலம் ... 8 கிராமங்கள்
நாகூர் துறைமுகம் ... 1 கிராமம்
வலிவலம் ... 21 கிராமங்கள் ஆக மொத்தம் 277

இப்படியொரு ஒப்பந்தம் ஆன பின்பும் ஆற்காடு நவாபு தஞ்சாவூர் ராஜாவிடமிருந்து தனக்குக் கப்பம் வரவேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டான். அதற்கு ராஜா நவாபு அநியாயமாகத் தஞ்சாவூர் கோட்டையைப் பிடித்துக் கொண்டு காலங்காலமாகச் சேர்த்து வைத்திருந்த நகைகளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போய்விட்டதைக் கணக்குப் பார்த்தால் கப்பத் தொகையைப் போல இரண்டு மடங்கு கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று தெரிவித்தான். இப்போதுள்ள ராஜ்யம் ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்த ராஜ்யம், ஆற்காட்டு நவாபுக்கு எந்த விதத்தில் நமக்குத் தொடர்பு கிடையாது, ஆகவே கப்பம் கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசாமல் இருந்து விட்டான்.

முன்பு கோனேரி ராவ் என்பவருக்கு நாம் இழைத்த கொடுமையினால்தான் தமக்கு இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்துவிட்டன. நாட்டை இழந்து செல்வம் இழந்து தவித்த போது வெள்ளைக்காரன் தயவில் மீண்டும் அவற்றைப் பெற்றோம். லிங்கோஜி போன்ஸ்லே போன்ற துர்மந்திரிகளின் கெடு மதியால் நான் இழைத்த தீங்கிற்காக வருந்தும்படியாகிவிட்டது. பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இனி இப்படிப்பட்ட துன்மார்க்கர்களை அண்ட விடக்கூடாது. உத்தமமான மனிதர்களைத்தான் தனக்கு அமைச்சர்களாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள்தான் துரோகம் செய்ய மாட்டார்கள். கொடும் செயல்களைச் (அகாத கிருத்தியம்) செய்யப் பயப்படுவார்கள் என்று நிச்சயித்துக் கொண்டான்.

துளஜாவின் மூன்றாவது மனைவி மோகனாபாயிக்குக் குழந்தை வரம் வேண்டி நீடாமங்கலத்தில் ஒரு ராமர் கோயிலும், புஷ்கரணியும் வெட்டி வைத்தார். அதன் பலனாய் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு மோகனாபாயி தானும் இறந்து போனாள். தனக்கு ஆண் குழந்தை இல்லாமையால் ராஜா சுலக்ஷணாபாயி, மோகனாபாயி இருவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். மோகனாபாயிக்கு ஒரு மகன் பிறந்து பத்தே நாட்களில் இறந்து போயிற்று. அதன் பின்பு ஒரு பிள்ளை பிறந்தது. அதுவும் ஆறு வயதில் வைசூரி போட்டி இறந்தது.

(இனி அடுத்த பகுதியில்)



Saturday, September 24, 2011

மராத்தியர் வரலாறு - Part 17


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 17

தஞ்சை ராஜ்யத்தை நீண்ட நாட்கள் ஆண்ட மன்னர் எனும் பெருமைக்குரியவரும், பல வீரதீர போராட்டங்களில் வெற்றி பெற்று தஞ்சையை தலை நிமிர வைத்தவருமான பிரதாபசிம்ம ராஜா தனது முதிர்ந்த வயதில் காலமான செய்தியையும், அவருடைய மகன் துளஜேந்திர ராஜா பட்டத்துக்கு வந்ததையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி துளஜா ராஜா பற்றி பார்க்கலாம்.

துளஜா பதவியேற்ற நாலைந்து வருஷங்கள் பிரதாபசிம்மரைப் போலவே திறமையாகவும், நல்ல பெயரோடும் குறை சொல்ல முடியாத அளவில் ஆட்சி புரிந்து வந்தார். ஆற்காட்டு நவாப் முகமது அலிகானிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தார். மதுரை முமதீன் (கும்மந்தான்) மகமது யூசுப்கான், மைசூரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஹைதர் அலி ஆகியோரிடமும் நல்ல தொடர்பும், நல்ல பெயரும் வாங்கியிருந்தான்.

அப்போது மைசூர் ராஜா பரம்பரையினர் மைசூர் அரண்மனையில் இருக்க வைத்துவிட்டு, ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து கொண்டு ராஜ்ய பாரம் செலுத்தி வந்தார். ஹைதர் அலி பதவிக்கு வந்த பிறகு பல இடங்களின் மீது படையெடுத்து மகத்தான் வெற்றிகளையும் பெற்றிருந்தார். அது போலவே ஹைதர் ஆற்காட்டு நவாபின் மீது படையெடுத்து வந்தார். அங்கிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீதும் கண் வைத்துக் கொண்டு இந்தப் பக்கமும் வரத் தொடங்கினார். அப்படி வந்த அவரது படைகள் திருமுல்லைவாடி எனுமிடத்தில் தங்கிக் கொண்டு துளஜாவுக்கு செய்தி சொல்லி அனுப்பினார். தஞ்சை ராஜாவிடம் ஹைதர் நான்கு லட்சம் வராகன் பணமும், நான்கு யானைகளையும் வாங்கிக் கொண்டு யுத்தம் செய்யாமல் திரும்பப் போய்விட்டார்.

