பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 30, 2020

1857 முதல் சுதந்திரப் போர்.

                                                    

    1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் என்பது 1857–58 இல் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சி

     இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனம், கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின.

    முகலாயர்கள், பேஷ்வாக்கள் போன்ற இந்திய ஆட்சியாளர்கள் மீது பிரிட்டிஷார் அக்கறையின்றி நடந்துகொண்டது மற்றும் அயோத்தி இணைத்துக்கொள்ளப்பட்டது போன்றவை எதிர்ப்பை உருவாக்குவதற்குக் காரணங்கள். 

    டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கை,  மற்றும் குதுப்மினாரிலிருந்து முகலாயர்களின் வம்சாவளியினரை அவர்களுடைய பாரம்பரிய அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஷயம் ஆகியவையும் இந்தியர்களைக் கோபமுறச் செய்தது.

     என்ஃபீல்ட் துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பததே இந்தக் கலகத்தைத் தூண்டியதற்கான முக்கியக் காரணங்கள்.

    சிப்பாய்கள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவதற்கு முன் அந்த தோட்டா உறைகளை பற்களால் கடித்து உடைக்க வேண்டியிருந்தது. அதில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு இருந்தால் அது இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்களை காயப்படுத்துவதாக இருந்தது.

    1857 இல் சிப்பாய்கள் புதிய தோட்டா உறைகளை பயன்படுத்த மறுத்தனர். சிப்பாய்களின் கோபத்தில் இருப்பதால் அவர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்பப் பெற்றது ராணுவம்.

    1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் |பாரக்பூரில் ஒன்பதாவது நேடிவ் இன்பான்ட்ரியை சேர்ந்த மங்கள் பாண்டே என்ற வீரன் தன் துப்பாக்கியைத் திரும்பத் தருவதை எதிர்த்துத் தனது ஆங்கிலேய இராணுவ உயரதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தினான்.

    ஜெனரல் ஹார்சே, பாண்டே "மத வெறியில்" உள்ளார் என்று கூறி அவரை கைது செய்ய ஜமேதாருக்கு உத்தரவிட்டார், ஆனால் இந்தியரான அந்த ஜமேதார் மறுத்து விட்டார்.

    ஏப்ரல் 7இல் ஜமேதாருடன் சேர்த்து மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். முழு படைப்பிரிவும் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டது.

    மே 10 இல் 11வது மற்றும் 12வது குதிரைப்படை கூடியபோது அவர்கள் அணிவகுக்க மறுத்து உயர் அதிகாரிகளுக்கு எதிராக திரும்பினர். பிறகு அவர்கள் மே 11இல் சிப்பாய்கள் டெல்லியை அடைந்து மற்ற இந்தியர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

    கடைசி முகலாய மன்னர் பகதூரின் இருப்பிடமான டெல்லி செங்கோட்டை சிப்பாய்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அவர்கள் அவருடைய சிம்மாசனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர் பிறகு மெதுவாக அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தக் கலகத்திற்கு தலைமையேற்றார்.

    விரைவில் வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது. மீரட், ஜான்சி, கான்பூர், லக்னோ ஆகிய இடங்களிலும் கலகம் பரவியது. ஆங்கிலேயர்கள் பதிலடி கொடுத்தனர், அது காட்டுமிராண்டித்தனமானதாக இருந்தது.

    பிரிட்டிஷார் கிரிமியன் போரிலிருந்து துருப்புக்களை வரவழைத்ததுடன், சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐரோப்பியத் துருப்புக்களையும் இந்தியாவிற்குத் திருப்பிக்கொண்டனர். டெல்லிக்கு அருகாமையில் கலகக்காரர்களின் முக்கிய ராணுவத்தோடு பிரிட்டிஷார் சண்டையிட்டதோடு, நகரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் டெல்லியை நோக்கித் திரும்பினர்.

    டெல்லி முற்றுகை ஜூலை 1இல் இருந்து ஆகஸ்டு 31 வரை நீடித்தது. ஒருவார சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷார் அந்த நகரத்தை திரும்பப் பெற்றனர். முக்கியத்துவம் வாய்ந்த கடைசி போர் 1858 ஜூலை 20 இல் குவாலியரில் நடைபெற்றது.

    இப்போரின்போதுதான் இராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்டார்.1859 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சண்டைகள் நடந்தன, ஆனால் பெரும்பாலான புரட்சியாளர்கள் அடக்கப்பட்டனர். இதில் சண்டையிட்ட குறிப்பிடத்தக்க நபர்கள் அயோத்தியின் முன்னாள் அரசருடைய ஆலோசகரான மௌலவி அகமதுல்லா ஷா, நானா சாகிப்; அவரது உறவினரான ராவ் சாஹிப் மற்றும் அவரது சேவகர்கள், தாந்தியா தோபே மற்றும் அஸிமுல்லா கான்; ஜான்ஸி ராணி லக்ஷ்மி பாய்; ஜகதீ்ஸ்பூரின் ராஜ்புத் குன்வார் சிங்; ஆகியோராவர்.

பின்விளைவுகள்

    நவீன இந்திய வரலாற்றில் 1857 இல் நடைபெற்ற போர்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    ஆங்கிலேயர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை அழித்துவிட்டு ஆங்கில முடியரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்தினர். முடியரசின் பிரதிநிதியாக இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சிக் கொள்கையின் அறிவிப்பின்படி "இந்திய அரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்கள்" ஆகிய அனைவரும் பிரித்தானிய ஆட்சியின்கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்று விக்டோரியா அவர்கள் அறிவித்தார், ஆனால் பிரித்தானிய அரசின் மீதான நம்பிக்கையின்மை 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு முன்னோடியானது.

    ஆங்கிலேய அரசு சீர்த்திருத்தம், அரசியல் புனரமைப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் இறங்கியதோடு இந்தியாவில் உயர் ஜாதியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரை அரசுடன் ஒன்றிணைக்க முயற்சித்தது. அவர்கள் நில ஆக்கிரமிப்பு, சமய சகிப்பு சட்டம் ஆகியவற்றை நிறுத்தி இந்தியர்களை அரசுப் பணிகளில் அமர்த்தியதுடன் முக்கியமாக கீழ்நிலைப் பணியாளர்களாக்கிக் கொண்டனர்.

    பிரித்தானிய வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதுடன், காலாட்படையை கையாள பிரித்தானிய வீரர்களை மட்டுமே அனுமதித்தனர். இரண்டாம் பஹதுர் ஷா பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார், அங்கு அவர் 1862 இல் மரணமடைந்தார்

    சாம்ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1877 இல் அரசி விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார்.

வீரவரலாறு

அமைப்புரீதியாக்கப்பட்ட இயக்கங்களின் எழுச்சி

    சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்த பல்லாண்டுகளும் தேசிய மற்றும் பிரதேச அளவிலான இந்திய தலைமை குறித்த இந்திய பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் விழிப்புணர்வு, தெளிவுபடுத்தலின் காலமாக இருந்தது.

    1867 இல் தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்திய கூட்டமைப்பை அமைத்தார்.

    876 இல் சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

    ஓய்வுபெற்ற பிரித்தானியர் ஏ.ஓ.ஹ்யூமின் பரிந்துரைகளால் தூண்டப்பெற்று 1885 ஆம் ஆண்டு மும்பையில் கூடிய எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவினர்.

    அவர்கள் பெரும்பாலும் முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும், மேற்கத்திய கல்வியாளர்களாகவும், மாகாண சீர்திருத்தவாதிகளாகவும்,   சட்டம், ஆசிரியர், இதழியலைத் தொழிலாகவும் கொண்டிருந்தனர்.

    இதன் துவக்கநிலையில் காங்கிரஸ் நன்கு வரையறுக்கப்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருக்கவில்லை.

     இது பிரித்தானிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற மிகவும் விவாதம் செய்கின்ற ஒரு அமைப்பாகவே இருந்தது.

    ஆனால் காங்கிரஸின் துவக்ககால பலன்கள் போதுமானவையாக இல்லை. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டாலும் காங்கிரஸ் மேல்வர்க்க நலன்களின் பிரதிநிதியாகவே இருந்தது; மற்ற பொருளாதார பின்னணிகளிலிருந்து வந்த உறுப்பினர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

    ஆர்ய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்டது) மற்றும் 'பிரம்ம சமாஜம் ராஜா ராம் மோகன்ராயாலும் மற்ற சிலராலும் நிறுவப்பட்டது போன்ற சமூக-சமய குழுக்களின் செல்வாக்கு இந்திய சமூகம் மறுசீரமைப்படைவதற்கு முன்னோடியாக இருந்தமைக்கான ஆதாரங்களாக உள்ளன.

    ராமகிருஷ்ண பரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர்,பால கங்காதர திலகர்லாலா லஜபத் ராய்பிபின் சந்திர பால்வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரவிந்தர்சுப்பிரமணிய பாரதிசுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சையது அகமது கான் , ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.

    1900 ஆம் ஆண்டு வாக்கில் காங்கிரஸ் அகில இந்திய அமைப்பாக  மாறியது.

    1906 இல் பால கங்காதர திலகரின் காலம் தொடங்கியது. அதுவரை பிரிட்டிஷாரின் கருணைப் பார்வைக்கு ஏங்கி நின்ற இந்தியா, சுயமாகத் தன் சொந்தக் காலில் நிற்கும் வேகத்தைக் காட்டியது. திலகர் காலம் புரட்சிக் காலம்.

    1914 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி இந்தியா வந்தார். தன் குருநாதர் கோபாலகிருஷ்ண கோகலேயின் ஆலோசனையின்படி காந்தியும், கஸ்தூர்பாவும் இந்தியா முழுவதும் ரயிலில் 3ஆம் வகுப்பில் பயணம் செய்து இந்திய மக்களின் நிலைமை, தேவை இவற்றைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

    1919 இல் முதல் அகிம்சை வழிப் போராட்டத்தை காந்தி தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் அவர் பிரிட்டிஷாரின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்தார்.

    1930 இல் உப்பு சத்தியாக்கிரகம் செய்ய இவர் அகமதாபாத்திலிருந்து தண்டி கடற்கரைப் பட்டணம் வரை பாதயாத்திரையாகச் சென்று உப்பெடுத்து சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். 

    1942 இல் பம்பாய் காங்கிரசில் க்விட் இந்தியா போராட்ட அழைப்பை விடுத்தார். காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

    1942 இல் காந்தியும் தலைவர்களும் கைதானபின் தொண்டர்கள் பெருமளவில் கலவரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் அரசு போர் முடிந்த பின் நல்ல முடிவு எடுக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது.

    1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியத் தலைநகர் டெல்லி விழாக்கோலம் கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி கல்கத்தாவில் மதக் கலவரத்தை நிறுத்துவதற்காக அங்கு சென்று மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். 

    1948 இல் சுதந்திரம் பெற்ற ஒரே ஆண்டில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். நாடே துயரத்தில் ஆழ்ந்தது. இத்தனை காலம் நாங்கள் காந்தியைப் பாதுகாத்தோம், சுதந்திர இந்தியாவில் அவர் உயிர் பறிக்கப்பட்டு விட்டது என்று ஆங்கிலேயர்கள் சொல்லும் அளவுக்கு இந்த நிகழ்வு இந்தியாவுக்கு அவமானமாக அமைந்து விட்டது.

    1950 இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    1952 இல் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. ஜவஹர்லால் நேரு பிரதம மந்திரியாக ஆனார்.

    வியாபாரம் செய்த ஆங்கிலேய கம்பெனியாரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா, விழிப்புணர்வு பெற்று சுயநினைவு வந்து சுதந்திரம் பெற்று நம்மை நாமே ஆளும் நிலைமைக்கு வந்த அத்தனை வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.

 

தஞ்சாவூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிளை உதயம்.

                                                                                                                                          

            பாரதத் திருநாட்டில் ஆன்மிகமும், தர்மமும் நிலைநிறுத்துவதற்காக அவதாரம் செய்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவருடைய சீடராக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த உலக சர்வ மத மாநாட்டில் பங்கு பெற்று உரையாற்றிய பிறகு, இந்த உலகமே நம் பாரத நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. அந்த மகான் நாடு திரும்பிய பிறகு, நமது பாரம்பரிய மிக்க சநாதன தர்மம் வீறுநடை போடவேண்டுமானால், நாம் ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி மக்களைத் தர்ம மார்க்கத்தில் ஈடுபட வைக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் உருவானதுதான் ஸ்ரீராமகிருஷ்ண மடம். இந்த அமைப்பு 1897ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராமகிருஷ்ண மடம் இப்போது உலகளாவிய வகையில் 214 கிளைகளைக் கொண்டு விளங்குகிறது. ஒரு புதிய, எழுச்சி மிக்க இந்தியாவை உலகுக்கு அளித்த முன்னோடிகளில் தலைசிறந்தவராக சுவாமி விவேகானந்தர் விளங்குகிறார். அவர் உருவாக்கிய இந்த ராமகிருஷ்ண மடம் நாடெங்கிலும் பரந்து விரிந்து மக்கள் பணியாற்றி வரும் நிலையில், வரலாற்று முக்கியத்துவமும், ஆன்மிக பலமும் கொண்ட நம் தஞ்சைப் பகுதியில் அந்த அமைப்பின் கிளை இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. அந்தக் குறையை நீக்கி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரால் இயங்கும் ராமகிருஷ்ண மடத்தின் கிளையொன்று பல காலம் திட்டமிட்டு 22 ஆகஸ்ட் 2020 விநாயக சதுர்த்தியன்று தஞ்சை சிவாஜி நகரில் உருவாக இருக்கிறது.

            தஞ்சை பெரிய கோயிலுக்கு மிக  அருகாமையில் உள்ள சிவாஜி நகரில் அமையவிருக்கும் இந்த மடம் தஞ்சை வாழ் மக்களின் ஆன்மீகத் தேடல்களுக்கும், மன அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடவுமான ஒரு பொதுநல அமைப்பாக உருவாக இருக்கிறது.

            தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளையொன்று உருவாகும் இந்த நேரத்தில், இங்கு இதற்கு முன்பு ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் பணிகள், பல அமைப்புகளாலும், தனிநபர்களாலும், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது என்கிற செய்திகளையும் நினைவு கூர்தல் சரியாக இருக்கும். தஞ்சைப் பகுதியில் முதன் முதலில்  1925லேயே ராமகிருஷ்ணர் பணி திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருநெய்த்தானம் (தில்லைத்தானம்) எனும் கிராமத்தில் டி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார் எனும் ராமகிருஷ்ணர் பக்தரால் பெண்களுக்கான ஒரு தொடக்கப் பள்ளி உருவாக்கபட்டது. முதலில் நாற்பது பெண் குழந்தைகளுடன் துவங்கிய இந்தப் பள்ளிக்கூடம், சிறிது சிறிதாக வளர்ந்து இன்று அவ்வூரில் ஸ்ரீராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் ஒரு சிறந்த பள்ளிக்கூடமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தப் பள்ளியில் இருபாலரும் கல்வி பயிலவும், உண்டு உறைவிடப் பள்ளியாகவும் இப்போது விளங்கி வருகிறது.

