பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 18, 2020

லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 5


லக்ஷ்மி ராமாயணம் --  பாகம் 5

                            ஆறுசெல் படலம்

மந்திரக் கிழவர் வசிட்ட முனியுடன்,
தந்திரத் தலைவரும், நகர மாந்தரும்,
கொற்றவக் குரிசிலை சூழ அமர்ந்து,
‘நாட்டினை ஆண்டிட, முடிசூடிட அழைத்தனர்.       137

‘நஞ்சை உண்க’ என்றது போலே,
நடுக்கமடைந்து சோர்ந்தனன் சொன்னான்.
‘மூவுலகாளவே மூத்தவன் இருக்கையில்
ஈன்றவள் செய்தது பிழையென்றே’                         138

 ‘நன்னெறி இது’வென உரைத்தாலும்,
மன்னுயிர் சுமந்து வாழ்தல் விரும்பேன்.
அன்னதற்குரிய அண்ணலைக் கொணர்ந்து
மண்ணினை ஆண்டிடச் செய்திடுவேன்.                 139

அன்றெனின் அவனுடனே யிருந்து,
அருந்தவம் நானும் இயற்றிடுவேன்.
அதுவும் கை கூடாதாயின்
இனிதின் என்னுயிர் போக்கிடுவே’னென்றான்.      140

அரியணை யேற்று சிறப்புற ஆளினும்
முடியதைத் துறந்ததை அவையோர் வியந்தனர்.
அரசினை மறுத்த பரதனை அமைச்சர்கள்
‘வாழிய நின் புகழெ’ன பாடியே வாழ்த்தினர்.          141

முறைப்படி வேந்தனை அழைத்திடுவேனென
நெறிப்படி முரசினை அறையச் செய்தான்.
அன்னையர் மூவர், அமைச்சர் தொடர்ந்திட,
முனைப்புடன் கிளம்பினர் பரத சத்ருக்னர்.              142
                           கங்கை காண் படலம்
யானை, குதிரை, வீரர்கள் கொண்ட
சேனைக் கடலென பின் தொடர,
புனலொடு பொங்கிடும் கங்கை யாற்றின்
வடகரை யடைந்தான் மரவுரி பரதன்.                      143

பெரும்படையைக் கண்ணுற்றான்
கருமேக நிறமுடைய குகன்! - அவன்
திடுக்கிட்டுத் துணுக்குற்றான்
கடுப்பாகிக் கனலுமிழ்ந்தான்.                                   144

அண்ணலை வதம் செய்திட
வந்தனனோ இவெனென சீறினான்.
‘அப்படை எலிப்படை! அரவம் தானெ’ன
ஆரவரக் குரலெடுத்துக் கூவினான்.                         145

‘அஞ்சன வண்ணனாம் எம்பிரான் இராமனை
முன்னவனென்றும் நினைந்திலன்
வஞ்சகத்தாலே ஆட்சியைக் கொய்தவன்.
என்னைக் கடந்து போவது எங்கனம்?’                     146
   
வில்லெடுத்து நின்ற குன்றனைய குகன் பற்றி
‘சொல்லெ’ன்று பரதன் கேட்க, சுமந்திரன் சொன்னான்.
‘கங்கையிரு கரைகட்கும் தலைவன்,
உங்கள் குலநாயகனின் துணைவனென்று.              147

இராமனுக்குத் தோழனெனில்
தொழுதிடல்தான் மரபென்று
விரைந்து பணிந்த பரதனைப் பார்த்ததும்
குனிந்து வணங்கித் தொழுதான் குகனும்.                148

‘இவ்விடம் எய்தது எதற்கெ’ன்று குகன் வினவிட
‘அவ்விடம் அயோத்தி ஆள்வாரின்றி
அல்லலுறுவதால் அண்ணனை அழைத்து
அரியணை யேற்றிட வந்தேன்’ சொன்னான் பரதன்.149

‘தாயுரை ஏற்று இராச்சியம் பெற்றதைத்
‘தீவினை யென்றே மரவுரி பூண்டனை!
அண்ணலை யழைத்திட கானகம் வந்தனை!
உன்னை ஆயிரம் இராமரும் ஒப்பரோ’புகழ்ந்தான் குகன்.  150

‘கல்லிடை பரப்பிய புல்லெனும் படுக்கையில்
வில்லான் துயில்வதை அறிந்ததும் 
‘எவ்விடம் உள்ளான் எம்பிரான் இராமன்?
அவனடி சேர்ந்திட துடிக்குதென் உள்ளம்’ எனப்பதைத்தான் 151

‘இராமன் இருப்பிடம் காட்டுதற்கென்றே
நாவாய் கொணர்ந்தான் நாயகன் குகனும்.
படகினில் ஏறிய பரிவாரங்கள்
பரத்வாசாஸ்ரமம் அடைந்தனவாம்.                              152

                        திருமுடி சூட்டு படலம்

வினவினராம் முனி,
‘எடுத்த மாமுடி விடுத்ததுடன் நீ
முடித்த வார்சடை தரித்தது ஏன்?’
‘முறைமை நீங்கி முதுநிலம் ஏலேன்.
இறைவனின் சிரம்தனில் சூட்டியே மீள்வேன்’ என்றான். 153

விருந்துணவளித்தார் பரத்வாசர்
விரும்பியே கனிகளை உபசரித்தார்.
விடிந்ததும் சேனை கிளம்பியது.
விலகிய பாலை மருதமாய் மலர்ந்தது.                         154

புரண்ட புழுதியும், எழுந்த இரைச்சலும்,
அகண்ட சேனையின் வரவைச் சொன்னதும்,
கனன்ற சினத்துடன் இளையான் எழுந்தான்.
கனிந்த மனத்துடன் தமையன் தடுத்தான்.                   155

நின்றனன் பரதன் தன்நெடும் படையுடன்.
சென்றனன் முன்னம் சத்ருக்ன தம்பியுடன்
‘வந்தனம்’ என்றனன் விழிநீர் பெருக்குடன்.
விழுந்தனன் தரைமேல் திருவடி பற்றியே’                   156

‘அறந்தனை நினைந்திலை; அருளும் நீத்தினை;
முறைமையும் துறந்தனை; மரவுரி தரித்தனை; - என
முறையிட்டுக் குறை கண்டான் இராமனை
பறைசாற்றி ‘கறை’யென்றான்.                                    157

வாடி மெலிந்த பரதனைத் தன்னுடன்
வாரியணைத்து நீர் சொறிந்த இராமனும்.
வலிய புஜம் கொண்ட மாமன்னர்
‘வலியரோ?’ வென வினவினான்.                               158

‘நின் பிரிவின்னும் பிணியாலும்
கரியவளின் வரமென்னும் எமனாலும்,
இறந்துபோனார்’ என்ற சொல்லால்
இடி தாக்கிய அரவமாய் பொருமினான்.                      159

தேற்றினார் வசிட்டர்.
மறைகளுக்கெல்லாம் வரம்பானவனே!
பிறத்தலும், இறத்தலும் இயற்கையென்பதை
மறந்தனையோ நீ?’ எனச் சொல்லி இராமனை
இறுதிக்காரியம் இயற்றுவித்தார்.                                160

                         இராமபிரான் பரதனை வினவுதல்

வந்திருந்த அன்னையர்கள் திருவடியில்
வணங்கியெழுந்த பின் பரதனிடம்
‘மன்னரின் ஆணையால் மகுடம் நின்னதே!
மரவுரி தரித்து ஏன் நீ வந்ததே?’ வினவினான்.            161

                         பரதன் வேண்டினான்;

‘பாவிக்கு மகவான பாவியானேன்.
சாகவும், தவமேற்கவும் தகுதியில்லை.
முடிசூடவும், அரசாளவும் பொருத்தமில்லை.               162
திரும்பி நீ வந்து அரசனாய் உருமாறு’

                         மறுத்தான் இனியான்: 

‘பெற்றோர் ஆணையைத் தட்டுதல் சரியா?
மற்றவர் என்னைத் தூற்றுதல் முறையா?
இம்மையில் பொய்யுரை புனைந்தேனென்று
மறுமையில் நரகத்தில் உழல்வது விதியா?                  163

"தரணியை ஆள்வது பரதனே" என்று
தலைவன் சொன்னதை நீ ஏற்பாய்!
தலைமுடி தாங்கியே அரசாண்டு,
நலமுடன் வாழ்ந்திடு பதினான்காண்டு!                       164

மன்னன் இருக்கையில் மகுடம் ஈந்ததும்
மறுப்பதற்கஞ்சியே ஒப்புதல் தந்தேன்.
கானகம் சென்றிட அவர் இட்ட
கட்டளை ஏற்பதும் சரிதானே?’ புரியவைத்தான்.         165

பரதனே!
‘நாட்டின் மகுடம் தரித்துடு நீ’யென
வசிட்ட மாமுனி இசைபட சொன்னதும்,
‘ஆள்பவர் ஆள்க! ஆட்சேபணை யில்லை.
வாழ்வேன் இனிமேல் காட்டினிலெ’ன்றான்.                166

‘ஆண்டுகள் பதினான்கும் ஆன பிற்பாடு
மீண்டு நான் வருவேன்! அதுவரையில்
அரியணை அமர்ந்து நீ அரசாள்வாய்.
பொறுப்புடன் குடிகளின் குறை தீர்ப்பாய்’ இராமன் சொன்னான்.    167

‘பெரியோய்!
நின் அடித்தலம் இரண்டையும் தலைமேலே
முடித்தலமாகவே சூடிக்கொள்வேன்.
முறைப்படி குறிப்பிட்ட நாட்கடந்தால்- நான்
இறப்பது உறுதி’ யென புறப்பட்டான்.                         168

பாதுகைத் தலையோடு புக்கிலன் அயோத்தியுள்
மாதவத்தோருடன் நுழைந்தான் நந்திகிராமத்துள்.
தம்பியும், தையலும், பின் தொடர்ந்து வந்திருக்க,
தென்திசையில் பயணித்தான் அந்தமிலான்.                  169

(அடுத்து ஆரண்ய காண்டம் தொடரும்.........)

லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 4


லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 4

                                  இராமன் கூற்று

‘அன்புடன் கொணர்ந்த பொருட்களெல்லாம்
அமுதினும் அரிதே என்றறிவேன்.
எமையொத்த முனிவர்க்கும் உரியன. - அவற்றை
யாமும் இனிதின் உண்டனம்’ என்றான். – பின்           109

‘பொங்கிடும் கங்கையை யாம் நாளைப்
பொழுதினில் கடந்திட இருப்பதினால்
இரவினைக் கழித்திடு நின் கிளையோடு.
விடியலில் வந்திடு படகோடு’ யென்றான்.                   110

‘இங்ஙனம் உன்னைப் பார்த்தபின் கண்ணை
எவ்விதம் நானும் அகற்றிடுவேன்?’ என்ன
‘இருத்தி’யென்றதும் ‘துடி’யுடன் குகனும்
துடிப்புடன் காவல் இருக்கலானான்.                           111

நாணலில் துயின்றனர் நாயகன், நாயகி
நற்காவலிலிருந்தான் இமைத்திடா தம்பி.
கதிரவன் உதித்தான் கதிர்களைப் பரப்பி,
கமலமும் விரிந்தது மனதினால் விரும்பி.                      112

‘கொணருதி நாவாய் சடுதியில்’ என்றான்
‘இனிதிரு எம்மொடு’ குகன் சொன்னான்.
‘மீண்டு வருகையில் இருப்போம்’ என்றே,
ஏறினர் மூவரும் ஓடத்தின் மீதே!                                  113

கரையேறினர் மூவரும்! கண்கலங்கினான் குகனும்!
‘பிரியிலேன் நானும்மை, உடனிருந்து உதவிடணும்’ என்றான்
‘அன்புள நால்வர் இன்று ஐவரானோம் – இனிமேல்
உன்கிளை, என்கிளை, இனிது கா’வென்றான் இராமன். 114

                        வனம் புகு படலம்

சிங்கமும், களிரும் குட்டியும், கன்றுமாய்
அங்கங்கே நடைபயின்று அலைந்திருந்த
அடர்காட்டின் இடை புகுந்த மூவரும்
அடைந்தனராம் பரத்வா சாஸ்ரமம்.                            115

அங்கே
சிரமப் பரிகாரம் செய்த பின்னர்,
சித்திர கூடம் புறப்பட்டனர்.
எதிர்ப்பட்ட பாலையொன்று மருதமாகி,
குளிரூட்டி மகிழ்வித்தது சூடுபோக்கி.                         116

சித்திரக் கூடத்தை அடைந்தனர் மூவரும்.
கண்களை மூடியே கடவுளை வேண்டினர்.
இளவல் அமைத்தான் பர்ணசாலையை! – அண்ணன்
உள்ளம் உருகிட அணைத்தான் தம்பியை!                 117

‘மன்னவன் ஆணையைப் பேணிடும் பொருட்டு,
மரவுரி தரித்து நான் கானகம் வந்தேன்.
இடருனக் கிழைத்தது சரியல்ல!’ – நீ
இன்னல்கள் சகிப்பது முறையுமல்ல!’ கலங்கினான்.  118

‘ஐயனே!
நின் தொண்டு இன்பமே தந்திடும் எனக்கு.
துன்பம் தருவதும் ஒன்றுணடு - நீ
முன்னம் பிறந்தவன் என்பதினாலே
மண்ணைத் துறந்திட நேர்ந்ததே!’ யென்றான்.            119

அணைத்துத் தேற்றினான் தம்பியை!
அமர்ந்து நேற்றான் நோன்பினை! – அங்கோ
தலைவனிழந்த அயோத்தி மாநகரம்
தாயிழந்த கன்றுபோல் கதறி யழுதது.                         120

                         பள்ளிப்படை படலம்

‘அவசரக் காரியம் இயற்றுதற் கெனவே
அவசியம் புறப்பட்டு வருக’ வென்றே
முத்திரை பதித்த ஓலையைத் தூதரும்
பத்திரமாகவே பரதனுக் கீந்தனர்.                               121


தொழுதான் பரதன் தம் பாட்டனைத்தாம்
‘எழுக சேனை’ என்றுரைத்தான்.
தழுவும் சத்ருக்ன தம்பியும் தானுமாய்
பொழுதுடன் தேரினில் புறப்பட்டான்.                       122
                  
                    கோசலத்தின் அவல நிலை

பொலிவிழந்த கோசலத்தைக் கண்டதுமே
நலிவுற்ற பரதனோ கலக்க முற்றான்.
பெருந்தீங்கு நிகழ்ந்ததோவென அச்சத்துடன்
பெருந்துயரின் பிடியினிலே அகப்பட்டான்.               123

அரண்மனை யடைந்ததும் விரைந்தான் தந்தையிடம்.
நல்லிடம் எங்கினும் கண்டிலன்; குழம்பினான்.
கேகயி அன்னை அணைத்தாள் தன் மகனை.
கேகய நாட்டின் நலத்தை வினவினாள்.                     124

சுருங்கச் சொன்னான் ‘நலமென்று’
அறிய விழைந்தான் ‘கோ எங்கென்று?’
‘வானகம் எய்தினன்’ என்றவள் கூறிட,
பேரிடி தாக்கிட வேரற்று வீழ்ந்தான்.                         125

‘இராமனைக் கண்டேனும் துயர் தணிவோம்’ என்ன
‘இனிதுள்ளான் கானகத்தில் தவசியாய்
இளவலோடும், துணைவியோடும்’ என்றாள்.
நெருப்புண்டது போல் துடித்துப் போனான்.              126

வனத்தினுள் தமையன் சென்றது, தந்தை
விண்ணுலகு எய்தற்கு முன்போ, பின்போ,
எதனாலோ, யாராலோ என்பது போல்
விதவிதமாய் கேள்விகளை அடுக்கலானான்.             127

                 கைகேயி நிகழ்ந்ததைக் கூறுதல்

உள்ளது உள்ளபடி கூறலானாள் கைகேயி.
நல்லது ஒன்றுமே இல்லாமைக் கண்டவன்
கரங்களால் காதுகளை மூடினான்.
கண்களால் உதிரத்தை உமிழ்ந்தான்                          128

‘பூண்டனென் தமையன் திருத்தவக்கோலம்
மாண்டனென் தந்தை நீயேதான் காரணம்.
தாயென உனை நான் கருதுதலே பாவம்.
உடந்தையாய் இருப்பேன் என்றதே என் கோபம்’      129

                கோசலையின் இருப்பிடம் செல்லுதல்

விரைந்து சென்றான் கோசலையின் இருப்பிடம்.
விசும்பிப் பற்றினான் அவளின் மலர்க்கரம்.
‘கேகயர் கோமகள் இழைத்த கைதவம்
அறிந்திலன் போலும் நீ” வினவினாள்.                       130

"எனையீன்றவள் வினை செய்து
எனக்கீந்த இவ்வரசை ஏலேன் நானெ"ன்றான்.
"நானிலத்தில் நிகழ்ந்திட்ட பாவத்தால்
நரகத்துள் போவேன் நானெ"ன்றான்.                         131

தூய வாசகம் கூறிய தோன்றலை
ஆரத் தழுவினாள் கண்ணீர் பெருகிட.
‘மன்னர் மன்னவா’ விளித்துச் சொன்னாள்,
உன்னை நிகர்த்த தன்மையார் யாருள்ளார்?’.             132
                
                      தசரதனது உடலைக் காணுதல்

மண்மேல் விழுந்து தந்தையைத் தழுவினான்.
கண்ணீர் சொறிந்து அவருடலைக் கழுவினான்.
‘இறுதிக் காரியம் இயற்றுதற்கு வருக’ வென்று
பரதனை வேதியர் அழைத்ததும் வசிட்டர்,                  133

‘மகனல்லன் நீ’யென்று மருகினார் நின் தந்தை
தேர்ந்தலன் நீ ஈமச்சடங்கினை இயற்றுதற்கு’ என்றபடி
ஆகம முறைப்படி ஆகவேண்டியதை
முற்றுவித்தார் சத்ருக்ன மகன் கொண்டு.                    134

அரற்றினான் பரதன்
‘பிரேத பூசனை செய்வதற்கே
பேறு அற்றவன் ஆனேனே!
அரசாட்சி செய்திட நானென்றும்
உரிமையுள்ளவன் ஆவேனோ?’.                                135

தாமரை மலர்செறி தடாகத்துள்ளே
தாவிப் பாய்ந்திடும் மயில்களைப் போலே
அறுபதினாயிரம் அரண்மனை தேவியர்
எரியில் புகுந்தனர் மகிழ்ச்சியினோடே!                      136


தொடரும்............

லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 3



லக்ஷ்மி ராமாயணம் --  பகுதி 3


                   தசரதன் தன் சாப வரலாற்றைக் கூறுதல்

முன்பொருநாள்,
யானைகளை வேட்டை யாட,
சுனையோரம் மறைந்திருந்தேன்.
நீரருந்தும் யானையொலி காதில் விழ
‘சப்தபேதி பாண’ மெய்தேன்.                                              69

அலறியதோர் மனிதக் குரல் கேட்டு,
அஞ்சி நடுங்கி அவ்விடம் வந்தேன்.
பார்வையிழந்த முனிதம்பதியின் மகனொருவன்,
நீர்மொண்ட ஒலியென்று நானுணர்ந்தேன்.                         70

உயிரொடுங்கும் நிலையிருந்த அக்குமரன்
தவித்திருக்கும் பெற்றோர்தம் நீர்வேட்கை
தணித்திட வேண்டுமென கரம்கூப்பி வேண்டினான்.
கணத்துக்குள் கண்மூடி விண்ணுலக மேகினான்.. –             71

மகனைச் சுமந்தபடி நீரெடுத்து நான் வந்தேன்.
அடியோசை கேட்டவர்கள் ஆவலுடன் அளவளாவ,
‘அறியாப் பிழையினால் மகனைக் கொன்ற
கொற்றவன் நானினி உன் மக’னென்றேன்.                         72

நீரெடுத்து வந்தவன் தம் மகனல்லன்
‘மகனைக் கொன்ற பாதகன்’ என்றறிந்து
‘ஏவா மகவைப் பிரிந்து எம்போல்
போவாய் நீயும் விண்ணுலகெ’ன சபித்தார்.                          73

‘விழிபோயிற்றே!’ யென வீழ்ந் தயர்ந்தார்.
‘மகவை இழந்து இறப்பாய்’ என்னாது
‘மகவைப் பிரிந்து’ என்றதே கடிதன்று.
இராமன் பிரிய நான் இறப்பதுறுதி’யென்றார் தசரதன்.        74

                 வசிட்ட முனிவன் அரசவையில் கூறுதல்

காத்திருந்த அவை முன்னே வசிட்டமுனி
கைகேயி வரம் பற்றி கூறலானார்.
வாய்மையுடை பெரியோனுரை கேட்டதுமே
விதியெண்ணி அனைவருமே கலக்கமுற்றார்.                        75             

                      இலக்குவனது போர்க்கோலம்

‘மணிமகுடம் தமையனது தலை மீது,
அணிவிப்பேன் தடை களைந்து!’ யென்றபடி,
பேரிடியாய் முழக்கமிட்டுப் புறப்பட்டான்.
போர்க்கோலம் பூண்ட இளையான் இலக்குவன்.                   76

                         இராமபிரான் நல்லுரை

‘மதியின் பிழையோ, மகனின் பிழையோ அன்று!
விதியின் பிழைதான் இங்கனம் நிகழ்ந்தது. - நீ
வெகுண்டு, பயனில்லை’ யெனச்சொல்லி, அவன்
சீற்றத்தை மாற்றிட முயற்சித்தான் இராமன்.                           77                  

சினம் தணிந்த இலக் குவனை
இனிது இறுக்கித் தழுவினான். – பின்
சுமித்ரைத்தாயை தரிசனம் செய்ய
தம்பியும், தானுமாய் புறப்பட்டான்.                                        78

கண்களை ஒத்தத் தன்னிரு மகன்களும்,
*தண்டாவனம்வரை செல்வதை யெண்ணி,     
தளர்ந்து வருந்திய அன்னையைத் தொழுது,
‘மீள்வோம்! நீ கலங்கா திரு’ யென்றான்.                                 79

 இலக்குவன் அன்னைபால் தமையனுடன் செல்ல விடை கேட்டல்

அன்னையின் திருவடி வணங்கிய இலக்குவன்
“உடன் சென்றிடுவாய் மகனே’ யென
உடன்பட்டு சொல்லிடு தாயே! எனக்கோர,
‘உடனே புறப்படு நீயென்றாள் உளமாற ‘                              80

மறுத்துப் பார்த்தான் இராம பிரான்
மரவுரி தானும் தரித்தான் இளையான்.
குமரர்கள் கோலத்தைக் கண்ணுற்ற தேவர்கள்
குமுறிய நெஞ்சுடன் குழம்பித் தவித்தனர்.                               81

                    பிராட்டி இராமனிடம் வினவுதல் 

சீதையின் அரண்மனை யடைந்தனர் இருவரும்.
நிகழ்ந்தது அறிந்திடா தேவியோ அதிர்ந்தனள்.
நேர்ந்தது யாதென வினவியே வியர்த்தனள்.
தந்தையின் ஆணையை கேட்டதும் வியந்தனள்.                     82

            பிராட்டி கூறுதலும் இராமனின் மறுமொழியும்

‘மன்னரின் கூற்றினைப் படிவது முறையே!
என்னையும் கூட்டிச் செல்வது சரியே!’ என்ன
‘கானகம் கொடிய அரக்கரின் இருப்பிடம்
கால்களும் சுட்டுப் பொசுக்கிடும்’ என்றான்.                             83

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடெ’ன
நினைத்தவள், நுழைந்தாள் அந்தப் புரத்தினுள்!
துணிந்து புனைந்தாள் மரவுரி அணிகளை
பணிந்து பற்றினாள் கணவனின் கரங்களை!                            84

மரவுரி தரித்த திருமகள் பின்செல,
விற்கை வீரனாம் இளையவன் முன்செல,
கார்வண்ண இராமன் கானகம் செல்வதைக்
கண்டவர்  துன்பத்தை, எவ்விதம் சொல்ல!                               85

                          தைலமாட்டுப் படலம்

செம்பொன் தேரேறிப் புறப்பட்ட மூவரையும்,
கண்ணீர் பெருக்கோடு கண்டனர் அனைவரும்.
அன்புப் பிராவாகத்தில் ஆட்கொண்ட குடிமக்கள்.
பின்தொடர்ந்து நடந்திட உண்டானதோ பெரும்திரள்.             86

                    இராமபிரான் சுமந்திரனிடம் கூறுதல்

நள்ளிரவு நேரத்தில் சோலையொன்றை அடைந்தனர்.
கள்ளமற்ற நகரமாந்தர் கண்ணயர்ந்து உறங்கினர்.
உறக்கமின்றி தவித்தபடி விழித்திருந்த இராமபிரான்
உரையாடத் தொடங்கினார் சுமந்திரனெனும் அமைச்சரிடம்.   87

 ‘உம்மால் செயத்தக்க செயலொன்று உள.
எம்பால் அன்புகொண்டு எனைத்தொடர்வார் பலர்!
பூண்டபேர் அன்பினாரை அனுப்புவது எளிதன்று.
உடனழைத்துச் செல்லுவதும் முறையன்று.                              88

 வேண்டுவது யாதெனில், இவர் விழிப்பதற்குள்
தூண்டிடணும் வெறும்தேரை நகர்நோக்கி,
சென்றிடுவோம் அவ்வமையம் வனம் நோக்கி!
தேர்ச்சுவட்டால் இவர் மீள்வார் நகர்நோக்கி’ யென்றான்.        89

 ‘மன்னவர்க்கும், அத்தையர்க்கும் அன்பு சொல்லி,
மலரினையும், கிளியினையும் பேணிடெ’ன்று
திண்தேர் வல்லான் சுமந்திரன் நோக்கி
கண்ணீர் பெருகிட மொழிந்தாள் பிராட்டி.                                90

திருவடி வீழ்ந்து எழுந்தான் சுமந்திரன்.
‘அரசர்க்கும் அன்னையர்க்கும் சேதி யாதெ’ன
பெருகிய துயருடன் இலக்குவன் நோக்கி,
கனத்த மனத்துடன் வினவியே நின்றான்.                                 91

                  இலக்குவன் சினந்து கூறல்

‘வனத்துக்குள் தன்மகனை அனுப்பிவிட்டும்,
வானகமே சென்றிடா வலிமையுடை அரச’ரென
சினந்து சிவந்த தம்பியை அணைத்துத்
தணித்தான் சினத்தினை தமையன் இராமன். - பின்                  92

விரைந்தனர் மூவரும் கானகத் துள்ளே!
நுழைந்தது தேரொலி அயோத்தியி னுள்ளே!
திரும்பி வந்தனனோ வில் வீரனென
வீறுகொண்டெழுந்த தசரதன் மாண்டுபோனான்.                     93

                      கோசலையின் நிலை

‘பூத்துக் காய்த்த பின் மடிந்திடும்
மூங்கிலும், வாழையும் போலே,
மூப்போ, போரோ, நோயோ யின்றி
இறந்தாரே!’ யெனப் புலம்பினாள் கோசலை.                           94

 மயிற் கூட்டமென மன்னனைச் சூழ்ந்தனர்
அறுபதினாயிரம் அரண்மனை தேவியர்.
சேதிகேட்டு ஓடிவந்த மாமுனிவர் வசிட்டரும்
விதிசெய்த வினையெண்ணி வருத்தமுற்றார்.                           95

       
           வசிட்டன் தசரதன் உடலைத் தைலத்தில் இடுவித்தல்

இறுதிக் காரியம் இயற்றுவதற்கு,
உரியவர் எவரும் அருகிலில்லை.
பரதன் வரும்வரை இவ்வுடலை
பத்திரப் படுத்திட தைலத்தி லிட்டார்.                                        96

 பட்டத்துத் தேவியர் இருவரது
துக்கத்தை எவ்விதம் தாம் உரைப்பது?
திக்பிரமை பீடித்த அவர் மனதை
மாற்றிடத்தான் எங்கனம் நாம் முனைவது?                               97

                       பரதனுக்கு ஓலை போக்கல்

பாட்டனார் வீட்டிருந்த பரதனைக்
கூட்டிவர பணித்தனர் தூதனை! - அவன்
வருமளவும் நகரத்தைக் காக்கவென்று
கதிரவனும்  விரித்துதித்தான் தன் கதிர்களை.                           98

                                 கங்கைப் படலம்

சோலையிலே கண்ணயர்ந்த குடி மக்கள்
காலையிலே கண்விழித்துக் கலக்க முற்றனர்.
மூவரையும் எவ்விடமும் தேடிப் பார்த்தனர்.
தேர்தடத்தைப் பின்பற்றித் திரும்பிப் போயினர்.                      99

தம்பியும், துணைவியும் பின் தொடர,
அன்னம் துயிலும் நந்த வனத்தையும்,
பொன்னைக் கொழித்திடும் நதிகளையும் - இராமன்
தாண்டியபடியே கங்கையை அடைந்தான்.                             100

பொங்கும் கங்கைக் கரைதனிலே,
தங்கியபடி தவம் செய்துவரும்,
முனிவர்கள் எதிர்கொண்டார் மூவரையும் – பின்னர்
இலையுண வளித்தே இன்புற்றார்.                                          101

                             குகப்படலம்

 இராமன் இருந்த குடிலின் வாயிலை குகன் அடைதல்

ஓடங்களின் நாயகன்; வேடர்குல வீரியன்;
இடையினிலே ‘துடி’யென்னும் பறை உடையான்;
‘இடி’யனைய குணமுடையான்;
இருள் கவிந்த நிறமுடைய ‘குகனெ’ன்பான்.,                           102

 தீரனாம் இராமனின் காவியம் அறிந்தவன்
தரிசனம் செய்திட வேட்கையும் கொண்டவன்.
கானகம் எய்திய இராமனை இவ்விடம்
கண்டிட கருத்தாய் உறுதியும் பூண்டவன்.                               103

 நித்தம் உண்ணும் ஊன், மீன், கள்ளின்
நாற்றம் வீசிடும் நல்லான் இன்று
சீற்றம் துறந்து, குறுவாள் தவிர்த்து,
நற்றவ சாலையின் வாயிலை யடைந்தான்.                             104

இலக்குவன் வினவினான், ‘யாரெ’ன்று.
விளக்கினான் குகனும் இன்னாரென்று.
உள்ளத்தூயவன், நல்லவன் இவனென்று
உள்ளே இளவல் அழைத்து வந்தான்.                                      105

அண்ணலைக் கண்களால் கண்டதும் கனிந்தான்.
மண்ணுறக் குனிந்து, வாய்ப்பிளந்து பணிந்தான்.
ஒருக்கை நீட்டியே புன்னகை புரிந்தே
‘இருக்கையில் இருத்தி’ சுட்டினான் இராமன்.                          106

.இருந்திலன் குகனோ அன்புப் பெருக்குடன்
திருத்திக் கொணர்ந்த தேனையும், மீனையும்,
கருத்தாய் படைத்தான் நாயகன் எதிரினில்
‘திருவுளம் கனிந்து ஏற்பீர்’ என்றான்.                                       107

நீள்பெரும் உலகின் நீள அகலமாய்
ஆழ் கடல் மூழ்கி மீனையெடுத்தவன்.
ஆகாயம் தொடும் சிகரத்தினின்று
பாங்காய் தேனையும் எடுத்து வந்தான்.                                   108


(இதன் அடுத்த பகுதி தொடர்ந்து வரும்)