"Tanjore did not escape the depradations of Haidar and in 1769 he made plundering raid into the country. The Raja got terrified and in order to save his people's lives, he finished the affair with Haidar by paying a trifle, i.e. 4 lakhs of Rupees and four elephants."

தஞ்சை ராஜ்யத்தில் துளஜேந்திர ராஜாவிடம் உசேன்கான் சூர் என்பவர் 'காறுபாறு' எனும் பதவியில் இருந்தார். இவர் ஆற்காடு நவாபுக்குச் சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயர் மூலம் செலுத்தாமல் தானே நேரடியாகக் கொண்டு போய் செலுத்தினார். இவர்களுக்குள் இருந்த ஒப்பந்தப்படி பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயரிடம் கொடுத்து, அவர்கள்தான் நவாபுக்குக் கொடுப்பார்கள். இந்த உசேன்கான் சூர் இப்படிச் செய்ததால் நாட்டுக்கு ஆபத்து வரவிருந்தது. நாகப்பட்டினத்தில் கப்பலில் வந்து இறங்கிய யானையொன்று தஞ்சாவூருக்கு வரவேண்டியது, அதனை சிவகங்கை ராஜ்யத்தின் ராஜா தனக்கு என்று அந்த யானையைக் கொண்டு போய்விட்டார். அந்த யானை தஞ்சாவூருக்கு என்று தெரிந்தும் சிவகங்கை ராஜா கொடுக்காததால் கோபமடைந்த தஞ்சாவூர் ராஜா சிவகங்கை மீது படையெடுத்துச் சென்றார்.

அங்கு நடந்த போரில் அவர்களுடைய கோட்டையை இடித்து உட்புகுந்து வெற்றி பெரும் நேரத்தில் துளஜாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவனைத் தோற்கடித்து கோட்டையை இடிப்பதால் நமக்கு என்ன லாபம். நம் யானையை மீட்டுக் கொண்டு, படையெடுத்து வந்த செலவையும் நஷ்ட ஈடாக மேலும் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணம் கொண்டார். அந்த எண்ணத்தை அவர்களிடம் சொல்லவும், அவர்களிடமிருந்து, தான் பிடித்துக் கொண்ட பகுதிகளைத் தாங்களே வைத்துக் கொண்டு, போருக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் வராகன் பணமும் முப்பதாயிரம் பெருமானமுள்ள நகைகளும், இரண்டு பெரிய யானைகளையும், இரண்டு பீரங்கிகளையும் பெற்றுக் கொண்டு வெற்றியோடு தஞ்சாவூருக்குத் திரும்பி வந்தார்.

"The regent of Ramnad came to terms according to which the Tanjore Raja was allowed to remain in possession of the tracts conquered by him and to receive one lakh of rupees in specie and thirty thousand rupees in jewels, two large elephants and two pieces of Cannon."

ஊர் திரும்பிய துளஜா ராஜா தனது இரண்டாவது மனைவியாகிய ராஜகுமாரிபாயியின் மகளை காட்டிகே ராவ் என்பவனுக்கு மிக விமரிசையாக செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.

இப்படி தஞ்சாவூர் ராஜா செலவுகளை அதிகரித்துக் கொண்டு போன காரணத்தால் இரண்டு வருஷங்களாக ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் கொடுக்கப்படாமல் நிலுவையில் தங்கிவிட்டது. இந்த செய்தி அறிந்த ஆற்காடு நவாபு முகமது அலிகான் துளஜாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. வடக்கே இருக்கும் அவனது உறவினர்களும் நல்ல செல்வாக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். துளஜாவும் தன் தகப்பனைப் போலவே நல்ல வீரனாகவும் இருக்கிறான். ஆகவே இவன் கூடிய விரைவில் மிக செல்வாக்கு உள்ள அரசனாக ஆகிவிடுவான். அப்படி அவன் செல்வாக்குப் பெறுவது நமக்கு ஆபத்தாகக்கூட முடியலாம். ஆகையால் அவனை இதற்கு மேல் வளர விடாமல் தடுக்க ஒரு உபாயம் தேடினான்.