            இந்தப் பள்ளிக்கூட நிறுவனரின் இளவல் டி.எஸ்.வீரராகவாச்சாரியார் என்பவர் தஞ்சாவூரில் கணபதி நகரில், நரிக்குறவர் இனத்துப் பிள்ளைகள் படிப்பதற்காக, ஸ்ரீராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி யொன்றைத் துவங்கினார். காலங்களைக் கடந்து அந்தத் தொடக்கப் பள்ளி, தற்சமயம் கணபதிநகர் செல்வராஜ் மேல் நிலைப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

            தஞ்சை மாநகரில் அச்சகத் துறையில் பிரபலமாக விளங்கும் வெற்றிவேல் அச்சகத்தின் உரிமையாளர் கே.வி.பக்கிரிசாமிப் பிள்ளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம பக்தராக விளங்கினார். அவர் தங்கள் அச்சகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பல திருவுருவப் படங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதோடு, தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள கருவூரார் சந்நிதியில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தையும் வைத்து வணங்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய இல்லத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவச் சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்தார், அந்த வழிபாடு இன்றளவும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

            தஞ்சை மாநகருக்கு அந்தக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் விஜயம் செய்தால், அவர்களை வரவேற்று, தங்க வைத்து, அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை இவர் செய்து வந்தார். தஞ்சையில் ராமகிருஷ்ண இயக்கத்துக்கு முகவரியாக இருந்தது அவருடைய அச்சகமும், இல்லமும் தான்.

            1986ஆம் ஆண்டில் மடத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தாஜி அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்கள் பணிகள் தஞ்சையில் மீண்டும் துவங்கி நடைபெறத் தொடங்கின. மனையேரிப்பட்டி மறுவாழ்வு இல்லத்தில் இருந்த தொழுநோயாளிகளுக்குக் குளிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் 300 பேருக்கு போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அதற்கான பொருளதவியை ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தாரிடம் பெற்றுத் தந்தார். மேலும் சில பணிகளைத் துவங்க அவர் ஆசி கூறியபடி தொடர்ந்து நடத்தி வந்தார்கள். மாலை நேர மருந்தகம் ஒன்று துவங்கப்பட்டு 1994 வரை மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள பவானி நகரில் செயல்பட்டு வந்தது. சுற்று வட்டாரத்திலுள்ள பல கிராமத்து மக்கள் இங்கு வந்து இலவச மருத்துவ சேவையைப் பெற்றுச் சென்றனர். சனிக்கிழமைகள் தோறும் சத்சங்கமும் அதே இல்லத்தில் நடைபெற்று வந்தது. பொது மக்களின் ஆதரவு இவற்றுக்கெல்லாம் மிகச் சிறப்பாக இருந்து வந்தது. ஸ்ரீராமகிருஷ்ண வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல எளிய மக்கள் மருத்துவ உதவிகளைப் பெற முடிந்தது. மேற்கண்ட பணிகளை எல்.ஐ.சியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் கி.முத்துராமகிருஷ்ணன் என்பார் தனது குடும்பத்து உறுப்பினர்களுடன் ஆர்வத்தோடு செய்து வந்தார். மருத்துவ உதவிக்கு சில மருத்துவர்கள் தாமாக முன்வந்து சேவை புரிந்து வந்தார்கள். இவற்றுக் கெல்லாம் சுவாமி தன்மயானந்தர் என்ற மூத்த துறவியின் ஆசியும் கிட்டியது.

            1993ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி அவர்கள் (இப்போது இவர் உலக அமைப்பின் தலைவர்) தஞ்சைக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் தஞ்சையில் ராமகிருஷ்ண மடத்தின் அங்கீகாரம் பெற்ற கிளையொன்று உருவாகவில்லையே என்ற தனது குறையை வெளியிட்டார். அதன் தொடக்கமாக, மடத்தின் பணிகள், சேவைகள் ஆகியவை பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் தஞ்சையில் “ஸ்ரீராமகிருஷ்ண, விவேகானந்த தொண்டர்கள் மாநாடு” ஒன்றைக் கூட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்படி 1993ஆம் ஆண்டு இறுதியில்  “ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த பக்தர்கள் மாநாடு” தஞ்சையில்  மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல்வேறு இடங்களிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும் முப்பதுக்கும் மேற்பட்ட மடத்து  சாதுக்களும் வந்து கலந்து கொண்டு அந்த மாநாட்டைச் சிறப்பித்தனர். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாகத்தான் இப்போது பற்பல ஊர்களிலும் அதுபோன்றதொரு மாநாடு தொடர்ந்து கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

            1994ஆம் ஆண்டு தொடங்கி தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவைப் பணிகளை பேராசிரியை இந்திரா அவர்கள் ஈடுபட்டு மிகச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினார்.  புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருக்கோயிலொன்று அமைத்து நாள்தோறும் அங்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்த நலிவுற்ற மக்களுக்கு அன்னதானமும், மருத்துவ சேவையும் அளித்து வந்தார். அந்த ஆலயம் தற்சமயம் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்திடம் ஒப்படைக்கபட்டு விட்டது.

            தஞ்சையில் நெடுநாட்களாக திரு சிவகுருநாதன் எனும் பக்தர் ஸ்ரீசாரதா ஆசிரமம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அன்னதானப் பணிகளைச் செய்து வந்தார். தினந்தோறும் தஞ்சை பெரியகோயிலுக்கு எதிரில் சுமார் 60 பேருக்குக் காலை உணவுக்கும், அமாவாசைதோறும் ஆங்காங்கே உள்ள ஆதரவற்றோர் ஆசிரமங்களில் மதிய உணவுக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்தப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு நாள், தொழுநோயாளி இல்லம் ஒன்றுக்கு உணவு கொண்டு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் அவர் மரணமடைந்தார். அந்த நல்ல உள்ளம் படைத்தவர் தொடங்கிய அந்த அரிய பணியினை, இப்போது தொடர்ந்து “அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை” எனும் அமைப்பு மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

            தஞ்சையில் திரு கெளதமன் என்ற பக்தர் “ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்” என்ற மடத்தின் மாத இதழை அன்பர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அவருடைய பணியின் காரணமாக பலருக்கும் மடத்தின் பணிகள் அறிமுகமாயின. அந்த பக்தர் இப்போது ஹோசூரில் குருதேவரின் பெயரால் பல அரிய சமூகத் தொண்டினை ஆற்றி வருகிறார்கள்.

            தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள அம்மன்பேட்டை எனும் கிராமத்தில் வெட்டாற்றுக் கரையில் சுவாமி அம்பிகானந்தா எனும் திருப்பராய்த்துறை தபோவனம் சாது ஒருவர், ஆசிரமம் ஒன்றை நிறுவி ஆன்மீகத் தொண்டினை ஆற்றி வந்தார். அவர் முக்தியான பின்னர், அந்த ஆசிரமத்தை சுவாமி கிருஷ்ணானந்தா என்பார் அவர்கள் எடுத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

            இப்படிப் பலராலும், பல காலமாக தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருட்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது மடத்தின் கிளையொன்று தஞ்சையில் விநாயகர் சதுர்த்தியன்று (22-08-2020) திறக்கப்படுகிறது. பரமஹம்சரின் ஆன்மிக வெள்ளம், சுவாமி விவேகானந்தரின் புத்துணர்வு தரும் அறிவுரைகள், இவைகளெல்லாம் மீண்டும் தஞ்சைத் தரணியில்  பரவத் தொடங்கிவிட்டது. இந்த மகத்தான ஆன்மீகப் பணியில் தஞ்சைவாழ் பெருமக்கள் அனைவரும் பங்கேற்று, எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்போம். ஸ்ரீகுருமகராஜ்கி ஜெய்!