பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 26, 2018

பாரதியின் கவிதைகள் பிறந்த விதம்


                                                  
பண்டைய தமிழ்நாட்டில் ஏராளமான தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள் இருந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பெருமையும் புகழும் உண்டு. உலக மறை நூலாம் திருக்குறளை போற்றி வணங்கும் ஒரு நீதிநூலாக இவ்வுலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. திருக்குறள் எழுதியதால் திருவள்ளூவர் போற்றப்படுகிறார். வான்மீகத்தைக் கரைத்துக் குடித்துத் தமிழில் அழியாப் புகழ்வாய்ந்த “இராமகாதை”யை வடித்துக் கொடுத்தார் கம்பெர் பெருமான். இப்படியே சிலப்பதிகாரம் இயற்றி பெருமை கொண்ட இளங்கோவடிகள், பாரதம் இயற்றிய வில்லிபுத்தூரார் இப்படி மாபெரும் புலவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் அந்த வரிசையில் வந்தவர் மகாகவி பாரதியார். மேற்சொன்ன புலவர்களைப் போல ஏதொவொரு தலைப்பில் நூலெழுதி பெயர் பெற்றவரல்ல. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை இலக்கியமாக்கினார். அவர் வாழ்ந்த நாட்களைத் தன் கவிதைகளில் வடித்தார். சமகாலத்தின் கண்ணாடியாக விளங்கியதால் பாரதி போற்றப்படுகிறார். அவர் கவிதை எழுதிய சம்பவங்களுக்குப் பின்புலத்தில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கவிதை புனையும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் புதிய புதிய கவிதைகளைப் படைத்து வைத்ததனால் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தனியொரு காப்பியத்தைப் படைக்கவில்லை. ஆனாலும் அவருடைய முப்பெருங் காப்பியங்களான, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு இன்றும் உயிர்ப்போடு மக்கள் மத்தியில் நடைபோடுகிறது.
மகாகவி பாரதி பாடிய சில பாடல்களின் சந்தர்ப்பம், சூழ்நிலை குறித்து சில குறிப்புகளைக் கீழே காணலாம்.      
           
                  மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

1.    மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலம்; மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றிய தமிழ்ப் பாடல்கள் எழுதி அனுப்பினால் அதற்குரிய பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதியுடன் இருந்த நண்பர்கள் அவரை ஒரு பாடல் எழுதி மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கு பாரதியார் சொன்னார், “நம் கவிதை நன்றாக இருந்தாலும் சங்கத்தார் அதை சரியில்லை என்று ஒதுக்கி விடுவார்கள். அவர்களாக அதைச் செய்யாவிட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து அவர்கள் தயவினை எதிர்பார்த்து என் கவிதையை நிராகரித்து விடுவார்கள். ஆகையால் அவர்களுக்குக் கவிதை அனுப்பும் எண்ணம் இல்லை. வேண்டுமானால் உங்களுக்காகத் தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கி ஒரு கவிதை புனைந்து தருகிறேன்” என்றார். நண்பர்களும் “ஆகா! எங்களுக்காக அப்படியொரு கவிதையைத் தாருங்கள்!” என வேண்டிக் கொள்ள பாரதியும் ஒரு பாட்டைப் பாடுகிறார். அந்தப் பாடல்தான் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்கிற பாடல்.
அது இதோ:
            “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
            தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
            தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
            சக்தி பிறக்குது மூச்சினிலே – எங்கள்                          (செந்தமிழ்) 1.

            வேதம் நிறைந்த தமிழ் நாடு – உயர்
            வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
            காதல் புரியும் அரம்பையர் போலிளங்
            கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 2.

            காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
            கண்டதொர் வையை பொருனை நதி – யென
            மேவிய யாறு பல வோடத் – திரு
            மேனி செழித்த தமிழ்நாடு.                                         (செந்தமிழ்) 3.

            முத்தமிழ் மாமுனி நீள் வரையே நின்று
            மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
            எத்தனை யுண்டு புவிமீதே – அவை
            யாவும் படைத்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 4.
            நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
            நித்தந் தவஞ்செய் குமரி யெல்லை – வட
            மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
            மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.                                  (செந்தமிழ்) 5.

            கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
            கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
            பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
            பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.                                    (செந்தமிழ்) 6.

            வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
            வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
            அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
            யாரம் படைத்த தமிழ்நாடு.                                     (செந்தமிழ்) 7.
           
            சிங்களம் புட்பகம் சாவக மாதிய
            தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
            தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
            சால்புறக் கண்டவர் தாய்நாடு.                               (செந்தமிழ்) 8.

            விண்ணை யிடிக்கும் தலை யிமயம் – எனும்
            வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
            பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார் தமிழ்ப்
            பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.                                  (செந்தமிழ்) 9.

            சீன மிசிரம் யவன ரகம் – இன்னும்
            தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
            ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக
            நன்று வளர்த்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 10.
           

         மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

2.    மார்கழி மாதத்தில் ஒரு நாள் விடியற்காலைப் பொழுது. இருள் பிரியா முன் மகாகவி பாரதியாரும், அவருடைய நண்பர்களும் புறப்பட்டுப்போய் அருகிலுள்ள தோப்பிலிருக்கும் மடுவில் நீராடிவிட்டுத் திரும்புவர். பாரதியாரைக் குவளைக் கண்ணன் எனும் அவரது சீடரொருவர் சென்று எழுப்பி அழைத்து வருவார். ஒருநாள் பாரதியாரை எழுப்ப சீடன் வராததால் பாரதியாரே எழுந்து குவளைக் கண்ணன் வீட்டுக்கு வந்து அவனை எழுப்பினார். அப்போது குவளைக் கண்ணனின் தாயார், பாரதியாரைப் பார்த்து “பாரதி! நீதான் நன்றாகப் பாடுவாயாமே! எங்கே ஒரு சுப்ரபாதம் பாடேன்” என்கிறார்.

பாரதி அவரிடம் “ஆகா! பாடலாமே. என்று நண்பர்களுடன் ஸ்நானம் பண்ண மடுவுக்குக் கிளம்பிவிட்டார். அங்கு போய் ஸ்நானம் முடிந்து திரும்பும் வழியெல்லாம், இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்த சோலைபோன்ற சாலையில் குதித்துக் கைத்தாளம் போட்டுக் கொண்டு நண்பர்களும் உடன் ஆட ஒரு சுப்ரபாதம் எனும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல் எழுந்தது. அதை குவளையின் தாயாரிடம் பாடிக் காண்பித்தாரா என்பது தெரியவில்லை. பாடல் பிறந்து விட்டது. வழக்கமாக இறைவனைத் துயில் எழுப்புவதாகத் தான் சுப்ரபாதம் அமைந்திருக்கும் மகாகவியின் திருப்பள்ளி எழுச்சி பாரத தேவியைத் துயிலெழுப்பிப் பாடுவதாக அமைந்தது. இதோ அந்தப் பாட்டு:

                           பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

            “பொழுது புலர்ந்தது, யாஞ்செய்த தவத்தால்
                        புன்மை யிருட்கணம் போயின யாவும்;
            எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
                        யெழுந்து விளங்கிய தறிவெனும் இரவி;
            தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
                        தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்,
            விழிதுயில் கின்றனை யின்னுமெந் தாயே,
                        வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!                      1.

            புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம்;
                        பொங்கின தெங்குஞ் சுதந்திர நாதம்;
            வெள்ளிய சங்க முழங்கின கேளாய்;
                        வீதியெ லாமணு குற்றனர் மாதர்!
            தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
                        சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
            அள்ளிய தெள்ளமு தன்னையெ மன்னை
                        ஆருயி ரேபள்ளி யெழுந்தரு ளாயே!                                   2.

            பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
                        பார்மிசை நின்னொளி காணுதற் கலந்தோம்
            கருதிநின் சேவடி யணிவதற் கென்றே
                        கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
            சுருதிகள் பயந்தனை! சாத்திரங் கோடி
                        சொல்லரு மாண்பின ஈன்றனை யம்மே!
            நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத் தேற்றாய்
                        நிர்மலை யேபள்ளி யெழுந்தரு ளாயே!                              3.

            நின்னெழில் விழியருள் காண்பதற் கெங்கள
                        நெஞ்சகத் தாவலை நீயறி யாயோ?
            பொன்னனை யாய்வெண் பனிமுடி ய்மயப்
                        பொருப்பின னீந்த பெருந்தவப் பொருளே!
            என்ன தவங்கள்செய் தெத்தனை காலம்
                        ஏங்குவம் நின்னருட் கேழையம் யாமே?
            இன்னமும் துயிலுதி யேலிது நன்றோ?
                        இன்னுயி ரேபள்ளி யெழுந்தரு ளாயே!                              4.

            மதலைய ரெழுப்பவுந் தாய்துயில் வாயோ?
                        மாநிலம் பெற்றவ ளிஃதுண ராயோ?
            குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
                        கோமக ளேபெரும் பாரதர்க் கரசே!
            விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி
                        வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய்!
            இதமுற வந்தெமை யாண்டருள் செய்வாய்
                        ஈன்றவ ளேபள்ளி யெழுந்தரு ளாயே!”                               5.

        மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

3.    1916ஆம் வருஷம், நள வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி இரவு புதுச்சேரியில் வீசிய கடுமையான புயல்காற்றில் வீடுகள் தகர்ந்தன, மரங்கள் விழுந்தன, குடிசைகள் எல்லாம் நீரில் மூழ்கின அந்த கடுமையான புயல் வீசிய மறுநால் வ.வெ.சு.ஐயரும், பாரதியாரும் குடிசை வாழ் மக்களுக்கு உதவிகளைச் செய்தனர்.

அந்தப் புயல் வீசுவதற்கு முந்தைய தினம் தான் பாரதியார் முன்பிருந்த பழைய வீட்டிலிருந்து எதிரில் இருந்த இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தார். மழையும், காற்றும், புயலும் மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருந்த போது அவர் மனதில் ஓர் எண்ணம். நேற்று இருந்த அந்த பழைய வீடு இன்று புயலில் இடிந்து விழுகிறது. அடடா! அந்த வீட்டில் நாம் இருந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருப்போம் எனும் எண்ணம் அவர் மனதில் தோன்றி ஒரு பாட்டாக உருவாகிறது.

புயலின் கடுமையைக் கண்டு அவர் பாடிய பாடல். இது 27-11-1916ஆம் ஆண்டு “சுதேசமித்திரனில்” வெளியானது. “புயல் காற்று என்பது அதன் தலைப்பு”, அது இதோ:
                                                 புயல் காற்று

            மனைவி சொல்கிறாள்.
“காற்ற டிக்குது கடல் குமுறுது
            கண்ணை விழிப்பாய் நாயகனே
            தூற்றல் கதவு சாளரம் எல்லாம்
            தொளைத் தடிக்குது கூடத்திலே – மழை
            தொளைத் தடிக்குது பள்ளியிலே.

            கணவன் சொல்:       
            வானம் சினந்தது வையம் நடுங்குது
            வாழி பராசக்தி காத்திடவே
            தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
            தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்.

            மனைவி சொல்:       
            நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே யிந்த
            நேர மிருந்தா லென்படுவோம்?
            காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
            காத்தது தெய்வ வலிமையன்றோ?


           மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

4.    பாரதியார் இல்லத்தில் அம்மாக்கண்ணு எனும் பெண்மணி வீட்டு வேலைகள் செய்து வந்தார். அவருடைய மகன் தான் பாரதி தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடும் வேணு முதலி. இவன் உடற்பயிற்சிகளில் தேர்ந்தவன். இந்த வேணு முதலியைத் தன் கட்டுரைகளில் பலவிடங்களில் பாரதியார் குறிப்பிடுகிறார். அம்மாக்கண்ணு பாரதியாரிடம் பணம் காசு எதையும் எதிர்பார்த்து வேலைபார்த்தவரல்ல. அவர் மீதிருந்த பாசத்தின் காரணமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் பாரதியார் மனைவி சம்பளம் கொடுப்பார், அதை அவர்களுக்கே பணத் தட்டுப்பாடு நேரும்போது அம்மாக்கண்ணு அவர்களுக்கே செலவும் செய்து விடுவார்.

செல்லம்மா பாரதியார் தன் மகள் சகுந்தலாவுடன் பிறந்த வீட்டுக்குக் கடையம் சென்று விட்டார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மாவுக்குத் திருமணம் பேசப்படும் விஷயம் பாரதிக்குத் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன பாரதி தாடி மீசை வளர்த்துக் கொண்டு ஒழுங்காக உணவு உண்ணாமல், மனம் போனபடி திரிந்து வந்தார். அப்படியொருநாள் இவர் வீடு திரும்பாததால் பலரும் பல இடங்களுக்குச் சென்று தேடினார்கள். இவர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருப்பதாகச் செய்தியறிந்து இவரைத் தேடிக் கொண்டு அம்மாக்கண்ணு சென்றார். இவரைத் தேடப் புறப்படும் முன்பாக ‘ஐயர்” (பாரதி) பசி தாங்கமாட்டாரே அவர் காணவில்லையென்றால் பசியால் வருந்துவாரே என்று ஒரு தூக்கில் தயிர் சோறு எடுத்துக் கொண்டு இவரைத் தேடி அம்மாக்கண்ணு செல்கிறார். ரயில் நிலையத்தில் இவரைக் கண்டு முதலில் இந்த உணவை சாப்பிடுங்கள் என்று அவருக்குக் கொடுத்துத் தாயினும் சாலப் பரிந்தூட்டி பசியாற்றுகிறார். அந்தத் தாயின் மீது பாடப்பட்ட ஒரு பாடல் இதோ. பாரதி வீட்டைப் பூட்டிக் கொண்டு எங்கோ வெளியில் போய்விட்டு வந்து வாசல் பூட்டைத் திறக்க முயல்கிறார். சாவி கிடைக்கவில்லை. உடனே அம்மாக்கண்ணு ஓடி வந்து அந்தப் பூட்டைத் தன் கையால் அசைத்துத் திறந்து விடுகிறார். உடனே பாரதி அந்த அம்மையார் மீது ஒரு பாடலைப் பாடி அதற்கு “அம்மாக்கண்ணு பாட்டு” என்று பெயரிடுகிறார். அது:

                                      அம்மாக்கண்ணு பாட்டு.
            “பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல
                        மனந் திறப்பது மதியாலே
            பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
                        வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

            ஏட்டைத் துடைப்பது கையாலே – மன
                        வீட்டைத் துடைப்பது மெய்யாலே
            வேட்டை அடிப்பது வில்லாலே – அன்புக்
                        கோட்டை பிடிப்பது சொல்லாலே.

            காற்றை அடைப்பது மனதாலே – இந்தக்
                        காயத்தைக் காப்பது செய்கையிலே
            சோற்றைப் புசிப்பது வாயாலே – உயிர்
                        தணி வுறுவது தாயாலே!

           
     மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

5.    புதுச்சேரியில் உப்பளம் என்றொரு இடமுண்டு. அந்தப் பகுதியிலிருந்து ‘புஷ் வண்டி’ ஓட்டும் ஒருவர் பாரதியாருக்கு வழக்கமாக வண்டி ஓட்டுவார். அவர் ஒரு நாள் பாரதியாரிடம் “சாமி! நீங்க ஒரு நாள் எங்க உப்பளத்திலுள்ள மாரியம்மா கோயிலுக்கு வரவேணும்ங்க” என்கிறார். உடனே பாரதியார் அதற்கென்ன நாளைக்கே வந்தால் போச்சு என்றார். மறுநாள் காலையில் அந்த புஷ் வண்டிக்காரர் பாரதியின் வீட்டுக்கு வந்து உப்பளம் செல்லலாம் என்று அழைக்கிறார். பாரதியாரும் தன் இளைய மகள் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு அந்த புஷ் வண்டியில் உப்பளம் செல்கிறார். அங்கு இருந்த தேசமுத்து மாரி எனும் அந்த மாரியம்மன் கோயிலுக்கு புஷ் வண்டிக்காரர் அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு வள்ளுவ இளைஞன் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டுகிறான். அப்போது பாரதி தன் மகள் சகுந்தலாவிடம் “பாப்பா! அதோ பார் அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து போகிறார். பிறகு அந்த இளைஞன் தீபாராதனை தட்டுடன் இவர்கள் இருக்குமிடம் வந்தபோது அவனைப் பாராட்டிவிட்டு, “தம்பீ! நீ அடிக்கடி நம் வீட்டுக்கு வரவேண்டும்” என்கிறார்.

திரும்பி வரும்போது புஷ் வண்டிக்காரன் சொல்கிறான், “சாமி, நீங்க வந்தது எங்க சேரி ஜனங்களுக்கு தெரியாமப் போச்சு. அவுங்க ஒங்களை மறுபடியும் ஒரு நாள் வரவேணும்னு கேட்கிறாங்க. அத்தோடு எங்க மாரியம்மா மேல நீங்க ஒரு பாட்டுக் கட்டி பாடணுங்க” என்கிறான். அவரும் சம்மதித்து அடுத்த நாளே அந்த புஷ் வண்டிக்காரனுடனும் மகள் சகுந்தலாவுடனும் உப்பளம் செல்கிறார். அங்கு மக்கள் வாசல் தெளித்து, கோலங்கள் போட்டு தோரணங்கள் கட்டி வரவேற்கின்றனர். பாரதி அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது “ சாமி எங்க அம்மா மேல ஒரு பாட்டு பாடணுங்க” என்கின்றனர். உடனே பாரதி பாடத் துவங்க, அந்த மக்கள் தாரை, தப்பட்டையுடன் தாளமிட்டு ஆடத் துவங்குகிறார்கள். அங்கு ஒரே அல்லோலப் பட்டது. அந்தப் பாடல் இதோ:

உலகத்து நாயகியே! - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து
மாரியம்மா,எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா. எங்கள் முத்து மாரி!
--
 தேச முத்துமாரி 

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.
நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். 

             மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்
6.    உப்பளம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு புஷ் வண்டியில் வீடு திரும்பும் போது அவர்கள் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருத் திருப்பத்தில் இருந்த தர்மராஜா கோயில் வந்ததும் இருவரும் இறங்கிக் கொள்கிறார்கள். சகுந்தலாவை அழைத்துக் கொண்டு கோயிலினுள் போகிறார். அங்குள்ள சிலைகளையெல்லாம் பார்த்து அதிசயித்த பாப்பாவுக்கு பாரதி விளக்கம் தருகிறார். அங்கிருந்த குண்டான ஆண் ஒருவரின் சிலையைக் காட்டி இது யார்? என்கிறாள் குழந்தை. பாரதி சொல்கிறார் இது பாண்டவர்களுக்கான கோயில், இந்த குண்டு ஆசாமிதான் பீமன் என்கிறார். இப்படியே மற்ற சிலைகளின் விவரங்களைக் கேட்டு அறிந்தபின் அங்கிருந்த பெண் சிலையைக் காட்டி இது யார் என்கிறாள் சகுந்தலா. பாரதி இதுதான் திரெளபதி. பாண்டவர்களின் பத்தினி. மகாபாரதக் கதையின் நாயகி என்கிறார். “இவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் எனக்குக் கதை சொல்லவே இல்லையே!” என்கிறாள் குழந்தை. “அதுவா! சொல்கிறேன்” என்று ஆழ்ந்த மெளனத்தில் ஆழ்ந்து விடுகிறார் பாரதி. தந்தை மெளனமாகி விட்டால் மனதில் ஏதோ கவிதை தோன்றுகிறது என்று குழந்தை அவருக்குத் தொல்லை தருவதில்லை, அமைதியாகி விட்டாள். அன்று வீடு போய்ச்சேர்ந்த பிறகும் பாரதி குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், காலைத் தரையில் ஓங்கு உதைப்பதும் ஏதோ சிந்தனை வசப்பட்டிருப்பது கண்டு மற்றவர்கள் ஒதுங்கி விட்டார்கள். ஆம்! பாரதியின் சிந்தனையில் அப்போது இருந்தது ஈஸ்வரன் தர்மராஜா கோயிலில் கண்ட கதாபாத்திரங்கள் தான். அவர் மனதில் “பாஞ்சாலி சபதம்” உருவாகி விட்டது. மகாபாரதத்தில் பாஞ்சாலியை மையமாக வைத்து சூதாட்டத்தையும், பாண்டவர்கள் செய்த சபதங்களையும், நிறைவாக பாஞ்சாலியின் சபதத்தையும் சாகாவரம் பெற்ற காப்பியமாக பாரதி படைத்து வைத்தார். அந்த காப்பியத்தின் சில வரிகள்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த
நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்-சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே,
வென்றி கொள்சிவ சக்தி-எனை
மேவுற வே,இருள் சாவுற வே,
இன்றமிழ் நூலிது தான்-புகழ்
     ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே.

என்று பாஞ்சாலி சபதத்தைத் தொடங்கிவிட்டு, கடைசியில் வீமன் தொடங்கி பாண்டவர் செய்த சபதத்தையும், இறுதியில் பாஞ்சாலியின் சபதத்தோடு இந்த அரிய இலக்கியத்தை எழுதி முடிக்கிறார். சபதக் காட்சி இதோ.



கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் -- வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான -- நீதி
யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ!
சிறியர் செய்கை செய்தான்.


‘நாட்டு மாந்த ரெல்லாம் -- தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ -- றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி -- மனிதர்
நன்கு செய்ய வில்லை.


ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! -- மேலே
சரிதை சொல்லு கின்றோம்.




‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.

‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை.

‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன்.

‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.

‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்;




‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய்.

‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’



எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்.


‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்.

வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில்



‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,



‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான்.









                                   

அர்ஜுனன் சபதம் 


பார்த்த னெழுந்துரை செய்வான்: -- ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி -- அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான்.


                                               

பாஞ்சாலி சபதம் 



தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.
103


ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். -- இந்த
நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க.



              மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்
7.    மகாகவி பாரதியாருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் எனும் குவளைக் கண்ணன். பாரதியாரை யானை ஒதுக்கித் தள்ளியபோது கம்பிவேலியைத் தாண்டிக் குதித்து பாரதியாரை மீட்டு வந்தவர் இந்த குவளையார். பாரதியின் பாடல்களை ஸ்ருதி இல்லாமல் பாடிக்கொண்டிருந்தவர். எப்போதும் பாரதியுடனே இருந்து பணியாற்றியவர். உடல் நிறைய நாமங்களை அணிந்து காணப்படும் ஒரு தீவிர வைணவர்.

அவரிடம் ஒரு நாள் பாரதியார் “கிருஷ்ணா, இந்த நாலாயிரம் இருக்கிறதே, இது எத்தனை ஆழ்வார்கள் பாடியவை?” என்கிறார். அதற்கு அவர் “பதினொரு ஆழ்வார்களும், ஆண்டாலும், திருவரங்கத்து அமுதனாரும் சேர்ந்து பாடியவை. இவை அத்தனைக்குமாகச் சேர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று பெயர் என்றார் கண்ணன்.

பாரதி சொன்னார், “பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா? நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!” என்றார்.