அவன் இதுவரை கொடுக்காமல் இருக்கும் கப்பப் பணத்தை உடனடியாகக் கொடுக்கச் சொல்லி கேட்டு, அப்படி அவன் கொடுக்க முடியாமல் போனால், தஞ்சாவூரை நமது படைகளைக் கொண்டு ஆக்கிரமித்து அவனை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்று திட்டமிட்டான். அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு தூதனை தஞ்சாவூருக்கு அனுப்பித் தங்களுக்கு சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும், இல்லையேல் தங்கள் படையோடு வந்து தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வோம் என்று நவாபு சொல்லி அனுப்பினார்.

அப்போது துளஜாவுக்கு அமைந்து மராத்தியப் பிரதேசத்து துர்மந்திரிகள் ராஜாவின் மனதைக் கெடுத்து ஆற்காட்டு நவாபு கேட்கிறபடி பேஷ்கஷ் பணத்தைக் கொடுக்கக்கூடாது என்று உபதேசம் பண்ணினார்கள். நாம், பிரதாபசிம்ம ராஜா காலத்தில் பதவி இழந்து ஒளிந்து மறைந்து வாழ்ந்த நவாபுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்ததோடு, அவரது எதிரியான சந்தா சாஹேபையும் பிடித்துக் கொடுத்த நன்றியை மறந்து இப்போது அவர்கள் நம்மிடம் பேஷ்கஷ் கேட்பது சரியில்லை. ஆகையால் கொடுக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள்.

இந்த பதிலினால் ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் முகமது அலிகான் எப்படியும் தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வது என்ற வெறியில், துளஜாவின் தந்தை பிரதாபசிம்மர் செய்த உதவிகளையும் மறந்து தனது மகனான உம்தத் உல் உமரா என்பவனின் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ள அனுப்பினான்.

இந்தப் படை தஞ்சாவூர் கோட்டையை முற்றுகையிட்டு யுத்தம் செய்தது. அந்த நிலையிலும் துளஜாவுக்கு அமைந்த துர்மந்திரிகள் ஆற்காட்டு நவாபின் படைகளோடு யுத்தம் செய்வதுதான் சரி என்று யுத்தம் செய்யத் தூண்டினார்கள். அப்போது ராஜாவின் அழிவுக்கு இந்த துர்மந்திரிகள் வழிவகுக்கிறார்கள் என்பதை அறிந்த ராஜ சபையில் இருந்த ஊர்ப்பெரியவர்கள் மன்னனிடம் சென்று நவாபுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து சமாதானமாகப் போய்விடுவதுதான் சரி, அனாவசியமாக சண்டை நடந்தால் பல உயிர்கள் போய்விடும் என்று சொல்லி எச்சரித்தார்கள். இந்த யோசனையை மன்னன் ஏற்றுக் கொண்டு, ஆற்கட்டு படை செலவுக்காக எட்டு லக்ஷ வராகனும் அது தவிர பல லக்ஷம் பெருமான நகைகளும் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான். இவை போக இன்னும் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்துக்காக ராஜ்யத்தின் மாயூரம், கும்பகோனம் போன்ற பகுதிகளை அவர்களுக்கு உரிமைச் சாசனம் பண்ணிக் கொடுத்து விட்டார்.

இப்படி துளஜா ராஜாவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட உம்தத் உல் உமரா தஞ்சைக் கோட்டையைச் சுற்றிக் கொண்டு மேற்குப் புறமாகப் போய் வல்லத்துக் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தபடி திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலிருந்த கோயிலடி, இளங்காடு சீமையை தம்முடைய சுவாதீனத்தில் எடுத்துக் கொண்டு, திருச்சினாப்பள்ளிக் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

"By the first settlement dated 20th of October 1771, Tulajaaji agreed to pay eight lakhs of rupees as arrears of tribute ... By the second settlement dated 25th Oct. 1771 the Rajah assigned the district of Mayuram and part of the district of Kumbakonam yielding an annual revenue of sixteen and a quarter lakhs of rupees for two years in lieu of the payment of 32-1/2 lakhs of rupees estimated as war indemnity."

"As the possession of the Fort of Vallam, the key of Tanjore was of utmost importance to the Wallajah interests, the Nawab directed his son Umdut Ul Umara who settled the terms, to obtain possession of it. A fresh negotiation ensured and Umdat Ul Umara forced the helpless Rajah to restore not only Vallam but also Koyilady and Elangadu to the Nawab."

பிறகு துளஜா ராஜா யஷ்வந்த் ராவ் என்பவரை சென்னைக்கு அனுப்பி, நவாபைச் சந்தித்துச் சமாதானம் பேசும்படி அனுப்பி வைத்தார். அப்போது நவாப் சமாதானம் பேசும் மன நிலையில் இல்லாததால், அவரோடு பேசாமல், அவருக்கு ஒரு குதிரையையும், சில வஸ்திரங்களையும் கொடுத்து, துளஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார்.

