பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 11, 2015

பாரதி விநாடி வினா.

திருவையாறு பாரதி இயக்கம் - மகாகவி பாரதியார் விழா 27-12-2014.
(உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தியது)

1. மகாகவி சுப்ரமணிய பாரதியார் எந்த ஆண்டு எந்த ஊரில் பிறந்தார்:

1882 டிசம்பர் 11, எட்டையபுரம்.

2. மகாகவி பாரதியாரைத் தன் தோழராக ஏற்றுக்கொண்ட எட்டையபுரம் மன்னர் பெயர் என்ன?

வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்.

3. பாரதியார் எட்டையபுரத்தை விட்டு நீங்கி மதுரையில் எங்கு பணியில் அமர்ந்தார், எந்த ஆண்டில்?

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், 1904ஆம் ஆண்டு.

4. பாரதியார் தன்னுடைய இளமைப் பருவத்து வரலாற்றை ஒரு புதினமாக புதுச்சேரியில் இருக்கும்போது எழுதி வெளியிட்டார், அதன் கையெழுத்துப் பிரதிகளை போலீசார் எடுத்துப் போய்விட்டார்கள். அந்த வரலாற்றுக் கதையின் பெயர் என்ன?

சின்னச் சங்கரன் கதை.

5. பாரதியார் புதுவையில் இயற்றிய முப்பெரும் இலக்கியங்கள் எவை?

பாஞ்சாலி சபதம்; கண்ணன் பாட்டு; குயில் பாட்டு.

6. பாரதியார் அவர் காலத்திய ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியைப் போற்றிப் பாடினார், யார் அவர்?

ஜகதீச சந்திர போஸ்.

7. பாரதியார் தன் வாழ்நாளில் பொது மேடையில் பாடிய கடைசி பாட்டு எது? எங்கே எப்போது பாடினார்.

"பாரத சமுதாயம் வாழ்கவே" சென்னை கடற்கரைக் கூட்டத்தில்.

8. சத்திரபதி சிவாஜி மகாராஜா தன் சைநியத்தாருக்குப் பாடியது என்றொரு பாட்டு, அது எந்த ஆண்டில் எந்த பத்திரிகையில் வெளிவந்தது? அந்தப் பாடலில் அவர் ஒரு செய்தியை அழுத்தமாக பலமுறை சொல்கிறார் அது எது?

17-11-1906இல் "இந்தியா" பத்திரிகையில் எழுதினார். "பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர்" என்ற செய்தியை அழுத்தமாகப் பாடுகிறார்.

9. பாரதியார் "அல்லா அல்லா அல்லா" என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாட்டை எப்போது யாருக்காக இயற்றினார்? எங்கு பாடினார்?

நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் எனும் ஊரில் அவ்வூர் இஸ்லாமியர்கள் வேண்டுகோளுக் கிணங்க ரம்ஜான் பண்டிகையையொட்டு இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தார். 20-6-1920 அன்று பொட்டல்புதூர் இஸ்லாமியர் சபையில் "இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை" எனும் தலைப்பில் அவர் பேசுகையில் இதைப் பாடினார்.

10. மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை கலெக்டர் யார்? அவரைச் சுட்டுக் கொன்ற தேசபக்தன் யார், எந்த ஆண்டில்?

கலெக்டர் ஆஷ். கொன்றவர் வாஞ்சிநாதன் 1911இல்.

11. ஆஷ் கொலையை நிகழ்த்திய வாஞ்சியின் சட்டையில் பாரதி பாட்டு ஒன்று இருந்தது. அதை வைத்து இந்தக் கொலை ஒரு சதி என்று விசாரணையை நடத்தினர் போலீஸார், அந்த பாட்டு எது?

"மறவன் பாட்டு" 'மண்வெட்டி கூலிதினலாச்சே, எங்கள் வாள் வலியும், வேல் வலியும் போச்சே' எனும் பாட்டு எழுதிய சீட்டு அது.

12. பாரதியார் எழுதிய பாடல்கள் தொகுப்பில் முதன் முதலில் வெளியான நூலுக்கு என்ன பெயர், எந்த ஆண்டில், யாரால் வெளியிடப்பட்டது?

"சுதேச கீதங்கள்" எனும் தலைப்பில் வந்தது. முதல் பாட்டு "வந்தே மாதரம் என்போம்". 1907இல் வக்கீல் வி.கிருஷ்ணசாமி ஐயர் எனும் மிதவாத காங்கிரஸ் தலைவர் வெளியிட்டார்.

13. பாரதியார் ஒரு பாடலில் "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா" எனும் வரிகள் வரும் பாடலின் முதலடி என்ன?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா

14. பாரதி பாடியுள்ள 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" இந்த வரிகளை பாரதி எதிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

வான்மீகி ராமாயணத்தில் வரும் "ஜனனீ ஜன்ம பூமிஸ்ச, ஸ்வர்காதபி கரீயசி" எனும் வரிகள்.

15. பாரதியார் "அறத்தினால் வீழ்ந்துவிட்டாய், அன்னியன் வலியனாகி, மறத்தினால் வந்து செய்த, வன்மையைப் பொறுத்தல் செய்வாய்" என்று தொடங்கும் பாடல் யாருக்காக, எந்த சந்தர்ப்பத்தில்பாடினார்?

முதல் உலகப் போரில் ஜெர்மனியிடம் பெல்ஜியம் தோல்வியடைந்த போது
பெல்ஜியத்தின் வீரத்தை புகழ்ந்து பாராட்டிப் பாடிய பாடல்.

16. "குரு கோவிந்த சிம்ஹ விஜயம்" எனும் தலைப்பில் பாடப்பட்ட பாடலில் பாரதி சொல்லும் கருத்து என்ன?

சீக்கிய மத குருவான குருகோவிந்த சிங் அவர்கள் இனத்தை ஒரு வீரம் செறிந்த இனமாக உருவாக்கிய வரலாற்றைச் சொல்லுகிறார்.

17. "மாஜினியின் யங் இத்தாலி" எனும் சங்கத்தைப் போற்றிப் பாடுகிறார், யார் இந்த மாஜினி?

இத்தாலி தேசத்து தேசாபிமானி. யங் இந்தியா என்பது அவர் தொடங்கிய அரசியல் அமைப்பு.

18. புதிய ரஷ்யாவை வரவேற்று பாரதி பாடிய பாடலின் முதல் வரிகள் எவை?

"மாகாளி பராசக்தி உருசிய நாட்டின் கண் கடைக்கண் வைத்தாள், அங்கு ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி"

19. "பிஜித் தீவில் இருந்த இந்து மாதர்களின் துயரங்களை கண்ணீர் வரும்படி பாடுகிறார் பாரதி". அந்தப் பாடல் எது? அங்கிருந்த பெண்களுக்கு ஏற்பட்ட துயரம் என்ன?

"கரும்புத் தோட்டத்திலே, ஆ ஆ கரும்புத் தோட்டத்திலே". அங்கு பெண்கள் கற்பிழந்து துன்பப்பட்ட நிலை குறித்து.

20. "ஸ்வதந்திர பள்ளு" எனும் தலைப்பில் பாடப்பட்ட பாட்டு எது?

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"

21. "ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்" எனும் தலைப்பில் அவர் பாடிய பாடல் எது?

"என்று தணியுமிந்த சுதந்திர தாகம்"

22. "கிளிக் கண்ணிகள்" எனும் தலைப்பில் அவர் பாடியுள்ள பாடலில் யாரை கேலி செய்கிறார்.

போலிச் சுதேசிகளை. 'நெஞ்சில் உரமுமின்றி" நடிப்புச் சுதேசிகள்.

23. பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி எனும் பாடலின் முதல் வரிகள் எவை? எந்த சூழ்நிலையில் இந்தப் பாடலை அவர் இயற்றினார்.

"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" குவளை கிருஷ்ணமாச்சாரியின் தாய் கேட்டதற்காக.

24. எல்லா வகை பாடல்களையும் பாடிய பாரதி தாலாட்டுப் பாடல் பாடவில்லை ஏன்?

தூங்கிக் கிடக்கும் மக்களை மீண்டும் தூக்கத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

25. "கனவு" எனும் தலைப்பில் அவர் பாடியுள்ள பாடல் எது?

சுயசரிதை

26. 'பாரதி சின்னப் பயல்' எனும் ஈற்றடி கொடுத்து பாரதியை ஒரு வெண்பா பாடச்சொன்ன புலவர் பெயர் என்ன? அதற்கு பாரதி பாடிய வெண்பா எது?

காந்திமதி நாதப் பிள்ளை என்பார். அந்த வெண்பா:

"ஆண்டில் இளையவன் என்றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி* சின்னப் பயல்."                     *(பார்+அதி = பாரதி)

"ஆண்டில் இளையவனென்றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னை நீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."

27. பாரதியார் எந்த ஆண்டில் புதுச்சேரிக்குச் சென்றார்? ஏன்?

1909. இந்தியா பத்திரிகை கட்டுரைகளுக்காக கைது செய்யப்படுவார் என்ற நிலைமையில்.

28. பாரதியார் புதுச்சேரி சென்றபோது அங்கு வந்து சேர்ந்த வங்காளத்தைச் சேர்ந்த புரட்சியாளர் யார்.

மகான் அரவிந்தர்.

29. பாரதியார் கதைகள் எழுதியிருக்கிறாரா? எழுதியிருந்தால் ஏதாவது இரண்டு கதைகளின் பெயர்?

நவதந்திரக் கதைகள்; சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு, சில வேடிக்கைக் கதைகள், ஆனைக்கால் உதை, அந்தரடிச்சான் சாஹிபு கதை; குதிரைக் கொம்பு; தேவவிகடம். போன்ற ஏராளமான கதைகள்.

30. கண்ணன் பாட்டு எனும் தலைப்பில் பாரதியார் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

இருபத்திமூன்று.

31. கண்ணன் பாடலில் கண்ணனை யாரெல்லாமாகக் கற்பனை செய்து பாடுகிறார்?

தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப் பிள்ளை, காதலன் (5), காந்தன், காதலி (6), ஆண்டான், குலதெய்வம். ஆக 23.

32. சேவகனாக வந்த கண்ணனிடம் 'ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை?' என்றதற்கு என்ன பதில் சொல்கிறான் அவன்?

'பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பான்; வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பான்; பாட்டியார் செத்துவிட்ட பன்னிரெண்டாம் நாள் என்றான்;" இப்படி ஓயாமல் பொய் உரைப்பான்.

33. "விளையாட்டுப் பிள்ளை" என்று கண்ணனைப் பாடும் பாட்டின் முதல் வரிகள் எவை?

"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை"

34. "கண்ணன் என் சீடன்" எனும் பாடலின் உட்கருத்து என்னவென்று பாரதி சொல்கிறார்?

"ஒன்றை ஆக்குதல், மாற்றுதல், அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று. 'தோற்றேன்' என நீ உரைத்திடும் பொழுதில் நீ வெல்கிறாய்." என்பதுதான். அதாவது எல்லாம் இறைவனே என்பது.

35. "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்" இந்த வரிகள் பாரதியாரின் எந்தப் பாடலில் வருகிறது? தொடக்க வரிகள் எவை?

"கும்மியடி தமிழ் நாடு முழுதுங் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி"

36. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனும் பாட்டின் அடுத்த வரிகள் எவை?

"என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்"

37. "மகாத்மா காந்தி பஞ்சகம்" பாடலின் முதல் வரிகள் எவை?

"வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்"

38. "ஸ்வதந்திர தாகம்" எனும் தலைப்பிலான பாடல் எப்படித் தொடங்குகிறது?

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?"

39. "நடிப்புச் சுதேசிகள்" என்று பாரதி பாடிய கிளிக் கண்ணிகள் பாட்டு எது?

"நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி"

40. குரு கோவிந்த சிம்ஹன் பற்றி பாரதி பாடியிருக்கிறார், யார் இந்த குரு கோவிந்த சிம்ஹன்?

சீக்கியர்களின் குரு. சீக்கிய இனத்தை ஒரு போராளி இயக்கமாக உருவாக்கியவர், இவர் தந்தையும், இவரும் ஒளரங்கசீபினால் கொல்லப்பட்டனர்.

41. "எங்கள் தாய்" எனும் பாடல் "தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ் கலை வாணர்களும்" எனத் தொடங்குகிறது. இது எந்த மெட்டில் இயற்றியதாக பாரதி குறிப்பிடுகிறார்.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மெட்டில்.

42. "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், மிடிப் பயம் கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்" இந்த பாடல் பாரத தேசம் தலைப்பில் பாடியிருக்கிறார். இதில் வரும் "சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" இதற்கு அடுத்த வரி என்ன?

"சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்."

43. பாரதியார் ஒருவருக்குப் பூணூல் போட்டு விட்டார் என்கிறார்கள். அப்படி பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் பெயர் என்ன?

கனகலிங்கம்.

44. புதுவையில் பாரதியார் தான் எழுதிய கவிதைகளை ஒரு சிறுமியிடம் பாடிக் காண்பிப்பார். அவர் யார்? என்ன பெயர்?

மண்டையம் சீனிவாசாச்சாரியாரின் மகள். யதுகிரி என்று பெயர்.

45. பாரதியாரின் சீடன் அவருக்கு மிக உதவியாக இருந்தவன், அவன் பெயர் என்ன?

குவளைக் கண்ணன்.

46. பாரதியார் 'குயில் பாட்டு' பாடிய இடம் எங்கே, அந்த இடத்தின் பெயர் என்ன?

புதுச்சேரியில், வெல்லச்சு செட்டியார் எனும் கிருஷ்ணசாமி செட்டியாரின் மாந்தோப்பில்.

47. பாரதியார் மதுரை தமிழ்ச்சங்கம் அறிவித்த போட்டியொன்றுக்கு அனுப்பிய பாடல் எது? அந்தப் பாடல் போட்டியில் பரிசு பெற்றதா? எத்தனையாவது பரிசு?

"செந்தமிழ் நாடெனும் போதினிலே" 3ஆம் பரிசு.

48. பாரதியார் அன்னிபெசண்ட் அம்மையாரைப் பற்றி ஒரு கேலிக்கட்டுரை எழுதினார்? எந்த மொழியில் எழுதினார்? அதற்கு என்ன தலைப்பு?

ஆங்கிலத்தில் எழுதினார், பொன்வால் நரி ஆங்கிலத்தில் "A Fox with Golden Tail"

49. பாஞ்சாலி சபதத்தில் "தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்" எனும் வரிகளை அந்த கதையில் எந்த இடத்தில் இந்த விளக்கத்தைத் தருகிறார்?

பாஞ்சாலியை பாண்டவர்கள் சூதில் பணயமாக வைத்து இழந்தபோது, பீமன் ஆத்திரப் படுகிறான் அவனை சமாதானம் செய்வதற்காக அர்ஜுனன் இவ்வரிகளைப் பேசுகிறான்.

50. பாரதி முதன் முதலில் *ஆசிரியராகப் பணிபுரிந்த பத்திரிகை எது?

"சக்கரவர்த்தினி"*   (சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகத்தான் இருந்தார்.)

51. பாரதியாரை மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து பத்திரிகையில் சேர்த்தவர் யார்? அது எந்த பத்திரிகை? என்ன பதவியில் பணியில் சேர்ந்தார்?

ஜி.சுப்பிரமணிய ஐயர், சுதேசமித்திரன், உதவி ஆசிரியர்.

52. "விஜயா" பத்திரிகையில் வந்த பாரதியாரின் கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து புத்தகமாக சமீபத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். அவர் பெயர் என்ன?

ஆ.இரா.வெங்கடாசலபதி.

53. பாரதியார் சிறைப்பட்டாரா? சிறைப்பட்டார் என்றால் எந்த சிறையில் இருந்தார்? எத்தனை நாட்கள்?

ஆம் சிறைப்பட்டார். கடலூர் சிறையில் 21 நாட்கள் இருந்தார்.

54. பாரதியார் புதுச்சேரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கல்லூரி பேராசிரியர் வீட்டுத் திண்ணையில் கூடி விவாதிப்பார். அந்த பேராசிரியர் பெயர் என்ன? அப்படி கூடுகின்ற அந்த கூட்டத்துக்கு பாரதியார் என்ன பெயர் வைத்தார்?

வாத்தியார் சுப்பிரமணிய ஐயர். இடிப்பள்ளிக்கூடம்.

55. பாரதியார் இல்லத்தில் பணிபுரிந்த ஒரு அம்மையாரும் அவருடைய புதல்வர்களும் பாரதியாரிடம்  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக பணிபுரிந்தார்கள். அந்த அம்மையாருக்காக பாரதியார்ஒரு பாட்டைப் பாடினார்? அந்த அம்மையார் பெயர் என்ன? அது எந்தப் பாடல்?

அம்மாக்கண்ணு. "பூட்டைத் திறப்பது கையாலே, நல்ல மனம் திறப்பது மதியாலே"

56. பாஞ்சாலி சபதத்தில் "விகர்ணன் சொல்வது" என்ற பகுதி வருகிறது. யார் இந்த விகர்ணன்?

துரியோதனனின் தம்பியரில் ஒருவன்.

57. குயில் பாட்டின் இறுதியில் பாரதியார் இந்தப் பாடல் ஒரு குயிலைப் பற்றியது; இதில் வேதாந்தமாகப் பொருளுரைக்க ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்கிறார். குயில் பாட்டில் பாரதி சொல்லவந்த வேதாந்தக் கருத்து என்ன?

பரமாத்வாவை அடைய ஜீவாத்மாக்கள் படும் பாடு. காளை, ஆணவம். குரங்கு, ஐம்பொறிகள். குயில் ஜீவாத்மா, ராஜகுமாரன், பரமாத்மா.

58. பாரதியார் "போகின்ற பாரதம்" "வருகின்ற பாரதம்" என்று இருவகையில் பாடுகிறார். எத்தகைய பாரதத்தை பாரதி வா வா வா என்றழைக்கிறார்.

ஒளி படைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்குதல், எளிமை கண்டு இரங்குதல், ஏறுபோல் நடை

59. பாரதி விநாயகர் நான்மணிமாலையில் தன் சிந்தைக்கு மூன்று தொழிலைச் செய்யும்படி ஆணை யிடுகிறார், அவை என்னென்ன தொழில்கள்?

"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" இம்மூன்றையும் செய்யும்படி ஆணையிடுகிறார்.

60. பாரதியார் ஊழிக்கூத்து எனும் தலைப்பில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த பாடலின் முதல் வரிகள் எவை?

"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட, வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட, பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடும் ஒலியிற் கூடக், களித்தாடுங் காளீ, சாமுண்டீ, கங்காளீ அன்னை, அன்னை, ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.

61. பிஜித் தீவில் துன்பங்களை அனுபவித்தும் நம் ஹிந்து மாதர்களுக்காக இரங்கிப் பாடிய பாடல் எது?

"கரும்புத் தோட்டத்திலே, ஆ, கரும்புத்தோட்டத்திலே
கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே ஹிந்து மாதர் தம் நெஞ்சு
கொதித்துக் கொதித்து மெய் சுருங்குகின்றனரே அவர்
துன்பத்தை நீக்க வழியிலையோ ஒரு மருந்து இதற்கிலையோ, செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த (கரும்பு)

62. "உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா" என்று பாரதியார் பாடிய அந்த மாரியம்மன் கோயில் எந்த ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது?

புதுச்சேரியில், உப்பளம் எனும் இடத்தில்.

63. பாரதியாருக்கு எத்தனை மக்கள், அவர்கள் பெயர்?

இரண்டு. தங்கம்மா, சகுந்தலா.

64. பாரதியாரின் மனைவி பெயர்? அவருடைய ஊரின் பெயர்?

செல்லம்மா பாரதி, கடையம்.

65. பாரதியார் மணி மண்டபம் கட்ட முயற்சி எடுத்து கட்டிய பத்திரிகையாளர் யார்?

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.

66. பாரதியாருக்கு வேறு சில புனைபெயர்களும் இருந்தன? ஒரு ஆங்கில கவிஞனின் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டான். அந்த ஆங்கிலக் கவியின் பெயர் என்ன?

ஷெல்லி.

67. பாரதியார் காலமான நாள் எது? எந்த ஊரில், என்ன காரணத்தால் இறந்தார்?

11 செப்டம்பர் 1921. சென்னை திருவல்லிக்கேணியில், வயிற்றுக் கடுப்பு நோயினால். (யானை தூக்கி எறிந்து மாண்டார் என்ற தவறான செய்தி தரப்படுகிறது. திருவல்லிக்கேணி கோயில் யானை அவரைத் தன் துதிக்கையால் தள்ளிவிட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறி, வேலைக்கும் சென்றார். ஈரோடு சென்று அங்கு "சாகாதிருப்பது எப்படி?" என்று ஒரு சொற்பொழிவும் நிகழ்த்திவிட்டு வந்தார். பின்னர் வயிற்றுக் கடுப்பு நோய் வந்து காலமானார்.)

68. பாரதியார் பிறந்த தினம் எது? பெற்றோர் பெயர் என்ன?

11 டிசம்பர் 1882. எட்டையபுரம். சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள்.

69. பாரதியார் எந்த பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக கைதுசெய்யப்படுவார் என்று புதுச்சேரிக்கு சென்றார்? அந்த பத்திரிகையின் முதலாளி யார்?

"இந்தியா" மண்டையம் திருவேங்கடாச்சாரியார்.

70. பாரதியாருக்கு உறுதுணையாக இருந்து அவரை கைதிலிருந்து தப்பிக்க புதுச்சேரிக்கு ரயில்ஏற்றிவிட்ட வக்கீல் நண்பர் பெயர் என்ன?

துரைசாமி ஐயர். (பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த திரு ஆர்.வெங்கட்டராமன் அவர்களது மாமனார் இவர்)

71. பாரதியாருக்கு புதுச்சேரியில் சில சித்தர்களின் தொடர்பு இருந்தது. அவர்களில் ஏதாவது ஒரு சித்தரின் பெயர் தெரியுமா?

குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்து சித்தர்.











No comments: