பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 27, 2013

Gopalakrishna Bharathiyar


தில்லை வெளியிலே...


ராகம் : யமுனா கல்யாணி
தாளம் : ஆதி


தில்லைவெளியிலே கலந்து கொண்டாலவர் திரும்பியும் வருவாரோ 
எல்லைக்கண்ட பேரினிப்பிறவாரென்று இயம்புவதறியாரோ 

பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம் 
கண்டுகொள்ளுவார் பெரியோரறிவில் கனகசபையினாட்டம் 

திருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ 
அரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ 

குஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே 
சஞ்சிதரவினையாதிகளுடாடிய சடமுந் தாங்காதே 

சேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே 
சிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே 

இரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா 
இன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா

Gopalakrishna Bharathiyar


சற்றே விலகியிரும்...


ராகம் : பூரிகல்யாணி
தாளம் : ரூபகம்


பல்லவி
சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ 

அநுபல்லவி
நற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார் 

சரணம்
சாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான் 
கோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே] 

வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான் 
பூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே] 

பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன் 
சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]

Gopalakrishna Bharathiyar Songs. Nandan Charitham


ஐயே மெத்தகடினம்...


ராகம் : புன்னாகவராளி
தாளம் : ஆதி


பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் 

அநுபல்லவி
பொய்யாத பொன்ம்பலத் தையாஇருக்குமிடம் 
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] 

வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் 
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) 
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த 

மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் 
சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு 
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே 

சரணம்
கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் 
மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று 
சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு 

சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு 
அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே 
நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த 

அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது 
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது 
பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத 

மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ 
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ 
தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த 

முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு 
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் 
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் 

கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை 
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் 
அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ 
நேரமாகுதல்லவோ [ஐயே]

தாமரை பூத்த தடாகமடி..

தாமரை பூத்த தடாகமடி...

ராகம்: சிந்து பைரவி                               தாளம்: ஆதி

பல்லவி

தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ் மணத் தேன் பொங்கி பாயுதடி, ஞான

சரணம்

பாமழையால் வற்றா பொய்கையடி - தமிழ்
பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞான

காவியச் சோலையதன் கவி அழகே
அதன் கவிஞர்கள் கற்பனைக்கு ஓர் பெரும் சுவையே
ஆவி மகிழும் தமிழ் தென்றலதே
இது அமுதினைக் கொட்டுது பார் இதன் அருகே - ஞான

Tuesday, March 26, 2013

கவி காளமேகம்


கவி காளமேகம்
கவி காளமேகம் பற்றி முன்பே இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். இப்போது சில பாடல்களைப் படியுங்கள். மேலும் சுவையான பாடல்கள் தொடர்ந்து வெளியாகும்.
1.    காஞ்சி வரதராஜப் பெருமாள் நகர்வலம் வரும்போது காளமேகம் அந்த ஊர்வலத்தைப் பார்க்கிறான். அப்போது ஒரு வைணவர் கவியிடம் எப்படி வரதன் ஊர்வலம் என்கிறார். அதற்கு கவி இப்படிச் சொல்லுகிறான்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!       
                        1.
இதன் பொருள்:  காஞ்சி வரதராஜப் பெருமாள் நல்லவர்தான்; அவருடைய திருவிழாவும் நல்ல திருவிழாதான்; ஆனால் இந்தப் பெருமாள் இருந்தவிடத்தில் சும்மா இல்லாமல் வெளிக்கிளம்பியதால் கருடன் பறந்து வந்து அவரை  எடுத்துச் செல்கிறான் பார் என்கிறான்.
*****************
2.   காளமேகம் நாகைப்பட்டினம் போகிறான். அங்கு இருந்த காத்தான் என்பவன் நிர்வகிக்கும் வருணகுலாதித்தன் சத்திரத்தில் இரவு தங்குகிறான். அப்போதெல்லாம் சத்திரத்தில் தங்குவோர்க்கு சாப்பாடு உண்டு. அதன்படி காத்தானிடம் தனக்கு சாப்பாடு அளிக்கும்படி கேட்கிறான். வழக்கம்போல் சத்திரச் சாப்பாடு ஓட்டல் சாப்பாடு போல உடனடியாக வருமா? காலதாமதம் ஆகிறது. அதிலும் எத்தனை தாமதம்? படித்துப் பாருங்கள் காளமேகத்தின் கேலியை.
கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
                        2.
இதன் பொருள்: கடற்கரையிலுள்ள நாகைப்பட்டினத்தில் காத்தானுடைய சத்திரத்தில் மாலைப்பொழுது முடிந்து இரவு தொடங்கும்போதுதான் அரிசி வாங்கிவருவான்; அந்த அரிசியைக் களைந்து உலையிலிட ஊரடங்கி எங்கும் அமைதியாக இருக்கும்; விருந்தாளிக்கு இலையில் ஓர் அகப்பை சாதத்தை இடும்போது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக வெள்ளி எழுந்துவிடும், அதாவது பொழுது விடிந்துவிடும்.
இதனைக் கேட்ட அந்த காத்தான், இவரை யார் என்பதை உணர்ந்து தனது தவறுக்காக வருந்துகிறான். அப்போது கவி தன் பாட்டின் பொருளை மாற்றி உரைக்கிறான். எப்படி? அந்தி சாய என்றால் நாட்டில் வளம் குறைந்து வறுமை எய்திய காலத்தில், அரிசி வரும் என்றால் இங்கு வருவோர்க்கு உணவு கிடைக்கும். இவன் அளிக்கும் உணவை உண்டு ஊர் மக்கள் பசி அடங்குவர். இவன் சமைத்த உணவு இலையில் விழும்போது வெள்ளிகூட தோற்கும்படியாக சாதம் வெள்ளை வெளேர் என்று  இருக்குமாம்.
******************************
3.    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. அப்போது கேலி செய்வதுபோல காளமேகம் பாடிய பாடல் இது:
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?--மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றதே ஏன்?     
                        3.
இதன் பொருள்:  நல்ல பலம் பொருந்திய மதங்கொண்ட யானையை ஐயோ! ஒரு எலி தூக்கிக் கொண்டு போகிறதே! சிவபெருமானின் மழு எனும் ஆயுதமும், பெருமாளின் சக்கரமும், பிரம்மனின் தடியும் காணவில்லை போலிருக்கிறது. இருந்திருந்தால் இந்த எலியை அடித்து யானையைக் காப்பாற்றி இருப்பார்களே!
************************************
4.    ஆறுமுகப் பெருமானின் பெருமைகள் எவை?