துளஜா நவாபுக்கு ஏராளமாகப் பணத்தையும் கொடுத்து, ராஜ்யத்தின் சில பகுதிகளையும் எழுதிக் கொடுத்து விட்டதால் ராஜ்யத்தில் பணத் தட்டுப்பாடு வந்தது. அந்த நேரம் பார்த்து நவாபு தனது படைத் தளபதிகளை அழைத்து, அவர்களுடன் தனது படையொன்றையும் அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்தார். அப்போது வடக்கே யிருந்து மாதவ ராவ் சதாசிவ் என்பவனும் அங்கு வந்திருந்தான். அவனையும் தன் இரண்டாவது மகனான அமீருல் உமரா   என்பவனுடன் தஞ்சைக்கு அனுப்பினான்.

நவாபின் அந்தப் படை தஞ்சாவூருக்கு வந்து சண்டை செய்து கோட்டைக்குள் புகுந்து ராஜ்யத்தையும் அபகரித்துக் கொண்டது. டபீர் நாரோ பண்டிதர் என்ற அமைச்சரை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள நியமித்துவிட்டு சிலகாலம் கும்பகோணத்தில் தங்கியிருந்துவிட்டு, பிறகு சென்னைக்குத் திரும்பினர். இந்த வகையில் துளஜா கையிலிருந்து தஞ்சாவூர் ராஜ்யம் நவாபுக்குச் சென்று அப்படி இரண்டு மூன்று வருஷங்கள் தஞ்சை நவாப் ஆட்சியில் இருந்தது.

"Tanjore experienced the worst calamity during the three years, when the Nawab controlled the Kingdom with his men. During the interval of about 2 years and seven months (actually from 17th September 1773 to 11th April 1776) between the dethrownment and reinstatement of Raja Thulaja the country remained under the direct Govt. of Nawab of Arcot."

(இன்னும் தொடரும்)

Friday, September 23, 2011

மராத்தியர் வரலாறு - Part 16

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 16

தஞ்சை பிரதாபசிம்ம ராஜாவும், சென்னை கவர்னர் லார்டு பிக்காட்டும் ஒரு சமாதான, ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோம். இனி தஞ்சாவூருக்கும் ஆற்காட்டுக்கும் இருந்த உறவு, உராய்வு ஆகியவை பற்றி பார்ப்போம்.

சந்தா சாஹேப் கொல்லப்பட்ட பிறகு தனது நவாப் நாற்காலிக்கு எந்தவித போட்டியும் இல்லை என்ற நிலை வந்த பிறகு நவாப் முகமது அலி ஆற்காட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். அவரது போக்கில் அதிகமான மாற்றங்கள் தெரிந்தன. திருச்சினாப்பள்ளியில் நடந்த போரில் தனக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், மைசூர் ஆகிய ராஜ்யங்களின் படைகளோடு, ஆங்கில படைகளும், முரார்ஜி கோர்படேயும் சேர்ந்து வெற்றியை ஈட்டித் தந்த மகிழ்ச்சியில் ஆற்காட்டுக்குக் கப்பம் செலுத்த வேண்டிய புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ராஜ்யங்கள் இனி தங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்ற சலுகையை அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது அவருக்கு அதிக நிதி தேவைப்பட்ட நிலையில் அவர், மேற்சொன்ன ராஜ்யங்கள் தங்களுக்கு மீண்டும் கப்பம் செலுத்த வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை உண்டாக்கினார். திருச்சினாப்பள்ளிக்கு வந்து ஆற்காட்டு நவாப் மேற்சொன்ன ராஜாக்களை அழைத்து அவர்கள் உடனடியாக பழைய ஆண்டுகளுக்கும் சேர்த்து கப்பத் தொகையைத் தர வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தினார். ஆனால், போரின் முடிவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகையை இப்போது நீக்க வேண்டிய அவசியம் குறித்தும், இப்போது பழைய பாக்கியையும் சேர்த்துத் தாங்கள் கப்பம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதையும் அவர்கள் நவாபிடம் எடுத்துச் சொன்னார்கள். நவாவு அவற்றில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. கப்பத் தொகை பெற்றே தீருவது என்ற ஒரே முடிவில் இருந்தார். மீறி இவர்கள் கப்பம் செலுத்தவில்லையானால் அவர்கள் மீது போர் தொடுக்கவும் தயாரானார்.