“பாரதியார் ஆறாயிரம்” என்று தலைப்பிட்டு பாரடியார் எழுதத் தொடங்கினார். இதனிடையே குடும்பத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், கவலை, சச்சரவு, வறுமை இவை வாட்டத் தொடங்கின. இவைகளைத் தொடர்ந்து தன் 39ஆம் வயதில் இறந்தும் போய்விட்டார். ஆகவே அவர் சொன்ன ஆறாயிரம் பாடல்கள் முற்றுப்பெறவில்லை. வெறும் அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே பூர்த்தியாகியிருந்தன. ஆனால் அவர் பாடவிரும்பிய ஆறாயிரம் பாடல்களின் சாரம் இந்த அறுபத்தியாறில் அடங்கிவிட்டதாகக் கூறுவார்கள். அந்த “பாரதி அறுபத்தாறு” பற்றி இங்கு சிறு பகுதியைப் பார்ப்போம்.

                                    “பாரதி அறுபத்தாறு”

இந்நூலின் முதற் காண்டம் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. அது பராசக்தி துதி. அதில் அவர் சொல்வதாவது.

            “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
            யானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்
            மனத்தினிலே நின்றிதனை யெழுதுகின்றாள்
            மனோன்மணி யென் மாசக்தி வையத் தேவி,
            தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
            செய்ய மணித் தாமரை நேர்முகத்தாள், காதல்
            வனத்தினிலே தன்னை யொரு மலரைப் போலும்
            வண்டினைப் போலெனையும் உரு மாற்றிவிட்டாள்.
            மாகாளி பராசக்தி உமையா ளன்னை
            வைரவி, கங்காளி, மனோன்மணி, மாமாயி
            பாகார்ந்த தேமொழியாள் படருஞ் செந்தீ
            பாய்ந்திடுமோர் விழியுடையாள் பரம சக்தி
            ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்
            ஆதி பராசக்தி யென தமிர்தப் பொய்கை
            சோகாட விக்குளெனைப் புகவொட்டாமல்
            துய்ய செழுந் தேன்போலே கவிதை தந்தாள்.

இப்படி போகிறது இந்த பாடல். இதன் ஒரு பகுதியில் சொல்கிறார்.

            சென்றதினி மீளாது மூடரே, நீர்
            எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
            கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து
            குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா
            இன்று புதிதாப் பிறந்தோம் என்று நெஞ்சில்
            எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
            தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
            அஃதின்றி சென்றதையே மீட்டு மீட்டும்
            மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா”


      மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்

8.    புதுச்சேரியில் மகாகவி பாரதியாரிடம் அவர் படித்த திருநெல்வேலி எம்.டி.டி. இந்து உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் வந்து, பாரதியார் படித்த அந்த கலாசாலை மூடப்பட விருப்பதாகவும், அதனை மீண்டும் திறந்து நடத்த நிதி தேவைப்படுகிறதென்றும் சொன்னார். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்று பாரதியார் கேட்க அவர் சொன்னார், நீங்கள் ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, அதில் கல்விப் பணிக்காக நிதி கேட்டு வேண்டுகோள் விடுத்து எழுதித் தரும்படி கேட்டார். பாரதியாரும் உடனே எழுதித் தருவதாகச் சொல்லி அவரை அனுப்பினார். அன்றே உட்கார்ந்து கல்வியின் சிறப்பையெல்லாம் சொல்லி, கலைமகளின் அருமை பெருமைகளைச் சொல்லி அத்தகைய கல்வியை போதிக்கும் இந்த செயலுக்கு நிதி தரும்படியாக ஒரு வேண்டுகோளுடன் கவிதையொன்றை எழுதி அவரே சென்று அந்த நண்பரிடம் கொடுத்து விட்டு வந்தார். அந்தக் கவிதை இதோ:

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
      வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
      கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
      ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
      கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
      மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
      கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
      குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
      இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
      வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
      வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
      வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
      தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
      தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
      உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
      செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
      கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
      சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
      வாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
      வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
      சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
      நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
      தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
      கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
      உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
      செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
      சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
      கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
      இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
      பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
. (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
      நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
      ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
      வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!
(வெள்ளைத்)