பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, October 31, 2015

நவரச நாயகன் டி.எஸ்.பாலையா

                                      
தனக்கென்று ஒரு தனி வகையான பேச்சு வழக்கு. இவர் வில்லனா, காமெடியனா, குணசித்திர நடிகனா எந்தவொரு தனிப் பிரிவிலும் சேர்க்க முடியாத தனித்திறமை கொண்ட நவரச நாயகன் டி.எஸ்.பாலையா. இவர் எந்த வயதில் நடிக்க வந்திருப்பார்? இன்றைய முதுபெரும் கிழவர்கள்கூட இவருடைய ஆரம்ப கால படங்களைப் பார்த்திருப்பதாகச் சொல்லுகிறார்கள் என்றால் திரைப்பட உலகில் இவர் எத்தனை ஆண்டுகள் சாதித்தார்? உண்மையில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய சாதனை இந்த அபூர்வமான நடிகரின் சாதனை.

இவருடைய பல பங்களிப்புகளை மக்கள் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் தவில் வித்வானாக இவரும் கே.சாரங்கபாணியும் அசல் தவில் வித்வான்களைக் கூட தோற்கடிக்கும் வகையில் அந்த உடலசைவுகள், வாசிக்கும் விதம் இவற்றால் மனம் கவர்ந்தவர்கள். 

தொடக்க காலம் இவரை வில்லனாக அறிமுகம் செய்தது. இடையில் காமெடியனாகவும், குணசித்திர நாயகனாகவும் காட்டியது. பாகப்பிரிவினையில் பாசக்கார பெரியப்பா, மனைவிக்கு பயந்துகிடக்கும் இவர் கடைசியில் புலிபோலப் பாய்ந்த குணசித்திரம் மணமகளில் தன்னிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண்ணிடம், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரிகள் சொல்லிக் கொடுக்கும் போது காட்டிய சரசம், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்ல இவர் பயந்து போய் அரற்றும் காட்சிகள், பாமா விஜயத்தில் “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்று குடும்பத்தில் ஆடம்பரம் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய காட்சிகள் இவைகள் மறக்கக்கூடியவைகளா அந்தக் காட்சிகள்? 

கல்கியின் படைப்புகளில் வரலாற்று நாவலில் முதலில் வந்தது “பார்த்திபன் கனவு”. அதில் பார்த்திபனின் சேநாபதியாக இருந்து இளவரசனுக்கு இன்னல் விளைவிக்கும் வில்லன் இவர். படகோட்டியின் மனைவி வள்ளியிடம் வழிவதும், நரசிம்ம பல்லவரிடம் நெளிவதும், சோழ இளவரசனுக்கு வில்லத்தனம் செய்வதும் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.

இந்த பாலையா பற்றி ஒருசில விவரங்களைத் தெரிந்து கொள்வோமே. திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இவர். 1914இல் பிறந்தவர். வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து, அங்கு சில காலம் இருந்துவிட்டு, ஜெகநாத ஐயர் என்பவரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். அந்த நிலையில் தான் இவருக்குத் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 

1936இல் தனது 22ஆம் வயதில் திரைத் துறையினுள் புகுந்தார். அந்த ஆண்டு வெளியான ‘சதி லீலாவதி’ எனும் படம்தான் இவருடைய முதல் படம். அதே படத்தில் அறிமுகமானவர் தான் எம்.ஜி.ஆரும். என்.எஸ்.கிருஷ்ணன், நாடக உலகில் சிறந்து விளங்கிய கந்தசாமி குடும்பத்து எம்.கே.ராதா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் இவரது வில்லன் நடிப்பு மக்களுக்கு ஒரு புதுமை. நிஜவாழ்க்கையில் இவர் போன்ற வில்லன்கள் இருந்திருப்பார்களோ என்னவோ, இவர் அப்படியொரு கொடுமைக்கார வில்லனாக நடித்திருக்கிறார்.

‘அம்பிகாபதி’ படத்திலும், ‘மதுரை வீரன்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ ஆகிய படங்களில் இவர்தான் வில்லன். ஏ.பி.நாகராஜன் எடுத்த திருவிளையாடலில் ஹேமநாத பாகவதராக வந்து இவர் பண்ணிய அலம்பலில் பாண்டிய நாடே திமிலோகப்பட்ட நேரத்தில் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலா, இவரது ஆணவம் அடக்கப்பட்ட வரலாற்றை, படத்தில் மிக அழகாகக் காட்டிய திறமையாளர். ராகங்களின் பெயர்களைக் கொண்ட அவருடைய கோமாளித்தனமான சீடர்களையும் இவருடைய தற்பெருமையையும் படம் அழகாக எடுத்துக் காட்டி இவரது திறமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையில்லை.


திரையுலகின் ஒரு மறக்கமுடியாத சகாப்தமாக விளங்கிய இந்த அற்புத நடிகரின் வாழ்வு தனது 57ஆம் வயதில் (ஆம்! அது இளம் வயதுதான் அவருக்கு) 1972இல் மறைந்தார். வாழ்க டி.எஸ்.பாலையா புகழ்.

Thursday, October 29, 2015

உடுமலை நாராயண கவி

                               

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையாதாஸ் என்று இப்படி பல கவிஞர்கள் திரைத் துறையில் இருந்த காலத்துக்கு முன்பு உடுமலை நாராயண கவியின் பாடல்கள் திரைப்படங்களில் அதிகம் இடம் பெற்று வந்தன. இவரைப் பற்றி ஒரு சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே!
சினிமா வெகுஜன பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாக நாடகங்கள் தான் தமிழகத்தில் அதிகம் மக்களை கவர்ந்திருந்தது. ஒரு காலத்தில் “கூத்து” என்று தொடங்கி, அது தெருக்கூத்தாக ஆகி, பின்னர் அது வசன நடையில் பேசும் நாடகங்களாம மாறின. கூத்து அமைப்பில் உரையாடல் பாடல்களாகத்தான் இருந்து வந்தது. அப்படி நாடகத் துறையில் காலூன்றி யிருந்த நாராயணசாமி என்பவர் திரையுலகுக்கு வந்ததும் தன் பெயரை உடுமலை நாராயண கவி என்று மாற்றிக் கொண்டார்.
நாடகத்திலிருந்து வந்தவர் என்பதாலும், கிராமப்புறத்திலிருந்து நாடகத்துக்கு வந்தவர் என்பதாலும், கிராம, நாடக அனுபவங்கள் இவருக்கு அந்தக் கால நடைமுறை வழக்கங்களை எளிமையான பாடல்களாகவும், இலக்கியத் தரத்தோடும் கொடுக்க முடிந்தது. டி.ஏ.மதுரம் பாடிய “நல்ல பெண்மணி, அவள் நல்ல பெண்மணி” என்றொரு பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்கிற விஷயங்களை அழகாகச் சொல்லியிருப்பார் இவர்.
இதைவிட என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய படமொன்றில் நந்தனார் கதா காலக்ஷேபத்தைப் போல கிந்தனார் என்கிற கிராமத்துப் பையன் சென்னை நகருக்குப் படிக்கப் போகும் அழகை ஒரு ஹரிகதையாக ‘கிந்தனார்’ கதையைச் சொல்லியிருப்பார். அதையும் படைத்தவர் இவர்தான். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பல படங்களுக்கு இவருடைய பாடல்கள் தான்.
தேசிய சிந்தனை, கடவுள் பக்தி, நேர்மைத் திறன், சொல் வளம் ஆகிய அனைத்துத் தகுதிகளும் இவர் பெற்றிருந்தார். கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் கிராமத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தில் கிருஷ்ணசாமி, முத்தம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் இவர். நாடக வாழ்க்கையே தனக்கு உரியது என்றுணர்ந்து நாடகக் குழுவில் சேர்ந்து பல காலம் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் என்.எஸ்.கே. தியாகராஜ பாகவதர் இருவரும் லட்சுமிகாந்தன் கொலை வழைக்கில் சிறை செல்ல நேர்ந்தது. அவர்கள் பிரிவி கவுன்சில் வரை சென்று விடுதலையாகி மீண்டும் திரைத் துறைக்குத் திரும்பினர். அந்த முயற்சியில் பாகவதருக்குத் தோல்வி கிடைத்தது. என்.எஸ்.கே. அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதே நேரத்தில் திராவிட இயக்கத்தார் எழுதிய கதைகளை திரைப்படமாக எடுத்து மீண்டும் திரையில் காலூன்றினார். அப்போது என்.எஸ்.கே.யுடன் இவருக்கு நல்லுறவு இருந்து வந்தது. அத்துடன் அவர் கடைப்பிடித்த திராவிடப் பற்று இவரையும் வந்து ஒட்டிக் கொண்டது. சுதந்திரத்துக்கு தேசபக்தப் பாடல்கள் எழுதிய இவர் இப்போது திராவிட சிந்தனைகளுக்குப் பாட்டு எழுதலானார்.
திரையில் ஒலித்த இவருடைய பாடல்களில் குறிப்பாக மக்கள் மனங்களைக் கவர்ந்தவை என்று சிலவற்றைச் சொல்லலாம். அவை என்.எஸ்.கே.யின் நல்ல தம்பியில் “அது அந்தக் காலம், இது இந்தக் காலம் என்று பல செய்திகளைப் பழமை, புதுமை இவற்றைச் சுட்டிக் காட்டி எழுதிய பாடல். இவர் பாடல் எழுதிய பல படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்களாவன: சொர்க்கவாசல், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா (இவை அனைத்தும் திராவிட இயக்கத்தாரின் படம்) காவேரி., தூக்கு தூக்கி, தெய்வப் பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, ரத்தக்கண்ணீர், தேவதாஸ் போன்ற பல படங்கள்.
தமிழக அரசு இவருக்குக் “கலை மாமணி” விருது கொடுத்து கெளரவித்தது. 82 வயது வரை வாழ்ந்த இவர் 1981இல் காலமானார். இந்திய அஞ்சல் துறை இந்தக் கவிஞருக்கு ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவம் செய்திருக்கிறது. உடுமலையில் இவருக்கு ஒரு மணிமண்டபம் இருக்கிறது. திரைத் துறை தந்த நல்லதொரு கவிஞர் இவர்.



கரூர் ஆநிலையப்பர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்


கரூர் ஆநிலையப்பர் ஆலயத்தில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பரதாஞ்சலி.
கரூருக்கு அழகு சேர்க்கும் வகையில் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆநிலையப்பர் ஆலயம் எனப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில். மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருப்பதும், தினந்தோறும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் கோயிலாகவும் இது திகழ்ந்து வருகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார் ஆகியோரின் வரலாற்றை உள்ளடக்கியது இவ்வாலயம். இங்கு கடந்த 26-10-2015 திங்கட்கிழமையன்று ஆநிலயப்பருக்கு அன்னாபிஷேகமும், ஆலய வளாகத்தில் பரதாஞ்சலி நிகழ்ச்சியும் மிக விமரிசையாக நடைபெற்றது.

ஐம்பசி மாதம் பெளர்ணமி திதியில் இதுபோன்ற அன்னாபிஷேகத்தை சிவபெருமானுக்குச் செய்து வழிபடுவார்கள். ஏராளமான பக்தர்கள் வந்து பசுபதீஸ்வரரை தரிசித்துச் சென்றதோடு, ஆலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற கரூர் ஆடல்வல்லான் நாட்டியப் பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்துச் சென்றனர்.

சந்நிதித் தெருவில் இயங்கி வரும் ஆடல்வல்லான் நாட்டியப் பள்ளியை அவ்வூரைச் சேர்ந்த திருமதி எம்.சுகந்தப் பிரியா அவர்களுடைய மாணவியர்களைக் கொண்டு பரதாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். நால்வர் அரங்கம் எனும் பெயர் பெற்ற அந்த அரங்கம் இதுபோன்ற இறையுணர்வு மிக்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைந்த அரங்கம். கருவூர் சித்தர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. அங்கு அன்று நடந்த மாணவியரின் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாகத் திருவையாறு பாரதி இயக்கத்தின் அறங்காவலர் திரு பி.ராஜராஜன் அவர்களும், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவர் திரு வெ.கோபாலன் அவர்களும் முன்னிலை வகித்தனர். சக்தி தரிசனம்எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் நாட்டிய மயூரிதிருமதி எம்.சுகந்தப் பிரியா நட்டுவாங்கமும், பரத இசை மாமணி ஏ.சூசைராஜ் வாய்ப்பாட்டும், ராகரத்னா ஆத்தூர் என்.சோமசுந்தரம் வயலின் இசையும், கலைக்கோ மாமணி திருவேட்டக்குடி சி.சரவணன் மிருதங்கமும், கலைமாமணி திரு அழகு ராமசாமி முகர்சிங் வாசித்தனர்.

நிகழ்ச்சி கோவை ஆ.தண்டபாணி அவர்களின் தேவார இன்னிசையுடன் தொடங்கியது. கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் செயலர் திருமதி எம்.பத்மாவதி மோகனரங்கன், ஸ்ரீசங்கரா வித்யாலயாவின் நிறுவனர் திருமதி பி.சாமியாத்தாள் பழனிசாமி, ப்ரீத்தா நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.ஜெயம்மாள் மோகன்ராஜ், ஸ்ரீ அஞ்சனா நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.சுசரிதா நெடுஞ்செழியன், அம்மன் ஸ்கேன் செண்டர் மருத்துவர் எஸ்.கீதா குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

கரூர் மக்களின் அமோக ஆதரவோடு அன்னாபிஷேகமும், பரதாஞ்சலியும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆடல்வல்லான் நடனப் பள்ளியின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விழா இனி நடைபெற்று முடிந்தது.

                                   


Sunday, October 25, 2015

நால்வர் நாகராஜன்

                                       
பிற்காலத்தில் பிரபல சினிமா இயக்குனராக அறிமுகமான ஏ.பி.நாகராஜன் முதன் முதலில் இந்தப் பெயரில்தான் சினிமாக்களில் அறிமுகமானார். காரணம் இவர் நடித்து வந்த “நால்வர்” என்ற நாடகம் பிரபலமானது. அதே பெயரில் அவர் ஒரு திரைப்படமும் எடுத்தார். ஆனால் அவர் பின்னாளில் எடுத்த பிரம்மாண்டமான படங்களுக்கு முன்னோடியாக இவர் சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படங்களே இவர் திறமையை பறை சாற்றின. வில்லன் நடிகர் S.A. நடராஜன் எடுத்த “நல்ல தங்கை” எம்.ஏ.வேணுவின் “பெண்ணரசி”,“சம்பூர்ண ராமாயணம்” உள்ளிட்ட பல படங்கள் ஆகியன இவர் பெயரை உயர்த்திப் பிடித்தன. “தில்லானா மோகனாம்பாள்” இவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்பதன் சுருக்கம்தான் ஏ.பி.என். 1928இல் பிறந்த இவர் சிறுவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். தன் ஏழு வயதில் இவர் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். அங்கு இவர் கற்ற தமிழ், இலக்கண பூர்வமாகவும், இலக்கியத் தரமாகவும் இருந்த காரணத்தால்தான் இவரைப் போல தமிழை உச்சரிக்கவும், திரையில் பிறரை நல்ல தமிழ் பேசி நடிக்க வைக்கவும் முடிந்தது.

இவர் எழுதி நடித்து வந்த “நால்வர்” நாடகம் திரைப்படமாக உருவானது. அதன் கதை வசனம் நடிப்பு எல்லாமே இவர்தான். அதனால்தான் நால்வர் நாகராஜன் எனப் பெயர் பெற்றார். “மாங்கல்யம்”, பெண்ணரசி, ஆசை அண்ணா அருமைத் தம்பி, டவுன் பஸ், நல்ல தங்கை ஆகியவை இவர் புகழை வெளிக் கொணர்ந்தது. டவுன் பஸ் படத்தில் வந்த “ஏரிக் கரை மேலே” பாடலும், நல்ல தங்கையில் வந்த “புருசன் வீடு போகப்போற பெண்ணே, தங்கச்சி கண்ணே” என்ற பாடலும் இவரை அடையாளம் காட்டியவை..

சிவாஜியை கொங்கு தமிழ் பேச வைத்த “மக்களைப் பெற்ற மகராசி” அதில் வரும் பாடல்களும் அந்தக் காலத்தின் ஹிட். முன்பொரு முறை ஒரு பழைய திரைப்படத்தில் இவர் எழுதி புகுத்திய தருமி காட்சியை மீண்டும் திருவிளையாடலிலும் கொண்டு வந்து ஹிட் ஆக்கிக் காட்டினார். அதற்கு நாகேஷின் நடிப்பும் துணை புரிந்தது என்பதையும் மறுக்க முடியாது.

புராண படங்கள் இவர் எடுத்ததைப் போல வேறு யாரும் எடுக்க முடியாது என்பதுபோல “திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமால் பெருமை” ஆகிய படங்களை எடுத்துப் புகழ் பெற்றார். இவை தவிர “தில்லானா மோகனாம்பாள்”, “நவராத்திரி” ஆகியவை வெற்றிப் படங்கள்.

“திருமலை தென்குமரி”, “மேல்நாட்டு மருமகள்” படம் இதில் உஷா உதூபின் ஆங்கிலப் பாடல், ஜி.உமாபதிக்காக எடுத்த “ராஜராஜசோழன்”, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரல் பாடல்களுடன் வந்த “அகத்தியர்”, பொழுது போக்குக்காக “கண்காட்சி”, திருவருட்செல்வர், குலமகள் ராதை, வடிவுக்கு வளைகாப்பு போன்ற இதர படங்களும் இவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

'திருவிளையாட'லில் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்

தொடக்க காலத்தில் இவர் படங்களை கே.சோமுவும், பிறகு தானே இயக்கவும் தொடங்கினார். இசை கே.வி.மகாதேவன் அதிகமான படங்களுக்கு. திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் ஆகியவை விருதுகள் பெற்ற படங்கள்.

இவர் தொடக்க காலம் முதல் அரசியலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் இருந்து வந்தார். முதன் முதலாக சேலத்தில் நடந்த இரண்டாவது தமிழரசுக் கழக மகாநாட்டின் போது ம.பொ.சி. அவர்களின் மணிவிழாவை ஒட்டி இவரும் இயக்குனர் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவும் சேர்ந்து ம.பொ.சி.க்கு ஒரு பியட் காரை வாங்கி பரிசளித்தார்கள். இவர் படங்களில் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த கவி கா.மு.ஷெரீப் அவர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார். இவ்விருவரும் பத்திரிகைத் துறையிலும் இணைந்து செயல்பட்டார்கள்.

கவி கா.மு.ஷெரீப் அவர்கள் “தமிழ் முழக்கம்” என்ற இருவார இதழையும், ஏ.பி.என். ஐ ஆசிரியராகக் கொண்ட “சாட்டை” வார இதழையும் நடத்தி வந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் தீவிரமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் சேலத்திலிருந்து வேறொரு புலவரை (புலவர் நாக.சண்முகம் என்று நினைவு) ஆசிரியராக வைத்து “சண்டமாருதம்” என்றொரு இதழை வெளியிட்டு வந்தார். அதில் ஏ.பி.என். ஐ அவர்கள் சண்டமாருதமாகத் தாக்கி எழுதி வந்தார்கள்.

ஏ.பி.என் எடுத்த “பெண்ணரசி” படம் வெளிவந்த போது இவர்கள் சொன்ன விமர்சனம் என்னவென்றால், அரசி என்றாலே பெண் தான், அதில் என்ன பெண்ணரசி? என்பதுதான். அதற்கு ஏ.பி.என். சாட்டையில் எழுதினார் (ஏ.பி.என். அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பதில்) அரசி என்பவள் அரசனின் மனைவி, அவள் ராஜ்யத்தை ஆள்வதில்லை, பெண்ணரசி என்பவள் பெண்ணாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள்பவள் என்றார்கள். சண்டமாருதம் அடங்கிவிட்டது.

இப்படி திரைத் துறையிலும், பத்திரிகையுலகிலும் ஏ.பி.நாகராஜன் கொடிகட்டிப் பறந்த காலம் திரையுலகின் வசந்த காலம். வாழ்க ஏ.பி.என். புகழ்.


Saturday, October 24, 2015

எம்.எல்.வசந்தகுமாரி

                                 
எம்.எல்.வசந்தகுமாரி, இந்தப் பெயர் கர்நாடக இசையுலகில் மட்டுமல்ல, தமிழ் திரையிசை உலகிலும் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். இசை அமைப்பாளர் ஜி.ராமநாத ஐயருக்கு மிகப் பிடித்த குரல்கள் சில கலைஞர்களுடையவை, அவற்றில் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர்; மற்றொருவர் எஸ்.வரலட்சுமி. நல்லதொரு குருவுக்கு சிஷ்யையாக இருந்தார் என்பதோடு நல்ல சில இசைக் கலைஞர்களுக்கு குருவாகவும் இருந்து உருவாக்கியவர் இவர்.

எம்.எல்.வசந்தகுமாரி என்பதன் விரிவு மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதாகும். இவர் 1928 ஜூலை 3ஆம் தேதி பிறந்தவர். இவர் திரையுலகில் பிரபலமாக இருந்த நேரத்தில் வேறு சில கர்நாடக இசைப் பாடக பாடகிகளும் திரையுலகில் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம் ஆகியோரைக் குறிப்பிடலாம். அன்றைய இசையுலக சூப்பர் ஸ்டார்கள் என்றால் எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி என்பார்கள். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களின் சிஷ்யை இவர்.

எம்.எல்.வி. என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருபவர்கள் சுதா ரகுநாதன், வயலின் ஏ.கன்யாகுமாரி, சாருமதி ராமச்சந்திரன் ஆகியோராவர். எம்.எல்.வியின் தாய் லலிதாங்கி என்பதைப் பார்த்தோம், தந்தையார் ஐயாசாமி ஐயர். எம்.எல்.வியின் பள்ளிக் கல்வி சென்னை நகரத்தில்தான். இசைக் கல்வி ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம். புரந்தரதாசர் பற்றி இசை அறிந்தோருக்கு எல்லாம் நன்கு தெரியும். அவருடைய கன்னட மொழி பாடல்களை தமிழ் நாட்டில் பிரபலப்படுத்தியவர் எம்.எல்.வி.

இவர் தன்னுடைய தாயாருடன் வட இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடு சேர்ந்து இவரும் பாடியிருக்கிறார். அப்பொது அவருக்கு வயது 12. இவர் தனிக் கச்சேரி செய்தது பெங்களூரில். 1950க்குப் பின்னர் வந்த காலகட்டத்தில் இவருடைய இசை கேட்காத இடமில்லை, நாளில்லை என்று ஆயிற்று. இவர் இசையால் வசப்படுத்திய உள்ளங்கள் ஏராளம். குரலில் ஒரு தனித் தன்மை, மணமகள் படம் இவர் பாடலை உலகறியச் செய்தது.
பல பாடல்கள் ஏற்கனவே இசையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், சில பாடல்களை சில இசைக் கலைஞர்கள் பாடி பிரபலப்படுத்தியதன் விளைவாக, அத்தகைய பாடல்களைக் கேட்கும் போது நமக்கு அந்தந்த இசைக் கலைஞர்களின் நினைவுதான் வரும். செம்பை வைத்தியநாத பாகவதர் என்றால் அவர் முத்திரையோடு சில பாடல்கள், மகாராஜபுரம் சந்தானம் என்றால் அவரால் பிரபலமான சில பாடல்கள், மதுரை மணி ஐயர் என்றால் அவரால் சிறப்புப் பெற்ற சில பாடல்கள் என்று ஒவ்வொருவருக்கும் புகழ் சேர்த்த பாடல்கள் பல உண்டு. அப்படிச் சில பாடல்கள் எம்.எல்.வியின் முத்திரையைப் பெற்றவை.

ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு பக்கவாத்திய கலைஞர்களை வைத்துக் கொள்ளும் கலைஞர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட தன் இசை வாழ்க்கை முழுவதும் இவர் கன்னியாகுமாரியை வயலினுக்கும், திருவள்ளூர் சுப்ரமணியம் அவர்களை மிருதங்கத்துக்கும் வைத்திருந்தார் என்பது பாராட்டத் தக்கது.

கர்நாட இசையுலகில் இவர் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்கு திரையுலகிலும் இவர் பிரபல பாடகியாக விளங்கினார். 1951இல் வெளிவந்த “மணமகள்” படத்தில் இவர் பாடிய “எல்லாம் இன்ப மயம்” எனும் பாடல் இன்றுவரை சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மகா கவி சுப்ரமணிய பாரதியார் “சின்னஞ்சிறு கிளியே” என்ற பாடலை இயற்றியதோடு அதற்கு ராகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தப் பாட்டை திரைப்படத்துக்காக இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் அமைத்த இசையில் எம்.எல்.வி. பாடிய பாடல்தான் இன்றும் பிரபலமாகியிருக்கிறது.

“கொஞ்சும் புறாவே” என்றொரு பாடல், இவர் குரலில் கொஞ்சியது. இப்படி இவர் பாடிய பாடல்கள் எல்லாம் காலத்தால் மறக்க முடியாத பாடல்களாகவே அமைந்தன. இசை அமைப்பாளர்களின் திறமை, எம்.எல்.வியின் குரல் வளத்தோடு கூடிய இசை வளம் ஆகியவை இன்றும் நான்கு திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஜி.ராமநாதன் இசையில் ஐம்பெருங்காப்பியங்களை ஆபரணங்களாகப் பூட்டி தமிழ்த்தாயின் அழகை விளக்கி அவர் பாடும் பாடலொன்று மிகவும் வரவேற்பைப் பெற்றது.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் நடத்தச் சொன்னதும், எல்லா ஊர்களிலும் அத்தகைய மாநாடுகள் நடந்தன. அதற்காக அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் ஒலித்தட்டுகளாக வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்தன.

இசைக் கச்சேரிக்கு எம்.எல்.வி. வந்து மேடையில் அமர்ந்தவுடனேயே அங்கு ஒரு கம்பீரம் தோற்றமளிக்கும். அவர் பாடத் தொடங்கிய பின்னர் முடிக்கும் வரை மக்கள் உள்ளங்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும்.

விகடம் கிருஷ்ணமூர்த்தி மேடைகளில் ‘விகடக் கச்சேரி’ செய்வார். பெரும்பாலும் ராஜாஜி, கல்கி ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் மேடையேறி விகடம் செய்வார். அதில் ராஜாஜியை வைத்துக் கொண்டே அவரைப் போலவே கையில் கைத்தடி, முகபாவம் எல்லாம் காட்டி அவையை கலகலப்பாக்குவார். 1951இல் எம்.எல்.வி. இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், ராஜாஜியின் ஆசியுடன்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகள்தான் பிரபல நடிகை ஸ்ரீவித்யா. எம்.எல்.வி. புரந்தரதாசரின் படைப்புகளை வைத்து மைசூர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இளம் வயதில் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றார்.


1948 தொடங்கி 1965 வரையிலான காலகட்டத்தில் இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடியுள்ளார். இத்தனை புகழையும் ஏற்றுக்கொண்டு இசையுலகின் சக்கரவர்த்தினியாக வாழ்ந்த எம்.எல்.வசந்தகுமாரி 1990ஆம் வருஷம் தன்னுடைய 63ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். பூமியில் பாடியது போதும், வந்து எங்கள் முன்பு பாடு என்று இறைவன் அவரை அழைத்துக் கொண்டு விட்டார் போலும். வாழ்க எம்.எல்.வி. புகழ்!

Thursday, October 22, 2015

காந்தியடிகளின் 12 பொன்மொழிகள்.

                           

1.    ஒரு தனிமனிதனுக்கு ஒரு தடவை சேவை செய்வதைக் காட்டிலும் ஆயிரம் தலைகள் வணங்கி இறைவனிடம் இறைஞ்சுவது மேலானது.

2.    மனித இனத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. ஏனென்றால் மனித இனம் ஒரு கடல்; அதில் ஒருசில துளிகள் அழுக்கு என்றால் அந்தக் கடலே அழுக்காகி விடாது.

3.    கவலைகள் மனிதனை அரித்துத் தின்றுவிடும்; ஆனால் இறைவனிடம் பக்தி கொண்டவன் எதனைக் குறித்தும் கவலைப்பட வெட்கப்படுவான்.

4.    இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றபோது சொற்கள் இல்லாமல் இதயத்தைச் செலுத்து; இதயத்தின் ஈடுபாடு இல்லாத சொற்களை நிறுத்து.

5.    நண்பர்களிடம் நட்பாக நடந்து கொள்வது சுலபம்; ஆனால் நம்மை எதிரியாக எண்ணும் ஒருவனிடம் நட்பு கொள்வது என்பது உண்மையான புனிதச் செயல்பாடு. மற்றவை வெறும் கொடுக்கல் வாங்கல்.

6.    மனிதன் பிறரை அவமதிப்பதில் மகிழ்ச்சியடைவதன் இரகசியம்தான் என்னவென்று ஆச்சரியப் படுகிறேன்.

7.    இவ்வுலகத்தில் மனிதனின் அவசியத் தேவைகளுக்கேற்ப எல்லாமே கிடைக்கின்றன; ஆனால் அவனுடைய பேராசைகளுக்கு ஏற்ப எல்லாம் கிடைப்பதில்லை.

8.    நான் மனிதனின் இனிய குணங்களை மட்டுமே காண்கிறேன்; நானே குற்றமற்ற புனிதனாக இல்லாத நிலையில், பிறரிடம் குற்றம் காண முயற்சிக்க மாட்டேன்.

9.    இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால், யுத்தத்துக்கு எதிரான யுத்தமொன்று நிகழ வேண்டுமானால், சின்னஞ்சிறு குழந்தைகளிடம் நம் போதனைகளைத் தொடங்க வேண்டும்.

10. எதில் உண்மையான மகிழ்ச்சி தோன்றுகிறது? உங்கள் சிந்தனையும், சொல்லும், செயலும் ஒரே மாதிரி இருக்கும்போதுதான்.

11. மலை வாயில் கதிரவன் விழுந்து மறைகின்ற அற்புதக் காட்சியையோ, அல்லது கீழ் வானில் உதிக்கின்ற சந்திரனின் அழகையோ பார்க்கின்ற போதெல்லாம் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனை எண்ணி வணங்குகிறேன்.


12. உன்னையே நீ யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டுமானால், பிறருக்குச் செய்யும் சேவையில் நீ உன்னை அர்ப்பணித்துக் கொள்.

Wednesday, October 21, 2015

டி.ஆர்.ராஜகுமாரி

                                                
“ஹரிதாஸ்” படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ” ஆகிய பாடல்களையோ, அந்த பாடல்களில் நடித்த அந்த அழகிய நடிகையான டி.ஆர்.ராஜகுமாரியையோ பழைய கிழவர்கள் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கனவுக் கன்னி அந்தக் காலத்தில் டி.ஆர்.ராஜகுமாரி.

“மனோகரா”வில் வில்லியாக வந்து மனோகரனை ஆட்டிப் படைத்துக் கொண்டு தன் இரண்டும் கெட்டான் மகனையும் சமாளித்துக் கொண்டு வில்லன் நடராஜனுடன் ஆடிய ஆட்டத்தை யார்தான் மறக்க முடியும். மயக்கும் கண்கள், சுழிக்கும் உதடுகள், ஒரு அசையில் அத்தனை மனங்களையும் சொக்க வைத்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. (அடடா! அந்தக் கால நினைப்பு)

தஞ்சாவூர் கலைகளின் பிறப்பிடம். இங்குதான் பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவருடைய இயற்பெயர் ராஜாயி, பிறந்தது 1922. தஞ்சாவூர் ராஜகோபாலசாமி கோயில் தெரு என்பது ஐயன் கடைத்தெருவுக்கு அருகில் உள்ளது. அங்குதான் இவர் பிறந்தது. தாயார் பெயர் குஜலாம்பாள். இவர் அன்றைய நாளில் சங்கீதத்தில் தலை சிறந்த கலைஞர். இவருடைய சகோதரர் டி.ஆர்.ராமண்ணா. ஆமாம்! திரைப்பட இயக்குனர் ராமண்ணாதான். தந்தையார் இவருடைய இளம் வயதிலேயே காலமாகிவிட்டார்.

முதன் முதலில் 1939இல் குமார குலோத்துங்கன் எனும் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மந்திரவாதி’, ‘சூரியபுத்திரி’ ஆகிய படங்கள் தொடர்ந்தன. இன்றைய இயக்குனர் சிகரம் பாலசந்தர் போல அன்றைய இயக்குனர் திலகம் டைரக்டர் கே.சுப்பிரமணியம். பரத நாட்டிய நிபுணர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையார். அவர் அப்போது “கச்ச தேவயானி” என்றொரு படம் எடுத்தார்.  அது பெரும் வெற்றியைப் பெற்றது.  1943இல் தியாகராஜ பாகவதருடன் “சிவகவி” என்றொரு படம். அதே பாகவதருடன் ஆண்டுக் கணக்கில் சென்னையில் ஓடிய படமான ‘ஹரிதாஸ்’ ஆகியவற்றில் இவர்தான் கதாநாயகி.    

அன்றைய நாயகர்கள் எல்லாம் நன்கு பாடக்கூடியவர்கள் அல்லவா? பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நல்ல பாடகர்கள். சின்னப்பாவுடன் “மனோன்மணி” என்ற படம். ஜெமினி நிறுவனம், அவர்கள் படத்தில் நடித்தால் ஒரு முத்திரை பெற்ற நடிக நடிகைகளாக ஆகிவிடுவர். அவர்கள் எடுத்த பிரம்மாண்டமான படம் “சந்திரலேகா”. அதில் இவர்தான் கதாநாயகி. அந்த கண்களில் ஒரு கிரக்கம், உடல் அசைவில் ஒரு மோக போதை இவற்றை அள்ளி அள்ளி கொடுக்கும் நடிப்பு ராஜகுமாரியினுடையது. ஜெமினியின் சந்திரலேகாவில் கதாநாயகன் எம்.கே.ராதா, வில்லன் ரஞ்சன். அந்த படத்தில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் டிரம் டான்ஸ் ஆடி மகிழ்வித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. அந்தப் படத்தில் மக்களைக் கவர்ந்த அந்தக் காட்சியில் அமைதியான அண்ணன் எம்.கே.ராதா தன் தம்பியான ரஞ்சனிடம் “நான் சொல்வதைக் கேட்டுக் கொள்” என்பார். அதற்கு ரஞ்சன், திரும்ப “நான் கொடுப்பதை வாங்கிக் கொள்” என்று தன் குறுவாளை அவர் மீது வீசுவார். மயிரிழையில் அவர் உயிர் தப்புவார். இதுபோன்ற அற்புதமான காட்சிகள் அதில்.

“மனோகரா” ஒரு வெற்றிப் படம். அதில் வில்லி ராஜகுமாரி. பெயர் வசந்தசேனை. இவர் 1999 செப்டம்பர் 20இல் காலமானார்.


டி.ஆர்.மகாலிங்கம்

                      
                சென்ற நூற்றாண்டில் சினிமாவின் ஆதிக்கம் வருவதற்கு முன்பாக நாடகங்களே அதிகம் நடிக்கப்பட்டும், மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இப்போது சினிமா நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது போல அந்தக் கால நாடக நடிகர்கள் புகழ் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நாடக நடிகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, செல்லப்பா இவர்களெல்லாம் அந்தக் கால ஹீரோக்கள். இதில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் இசை மிக பிரபலமானது. ஒரு பாடலை எடுத்துப் பாடத் தொடங்கினால் அதுவே பல மணி நேரம் நீடிக்குமாம், அதைப் பாடி முடித்ததும் ‘ஒன்ஸ் மோர்’ என்று கேட்டு மறுபடியும் பாட வைப்பார்களாம். வள்ளித் திருமணம் நாடகத்தில் “காயாத கானகத்தே நின்றுலாவும்” என்ற பாடலை அவர் பாடத் தொடங்கினால் அன்றைய இரவு முடிந்து பொழுதும் விடிந்துவிடுமாம். நம் காலத்தில் நாம் அறிந்த கே.பி.சுந்தராம்பாள் (‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ போன்ற பல அற்புதமான பாடல்களைப் பாடியவர்) அவர்கள் இந்த கிட்டப்பாவைத்தான் மணந்து கொண்டார், அவர் இளம் வயதில் இறந்த பின் விதவைக் கோலம் பூண்டு கடைசி வரை அப்படியே இருந்தார். பிறகு ஜெமினியின் “ஒளவையார்” படத்திலும் பிறகு ஏ.பி.நாகராஜனின் ‘திருவிளையாடல்’ படத்திலும் தொடர்ந்து வேறு சில படங்களிலும் சுந்தராம்பாள் நடித்ததனால் நம் தலைமுறையினருக்கு அவரைத் தெரியும். போகட்டும், அந்த எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களைப் போலவே அந்தக் காலத்தில் ஒரு இளைஞன் பாடி வந்தார். அவர்தான் டி.ஆர்.மகாலிங்கம்.

               மதுரை ஜில்லா சோழவந்தான் இவரது ஊர். டி.ஆர். என்பதற்கு தென்கரை ராமகிருஷ்ணன் என்றும் இவரது பெயரான மகாலிங்கத்துடன் இணைத்து இவர் அழைக்கப்பட்டார். இந்த தென்கரை என்பது சோழவந்தான் அருகிலுள்ள இடம். அங்கு இவர் 1924ஆம் ஆண்டில் பிறந்தார். இறைவனது படைப்பில் சில அதிசயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சில குழந்தைகள் பேசத் தொடங்குமுன்னரே பாடத் தொடங்கி விடுகின்றன. அவர்களுக்கு அந்த சிறிய வயதில் எப்படித்தான் இசை ஞானம் வந்ததோ தெரியாது; அது இறைவன் கொடுத்த வரம். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் வரலாற்றில் சொல்லப்படும் ஒரு செய்தி இந்த இடத்தில் சிந்திக்கத் தோன்றுகிறது. காலஞ்சென்ற சில மேதைகளின் ஆன்மா அத்தனை சீக்கிரத்தில் அடுத்த பிறவி எடுத்துவிடுவதில்லையாம். அவை தங்களுக்கு ஏற்ற கருவினை எதிர்பார்த்துக் காத்திருக்குமாம். ஒரு பெண் கருத்தரித்து ஏழு மாதம் ஆகும்போதுதான் அந்த மேன்மை பொருந்திய ஆன்மா தனக்கு அந்த பெண்ணின் கருப்பை ஏற்ற இடம் என்று முடிவுசெய்து அதில் குடியேறுமாம். அதனால்தான் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் ஏழாம் மாதம் “காப்பு’ செய்ய வளைகாப்பு, பும்சவன ஸ்ரீமந்தம் ஆகியவைகளை செய்கிறார்களாம். இது சதாசிவ பிரம்மேந்திரர் பிறப்பு பற்றி சொல்லும் வரலாற்றில் இருக்கிறது. அப்படியொரு இசை மேதைதான் வந்து பிறந்தாரோ என்னவோ இந்த டி.ஆர்.மகாலிங்கம் இளம் வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார். அடடா! அது என்ன சாரீரம் (சாரீரம், சரீரமல்ல). இனி வரலாற்றுக்கு வருவோம்.

                டி.ஆர்.மகாலிங்கம் ஐந்து வயதிலேயே மேடையில் ஏறி நாடகங்களில் நடித்தும் பாடியும் வரத் தொடங்கினாராம். இவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர் செல்லூர் சேஷ ஐயங்கார் என்பார். அவரிடம் மிருதங்கம், பாட்டு இரண்டையும் இவர் கற்றார். சோழவந்தான் அக்ரகாரத்தின் நடுவில் இப்போதும் ஒரு பஜனை மடம் உண்டு. அதுபோன்ற பஜனை மடங்களிலும், கோயில்களிலும் மகாலிங்கம் பாடுவது வழக்கம்.

               பாய்ஸ் கம்பெனியில் நடிக்கத் துவங்கிய மகாலிங்கத்தை எல்லோரும் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என்றுதான் சொன்னார்கள். இவருக்கு 12 வயது ஆனபோது இவர் நடித்த ஒரு நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத் தலைவர் மெய்யப்ப செட்டியார் பார்த்திருக்கிறார். உடனே அவர் தான் எடுத்த நந்தகுமார் எனும் திரைப் படத்தில் இவரை கிருஷ்ணன் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அந்தப் படத்தில் பால கிருஷ்ணன் தான் கதாநாயகன், அவன் தான் பிருந்தாவனத்தின் நந்தகுமாரன். இப்போது பிரபலமாயிருக்கிற நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையான எஸ்.வி.வெங்கட்ராமன் அப்போது ஒரு பெரிய இசை டைரக்டர். இதில் அவருடைய இசையில் மகாலிங்கம் பாடி நடித்தார்.

            தொடர்ந்து மேலும் சில படங்கள், அவை பெயர் சொல்லும்படியாக வெற்றி பெறவில்லை. இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த போதிலும், இவரது கவனம் முழுவதும் நாடக மேடையில்தான். வள்ளித் திருமணம், பவளக்கொடி என்று அந்த நாளைய புராண நாடகங்கள் அப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. அதிலெல்லாம் இவர்தான் கதாநாயகன். எந்தவொரு கம்பெனியிலும் சம்பளத்துக்கு நடிக்காமல், இவர் ஸ்பெஷல் நாடக நடிகர் என்று அவ்வப்போது கூப்பிடும் இடத்துக்குச் சென்று நடிப்பார். ஸ்பெஷல் நாடகம் என்றால் நடிகர்கள் இதற்கென்று வந்து நடித்துக் கொடுப்பார்கள், இதுவே தொடர்ந்து தினசரி வேலையாக இல்லை.

             அப்போது ஏ.வி.எம். செட்டியார் அவர்கள் காரைக்குடியில் தனது திரைப்பட ஸ்டுடியோவை வைத்திருந்தார். அப்போது 1945இல் ஸ்ரீவள்ளி என்றொரு படம் எடுத்தார். அதில் மகாலிங்கம் தான் முருகன். கதாநாயகியாக நடித்தவர் யார் தெரியுமா, இப்போது சீனியர் நடிகையாக விளங்கும் லக்ஷ்மியின் தாயார் தான் அப்போது கதாநாயகி. ஸ்ரீவள்ளி ஒரு ஹிட், வெற்றிப் படம். அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம்.

             டி.ஆர்.மகாலிங்கம் நடித்த படங்களின் பட்டியல் மிக நீளமானது. அத்தனையும் இங்கு சொன்னால் அது இடத்தை அடைக்கும். குறிப்பாக ஒருசில படங்களின் பெயரைச் சொன்னால் போதும். பவளக்கொடி, இதயகீதம், விளையாட்டு பொம்மை, மோகனசுந்தரம், மச்சரேகை, நாம் இருவர், ஸ்ரீவள்ளி, ஆதித்தன் கனவு, ஆட வந்த தெய்வம், அபலை அஞ்சுகம், ஏ.பி.என்.இன் திருவிளையாடல், ராஜராஜசோழன், அகத்தியர், மாலையிட்ட மங்கை, போன்ற பல படங்கள்.

             இவருடைய வாழ்க்கையில் மிக செல்வத்தின் உச்சத்தையும், அதன் அடிமட்டத்தையும் தொட்டுப் பார்த்தவர் இவர். காலத்தின் கோலம் இவர் திரைத் துறை வாழ்க்கையை விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமை வந்தது. பிறகு ஏ.பி.நாகராஜன் திருவிளையாடலில் கொடுத்த வாய்ப்பைத் தொடர்ந்து மீண்டும் திரையில் இவர் இசை ஒலிக்கத் தொடங்கியது.

              ஏ.வி.எம். எடுத்த “நாம் இருவர்” படத்தில் பி.ஆர்.பந்துலுவின் தம்பியாக வருவார் டி.ஆர்.மகாலிங்கம். குமாரி கமலா என அப்போது அறியப்பட்ட கமலா லக்ஷ்மண் அதில் பாரதியார் பாடல்களுக்கு மிகவும் அழகாக நடனம் புரிந்திருப்பார். அப்போது பாரதியார் பாடல்களின் உரிமை ஏ.வி.எம். செட்டியார் வசம் இருந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக்கொண்டதற்கிணங்க செட்டியார் பாரதியார் பாடல்களின் உரிமைகளை சென்னை அரசாங்கத்துக்குக் கொடுத்து விட்டார்.

1978இல் இவர் காலமானார்.

Tuesday, October 20, 2015

பி.யு.சின்னப்பா


        அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டுமானால் நல்ல இசை ஞானம் இருக்க வேண்டும், நல்ல குரல் வளத்தோடு பாடல்களை பாடுபவர்களாக இருத்தல் அவசியமாக இருந்தது. அப்படிப்பட்ட தொரு தமிழ் நடிகர், நல்ல பாடகராகவும், சண்டைக் காட்சிகளில் நடிப்பவராகவும் விளங்கியவர் பி.யு.சின்னப்பா. இவரது இயற்பெயர் சின்னச்சாமி, பின்னாளில் இவரே தன் பெயரை சின்னப்பா என்று மாற்றிக் கொண்டார். இவர் பல பிரபலமான கர்நாடக இசைப் பாடல்களில் அதே மெட்டில் சினிமாவுக்காகப் பாடல்களைப் பாடியவர். குறிப்பாக ‘நாத தனுமனுசம்’ என்ற பாட்டை “காதல் கனி ரசமே” என்று பாடியதைப் போல பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

        புதுக்கோட்டை தமிழ் நாட்டில் இருந்த ஒருசில சமஸ்தானங்களில் ஒன்று. இங்கு ஆண்ட ராஜாக்கள் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட காலத்தில்கூட சுதேச சமஸ்தானங்களில் போராட்டங்கள் அவ்வளவாக நடைபெறவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். அங்கு திவானாக இருந்தவர் சேஷையா சாஸ்திரி என்பார், ஒரு முறை அங்கு பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கிராமத்து விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து அங்கு எடுத்த மண்ணைக் கொண்டு அரசாங்க கட்டடங்களைக் கட்டி புதுக்கோட்டையை வளங்கொழிக்கச் செய்தார் என்பர். அந்தக் குளம் தான் ‘புதுக் குளம்’ என வழங்கும் குடிநீர் குளம். இதன் மேல் கரையில் உள்ள பூங்காவுக்கு ‘பி.யு.சின்னப்பா பார்க்’ என்று பெயர்.

        அந்த புதுக்கோட்டையில் பிறந்தவர்தான் பி.யு.சின்னப்பா. தன்தையார் உலகநாதப் பிள்ளை தாயார் மீனாட்சி அம்மாள். இவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உண்டு. இவர் பிறந்த ஆண்டு 1916.

        தந்தை உலகநாதரும் ஒரு நாடக நடிகர் என்பதால், இளம் வயதிலேயே இவருக்கு நாடகத்தின் மீது காதல் ஏற்பட்டு தனது ஐந்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நாடகத்தில் நடிப்பு என்பதனால் இவருக்கு பாடல்கள் மிக சுலபமாக பாட முடிந்தது. படிப்பைப் பொறுத்தவரை இவர் தொடக்கப் பள்ளிக் கல்வியைத் தாண்டவில்லை. இவருக்கு நாடகம் தவிர உடற்பயிற்சிகளில் மிக ஆர்வம் உண்டு. அதனால் அப்போதைய வழக்கப்படி குஸ்தி, சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்தார்.

        நாடகத்தில் நடிப்பதற்காக இவர் சேர்ந்த குழு தத்துவ மீனலோசனி வித்வ பால சபா என்பது. இவருடைய இந்தக் குழுவில்தான் டி.கே.சண்முகம் சகோதரர்களும் நடித்து வந்தனர். அதிலிருந்து அவர்கள் மதுரை ஒரினினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் குழுவுக்கு மாறினார். அது அப்போது புதுக்கோட்டையில் நாடகங்கள் நடத்தி வந்தது.
புதிய நாடகக் கம்பெனியில் இவருடைய இசைத் திறமையைக் கண்டறிந்து இவருக்கு நல்ல வேடங்களைக் கொடுத்து ஊதியத்தையும் அதிகப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி அவர் நடித்து வந்த நேரத்தில் அந்தக் கம்பெனியில் இருந்த மற்ற நடிகர்களில் எம்.ஜி.ஆர்., காளி என்.ரத்தினம், எம்.ஜி.சக்கரபாணி போன்றவர்களும் இருந்தனர். அப்போதெல்லாம் நாடகங்களில் பாடுகின்ற நடிகர்கள் நன்றாகப் பாடினால் கூட்டத்தினர் ‘ஒன்ஸ்மோர்’ என்று மீண்டும் பாடச்சொல்லிக் கேட்பார்கள். அப்படி இவருடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் அன்றைய ரசிகர்கள்.

        இவருக்கு இயல்பாகவே பாட முடிந்தது என்றாலும், முறையாக இவர் சங்கீதம் கற்றுக் கொள்ளமலே இருந்தார். எதிர்கால நன்மையைக் கருதி இவர் சில குருநாதர்களிடம் சேர்ந்து இசையை முறையாகக் கற்கத் தொடங்கினார். ஓரளவு இவர் ஒரு கர்நாடக சங்கீத வித்வானைப் போலவே பாடத் தொடங்கிவிட்டார்.

        இப்படி இவர் பல துறைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்த காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் கம்பெனியார் இவரைத் தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  அந்தப் படம் “சந்திரகாந்தா” எனும் பெயருள்ள படம்.

        அப்போதுதான் சின்னசாமி என்ற தன் பெயரை ‘சின்னப்பா’ என்று மாற்றி வைத்துக் கொண்டார். தொடர்ந்து இவர் நடித்து வெளியான திரைப்படங்களின் பெயர்களாவன: பஞ்சாப் கேசரி, ராஜ்மோகன், அநாதைப்பெண், யயாதி, மாத்ருபூமி. அந்த காலகட்டத்தில்தான் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரைப் பற்றி அறிந்துகொண்டு இவரைத் தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்தப் படம் “உத்தம புத்திரன்”. இந்தப் படம் வெளியான வருஷம் 1940. இரட்டை வேடத்தில் இவர் நடித்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் நடித்தார். அதில் ஒன்றுதான் “மனோன்மணி”. இது மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய நூலின் கதை. இதில் பி.யு.சின்னப்பாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படம் சின்னப்பாவின் திரையுலகில் ஒரு வெற்றி முனையாக அமைந்தது.

        ஒவ்வொரு கால கட்டத்திலும் இருவேறு நடிகர்களுக்குள் போட்டி, ரசிகர்களுக்குள் மோதல். அதன்படி இவருடைய ரசிகர்களுக்கும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களுக்குமிடையே தகராறு இருந்துகொண்டிருந்தது. திரைப்படத்தில் இவரோடு நடித்துக் கொண்டிருந்த ஏ.சகுந்தலா எனும் நடிகையை இவர் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பிருத்விராஜன், ஆர்யமாலா, கண்ணகி, குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, ஜகதலப்பிரதாபன், மகாமாயா போன்ற பல படங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

        கிருஷ்ணபக்தி என்றொரு படம். அதில் இவர் ஒரு போலி ஹரிகதா பண்டிதர். ஒரு தாசியைத் தன் வசப்படுத்துவதற்கென்று இவரது பக்தி வேஷத்தைப் பயன் படுத்திக் கொண்ட காட்சிகள் மக்களைக் கவர்ந்தன. டி.ஆர்.ராஜகுமாரி அதில் கதாநாயகி. மங்கையர்க்கரசி என்றொரு படம். அதில் இவருக்கு மூன்று வேடங்கள். அதில் பி.கண்ணாம்பா கதாநாயகி. அவர் தேவாம்ருதம் அருந்தி இளமை குன்றாமல் இருப்பார். அவர் கணவராகவும், மகனாகவும் பி.யு.சின்னப்பா. அவரை தாய் என்றறியாமல் இளமையான கண்ணாம்பாவிடம் காம நோக்கில் மகன் சின்னப்பா செல்வார். அப்போது பசு ஒன்று இவர் முகத்தில் தன் மடியிலிருந்து பாலை பீய்ச்சியடிக்கும். இதுபோன்ற பல அரிய காட்சிகள் அதில் உண்டு.

       புகழின் உச்சத்தைத் தொட்டுவிட்ட சின்னப்பா 1951இல் காலமானார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.




Monday, October 19, 2015

வைஜயந்திமாலா

                                         
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த ஒரு நடிகை, கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அதுதான் அந்தக் காலத்தில் பெரும்புகழ் பெற்ற வைஜயந்திமாலா என்பது. வாழ்க்கையில் பயணத்தைத் தொடங்கி, பெண், வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்துவிட்டுப் பின்னர் வட இந்தியாவுக்குச் சென்று அங்கு முதன்மை நடிகையாக விளங்கிய வைஜயந்திமாலாவா இது என்று திகைக்கும் வண்ணம் காணப்பட்டார் அவர். வாழ்க்கை படம் வெளியான நேரத்தில் தமிழ்த்திரையுலகில் ஒரு அதிர்வை உண்டாக்கினார் அந்த அழகின் பிரதிபிம்பமாகத் திகழ்ந்த வைஜயந்திமாலா.

இவரைப் பற்றி திரையுலக ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும் ஆனால் இந்த தலைமுறையினருக்குத் தெரியாமலும் இருக்கலாம் என்பதால் அவர் பற்றிய சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தமிழ்த்திரையுலகில் “வாழ்க்கை” மூலம் அறிமுகமாகி திரையுலகில் ஓர் அதிர்வை உண்டாக்கியவர் வைஜயந்திமாலா. முதன் முதலாக தென் இந்தியத் திரைத்துறையிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்று அங்கும் முதன்மை வகித்தவர்களுள் இவரே முதல்வர்.
தமிழில் இவருக்காகப் பாடப்பட்ட பின்னணி பாடல்களில் வாழ்க்கையின் “டடடா டடடா உன் கண் உன்னை ஏமாற்றினால்”, வஞ்சிக்கோட்டை வாலிபனின் “கண்ணும் கண்ணும் கலந்து” போன்ற பாடல்களும், அதில் அவர் நடிப்பும் இன்றும் பார்த்து மகிழும்படி அமைந்தவை. அடிப்படையில் இவர் ஒரு பரத நாட்டியக் கலைஞர். வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் பயின்றவர்.

1936ஆம் வருஷம் பிறந்தவர் இவர். சென்னை திருவல்லிக்கேணி இவர் பிறந்த ஊர். இவர் தாயும் ஒரு நடிகையே. அவர் பெயர் வசுந்தரா தேவி. தந்தையார் ராமன். தாய் “மங்கம்மா சபதம்” எனும் படத்தில் தோன்றி ரஞ்சனுடன் நடித்து அசத்தியவர்.

தாய் வசுந்தரா அப்போது ஒரு பிசியான நடிகை, மேலும் வயதில் மிகவும் குறைந்தவர் என்பதால் பாட்டி யதுகிரி அம்மாளிடம் வளர்ந்தார். சென்னையில் இவர் படித்த பள்ளிகளுள் பிரசண்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவருடையது ஒரு கலைக்குடும்பம் என்பதால் இவரும் இசையையும், நடனத்தையும் கற்கத் தொடங்கினார். நடனத்துக்கு குரு முன்பே சொன்னதுபோல் வழுவூர் ராமையா பிள்ளை. நடன அரங்கேற்றம் இவருடைய 13ஆம் வயதில் நடந்தேறியது.

நல்ல அழகு, நாட்டியத்தில் திறமை, ஏற்கனவே தாய் ஒரு நடிகை இவற்றால் கவரப்பட்டு டைரக்டர் எம்.வி.ராமன் அவர்கள் ஏ.வி.எம்.இன் வாழ்க்கை படத்தில் இவரை நடிக்க வைத்தார். அந்தக் காலத்தில் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் ஆகையால் இது தெலுங்கிலும் இந்தியில் ‘பஹார்’ என்ற பெயரிலும் தயாரிக்கப் பட்டது. ‘பஹார்’ இந்திப் படம் இவரை வட இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இப்படி இந்தி திரையுலகில் புகுந்த இவர் இசையை மையமாகக் கொண்டு தயாரான ‘நாகின்’ எனும் படத்தில் 1954இல் நடித்தார். தொடர்ந்து ‘யாஸ்மின்’, ‘பெஹ்லி ஜலக்’, ‘சித்தாரா’, போன்ற பல படங்களில் நடித்தார். 1955இல் ‘தேவதாஸ்’, 1956இல் ‘நியு டெல்லி’, 1957இல் ‘நயா தவுர்’, ‘கட்புத்லி’, ‘ஆஷா’ 1958இல் ‘சாதனா’, ‘மதுமதி’ என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார்.

1958இல் தமிழில் ஜெமினி தயாரித்த “வஞ்சிக்கோட்டை வாலிபன்” வெளியானது. இந்தப் படத்தில் நாட்டியத்தில் சிறந்த இரு பெரும் நடிகைகள் நடித்தனர். இவர் ஒன்று, பத்மினி மற்றொருவர். கேட்க வேண்டுமா? நடிப்பும், நடனமும் தூள் பறந்தன இந்த படத்தில். இவ்விருவரும் போட்டி போட்டு நடனமாடிய அந்தப் பாட்டும், அதனி இடையே பி.எஸ்.வீரப்பாவின் “சபாஷ்! சரியான போட்டி” எனும் வசனம் இன்றளவும் பேசப்படுவது ஒரு சிறப்பு. தொடர்ந்து ‘இரும்புத் திரை, ‘ராஜபக்தி’, கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, ‘பாக்தாத் திருடன்’ ஆகியவை இவர் நடித்த படங்கள்.

இந்தி மொழிப் படங்களில் ‘கங்கா ஜமுனா” மிகச் சிறந்த படம் இது 1961இல் வந்த படம். இந்தப் படத்துக்காக இவருக்கு “பிலிம் பேர்” விருது கிடைத்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை அதாவது “சங்கம்”, “லீடர்”, “அம்ரபாலி”, “சூரஜ்”, “ஹாதிபஜாரே” “ஜுவல் தீஃப்”, “சங்குர்ஷ்”, “ப்ரின்ஸ்” இப்படி பல படங்கள் வெளி வந்தன. இவர் நடித்த ஓரிரு படங்கள் தோல்வியையும் சந்தித்தன. அதற்கு இவர் என்ன செய்வார், கதை, இயக்கம் போன்ற எத்தனையோ காரணங்கள்.

திரையுலகில் போதிய அளவு சாதனைகளை செய்து முடித்த இவர் 1968இல் சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவரது திரையுலகப் பயணம் முடிந்தது. பழையபடி சென்னை நகரில் குடியேற்றம். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உண்டு. 1986இல் இவர் கணவர் காலமானார். இவர் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார், சமீபத்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார். இவர் பல சமூக நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இவரது புகழையும், மக்கள் செல்வாக்கையும் கண்டு காங்கிரஸ் கட்சி இவரை நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற்றார். 1984இல் திரு இரா.செழியனையும், 1989இல் ஆலடி அருணாவையும் இவர் வென்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் 1993இல் இவர் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சிலகாலம் கடந்த பின் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுவரை இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தோம். இனி இவர் பெற்ற விருதுகள், பெருமைகள் பற்றி ஒரு சிறிது பார்க்கலாம்.

1968இல் மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, 1979இல் தமிழ் நாடு அரசின் “கலைமாமணி”, 1982இல் பரத நாட்டியத்துக்காக “சங்கீத நாடக அகாதமி” விருது, 2001இல் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் விருது, 2002இல் “வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது” மேலும் பிரிட்டனிலும், புனேயிலும், பெங்களூரிலும் திரை விழாக்களில் சாதனையாளர் விருதுகள், 1956இலும், 1958லும் 1961லும் 1996லும் ஃபிலிம் ஃபேர்” விருதுகளையும் பெற்றார். 2008இல் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் விருதையும் இவர் பெற்றார்.
இத்தனை புகழையும் பெருமைகளையும், விருதுகளையும் பெற்ற இவர், பின்னர் அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துகொண்டு இன்றும் அமைதியாக வாழ்துகொண்டிருக்கும் இந்த தமிழகத்தின் கலையரசிக்கு நம் இதயம் கனிந்த வாழ்த்துக்களைச் சொல்லி நூறாண்டுகளையும் தாண்டி வாழ வாழ்த்துவோம்.



Tuesday, October 13, 2015

தமிழ் நகைச்சுவை நடிகை “ஆச்சி” மனோரமா.

                              
                                        
தமிழ் திரையுலகில் ஒரு நடிகையின் மரணம் பொதுமக்களை இதற்கு முன்பு இந்த அளவுக்கு சோகத்தில் தள்ளியிருக்கிறதா என்பது தெரியவில்லை. நடிகையர் திலகம் சாவித்ரி திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் இறந்த போதும் ரசிகர்கள் பெரிதும் வருந்தினர் என்பது உண்மைதான் என்றாலும், நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அல்ல அல்ல மக்கட் சமுத்திரம் போல இருந்ததா என்பதை பார்த்தவர்கள்தான் தீர்மானிக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மனங்களை ஆச்சி மனோரமா கொள்ளை கொள்ள என்ன காரணம், அவர் யார், எங்கிருந்து வந்தார், எப்படி மக்களைக் கவர்ந்தார் என்பதைச் சிறிது பார்க்கலாமே.

இன்று அனைவரும் ‘ஆச்சி’ என்றழைக்கும் மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா என்பதுதான். இவர் நாடகங்களில் நடிக்கும்போது இவரது பெயரை அதே நாடகத்தின் கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கத் தொடங்கினர். இவர் சுமார் 1500 திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றார். பல்லாயிரம் நாடகங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, பிலிம் பேஃர் பத்திரிகை விருது ஆகியவற்றை பெற்றவர் ஆச்சி மனோரமா.  இத்தனை பெருமைக்குரிய இவர் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே இவரையும் இவர் தாயாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இவர்கள் காரைக்குடிக்கு அருகிலுள்ள செட்டிநாடு பள்ளத்தூரில் சென்று வசித்தனர். தாய் வீட்டு வேலைகள் செய்து மகளை வளர்த்தார்.

இவரது 12ஆம் வயதிலிருந்து ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். அப்போதுதான் இவரது பெயரை மனோரமா என்று மாற்றினர் நாடக இயக்குனர்கள். நாடகங்களில் நடிப்பதோடு பாடுவதையும் தொழிலாகக் கொண்டார். இப்படியே வளர்ந்து வந்த இவரை பருவமடைந்த பின் ஒரு நாடகக்குழு நிர்வாகியான ராமநாதன் என்பார் 1964இல் இவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவர்தான் பூபதி.

1966இல் இவ்விருவரும் பிரிந்தனர். இவர் வைரம் நாடக சபையில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த நிலையில் புதுக்கோட்டையில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகம் கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவருடைய எஸ்.எஸ்.ஆர்.நாடக மன்றத்தில் நடிக்கத் தொடங்கினார். அவர் மேடையேற்றிய நாடகங்களில் “மணிமகுடம்”, “தென்பாண்டிவீரன்”, “புதுவெள்ளம்” போன்றவை குறிப்பிடத் தக்கவை. அதன் பின் இவர் திரைத் துறையில் நுழைந்து நடிக்கத் தொடங்கினார்.

1958இல் இவர் “மாலையிட்ட மங்கை” எனும் தமிழ்ப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை கவிஞர் கண்ணதாசனும் “பாம்பே மியூச்சுவல்” கம்பெனி அம்பி எனும் அவர் நண்பரும் தயாரித்தனர். இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் கொஞ்சும் குமரி, இது 1963இல் வெளிவந்தது. தொடர்ந்து இவர் பிரபலமான நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் காமெடி பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தங்கவேலு, சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன் போன்ற பிரபலமான நகைச்சுவை நடிகர்களுடனும் நடித்துப் புகழ் பெற்றார். நடிப்பு தவிர இவர் திரைப்படங்களில் பாடவும் செய்தார். அப்படி இவர் பாடிய முதல் பாடல் “மகளே உன் சமர்த்து” படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வெங்கடேஷ் இசையில் பாடியது. இவர் பாடி பட்டி தொட்டிகளெல்லாம் பரவிய பாடல் சோவுடன் நடித்த படத்தில் இவர் பாடிய “வா வாத்தியாரே வூட்டாண்ட, நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்” எனும் சென்னைத் தமிழ்ப் பாடல்.

இவர் எம்.ஜி.ஆருடனும், சிவாஜி கணேசன் அவர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது திரைப்படத் துறையில் சிறந்து விளங்கிய சிவாஜி, எம்.ஜி.ஆர். பத்மினி, பாலையா போன்றவர்களோடு இவரும் புகழ் பெற்று விளங்கினார். ஏ.பி.நாகராஜன் அவர் எடுத்த படமான கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்” எனும் அதிஅற்புதமான கதைப் படத்தில் ஜில்ஜில் ரமாமணி எனும் வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இவர் நடிக்கும் வேடத்துக்குத் தக்கவாறு அந்தந்த பிராந்திய மொழி நடையைப் பேசி அசத்துவது இவர் வழக்கம். அப்படி அவர் பேசிய செட்டிநாட்டுப் பேச்சை தில்லானாவிலும், கொங்கு மொழியை சின்ன கவுண்டரிலும் கேட்டு மகிழாதார் யார்? இவர் ஒரு பிறவி நடிகை என்பதை உலகுக்குக் காட்டியவர் மனோரமா.

மிக நீண்ட இலக்கியத் தரமான வசனங்களை மூச்சு விடாமல் பல மணித்துளிகள் பேசி அவையொரை அசர வைத்தவர் மனோரமா. அவரது இறுதிக் காலத்தில்கூட அதுபோன்ற பெரிய வசனங்களைப் பேசிக் காண்பித்து வியப்பில் ஆழ்த்தியவர் இவர்.

மிகத் திறமை வாய்ந்த இந்த அரிய வகை நடிகை காலமானது தமிழ்த் திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல, நகைச்சுவைப் பிரியர்களுக்கும் பேரிழப்பு ஆகும். இவரது சில வசனங்களை மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் சொல்லி வரும் வழக்கமும் உருவானது இவரது திறமையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. வாழ்க ஆச்சி மனோரமா புகழ்!!




இசையரசிக்கு நூற்றாண்டு விழா

                                    
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏறத்தாழ அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் முடிசூடா அரசியாகவே திகழ்ந்தார். அவர் நடத்தித் தந்த நன்கொடைக்கான இசை கச்சேரிகள் எண்ணில் அடங்கா. பாரத ரத்னா விருதினைப் பெற்ற இந்த இசைக்குயில் பிறந்து நூறு ஆண்டுகள் ஆனதை தமிழகம் மட்டுமல்லாமல் இசை ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிறந்தவராயினும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்கம், குஜராத்தி, சம்ஸ்கிருதம் ஆகிய பல்வேறு மொழிகளிலும் பாடி இசையுலகில் கோலோச்சி வந்தவர் இவர். ஐக்கிய நாடுகள் சபையில் இவருடைய இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இவரை உலகுக்கு அடையாளம் காட்டியவர் திரு சி.வி.நரசிம்மன். அந்த இசை நிகழ்ச்சிக்காகவென்றே ராஜாஜி இயற்றிக் கொடுத்த பாடல்தான் “குறையொன்றுமில்லை” எனும் பாடல் இன்று இசை அறிந்தவர் அனைவராலும் பாடப்படுகிறது.

செல்வச் சீமான் குடும்பத்தில் அவதரிக்காவிட்டாலும், தன்னுடைய இசையால் செல்வர்களுக்கெல்லாம் செல்வராக வாழ்ந்தவர் இசையரசி. மதுரை சண்முகவடிவு எனும் இசைக் கலைஞரின் மகளாக 1916ஆம் ஆண்டு புரட்டாசி 16இல் பிறந்தவர் எம்.எஸ். தந்தையார் பெயர் சுப்பிரமணிய அய்யர். தாய் ஒரு வீணை இசைக் கலைஞர்.
இளம் வயதிலேயே தன் தாயின் இசைப் பணியில் இவரும் கலந்து கொண்டதால் அப்போதைய இசை மேதைகளான செம்மங்குடி, முசிரி, செம்பை, திருவாவடுதுறை, கும்பகோணம், பாலக்காடு போன்றவர்களுடன் அறிமுகம் ஆனது. இது என்ன ஊர் பெயர்களாக இருக்கிறதே என்ற ஐயப்பாடு ஏற்படலாம். ஆம்! இந்த ஊர்களுக்கெல்லாம் பெருமையைச் சேர்த்தவர்கள் இசைக் கலைஞர்கள்; அவர்கள் சீனிவாச ஐயர், சுப்பிரமணிய ஐயர், வைத்தியநாத பாகவதர், ராஜரத்தினம் பிள்ளை, ராஜமாணிக்கம் பிள்ளை, மிருதங்கம் மணி ஐயர், ஆகியோர். இவர்கள் தவிர அந்தக் காலத்தில் இசையுலகில் இளைஞர்களின் ஆதர்ச இசைக் கலைஞராகத் திகழ்ந்தவரும் எம்.எஸ். அவர்களுடன் “சகுந்தலை” படத்தில் நாயகனாக நடித்தவருமான ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஆகியோரையும் இவர் பின்பற்றினார்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை என்பார் அப்போது அந்த சமஸ்தானத்தில் இசை உலகில் தனி ராஜாவாகத் திகழ்ந்தவர். எம்.எஸ். அவர்களின் புகழுக்கு அவரும் காரணமாக இருந்தார். 1935ஆம் ஆண்டிலேயே இவர் மைசூர் மகாராஜா அரசவையில் கச்சேரி செய்து புகழ் பெறத் தொடங்கினார்.

அழகும், இசை வளமும் நிரம்பியிருந்த காரணத்தால், அந்தக் கால வழக்கப்படி பாடத் தெரிந்தவர்கள்தான் திரைப்படங்களில் நடிக்க முடியும் என்றிருந்ததால், அவரும் திரைத் துறையினுள் காலடி எடுத்து வைத்தார். “சேவாசதனம்” என்றொரு படம்; திரைப்படத் துறையின் பிதாமகரான டைரக்டர் கே.சுப்பிரமணியம் தயாரித்த படம். அதுதான் அவரது முதல் திரைப்படம். இதில் இவர் பாடிய பாடல்கள் அன்றைய இசை ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தன.

அந்தக் காலத்தில் வடமொழியும் தமிழுக்கு நிகராகத் தமிழகத்தில் கற்பிக்கப்பட்டது. அதன் விளைவாக வடமொழி இலக்கியங்கள் பலவும் இங்கு புகழ்பெற்று விளங்கின. குறிப்பாக மகாகவி காளிதாசனின் சாகுந்தலம் கதை பரவலாக மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதைத் திரைப்படமாக எடுத்தார்கள். அதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கல்கியும் சதாசிவமும் நெருங்கிய நண்பர்கள்; ராஜாஜி இவர்களுக்கு குரு. இந்த நிலையில் எம்.எஸ். அவர்களை 1940இல் சதாசிவம் திருமணம் செய்து கொண்டார். ‘சகுந்தலை’ படத்தின் நாயகன் ஜி.என்.பாலசுப்பிரமணியம். இவரும் ஒரு இசைக் கலைஞர் என்பதால் இந்தப் படம் கர்நாடக இசைப் பிரியர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமைந்தது.
இவர் திரையில் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து இசையை மையமாகக் கொண்ட “பக்த மீரா” படம் எடுக்கப்பட்டது. அதில் எம்.எஸ். தான் மீரா, கேட்க வேண்டுமா, இசை பொழிவதற்கு. அந்தப் படம் இசையால் ஆனது. இன்றும் மக்கள் மனங்களை வெட்ட வெளியில் ஆடவும், தாளமிடவும் தூண்டுகின்ற அற்புதமான இசையை யாரால் மறக்க முடியும்? ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’, ‘கிரிதர கோபாலா’, ‘எனது உள்ளமே” இவைகள் எல்லாம் அந்த மீரா பாடிய அற்புதமான பாடல்கள். இன்றைய இளைய சமுதாயமும் இவற்றைப் பாடி புளகாங்கிதம் அடைவதை யாரால் மறுக்க முடியும்?

“பக்த மீரா” இந்தி மொழியிலும் தயாரித்து வெளியிடப்பட்டது. அதைப் பார்த்து, அதிலுள்ள பாடல்களைக் கேட்டு மனம் மயங்கியவர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், கவிக்குயில் சரோஜினி நாயுடுவும் அடங்குவர். இதன் விளைவு பிரதமர் ஜவஹர் எம்.எஸ்.சிடம் சொன்னார் “நீங்கள் இசைக்கு அரசி” நானோ சாதாரன பிரதம மந்திரிதானே என்று. அப்படி அவர் சொல்ல வேண்டுமானால், அவருடைய இசை இந்த பெரியவர்களை எத்தனை தூரம் கவர்ந்திருக்க வேண்டும்.

அப்போதைய நாட்களில் “கல்கி” இதழ்களில் எம்.எஸ். அவர்களின் கச்சேரி விவரங்கள் வரும். அது ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு அறப்பணிக்கான நன்கொடைக்காக என்பது விளங்கும். இது போல தன் திறமையை, இசைப் புலமையை மக்கள் பணிக்காக அர்ப்பணித்தவர் எத்தனை பேர் தெரியாது. ஆனால் அந்த இசை மேதை சோர்வில்லாமல் கடைசி வரை அறக்கட்டளைக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி உதவி வந்தது விளம்பரத்துக்காக அல்ல, ஆத்மார்த்தமான தர்ம சிந்தனையினால் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இவர் போன்ற திறமை மிக்கக் கலைஞர்கள் விருதுகள் பல பெறுவதில் அதிசயம் இல்லை. இவருக்கு அளவற்ற விருதுகள், பெருமைகள் வந்து சேர்ந்தன. அவைகளில் சில: “பத்ம பூஷன்”, “சங்கீத நாடக அகாதமி விருது”, மியூசிக் அகாதமி வழங்கும் “சங்கீத கலாநிதி”, “இசைப்பேரறிஞர்”, பிலிப்பைன்ஸ் நாட்டின் “மக்சசே விருது”, “பத்ம விபூஷன்”, “கவி காளிதாஸ் சம்மேளன் விருது”, அனைத்துக்கும் சிகரம் வைத்தது போன்ற “பாரத ரத்னா” விருது. இவைகள் எம்.எஸ். அவர்களுக்குக் கிடைத்து பெருமை சேர்த்துக் கொண்டன.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் இசையில் வல்லவர்கள் எத்தனையோ கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் எம்.எஸ். போல குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் மனம் கவர்ந்த இசைக் கலைஞர் வேறு எவரேனும் உண்டா என்பது தெரியவில்லை. காலத்தால் மறக்க முடியாத ஒரு இசை மேதை இந்த நாட்டில் நம் காலத்தில் நம் கண் முன்னே வாழ்ந்து சாதனைகளைப் படைத்து மறைந்தார் என்பதை இப்போதும் நம்புவது சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது. வாழ்க எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரின் புகழ்!

Monday, October 12, 2015

நவராத்திரி



அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும்,  அவற்றுள்  முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

 பார்க்கப்போனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு; அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.

 சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று சிறப்பாக
கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசரா கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது  நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும்.  இந்த பூஜையை
தேவர்கள் செய்வதாக கருதி இரவில் நாவராத்திரியை கொண்டாடுவார்கள்.

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று  போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு இராமன்,இராவணனுடன்
புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி
கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று எடுத்து அர்ச்சுனன் உயிர்ப்பித்துகொண்டான்.


சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.நவராத்திரி என்பது விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு
என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை எமனது கோரப் பற்கள்
என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி, நலியும்படி செய்யும். சாதாரணமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன் அருள்வதில்லை. 

சக்தி வழிபாடு.


சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.
புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.இவை இரண்டில்'சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது;தனிச் சிறப்புடையது.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சி. கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்
நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்கள வழிபடும் தெய்வம் துர்க்கை, மகிஷன் என்றஅசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி][ மகிஷாசுரமர்த்தினி . வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.


இலட்சுமி : இவள் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.

அஷ்டலட்சுமி : ஆதி லட்சுமி, மக லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி , சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி , கஜலட்சுமி .
இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.


சரஸ்வதி : இவள் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.கல்வியின் தெய்வம்.  ஞான சக்தி.
.இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.

சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது
முறையாகும். இது தேவியின் அவதார நாள்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவுபெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.


விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம்  நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி தரும்.


நவராத்திரியின் போது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.