நவாபின் இந்தப் போக்கு சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளை எட்டியது. அவர்கள் தஞ்சாவூர் ராஜாவும் மற்றவர்களும் ஆற்காட்டு நவாப் சந்தா சாஹேபுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தபோது எத்தனை உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளுக்குக் கைமாறாக அவர்களுக்கு அறிவித்த சலுகைகளை இப்போது மாற்றிக் கொள்வது பற்றி நவாப் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உதவி செய்தவர்களுக்கு நவாப் செய்யும் கைமாறு இதுதான் என்று சொல்லி பூதலூரில் ஒரு சமாதான கூட்டம் ஏற்பாடு செய்தார்கள் ஆங்கிலேயர்கள். 1758ஆம் ஆண்டுக்குச் சரியான தமிழ் வெகுதான்ய வருஷம் பூதலூரில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

"The Nawab demanded from Prathaba Singh all arrears of tribute. Lord Pigot, the Governor of Madras deputed Mr.Josiah Du Pre, the second in council to settle the terms of the tribute payable to the Nawab. Accordingly it was agreed that the Raja Prathab should pay by five instalments in about 2 years, 22 lakhs of Rupees in discharge of the outstanding arrears with a further sum of 14 lakhs as a present to the Nawab and also an annual tribute of 4 lakhs afterwards."

இந்த உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் பிரதாபசிம்ம ராஜாவின் மகன் துளஜேந்திர ராஜாவின் இரண்டாம் மனைவி ராஜகுமாரிபாயிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.

முன்பு குப்பி என்பவளுடைய மகன் காட்டுராஜா என்ற பெயரில் தஞ்சாவூர் ராஜ்யம் தனக்குத்தான் என்று உரிமை கொண்டாடி வந்தானல்லவா, அவனைத் தூண்டிவிட்டு அவனுக்குப் பின்பலமாக இருந்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கோயாஜி காங்க்டே என்பது. இவன் காட்டுராஜாவை நாட்டைவிட்டுத் துரத்திய பிறகு ஓடிப்போய் அரியலூர் காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு அவன் ஒளிந்திருக்கும் செய்தி தஞ்சாவூருக்குக் கிடைத்தது. ஒரு சிறு குழுவாக வீரர்கள் அரியலூர் காடுகளில் தேடி அலைந்து அவனைப் பிடித்துக் கொன்று போட்டார்கள்.

பிரதாபசிம்ம ராஜா தஞ்சாவூரில் இப்படி பல காலம் திறமையோடும், ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப், சுற்றுப்புற ராஜ்யாதிபதிகள் ஆகியோருடன் ஒற்றுமையாக இருந்து ராஜ்யபாரம் செய்து கொண்டு வந்தார். அவருடைய காலத்தில் தஞ்சை ராஜ்யத்தின் புகழ் வடக்கே சதாரா, புனா, ஒளரங்காபாத் வரையில் பரவியிருந்தது. கிழக்கே அச்சி, யாழ்ப்பாணம், கண்டி தேசம், சிங்களம் வரையிலும், மேற்கே ஸ்ரீரங்கப்பட்டணம், பிதலூர் தேசம், குத்தி, கிருஷ்ணா தீரம், பண்ணானகாட் வரையிலும் பரவியிருந்தது.

பிரதாப சிம்ம ராஜாவின் உத்தமமான நடத்தை, அவர் செய்து வந்த தான தர்மங்கள், அவருடைய உதார குணம், மக்களுக்கு நன்மை செய்ய பல நடவடிக்கைகளை எடுத்தது, எதிரிகள் அஞ்சும்படியான வீரம் இவற்றால் அவருடைய புகழ் அதிகரித்தது, அவரது ராஜ்யத்தின் விஸ்தீரணம் அதிகரித்தது. மக்கள் மன்னரை மனதாரப் புகழ்ந்தார்கள். இப்படி மக்களின் ஆதரவைப் பெற்ற வேறு முடியரசர்கள் யாராவது உண்டா என்பது சந்தேகமே!

இத்தனை புகழுக்கிடையிலும் ராஜா சில தவறுகளைச் செய்யத் தவறவில்லை. அதில் ஒன்று, தன்னுடைய முந்தைய ராஜாக்கள் காலத்திலும், தன்னுடைய காலத்திலும் பல போர்க்களங்களுக்குச் சென்று தஞ்சாவூர் ராஜ்யத்துக்குப் பல வெற்றிகளைக் கொண்டு வந்து குவித்தவரும், போரில் சந்தா சாஹேபைப் பிடித்துக் கொண்டு வந்து சிறை வைத்து, பின்னர் நேரம் வந்த போது அவரை பலிகொடுத்து ஆற்காட்டு நவாப் முகமது அலியின் நட்பை பெற காரணமாக இருந்தவருமான தளபதி மானோஜி ராவை, அவரோடு ஏற்பட்ட ஏதோவொரு மனஸ்தாபம் காரணமாகப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு டபீர் நரோ பண்டிதர் என்பவரை சர்க்கிலாக நியமித்தார். இந்த சர்க்கில் என்கிற பதவி செயலாளர், நிர்வாக அதிகாரி போன்ற ஒரு உயர் பதவி. ராஜா செய்த பெரும் தவறு இதுதான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜாவின் உடல் நிலை, வயது முதிர்வின் காரணமாக கெட்டு வந்தது. தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராஜாவும் உணர்ந்திருந்தார். அவருக்கு இயலாமை காரணமாக அதிகம் கோபம் வந்து எல்லோரிடமும் கடுகடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனம் சோர்வடைந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள்.