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.                
                        4.
அப்பன் சிவன் பிச்சையெடுத்து உண்பவன்; ஆத்தாள் பார்வதி மலை அரசனின் மகள் என்பதால் நீல நிறமுடையவள்; மாமன் மகாவிஷ்ணுவோ இடைக்குலப் பெண்டிர் உறியிலிருந்து வெண்ணையைத் திருடி உண்டவன்; அண்ணனுக்குக் கால்கள் சப்பை, வயிறு பெறுத்தவன்; இவைகளே இந்த ஆறுமுகனுக்குப் பெருமை.
**************************************************

Monday, March 25, 2013


ஒன்றிருந்தால் ஒன்றில்லை

எது சொந்தம்! (Pattukkottayaar song)


எது சொந்தம்!

பட்டுக்கோட்டையார் பாடல்.


பொறுமை பொங்கினால்!

பாரதி பட்டுக்கோட்டையார் பாடல்.



Sunday, March 24, 2013

நீதி தவிக்குது


            4. நீதி தவிக்குது

நாடு கெட்டுப் போகுது

 

          3. நாடு கெட்டுப் போகுது

    பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
    கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
    கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )

    சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
    வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
    வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

    வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
    வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
    வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
    சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே...

வாய்ச்சொல் வீரர்


        2. வாய்ச்சொல் வீரர்

சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்


Thursday, March 21, 2013

திருமுருகாற்றுப்படை


நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த

திருமுருகாற்றுப்படை

1. திருப்பரங்குன்றம்

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10)
துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்
கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் (15)
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீ ரோதிச் (20)
செங்fகால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உ த்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் சொIஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செல்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் அகந் திளைப்பத் திண்காழ்
நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்புக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்டா தப்பிப் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர் ஆடுஞ் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே குருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் (60)
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்மல் உ ள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செறுப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று.

2. திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வான்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இழைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மன்னோர் பெழுதரு வாணிற முகனே (90)
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ (95)
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள
விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை
உ க்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய தொருகை
அங்குசங் கடவா ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை (115)
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூ ட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்தாழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால (120)
உ ரந்தலைக் கொண்ட உ ருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உ லகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்fச் சேறலும் நிலைஇய பண்பே அதா அன்று (125)

3. திருவாவினன்குடி

சீரை தைஇய உ டுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உ ருவினர் மானின்
உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)
பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்
கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்
உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)
உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
ஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)
தீயெழந் தன்ன திறலினர் தீப்பட
உ ருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.

4. திருவேரகம்

இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உ டீஇ
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று

5. குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குரும்பெறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.

6. பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிaIஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)
உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகிய நிறுத்து முரணினர் உ ட்க
முருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க் காத்தும் இசைபே ராள (270)
அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி (275)
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் (280)
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
அணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி (290)
அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்
றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்
தொருநீ யாகத் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)
வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந்
தார முழுமுதல் ஊருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)
அரசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உ திர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)
நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வொIஇக் (310)
கோழி வயப்பெடை இரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் (315)
றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே
.

..நேரிசைவெண்பா..

குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறு\ர்ந்தான் ஏறே
உ ளையாய்என் உ ள்ளத் துறை. (1)
குன்றம் எறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். (2)
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உ ண்டே துணை. (3)
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். (4)
உ ன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில்வாழ் வே. (5)
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். (6)
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். (7)
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. (8)
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு - சுருங்காமல
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். (9)
நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைந்த எல்லாம் தரும். (10)
திருச்சிற்றம்பலம்

சுப்ரமண்ய புஜங்கம்



ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய

சுப்ரமண்ய புஜங்கம்

(தமிழாக்கம் - ஸ்ரீ அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்)

