பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 4, 2015

11. காமதேனு (தொடர்ச்சி 1)

முஹம்மதுநபி

'பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையேதொழவேண்டும்? என்று முஹம்மது நபி அலகிவஸல்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால்,குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்லவேண்டுமென்று சதிசெய்து கொண்டிருக்கையிலே, அந்த மஹான்மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும்போது பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப் படை துரத்திக்கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்துபோய், 'இனி என்ன செய்வது?' என்று தயங்கினான். அப்போது நபி, ''அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. என்னுடன் இருப்போர் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்லை'' என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடந்தெரியாமல் ஏமாறித் திரும்பினார்கள். முஹம்மது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தாமே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலைநிறுத்திச சென்றார். நம்பிக்கையே காமதேனு: அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
வாசக ஞானம்

வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம்முதலிய லௌகிக விவகாரங்கள எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.
பொதுவாகக் கூறுமிடத்தே. மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம ஸத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்,
''வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே''
என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் பொருள் "வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்" என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்''
என்ற குறளால் உணர்த்துகிறார்.
இதன் பொருள் 'வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்' என்பது
திருஷ்டாந்தமாக, 'ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்மகுணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக்கருதுதல் பிழை' என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்று கேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய "ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.
'விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம் சித்தாந்தம்'என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.
'எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்"என்று கண்ணன் கீதையால்உணர்த்திய உண்மையையும், "எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன்" என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.
''இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ   
வன்சொல் வழங்குவது''
என்ற குறளின்படி, ''இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவதுகண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள வழங்குவது மடமை'' என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.
'மரணம் பாவத்தின் கூலி" என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் "எவரையும் காணவில்லை. ''நாமெல்லோரும் பாவிகள்'' என்பதைப் பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.
இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங்கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.
கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து. தற்கால அஸௌகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக்கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப்போய்விட்டது.
வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள்,உலகத்தீரே! கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.
ஆண் பெண் ஸமத்வமே தர்மமென்று தெரிகிறதா?அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா?  நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா?  நல்லது, வாருங்கள். கோடிக்கணக்காக, ஸமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.
''அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும'' என்று தெரிந்தோமோ?  நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம்.


No comments: