பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 24, 2013

டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

                          திரையுலகில் சாதனை படைத்த 
டி.பி.ராஜலட்சுமி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு நூலை வெளியிடுகிறார் தமிழ்ப்பல்கலைக்கழக நூலக முன்னாள் இயக்குனர் திரு தி.பத்மநாபன், நூலைப் பெற்றுக் கொள்பவர் தஞ்சை மாவட்ட நாணயவியல் குழுமம் தலைவர் நல்லாசிரியர் திரு துரைராசு அவர்கள். உடன் இருப்போர்: பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், டி.பி.ராஜலட்சுமியின் மகள் டி.எஸ்.கமலா, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுஜம், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கம் திரு முத்துக்குமார் ஆகியோர்.

                       டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா

திரையுலகின் முதல் மெளனப் படக் கதாநாயகி, முதல் பெண் இயக்குனர், தேசபக்தர், சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா திருவையாறு பாரதி இயக்கம் தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன் ஆகியவை சார்பில் திருவையாற்றில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் இரா.முத்து தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்துறை மேனாள் இயக்குனர் தி.பத்மநாபன் டி.பி.ராஜலட்சுமி பற்றி வெ.கோபாலன் தொகுத்த நூலை வெளியிட்டுப் பேசினார். நூலின் முதல் பிரதியை தஞ்சை நாணயவியல் குழுமத்தின் தலைவர் நல்லாசிரியர் துரைராஜ் பெற்றுக் கொண்டார். தி.பத்மநாபன் தன்னுடைய பேச்சில் இதுவரை தமிழ் நாட்டில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும், அத்தனைப் படங்களின் பாட்டுப் புத்தகங்களைத் தான் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய காலத்தில் தேசபக்தியை ஊட்டும் திரைப்படமொன்றை டி.பி.ராஜலட்சுமி எடுத்ததாகவும், அரசாங்கம் தடைசெய்யும் எனும் நிலை இருந்த போதும் துணிச்சலாக அந்தத் திரைப்படத்தை அவர் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சே.இராமானுஜம் டி.பி.ராஜலட்சுமியின் நாடகத்துறை, திரைத்துறையின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். டி.பி.ராஜலட்சுமி ஒரு திரைப்பட நடிகையாக, கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என எல்லா துறைகளிலும் பரிணமித்தது போலவே சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை காட்டினார் என்றார் அவர். அவர் காலத்தில் பரவலாக நிலவி வந்த பால்ய விவாகத்தை இவர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை இவர் கண்டித்ததோடு மட்டுமல்ல, அப்படியொரு பெண் குழந்தையைத் தானே எடுத்து வளர்த்து, படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்ததாகக் கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தனியாக இந்த சமூகத்தில் சாதனைகளைப் புரிந்து தலை நிமிர்ந்து நின்றிருக்கிறார் என்பதே பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும் என்று இராமானுஜம் குறிப்பிட்டார்.
                            
                 டி.பி.ராஜலட்சுமி அவர்களின் மகள் கமலா அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்குகிறார் தமிழக அரசின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள். டி.எஸ்.கமலாவைச் சுற்றி நிற்பவர்கள் அவரது மகன் திரு ராகவன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர். படத்தில் மற்றவர்கள் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன், தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் திரு இராமானுகம், தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்துறை முன்னாள் இயக்குனர் திரு டி.பத்மநாபன், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் திரு இரா.முத்து, பாரதி இயக்கத் தலைவர் திரு நீ.சீனிவாசன் ஆகியோர்.


சாதனைப் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் மகள் கமலா மணியைப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கி முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபயதுல்லா சொற்பொழிவாற்றினார். டி.பி.ராஜலட்சுமி பிறந்த 11.11.1911 என்ற நாளே ஒரு புதுமையைக் காட்டுகிறது என்றார் அவர். அவர் காலத்திய பல நடிகைகள் இன்று நினைவில் இல்லாதபோதும் டி.பி.ராஜலட்சுமி முதல் பெண் நடிகை, பாடலாசிரியர், இயக்குனர் என்பது பெருமைதரக் கூடிய சாதனை என்றார் அவர். புராணப் படமொன்றில் மார்பு கச்சை அணிந்து நடிக்கவேண்டுமென்ற நிலை வந்தபோது தான் அப்படி நடிக்க இயலாது, ரவிக்கை அணிந்துதான் நடிப்பேன், இல்லையேல் இந்த வாய்ப்பே எனக்கு வேண்டாம் என்று மறுத்து தமிழ் இனத்தின் மானத்தைக் காத்த வீரப்பெண்மணி டி.பி.ராஜலட்சுமி என்றார் அவர்.

பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டி.பி.ராஜலட்சுமியின் ஒரே மகளான கமலா மணி, திருவையாற்றில் பிறந்த என் தாய் திரையுலகில் பெரும் புகழோடு வாழ்ந்த காலத்தை அவருடைய நூற்றாண்டு விழா நேரத்தில் திருவையாற்று அன்பர்கள் பாராட்டி நினைவு கூர்ந்தமைக்கும், நீங்கள் எனக்களித்துள்ள இந்த பாராட்டுக்கும் நான் எங்கள் குடும்பத்தினரின் இதயம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தன்னுடைய தாயின் திரையுலகப் பணியைப் பாராட்டி அவருடைய 75ஆம் ஆண்டு நிறைவு விழா சமயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஒரு பாராட்டு விழா நடந்ததையும், நூற்றாண்டு விழாவை தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசு ஒரு பிரம்மாண்ட விழா நடத்தி பாராட்டியதையும் கமலா மணி நினைவு கூர்ந்தார். தன் தாய் 1964இல் காலமாகிவிட்டதால் அவர் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் தங்களிடம் இல்லை, அவர் நடித்த படங்கள், அந்த படங்கள் சம்பந்தப்பட்ட பாட்டுப் புத்தகங்கள், புகைப்படங்கள் ஆகியவை இருந்தால் அவற்றை எங்களுக்கு அளித்தால் அவற்றை ஆவணப்படுத்த ஏதுவாக இருக்குமென்றார் அவர். திருவையாறு பாரதி இயக்கம், தில்லைத்தானம் மரபு பவுண்டேஷன், இங்கு வந்து பாராட்டிய பெரியோர்கள், விழாவில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார் கமலா.

முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உரையாற்றினார் பாரதி இலக்கியப் பயிலக இயக்குனர் வெ.கோபாலன். டி.பி.ராஜலட்சுமி பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், அவர் நடித்த சில திரைப்படக் காட்சிகளையும் பாரதி இயக்கம் ஆவணப்படுத்தி திரையிட்டது. விழாவில் தேனிசைச் செல்வன் ராஜாஸ்ரீவர்ஷன் குழுவினரின் பழைய திரையிசைப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பாரதி இயக்கத்தின் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வழக்கறிஞர் நா.பிரேமசாயி, நீ.சீனிவாசன், பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர் வெ.கோபாலன், பாரதி இயக்க அறங்காவலர் ப.இராஜராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


Thursday, November 21, 2013

நாணயங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன என்பது தெரியுமா?


இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் அது தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும், அதைப் பார்த்திருப்பீர்கள்.

அத்தோடு அதன் கீழ் ஒரு குறியும் இடம்பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே

ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்

டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பையிலும்

நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஐதராபாத்திலும்

எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி!.............. உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்பது தெரிந்துவிடும்.

நன்றி: "கோமுகி கல்வி" பத்திரிகை நவம்பர் 2013. ஆசிரியர் திரு கி.முத்தையன்.

Wednesday, November 20, 2013

T.P. ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழா

தமிழ்த்திரை உலகின் முதல் கதாநாயகி
    

                   T.P. ராஜலக்ஷ்மி அவர்களின்
                                       நூற்றாண்டு விழா
                       இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா

அன்புடையீர்!

வணக்கம். இந்திய நாத்தின் கலை, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் அரசியல் இவைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வந்துள்ள இந்திய சினிமா அதன் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. அத்துடன் இணைந்து தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் திரைப்பட இயக்குனர், "சினிமா ராணி" எனும் விருது பெற்ற திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இசை, நா
கம், சலனப்படம், பேசும்படம் என அவர் சென்ற இங்களிலெல்லாம் சாதனைகள் நிகழ்த்திய அந்தப் பெருமைக்குரிய பெண்ணின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த திருவையாறு நகரத்தில் கொண்டாடப் படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் திருமகள் திருமதி கமலா மணி அவர்கள் பாராட்டப் படவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அவர் நடித்த சில படக்காட்சிகளும், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் வெளியிடப் படவிருக்கின்றன. பெருமை மிகு இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.


நாள்: 23-11-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம்: A.N.S. திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், திருவையாறு.

நிகழ்ச்சி நிரல்:
23-11-2013 சனிக்கிழமை:

மாலை 4.30 மணி: படக்காட்சி "சினிமாராணியின் சினிமா"
மாலை 5.15 மணி: திரை இசை அரங்கு.
தேனிசைச் செல்வன் திரு ராஜாஸ்ரீவர்ஷன்

மாலை 6.00 மணி பாராட்டரங்கம்:

வரவேற்புரை: திரு வெ.கோபாலன், இயக்குனர்,
பாரதி இலக்கியப் பயிலகம்.

தலைமை: முனைவர் குமாரசாமி தம்பி
ரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, தருமையாதீனம், திருவையாறு.

சிறப்புரை: திரு
டெல்லி கணேஷ், திரைப்படக் கலைஞர்.

டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாற்று இதழை வெளியிட்டு வாழ்த்துரை:
திரு இரா. முத்து, அரசு கலை பண்பாட்டுத் துறை 

பாராட்டுரை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர்
திரு சே. இராமானுஜம் அவர்கள்.

ஏற்புரை: திருமதி டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் புதல்வியார்
திருமதி கமலா மணி அவர்கள்.
நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், செயலாளர், பாரதி இயக்கம்.
அனைவரும் வாரீர்! 
அழைப்பின் மகிழ்வில்
பாரதி இலக்கியப் பயிலகம் - பாரதி இயக்கம், திருவையாறு
மரபு பஃவுண்டேஷன், தில்லைஸ்தானம்.

Saturday, November 16, 2013

பாரத ரத்னா விருதுகள்



இந்தியப் பிரதமர் இன்று இருவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இவ்விருவரில் ஒருவர் விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனைகளைச் செய்துள்ள டெண்டுல்கர், மற்றொருவர் விஞ்ஞானி. பாரத ரத்னா விருது இந்திய அரசு வழங்கும் தலையாய விருது. இதுவரை இவ்விருதினைப் பெற்றவர்கள் 41பேர். இப்போது வழங்கப்படுகின்றவர்களையும் சேர்த்து 43 பேராக ஆகின்றனர்.

பாரத ரத்னா விருது 1955 ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட காரணத்தால் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல் போன்ற தலைசிறந்த தலைவர்களுக்கு இது வழங்கப்படவில்லை. இந்தக் காரணத்தையொட்டி 1966ஆம் ஆண்டில் காலஞ்சென்ற சாதனையாளர்களுக்கும் இவ்விருது வழங்கப்படத் தொடங்கியது. அதன் பிறகு காலஞ்சென்ற 12 சாதனையாளர்கள் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள்.

இதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கது.1992இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியதாக வரலாற்றில் பேசப்படுவதால் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனையொட்டி அந்த ஆண்டில் அவருக்குக் கொடுக்க வேண்டிய விருது தவிர்க்கப்பட்டது.

இந்திரா காந்தி தேர்தலில் தோற்று ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதாவது 13-7-1977 தொடங்கி 1980 குடியரசு நாள் வரையிலான காலகட்டத்தில் இந்த விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விருதை உலகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராயினும் பெறும் தகுதியுடையவராவர். இந்தியர்களுக்கு மட்டும் எனும் விதி இல்லை. அப்படி வெளி நாட்டில் பிறந்த அன்னை தெரசாவுக்கு 1980ஆம் ஆன்டிலும், கான் அப்துல் கபார் கான் அவர்களுக்கு 1987லும் தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் காந்திஜியைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990லும் இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கப்படுவது குறித்து சில சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவைகளையெல்லாம் கடந்துதான் இப்போதும் இது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த "பாரத ரத்னா" விருது என்பது வட்டவடிவிலான ஒரு தங்க மெடலில், தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு, நாட்டுக் குறிக்கோளும் எழுதப்பட்டிருக்கும். தொடக்க காலத்தில் அரசிலை வடிவில் அமைக்கப்பட்டு அதில் பாரத ரத்னா எனும் எழுத்துக்கள் தேவ நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. மெடலின் பின்புறம் தேசிய சின்னமும் குறிக்கோளும் பொறிக்கப்பட்டிருந்தன.

2011ஆம் ஆண்டில் இந்த விருதுகளை விளையாட்டுக்களில் சாதனை புரிந்த வீரர்களுக்கும் அளிக்கலாம் என்று தீர்மானித்து முடிவு செய்தனர். தேசியப் பணிகளில் முன்னிலை வகித்தவர்கள், சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட இந்த விருது அதன் பின் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சாதனையாளர்கள் தவிர இப்போது சச்சின் டெண்டுல்கருக்குக் கொடுக்கப்பட விருப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களும் இந்த விருதால் கெளரவிக்கப்பட விருக்கின்றனர். இந்த விருது பெறும் இளைய வயதினராக தன்னுடைய 40ஆவது வயதில் டெண்டுல்கர் இதனைப் பெறுகிறார்.

இந்த விருது பெற்றவர்களில் வயதில் மிகவும் மூத்தவர் தோண்ட் கேஷவ் கார்வே தான் தன்னுடைய 100ஆவது வயதில் இதனைப் பெற்றவர். காலஞ்சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட வகையில் சர்தார் வல்லபாய் படேல் 75 வய்தானவர் இதனைப் பெற்றவர். இவ்விருதினை பெற்றவர்களின் விவரமும், பெற்ற ஆண்டும் கீழே காணலாம்.

வ.எண்.                                   பெயர்                                                               வாழ்ந்த காலம்        விருது பெற்ற ஆண்டு.

1. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்          1878 1972                1954
2. சர் சி.வி.ராமன்                                                          1887 1970                1954
3. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்             1888 1975                1954
4. பகவான் தாஸ்                                                           1869 1958                1955
5. விஸ்வேஸ்வரையா                                              1861 1962                 1955
6. பண்டிட் ஜவஹர்லால் நேரு                              1889 1964                 1955
7. கோவிந்த் வல்லப் பந்த்                                          1887 1961                 1957
8. டி.கே.கார்வே                                                              1858 1962                 1958
9. டாக்டர் பி.சி.ராய்                                                       1882 1962                 1961
10. பி.டி.தாண்டன்                                                          1882 1962                 1961
11. பாபு ராஜேந்திர பிரசாத்                                         1884 1963                 1962
12. டாக்டர் ஜாகிர் உசேன்                                           1897 1969                 1963
13. பி.வி.கானே                                                                1880 1972                1963
14. லால் பகதூர் சாஸ்திரி                                          1904 1966                 1966
15. இந்திரா காந்தி                                                           1917 1984                 1971
16. வி.வி.கிரி                                                                     1894 1980                 1975
17. கு.காமராஜ்                                                                  1903 1975                1976
18. மதர் தெரசா                                                                 1910 1997                1980
19. வினோபா பாவே                                                      1895 1982                1982
20. கான் அப்துல் கஃபார் கான்                                    1890 1988                1987
21. எம்.ஜி.ராமச்சந்திரன்                                                1917 1987               1988
22. பி.ஆர்.அம்பேத்கர்                                                     1891 1956                1990
23. நெல்சன் மண்டேலா                                               1918                         1990
24. ராஜீவ் காந்தி                                                               1944 1991                1991
25. வல்லபாய் படேல்                                                    1875 1950                1991
26. மொரார்ஜி தேசாய்                                                    1896 1995                1991
27. மெளலானா அபுல் கலாம் ஆசாத்                      1888 1958                1991
28. ஜே.ஆர்.டி.டாட்டா                                                     1904 1993               1992
29. சத்யஜித் ரே                                                                  1922 1992                1992
30. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்                                          1931                         1997
31. குல்ஜாரிலால் நந்தா                                                1898 1998                1997
32. அருணா ஆசஃப் அலி                                               1908 1996                1997
33. எம்.எஸ்.சுப்புலட்சுமி                                               1916 2004                1998
34. சி.சுப்ரமணியம்                                                          1910 2000                 1998
35. ஜெயப்பிரகாஷ் நாராயண்                                     1902 1979                1999
36. பண்டிட் ரவிஷங்கர்                                                 1920 2012                 1999
37. அமர்த்தியா சென்                                                      1933                          1999
38. கோபிநாத் போர்டோலோய்                                 1890 1950                 1999
39. லதா மங்கேஷ்கர்                                                      1929                          2001
40. பிஸ்மில்லா கான்                                                     1916 2006                 2001
41. பீம்சேன் ஜோஷி                                                        1922 2011                 2008
42. சி.என்.ஆர்.ராவ                                                           1934                          2014
43. சச்சின் டெண்டுல்கர்                                                1973                          2014

மெளலான அபுல் கலாம் ஆசாத் இந்த விருதுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த போது, அவருக்குக் கொடுக்க வேன்டுமெங்கிற கோரிக்கை எழுந்தபொது அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் எத்தனை நேர்மையோடு தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

புதிதாக இந்த ஆண்டு விருதுகள் அறிவித்திருக்கிற இந்த நேரத்தில் விருது பெற்ற அத்தனை பேரையும் நினைவில் கொண்டு வந்து வாழ்த்துவோம், வணங்குவோம்.

Friday, November 15, 2013

சந்திரிகையின் கதை


மகாகவி பாரதியாரின் "சந்திரிகையின் கதை"

                                  ஒன்பதாம் அத்தியாயம்
                                             பெண்டாட்டிக்கு ஜயம்

மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். ''தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்யட் தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது'' என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- ''நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்.... 

(குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், ''சந்திரிகையின் கதை'' முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.) 


Wednesday, November 13, 2013

சந்திரிகையின் கதை

மகாகவி பாரதியாரின் "சந்திரிகையின் கதை"

                                      எட்டாம் அத்தியாயம்
                            சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார். 

''காபி போட்டுக் கொண்டு வரலாமா?'' என்று முத்தம்மா கேட்டாள். 

''எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக் கொண்டு வந்து குடித்துக் கொள்'' என்றார் சோமநாதய்யர். 

''எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னைக் கண்டால் போதும், உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. 'இன்றைக்கு என் உடம்பு ஸௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை' என்று உங்கள் வாயினாலே சொல்ல ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும் காது குளிரக் கேட்கப் போகிறேனோ, அல்லது கேட்காமலே பிராணனை விடப் போகிறேனோ, தெரியாது. கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி, அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம்-எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்'' என்றாள். 

சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். ''நன்றி கெட்ட நாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு 'பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?' நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் சம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப் போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டியிருக்கிறது. நீதி ஸ்தலத்திலே போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி, வேசைத் தொழிலும் சரி. தர்மத்தைக் கெடுத்து இகத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன் பொருட்டாகப் பாடுபடுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப் போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை. தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந் தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல் உண்டாக்குகிறது. மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும் குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால் அப்போது என் மனத்திலுண்டாகும் பெருந் துயரத்தாலும் அவர்களுடம்பு நேரே இருக்க வேண்டும், கடவுளே, என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும், தலை மயிர் நரைத்துப் போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காகப் பாடுபட்டே நான் கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போகப் போகிறது. அடா, தீராத நோயிருந்தால், எப்படி சகிப்து? ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வாரமா, இரண்டு வாரமா, ஒரு மாதமா, இரண்டு மாதமா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, உன்னுடன் கூடி வாழத் தொடங்கிய கால முதலாக இன்றுவரை எப்போதும், ஒரு கணந் தவறாமல் என் உடம்பு ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது? பேதைச் சொற்கள், மடச்சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச் சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள், இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல் 'புடவை வேண்டும்', 'ரவிக்கை வேண்டும்', 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்' ,- வீண் செலவு! வீண் செலவு! வீண் செலவு! என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் போகிறதோ?'' என்று சொல்லி சோமநாதய்யர் அழத் தொடங்கிவிட்டார். 

அப்போது முத்தம்மா:- ''அழுகையெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை, சந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைத் தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. 

இன்னொரு புதுப்பெண்-சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு அவளுடன் இன்புற்று வாழத் தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலையெல்லாம் நீங்கிப் போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப் போய்விடும். நீங்கள் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படிச் சொல்லமாட்டாள். அவளும் உங்கள் போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாட்சியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்றுப் பிள்ளைகளைப் பெற்றுக் கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம் நீங்கிப் போய்விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது'' என்றாள். 

இது கேட்டு சோமநாதய்யர்:- ''உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும் ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ர‡ணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும். உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித் தள்ளி வைப்பேன்? பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது விபசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா? அப்படியே ஏதேனுமொரு முகாந்தரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப் பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி, அதாவது, என் காது நரம்புகளையும் இருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும் இடையின்றியும் மறவாமலும் மீட்டும் மீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின் பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார். 

''சரி, எனக்குத் தலைநோகிறது. நான் கீழே போய்க் காபி போட்டு சாப்பிடப் போகிறேன்'' என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள். 

''காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?'' என்று சோமநாதய்யர் கேட்டார். 

''எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்சமிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று தான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள் அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்கு தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ, அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தியேது? நீங்களாவது என்னை விலக்கி வைத்து விட்டு மற்றொருத்தியை விவாகம் செய்து கொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச் செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?'' என்று முத்தம்மா சொன்னாள். 

'அடியே நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா? சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது? இவள் வாயை அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா, ஈசா?'' என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார். 

''சரி, போதும், போதும், காது குளிர்ந்து போய் விட்டது. என்னைக் காபி குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?'' என்று முத்தம்மா மீண்டுமொருமுறை வினவினாள். 

''காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?'' என்று சோமநாதய்யர் கர்ஜித்தார். 

''சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு'' என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள். 

அவள் போனவுடன் சோமநாதய்யர்:- ''ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும் கிடைக்கவில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!'' என்று நினைத்து வருந்தினார். 

''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்; 
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.'' 

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவே டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன. மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும் போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தைக் குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான். 

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார். 

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில்-நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை. 

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார். 

இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: ''அட, அய்யா, சோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகா பதிவிரதை. உன்னை சாட்சாத் பகவானுக்கு சமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லட்சுமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு வைத்துக் கொள். குழந்தாய், சோமு. அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் சந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்'' என்றாள். 

அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. ''அத்தையருமை செத்தால் தெரியும்'' என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில், சோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய இம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரேயடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்துக் காப்பவளாகிய சாட்சாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். '' புருஷ ஏவேதம்ஸர்வம்'' என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்''-உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும், பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர். அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத் தக்கவள். இதனைக் கருதியே ''அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்'' என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 

சோமநாதய்யர் காமம் குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக் கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும் சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலட்சியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பர ஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். ''பாவத்தின் கூலியே மரணம்'' என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள். 

எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும்பாலும், இப்பாவத்தை அவர் மானசீகமாகச் செய்து வந்தவரேயல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:- அன்ய ஸ்திரீகளுடன் சம்பந்தப்படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவியழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட்பட்டவனேயாவான்'' என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் சாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனையடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது. 

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம், முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித இருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித இருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அசாத்தியமன்று. ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் ''இளமையிற் கல்'' என்று உபதேசம் புரிந்தனர். 

எனிலும், வருந்தினால் வாராததொன்றுமில்லை. மனித இருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே சோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புசித்துக்கொண்டு செய்யும் தவத்தை இங்க பேசவில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை-அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை-ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய சாதனங்களில் மிக உயர்ந்தது தவம். 

அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்தி‘ரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம் பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது, பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும். 

இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும், இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச் சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அ·தே மோட்ச வீட்டின் கதவு. அன்பே மோட்சம். அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மகா முக்திக்குக் கருவியாகக் கூறினார். 'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோட்சத்துக்கு வழி' யென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும் வழிபடுதலும்-அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்-இல்லாதோன் கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்துநாதர் சொல்லுகிறார். 

இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல் சாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசுயை முதலிய குணங்களுடையோராகின்றனர். 

இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ ஜீவ காருண்யமும் சர்வ ஜவீ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு உண்டாயிற்று. எனவே, அவர் ஆடு மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை. ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும் மிகுந்த முதுமையால் உருச் சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்தி முகஞ் சுளிப்பதை நிறுத்தி, அவர்களை மானசீகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக் கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார். 

இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும விளைவித்துத் தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களைக் காணும் போது முகமலர்ச்சி கொள்ளவும், அவர்களிடம் தாழ்மையுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத் தொடங்கினார். 

இ·தெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இ·தனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால், முத்தம்மாளிடம் பிரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில மாதங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு ஸ¤கஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள். அவர் அவளை முத்தமிடப் போகும் சமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும் அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தனமாகத் தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள். 

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு இதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ? அவன் அழ அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது? 

இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை. 

காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன. 

கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் சுலபம். ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா? சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு சகிக்க முடியாதனவாகவேயிருந்தன. 

ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும் இருந்தபடியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத் தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்துக் பழகினார். 

எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். ''இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதலிராணியாகக் கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது, வெங்காயமாவது? நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ, என்னவோ? எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய இருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல் எளிது; மாதர் மனத்தை ஆழங் காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக் கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின் அ·தோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதியதொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல் கொள்வதுபோல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக் கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதையல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே. அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம் சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும், அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்று கவனித்தேனன்றோ? அவள் அச்சொல்லைப் பரிசுத்தமான இருதயத்துடனம் உண்மையான நம்பிக்கையுடனும் கூறினாளென்து அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப் புகுவோமாயின், அது பெரு மடைமைக்கு லட்சணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்தது மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ? மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத மந்தமா? இருபது கம்பிளியை போட்டு ஒரு ரகசியத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத் தெரிந்து விடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில் ஐயப்படுவது மூடத்தனம். 'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ? நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மையன்றைப் பற்றி வீண் சம்சயப் படும் அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதைதான். நம்முடைய உண்மையைச் சோதி த்-தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத் தழல் அவிந்து போக இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரசப்படலாகாது. அவள் தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்தக் கண்மணி முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள் செய்கிறாள்? ஊடல் தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது? 

உணவினும் உண்டதறலினிது காமம் 
புணர்தலின் ஊட லினிது 

என்றன்றோ சாட்சாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மகாகவியுமாகிய திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில் ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற்படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்.'' 

என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு மணியாய் விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு கணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும். அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும் விளைந்திருக்கும். இவர் விளக்கின் ஸ்திதியைப் பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியைக் குறைத்தார். விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனைத் தழுவிக் கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள் இரண்டும் படுத்திருந்தன. சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை எழுப்பிக் கீழே அழைத்துப் போய் போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு கணம் சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால், ''அறிவுடனே கண்ணை விழித்து நன்றாகப் பார்த்துக் கொண்டே படுகழியிற் போய் விழ்வதொப்பப் பசியில்லாமல் உண்பதிலிருந்தே நோய்களும், சாவும் ஏற்படுதல் ப்ரத்ய‡மாகத் தெரிந்திருந்தும் நாம் தினந்தோறும் பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும் பேதைமையாகுமன்றோ?'' என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. ''இன்றைக்கு நல்ல நாள். பசியில்லாத சமயங்களில் உபவாசம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி விடுவோம். பிரிய ரத்தினமாகிய முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை இப்போ எழுப்பிச் சோறுபோடச் சொல்லித் தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் 'உபவாசமே கிடப்போம்'' என்று தீர்மானம் பண்ணி, சோமநாதய்யர் விளக்குத் திரியை மிகவும் சிறிதாக்கிக் குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்துப் படுக்கையறையின் மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி மெதுவாக அவளைத் தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின் மீதேறிப் படுத்துக் கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும் சோமநாதய்யர் மிகவும் ஆச்சரியமான இன்பக் கனவுகள் கண்டார். 

Tuesday, November 12, 2013

பாரதியார்


    மகாகவி பாரதியார் பற்றி தமிழறிஞர் திரு ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் முன்பு எழுதிய கட்டுரை இது. மகாகவியின் பெருமையை இவருடைய வாக்கால் கேட்கலாம்.

    பாரதியார்

    தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள் தோறும் அந்திமாலையில் கடற்காரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்:-

    "அருந்தமிழ்க் கடலே! இன்று உன்னைக் காண ஏனோ என் உள்ளம் களிக்கின்றது! நீள நினைந்து நெஞ்சம் தழைக்கின்றது! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில் உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்; உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும்பொழுது இன்பம் பொங்குகின்றது என் உள்ளத்தில்! 'உன் மணற் பரப்பிலே நன்னீர் சுரந்து, அல்லி மலர் பூத்து நின்ற கேணிதான் அக் கவிஞர் பெருமான் கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற அருமைத் திருக்குறள் உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான்! உன் அல்லி மணற் கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்து விட்டாரே! அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக் கேணிக்கு வாழ்வின்மேல் வாழ்வு வருகின்றதோ?

    "நீலத்திரைக் கடலே! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என்சொல்லி ஏத்துவேன்? மாநிலமெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப் பெருமானைத் தமிழகம் செய்த தவக் கொழுந்து என்பனோ? நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பனோ? ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடு நாயகமாய்க் காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன் கவியால் எழுதிக் காட்ட முடியுமா?ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.
      "கல்விசி றந்தத மிழ்நாடு-புகழ்க்
            கம்பன்பி றந்தத மிழ்நாடு-நல்ல
      பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
            பாரெங்கும் விசும்த மிழ்நாடு.
      வள்ளுவன் தன்னைஉ லகினுக் கேதந்து
            வான்புகழ் கொண்டத மிழ்நாடு-நெஞ்சை
      அள்ளும்சி லப்பதி காரமென் றோர்மணி
            ஆரம்ப டைத்தத மிழ்நாடு"
    என்று பாடுவேன்; ஆனந்தக் கூத்து ஆடுவேன்.

    "நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

    "கண்ணைக் கண்டேன் - எங்கள்
    கண்ணனைக் கண்டேன் மணி
    வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்."

    "தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!

    "அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

    "அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

    "சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
    துஞ்சிடோம - இனி அஞ்சிடோம்"

    என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க - எவரால் இயலும்?

    செந்தமிழ்க் கடலே! இக் கரையில் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சி விட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளை யர் பாக்கம் என்றும், கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே! வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள் ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.

    "என் அருமைத் தமிழ்க் கடலே! அது விழு கின்ற நாளிலே பாரத சமுதாயம் ஒன்று பட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக் கங்கள் அழியும்; தமிழ் நாடு தலையெடுக்கும். அப்போது,

    "உழவுக்கும் தொழிலுக்கும்
    வந்தனை செய்வோம்-வீணில்
    உண்டுகளித் திருப்போரை
    நிந்தனை செய்வோம்"

    என்று ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்' என்று அகம் களித்து இக் கடற்கரையில் இறுமாந்து உலாவு வோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.

சந்திரிகையின் கதை

 மகாகவி பாரதியாரின் "சந்திரிகையின் கதை"                                             
                                   ஏழாம் அத்தியாயம்
                                                     விடுதலை

''ஒருகால் விடுதலை யுற்றான் 
எப்போதும் விடுதலை யுற்றான்'' 

மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்து தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்து தீட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு. 

இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள் போல் உட்காரந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர். 

முத்து தீட்சிதர் சொன்னார்:- ஜீவன் முக்தி இகலோகத்தில், அதாவது இந்த சரீரத்தில் சாத்தியம்'' என்றார். 

''ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை'' என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார். 

உமக்கு விடுதலை என்றால் இன்னதென்று விஷயமே புலப்படவில்லையென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலையென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. ஸர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த ஸர்வபந்த நிவாரணமாவது ஸர்வ துக்க நிவாரணம், ஸர்வ துக்கங்களையும் ஒரேயடியாகத் தொலைத்து விடுதலை. அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது'' என்று முத்து ஸ¤ப்பா தீட்சிதர் சொன்னார். 

''சுவர்க்க லோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சியேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே, அதன் தாத்பர்யமென்ன?'' என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார். 

''அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன்முக்திக்கு நான் சொன்னதுதான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக் கொள்ளலாம்'' என்று முத்து தீட்சிதர் சொன்னார். 

இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தைபாடிக் கொண்டிருந்தார்கள். 

கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழேயிறங்கி வந்தார். அவர், ''இந்த தர்க்கத்தின் விஷயமென்ன?'' என்று கேட்டார். 

''ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா' என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம்'' என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார். 

''இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராயமெப்படி?'' என்று சோமநாதய்யரை நோக்கி முத்து தீட்சிதர் கேட்டார். 

''எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது'' என்று சோமநாதய்யர் சொன்னார். 

திடீரென்று விசாலாட்சி அவர்களுக்கு முன்னே தோன்றி ''ஜீவன்முக்தி இவ்வுலகில் சாத்தியமென்பதே பொய். நீங்கள் அதையடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?'' என்று கேட்டாள். 

''சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன்முக்தர்'' என்று சோமநாதய்யர் சொன்னார். 

அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதிபெற்றுக் கொண்டு விசாலாட்சி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாட்சியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க் கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம். அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி. அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது, மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாட்சி போய்ச் சேர்ந்தாள். 

அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால சந்நியாசி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வட தேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜானுபாகுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர். 

இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன் முக்தி அடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டேயிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண மூடபக்திகளையெல்லாம் போக்கிவிட்டார். ஆனால், தீய விதியின் வசத்தால் தமக்குத் தாமே மானசீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார். அதாவது, அவர் இன்னும் ஜீவன் முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். தாம் முக்தி அடைந்துவிட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமன்றித் தம்முடைய மனத்துக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டுவிட்டார். 

விசாலாட்சி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒரு மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பட்சணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூங்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால சந்நியாசியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாட்சியும் நால்வரும் அந்த நான்கு நாற்காலிகள் மீதிருந்து கொண்டு சிற்றுண்டியுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத்து உறங்கிவிட்டாள். அவளுக்குக் காவலாகக் கிழ இடைச்சி, ஒரு வேலைக்காரி, படுத்திருந்தாள். 

நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந்நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே, சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த பால சந்நியாசிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்தக் கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த சந்நியாசியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக்கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். சந்நியாசியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகா சுந்தரரூபி. வடிவெடுத்த மன்மதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர்மீது அடங்காத மையல் கொண்டுவிட்டாள். சந்நியாசியும் அங்ஙனமே விசாலாட்சியின் மீது பெருமையல் பூண்டார். சந்நியாசி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத் தான் வெல்லமாட்டா? 

'காற்றையும் நீரையும் இலையையும் புசித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மகரிஷிகள் கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர்' என்று பர்த்ருஹரி சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்துப் புலவர் தம்முடைய நூல்களுளன்றில் மன்மதனை எல்லாக் கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளாகக் கூறுகிறார். பார்வதியை மறந்து தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது, அவர் கோபங் கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி, அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம் பண்ணத் தொடங்கினாரோ? அன்று; அவர் காமனம்புகளுக்குத் தோற்று ஜகன்மாதாவை மணம் புரிந்துகொள்ளத் திருவுளங் கொண்டருளினார். மேலும், மன்மதன் மகாவிஷ்ணுவின் குமாரன் பிரம்மாவுக்கு சகோதரன். அவனே பிரம்மா. அவனாலே படைப்புத் தொழில் தோன்றுதல் ப்ரத்ய
ட்மன்றோ? 

நித்யானந்த பால சந்நியாசி ரிக்வேத முழுதையும் ஸாயன பாஷ்யத்துடன் படித்தவர். உபநிஷத்துக்களில் முக்கியமான தசோபநிஷத்துக்களை சங்கர பாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர். மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத நூல்களிலும், தர்க்கம் மீமாம்ஸை யோகம் ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும், புராண இதிகாசங்களிலும், காவியங்களிலும், நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால், இந்து மதத்துக்கும் இந்து நாகரீகத்துக்கும் தக்க பிரதிநிதியாகக் கருதத்தக்கவர். 

தவிரவும், இந்தி, வங்காளி, மஹாராஷ்ட்ரம், தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இந்த ஆறு பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய், இவற்றில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சாஸ்திரங்களையும் காவியங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவுத் தெளிவு படைத்தவர். எனவே, இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமை வாய்ப் பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித ஆராய்ச்சிகளாலும், உயர்ந்த கேள்விகளாலும், தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்திக் கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு பெருந் தடையாக நின்றது. ஏனெனில், பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன் முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது. 

பௌத்த மதத்தின் மேம்பாட்டினாலே தான், ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை விட்டு முக்தி தேடப் புகும் வழக்கம் இந்நாட்டிலும் உலகத்திலும் ஊர்ஜிதப்பட்டதென்று நினைக்க ஹேது இருக்கிறது பூர்வீக வேதரிஷிகள் எல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் இந்து மதமும் பிற மதங்களும் ஒரேயடியாக உலகத்தைத் துறந்து விடுவதாகிய நித்ய சந்நியாச முறையைக் கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோட்சத்துக்கு சாதனமாகச் செய்த வேள்வியிலெல்லாம் அவர்களுடன் மனைவியிருமிருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. பூர்வ விஷயங்கள் எங்ஙனமாயினும் ''இல்லறமல்லது நல்லறமன்று'' என்னும் ஔவை வாக்கியத்தையே நான் பிரமாணமாகக் கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும் உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே, அது இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களுக்கு ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும். 'உண்மையான காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது' என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவியரசர் சொல்லுகிறார். அந்தக் கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சியில்லாமலும் பாவ நெறியில் நழுவிச் செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின் இன்பத்தைச் சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் கணத்திலே தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ்வுலக இன்பங்கள் எண்ணத் தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். சூரியனும், வெயிலும், பட்சிகளும், இனிய தோற்றமுடைய மிருகங்களும், சோலைகளும், மலைகளும், நதிகளும், காடுகளும், அருவிகளும், ஊற்றுக்களும், வானவெளியும், வானமூடியும், சந்திரனும், நிலவும், நட்சத்திரங்களும் பார்க்கப் பார்க்கத் தெரிவிட்டாத ஆனந்தந் தருவன. ஏழை மானிடரே! இவையெல்லாம் சாசுவதமல்லவா? கணந்தோறும் தோன்றி மறையும் இயல்பு கொண்டனவா? தனித்தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது. தனிப்பட்சிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிருகக் கூட்டமும் பட்சி ஜாதியும் எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக, மலை, கடல், வானம், இடைவெளி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ யுகாந்தரங்களில் இவையும் மாறக் கூடுமென்று சாஸ்திரிகள் ஊகத்தாலே சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊகவாதத்தைப் பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்களுக்குப் பிறகு இவை ஒரு வேளை அழியக்கூடுமென்று அந்த சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே, நாம் அவற்றை நித்ய வஸ்துக்களாகப் போற்றுதல் தவறாகாது. இது நிற்க. 

இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வெறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்று விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள் முதலிய எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க, இவ்வுலக இன்பங்கள் கணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள் நெஞ்சுறுதியில்லாதோர். 

இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப உற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும். மாறுதலின்றிக் காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம் எத்துணை சிறந்ததென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில் உணர்ந்துகொள்ள வல்லோராவர். 

இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யானந்தர் என்ற பால சந்நியாசி தாம் விசாலாட்சி மீது காதல் கொண்டது தவறில்லையென்று தீர்மானித்துக் கொண்டார். ஒரு நாள் மாலையில் நித்யானந்தரும் விசாலாட்சியும் மிட்டாய் கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே சந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. தாம் சந்நியாசத்தை விட்டு நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்த விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்ததற்குள்ள காரணங்களையெல்லாம் அவர் விசாலாட்சியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையேயென்று மிகவும் சுலபமாக அங்கீகாரம் செய்துகொண்டாள். கதையை வளர்த்துப் பிரயோஜனமென்ன? அவ்விருவரும் சந்திரிகை சகிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு போகுமுன்னாகவே நித்யானந்தர் தம்முடைய காவியுடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும், நேர்த்தியான சட்டையும், பஞ்சாபித் தலைப்பாகையும் அணிந்து கொண்டார். ''இந்த லௌகிக ரூபத்தில் சுவாமிகளைப் பார்த்தால் நேபாளத்து ராஜா மகனைப் போலிருக்கிறது'' என்று சங்கரய்யர் சொன்னார். ''இன்னும் என்னை சுவாமிகளென்று சொல்லாதேயுங்கள். சந்நியாசக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்தியானந்தனென்ற பெயரைக்கூடத் தொலைத்து விட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தையாகிய விசாலாட்சியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்'' என்றார். எனவே நானும் இக்கதையில் இவருக்கு நித்யானந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கி வருதல் அவசியமாகிறது. 

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாட்சிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறிகொண்டவள் போலாக்கிவிட்டது. 

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலுவிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாட்சி பந்துலுவிடத்திலும் அவர் மனைவியிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்துகொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சியுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்கில் முயற்சிசெய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சியில்லாமலே தமது விருப்பம் நிறைவேறி விட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று. 

''எல்லாம் தெய்வச் செயல். நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது'' என்று சொல்லி அவர் மனமாரக் கடவுளைப் போற்றித் தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும் விசாலாட்சியையும் பிரம சமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம சமாஜ ஆலயத்திலேயே, அந்த சமாஜ விதிகளின்படி விசாலாட்சிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில நண்பர்கள் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது. தங்கசாலைத் தெருவிலே மூன்று, நான்கு குஜராத்திப் பிரபுக்களின் பிள்ளைகளுக்கு இந்தி, சமஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்று இராப்பாடம் சொல்லி வைக்க வேண்டியது. இதற்காக அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்கு சமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய வீடு, கீழே இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்குப் பின் அழகான தோட்டமிருந்தது. அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாகத் தயார் பண்ணி, அதில் நாற்காலி, மேஜை, புத்தகங்கள், பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னைக் காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு, மேற்கூறிய குஜராத்திப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும்படி கிடைக்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வியாஸங்களும், தலையங்கங்களும் எழுதி சாஸ்திர விஷயங்களைப் போலவே லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்திக் கொண்டார். எழுதும் திறமையிலோ, இங்கிலீஷிலும், தமிழிலும் அவருக்கு சமமான தொழிலாளி இந்த தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வியாஸங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக் கொண்டு தக்க சம்பளம் கொடுக்கத் தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம் கை தேறியவுடனே, அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய் கல்கத்தா முதலிய வெளி நகரங்களில் பிரசுரமாகும் உள்நாட்டுப் பத்தரிகைகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷயதானம் செய்யும் பதவி பெற்றார். இதிலெல்லாம் அவருக்கு மாதந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத வரும்படி வரத் தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய்விட்டார். 

அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப் போய்விட்டன. எப்போதும் அவர் முகத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாட்சியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்தப் பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுது போகவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாட்சி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாதம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாதந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிதுகாலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகைத் தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டுவிட்டார். காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோறும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவிவிட்டு சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணி வரை தமது எழுத்துவேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டியுண்டு தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால், தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாட்சியையும், சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் சவாரி விடுவார். இரவு ஏழுமணிக்கு நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாட்சியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்னதான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத் தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாட்சி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவர் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில சமயங்களில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும். 

இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானஷிகமன்று, தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருதயுகத்துக் காதல், ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்தினி விரதத்தில் சிறீராமபிரான் புகழ்பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் சம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப் புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாத சர்மா சாட்சாத் வைகுண்ட நாராயணனே தேவியிடம் செலுத்துவது போன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாலாட்சியிடம் செலுத்தப்பட்டது. அவளும், இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாசம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து, தான் அவரை சாட்சாத் பகவானாகவே கருதி மகத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்யாஸத்தால் முக்தியடைவது சுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாட்சி அது அவசியமில்லையென்று சொல்லிவிட்டாள். 

விசாலாட்சியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று சுவர்க்கலோகத்தில் இந்திர பதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நஹஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று. 

காதலால் மோட்சமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத ஸௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றிவந்து அவனன்பினால் ஆனந்தபரவசமெய்தியிருந்தாள். அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய்விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்கு புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாட்சியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு:- ''கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜராத்தியாளிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கி சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப் பற்றிய விசாரங்களுக்கும் உன் மனத்தில் இடங்கொடாதே. 

இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல நடுக்க மொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ் விடுக்கணையரியு மெ·காம், இருந்தழு தியாவ ருய்ந்தார்? 

என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடியிருக்கிறார். அதாவது, 'துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்க வேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டுதற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்)'. இந்த உபதேசத்தை நீ ஒரு போதும் மறக்காதே.என் கண்ணே, என் உயிரே, விசாலாட்சி, நீ என்ன நேர்ந்தாலும் மனத்தைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டுமென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து சகிக்க மாட்டேன்'' என்று பலபல சொல்லி மனைவியை சமாதானப்படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலேயே விசாலாட்சியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்ட விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு சமயம் வைத்தியர் வந்துவிட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாட்சியை காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படுமென்றும், ஆதலால் இனிமேல் விசாலாட்சி தன் கணவனை அடிக்கடி தனியாக சந்திக்கக்கூடாதென்றும், அப்படியே சந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும் எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன், ஆகாரம் போடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், சர்மாவை அடிக்கடி பார்க்காமலும், அவருடன் அதிகமாகப் பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதனின்று விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவேயன்றிக் குறைவு படவில்லை. தம்மை விசாலாட்சி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை. அவர் அப்படி எண்ணக்கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையைக் கருதி அவள் மிகவும் மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்துப் பங்களாவுக்கு அவள் அடிக்கடி வந்து தன்னைப் பார்க்காமலும், அதிகமாகத் தன்னிடம் வார்த்தையாடாமலுமிருக்கிறாள் என்று அவர் நினைத்துக் கொண்டார். 

இங்கு வியாதிகளின் சம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்திப் பேதிப் பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள மக்க நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹமதிப் பக்கிரி அந்தப் பேயைக் கண்டு ''எங்கே போகிறாய்?'' என்று கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது:- ''மக்க நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்கட்த்துக்குப் போகிறேன்'' என்றது. 

அது கேட்டு அந்த சந்நியாசி:- ''சிச்சீ! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போய்க் கொல்ல நான் இடங் கொடுக்கமாட்டேன்'' என்றார். 

அதற்கு வாந்திபேதிப் பேய் சொல்லுகிறது:- ''சுவாமியாரே, என்னையும் அல்லா தான் படைத்து மனித உயிர்களை வாரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார். உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்களேயன்றி மற்றில்லை. அவனின்றியோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது. முடியுமெனிலும் நீர் அதனைச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும் நினைத்து விடக்கூடாது. எத்தனையோ பாவிகளும், அதர்மிஷ்டரும், கொரான் விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமேயன்றி புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல் மனிதருக்கு நன்றேயன்றித் தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும், மகானாகிய உம்முடைய மனதுக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையன்று சொல்லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டுக் கட்டளையிடும். அந்தத் தொகைக்கு மேலே நான் ஒற்றை உயிரைக்கூடக் கொல்வதில்லையென்று பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன்'' என்றது. 

இங்ஙனம் வாந்தி பேதிப் பேய் சொல்லியதைக் கேட்ட முனிவர்-''சரி; போ. அங்கு அநேக லட்சகணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரைத் தான் கொல்லலாம். அதற்கு மேல் ஓருயிரைக்கூடத் தீண்டலாகாது. ஜாக்கிரதை! போய் வா'' என்றார். 

நல்லதென்று சொல்லிப் பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக் கொண்டு மக்கத்துக்குப் போயிற்று. அப்பால் சில தினங்கள் கழிந்தபின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லட்சம் பேர் வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கரியின் செவிக்கெட்டிற்று. அவர் தம்மை வாந்திப் பேதிப் பேய் வஞ்சித்து விட்டதாகக் கருதி மிகவும் கோபத்துடனும் மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதிப் பேய் அந்த வழியாகவே மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப்பேயை நோக்கி:- ''துஷ்டப் பேயே, பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லையென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு, மக்கத்திலே போய் லட்சம் ஜனங்களை அழித்து விட்டனையாமே! உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?'' என்றார். 

இதைக் கேட்டு வாந்தி பேதிப் பேய் கலகலவென்று சிரித்தது. அது சொல்லுகிறது:- ''கேளீர், முனிசிரேஷ்டரே, நான் உமக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம் பேருக்குமேல் ஓருயிரைகூடத் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள் தமக்குத் தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்துக் கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?'' என்றது. 

அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு- 'ஆகா! ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், சம்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலை செய்துகொண்டிருக்கிறாயே! உன்னுடைய இந்த மகா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மகா பயங்கரமான விதியையும் நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன். நான் என் செய்வேன்! நான் என் செய்வேன்!சுப்! நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லா ஹோ அக்பர். அல்லா மஹான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள் வெல்லுக'' என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதித் தியானம் செய்யத் தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டது. 

இந்த மாதிரியாக நான் ஒரு கதை வாசித்திருக்கிறேன். நோய்க்கு முக்கியமான காரணம் ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம், கவலை, கோபம், சம்சயம், பொறாமை, வெறுப்பு, அதிருப்தி முதலிய விஷகுணங்களேயாமென்பது இந்தக் கதையின் பொருள். இதை நான் அங்கீகரிக்கிறேன். உள்ளத்திலே தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களைப் பிறப்பிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷணை செய்து வளர்ப்பதும், அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமாகிய தொழில்கள் பெரும்பாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மையெனவே நான் நினைக்கிறேன். 

இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது, வைத்தியர்களெல்லாருமே தமது சாஸ்த்திரத்தை நன்று கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது மனமறிந்த அயோக்யர்-களென்றாவது, வேண்டுமென்று மனிதனைக் கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல விரும்புவதாக யாரும் நினைத்து விடலாகாது. 

வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன். வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்திரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும் ஜீவகாருண்யத்தில் சிறந்த மகான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும், வியாதிகள் பல்குவதற்கும், மரணம் இங்ஙனம் மனிதரைப் பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாகத் தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம் ஏககாலத்தில் உண்மையாகுமென்பதைத் தெரிவிக்கிறேன். 

ஆனால், ஏற்கெனவே இந்த அத்தியாயம் மிக நீண்டு போய்விட்டது. நம்முடைய கதையின் போக்கோ சிறிது நேரம் விசாலாட்சியையும் விசுவநாத சர்மாவையும் விட்டுப் பிரிந்து வேறு சிலருடைய விருத்தாந்தங்களைக் கூறும்படி வற்புறுத்துகின்றது. ஆதலால் வைத்தியர் சம்பந்தமான விவகாரத்தைப் பின் ஓரத்யாயத்தில் விளக்கிக் காட்டுகிறேன்.