1. தீராத இடர் தீர
என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உ தவும் மங்கள மூர்த்தமதே.
2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
3. திருவடி தரிசனம் கிட்டும்
மயில்மீது ஆர்த்து உ யர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உ டலான்
பயில்வோர்கள் உ ள்ளக் குகைக் Efகாயில் தங்கி
பார்ப்பவர் தெய்வ மானான்
உ யிராகும் மறையின் பொருளாகி நின்று
உ லகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.
4. பிறவிப் பிணி தீரும்
என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.
5. போகாத துன்பம் போகும்
கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.
6. கயிலை தரிசன பலன் கீட்டும்
என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.
7. கரையாத பாவம் கரையும்
கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.
8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.
9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.
10. அக இருள் நீங்கும்
பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
11. ஆபத்து விலகும்
வேடவேந்தன் திருமகள் வள்ள
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.
12. ப்ரம்ம ஞானம் கிட்டும்
வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.
13. தாபங்கள் நீங்கும்
சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உ தயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.
14. அமுத லாபம் ஏற்படும்
அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உ தடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கர் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.
15. கிருபா கடக்ஷம் கிட்டும்
விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உ னக்கெய்தும்.
16. இஷ்டசித்தி ஏற்படும்
மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உ டலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
17. சத்ருபயம் போகும்
இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உ யர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.
18. ஆனந்தம் ஏற்படும்
வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உ பய மலர்த்தாள் தொழுகின்றேன்.
19. கர்மவினை தீரும் குமரா, பரமன் மகிழ் பாலா,
குகனே, கந்தா, சேனாபதியே,
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.
20. திவ்ய தரிசனம் கிட்டும்
தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.
21. எமபயம் தீரும்
காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உ யிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.
22. அபயம் கிட்டும்
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.
23. கவலை தீரும்
அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?
24 & 25. மனநோய் போகும்
துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உ ன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.
25. கொடிய பிணிகள் அபஸ் மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உ ன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன்v மாயம் போலப் பறந்திடுமே.
26. சராணாகதி பலன் கிட்டும்
கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உ டலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.
27. வரம் தரும் வள்ளல்
முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.
28. குடும்பம் இன்புறும்
மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உ றவினர் அனை வோரும்
இக்கணத் னெfனுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.
29. விஷம், நோய் போகும்
கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உ டலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உ ன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரௌஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.
30. குற்றம் குறை தீரும்
பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உ லகில் உ ண்டன்றோ
உ ற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.
31. ஆனந்தப் பெருமிதம்
இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.
32. வெற்றி கூறுவோம்
ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்
33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.
வேலும் மயிலும் துணை

Wednesday, March 13, 2013

மகா சிவராத்திரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும்.



மகா சிவராத்திரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும்.

மாசி மாதம் வந்துவிட்டால் மகாசிவராத்திரியும் அதனையொட்டி சிதம்பரம், மாயூரம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய இடங்களில் சிவாலயங்களில் "நாட்டியாஞ்சலி" எனும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சிறப்பு என்னவென்றால், ஆயிரக் கணக்கான இளம் நடனக் கலைஞர்கள் முதல் நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் கற்ற இந்த அபூர்வ கலைக்குச் சொந்தக்காரர் தில்லை நடராஜர் அல்லவா? எனவேதான் இந்த நாளைத் தேர்ந்தெடுத்து, ஆட்ட நாயகனான அந்த நடராஜப் பெருமானுக்கு குரு தக்ஷிணையாக தாங்கள் கற்ற கலையை அர்ப்பணிக்கிறார்கள்.

நாட்டிய வகைகளை எட்டு என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் பரதநாட்டியம் தவிர ஆந்திர மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குச்சிபுடி, கேரள மாநிலத்தின் மோஹினி ஆட்டம், ஒடிஷா மாநிலத்தில் பிறந்த ஒடிசி, டில்லி பாதுஷாக்களின் அவையில் ஆடப்பட்ட கதக் போன்றவைகளும் இந்த நாட்டியாஞ்சலி விழாக்களில் ஆடப்படு கின்றன. பொதுவாக ஆட்டமும், அதற்காகப் பாடப்படும் பாடல்களும் சிவபெருமான் பெருமையைப் பேசுவனவாக அமைந்திருக்கும். தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்ட எல்லைக்குட்பட்ட ஆலயங்களில்மட்டும் தான் இந்த நாட்டியாஞ்சலி சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. விடிய விடிய நடைபெறும் இந்த நாட்டிய விழாவில்தான் எத்தனை விதம். மிகச் சிறிய குழந்தைகள் முதல், வயதில் மூத்த தலைசிறந்த கலைஞர்கள் வரை..... அப்பப்பா! அந்த அழகைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

மிகப் புகழ்பெற்ற கலைஞர்கூட இந்த நாட்டியாஞ்சலி மேடையில் ஏறியவுடன் தில்லை நடராஜனை மனதில் வைத்து, பக்தி சிரத்தையோடு பரவசமூட்டும்படியாக ஆடுவதைக் கண்டு ஆனந்தம் மிகுதியால் கண்ணீர் சிந்தி பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டேன். சிவனை நினைந்து கலைஞர்கள் புகழ்ந்து, வாழ்த்திப் பாடும்போது, தலை வணங்கி இறைவனை கைகூப்பி தொழுகின்ற பெண்களைப் பார்த்தேன். மிகச் சிறிய வயது குழந்தைகள் தாங்களும் மேடையில் ஆடும் கலைஞர்களைப் போலவே 'தத்தக்கா' என்று ஆடி பார்ப்போரைப் பரவசப் படுத்துவதையும், பெற்றோர்கள் அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து கண்ணீர் மல்க நிற்பதையும் பார்த்தேன்.

இந்தக் கலையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் கலைஞர்கள் இங்கு வந்ததும், எத்தனை பணிவு, எத்தனை அன்பு, ஆர்வம், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் விதம், உற்சாகப் படுத்தும் திறம் இவற்றையும் பார்த்தேன். காரணம் இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளன் அடியேன் என்பது இப்படி உறுதியாகச் சொல்ல காரணம்.

தமிழ் நாட்டைப் பொறுத்த வரை பரத நாட்டியம்தான் பொதுவாக மக்கள் அறிந்த கலை. பொதுவாக அனைத்துக் கலைகளையும் உணர்ந்த பெரியோர்களை விட்டுவிட்டு, சாதாரண பாமர மக்களைப் பற்றிய கணிப்பு இது. ஆனால் இந்த நாட்டியாஞ்சலியில் ஆந்திர மாநிலத்தின் குச்சிபுடி, கேரளத்தின் மோஹினி ஆட்டம், ஒடிஷாவின் ஒடிசி, டில்லி முதலான வட மாநிலங்களின் கதக் போன்ற நாட்டிய வகைகளும் ஆடப்படுகின்றன. அப்படி இவர்கள் புதியதொரு நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும்போது, பரதம் மட்டுமே பார்த்திருந்தவர்களுக்கு இவைகள் வேறு மாதிரியாகத் தென்படுவது இயற்கை. அவர்கள் ஏன் இப்படி இந்த வகை நடனங்கள் பரதத்தினின்றும் சற்று வேறுபட்டிருக்கிறதே என்று எண்ணக் கூடும். (தேவன் எனும் எழுத்தாளர் துப்பறியும் சாம்பு எனும் கதை வரிசையில் சாம்பு என்பவரை அசட்டுத் தனத்தோடு செய்யும் காரியங்களில் வெற்றி அடையும் துப்பறியும் சிங்கமாக வர்ணித்து எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கதையில் சாம்பு ஒரு திருடனைப் பிடிக்க முயற்சி செய்வார். அந்தத் திருடன் பெண் வேடமிட்டு சாம்புவை ஏமாற்ற முயற்சி செய்து அவரை மயக்க முயல்வான். அந்த பெண் வேடமணிந்த திருடனின் கன்னத்தை சாம்பு தடவிவிட்டுச் சொல்லுவார், இது என்ன உன் கன்னம் சொற சொறவென்றிருக்கிறதே (தன் மனைவி) வேம்பு கன்னம் போல் வழவழவென்று இல்லையே என்று அப்பாவியாகச் சொல்வார். அவன் திருடன் என்பது வெளிப்பட்டு மாட்டிக் கொள்வான்.) இங்கு எதற்கு துப்பறியும் சாம்பு கதை என்று நினைக்கிறீர்களா? எனக்கு இதுபோன்ற நடனங்களின் வேறுபாடுகள் தெரியாதபோது சாம்புவைப் போல, இது என்ன குச்சிபுடியின் அசைவுகள் பரத நாட்டியம் போல இல்லையே, மோஹினி ஆட்டத்தில் வேகம் குறைந்து, பாவங்களும், கண் அசைவுகளும், உடையும் மாறுபடுகிறதே என்று "அப்பாவியாக" நினைத்ததுண்டு. அதனால்தான் சாம்புவோடு ஒரு ஒப்பீடு. எனது இந்த சொந்த அனுபவம் காரணமாக பரதநாட்டியம் தவிர ஆடப்படும் குச்சிபுடி, மோஹினி ஆட்டம் இவற்றைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்து அறிந்து கொண்டேன். ஒருக்கால், என்னைப் போல அறியாமையில் இருப்போர், அல்லது அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோருக்குப் பயன்படலாம் என்பதால், இவ்விரு வகை நாட்டியங்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கு கொடுத்திருக்கிறேன். நான் என்னவோ, இந்த கலைகளில் கரை கண்டுவிட்டது போல அல்ல, நான் படித்த அரிச்சுவடி பாடத்தை உங்களுக்கு மனப்பாடம் பண்ணி சொல்லிக் காட்டுகிறேன். அவ்வளவுதான். சரியென்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், தவறு இருந்தால் என்னை திறுத்துங்கள், நிச்சயம் திறுந்தி விடுகிறேன்.

இனி குச்சிபுடி:
குச்சிபுடி நடனம்: 

இந்த குச்சிபுடி நடனம் ஆந்திர பிரதேசத்தில் பிறந்த, பெரும்பாலும் அங்கு நிகழ்த்தப்படும் நடனக் கலை. இந்த குச்சிபுடி எனும் பெயர் குசேலபுரம் எனும் கிராமத்தின் பெயரிலிருந்து வந்தது. இந்த கிராமம் விஜயவாடாவிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த குச்சிபுடி நடனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் கலைஞர்களின், அசைவுகள், அந்த அசைவுகள் மூலமாக சொல்லவந்த ரஸம், ஆகியவை நாடகத்தின் நடிப்பு அம்சம் கொண்டவை. 

இந்த குச்சிபுடி நடனம் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் அருகில் ஒரு கிராமத்தில் அனாதை ஒருவர் இருந்தார். இங்கெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் உடுப்பி நகரத்துக்கு வேதம் பயில்வதற்காகச் சென்றார். அங்கு அவர் படித்த காலத்தில் அவர் சிதேந்திர யோகி எனும் பெயர் பெற்றார். இவர் வேதம் பயின்று ஸ்ரீகாகுளம் திரும்பினார். அப்போது அவ்வூர் பெரியவர்கள் அவரை இளமையில் திருமணம் செய்துகொண்ட பெண் வீட்டிற்குச் சென்று குடித்தனம் செய்யுமாறு சொன்னார்கள். அவர் தன் மனைவியின் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கடக்க நேர்ந்தது. ஆற்றை நீந்திக் கடக்கும் போது இவரால் இனி மீதி தூரத்தை நீந்திக் கடக்க முடியாது என்பதை உணர்ந்தார். வேறு வழியில்லை. தன்னைக் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார். தான் காப்பாற்றப்பட்டு விட்டால், தன்னை இறைவன் பணியில் அர்ப்பணித்துக் கொள்வதாக சபதம் ஏற்றார். அவருக்குத் தெம்பு வந்து மீதி தூரத்தையும் கடந்து கரையேறினார். அப்போது அவர் சந்நியாசம் பூணுவதாக அறிவித்து விட்டார்.

சந்நியாசம் ஏற்றுக் கொண்ட அவர் குசேலபுரம் எனும் கிராமத்தை அடைந்தார். அங்கு அவர் வேதம் போதிக்கத் தொடங்கினார். புராண இதிகாசங்களிலிருந்து குழந்தைகளுக்கு நாட்டியங்களையும், நாடகங்களையும் போதிக்கத் தொடங்கினார். நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த இந்த நாட்டிய நாடகங்கள் 'குச்சிபுடி' எனப் போற்றப்பட்டன. குசேலபுரத்தில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரிலேயே வழங்கப்பட்டு பின்னர் மறுவி குச்சிபுடி என ஆயிற்று.

நூற்றுக் கணக்கான வருடங்களில் இந்தக் கலை வளர்ந்து அரியதொரு கலையாக மிளிரத் தொடங்கியது. தக்ஷிணத்தை ஆண்ட மன்னர்கள் இதைப் போற்றிக் காத்தனர். 1678இல் ஒரு மன்னர், குச்சிபுடி நடத்தும் சிறுவர்களுக்காக நிலங்களை மானியமாக அளித்ததாக வரலாறு கூறுகிறது.

இப்போது நடத்தப்படும் 'குச்சிபுடி' நடனம் 20ம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சியடைந்து இன்றைய சிறப்பு நிலையை அடைந்தது. இந்த நடனத்தைப் பிரபலப்படுத்திய பல பிரபல கலைஞர்கள் இதற்கு பொறுப்பானவர்களாக இருந்தார்கள். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி எனும் குரு அவர்களில் முதன்மையானவர். அவருக்குப் பின் வேம்பட்டி சின்ன சத்யம், சி.ஆர்.ஆச்சார்யலு, டாக்டர் நடராஜ ராமகிருஷ்ணா ஆகியோரை இந்தப் பெருமைக்கு உரியவர்களாகச் சொல்லலாம்.

நான் பொறுப்பு வகிக்கும் நாட்டியாஞ்சலியில் இவ்வாண்டு ஆடிய கலைஞர் 'சங்கராபரணம்' படத்தில் நடித்த மஞ்சு பார்கவி அவர்களின் மாணவி. அந்த நடனம் இன்னும் என் மனதிலிருந்து அகலாத நிலையில் இதனை எழுதுகிறேன். இந்த குச்சிபுடிக்கு மிருதங்கம், ஜால்ரா, வீணை, வயலின், கஞ்சிரா, புல்லாங்குழல் தவிர சுருதிப் பெட்டியும் தம்பூரும் பக்க வாத்தியங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த சின்ன முன்னுரையுடன் குச்சிபுடி நடனத்தை ரசியுங்கள்.

மோஹினியாட்டம்.

இது கேரள மாநிலத்தில் தொடங்கிய நடன வகை. 16ம் நூற்றாண்டில் தோன்றியது. பாரத நாட்டில் வகைப்படுத்தப்பட்ட எட்டு நாட்டிய வகைகளில் இதுவும் ஒன்று. பெண்கள் தனித்து ஆடக்கூடிய மென்மையான உணர்வுகளையும் பாவங்களையும் காட்டும் நாட்டியம். திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் மகாராஜா காலத்தில் 19ம் நூற்றாண்டில் தஞ்சை நால்வர் எனப்படும் நட்டுவனார்களில் வடிவேலு என்பவரால் வகைப்படுத்தப் பட்டது. பிரபல மலையாளக் கவிஞர் வள்ளத்தோல் கேரள கலாமண்டலம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து 1930இல் மோஹினியாட்டம் சிறப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல பாடுபட்டார்.

மோஹினி என்பவர் அழகான வசீகரமான பெண். அப்படிப்பட்ட அழகான மோஹினி ஆடுகின்ற ஆட்டம் என்பதால் இது மோஹினி ஆட்டம். மனத்தை மயக்கும் அழகியின் ஆட்டம் என்பது மோஹினியாட்டத்தின் பொருள். மகாவிஷ்ணு, பாற்கடலைக் கடையும்போது தேவாசுர போட்டியில் குரங்கு மத்தியஸ்தம் செய்ய ஒரு முறை மோஹினியாக வந்தார். மற்றொரு முறை தாருக வனத்து முனிவர்கள் அகந்தையால் இறைவனை மறந்தபோது சிவன் பிக்ஷாடனராகவும், விஷ்ணு மோஹினியாகவும் வந்தனர். வேடிக்கை என்னவென்றால் நிர்வாணமாக, கையில் மண்டையோட்டை ஏந்தி தலையில் சடாமுடியோடு பிக்ஷாடனர் நடந்து செல்ல முனிபத்தினிகள் அவர் அழகில் மயங்கி அவருக்குப் பின்னால் செல்லத் தொடங்கினர். அங்கு மோஹினி தாருக வனத்து முனிவர்கள் தவச்சாலை அருகில் நடந்து செல்லும்போது, முனிவர்கள் அவள் அழகில் மயங்கி பின்னால் சென்றனர். தொடர்ந்தது கதை. இறுதியில் பிக்ஷாடனரைக் கொல்ல ஒரு கெட்ட யாகம் செய்து அதிலிருந்து ஒரு மதயானையை உருவாக்கி பிக்ஷாடனரை வதம் செய்ய ஏவினர். அது சிவனை விழுங்க உலகம் இருண்டது. அதன் வயிற்றினுள் சென்ற சிவன் அந்த யானையைக் கொன்று கஜ சம்ஹாரம் செய்துவிட்டு வெளிவந்தார் என்பது புராணம்.

மோஹினியாட்டத்தில் ஆடும் பெண்கள் தங்க ஜரிகை பார்டர் இட்ட வெண்பட்டு உடை அணிந்து, தலையில் வெள்ளை மலரை, குறிப்பாக மல்லிகை மலரணிந்து அதற்கேற்ற தலை கொண்டை அலங்காரம் செய்துகொண்டு இனிமையாக பாவத்தோடு ஆடுவது சிறப்பு. கால்களின் சிலம்பொலி காதுகளுக்கு இனிமை தரும். இந்த ஆட்டத்தில் ஆடும் பெண்களின் கண்கள் அசைவுகள் சிறப்பானவை. கண்களால் பேச முடியுமா, பார்க்கத்தானே முடியும்? ஆனால் மோஹினி ஆட்டத்தில் இந்த ஆடல் அழகிகளின் கண்களும் பேசும். எப்படி? பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். நான் பார்த்த மயக்கத்தில் இருக்கிறேன். இந்த ஆட்டத்துக்குப் பாடப்படும் பாடல்கள் சம்ஸ்கிருதமும் மலையாளமும் கலந்த மணிப்பிரவாள நடையில் இருக்கும்.

இனி நீங்கள் நாட்டிய நிகழ்ச்சி பார்க்கும்போது கவனியுங்கள் இந்த வேறுபாடுகள் உங்களுக்குப் புரியும். கதக் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உங்களுக்கு சாந்தாராம் எடுத்து வெளியிட்ட "ஜனக் ஜனக் பாயல் பாஜே" எனும் படத்தின் நினைவு வரலாம். பாருங்கள் அதில் கால் பாதங்கள் எப்படி தாளமிடுகின்றன, அவர் உடல் எத்தனை வேகமாக சுற்றி வருகிறது, அசைவுகள் எத்தனை லாவகமாக அமைந்திருக்கின்றன என்பதை. பாரத நாட்டின் நடனக் கலையும், பாரசீக நடனமும் இணைந்து, டில்லி சுல்தான்களின் அவைகளில் நடனமணிகளால் ஆடப்பட்ட கலை கதக். கல்கத்தாவிலிருந்து வந்திருந்த ஒரு இளைஞர் இந்த கதக்கை ஆடி முடித்தவுடன், நாட்டியாஞ்சலி பார்க்க வந்த நம்ம ஊர் கூட்டத்தினர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்த காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன். அவர் ஆடியது பெரிதல்ல. அந்த ஆடலின் சிறப்பை உணர்ந்து ரசித்த நம் ஊர் மக்களின் ரசனையை தலை வணங்கி போற்றுகிறேன். கலை என்பது நம் உள்ளங்களைக் கனியச் செய்வது. ஒரு முறை இதில் ஈடுபட்டுவிட்டால் நாம் இந்த இனிய உணர்வுகளிலிருந்து கரை ஏறுவது முடியாது. கலைகளைக் கற்பது சிரமம். அது எல்லோராலும் முடியாது. ஆனால் ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருவர் கற்றுக் கொண்டு தலை சிறந்து விளங்கினால் அப்படிப் பட்டவரை நாம் போற்றி பாராட்டி ஆதரிக்க வேண்டும். அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ரசித்துப் பாராட்டுவது மட்டும்தான். அந்தக் கலைஞர்களை சாட்சாத் சரஸ்வதி தேவியாக எண்ணி அவர்களை வணங்குவது மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது. "நடனக் கலைஞர்கள் நாள்" என்றுகூட ஒரு நாளை ஏற்பாடு செய்து, அன்றைய தினமாவது நாம் அவர்களைப் போற்றி, வாழ்த்தி கொண்டாடலாமே. கடந்த சில நாட்களாக சிறு பொடிசு முதல் பெரிய கலைஞர் வரை அத்தனை பேர் ஆட்டத்தையும் பார்த்து மனம் நெகிழ்ந்ததன் விளைவாக இந்த ஆலோசனையைச் சொல்கிறேன். யாராவது முன்முயற்சி எடுத்துச் செய்யலாமே.

Tuesday, March 12, 2013

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி நிறைவு




திருவையாற்றில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி நிறைவு 

கடந்த 9ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி திங்கட்கிழமை இரவு திருவண்ணாமலை நடனக் கலைஞர் கலைச்செல்வி சுப்ரமணியம் பரதாஞ்சலியுடன் நிறைவடைந்தது. மகாசிவராத்திரி நாளான ஞாயிற்றுக் கிழமை 15 நடனக் குழுவினர் நிகழ்ச்சிகளை வழங்கினர். இவற்றில் பெங்களூர் தீபா சசீந்திரன் ஆடிய குச்சிபுடி நடனமும் ஸ்வப்னா ராஜேந்திரகுமாரின் மோகினி ஆட்டமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த நடனக் கலைஞர் பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் அர்த்தநாரீஸ்வரர் நடனமும் கொல்கொத்தா அயன் பானர்ஜியின் கதக் நிகழ்ச்சியும் பெரிதும் பாராட்டப்பட்டன. குறிப்பாக பரத நாட்டியம் தவிர மற்ற வகை நாட்டியங்களை அதிகம் பார்த்திராத இந்தப் பகுதி மக்களை இந்த நடனங்கள் பெரிதும் கவர்ந்ததன் காரணமாக கலைஞர்களை மக்கள் உற்சாகத்தோடு பாராட்டி மகிழ்ந்தனர். 

சென்னை ஸ்ரீகிருஷ்ண நாட்டியாலயா கலா சீனிவாசன் குழுவினர் காஞ்சிபுரம் அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் அமைந்துள்ள நந்திகேசுவரர் பற்றிய நாட்டிய நாடகத்தை நிகழ்த்தினர். அங்கு நந்தியின் வாயிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும் வரலாற்று சுவைமிக்கதாக அமைந்திருந்தது. கடலூர் முனைவர் சுமதி சுந்தர் அவர்களின் தலைமையில் நடந்த பரத நாட்டியமும், செங்கல்பட்டு ஸ்ரீ சரஸ்வதி நாட்டியாலயா சசிகலா வெங்கடேசன் குழுவினரின் பரதமும், சென்னை கவின்கலை அகாதமியின் மீனாட்சி வெங்கடராமனின் பரதநாட்டியம், சென்னை கொரட்டூர் கலைச்செல்வி, விருகம்பாக்கம் சுதா விஜயகுமார் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தன. மன்னார்குடி காரக்கோட்டை மதியழகன் குழுவினர், கடலூர் தர்மேந்திரன் ஆகியோரும் இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 

மூன்றாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பெங்களூர் லக்ஷணா ஸ்ரவண் ஆடிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திர நிகழ்ச்சிகள் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டன. தஞ்சை பத்மஸ்ரீ நாட்டியாலயாவின் வடிவுதேவி ஆடிய சிவதாண்டவம் அற்புதமாக அமைந்தது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவமும், பார்வதி அம்மையுடன் சிவன் ஆடிய தாண்டவ காட்சிகளையும் மிகவும் அற்புதமாக வடிவமைத்து ஆடினார் வடிவுதேவி. மக்களின் பெருத்த ஆரவாரத்தை அவரது நடனம் பெற்றது. சிதம்பரம் மூத்த நடனக் கலைஞர் வி.என்.கனகாம்புஜம் அம்மையாரின் மாணவியரின் நடனமும், கும்பகோணத்தின் தலைசிறந்த நாட்டியக் கலைஞர்களான ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழும எஸ்.விஜயமாலதி, ஸ்ரீ சிவசக்தி நடனப் பள்ளியின் கவிதா விஜயகுமார், கீதா அசோக், ஜென்சி, மயிலாடுதுறை ஸ்ரீ சண்முகா நாட்டியாலயாவின் வி.எஸ்.ராஜேந்திரன் இவர்களுடைய நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

பல ஆண்டுகள் டில்லியில் தலை சிறந்த நடனக் கலைஞராக விளங்கியவரும், பரதம், குச்சிபுடி ஆகியவற்றில் திறமை மிக்கவரும் வெம்பட்டி சின்ன சத்தியத்தின் மாணவியுமான தஞ்சை அருணா சுப்ரமணியம் அவர்களது சிறப்பான சேவையைப் பாராட்டி ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி சார்பாக முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவருக்கு விருது வழங்கி கெளரவித்தார். அவருடைய மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழகத்தின் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான அனிதா குஹா தனது மாணவிகளோடு அற்புதமானதொரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.

விழாவின் நிறைவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.ரத்தினசாமி அவர்களும், திருவையாறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்மணி, தமிழிசை மன்றத்தின் தலைவர், ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் அறக்கட்டளை உறுப்பினர்கள் வக்கீல் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், பாரதி இயக்க அறங்காவலர் பி.ராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோரும் விழா குழுவினர்களுக்கும், விழாவுக்காகத் தொண்டு புரிந்த இசைக் கல்லூரி, அரசர் கல்லூரி மாணவ மாணவியருக்கும் அவர்கள் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். திருவண்ணாமலை பானுமதி சுப்ரமணியமும், கலைச்செல்வி சுப்பிரமணியமும் மங்களம் பாடி விழாவை நிறைவு செய்தனர். 

Wednesday, March 6, 2013

சிறுகதையில் சின்னஞ்சிறு கதை

சிறுகதையில் சின்னஞ்சிறு கதை

இது ஒரு சிறுகதை அல்ல. சின்னஞ்சிறுகதை. இதில் நீதி ஒன்றும் கிடையாது. இருப்பதாகக் கருதினால் அது உங்கள் மன வளத்தைக் காட்டுகிறது.

இந்த சின்னஞ்சிறுகதையின் தளம் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அந்த கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இருந்தால் பெரிது. விவசாயம் மட்டுமே முக்கிய தொழில். அனைவருக்கும் நஞ்சை நிலம் இருந்தது. காவிரி நதியின் கிளைநதி பாய்ந்து வயல் வெளிகளை வளமாக வைத்திருந்த கிராமம். இங்கு அடிமட்ட ஏழைகள் என்று எவரும் இல்லை. செல்வத்தில் அடிமட்டத்தில் இருப்பதாகச் சொல்லக் கூடியவருக்கே சகல வசதிகளும் இருந்தன.

இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். தினம் அந்திப் பொழுதைத் தாண்டியபின் அவரவர்கள் தங்கள் இல்லங்களில் உணவை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிழக்கே இருந்த சாவடியின் திண்ணையில் அமர்ந்து ஊர், உலக நிலவரம் குறித்து பேசி, விவாதித்துவிட்டுத்தான் தங்கள் வீடுகளுக்குப் படுக்கச் செல்வார்கள். அப்படியொரு நாள் இவர்கள் பேசி முடித்து வீடுகளுக்குக் கிளம்ப சற்று காலதாமதம் ஆகிவிட்டது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.

அன்றிரவு முதல் ஜாமம் முடியும் நேரத்தில் அருகில் பத்து கி.மீ. தூரத்திலிருந்த ஒரு சிறு நகரத்துக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த இருவர் வரும் வழியில் ஊருக்குக் கிழக்கே சாவடிக்கு அருகில் ஒரு புதரில் ஒளிந்திருந்த ஆளைப் பார்த்துவிட்டனர். உடனே கூச்சல் எழுப்பாமல் இவ்விருவருமே புதருக்கு அருகில் சென்று அங்கு ஒளிந்திருந்தவனைப் பிடித்துவிட்டனர்.

பிடித்தவுடன், அவன் யார் ஏன் அங்கு ஒளிந்திருக்கிறான் என்று விசாரித்தனர். அவன் அத்தனை எளிதில் இவர்களுக்கு பதில் சொல்வதாக இல்லை. ஏதேதோ முன்னுக்குப் பின்னாக உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். இவன் மீது சந்தேகம் கொண்ட அவ்விருவரில் ஒருவர் மட்டும் உரக்கக் குரலெழுப்பி அருகிலிருந்த வீடுகளிலிருந்த ஆட்களை வரவழைத்து விட்டார். சிறிது நேரத்தில் அந்த கிராமமே விழித்துக் கொண்டுவிட்டது. ஆண்கள் அனைவரும் சாவடியில் கூடிவிட்டார்கள்.

விசாரணை நடந்தது. பிடிபட்ட ஆளைக் கொண்டு வந்து நிறுத்தி ஆளாளுக்குக் கேள்வி கேட்டனர். அவன் யார், எந்த ஊர், எதற்காக இந்த ஊருக்கு வந்தான், இந்த இரவு வேளையில் அவன் சாவடிக்கருகில் புதரில் ஒளிந்திருப்பானேன் என்று கேள்விக் கணைகள் அவனைத் துளைத்தெடுத்தன. அவன் எதற்கும் அசையவில்லை. தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று சாதித்தான்.

அவன் சொன்னான், நீங்கள் ஊர்க்காரர்கள் இத்தனை பேர் சேர்ந்து என்னை கேள்வி கேட்கிறீர்கள். நான் யாருக்கு சொந்தமான இடத்திலும் புகவில்லை, எதையும் களவாடவில்லை, என்னிடத்தில் இப்போது எதுவும் கையில் இல்லை, அப்படி இருக்கையில் நான் வழிப்போக்கனாக இவ்வூர் வழியாகப் போகக் கூடாதா? வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்கக் கூடாதா? அதற்காக இத்தனை பெரிய கூட்டம் கூடி ஆளாளுக்குக் கேள்விகளைக் கேட்கிறீர்களே!

ஊர்க்காரர்கள் கோபமடைந்தனர். என்னடா நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீ பாட்டுக்கு வாதம் செய்து கொண்டிருக்கிறாய் என்றார்கள்.

அவன் சொன்னான், சரி நீங்கள் ஒவ்வொருவராக உங்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்லுங்கள், நானும் கடைசியில் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிறேன். நான் எந்த விவாதத்துக்கும் தயார். இதுவரை பெரிய இடங்களில் கூட நடக்கும் விவாதங்களுக்கு முடிவு ஏற்பட்டதாகவோ, விடை கிடைத்ததாகவோ தகவல் இல்லை. இங்கு நடக்கும் விவாதத்துக்கு மட்டும் விடை கிடைக்கவா போகிறது. உங்கள் தூக்கத்துக்குக் கேடு. என் வழிப் பயணத்துக்கும் கேடு அவ்வளவுதான். வாருங்கள் நான் எந்த விவாதத்துக்கும் தயார். விவாதம் செய்து முடிவு செய்து கொள்வோம் என்றான்.

ஊர்க்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்னடா இது இவன் விவாதம் செய்யலாம் என்கிறான். திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தினால், அவன் விவாதம் செய்யலாம் வாருங்கள் என்றால் என்ன அர்த்தம். பிடித்தவனை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள் விசாரிக்கும் முறையில் விசாரித்தால் இவன் பதில் சொல்லிவிட்டுப் போகிறான். இவன் நம்மையெல்லாம் வெட்டிப் பயல்கள் என்று நினைத்து விவாதத்துக்கு அழைக்கிறான் என்றார் ஒரு பெரியவர்.

அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதை பலரும் உணர்ந்தனர். அப்போது ஒருவர் சொன்னார், ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு கிராமத்தானாக நடிப்பார். அவர் மீது குற்றம் சாட்டி அவரை ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். பஞ்சாயத்தார் அவரைக் கேள்விகளைக் கேட்பார்கள். குற்றம் செய்தவராக இருந்த போதிலும் மிகவும் சாமர்த்தியமாக அவர் அந்த கேள்விகளையெல்லாம் திரும்ப திருப்பி விடுவார். எப்படி தெரியுமா? 'நீதான் இந்த குற்றத்தைச் செய்தியாப்பா?' உடனே அவர் 'என்னத்தைச் செய்தியாப்பா?' என்பார், இப்படியே கேட்கப்படும் கேள்விகளையெல்லாம் அதற்கு முன்பு "என்ன" என்ற விகுதியோடு மீண்டும் கேள்விகளை பஞ்சாயத்தார் மீதே திருப்புவார். ஒரு கட்டத்தில் பஞ்சாயத்தார் வெறுத்துப் போய் அழுதுகொண்டு அவரை விரட்டிவிடுவார்கள்.

அதுபோல விவாதம் செய்வது என்பது மனிதனை வெறுப்பேற்ற செய்யும் காரியம். இப்போது மாட்டிக் கொண்ட திருடனும் நன்றாக விளைந்த திருடன் போல இருக்கிறது. அதனால்தான் விஷயம் முடிவுக்கு வரமுடியாமல், நியாயம் நிலைநிறுத்த முடியாமல் எதையும் விவாதிக்கலாம் என்று சவால் விடுக்கிறான் என்றுணர்ந்த கிராமத்தார், கிடக்கிறான், இவனைப் போக விடுங்கள். இவனோடு விவாதித்தால் நம் தூக்கம்தான் கெடும். நாளை நமது வேலைகளும் கெடும் என்று அவனை விரட்டிவிட்டனர். தனது சாமர்த்தியம் பலித்துவிட்டதை நினைத்து அந்தத் திருடனும் மகிழ்ச்சியோடு அந்த இரவு வேளையில் விசில் அடித்துக் கொண்டு வழியோடு போய்ச்சேர்ந்தான்.

இந்தக் கதையில் நீதி எதுவும் இல்லை என்று சொன்னேனல்லவா, அவரவர்க்குத் தோன்றிய நீதியை எடுத்துக் கொள்ளலாம் என்பதால் இதில் எனக்குத் தோன்றிய நீதி என்னவென்றால், குற்றங்களோ, குறைகளோ அல்லது நிறைகளோ எதுவானாலும், குற்றம் என உணர்ந்தால் உடனடியாக சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துவிட வேண்டும். நிறை இருந்தால் பாராட்டிவிட வேண்டும். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் என்பது நேரத்தைக் காலத்தைக் கடத்தும் செயல் என்பதை உணர வேண்டும். குற்றவாளியை விவாதம் என்ற பெயரில் குற்றத்தை நீர்த்துப் போக விட்டுவிடாமல் மீண்டும் அவன் குற்றம் செய்யும் இடத்துக்கு வரமுடியாமல் தூர விரட்டியடித்துவிடுவதே சரி என்பதுதான் நீதி.