உதாரணமாக, ராஜா சுவாமி தரிசனம் செய்வதற்காகத் திருவாரூர் ஆலயத்துக்குச் சென்றார். அங்கு வழியில் காவலுக்கு வந்த சேவகர்கள் ஓடிவந்த போது ராஜா மீது தூசி படிந்து விட்டது. இதற்காக அந்த காவலர்களின் தலைகளை வெட்டும்படி உத்தரவிட்டு விட்டார் ராஜா. இது என்ன இப்படி? ஒன்றுமில்லாத அற்பச் செயலுக்காக காவலர்களின் தலையை வெட்டுவதாவது? என்று மக்கள் வருத்தமடைந்தனர். இதைப் போன்ற பல தீயச் செயல்களை மன்னர் தனது இறுதிக் காலத்தில் செய்யத் தொடங்கினார்.

நாட்டிலும், அரண்மனையிலும் சில தீய சகுனங்கள் ஏற்படலாயின. ராஜா காலமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இரவில் 12 நாழிகைக்கு மேல் 22 நாழிகை வரைக்கும் பெருத்த அழுகுரல் எங்கிருந்தோ கேட்க ஆரம்பித்தது. அந்த அழுகைச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், கோட்டைக்குள்ளிருந்துதான் வந்தது போல் இருந்தது. ஆனால் கோடைக்குள்ளிருந்து கேட்டால் வெளியிலிருந்து வருவது போல் கேட்டது. இது என்ன மர்மம் என்று அனைவரும் திகைத்தார்கள். இப்படி சுமார் மூன்று மாத காலம் அழுகுரல் நள்ளிரவில் கேட்டால் எப்படி இருக்கும்?

இது தவிர அரண்மனையின் மேல்புறத்தில் நாயக்கர் காலத்திய கோபுரம் ஒன்று இருந்தது. அது திடீரென்று இடிந்து வடக்குப் புறமாக விழுந்தது. இது ஒரு அபசகுனம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

துக்கோஜி ராஜா என்று இவரது முன்னோர் ஒருவர் ஆட்சி புரிந்தார் என்பதை பார்த்தோமல்லவா? அவருடைய ஆசை நாயகிகளின் பிள்ளைகளில் இறந்தவர்கள் போக மீதமிருந்த நானா சாஹிப் என்ற பிள்ளை மட்டும் அப்பு என்ற பெயரோடு இருந்தான். அவனும் இந்த நேரத்தில் இறந்து போனான். இந்த அப்புவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிற்பாடு பிரதாபசிம்ம ராஜா தம்முடைய மகன் துளஜேந்திர ராஜாவுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்லி, நல்ல நினைவு இருக்கும்போதே சுபானு வருஷம் ஒரு நாள் தெய்வகதி அடைந்தார்.

அவரை ஸம்ஸ்காரம் செய்யும்போது அவருடைய சிதை நெருப்பில் வீழ்ந்து அவருடைய மூன்றாவது மனைவி யமுனாபாயி சாஹேபும், ஐந்தாவது மனைவி சக்கவாற்பாயியும் உடன்கட்டை ஏறி மாண்டு போனார்கள். துளஜேந்திர ராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

முடிசூட்டு விழாவுக்கு ஆற்காடு நவாப் முகமது அலிகான் வஸ்திர மரியாதைகளையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். இது தவிர நவாப் ஓர் அரிய பரிசையும் ராஜாவுக்காக அனுப்பியிருந்தார். அது ஒரு பறவை. "முதர் முறுக்" என்ற பெயர் கொண்ட ஒன்றரை ஆள் உயரமுடைய, அதாவது 9 அடி உயரம் உள்ள ஒரு அபூர்வ பறவை. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போல இருந்தது. இப்படியொரு அபூர்வ பரிசை ஆற்காடு நவாப் அனுப்பினார்.

அதன் பிறகு துளஜேந்திர மகாராஜா நாலைந்து வருஷங்கள் தனது தந்தையைப் போலவே தர்ம நெறி தவறாமல், மக்களுக்கு நன்மை செய்து கொண்டு ஆட்சி புரிந்து வந்தார்.

(இவர் ஆட்சி பற்றி தொடர்ந்து பார்க்கலாம்)



மராத்தியர் வரலாறு - Part 15


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 15

ஆற்காட்டு நவாபிடமிருந்து நமது கவனத்தைச் சிறிது தெற்கே திருப்புவோம். முன்பொருமுறை தஞ்சை மகாராஜா ராமேஸ்வரம் போய்விட்டுத் திரும்பும் போது ராமநாதபுரத்தை ஆண்டு வந்த மறவர் குல மன்னர் ஒருவர் வயது முதிர்ந்த பெரியவர் தஞ்சை மன்னனைத் தன் அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்ததைப் பார்த்தோம் அல்லவா. அப்போதிருந்து தஞ்சை மன்னர்களும் ராமநாதபுரத்து மன்னர்களான சேதுபதிகளும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள்.

நாம் சென்ற பகுதியில் சொன்ன ஆற்காட்டு நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையே சண்டை
நடந்த காலத்தில் ராமநாதபுரத்தை வயதில் இளையவரான சேதுபதி ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கும் முகமது அலிக்கும் நட்பு இருந்தது. இந்த நட்பு சாசுவதமானது என்று அவர் கருதினாரோ என்னவோ, தஞ்சை மராத்திய மன்னர்களோடு இருந்த நெருங்கிய நட்பிலிருந்து சற்று வழுவிப் போனார். தஞ்சை மன்னருக்குச் சொந்தமான பகுதிகளை ஆற்காடு நவாப் முகமது அலியின் சம்மதத்துடன் தன் வசப்படுத்திக் கொள்ளலானார். முன்பொருமுறை ராமநாதபுரம் சேதுபதி பிரதாபசிம்மரை அழைத்து மரியாதை செலுத்தினாரல்லவா, அதற்கு பதில் மரியாதையாக தஞ்சை அரசர் தனது ஆளுகைக்குட்பட்ட திருவாடனை எனும் பகுதியை சேதுபதிக்கு வழங்கியிருந்தார். அந்த மூத்த சேதுபதியின் மகன் தான் இப்போது சேதுபதியாக இருந்தவர். இவர் வயதில் இளையவர் என்பதோடு ஆற்காட்டாரின் உதவியோடு சில சில்லரை உபத்திரவங்களைத் தஞ்சை மன்னருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டி பிரதாபசிம்ம ராஜா தனது படையொன்றை மானோஜி ராவ் தலைமையில் தெற்கே அனுப்பி வைத்தார்.

மானோஜி ராவ் வழக்கப்படி தனது வீரம் செறிந்த படையோடு தெற்கே போய் ஹனுமந்த் காட், வரூர், மங்கள், குவடி ஆகிய கோட்டைகளைப் பிடித்தார். திருவாடனையையும் போரிட்டு மீட்டுத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்.

இந்த சமயம் மானோஜி ராவை அவசரமாகத் தஞ்சைக்குத் திரும்பி வரும்படி மன்னர் கட்டளையிட்டார். போர்க் களத்திலிருந்து மானோஜி ராவ் தஞ்சை திரும்பும் செய்தியை அறிந்த ஆற்காட்டு நவாப் ஆங்கில தளபதி மாஸ்டர் ஆஃப்ரி என்பவனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் தஞ்சாவூர் ராஜா ஆங்கிலேயர்களின் கொடியை அவமதிப்பு செய்தார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜேந்திர ராஜாவுக்கு மாடிக் என்பவரின் மகளான ராஜகுமாரிபாயியைத் திருமணம் செய்து வைத்தார். இது இரண்டாவது கல்யாணம். அடுத்து நாலைந்து மாதத்திற்குள் மோத்தேயின் பெண் மோகனாபாயை மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து வைத்தார்.

அப்போது புதுச்சேரியில் லாலி என்பவன் பிரெஞ்சு கவர்னராக இருந்தான். அவன் காலத்தில் அதாவது 1756இல் எந்தவித காரணமும் இல்லாமல், விரோதமும் இல்லாமல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தான். இவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று தஞ்சை மன்னர் விசாரித்த போது சரியான பதிலும் கிடைக்க வில்லை. அது குறித்த செய்தி:--

"His specific object was to recover the amount of the deed which Prathab Singh had given to Chanda Saheb for 56 lakhs but transferred to the French by Reza Saheb in lieu of the expenses incurred for the wars of the Nayaks."

சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டு வெற்றிபெற முடியாமல், தஞ்சை மன்னரிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்குப் போனான் அல்லவா, அப்போது தஞ்சை மன்னரிடமிருந்து ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சென்றான். அந்த பத்திரத்தை சந்தா சாஹேப் பிரெஞ்சு அதிகாரிகளிடம் அந்தப் பணத்தை தஞ்சை மன்னரிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி சம்மதம் தெரிவித்து Made Over பண்ணி கொடுத்துவிட்டான். அந்தப் பணத்தை பெறுவதற்காகத்தான் லாலி இந்த யுத்தத்துக்கு வந்தான்.

பிரெஞ்சுப் படை தஞ்சாவூர் கோட்டையை சூழ்ந்து கொண்டு முற்றுகை இட்டது. முற்றுகை இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்தது. பிரதாபசிம்ம ராஜாவும் கோட்டைக்கு வெளியே வந்து போரிடாமல், உள்ளே இருந்து கொண்டு கோட்டையைக் காவந்து பண்ணிக் கொண்டிருந்தார். தற்காப்பு யுத்தம் நடைபெற்றது. பொறுத்துப் பார்த்துவிட்டு மன்னர் ஒரு முடிவுக்கு வந்தார். தங்களது படைபலம் முழுவதையும் ஒன்று திரட்டிக் கொண்டு ஒரு நாள் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்து பலமாக பிரெஞ்சு படை மீது மோதிப் போரிட்டார்.

பிரெஞ்சு வீரர்கள் ஏராளமானோர் இறந்து வீழ்ந்தனர். பலர் தங்கள் பிரதேசத்துக்குத் தப்பி ஓடிவிட்டனர். பயந்து போன லாலி தன் பீரங்கிகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் காரைக்காலுக்கு ஓடிப்போனான்.

"The Tanjore troops subjected the French to severe hardship and the mutilated army commanded by the unlucky Governor reached Karaikal on 18th August 1758".

இதனை அடுத்து மகாராஜா தன் ராஜ்யத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தியானது: "நமது ராஜ்யத்தில் நாம் கடைப்பிடித்து வரும் வழக்கமானது, ஐரோப்பியர் எவராவது நமது ராஜ்யத்திற்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் நமது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார்களோ அங்காங்கு சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பதுதான். அதன் விவரம் ஐரோப்பியர் நடந்து வந்தால் ஒவ்வொருவருக்கும் ஐந்து வராகன் வீதமும், குதிரைமீது ஏறி வந்தால் அதற்கு அதிகமாகவும், பல்லக்கில் உட்கார்ந்து வந்தால் விசேஷமான வரிவிதிப்பும், சேனை போன்ற பரிவாரங்களோடு வந்தால் மகாராஜாவுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி அவர் முடிவு செய்யும் தொகையை வரியாக வசூலிக்க வேண்டுமென்பது விதி."

"தற்சமயம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் மன்னருக்கு வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அதிலும் படையோடு வருபவர்கள் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். இனி ஐரோப்பியர்கள் எந்தத் துறைமுகத்திலிருந்து வந்தாலும் வரிவிதிப்பு கிடையாது." இதுதான் அரசர் அறிவித்த புதிய உத்தரவு.

இதன் பிறகு புதுச்சேரி கவர்னர் முஸேலாலி சென்னை கோட்டைக்குச் சென்று அதனைப் பிடிக்க முற்றுகை இட்டான். அங்கு கவர்னர் லாரன்சும், கர்னல் டிராப்பரும் கோட்டைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த பிரெஞ்சு கவர்னர் திடுதிப்பென்று தங்கள் கோட்டையைத் தாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவர்கள் தஞ்சை மன்னருக்கு உதவி கேட்டு தூது அனுப்பினார்கள்.

அதையடுத்து பிரதாபசிம்ம ராஜா முகமது யூசுப்கான் என்பவர் தலைமையில் திருச்சினாப்பள்ளியிலிருந்து குதிரைப் படையொன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குதிரைப் படை சென்னை கோட்டையை அடைந்த போது கோட்டையைச் சுற்றி லாலியின் படைகளும், கோட்டைக்குள்ளிருந்து ஆங்கிலப் படைகளும் போருக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. அப்போது வெளியிலிருந்து அங்கு போன திருச்சினாப்பள்ளி குதிரைப் படை கும்மந்தான் முகமது யூசுப்கான் தலைமையில் பிரெஞ்சுக் காரர்களைச் சூழ்ந்து கொணது. இப்படியொரு ஆபத்து வரும் என்பதை எதிர்பார்க்காத லாலியின் பிரெஞ்சுப் படை புதுச்சேரியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது.

சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள் காரைக்காலைப் பிடிப்பதற்காக லார்டு பிகாட் என்பவர் தலைமையில் வந்திருந்தனர். அவர்கள் காரைக்காலைப் பிடிக்க உதவி கேட்டனர். அதற்கும் பிரதாபசிம்ம ராஜா படைகளை அனுப்பி உதவி செய்தார். அதன் பிறகு புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட ஆங்கிலேயர்கள் உதவி கேட்க அப்போதும் மன்னர் உதவி செய்தார். இப்படி ஆங்கிலேயர்களுக்கு அடுத்தடுத்து தஞ்சை மன்னர் உதவிகளைச் செய்து வந்தார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆங்கில கவர்னர் லார்டு பிகாட் (Lord Piggot) இந்தியாவில் தன் பணியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு தூதரைத் தஞ்சாவூருக்கு அனுப்பி தஞ்சை மன்னருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது முதற்கொண்டு ஆங்கிலேயர்களுக்குத் தஞ்சை ராஜ்யத்தின் மீது அக்கறை உண்டாயிற்று. இருவரும் ஒருவருக்கொருவர் ஆபத்துக் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது என்பதை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக் கொண்டனர்.

(இனியும் தொடரும்)