பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 30, 2020

ரமணி வனம்


           ரமணி வனம் புதுப்பட்டினமாகி, பிறகு நியு டவுனாக பெயரெடுத்து                           அது அருளானந்த நகர்/வ.உ.சி.நகர்/ராஜப்பா நகர் என பெயர் பெற்ற வரலாறு.
                                                 ------------------------------------
            மராத்திய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டுவந்த காலத்தில் இவ்வூரைச் சுற்றிலும் ஏழு வனாந்திரப் பகுதிகள் இருந்தன, அவற்றில் ஒன்று ரமணி வனம் எனப்படும். பிறகு 1855இல் சரபோஜியின் புதல்வர் இரண்டாம் சிவாஜி ராஜா காலமான பிறகு பிரிட்டிஷார் மராட்டிய வம்சத்தாரிடமிருந்து தஞ்சை ராஜ்யத்தை எடுத்துக் கொண்ட காலத்தில் இந்தப் பகுதி புதுப்பட்டினம், நாஞ்சிக்கோட்டை எனும் பெயர்கள் கொண்ட கிராமங்களாக மாறின.  அப்போது தஞ்சையை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  பெரும்பாலும் புதுப்பட்டினம் என வழங்கியப் பகுதியில் தான் வாசம் செய்து வந்தார்கள். தஞ்சாவூரின் தென் புறத்தில் அமைந்திருந்த இந்தப் பகுதிகளை மக்கள் குடியிருப்புகளாக மாற்றி புதுப் பட்டினம் எனும் தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் நியு டவுன் என அழைக்கத் தொடங்கினார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தஞ்சாவூர் நகராட்சி அரசாங்கத்துக்கு உரிய நிலப் பகுதிகளையும், தென் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான நிலங்களையும் கையகப் படுத்தி, அங்கெல்லாம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மூலம் மக்கள் குடியிருக்க, வீட்டு மனைகளை உருவாக்கினார்கள். அப்போதுதான் இப்போதைய ராஜப்பா நகர், வ.உ.சி.நகர் ஆகிய பகுதிகள் தஞ்சை நகராட்சியால் உருவாக்கப் பட்டன. முன்பு இந்தப் பகுதிகள்தான் நியு டவுன் என பெயரிட்டு அழைக்கப்பட்ட பகுதிகள். இங்கு பிரிக்கப்பட்ட வீட்டு மனைகள் பெரிதாக இருந்தன. அவற்றை விற்பனை செய்த நகராட்சி நிர்வாகம் அங்கு நிலம் வாங்குபவர்களை வீடுகளைக் கட்டிக் கொள்ள ஊக்கமளித்தது. தரிசு நிலமாகவும், சப்பாத்திக் காடு என்று அறியப்பட்ட, முட்செடிகள் நிறைந்து காணப்பட்ட இந்த பகுதிகள் குடியிருப்பாக மாறியது அப்போதுதான். அந்த காலத்திய இந்த செய்திகளை பழைய தஞ்சை வாசிகள் நினைவில் வைத்திருப்பார்கள். 

தஞ்சாவூரில் நகரப் பேருந்து எண் 6 அப்போதைய பேருந்து நிலையமான (முதல் பேருந்து நிலையம் தஞ்சாவூரில் கீழ்ப்பாலம் எனப்படும் Low Bridge அருகிலுள்ள பக்கிரி லாரி ஷெட் என அழைக்கப்பட்ட பகுதி, அது இப்போது டி.பாலசுப்ரமணியம் பெட்ரோல் பங்க், ஆர்.செங்கமலம் மோஹன் லாரி ஸ்டேண்டில் இருந்தது) இங்கிருந்து புறப்பட்டு பூக்காரத் தெரு, திருச்சி சாலை, மேம்பாலம் வழியாக ராஜப்பா நகர் வரை இயக்கப் பட்டது. பிறகு 1950இல் முதல் கூட்டுறவு வீடுகட்டும் சங்கம் தொடங்கப்பட்ட போது, அது அருளானந்த நகர் வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயருடன் ஆரம்பிக்கப் பட்டது. இந்த சொசைட்டி அருளானந்த நகர் பகுதிகளை ராவ் பகதூர் ஏ.ஒய்.அருளானந்தசாமி நாடார் குடும்பத்தாரிடமிருந்து பெற்றார்கள். முன்பு இந்த இடங்கள் முந்திரிக் காடாக இருந்தது, பிறகு வீட்டு மனைகளாக மாற்றப் பட்டன. “அருளானந்த நாடார் வீட்டு வசதி சொசைட்டி” வீடுகள், அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது நிலத்தின் விலை சதுர அடிக்கு (தயவு செய்து கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள்!) ஒண்ணரை அணாவுக்குச் சமமான இப்போதைய பத்து பைசா.

தேசியம் வளர்த்த தமிழ்


                                            
            தமிழ் மொழி தோன்றிய காலம் எது என்பதை யாராலும் சொல்ல இயலாது. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று நமது வரலாற்றின் தொன்மையைக் கூறுவார்கள். அப்படித் தமிழின் தொன்மையை முழுவதுமாக அறிந்து சொன்னவர் எவரும் இல்லை. மகாகவி பாரதி சொல்கிறார் “ஆதிசிவன் பெற்றுவிட்டான், என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே, நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்” என்று. சிவபெருமான் உருவாக்கிய தமிழ், அகத்தியன் இலக்கணம் கண்ட தமிழ். இதன் தோற்றம் வளர்ச்சி இவற்றை மனித வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே உருவானதாகச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட தமிழ்மொழி, காலத்தால் அழியாமல், அவ்வப்போது உருமாறி, சொற்களின் அமைப்புகள் மாறி, பேசுகின்ற, எழுதுகின்ற, பாடுகின்ற முறைகளில் மாற்றங்களைச் சந்தித்து இன்றைய கால கட்டத்தில் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிற மாறுதல்களுக்கேற்ப உருப்பெற்று வந்திருக்கிறது.

            தமிழைத் தாய் என்கிறார்கள் புலவர்கள். இந்தத் தாய் தோன்றியது எப்போது என்பதை ஆராய்ந்து பார்த்தால் பாரதி பாடிய “எங்கள் தாய்” எனும் பாடலில் வரும் வரிகள்தான் நம் நினைவுக்கு வரும். “தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் எங்கள் தாய்” என்கிறார் அவர்.

            அப்படி என்றோ காலத்தால் முந்தி உருவான தமிழ் மொழி எத்தனை பிரளயங்கள், எத்தனை அழிவுகள், எத்தனை போர்கள், இவை அத்தனையையும் தாங்கி இன்றும் என்றும் இளமைத் தோற்றத்துடன் எழுந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் இம் மொழியின் வளம்தான். தொடக்க காலத்தில் தமிழ் எப்படி பேசப்பட்டது? தெரியாது. எப்படி எழுதப் பட்டது அதுவும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் பழமையின் மணத்தோடு கவிதை வடிவில் தோற்றுவித்த பல்வித தமிழ்க் கவிதைகள்தான்.  முதன் முதல் தோன்றிய தமிழை மூன்று குலத் தமிழ் மன்னர் மூண்ட நல் அன்போடு எடுத்து வளர்த்தார்; ஆன்ற மொழிகளுக்குள்ளே தமிழ் உயர் ஆரியத்துக்கு நிகரென வாழ்ந்தது எனும் வரிகளால் ஆதியில் தமிழும் சம்ஸ்கிருத மொழியும் இணையாக வளர்ந்து வந்திருப்பதை அறிகிறோம். வடமொழி கற்பது என்பது தமிழின் வளத்தைக் கூட்டுவதாக அமைந்தது. அதனாலன்றோ கம்பன் வான்மீகத்தைக் கற்றதால் கம்ப ராமாயணம் இயற்ற முடிந்தது. நளவெண்பா, வில்லிபுத்தூரார் பாரதம் என வடமொழியில் தோன்றிய காப்பியங்கள் தமிழில் உருப்பெற்றன. மொழி வெறுப்பு, மொழி எதிர்ப்பு என்பது இங்கிருந்திருக்குமானால் நாம் தனிமைப் படுத்தப் பட்டிருப்போம். அதற்காக மொழி ஒற்றுமை எனும் நோக்கில் பிறமொழி நம் தமிழ் மொழியை அடிமை கொள்ளுமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்ஸ்கிருத மொழியின் தாக்கம் இங்கே மணிப்பிரவாளம் எனும் தமிழ் நடை தோன்றியது. அது காலப்போக்கில் தனித்தமிழ் ஆர்வத்தால் மறைந்து தமிழைத் தமிழாகப் பேச முடிந்தது. ஆனால் அந்தோ சம்ஸ்கிருத மொழியை விரட்டிய ஆர்வம் ஆங்கிலத்தை அகற்ற முடியாததன் தாக்கம் இன்று நாம் தமிழை மறந்து ஆங்கில மோகத்தால் தவித்து வருகிறோம். புனிதமான நம் தமிழ்மொழியும் உருமாறி தங்கிலீஷாக மாறிப் போயிருக்கிறதே. அதிலும் நகர்ப்புறங்களில் தமிழ் பேச யாரும் இல்லை.

            சங்கத் தமிழ் நூல்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. இன்றைய தமிழுணர்ந்தோர் அதனைப் படித்துப் பொருள் உணர புலவர்களை நாடவேண்டியிருக்கிறது. காலத்தால் அந்த சங்கத் தமிழ் மாறி இன்று நாம் பேசும் எழுதும் எளிய தமிழாக உருமாறி இருப்பதால்தான் அந்த நிலைமை. கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ் இன்று பொருளுணர்வதற்கு அவற்றைப் படித்துப் பொருள் சொல்லும் வல்லுனர்களை நாட வேண்டியிருக்கிறது.

            தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் இங்கு எத்தனையோ படையெடுப்புகள். பிறமொழியாளர்கள் வந்து இங்கே ஆண்டு வந்திருக்கிறார்கள். அவற்றால் எல்லாம் நம் தாய் மொழி பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பிறமொழிச் சேர்க்கையால் தமிழ்மொழி வளம் பெற்றதா, உருச் சிதைந்ததா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். வேறு எத்துணை மொழிகள் வந்து இங்கே ஆக்கிரமித்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப் படுத்தி ஆளத் தொடங்கிய பிறகுதான் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பே அதிகம் என்று சொல்லலாம். இன்று தமிழன் பேசுவது தமிழா என்றுகூட நமக்கெல்லாம் ஐயமேற்படத்தான் செய்கிறது. சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது “தமிழா நீ பேசுவது தமிழா?” என்று தொடங்குகிறது.

தமிழா நீ பேசுவது தமிழா ?
தமிழா நீ பேசுவது தமிழா ?

அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
இன்னுயிர் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா நீ பேசுவது தமிழா ?

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
மனைவியை ஒய்ஃப் என்றாய் பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றாய்,  விடியாது வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றாய்,  அறுத்தெறி உன் நாக்கை

தமிழா நீ பேசுவது தமிழா ?

வண்டிக்காரர் கேட்டார் லெஃப்டா ரைட்டா
வழக்கறிஞர் கேட்டார் என்ன தம்பி ஃபைட்டா
துண்டுக்காரர் கேட்டார் கூட்டத்துக்கு லேட்டா
தொலையாதா தமிழ் மொழி,  இப்படிக் கேட்டா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

அருமை நண்பனை ஃபிரெண்டு எனச் சொல்வதா?
தெய்வத்தமிழ் மொழியை, ஆங்கிலம் தின்பதா
கண்டவரை எல்லாம் “சார்” என்று சொல்வதா
கண்முன்னே நம் தாய்மொழி, சாவது நல்லதா

தமிழா நீ பேசுவது தமிழா ?

பாட்டன் கையிலே வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே வண்ண லிப்ஸ்டிக்கா
வீட்டிலே பெண்களின் தலையிலே ரிப்பனா
வெள்ளைக்காரன்தான் நமக்கென்ன அப்பனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

இந்தப் பாடலில் காண்பது போல தமிழன் ஆங்கிலத்தில் தமிழைப் புகுத்தி உரையாடுவது நமக்குக் கேவலம் இல்லையா?. இதனைத்தான் தங்கிலீஷ் என்கிறார்கள். இந்த நிலைமை உருவாவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் நம்முடைய ஆங்கில மோகம் தான். ஆங்கில மோகம் வரக் காரணம் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமைகளாக வாழ்ந்ததுதான். இந்தியா முழுவதும் சுதந்திரம் அடைந்தாலும் தமிழகம் மட்டும் (அல்லது திராவிடம் மட்டும்) ஆங்கிலேயர்களின் அரவணைப்பில்தான் வாழ்வோம் என்று சிலர் திருவாய் மலர்ந்தருளிய போது, தமிழ் உணர்வும், தமிழன் என்கிற பெருமையும் எங்கே போயிற்று?
            ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது, அப்படி அவர்கள் வெளியேறுவதாயிருந்தாலும் தமிழ் நாட்டையாவது தங்களது ஆட்சியின் பிடியில் வைத்திருக்க வேண்டுமென்று இங்கே ஒரு கோரிக்கை எழுந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றது; அப்போழுதாவது நமது சுதேசி மொழிகள் வளம்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமல்லவா? ஆம்! தமிழ் தவிர இதர மொழிகள் வளம்பெறத் தொடங்கின. ஆங்கிலக் கலப்பில்லாமல் அவரவர் மொழியை அவர்கள் செம்மையாகப் பேசவும் எழுதவும் தொடங்கினர். திராவிட மொழிகள் எனப்படும் தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் பேசுகையில் இயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் அவர்களால் பேச முடிகிறது. ஆனால் இங்கே, தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே வேண்டும், இந்தி ஒழிக! மும்மொழித் திட்டம் வேண்டாம் என்றெல்லாம் குரல் எழுப்பியதன் விளைவு, தாய்மொழி சிதைந்து ஆங்கிலம் உட்புகுந்து புதியதொரு மொழியாக “தங்கிலீஷ்” உதயமாயிற்று. இந்த நிலை ஏற்படாமல் போயிருந்தால் பிற இந்திய மொழிகளைப் போல நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் வளம் பெற்றிருக்கும், அதன் சிறப்பும், வளமையும் வெளியுலகத்துக்குத் தெரிந்திருக்கும்.
            பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தான் இந்தியர்களுக்கு சுய உணர்வு வந்து தாங்கள் ஆங்கிலேயர்களின் நுகத்தடியில் கட்டப்பட்டு அடிமை வாழ்வு வாந்துகொண்டிருக்கிறோம் என்ற அறிவு உதயமானது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியோடு தமிழகம் குறிப்பாக சோழ நாடு தன் சுய மொழி ஆளுமைகளை இழந்து, இதர மொழி பேசும் மக்களுக்கு அடிமையாகிப் போனது. அவர்கள் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இங்கு தோன்றி தமிழையும், தமிழர் பண்பாட்டையும் அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. சோழ வம்சம் அழிந்தொழிந்த பின்னர் எத்தனையெத்தனை அந்நியர்கள் இங்கே வந்தார்கள். தெலுங்கு மொழி பேசும் விஜயநகர சாம்ராஜ்ய ஆளுமை, பிறகு மராத்திய மன்னர்களின் ஆட்சி. இப்படி அவர்கள் 1855 வரை இந்த நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந்த வரையில் தமிழ் கொச்சை மொழியாக அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமாகியிருந்தது.
            19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நம் தேசம் அடிமைப் பட்டுக் கிடப்பதையும், நமது தாய் மொழி அழிந்தொழிந்து போகும் அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் உணர்ந்த பல தேசபக்தர்கள், மொழிப் பற்றாளர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டினை மறக்க முடியாது. அவர்களில் முதன்மை யானவர் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர். அவர் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வில்லையானால் நமக்குப் பல பழைய காலத்து தமிழிலக்கியங்கள் கிடைக்காமலே போயிருக்கலாம். ரா.பி.சேதுப் பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார் போன்ற தமிழ்ப் புலவர்கள் தமிழின் செம்மைக்கு அணிசேர்த்தனர். ம.பொ.சிவஞான கிராமணியார், தமிழன் தன் சுய உணர்வற்று அடிமைப் பட்டு கிடந்த நிலைமை கண்டு பொங்கி எழுந்து தமிழனுக்கு நாம் தமிழன் எனும் உணர்வை ஊட்டியவர். சிலப்பதிகாரத்தை இழித்தும் பழித்தும் வந்த தமிழகத்து சிலரது வாதங்களை முறியடித்துக் கண்ணகியின் பெருமையை ஊரறியச் செய்தவர். தமிழ், தமிழ்நாடு, அதன் எல்லைகள் இவற்றுக்காகத் தன் வாழ்நாளை முழுவதுமாகச் செலவு செய்தவர் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகின்ற ம.பொ.சிவஞான கிராமணியார்.
            இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட தேசியத்துக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்ட போது மொழிப்பற்றை ஆதாரமாகக் கொண்டு தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தியவர் ம.பொ.சி. மக்களால் மறக்கப்பட்ட பல தேசிய இயக்கங்களை, போராட்டங்களை தலைவர்களை மக்களுக்கு நினைவு படுத்தியவர் இவர். வ.உ.சி.யின் தியாகம், கட்டபொம்மனின் வீரம், மகாகவி பாரதியின் தேசியம் ஆகியவைகளைப் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துக் காட்டியவர் ம.பொ.சி. தமிழ் என்றதும் நினைவுகு வரும் தேசியவாதி ம.பொ.சி.
            பத்திரிகை, எழுத்து இவற்றால் தமிழ் வளர்த்த சான்றோர்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். தேசிய எழுச்சியில் ராஜாஜிக்கு வலது கரமாக இருந்தவர் கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய எழுத்துக்கள், வரலாற்று நவீனங்கள் ஆகியவை மக்கள் மனங்களில் ஆழமாக நிலைகொண்டு இருக்கின்றன. தமிழகத்தின் வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும்படி அவருடைய வரலாற்று நவீனங்கள் அமைந்திருக்கின்றன. ர.சு.நல்லபெருமாள் எனும் தேசிய உணர்வுடைய வழக்கறிஞர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அவருடைய புதினங்கள் அனைத்துமே தேசிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாக இருக்கும். கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவருடன் தமிழ் படித்த கு.ராஜவேலு போன்றவர்கள் தேசபக்தியை வளர்க்கக் கூடிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கினர்.
            திராவிட இயக்கம் வளர்ந்து வந்த ஐம்பதுகளில் பல திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவித்த வைகளுக்கு எதிராக தேசிய உணர்வினைத் தூண்டும் அற்புதமான எழுத்துக்களைக் கொடுத்தவர்கள் கவி கா.மு.ஷெரீப், ஏ.பி.நாகராஜன் போன்றவர்கள்.
            இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழ் கடுந்தமிழ் பேசும் பெரும் பண்டிதர்களின் கரங்களில் மாட்டிக் கொண்டு பாமரனுக்கு அது பயன்படாத அளவில் போய்க்கொண்டிருந்தது. பண்டிதர்கள் எழுதுகின்ற தமிழ், ஆழ்ந்த தமிழ் கற்ற புலவர்களுக்குக் கூட புரியாதபடி வேண்டுமென்றே அதனை பாமரனுக்கு எட்டாத வகையில் கையாண்டு வந்தார்கள். மகாகவி பாரதிகூட முதன் முதலில் எழுதி மதுரையில் வெளியான கவிதை இந்த பண்டிதர்களின் கடின தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் மகாகவி பாரதி நம் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து சுதந்திரப் பறவைகளாக மாறவேண்டி பாடத் தொடங்கினான். அந்தப் பாடல்கள் பண்டிதர்கள் காதில் விழுவதற்காக அல்ல, அடிமட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தனாம் பாமரனும் பாடிப் பரவசப் பட்டு நாடு இருக்கும் இழிநிலை கண்டு பொங்கி எழுவதற்காக. அவன் பாட்டு பாமரனைச் சென்று அடைந்தது. பயன் அடிமட்டத் தொண்டன் கூட விடுதலை விடுதலை என்று முழங்கத் தொடங்கினான். பண்டிதன் தமிழ் அன்று முதல் பாமரனின் தமிழாக மாறியது.
            இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் இருந்த நிலைமையை பாரதி எடுத்துரைக்கிறான். வருத்தம் மிகுந்த தொனியில் அவன் கருத்துக்கள் வெளிவருகின்றன. அவன் சொல்கிறான் “புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவதில்லை, அவை சொல்லும் திறமை, தமிழ் மொழிக்கில்லை” இப்படி யாரோ ஒருவன் சொன்னானாம். பாரதியின் மனம் கோபத்தால் கொதித்தது. இப்படி சொன்னதோடு நிறுத்தியிருந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம்; அவன் மேலும் சொன்னது பாரதியின் மனதைப் புண்படுத்திவிட்டது. அவன் சொன்னான்: “மெல்லத் தமிழ் இனி சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்” என்று சொன்னான் அந்தப் பேதை. சொல்லலாமா? சொல்ல விடலாமா?
            பாரதி உணர்ச்சிவசப்படுகிறான்: “ஆ! இந்த வசை எனக்கு எய்திடலாமோ?” என்று உணர்ச்சி மிகுதியோடு கேட்டுவிட்டு நம்மிடம் சொல்கிறான் “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” அப்படிச் செய்தோமானால், நம் தந்தையர் அருள் வலியாலும், சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும்பழி தீரும்!” என்று நமக்கு வழிகாட்டியது பாரதியின் தேசியப் பார்வை.
            பெரும்பாலும் பாரதியார் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் தமிழைப் பயன்படுத்தவில்லை. மாறாகத் தத்தமது பெரும் புலமையை வெளிக்காட்டும் வண்ணம் கடுந்தமிழில் கவிதை புனையவும், புரியாத முறையில் தமிழை எழுதவும் பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். அந்த நிலைமையை முதன் முதலில் மாற்றி அமைத்த பெருமை மகாகவி பாரதியாரையே சேரும்.
            உடனே நமக்குத் தமிழை மேம்படுத்த என்னென்ன வழிகள் என்பதை பட்டியலிடுகிறான். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டார், அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்று நம் எதிர்கால திட்டத்தை அழகாக வடிவமைத்துக் கொடுக்கிறான் பாரதி.
            இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வெகுகாலம் முன்பே ஆங்கிலம் ஆக்கிரமித்திருந்த தமிழ் மொழியில் புத்தம் புதிய தமிழ் சொற்களை அறிமுகம் செய்திட வேண்டுமென்று சேலத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) எடுத்த முயற்சிகளைப் பற்றி பாரதி தன்னுடைய காலத்திலேயே அதைப் போற்றி பாராட்டிப் பேசுகிறார்.
            அறிவியலின் வளர்ச்சி பெருகத் தொடங்கிய காலத்தில் நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். ஆகையால் அந்த அறிவியல் சொற்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததன் பயனாக நம் தாய்மொழியாம் தமிழில் அவை உருவாகாத நிலை இருந்து வந்தது. அது குறித்து பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றிய ஆய்வுகள் நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர்களே முன்னிலை வகித்தார்கள். அவற்றைத் தமிழில் ஆர்வம் கொண்டோர் மொழிபெயர்த்தார்கள். இந்த முயற்சி மேன்மேலும் வளரும், வளர்ந்தே தீரவேண்டுமென்ற எண்ணம் அப்போது எழுந்தது. அப்படி புதிய சொற்கள், அறிவியல் குறிப்புகள் தமிழில் வெளிவரவேண்டுமென்றால் அதற்குரிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து தேசியவாதிகள் மத்தியில் உருப்பெற்றிருந்தது. இந்த கருத்தினைச் செயல்வடிவம் கொண்டு வர சேலத்தில் வக்கீல் ஸ்ரீசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும், ஸ்ரீ வெங்கடசுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கினார்கள்” என்கிறார் பாரதி.
இதன்படி அறிவியல் சம்பந்தமான சொற்கள் தமிழில் புதிதாக உருப்பெறத் தொடங்கின, பிறகு இதுவே இந்திய சுதந்திரம் பெறும் சமயத்தில் நாட்டை ஆளத் தொடங்கிய சுதேசி தேசியவாதிகள் “கலைச்சொற்கள்” உருவாக்கத்துக்காக ஒரு குழுவினை அமைத்து, புதிது புதிதான கலைச் சொற்களை உருவாக்கினார்கள்.
            இந்தியாவில் மொத்தமுள்ள மொழிகள் மூவாயிரத்துச் சொச்சம். அதில் 216 மொழிகளை பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகிறார்கள். 22 மொழிகள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆட்சி மொழிகள். மீதமுள்ளவை பேச்சு மொழிகள் மட்டுமே. அதிகபட்சமாக இந்தியாவில் இந்தி மொழி பேசுவோர் 41%.பேர். இரண்டாம் இடம் வங்க மொழிக்கு, மூன்றாமிடம் தெலுங்கு, நான்காம் இடம் மராத்தி, ஐந்தாமிடம் நம் தமிழ் மொழிக்கு.
            சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட்டத்தின் தலைவரை “அக்கிராசனர்” என்றும் தேர்தலில் போட்டியிடுபவரை “அபேட்சகர்” என்றும் இப்படி பலவாறாக இருந்த சொற்களை நல்ல தமிழில் இயற்ற இதுபோன்ற கலைச்சொற்கள் குழு முனைந்தது. அலுவலக அன்றாட நடைமுறையில் ஆங்கிலத்தின் இடத்தைத் தமிழ் பிடிக்க வேண்டுமென்பதற்காக புதிய சொற்கள் வெளியிடத் தொடங்கினார்கள். மெல்ல மெல்ல தமிழ் இருள் சூழ்ந்த இருட்டறையிலிருந்து, சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.
            ஒரு காலத்தில் இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளின் எண்ணிக்கையை பாரதி “செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்று பதினெட்டு மொழிகளைக் குறிப்பிடுகிறார். இன்றைய நிலையில் இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள சுதேசி மொழிகளின் எண்ணிக்கை ஏராளம். காலப்போக்கில் இந்த பிரதேச மொழிகள் அனைத்தும் வளம்பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்றால், ஆங்கிலம் ஆக்கிரமித்துள்ள இடம் இந்த பிரதேச மொழிகளால் நிரப்பப்பட வேண்டுமென்கிற கருத்து தேசியத் தலைமைக்கு ஏற்பட்டது. ஆகையால் ஆங்கிலம் வகித்து வந்த இணைப்பு மொழிக்கு பதிலாக இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் இந்தி மொழியை இணைப்பு மொழியாக்கி அந்தந்த பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினார்கள். இந்தப் பணியைச் செயல்படுத்த மும்மொழித் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்த மும்மொழித் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டதன் பயனாக அந்தந்த பிரதேச மொழிகள் வளம்பெற்று விளங்கத் தொடங்கின. ஆங்கிலம் வகித்த தொடர்பு நிலை இந்தி மொழிக்குக் கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆங்கிலம் இங்கு தொடர்ந்து இருக்க வேண்டும், இந்தி மொழி திணிப்புக் கூடாது என்ற நிலை எடுத்ததன் பயன், ஆங்கிலம் நம் தமிழை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஆங்கிலத்தில் முழுமையாகப் பேசி வந்தவர்கள் கூட தமிழில் பேசமுடியாமல் ஆங்கிலம் கலந்த ஒரு புதிய மொழியைப் பேசத் தொடங்கியதன் விளைவு இன்று தமிழ் மொழி மெல்ல இனிச் சாகும் எனும் நிலைமைக்குக் கொண்டு போய் விட்டு விட்டது.
            பாரதியின் காலத்துக்குப் பிறகு தமிழில் எளிய கவிதைகளை எழுத கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை போன்றவர்கள் தோன்றினார்கள். மிக எளிய நடையில் இருந்த இவர்களது பாடல்கள் பொதுமக்கள் நாவில் தவழ்ந்து விளையாடத் தொடங்கின. ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழ் இருந்திருந்தால் வளர்ந்திருக்க வேண்டிய தமிழ், சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனும் ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் பள்ளிக்கூடங்கள் செழித்து வளரத் தொடங்கின. விளைவு தமிழ் பேசும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகப் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிகளில் படிப்பது ஒரு Status symbol என்ற எண்ணம் உதயமாகியது. தங்கள் குழந்தைகள் தாய் தந்தையரைக் கூட தமிழில் அம்மா அப்பா என்று கூப்பிடக் கூடாது என்று “மம்மி டாடி” எனக் கூப்பிட வைத்தனர். படித்தவர்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் தமிழில் பேசினால் கெளரவம் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கொண்டிருந்தனர். தேசிய உணர்வு உள்ளவர்கள் சுதேசிகள் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போதே அந்த சுதந்திர உணர்வை தூண்டிவிடுவதற்காக தெசியப் பள்ளிகளை அதிகம் தொடங்கினார்கள். அங்கெல்லாம் தமிழைக் கற்கத் தொடங்கியவர்கள் பிற்காலத்தில் தலைசிறந்த நிர்வாகிகளாகவும் தலைமைப் பொறுப்புக்கும் தகுதியுள்ளவர்கள் ஆனார்கள்.
            ஆங்கில வழியில் கற்றால்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் நம்மில் இருக்கிறது. இது குறித்து மகாத்மா காந்தி சொன்ன கருத்து கவனிக்கத் தக்கது: “ஆங்கிலக் கல்வி காரணமாக நாம் நமது ஆண்மையை இழந்துவிட்டோம்; நமது அறிவு குன்றிப்போய் விட்டது. இக்கல்வி முறை காரணமாக நாம் பேடிகளாக்கப்பட்டு விட்டோம். சுதந்திரம் எனும் தென்றலில் நாம் உலவ விரும்புகிறோம். ஆனால் ஆங்கிலக் கல்வி நம்மை அடிமைத்தனத்தில் தள்ளி விட்டது. நமது சமுதாயம் உண்மையை இழந்து விட்டது. இதற்கு முன்பு அந்நியர்கள் நம் மீது படையெடுத்து வந்த காலத்திலும் நாம் அடிமைகளாக இருந்ததில்லை. முகலாயர் ஆட்சியின் கீழ் கூட நமக்குச் சுதந்திரம் இருந்தது. அக்பர் காலத்தில் பிரதாபசிம்மன் தோன்றவில்லையா? ஒளரங்கசீப் காலத்தில் ஒரு சிவாஜி மகராஜ் தோன்றவில்லையா? ஆனால் ஆங்கிலேயர்களின் இந்த ஆட்சிக் காலத்தில் ஒரு சிவாஜியையோ ஒரு பிரதாபசிம்மனையோ நம்மிடையே காணமுடியவில்லையே ஏன், என்ன காரணம்? இந்த அடிமைக் கல்வி முறைதான்”.
            சுப்ரமணிய சிவா ஒரு தீவிர தேசபக்தர். அவர் சொன்னார், “ஒரு சமூகத்துக்கு உயிர் அதன் மொழிதான். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் அழிந்து போகும். எனவே நாவே தமிழே பேசுக! உங்கள் கையில் ஏந்தும் இறகு தமிழே எழுதுக! உங்கள் இதயம் தமிழையே நாடுக”.
            தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தேசிய வாதிகள் வலியுறுத்தி வந்தார்கள். அவர்கள் கூற்றுப்படி அன்றைய தினம் “தமிழர்கள் “கான்பரென்ஸ்” என்றும் “மீட்டிங்” என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்கள். படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழில் சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே! ஏன்? எதனால்? காரணம் தான் என்ன?” இப்படி நம் கல்வி முறையை மாற்றி அமைக்க அன்றைய தேசபக்தர்கள் எழுதினார்கள், பேசினார்கள்.
            தேசபக்தர்களுள் முதன்மையானவராக மகாத்மா காந்தியைச் சொல்கிறோம். அவர் தாய் மொழி குஜராத்தி. தமிழ் அவருக்கு அந்நியமான மொழியாக இருந்த போதும் இந்த மொழியின் பால் அவருக்கிருந்த பற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அவர் கருத்து. தமிழ் இலக்கிய வளமிக்க மொழி என்பதால், பிற மொழியாளரும் தமிழின்பால் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறார் காந்தி.
            ஒரு முறை தமிழகத்தில் காந்திக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அதுபற்றி அவர் கூறிய கருத்து கவனிக்கத் தக்கது. அவர் சொன்னார் “உங்கள் வரவேற்பில் திருக்குறள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இருபதாண்டுகளுக்கு முன்பே நான் தமிழ் படிக்கத் தொடங்கினேன். ஆனால் தமிழை முழுமையாகக் கற்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. அதனால் நான் அடைந்த வருத்தத்துக்கு அளவில்லை” என்கிறார்.
            திரு வி.க. ஒரு தேசிய வாதி, காந்தியப் பற்றாளர். அவர் சொல்கிறார்: “ஆங்கிலம் பயின்ற தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்த் தாயை மாசு படர்ந்த துச்சலில் இறுத்தி, அவளுக்கு உணவும் உடையும் அளியாது வருத்தி, அயல் மாதை வீட்டில் அமர்த்தி, அம்மாதுக்கு நல் உணவும், உடையும் தந்து மலர் சூட்டி அவளை வழிபடுதல் நம் மக்களின் அறிவைப் புலப்படுத்துகிறதா? அல்லது அறியாமையைப் புலப்படுத்துகிறதா?” என்கிறார்.
            தமிழைப் பண்டிதர் கரங்களில் இருந்து வாங்கி எளிய பாமரன் கையில் கொடுத்து அதை அவர்கள் சொத்து என்று விளக்கிய சான்றோர் வரிசையில் மகாகவி பாரதி தொடங்கி எத்தனையெத்தனைச் சான்றோர்கள், அவர்கள் அத்தனை பேரின் நல்லெண்ணம், வாழ்த்து, முயற்சி இவைகளால் தான் இன்று தமிழ் உச்சத்தில் இருக்கிறது. இன்னமும் ஆங்கிலத்தின் தாக்கத்தை மட்டுப் படுத்தித் தமிழை புனிதமாகப் போற்றும் காலம் தான் தமிழின் பொற்காலம் எனலாம்.
            காலமெல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கெனப் பாடுபட்டு, தமிழனத்தின் வாழ்வுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நம் முன்னோர்களின் அறிவுரைகளைப் புறக்கணிப்போர் தம்மைத் “தமிழர்” என்று கூறிக் கொள்ளும் தகுதியுடையோர் அல்லர். தற்போது தமிழ் மக்களிடையே தாய் மொழிப் பற்று வளர்ந்து வருகிறதென்றாலும், தமிழகத்தில் ஆங்கிலம் முதலிடம் பெற்று வரும் கொடுமையையும், அதனால் விளைகின்ற கேடுகளையும் தேசப்பற்று மிக்கவர்கள் சரியாக உணர்ந்து செயல்பட வேண்டும். வேதனை தரும் இன்றைய நிலை விரைவில் மாறினாலொழிய தமிழினத்துக்கு விமோசனமில்லை.
          வாழ்க தமிழ் மொழி,   வாழிய பாரதம்,   வந்தேமாதரம்!  

Thursday, January 9, 2020

சுவாமி இருக்கிறார்! - சிறுகதை


                                                                       
அன்று ஞாயிற்றுக் கிழமை வீட்டில் அப்பா, அண்ணன் ஆகியோரும் ஓய்வாக இருந்தனர். அம்மா வழக்கம் போல அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
அண்ணன் அம்மாவை அழைத்து “ஏம்மா! இன்னைக்கு ஒரு நாளாவது வந்து ஒண்ணா உட்கார்ந்து பேசினால் என்ன, எப்போதும் அடுப்பங்கரையை நோண்டிக் கொண்டு அப்படி என்ன வேலை?” என்றான்.
“உங்களுக்கெல்லாம் பசிக்காதா, சாப்பாடு யார் வந்து தயார் செய்வாங்க, கொஞ்சம் இரு, இதோ முடிஞ்சு போச்சு, வரேன்” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையில் ஈடு பட்டாள்.
அப்பா சொன்னார் “கணேசா! நம்ம குலதெய்வ வழிபாடு இரண்டு வருஷமா செய்யலையே, இந்த வருஷமாவது திருப்பதி போய் பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு வரலாமா, உனக்கு எப்போ லீவு கிடைக்கும்?” என்றார்.
கணேசன் என் அண்ணன். அவன் ஒரு வங்கியில் மேலாளராக இருப்பதால் அவனால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது, அதோடு அவன் வேறு ஊர்களுக்கும் அடிக்கடி மாற்றலாகிச் செல்வதால், குலதெய்வ வழிபாடு சிறிது காலம் தடைபட்டிருந்தது.
அண்ணன் சொன்னான், “சரி அப்பா! அடுத்த வாரம் மூன்று நாட்கள் லீவு எடுத்து விடுகிறேன், தம்பிக்கும் இப்போ விடுமுறைதானே, காலேஜும் கிடையாது, நாம் நாலுபேரும் திருப்பதிக்குப் போய் வேண்டுதலைச் செய்துவிட்டு வந்து விடலாம், நீ என்னடா சொல்றே?” என்றான் என்னிடம்.
“தாராளமா போகலாம், அதைவிட வேறென்ன வேலை எனக்கு, அம்மாவுக்கும் ஒரு மூணு நாள் விடுமுறையும் ஆச்சு, அடுப்பளையை விட்டுக் கொஞ்சம் வெளியே வருவாள்” என்றேன்.
அடுத்த வாரம் அண்ணன் சொன்னபடி மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தான். சனி, ஞாயிறும் விடுமுறையாகிப் போனதால் திங்கள் முதல் புதன் விடுப்பும் சேர்த்து மொத்தம் ஐந்து நாட்கள் கிடைத்ததால் இரண்டு நாட்கள் திருப்பதியில் தங்கியிருந்து மேலே பெருமாள் சந்நிதியில் அங்கப் பிரதட்சணம் செய்து இரண்டு நாளும் தரிசனம் செய்துவிட்டு, கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், மங்கத்தாயாரு சந்நிதிகளுக்கும் சென்று வரவேண்டுமென்று திட்டமிட்டோம்.
அதன்படி சனிக்கிழமை மாலை திருப்பதி ரயிலில் சென்று கீழ் திருப்பதியை அடைந்தோம். அங்கிருந்து மேல் திருப்பதிக்குச் சென்று அங்கு ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த காட்டேஜுக்குச் சென்று அன்று தங்கிவிட்டோம்.
மறுநாள் ஞாயிறு விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து போய் புஷ்கரணியில் ஸ்நானம் செய்துவிட்டு அங்கிருந்து உள்ளே அங்கப்பிரதட்சணம் செய்யப் போகும் பாதை வழியாக பெருமாள் சந்நிதியைச் சுற்றியிருந்த பிரகாரத்தை அடைந்தோம்.
நானும், அண்ணனும் மட்டும் தான் அங்கப் பிரதட்சணம் செய்யப்போவதாக இருந்ததால் நாங்கள் மட்டும் ஈரத் துணியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டு போய் நின்றோம்.
அப்போது எங்களுக்கு முன்பாகவே பலரும் அங்கு வந்து அங்கப் பிரதட்சணத்துக்குத் தயாராகப் வரிசையில் படுத்திருந்தார்கள். வரிசை நிரம்பவில்லை, ஆங்காங்கே நிறைய இடைவெளி இருந்தது. நாங்கள் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு போய் கலந்து கொள்ள எண்ணி அருகில் சென்ற போது அங்கிருந்த சில இளைஞர்கள், “இங்கெல்லாம் “ஆள் வராங்க” இங்கே சேர்ந்துக்க முடியாது, வேற இடம் பாருங்க” என்று எங்களை அந்த வரிசையில் சேர முடியாமல் விரட்டினார்கள்.
நாங்கள் தொடர்ந்து வேறு காலியாக இருந்த இடங்களிலும் சென்று வரிசையில் சேர முயன்ற போது அங்கும் இதுபோல சில இளைஞர்கள் எங்களைத் தடுத்து அனுப்பி விட்டனர்.
ஏன் இப்படி, இத்தனை இடங்கள் இடைவெளி இருக்கும் போது ஏன் எங்களை இவர்கள் தடுக்க வேண்டும்?
அங்கு நின்றுகொண்டிருந்த சிலரது பேச்சிலிருந்து அவர்கள் இரண்டு மூன்று பேருந்துகளில் சென்னையிலிருந்து வந்திருக்கும் பக்தர்கள் என்றும், இன்னும் சிலர் குளித்துவிட்டு வரவேண்டியிருந்ததால், அவர்களுக்காக இடம் ரிசர்வ் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
“இது என்ன உங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இடமா என்ன? நாங்களும் இதற்காகத்தானே வந்திருக்கிறோம், இங்கு இத்தனை இடம் இருக்கும் போது, எங்களை தடுப்பது என்ன நியாயம்?” என்று அவர்களைக் கேட்டான் அண்ணன்.
“நாங்கள் ஒரே க்ரூப்பாக வந்திருக்கிறோம். அதனால் தான் நாங்கள் பலர் வந்து மற்றவர்களுக்கு இடம் போட்டிருக்கிறோம். நீங்கள் வேறு இடத்தில் போய் சேர்ந்து கொள்ளுங்க” என்றார் ஒருவர்.
நாங்களும் தொடர்ந்து பிரகாரத்தில் படுத்திருக்கும் கூட்டத்தில் நெடுக சென்று பார்த்தும் எங்கும் எங்களை உள்ளே விடவில்லை. அவரவர் வரிசையில் படுத்து நேரம் வந்ததும் அவர்கள் உருண்டு செல்லத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட இடை வெளியில் நாங்கள் இருவரும் உட்புகுந்து சேர்ந்து கொள்ள முயன்ற போது, ஒருவன் பலமாக எங்கள் மார்பைப் பிடித்துப் பின்னால் தள்ளிவிட்டான்.
அண்ணன் கீழே விழுந்து நல்ல அடி, எனக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. தள்ளிவிட்டவனை ஏசத் தொடங்கினேன்.
அதற்குள் கோயில் பணியாளர்கள் சிலர் ஓடிவந்து “இங்கே சத்தம் கித்தம் பொட்டு கலாட்டா செய்தால் பிடித்துக் கொண்டு போய் வெளியே தள்ளிவிடுவோம்” என்று தெலுங்கில் எச்சரித்தார்கள்.
எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டு என்ன செய்வதென்று திணறிக் கொண்டிருந்தேன். என் அண்ணனுக்கு கீழே விழுந்ததால் ஏற்பட்ட அடியினால் வலியில் உட்கார்ந்து காலைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அப்பா சொன்னார், “போதும்பா! இவுங்க அத்தனை பேரும் இங்கே புண்ணியம் சம்பாதிக்க வந்த பக்தர்கள். பெருமாள் இவுங்களை மட்டும் தான் பிரார்த்தனை செய்ய அனுமதிச்சிருக்கார் போல இருக்கு. வாங்க! நாம போகலாம் அப்புறமா வந்து வரிசையிலே நின்னு தரிசனமாவது பண்ணிட்டு போகலாம். நமக்கு இந்த அங்கப் பிரதட்சணம் வேண்டாம்” என்று எங்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டு காலை ஏழு மணிக்கு மேல் தர்ம சரிசனம் வரிசையில் போய் நின்று கொண்டோம். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் விடுமுறை கூட்டம். மெல்ல மெல்ல நகர்ந்து ஒவ்வொரு மண்டபமாக உட்கார்ந்து, நின்று, நடந்து, மெல்ல நாங்கள் சந்நிதிக்குச் செல்லும் போது அன்றைய பொழுது கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது.
இப்போது போல அப்போதெல்லாம், மணியைக் குறித்துக் கொடுத்து தரிசனம் அனுமதிக்கும் வழக்கம் அமலில் இல்லை. ஆகையால் பசி, ஓய்ச்சல், மனவருத்தம் இவைகளோடு பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து தங்குமிடம் சென்று ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டு கீழ் திருப்பதிக்குத் திரும்பினோம்.
அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்கி அங்கிருந்து கோவிந்தராஜ பெருமாளையும், அலமேலுமங்கா தாயாரையும் தரிசனம் செய்து அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு, மறுநாள் சென்னை திரும்பினோம்.
அப்பா சொன்னார் “இந்த வருஷம் பெருமாள் நம்மை பிரார்த்தனையை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை, அடுத்த மாதமாவது சென்று அதை முடித்துக் கொள்ளலாம், என்ன சொல்றீங்க?” என்று எங்களிடம் கேட்டார்.
அண்ணன் சொன்னான், “அப்பா! நாமெல்லாம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பக்தி சிரத்தையோடு, பெருமாளுக்கு அங்கப் பிரதட்சணம் செய்யணும்னு போய் நம்ம கடமையை செய்துட்டோம். அவருக்கு மனசு இல்லையோ, அல்லது சுவாமியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட அராஜகக் கும்பலுக்கு நம்மை அனுமதிக்க முடியலையோ, எதுவாயிருந்தாலும், இனி அங்கே போய் நாம் அவஸ்தை படவேணாம்னு நினைக்ககிறேன்” என்றான்.
அம்மா மட்டும், “அப்படில்லாம் சொல்லாதேடா கணேசா! சுவாமி காரியம் அப்படில்லாம் பேசப்படாது. எப்போ முடியறதோ, அப்போ போயிட்டுப் போறோம். விடு. நடந்ததை நெனச்சு வருத்தப்படாதே!” என்றாள்.
அப்பா சொன்னார், “நீ சும்மா இரு! கணேசன் சொல்றதுதான் சரி. எப்போ நாம பக்தி சிரத்தையோடு போயி பிரார்த்தனை செய்ய நெனச்ச போது சுயநலக்கார மனுஷாளை வச்சு சுவாமி தடுத்தாரோ, இனி நாம போய் அங்கே தரிசனம் செய்யணுங்கறது இல்லை. சுவாமி இல்லாத இடம் எது? எல்லா இடத்திலும் தான் இருக்கார். ஏன், நம்ம வீட்டிலேயே சுவாமி வச்சு பூஜையெல்லாம் செய்யலையா என்ன? இங்கேயே வேண்டிண்டா போச்சு” என்றார்.
“அப்படியில்லைண்ணா, கோயில்னு இருக்கும் போது அங்க போய் தரிசனம் செஞ்சாதானே சரி” என்று தர்மம் பேசினாள் அம்மா.
அண்ணன் சொன்னான், “அப்பா! நீங்க சொல்றதும் சரி, அம்மாவும் சரி. இனிமே ஒண்ணு செய்யலாம். கூட்டத்துல போயி, தள்ளிவிட்டு அடிபட்டு தரிசனம் பண்றதை விட, எல்லா ஊர்லயும் பெருமாள் இருக்கார், கோயில்கள் இருக்கு அங்கெல்லாம் இதைப் போல கூட்டமா இருக்கு. அதப்போல எங்கேயாவது ஒரு கோயிலுக்குப் போயி இதே வேண்டுதலை செய்துட்டு வந்தாப் போச்சு” என்றான்.
அம்மா சொன்னாள், “திருப்பதிக்கு வேண்டிண்டு வேற இடத்துல போய் செய்ய முடியுமா?” என்றாள்.
“முடியும், அந்தக் காலத்துல திருப்பதி மலைக்கு யாத்திரை போவது ரொம்ப சிரமம் என்பதால, சீர்காழி கிட்டே திருநாங்கூர் தலத்தில் அண்ணன் கோயில் என்ற திருவெள்ளக் குளம் இருக்கு அங்கே சீனிவாசப் பெருமாள் இருக்கார், அவர் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று சொல்லி அவரை அண்ணன் பெருமாள்ங்கறாங்க. அவரைப் போயி பார்க்கலாம். இல்லைன்னா, ஒப்பிலியப்பன் கோயில் இருக்கு, திருச்சிக்குப் பக்கத்துல குணசீலம் இருக்கு தான்தோன்றிமலை இருக்கு. இங்கெல்லாம் திருப்பதிக்கு வேண்டிண்டு போகமுடியலைன்னா, இந்த தலங்கள்ளே வந்து பிரார்த்தனை செய்துக்கலாம். அதனால நாம இதுல ஏதாவது ஒரு ஊருக்குப் போயி தரிசனம் பண்ணிண்டு வருவோம்” என்றார்.
“அது சரி அப்பா! ஆனால் சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்த மாதிரி அராஜகம் செஞ்ச அந்தக் கூட்டத்துக்கு சுவாமி தண்டனை எதுவும் கொடுக்க மாட்டாரா?” என்றேன்.
“நிச்சயம் நடக்கும்பா, நடக்காம போகாது. பக்திங்கறது, மத்தவங்களை தடுத்து நிறுத்தி தங்களுக்கு மட்டும்தான்னு நெனைக்கறது பைத்தியக்காரத் தனம். அறியாமையா, அல்லது திமிரா எதுவோ, அதுக்கான தண்டனை அவுங்களுக்குக் கிடைக்காம போகாது” என்றார்.
“அது எப்படிப்பா, அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க, அதுக்கு ஏதாவது பழைய நிகழ்ச்சி உதாரணமா இருக்கா?” என்றான் அண்ணன்.
“இருக்குப்பா. நான் உன்னை மாதிரி இருந்தப்போ, அலகாபாத்துல சங்கம் துறையில் நீராடப் போயிருந்தோம். அங்கே யமுனை கங்கையோட சங்கமம் ஆகிறது தெரியும் இல்லையா. யமுனை நதி நீர் மெல்ல ஓடிவரும், கங்கை பாய்ந்து வரும். இரண்டும் சேர்கிற இடத்துக்கு ஒரு படகில் போகணும். நாங்க போனபோது ஒரு படகில் நம்ம சென்னையிலிருந்து போயிருந்த ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. நாங்கள் நாலைந்து பேர் போய் அதில் ஏறும்போது, நாங்க ஒரு க்ரூப்பா போறோம், நீங்க அடுத்த படகுல வாங்கன்னு அவுங்க படகை எடுக்கச் சொல்லிட்டாங்க. அந்த படகு போய் கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க ஒரு பத்து பதினைந்து பேர் அடுத்த படகில் சென்று இறங்கினோம். அங்கே இரண்டு பெரிய படகுகளை இணைத்து ஒரு பாலம் போல மேடை கட்டி அதில் இறங்கி குளிக்கச் சொன்னார்கள். நாங்க இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது, எங்களை படகில் ஏற விடாமல் தடுத்த கூட்டம் குளித்து முடித்து அவர்கள் படகில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். படகு குளிக்கும் மேடையருகில் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. கட்டு அவிழ்ந்து கங்கையின் வேகத்தில் அந்தப் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. படகுக்காரன் அதில் இல்லை. படகில் இருந்தவர்கள் குய்யோ முறையோனு கூச்சலிட, படகுக்காரன் என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் இருந்த குளியல் மேடைக்கருகில் தவித்தான். அவர்கள் படகு வேகமாகச் சென்று கங்கையின் ராட்சச வேகத்துச் சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டே போகத் தொடங்கியது. அதிலிருந்த அத்தனை பேரும் மரணக் கூச்சலிட, எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும்.”
“அப்புறம் என்ன நடந்தது?” அண்ணன் கேட்டான்.
“நல்ல காலம் அப்போது கங்கையில் அங்கங்கே சிறு படகுகளை ஓட்டிக் கொண்டிருந்த சில மீனவர்கள் வேகமாகத் தங்கள் படகைச் செலுத்திக் கொண்டு போய் அந்த பெரிய படகில் ஏறி, அதைக் கட்டுப்படுத்தி, மெல்ல பெரும்பாடு பட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். “
“அப்புறம்?”
“அவர்கள் கரைசேரும் முன்பே நாங்கள் கரையேறி, உடைமாற்றி, தமிழ் மடத்துக்குச் சாப்பிடப் புறப்பட்டு விட்டோம். செத்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் அன்று கரையேறியிருப்பார்கள்”
“பெருமாள் இருக்கார், யார் தப்பு செய்தாலும் தண்டனை கொடுப்பார், அது அவர் சந்நிதியில் நடந்தாலும் செரி, வெளில நடந்தாலும் சரி. அதனால நாம யாரைப் பற்றியும் கவலைப் படாமல், அடுத்த வாரம் சீர்காழி அண்ணங்கோயிலுக்கு அல்லது நான் சொன்ன மற்ற கோயில்களுக்கோ போய் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துடுவோம், என்ன?” என்றாள் அம்மா.
“சரி! அப்படியே செய்துடுவோம்” என்று கோரசாக முழங்கினர்.
                                                --------oooOooo-------
தஞ்சை வெ.கோபாலன்,   இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007. #9486741885

மகாகவி பாரதியாரின் தேசியப் பாடல்கள்


                                         சி. சுப்ரமணிய பாரதியார்                                                                                                      1. தேசிய கீதங்கள்                                                                                                                    1. வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? – பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும் – நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் – பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர – இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
                                                                                                                                                                                                                                    2. நாட்டு வணக்கம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்வாயுற வாழ்த்தேனோ? -                                                            இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே -                                                    இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே -                                                                    இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?
                                                            3. பாரத நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு.
ஞானத்தி லேபர மோனத்திலே உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு - இந்தப்             (பாருக்)

தீரத்தி லேபடை வீரத்திலே நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு - இந்தப்                (பாருக்)

நன்மையி லேஉடல் வன்மையிலே செல்வப் பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

வண்மையி லேஉளத் திண்மையிலே மனத் தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர் உணர்வினி லேஉயர் நாடு - இந்தப்        (பாருக்)

யாகத்தி லேதவ வேகத்திலே தனி யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம் அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே கனி ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின் சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
                                                            4. பாரத தேசம்
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)
                                              5.எங்கள் நாடு
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.
                                                         6.பாரத மாதா.
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
மந்திரத் தெய்வம் பாரத ராணி,
வயிரவி தன்னுடைய வில்.

ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே - மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை.

சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்.

சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளையாடி - நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்? - பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவிமலர் திரு வாய்.

தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்
தையலர் தம்முறவும் - இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம் அனை செய்த உள்ளம்.

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி.

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி - தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி.

தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை? - அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை.

                                                          7.எங்கள் தாய்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள்எங்கள் தாய்.

முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்.

அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.

பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்.

யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்தி டுவாள்.

வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள்எங்கள் தாய்.
                                                8.பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
                                           9.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)
                                       10.போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா


வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா
                                                           11.பாரத சமுதாயம்

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ ?

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)

இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத)

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)
                                                      12.  செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
                                                              13.தமிழ்த்தாய்
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரி மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.