பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 7, 2018

திரிபுரத்து அவதாரம்: 2


“சக்திமைந்தன்” சிறுகதை.
        திரிபுரத்து அவதாரம்: 2
      திரிபுரத்துக்கு ஒரு புது வரவு ராமச்சந்திர ஐயர். அவருக்கு ஒரே மகன். HMT யில் பெரிய உத்தியோகம். இரண்டு பேத்திகள், ஒரு பேரன். பேரப் பிள்ளைகள் தாத்தா பாட்டியோடு கிராமத்தில் வாழ்ந்தார்கள். தாத்தா ராமச்சந்திர ஐயர் பேரப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.  திறந்த மேனி, மார்புக்குக் குறுக்காக முப்புரிநூல். நெற்றியில் பால் நிற வெண்ணீறு, மடித்துக் கட்டிய வேட்டி. பாட்டியோ கசங்கிய வெண்பட்டு முகம். நெற்றி நிறைய குங்குமம், மடிசார் கட்டு இத்யாதிகளுடன் வணக்கத்துக்குரிய தோற்றம்.

      ராமச்சந்திர ஐயருக்கு விரிந்து பரந்த விவசாய ஞானம். பசுக்களைப் பேணுவதில் அலாதி ஈடுபாடு. வீட்டில் எப்போதும் பால், தயிர், வெண்ணெய், நெய் என்று பேரப் பிள்ளைகளைப் போஷித்தார். பேரப் பிள்ளைகளுக்கு மனிதாபிமானத்தை விடவும் மிருகாபிமானம் கூடுதல். அதாவது தாத்தா பாட்டியை விடவும் நாய், பூனைகளிடம் அன்பு அதிகம்.

      ஐயருக்கு நல்ல ஆங்கிலப் புலமையோடு, ஷார்ட் ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்திலும் வல்லமை இருந்தது. அதனால் பள்ளியிறுதி முடித்த இரு பாலரையும் தன் வீட்டிற்குத் தருவித்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதற்குப் பணம் பெற்றுக் கொள்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. இவரின் மாணவர்கள் பலர் நல்ல உத்யோகம் பெற்றதென்னவோ உண்மை. இதனால் இவர் ஷார்ட் ஹேண்ட் தாத்தா எனவும் அழைக்கப்பெற்றார். என்றாலும் மிகுதியிலும் அவர் அழைக்கப்பட்டது ‘மாட்டு மாமா’ அல்லது ‘மாட்டுத் தாத்தா’ என்றுதான். சமூகம் யாரையும் கொச்சைப் படுத்துவதில் ஆர்வம் உள்ளது அல்லவா?

      பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மேற்படிப்பு, உத்தியோகம் என்று கிராமத்தை விட்டு நீங்கி விட்டனர். தாத்தா பாட்டி தனியர் ஆனார்கள்.

      கொஞ்சம் கொஞ்சமாகப் பாட்டியின் உடல் நிலை பாதித்தது. அவர் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார். “இப்ப முடிஞ்சுட்டாக்கூட எடுத்தெறிஞ்சுடுவேன்” என்று உரக்கப் பேசுவார். இதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய யதார்த்தம் என்பதா? அல்லது மனைவியின் மரணம் தன்னை பாதிக்காது என்பதா? எப்படியோ புண்ணியவது ஒருவழியாகப் போய்ச்சேர்ந்தாள். மாட்டு மாமா தனியர் ஆனார்.

      மாமாவுக்கு ஒரு கரண்டி குழம்பில் அத்தனை முழுமை. வக்கணையாகச் சமைப்பார். ஒரு சின்ன ஈஸி சேரில் வாசலில் சாய்ந்து கிடப்பார். பாதி உடம்பு பூமியில் இருக்கும். நல்ல சாத்திரப் பயிற்சியும் உண்டு போல. “த பார்! யமன் வந்தால் இந்தா! எடுத்துக்கோன்னு உயிரை ஒப்படைப்பேன்” என்பார். எமவாதனை என்பது மரணத்தை ஏற்காதவர்களுக்குத்தான். மரணத்தை ஏற்பவர்களுக்கு எமவாதனை எனப்படுகிற ஜீவ மரண போராட்டமில்லை. இதைத்தான் அனாயச மரணம் என்று இந்து மதம் குறிப்பிடுகிறது. பெருமக்களின் மரணத்தை “அவர் உடலை உகுத்தார்” என்பது ஆன்மீக உலகில் சகஜம்.

      நல்ல சுறுசுறுப்பாக இருந்தாலும் உடல் தளர்ந்து வந்தது. அமர்ந்தால் யாராவது கையைப் பிடித்து இழுத்து எழுப்ப வேண்டும். சமயத்தில் ஊர்ப் பெண்கள் புடைசூழ இல்லம் மீள்வார். திரிபுரத்து பார்ப்பனச் சேரியில் யார் இறந்தாலும் உடனடியாக (எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு) அபர காரியம் முடிக்க வேண்டும். இந்தச் சமூகக் கட்டின் விளைவாக கோவில் கதவுகள் மூடப்பட்டு இறை ஆராதனை நின்றுவிடும். அறங்களில் மேம்பட்ட அறமாகக் கருதப் படுகிற சம்ஸ்கார காரியத்தில் எல்லோரும் ஈடுபட வேண்டும். அதன் பின்னரே அவரவர் நித்ய கர்மானுஷ்டங்கள், குளியல், இறை வழிபாடு, உணவு உண்ணல் என்பவை. சம்ஸ்காரம் முடியாமல் உண்ண மாட்டார்கள்.

      காலப் போக்கில் இந்நிலை மாறியது. மகன் வரவேண்டும், மகள் வர வேண்டும் என்று சம்ஸ்காரத்தைத் தாமதப் படுத்தத் தொடங்கினர்.  அப்படியொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் ராமச்சந்திர ஐயர் சொன்னார், “த பார்! உடம்பு மூணே முக்கால் நாழிக்குத்தான் கெடாது. ப்ரேத சம்ஸ்காரங்கிறது ஒரு யக்ஞம். ஹோம குண்டத்திலே போடற புஷ்பம் முதலான த்ரவ்யங்கள், அழுகி வாடி இப்பிடியா போடறது? ஹோமத்துல போடப்படற த்ர்வியங்கள் ஈஸ்வரார்ப்பணம் ஆறது. அது போலத்தான் மனுஷாளோடு ப்ரேதம் ஈஸ்வரார்ப்பணம் ஆறது. இதான் தாத்பர்யம். அந்த யக்ஞம் ப்ரதானப் படுத்தப் படறதால நித்யப்படி ஆராதனை, கர்மானுஷ்டானம் பின்னுக்குத் தள்ளப்படறது. ஆனால் அதுவே பெருமாள் சாப்டல, சீக்ரம் பாடிய (BODY) எடுங்கோன்னு துரிதப்படுத்தறது மனுஷனை மதிக்காத கார்யமாப் போயிடறது. சாஸ்த்ரம் மனுஷனை, மனுஷ வாழ்க்கைய ஒயர்த்தவே தவிர வேற இல்ல.”

      பக்கத்து நகரத்திலிருந்து ஓமப்பொடி வாங்கி சாப்பிடுவது உண்டு. யாரேனும் கடைத் தெருவிற்குப் போவோரைக் கூப்பிட்டு ஓமப்பொடி வாங்கி வரச் சொல்வார். ஓமப்பொடி பசிக்கும் ஆகும்; உடம்புக்கும் உபாதை செய்யாது என்பதால் ஓமப்பொடி அவரது தேர்வாக இருந்தது.

      ஒரு முறை விச்சு எனப்படுகிற விஸ்வநாதனைப் பார்த்துக் கூப்பிட்டு “ஒனக்கு ஏதேனும் ஸ்வீட் வாங்கிக்கோ; எனக்கு அரைக் கிலோ ஓமப்பொடி வாங்கிண்டு வா!” என்று பணித்தார். “பேஷா மாமா!” என்று போனவன் வெறுங் கையோடு திரும்பி வந்தான். வந்தவன் சொன்னான், “மாமா உங்களுது இல்ல, வாங்கிண்டு வர்ல. என்னோடது இருந்துது வாங்கி சாப்டுட்டேன், இந்தாங்கோ மீதி” என்று மிச்சப் பணத்தை அவரிடம் தந்துவிட்டான். ஓமப்பொழி கிடைக்காதது விச்சுவின் தவறு இல்லையே.

      ஐயருக்கு மாடு வாங்குவதும், போஷணையாய் வளர்ப்பதும், பால், தயிர் உண்டு மகிழ்வதும் மட்டுமல்லாமல் சுழி சுத்தம் பார்த்து வேண்டுவோர்க்கு மாடு வாங்கித் தருவதும் உண்டு.

      ஒரு முறை கன்றை வைத்துக் கொண்டு பசுவை விற்றுவிட்டார். கன்று ஊட்டு மறந்தாலும் பார்ப்பதற்கு இளங்கன்றாக இருந்தது. தெருவில் ஒரு துக்கம் நேரவே துக்க வீட்டுக்காரர் வேதியர்க்கு கோதானம் செய்தால் ஆன்மா வைதரணி ஆற்றைக் கடக்க ஏதுவாய் இருக்கும் என்று மாட்டு மாமாவை அணுகினார்.

      “மாமா! அம்மா காரியம் நடந்துண்டிருக்கு. கோதானம் செய்யலாம்னு நெனைக்கிறேன். மாமாதான் பார்த்து வாங்கித் தரணும். இன்னும் பத்துக்கு (பத்தாம் நாளுக்கு) நாலு நாள்தான் இருக்கு” என்று விண்ணப்பித்தார்.

      “ஓ! பேஷா! வாங்கித்தரேன்” என்று விடை தந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தார். தகையவில்லை. வேறு வழியில்லாமல் கன்றை இழந்த பசுவொன்றை சொல்ப விலைக்கு ஒருவரிடம் வாங்கினார், தன்னிடம் இருந்த ஊட்டு மறந்த கன்றை அதனுடன் ஜோடி சேர்த்தார். கன்றும் மாடும் தயார். துக்க வீட்டுக்காரர் மகிழ்ந்து போய் வேதியர்க்குப் பசுவைத் தானமாகக் கொடுத்தார். அந்த வேதியரும் மாட்டையும் கன்றையும் மகிழ்வோடு ஓட்டிச் சென்றார்.

      வழியில் மறித்தார் மாட்டு மாமா. “ஓய்! தானமாங்காணும்?” என்று வினவினார்.

      “ஆமாம், ஒரு கிரஹஸ்தர் அம்மா காரியத்தின் போது கொடுத்தார்” என்று மறுமொழி சொன்னார் சாஸ்திரியார்.

      “ஓட்டிண்டு போய் என்ன செய்யப் போறீர்?” இது மாட்டு மாமா.

      “இதென்ன கேள்வி? கொண்டு போய், கொட்டில்ல கட்டுவேன்; போஷிப்பேன், பூஜிப்பேன்”

      “அப்புறம்?”

      “பால், தயிர், வெண்ணெய், நெய்னு பயன் படுத்துவேன். கோமியத்தை விராட்டியாத் தட்டி ஹோமம் பண்ணுவேன்”

      “அதுதான் முடியாதுங்காணும்”

      “ஏன்? இளங்கன்னு மாடுதானே”

      “ஆமாம் ஆமாம் ஆனா பசு பால் கறக்காது. ஏன்னா, அதோட கன்னுகுட்டி இது இல்ல”

      “என்னது? அது ஒமக்கு எப்பிடித் தெரியும்?”

      “வாங்கி, ஜோடி சேர்த்துத் தந்ததே நாந்தானே”

      “ஏன் ஸ்வாமி, அப்பிடி செஞ்சீர்?”

      “என்ன பண்றது, ஒங்க க்ரஹஸ்தர் அவசரப்பட்டார், அதான்”

      “இப்ப என்ன பண்றது?”

      “என்னண்ட ஒரு வெலய வச்சுக் குடுத்துடும் நான் பாத்துக்கறேன்.”


      “நீர் மட்டும் எப்பிடி?”
      “அது என்னோட பிரச்சனை. உமக்கு ஏன் அது?”

வேதியர் விலை பேசி விற்றுவிட்டுப் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு நடையைக் கட்டினார்.

Saturday, May 5, 2018

திரிபுரத்து அவதாரங்கள்.


“சக்தி மைந்தன்” கதைகள்.
                           திரிபுரத்து அவதாரங்கள்.                                                                  “சக்திமைந்தன்”

      காவிரிக்கு வடபால் அமைந்த அழகிய கிராமம் திரிபுரம். காவேரி எப்போதும் பாய்ந்து ஊரை வளப்படித்தினாள். ஊர்மக்கள் அவர்களுக்கே உரிய நடைமுறையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பலர் இருந்தாலும், ஊர் அறிவு மிக்கவர்களின் ஊர்தான். செயல்திறன், கலை நுட்பம், தெய்வபக்தி, சமய ஞானம் என்றவற்றோடு தேச பக்தியும் கொண்ட பெருமக்கள் வாழ்ந்த வாழ்கின்ற ஊர்.

      அவர்களுக்குள்ளே தோன்றிய சிந்தனை, அவர்கள் செயல்பட்ட விதம் எனப் பலவிதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் இருந்தனர்.  அப்புறம் என்ன, பல்வேறு கதை தோன்றுவதற்குக் காரணம் கிடைத்து விட்டதல்லவா?

      திரிபுரத்தில் தலைக் கட்டுக்களில் ஒருவர் தேவராஜ ஐயங்கார், பெருநிலக் கிழார். மஞ்சள் காணியாகவும் சொத்துக்கள் நிறைய இருந்தன. ஆனாலும் விவசாயத்தை விடவும் சமய இலக்கியங்களில் அதிகமாக புத்தி செலுத்தினார். அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள். அவர் செல்வந்தராக இருந்த போதிலும், நடுத்தரமாகத்தான் குடும்பம் செலுத்தப்பட்டது. அவர் எளிய வாழ்க்கை வாழ்பவர் என்றும் சொல்லலாம். அவரின் திரண்ட நிலபுலன்களில் அதிக கவனம் செலுத்தாதனால் அதன் மூலம் சுமாரான வருவாய் வந்ததால், அதற்குள் நடந்த சிக்கன வாழ்க்கை என்றும் கூறலாம்.

      தெருவில் மற்ற முக்கியமானவர்களோடு அளவளாவுவதும், சீட்டாடுவதும் சதா சமய இலக்கியங்களில் கருத்துச் செலுத்துவதுமாக வாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டிருந்தது.

      மூன்று மகன்களில் இருவர் சல்ல சமய, சம்ஸ்கிருத ஞானத்தோடு கல்வித் தேர்ச்சி மூலம் நல்ல உத்தியோகத்தையும் கைப்பற்றினர். மகள்களில் இருவர் இசைத் துறையில் ஆர்வம் கொண்டு இசையைக் கற்று, அதுவே அவர்களது துறையாக ஆனது.

      மொத்தம் புத்திர சந்தானங்களில் ஒரு ஆண் மகவு மட்டும் சோடை. சுந்தரராஜன், அதுதான் அவர் பெயர். கல்வியில் ஆர்வமில்லை. மிகுந்த தரக்குறைவான எண்ணம். இதனால் சட்டென்று கோபம் வந்து விடும். இவருடைய இந்தக் குணத்தால் அவர் குடும்பத்தார் மிகவும் அவமானப் பட்டார்கள். ஆனால் நல்ல இசை ஞானம், நல்ல ரசனை, எல்லாமிருந்தும் பரிமளிக்கவில்லை.

      தன்னைத் தானே குறைவாகப் பேசிக்கொண்டு ரசிப்பார். உதாரணமாக “எனக்குப் பிடித்த பிஸ்கெட் “க்ராக் ஜாக்”; எனக்குப் பிடித்த ஊர் ‘மேட்’ராஸ், என்னைக் கவர்ந்த நடிகர் லூஸ் மோகன்; எனக்குப் பிடித்த ஆடை லூஸ் சட்டை, இப்படி.

      எந்த ஒரு ராகத்தைப் பற்றிச் சொன்னாலும், அதிலுள்ள பல பாடல்களை, திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் உடனே பாடிக் காண்பிக்கிற ஞானமும், நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். எதுவும் கறிக்காகவில்லை.

      தட்டிக் கொட்டி எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். பள்ளி ஆசிரியர்கள், பாடம் என்றால் வேம்பாய்க் கசந்தது அவருக்கு. ஆசிரியர் சிகாமணியிடம் நடுக்கம். உள்ளூரில் சதாசிவ ஐயர் என்றொரு ஆசிரியர். அவர் சரித்திர பூகோள ஆசிரியர் இவர்களுடைய விடைத்தாள்களையெல்லாம் திருத்துவதற்காக வீட்டுக்குக் கொண்டு வருவார். சுந்தரராஜனையும் அவர் சகாவான இன்னொரு மாணவனையும் கூப்பிடுவார். விடைத்தாள்களை அவர்களிடம் தந்து, ஏற்கனவே எழுதியிருக்கும் வரிகளுக்கிடையில் மீண்டும் எழுதச் சொல்வார். புதிதாக விடைகள் எழுத வேண்டுமென்றாலும் பள்ளியின் முத்திரை உள்ள வெள்ளைத் தாள்களையும் தருவார்.  இவர்கள் புத்தகத்தைப் பார்த்தும் விடை எழுதலாம். நாற்பது மதிப்பெண் வாங்கக் கூடிய விடைத் தாள்களுக்கு எண்பது, தொண்ணூறு என்று மதிப்பெண் எகிறும். விடைத் தாள்களைத் திருத்திவிட்டு ஆசிரியர் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கு, புகையிலைச் சாற்றின் கூட்டை விழுங்கி விடாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டு, “இன்னும் நன்னா எழுதியிருக்கலாம்” என்று சொல்லும் விமர்சனம் தான் உச்சகட்ட வினோதம்.

      சுந்தரராஜனுக்குத் தெருவில் ஒரு கெட்ட நண்பன் உண்டு. சமூக அந்தஸ்தோ, ஞானச் செல்வமோ சிறிதும் இல்லாத ராஜப்பாதான் அவன். அவனைச் சதா தன் சைக்கிளில் வைத்துச் சுமந்துகொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிவரவும், அடிக்கடி சினிமா பார்ப்பதுமாகப் பொழுது போகும்.

      எம்.ஜி.ஆர். படமென்றால் கேட்க வேண்டாம். “இதயக்கனி” படத்தைப் பக்கத்து ஊர் டூரிங் கொட்டகையில் எத்தனை நாட்கள் ஓடியதோ, அத்தனை நாளும் போய்ப் பார்த்தாயிற்று. ஒரு முறை படம் பார்ப்பதற்குக் காசு குறைவாக இருந்தது. கொட்டகை கவுண்டரில் இருந்தவர் இவன் தினசரி கிராக்கி என்பதால் “பரவாயில்லை நாளைக்குக் கொடுங்க” என்று சலுகை காட்டினார். நிரந்தர கிராக்கி என்பதால் இந்த சலுகை கூட கொடுக்கக் கூடாதா என்ன?

      தெருவிலே ஒரு தமிழாசிரியர். அவரைப் போல நடித்துக் காட்டுவார் சுந்தர ராஜன். அவரை மட்டுமல்ல, பல்லோரை அவர்கள் போலவே இமிடேட் செய்து கொண்டாடுவது வழக்கம். ஒரு முறை சுந்தரராஜன் அந்த ஆசிரியரிடம் “என்னை எல்லாரும் பைத்தியங்கறாங்களே!” என்று அங்கலாய்த்திருக்கிறார். அந்த தமிழாசிரியர் ஒரு அதிமேதாவி. அவர் சொன்னார், “சுந்தரராஜா! உனக்கு எதைக் கண்டாலும் சந்தேகம் தான்” என்று புரியும்படி சொன்னார்.

      அவர் தகப்பனார் ‘தலைகீழா நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்’. ஒன்றும் புண்ணியமில்லை. பக்கத்து ஊரில் ஞானமாணிக்கம் என்றொரு கிறிஸ்தவர்; கொஞ்சம் உடல் உழைப்பை விட்டு, குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. ஏமாற்று வேலைக்காக ஏதேதோ மாலைகள் அணிந்துகொண்டு முகக் குறிப்பை வைத்துக் குறி சொல்கிறேன், பரிகாரம் செய்கிறேன் என்று அலைவது வழக்கம். அவருடைய போக்கு ஞானமாணிக்கத்துக்குப் பலன் தந்ததோ இல்லையோ, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்கிற நிலையில் இருந்த சுந்தரராஜனின் அப்பா, தக்க நபர் மூலம் ஞானமாணிக்கத்தைத் தன் பிள்ளைக்கு பரிகாரம் செய்வதற்காகத் தருவித்தார்.

      “சாமி! நாலு தேங்கா, அஞ்சு எலுமிச்சம்பழம், வெத்தலை சீவல், கம்பிளிக் கயிறு ஒண்ணு” என்று பரிகாரத்துக்கு பட்டியல் சொன்னார் ஞானமாணிக்கம். அப்பா மகன் சுந்தரராஜனிடம், இப்படி ஞானமாணிக்கம் வருவதாகவோ, பரிகாரம் செய்யப் போவதாகவோ சொல்லவில்லை.

      குறிப்பிட்ட நாள் வந்தது. திண்ணையில் பரிகாரத்துக்கான சாமான்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. சுந்தரராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானமாணிக்கம் வந்து சேர்ந்தார். பாரித்த உடல் வாகு, திறந்த மார்பு, கழுத்தில் ஏதேதோ மாலைகள், தாம்பூலம் தரித்த வாய் இத்யாதிகளுடன் பரிகார சாமான்கள் பரத்தி வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தின் முன்னர் அமர்ந்தார்.

      “ஐயாவை வரச்சொல்லுங்க” என்றவாறு தாம்பாளத்திலிருந்த எலுமிச்சைகளை நறுக்குவதும், தேங்காய்க் குடுமியைப் பிய்த்து குறைப்பதுமாகத் தன் பணியைத் துவக்கினார்.

      “சுந்தரராஜா! கொஞ்சம் இங்கே வா!” என்று தந்தையார் உள்ளே இருந்த மகனைத் திண்ணைக்கு அழைத்தார். கலவரம் கூடிய கண்களுடன் “என்ன?” என்றவாறே திண்ணைக்கு வந்து சேர்ந்தான் சுந்தரராஜன்.

      “வாங்க சாமி! குளிச்சிட்டீங்களா? எனக்கு எதுத்தாப்பல ஒக்காருங்க” என்று சுந்தரராஜனுக்குக் கோரிக்கை விடுத்தார். சுந்தரராஜன் கண்களில் மருட்சி கூடியது.

      “என்ன? என்ன இதெல்லாம்?” என்றவாறு ஞானமாணிக்கம், அவர் முன்னால் இருக்கும் தாம்பாளம், அப்பா என்று மாறி மாறிப் பார்த்தான். அவனுக்குப் புரிந்தும் புரியாதது போலிருந்தது.

      “ஒண்ணுமில்லைங்க சாமி! வந்து ஒக்காருங்க, சித்த நேரம், போயிடலாம்” என்றார் ஞானமாணிக்கம் குழைவாக. சுந்தரராஜனுடைய அப்பாவும் “ஒண்ணுமில்லை சுந்தரராஜா! கொஞ்சம் ஞானமாணிக்கம் முன்னால உக்கார்” என்று குரலில் கனிவுடன் சொன்னார்.

      “என்ன விஷயம்? அதைச் சொல்லு” என்று மூக்கணாங்கயிற்றுக்கு முரண்டு பிடிக்கும் காளைக் கன்று போல திமிறினான்.

      “ஒண்ணுமில்லீங்கையா! ஒரு சின்ன பரிகாரம்” என்று இழுத்தார் ஞானமாணிக்கம். சுந்தரராஜனுக்குப் புரிந்துவிட்டது. வந்ததே அசாத்தியக் கோபம்.

      “என்ன கூத்து இது? எனக்கு என்ன ஆயிடுச்சுன்னு இதெல்லாம் பண்றேள்? கொஞ்சம் கூட அறிவில்லையா? ஏய்! ஞானமாணிக்கம், நீ ரொம்பத் தெரிஞ்சவனாடா? எனக்கு என்ன ஆச்சுன்னு சரிபண்ண வந்துருக்கே?” என்பதோடு எழுதத் தரமற்ற சொற்கலையும் சேர்த்து ஞானமானிக்கத்தைத் திட்டவும், அவர் ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டமெடுத்தார்.

      அதற்குப் பிறகு தேவராஜ ஐயங்கார், தன் மகன் பொருட்டு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஞானமாணிக்கத்தையும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கண்டவர் யாருமில்லை.