பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 28, 2015

76. சமூகம் - மதிப்பு


                   நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமை ஏற்படுகிறது. அங்ஙனம் தீர்மானிக்கப்பட்ட நாயகர்கள் பத்துப்பேர் சேர்ந்து தமக்குள்ளே ஒரு தலைவனை நியமித்துக் கொண்டால், அந்தத் தலைவனுடையசொல்லை தேசத்தார் அனைவரும் மதிக்கும்படி நேரிடும்.

                 கூட்டத்திற்கு வலிமையுண்டு. இது ஹிந்துக்களுக்குக் கூடத் தெரிந்த விஷயம்.    ஒரு பெரிய கூட்டத்தின் தலைவனுக்கு மதிப்புண்டு என்பதை ஹிந்துக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். என்றாலும், புதிது புதிதாகக் கூட்டம் சேர்க்கும் யுக்தி ஹிந்துக்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும் அதனால் புதிய அனுகூலங்களும் பெறுகின்றான். பிச்சைக்காரர் கூடத் தனித்தனியே பிச்சையெடுப்பதைக் காட்டிலும் நூறுபேர் கூட்டங் கூடிப்பிச்சைக்குப் போனால் அதற்கு மதிப்பு மிகுதியுண்டு.

               ஹிந்துக்களை உலகத்தார் பாமர அநாகரீக முக்காற்காட்டு ஜனங்கள் என்று நினைக்கும்படி நாம் இதுவரை இடங்கொடுத்து விட்டோம்.

             இந்தியாவை வெளி யுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள் பல.

            முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும்ஐரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மதவிஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மை படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்திரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை யெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

                  இரண்டாவது, அந்நிய தேசப் பண்டிதர்ச ரித்திரக்காரர் முதலானவர்கள். ஹிந்துக்களை அன்னிய தேசத்தார் போர் செய்யும் தந்திரத்தாலும் வென்று ஹிந்துக்களின் மீது அன்னிய ராஜ்யம் நடைபெற்று வருவதை யொட்டி, வெளிதேசத்துச் சரித்திரக்காரர் நமதுநாட்டு வீரம் ஒற்றுமை முதலிய குணங்களையும் நமதுபொது அறிவையும் மிகவும் இழந்த நிலைமையிலே இருப்பதாகக் காட்டுதல் வழக்கமாக நடைபெற்று வந்திருக்கிறது.

                நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப்படுத்தி மதிப்பில்லாமல் செய்துவிட்ட புறக்கருவிகள் பல. அவற்றை விரிவாக எழுத வேண்டுமானால் தனிப் புத்தகம் போடவேண்டும்.

             ''போனது போகட்டும், இனிமேலாயினும் புத்தியாய் பிழை மனமே" என்று ஒரு பண்டாரப்பாட்டு உண்டு. அது போலே, நடந்ததெல்லாம் நடந்து போய்விட்டது. இனிமேலாயினும், ஹிந்துக்கள் தம்மை மதிப்புடையோராகச் செய்து கொள்ள வழிதேட வேண்டும். வெளி தேசங்களில் நமக்கு மதிப்பு உண்டாக்க வேண்டுமானால், அதற்கு மூலம் இங்கே வலிமை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இங்ஙனம் வலிமை சேகரிப்பதற்கு கூட்டம் ஒன்றே உபாயம் என்பதை இந்த வியாசத்தின் தொடக்கத்திலே சொன்னோம். நம்முடைய ராஜரீக நிலைமையைச் சீர்திருத்துவதற்குப் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள் மேன்மேலும் வளர்ந்து வெற்றிபெற வேண்டுமானால், அதற்குக் கூட்டங்களை அதிகப்படுத்துவதே வழி. கூட்டங்கள் கூடி யோசனை பண்ணுகிற விஷயம் கைகூடும். ஓயாமல் கூட்டங்கள் சேர்த்து திரும்பத் திரும்ப உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாகக் கைகூடும். நமது ராஜாங்கக் கூட்டங்களில் இதுவரை சரியானபடி சக்தி ஏற்படாத காரணம் யாதெனில், இந்தக் கூட்டங்களில் உண்மையாகவே தேசத்துக்கு அனுகூலம் செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மிகச் சிலராகவேஇருந்தனர். தேச பாஷைகளிலே பேசுவது கிடையாது. அதாவது, பொய் அதிகப்பட்டுத் தலைதூக்கி நின்றது. இப்போது நாட்டில் உண்மையான தேசாபிமானிகள் தொகைஅதிகப்பட்டிருக்கிறது. தேச பாஷைப் பேச்சு வழக்கப்பட்டு வருகிறது. ராஜ்ய விஷயங்களுக்கு மாத்திரம் நான் பேசவில்லை. நான் பொதுப்படையாகச் சொல்லுகிறேன். எவ்விதமான வலிமைக்கும் கூட்டம் ஆதாரம். சபை சேர்ந்து பேசினால் மாத்திரம் போதாது. எப்போதுமே எங்கும் நம்மில் ஒவ்வொருவரும் நாம் இன்ன பெருங்கூட்டத்தைச் சேர்த்திருக்கிறோம் என்பதையும் நமது வாழ்க்கையின் நோக்கம் இன்னதென்பதையும் மறவாதிருக்க வழி தேடவேண்டும்.

   இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பியதேசங்களில், கோடானு கோடியாக மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுதுமே ஒரு ஸைன்யம் போல ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சிலதலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை,ஸமாதானக்காரன் இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரேகூட்டமாகச் செய்து,  சண்டைக்கன்று, ஸமாதானமாக மனிதன் ஸாதனை செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றும் பொருட்டாக, உபயோகப்படுத்த வேண்டுமென்பது என்னுடையநோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மற்ற ஹிந்துக்களின் உதவி வேண்டும். தெய்வபலம் வேண்டும். இவ்விரண்டும் கைகூடும்.

இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம்போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிடவேண்டும் இதற்குரிய உபாயங்களை சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.


No comments: