பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 29, 2012

"இனியவை நாற்பது" (24)


24. இனியவை இருபத்திநான்கு.

அரசியல் பிரமுகர் ஒருவர். சற்று வசதியானவர். மக்கள் நலனில் உண்மையான அக்கறையும் நாட்டமும் கொண்டவர். நேர்மையானவர். ஆம்! அரசியலில் ஈடுபட்டிருந்தும் நேர்மை தவறாமல் நடந்து கொள்பவர். ஆனால் அவரைச் சுற்றியிருக்கும் அரசியல் வாதிகளின் நடத்தையினால் மக்கள் சற்று கோபமடைந்திருந்தாலும், இவர் மீது மட்டும் நல்ல எண்ணம் கொண்டிருந்தார்கள். இவருக்கு ஏன் இந்த அரசியல், பேசாமல் இவர் பொதுக் காரியங்களைச் செய்துகொண்டு நேர்மையாளர் என்கிற பெயரைக் காப்பாற்றிக் கொள்வதை விட்டு இவருக்கு எதற்காக அரசியலும், தேர்தலும் என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சிப்பார்கள்.

அவர் சார்ந்திருந்த கட்சி இவரைத் தேர்தலில் நிற்க வைத்துவிட்டது. என்ன செய்வார் பாவம்! வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து கரங்களைக் கூப்பி வாக்குக் கேட்கத் தொடங்கினார். இவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மன மகிழ்ச்சியோடு இவரை வரவேற்றாலும், ஐயா தங்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை. தங்கள் கெளரவம் கெட்டுவிடாதா என்றெல்லாம் கூட கேட்டார்கள். இவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாதவர்கள் அரசியல்வாதிகள் என்றால் ஒரு அபிப்பிரயம் கொண்டிருந்தவர்கள், இவரை கேள்வி மேல் கேட்டு இவரது பொறுமையை அதிகம் சோதித்தனர். இவருடன் இருந்தவர்கள் அந்த மக்களிடம் கோபப்பட்டு பதில் சொன்னாலும், இவர் அவர்களை அடக்கிவிட்டு, அடக்கத்துடன் உங்கள் கோபம் நியாயமானதுதான். இயன்றவரை நீங்கள் சொல்லும் குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. அப்படி முடியாவிட்டால் இதை விட்டுவிடுகிறேன் என்று பொறுமையாக பதில் சொல்லுவார். மற்றவர்கள் இவர் ஏன் இப்படி அடங்கிப் போகிறார் என்று கவலைப் பட்டார்கள். ஆனால் தேர்தலின் முடிவில் இவர்தான் அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அவரது பொறுமையும், கோபப்படாமல் சொன்ன பதில்களும்தான் காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே தான் வெற்றியடைய வேண்டுமானால், அது எந்தத் துறையானாலும் கோபப்படாமல் தவம் செய்வது போல வாழ்க்கையை கசடு நீக்கிக் நடந்து கொள்வானானால் அது இனிமை தரும்.

அந்த பகுதி மக்களுக்குப் பல தேவைகள் இருந்தன. குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. சில கல் தூரத்தில் இருந்த ஒரு பெரிய ஆற்றிலிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வந்து மேல் நிலைத் தொட்டிகள் அமைத்து ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்தால் இந்தப் பிரச்சினை தீரும். ஆனால் அந்தக் குழாய்களைக் கொண்டு வரும் வழியில் இருக்கும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மறுத்தனர். இவர் பொறுமையாக அனைவரையும் சந்தித்து, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகச் சிலர் தங்கள் சொந்த நலனை விட்டுக் கொடுத்தல் தியாகம் அல்லவா. அந்தத் தியாகத்தை நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, மெல்ல அவர்களைச் சம்மதிக்க வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். இதுபோல பல விஷயங்களில் அவருடைய விடாமுயற்சியும், உறுதியும் மக்கள் நலனுக்கு உகந்ததாக அமைந்தது. இவருடைய இப்படிப்பட்ட ஆற்றல் இனிமையானது அல்லவா?

இவருடைய திறமையையும், ஆற்றலையும் கண்ட அவரது கட்சிக்காரர்கள் இவர் அமைச்சராக ஆனால் மேலும் பல நன்மைகளைச் செய்யலாமே, மாநிலம் முழுவதுக்கும் இவரது திறமை பயன்படுமே என்றெல்லாம் சொல்லி இவர் மனத்தில் சலனத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இவருக்கு அத்தகைய ஆசையோ, ஆர்வமோ சிறிதும் இல்லை. இருக்கும் பதவியைக் கொண்டு எத்தனை பேருக்கு நல்லது செய்யமுடியுமோ அதைச் செய்தால் போதும். எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்குப் போக நான் விரும்பவும் இல்லை. அந்த எண்ணம் எனக்கு இல்லவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து தன் தொகுதி மக்களுக்கு நல்லவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இவரது மனம் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு நல்லவை செய்ய நினைத்தது இனிமையானது அல்லவா?

"வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது."

வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், எதற்கும் சலனப்படாமல், கோபப்படாமல் தவம் போல் வாழ்பவனது செயல் இனிமையானது; தான் ஈடுபட்ட செயலை முடிப்பதையே நோக்கமாக இருந்து காரியத்தை முடிப்பவனின் ஆற்றல் இனிமை தரும். தன்னிடம் இல்லாத ஒன்றுக்காக விரும்பியும் அது கிடைக்காமல் போவதால் மனம் துன்பப்படாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்பவனின் செயல் இனிமை தரும்.

Tuesday, February 28, 2012

"இனியவை நாற்பது" (23)


23. இனியவை இருபத்திமூன்று.

ஒருவர் தான் பிறந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்துக்குத் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரைப் பார்த்து வரலாமே என்று போய்ப் பார்த்தார். அவருக்கு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த பசுமையான, அழகான, சுத்தமான எங்கும் மக்கள் அன்போடு பழகும் மக்களையும் மனதில் வைத்திருந்து இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்து அங்கு போனபோது ஏமாற்றம்தான் மிகுந்திருந்தது. அந்த சிறு கிராமத்துக்கு அங்கிருந்த சிவன் கோயிலும், ஊருக்குக் கிழக்கே இருந்த மாரியம்மன் கோயிலும்தான் பெருமை சேர்த்தவை. ஆனால் இன்று சிவன் கோயில் பாழடைந்து கிடந்தது. ஏதோ செய்ய வேண்டுமே என்று கோயிலுக்கு விளக்கேற்றி பூஜைகள் செய்ய ஒருவர் இருந்தார். மாரியம்மன் கோயில் ஓரளவு பரவாயில்லை. மக்கள் நடமாட்டம் அங்கு இருந்தது.

சிவன் கோயில் சந்நிதியில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. அது தவிர கோயில் திருக்குளமொன்று சந்நிதித் தெருவில் வடபுறம் அமைந்திருந்தது. அழகான மண்டபத்துடன் கூடிய படித்துறை, நான்கு புறமும் குளத்துக்குப் படிக்கட்டுகள். அந்த பத்து வீடுகளிலும் கோயில் பூஜை செய்வோர், நாதஸ்வர வித்வான்கள், கோயில் நிர்வாகி ஆகியோர் இருந்தனர். சில வீடுகள் இடிந்து பாழடைந்து கிடந்தன. இவருக்கு மனம் வேதனையால் தவித்தது. கோயில் சந்நிதித் தெருவில் இரு வரிசையில் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்த இலவம் மரங்களும், திருவிழா காலத்தில் ஈச்சை, இளநீர், மாவிலை, தோரணங்கள் அழகு செய்யவும், பந்தல் போடவும் அந்த மரங்கள் பயன்பட்டன. இன்று ஒன்றும் இல்லை. ஒரே மணல் வெளி. காரணம் அங்கிருந்து ஐந்து கல் தூரத்தில் கடற்கரை.

இவர் ஓர் முடிவுக்கு வந்தார். அந்த சந்நிதித் தெருவில் இடிந்து விழுந்திருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தார். தன்னுடைய முயற்சியால் இடிந்து கிடந்த திருக்குளத்தை சீரமைக்கவும், கோயிலில் எல்லா கால பூஜைகளும் நடக்கவும் முயற்சி எடுக்க முடிவு செய்தார். சந்நிதித் தெரு வீட்டையும், அதன் பின்புறம் இருந்த ஏராளமான தரிசு நிலத்தையும் விலைகொடுத்து வாங்கினார். அந்த சந்நிதி புதுத் தோற்றம் பூண்டது. சுற்றியிருந்த நிலத்தில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினார். நீர்பாய்ச்சி அங்கு ஒரு அழகான தோட்டத்தை வளர்த்தார். இவரது முயற்சி அவ்வூராருக்கும் தெம்பைக் கொடுத்து, கோயில் மீண்டும் புத்துணர்வு பெற ஆரம்பித்தது. சுற்றுலா வருபவர்களும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்களும் அதிகரித்தனர். அவர்கள் கண்களைக் கவர்ந்தது அவர் வளர்த்த அந்தப் பூஞ்சோலையும், புது வீடும் தான். இன்று அந்த கிராமத்துச் சிவன் கோயிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். அவரது பூஞ்சோலையில் அமர்ந்து வெயில் வேளையில் ஓய்வு கொள்கின்றனர். உணவு சாப்பிடுகின்றனர். எதிரிலுள்ள கோயில் திருக்குளத்துக்கு புது நீர் வரும் பாதை சரி செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. குளம் இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அத்தகைய ஊரில் இப்படிப்பட்ட சோலை அமைப்பதும், குளத்தைச் சீரமைப்பதும் இனிமையானது அல்லவா?

முன்பெல்லாம், அதாவது லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் முன்னர், அதாவது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் தமிழகத்தில் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்தந்த தொழில் செய்வோர் தங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களது பழக்க வழக்கங்கள் அந்தந்தத் தொழில் செய்வோர் மத்தியில் ஒரே மாதிரியாக இருந்தன. மற்ற தொழில் புரிவோர் அவர்கள் மக்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டனர். இப்படி தொழில் ரீதியாகப் பிரிந்திருந்தவர்கள் ஊர் பொதுக் காரியம் என்றால் ஒன்று சேர்ந்தனர். இவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இதில் ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகம் புரிவதும் வேதம் படிக்கவும், கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்கள் தரும் பொருளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளவுமாக இருந்தனர். ஆங்கிலேயரின் வருகையால் இந்தப் பிரிவுகள் கலகலத்தன. ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. அதனால் ஒற்றுமையோடு இருந்த சமுதாயம் பிரிந்து நின்றது. பிரித்தாளும் சூழ்ச்சியை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்து வெள்ளையர்கள் நம் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர். 

அப்படிப் பிரிவினைகள் ஏற்படாத காலத்தில் உலக நன்மைக்காக யாகங்களைச் செய்து வந்த அந்தணர்களுக்கு மற்ற சமூகத்தார் வேண்டிய உதவிகளைச் செய்தனர். பசுக்களை தானம் செய்தனர். பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழ்வித்தனர். அந்த காலத்துச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட அறச் செயல் இனிமையாக இருந்தது. அப்படி வேதம் பயின்று பிறர் நலனுக்காக வேண்டும் இனத்தார் தங்களுக்கென்று எந்த சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. நாளைக்கு என்று கூட சேர்க்கக் கூடாது. பிறர் தரும் பொருளில்தான் வாழ வேண்டும் என்ற நியதி இருந்தது. நியமம் தவறாமல் வாழ்ந்த இவர்களை மதித்து பசு, பொன் போன்றவற்றை ஏனையோர் கொடுத்து வந்தனர். இது இனிமையானது என்கிறது இந்தப் பாடல்.

பாவ புண்ணியத்துச் சூதாடிகள் அஞ்சுவதில்லை. ஏமாந்தால் ஏழையைக் கூட மொட்டையடித்து விடுவார்கள். தெருவோரத்தில் நான்கு சீட்டுகளை மாற்றி மாற்றி விரித்து வைத்து அதன் மீது ஒரு தகர டப்பாவை கவிழ்த்து அதனடியில் இருக்கும் சீட்டின் அடையாளத்தில் பணம் கட்டினால் பன்மடங்கு தருவதாகச் சொல்லி எளியவர்களை மொட்டையடிக்கும் மோசடிப் பேர்வழிகள் ஏராளமாக இருக்கின்றனர். பொய் சொல்லி, ஏமாற்றி, சூதாடவைத்து இப்படி மக்களை மோசடி செய்யும் பேர்வழிகளை ஒதுக்கி, அவர்கள் நிழல்கூட நம் மீது படாமல் பார்த்துக் கொள்வது இனிமை தரும்.

"காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது."

இதன் பொருள்: நல்ல பசும் சோலையை வளர்ப்பதும், அறம் செய்வதற்கென்று நீர்நிலைகள் குளங்களை வெட்டுதல் மிக இனிமை பொருந்தியது. பசுவையும் பொன்னையும் வேதம் பயின்ற எளிய அந்தணர்க்குக் கொடுப்பது இனிது; பாவங்களுக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு நீங்குதல் மிக இனிது.

Monday, February 27, 2012

"இனியவை நாற்பது" (22)

22. இனிமை இருபத்தியிரண்டு.

மும்பையில் சிறுவயதிலேயே சென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு திரும்ப தமிழ்நாட்டுக்குத் தன் சொந்த ஊருக்குத் திரும்பியவர் அவர். மும்பை போவதற்கு முன்பு மிக மிக சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நல்ல வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்கும் அவருக்கு நான், நீ என்று பெண் கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர். திருமணமாகி குழந்தைகளைப் பெற்று மிகவும் கெளரவமான நிலையில் வாழ்ந்து வந்தார் அவர். அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் ஏனைய ஊழியர்கள் அனேகம் பேர் இவரைக் காட்டிலும் வயதில் இளையவர்கள். அவர்கள் எல்லாம் இவரிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். அவருடைய இளகிய குணத்தையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வேலை பார்த்த சில கடைநிலை ஊழியர்கள், தாங்கள் சீட்டாடவும் பணம் வேண்டுமென்பதற்காக பொய் சொல்லி, மருத்துவச் செலவுக்கு என்றும், சாப்பாட்டுச் செலவுக்கு என்றும் இவரிடம் பணம் கேட்பார்கள். இவரும் அவர்களுடைய பொய்யை நிஜம் என்று நம்பி தன் சக்திக்கு மேல் கடன் கொடுத்து விடுவார். கொடுத்ததைக் கேட்பது, கண்டிப்பாக இருப்பது என்பது இவரிடம் கிடையாது. அதன் பலனாக இவருக்கு வருவாய்க்கு மேல் கடன் ஏற்பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடன்பட்டு கஷ்டப்பட்டார். அப்போது அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சில நண்பர்கள் அவருக்கு தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். பொய் சொல்லி பணம் பறிக்கும் சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும் உதவி செய்வது நல்லதல்ல என்பதை எடுத்துரைத்தனர். அப்போதுதான் அவரும் புரிந்து கொண்டார் வருவாய்க்கு ஏற்பதான் வழங்க வேண்டும் என்பதை. அதுவே இனிமை என்பதும் புரிந்தது.

இவர் பணிபுரிந்து அலுவலகத்தில் இரு வேறு தொழிற்சங்கங்கள் இருந்தன. இவருக்கு தொழிற்சங்கத்தின் மீது அபிமானம் உண்டு. ஆனால் அரசியல் கட்சிகளின் அங்கமாக அவை இயங்குவதை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே இவர் ஒரு சங்கத்தில் பட்டும் படாமலும் இருந்து வந்தார். அந்தச் சங்கம் ஒரு கட்சியாகவே நடத்தப்பட்டு வந்தது. அதில் உறுப்பினர் இல்லாதவர்களை ஒதுக்கி வைத்தார்கள். இடையூறுகளைக் கொடுத்தார்கள். அவர்களைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். இதையெல்லாம் கவனித்த நமது நண்பர் எந்த சங்கத்திலும் தீவிரமாக ஈடுபடாமல் ஒப்புக்கு இரு பக்கத்தினரும் சமாதானம் அடையும் வகையில் மிக சாமர்த்தியமாக ஒருதலை பட்சமாக எவர் பக்கமும் சாயாமல் இருந்து விட்டார். அவர்கள் இருவராலும் இவருக்கு எந்த பயனும் இல்லையென்றாலும் இவருக்குத் தொல்லை இல்லாமல் இருதந்தே இனிமையான அனுபவம் தானே.

மற்றவர்களைப் போல இவரும் ஆடம்பரமாகவும், வசதிகளைப் பெருக்கிக் கொண்டும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய பிறவி குணம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தான் விரும்பியதையெல்லாம் அடைய வேண்டும் என்கிற வெறி அவரிடம் இல்லை. அவருடைய வீட்டிற்குச் சென்றால் ஆடம்பரப் பொருட்கள் எதையும் காணமுடியாது. மனைவின் கழுத்திலும் தாங்கமுடியாத தங்கத்தைக் காண முடியாது. எளிமை, நேர்மை அதுவே இனிமை என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் அந்த உத்தமர். அப்படியொருவார் வாழ்ந்தார், அது உண்மை.

"வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர் பாங்காகாத ஊக்கம் இனிதே
பெரு வகைத்தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது."

இதன் பொருள்: தன்னுடைய வருவாய்க்குத் தகுந்தாற்போல பிறர்க்கு வழங்குவது இனிது; யார் பக்கத்திலும் சாய்ந்து ஒருதலை பட்சமாக நடக்காமல் இருப்பது இனிது; பெரும் பயன் விளைவிப்பதாயினும், தான் விரும்பியபடியெல்லாம் வாழாமல் தன் இயல்புக்கேற்ப எளிமையாக வாழ்தல் இனிது.


"இனியவை நாற்பது" (21)

21. இனியது இருபத்தியொன்று. 

பொதுவாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பல இடங்கள், இங்கெல்லாம் வேலையற்ற சிலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பார்வைக்கு அவர்கள் வித்தியாசமாகத் தெரிய மாட்டார்கள். சிலர் மிகவும் நைச்சியமாகப் பேசி நம்மிடம் பழகக்கூடத் தொடங்குவார்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வது ஆபத்து. நாம் யார் எங்கிருந்து வருகிறோம், என்ன வேலையாக வருகிறோம் என்பதையெல்லாம் அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை நம்பவைத்த பின் சற்று என் பெட்டி, பைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், கழிப்பறை வரை சென்று வருகிறேன் என்று புதியவரை நம்பி விட்டுவிட்டுச் சென்றால், திரும்ப வரும்போது அங்கு உங்கள் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் பிறர் பொருட்களை பறித்துக் கொள்வதற்கென்றே சிலர் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்போடு இருந்தால்தான் இத்தகைய நபர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கலாம். இதுபோன்ற ஈனப் பிறவிகளை நினைக்கும்போது, இவர்கள் மற்றவர்கள் கைப்பொருளைத் திருடி வயிறு வளர்ப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அப்படி பிறர் பொருளைப் பறிக்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது இருபத்தியொன்றாம் பாடல்.

மனிதன் பிறர் பொருளைக் கவராமல் இருப்பது மட்டுமல்லாமல், மனதில் இரக்கம் உள்ளவனாகவும், பிறருக்கு உதவி செய்பவனாகவும், தான தர்ம காரியங்களைத் தனக்கு முடிந்த வரையில் செய்து வருபவனாகவும் இருத்தல் மேலும் இனிமை பயக்கும்.

நாம் தினந்தினம் எத்தனையோ மனிதர்களிடம் பழகுகிறோம், பார்க்கிறோம். ஆனால் அத்தனை பேரும் நாம் நட்பு கொள்ளக்கூடிய தகுதி படைத்தவர்களாகக் கருத முடியாது. சிலர் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்; சிலர் பொறாமை கொண்டவர்கள், சிலர் நம்மிடம் ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள், சிலர் கல் நெஞ்சுக்காரர்கள் ஆபத்தில்கூட உதவமாட்டார்கள். இப்படிப்பட்ட உபயோகமற்ற நபர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிதாகும்.

"பிறன் கைப்பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது."

வெளவுதல் என்றால் பறித்துக் கொள்ளுதல். மயரிகள் என்றால் அறிவற்ற மக்கள்.

மற்றவருடைய பொருட்களை கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது; தர்ம காரியங்களைச் செய்து, நாம் செய்திருக்கக்கூடிய பாவங்களிலிருந்து மீளல் இனிது; மறந்துகூட அறிவற்ற வீணர்களுடன் சேராமல் இருத்தல் இனிது.

Saturday, February 25, 2012

"இனியவை நாற்பது" (20)

20. இனியது இருபது.

நம்மைச் சுற்றி எத்தனை வகை மனிதர்கள். நம்மிடம் உயிருக்குயிராகப் பழகும் நற்பண்புள்ள நண்பர்கள்; நம்மீது அழுக்காறு கொண்டவர்கள்; வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நமக்குத் துணை நிற்பவர்கள்; நமக்கு எப்போது தீங்கு விளைக்கலாம் என்று காத்திருக்கும் வஞ்சகர்கள் இப்படி எத்தனை வகை மனிதர்கள். இவர்களோடு பழகும்போது நமக்கு இவர்களின் ஆழ்குணம் தெரிவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பம் அமையும் போதுதான் யார் எப்படி என்று தெரிந்து கொள்ள முடியும். எதிர் வீட்டில் ஒருவன் யாரோடும் அதிகம் பேச மாட்டான். பார்வைக்கு அவன் ஒரு அகம்பாவம் பிடித்தவன் போல் தோன்றுவான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டுத் தன் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் வேறொரு வண்டி மோதி சாலையில் விழுந்து விட்டான். அங்கு முதலில் ஓடிப்போய் அவனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்து, அவன் நலம் பெறும் வரையில் அவனோடு பாடாய்ப் பட்டான் எதிர் வீட்டுக் காரன். அங்கிருந்த அனைவருக்கும் இது புதிராக இருந்தது. ஆனால் மற்றவர்களோடு நல்லவன் மாதிரி பழகிவிட்டு, பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பிறகு வஞ்சக எண்ணத்துடன் ஒருவன் பல தீய காரியங்களைச் செய்து மாட்டிக் கொண்டான். அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது பார்வையில் ஒருவனை எடை போட முடியாது. அவனுடைய குணங்களை அறிந்துதான் புரிந்து கொள்ள வேண்டுமென்று. தேர்ந்து ஆய்ந்து நல்லவர்களோடு மட்டும் பழக வேண்டும். வஞ்சக குணம் கொண்டோரை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது இனிமையானது என்கிறது பாடல்.

தெருவில் ஒரு பெரியவர். மரியாதைக் குரியவர். அன்பும் பண்பும் உடைய பெரியவர். பலருக்கும் அவர் பல சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளைச் சொல்லியும், அவரே அலைந்து பிறருக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொடுக்கவும் செய்வார். பிரச்சினைகளோடு அவரிடம் செல்பவர்களுக்கு அந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பற்றி அறிவுபூர்வமாக ஆலோசனைகளைச் சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவரின் சொற்களை மரியாதையுடன் ஏற்று நடந்து கொள்வது இனிது.

முதலிலேயே சொன்னபடி நம்மைச் சுற்றி ஏராளமான மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் இப்படி எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. இவை பறவைகள் தானே, அவை மிருகங்கள் தானே, என்று ஒதுக்கிவிட்டுவிடாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும், பாசத்துடன் பழகுதல் வேண்டும். இறைவன் படைத்த உயிர்களில் பாகுபாடு எதற்கு அனைத்துக்கும் என்னென்ன தேவைகளோ அதற்கேற்றாற்போல உதவி புரிதல் வேண்டும். வள்ளலார் பெருமான் சொன்னார், ஆருயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டுமென்று. அதனைக் கடைப்பிடித்தல் இனிது.

அந்தப் பாடல் இதோ:

"சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது."

சலவர்: வஞ்சனை புரிபவர்.

பொருள்: வஞ்சக எண்ணம் கொண்டவர்களை விலக்கிவிடுதல் இனிமை; அறிவுடைய பெரியோர்கள் சொற்களைப் போற்றுதல் இனிமை; உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளிடத்தும் அவற்றிற்கு ஏற்றார்போல அன்பு செய்தல் இனிமை.

Friday, February 24, 2012

இனியது பத்தொன்பது. (19)


19. இனியது பத்தொன்பது. 

ஒருவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இவன் நன்கு பழகுவான். சிலரிடம் சில குறைகள் உண்டு. இருந்தாலும் இவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மற்ற சிலர் நல்ல குணங்கள் அற்றவராக இருந்தாலும், இவன் அவர்களைப் பற்றி எந்த குறையும் சொல்வதில்லை. அவர்களைப் பற்றி எங்கும் புறம் கூறுவதில்லை. இந்த காரணத்தினாலேயே அவனுக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. நன்கு பழகும் நண்பர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது.

இவனுக்கும் பொய் சொல்லும் பழக்கம் கிடையாது. எப்போதும் உண்மையையே பேசுபவன். ஆகையால் சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இறுதியில் இவன் சத்தியத்தையே பேசிவந்தமையால் இவனுக்கு மரியாதையும், நல்ல மதிப்பும் இருந்தது. இவன் அனைவரிடமும் மரியாதையுடந்தான் பேசுவான், நடந்து கொள்வான், அப்படி வாழ்தல் இனியது என்கிறது நூல்.

இவன் கடுமையாக உழைத்தான். பொருள் சேரத் தொடங்கியது. ஒரு நேரத்தில் இவன் எதிர்பார்த்திருந்ததை விட மிக அதிகமான பொருள் இவனிடம் சேர்ந்தது. அப்படிச் சேர்ந்த பொருளை இவன் வீணாக செலவு செய்யவில்லை. மாறாக தக்கோர்க்கு, தேவைப்படும் எளியவர்களுக்குப் பல உதவிகளைச் செய்ய இந்த செல்வத்தைப் பயன்படுத்தினான். அதனால் இவன் மனதுக்கும் இனிமை ஏற்பட்டது.

அந்தப் பாடல். "நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன் இனிதே
முட்டில் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது."

இதன் பொருள்: தன்னுடைய நண்பர்கள் குழாம் குறித்து புறம் கூறாதிருத்தல் இனிமை தரும்; நன்மைகள் செய்து அனைவரிடமும் பணிவோடு நடந்து கொள்வது இனிமை; அதிக அளவில் பொருள் சேர்ந்து விட்டால் அதைத் தேவை உணர்ந்து தக்கார்கு வழங்குதல் இனிமை தரும்.



இந்த பக்கத்தின் வலதுபுறம் YOU TUBE எனும் அடையாளம் உள்ள இடத்தில் 'கிளிக்' செய்தால் பல படங்கள் வரும். அதில் திருவையாறு நாட்டியாஞ்சலி மற்றும் திருவையாறு ஆலயம் பற்றி 'மக்கள் தொலைக்காட்சி'யில் வந்த பகுதியையும் பார்க்கலாம்.

Thursday, February 23, 2012

திருவையாற்றில் நாட்டியாஞ்சலி விழா

கடந்த இரண்டு மாதங்களாக திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். சுமார் ஐம்பது குழுக்கள் இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்காக முதல் நாளான 19-2-2012 க்கு 11 குழுக்களும், இரண்டாம் நாள் 14 குழுக்களும், நிறைவு நாளுக்கு 13 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவுக்கு மதிப்பியல் தலைவராக திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை, மெளன மடம் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் இருக்கிறார். கெளரவ ஆலோசகராக பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவனர், பரிசுத்தம் ஓட்டல் அதிபர், வழக்கறிஞர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி இருக்கிறார். தஞ்சை வெ.கோபாலன் விழா குழுவின் தலைவராகவும், வழக்கறிஞர் நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு தங்க. கலியமூர்த்தி செயலாளராகவும், திரு தி.ச.சந்திரசேகரன் பொருளாளராகவும், சின்னமனூர் சகோதரிகள் அ.சித்ரா, அ.சுஜாதா ஆகியோர் நாட்டியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செயலாளர்களாகவும் இருந்து விழாவை நடத்துகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திரு சி.நா.மி.உபையதுல்லா, இந்து பத்திரிகை சிறப்பு நிருபர் திரு கோ.ஸ்ரீநிவாசன், திரைப்பட நட்சத்திரம் ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோர் அறங்காவலர்கள். திரு டி.கே.ரவி, திரு புனல் வை.சிவசங்கரன், எம்.ஆர்.பி. காஸ் சர்வீஸ் அதிபர் காருகுடி இராமகிருஷ்ணன், பிளாக் டியுலிப் அதிபர், எல்.ஐ.சி. திரு கே.முத்துராமகிருஷ்ணன், திரு டி.கே.குருநாதன், பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி, இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள், தஞ்சை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் விழா குழுவில் அங்கம் வகிக்கின்றனர். 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பரிசுத்தம் ஓட்டல், பிளாக் டியுலிப், டெக்கான் மூர்த்தி அவர்கள், எடப்பாடி சுப்பிரமணியம் அவர்கள் போன்றவர்கள் விழாவுக்கு போஷகர்களாக இருக்கின்றனர். விழாவில் பங்குபெற வேண்டிய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் வெளியிடும் வேலை முடிந்து விழா நாளும் நெருங்கி வந்தது.

19-2-2012 ஞாயிறு அன்று பிரதோஷம். அன்று மாலை ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழா தொடங்கியது. முனைவர் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் ஆடல்வல்லான் விக்கிரகத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

19-2-2012 கோலாகல துவக்கம்

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் மூன்று நாட்கள் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை சரியாக 6.05 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை தம்பிரான் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் துவக்கி வைத்தார். தஞ்சை தொழிலதிபர் எஸ்.பி.அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி ப.உமாமகேஸ்வரி, முன்னாள் முதல்வர் முனைவர் இராம. கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து ஆடல்வல்லான் நாட்டியக் குழுவினர் க.வஜ்ரவேலுவின் தலைமையிலும், திருச்சி சகோதரிகள் ஜெயசுஜிதாவின் மோகினி ஆட்டமும், பண்ருட்டி கலைச்சோலை டி.சுரேஷ் குழுவினரின் பரதம், சின்னமனூர் அ.சுஜாதா ரமேஷ், விஜய் கார்த்திகேயன் குழுவினரின் நாதலய நடனம், மும்பை தானே நிருத்யாஞ்சலி கலைக் குழுமத்தின் இயக்குனர் லதா ராஜேஷ் குழுவினரின் பரதம், சென்னை முகப்பேர் இரா.காசிராமன் குழுவினர், நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி ராஜமீனாட்சி குழுவினர், தஞ்சை ஓம்சக்தி நடனப் பள்ளி பரமேஸ்வரி குழுவினர், நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குழுவினர் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மோஹினி ஆட்டம் மக்கள் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் மிகச் சிறப்பாக ஆடி கூடியிருந்த வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழக்கம் போல் சின்னமனூர் சுஜாதாவும் அவரது சகோதரர் விஜய் கார்த்திகேயனும் மிகச் சிறப்பாகப் உருவாக்கிய இளம் கலைஞர்கள் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆடி மக்கள் மனங்களைக் கவர்ந்தனர். மும்பை தாணேயிலிருந்து வந்திருந்த திருமதி லதா ராஜேஷ் குழுவினர் இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை புரிந்தார்கள். அவர்களது சிறப்பான நடனத்தை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துப் பாராட்டினர்.

திருத்தருமையாதீனத்துக்குட்பட்ட ஆலயங்களில் இன்று மகாசிவராத்திரி என்பதால் பொதுமக்கள் கூட்டம் திரளாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர். ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டியின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், காருகுடி இராமகிருஷ்ணன் ஆகியோர் கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினரின் குச்சிப்புடி நடனம்

'நாட்டியாஞ்சலி' விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மகா சிவராத்திரி தினமான 20-2-2012 திங்களன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரண்டாம் நாள் விழாவிற்கு திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமை ஏற்றார். இசைக் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கி தொடர்ந்து சென்னை வைஷ்ணவி கார்த்திகேயனின் நடனம், சென்னை சிறுமி பாலபிரியா, கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம் எஸ்.விஜயமாலதி குழுவினர், நெல்லை இன்னிசை நாட்டியமணி இந்திரா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா அனுபமா ஜெயசிம்மா குழுவினர், சென்னை வேம்பட்டி ரவிஷங்கரின் மாணவியர் குச்சிப்புடி நடனம், சிதம்பரம் திரு அகிலனின் தகதிமிதா குழுவினர், குடந்தை ஸ்ரீ சிவசக்தி கவிதா விஜயகுமார், அவருடைய மாணவி அபிராமி ஜெயராமன், ஆர்.திவ்யா ஆகியோர் நடனமாடினர். சென்னை தமிழிசைச் சங்க இசை நாட்டியக் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி சுந்தரின் மாணவியர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இவ்வாண்டின் சிறப்பம்சமாக பெங்களூரிலிருந்து புகழ்பெற்ற நடனக் குழுவினர் அனுபமா ஜெயசிம்மா தலைமையில் வந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாக சென்னை வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினர் நடத்திய குச்சிப்புடி நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் குழுவில் அனுபவமிக்க குச்சிப்புடி கலைஞர்கள் பங்குகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.

நாட்டியாஞ்சலி நிறைவு 

மூன்றாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ. உபையதுல்லா அவர்கள் தலைமை வகித்தார். முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு வீணையிசை நடந்தது. இதில் இருபத்தைந்து பேர் ஒருங்கிணைந்து வீணை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குடந்தை ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஜென்சி லாரன்ஸ் மாணவியர் நடனமும் நடந்தது.

கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர் குரு ம.சுகந்தபிரியாவின் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தினர். பராசக்தியின் பெருமைகளை விளக்கும் அந்த நாட்டிய நாடகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலியின் சார்பில் சுகந்தப்பிரியாவின் நாட்டியப் பணியைப் பாராட்டி பாராட்டு இதழை முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபையதுல்லா வழங்கினார்.

சிதம்பரம் சிவசக்தி இசை நாடனப் பள்ளியின் குரு வி.என்.கனகாம்புஜம் அவர்களின் மாணவிகளின் பரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாயூரம் பழைய கூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட்.பள்ளி மாணவியரின் பரதம் குரு வி.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர் பினேஷ் மகாதேவன் தலைமையில் நிகழ்ச்சியை நடத்தினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் காயத்ரி வைத்யநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயாவின் மாணவியர் குரு கலா ஸ்ரீநிவாசன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் கிராமியக் கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம், பாம்பு நடனம் ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குடந்தை நாட்டியக் கலாலயம் நடனப் பள்ளியின் கீதா அஷோக் மாணவியரின் பரதநாட்டியமும், தஞ்சை சக்தி நாட்டிய கலாலயம் மாணவியர் குரு அருணா சுப்பிரமணியம் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து வந்திருந்த தமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டியம் பரவசமூட்டுவதாக இருந்தது. நிறைவு நிகழ்ச்சியாக மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. வேத மந்திரம், அர்த்தநாரீஸ்வரர், தில்லானா ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

விழாவின் நிறைவில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன், விழாவில் பங்குகொண்ட நடனக் கலைஞர்களுக்கும், விழா சிறப்புற நடக்க ஒத்துழைத்த நிறுவனங்கள், இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். 
செயலர் தங்க கலியமூர்த்தி, தி.ச.சந்திரசேகரன், ப.இராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன், நீ.சீனிவாசன், முனைவர் இராம கெளசல்யா, பேராசிரியர் ப.உமாமகேஸ்வரி, டி.கே.ரவி, புனல் வை.சிவசங்கரன் ஆகியோர் விழாவின் வெற்றிக்கு இடைவிடாமல் உழைத்து வந்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்" எனும் பாரதி பாடலை மும்பை திருமதி பத்மினி இராதாகிருஷ்ணன் பாடி விழாவை நிறைவு செய்தார்.

"இனியவை நாற்பது" (18)


18. பதினெட்டாம் இனிமை.

அந்த ஊர் சிறிய ஊரானாலும், கற்றறிந்த பெரியோர்கள் வாழ்கின்ற ஊர். ஊர் மன்றில் கூட்டங்கள் நடக்கும் போது அங்கு அறிவார்ந்த விஷயங்கள் பேசப்படும். கடுஞ்சொற்கள் நீக்கி பண்போடு பேசும் மக்கள் அந்த மன்றில் கூடி விவாதிப்பார்கள். அங்கு சென்று அத்தகைய கூட்டங்களைப் பார்த்து பேசுபவற்றை கேட்பதே ஓர் இனிய அனுபவமாக இருக்கும். அத்தகைய மூத்த அறிவார்ந்த குடிமக்கள் வாழும் ஊரில் வாழ்வதே இனிமை என்கிறது நூல்.

தவசிகள் என்போர் அனைத்தையும் துறந்து வனாந்தரங்களில் தவம் செய்பவர்கள். அப்படியில்லாமல் ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தன்னை ஆசாபாசங்களிலிருந்தும் விலக்கி நன்மைகளை நினைத்து செய்யும் பெரியோர்களும் உண்டு. இத்தகையவர்கள் நேர்மை பிசகாதவர்கள். நல்லதை எண்ணி, மற்றவர்களுக்கு நன்மைகளை மட்டுமே நினைப்பவர்கள். பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள். நல்ல ஆலோசனைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். அத்தகையோரின் கூட்டுறவே இனிமை தரும்.

காலை பொழுது விடிந்ததும் குடும்பத்துப் பெரியோர்கள் தாய் தந்தையர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களை வணங்கி ஆசி பெறுதல் இனிமை தரும்.

இனி பாடல்:

"மன்றின் முதுமக்கள் வாழும் பதி இனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் 
கண்டெழுதல் காலை இனிது"

ஊர் அவையில் நல்ல தேர்ந்த அறிவுடைய மக்கள் வாழும் ஊர் இனிமையுடையது. சாஸ்திர நூல்கள் சொல்லும் முறையில் வாழும் தவ முனிவர்களின் மாண்பு இனிதாகும். குடும்பத்தின் மூத்தவர்கள், தாய் தந்தையர்களை காலையில் வணங்கி எழல் இனிமையுடைத்து.

Wednesday, February 22, 2012

"இனியவை நாற்பது" (17)

17. பதினேழாம் இனிமை. 

பலரோடும் பழகும் தன்மை கொண்ட ஒருவன், பல நண்பர்களை அடைகிறான். அப்படி இவனுடன் சேர்ந்த நண்பர்களுக்கு பல நேரங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நன்மைகளை மனமுவந்து இவன் செய்யத் தொடங்கினான். ஆகையால் இவனுடன் நட்பு கொள்ள பலரும் ஆவலுடன் இருந்தனர். இப்படி நண்பர்களுக்கு நல்ல காரியங்களுக்கு உதவுதல் எத்தனை இனிமை?

ஒருவனுக்கு எல்லோருமே நண்பர்களாக இருந்து விடுவதில்லை. ஒரு சிலர் இவனுக்கு எதிரிகளாகவும் அமைந்து விடலாம். அப்படிப்பட்ட எதிரிகள் தவறிழைப்பவர்களாகவும் கெட்ட குணங்களுடையவர்களாகவும் இருத்தலால், அப்படிப்பட்டவர்களிடம் சேராமல் ஒதுங்கியிருப்பவர்களும் உண்டு. அத்தகையவர்களை, நம் எதிரியோடு உறவு இல்லாமல் இருக்கும் காரணத்தினாலேயே, நாம் உறவு வைத்துக் கொள்ளுதல் இனிது.

மனிதனுக்கு முக்கியத் தேவை உணவு. உணவுக்கு வேண்டிய தானியங்கள் மிக்க அளவில் விளந்திருக்கின்றன. வீடு நிறைய தானியக் குவியல்கள். பஞ்ச காலம் வந்தாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவு விளைந்து வந்து வீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தன்னையும் காத்துத் தன் செல்வத்தையும் காத்துக் கொள்ள வேண்டுமாயின் நல்ல மெய்க்காப்பு வீரர்கள் தேவை. இப்படி உணவு தானியங்களும், பாதுகாவலுக்கு மெய்க்காவலர்களும் அமைதல் இனிது.

"நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது."

இதன் பொருள்: தன்னோடு நட்பு கொண்டவர்களுக்கு நன்மை செய்தல் இனிது; நம் பகைவருக்கு எதிரானவர்களை நம்மோடு உறவு வேண்டி சேர்த்துக் கொள்ளுதல் இனிது; நல்ல தானியக் குவியல்களும், நல்ல பாதுகாவலர்களும் இருந்தால் மிகவும் இனிது.

Monday, February 20, 2012

"இனியவை நாற்பது" (16)

16. பதினாறாம் இனிமை.

இவன் ஒரு அலுவலகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தான். இவனுக்குப் படிக்கும் காலத்திலேயே இலக்கியங்களின் மீது காதல். நேரம் கிடைத்த போதெல்லாம் பல இலக்கிய நூல்களை வாங்கிப் படிப்பான். பல அறிவுசால் பெரியோர்கள் பேசும் இலக்கியக் கூட்டங்களுக் கெல்லாம் சென்று கவனமாகக் கேட்பான். அப்படி அவர்கள் சொல்லும் பல புதிய செய்திகளை மனத்தில் வாங்கிக் கொண்டி இவன் அந்த இலக்கியத்தைப் படிக்கும் போது அவற்றை நினைவு கூர்ந்து மகிழ்வான். பணி ஓய்வு கிடைத்ததும் இனி என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு. அந்த நேரத்தில் இவனுடைய நண்பனொருவன் இவனை ஒரு இலக்கிய வட்டத்தில் சேர்த்து விட்டான். அங்கு இவனுக்குப் பல புதிய இலக்கியங்களைப் படிக்கவும், பல பெரியோர்களின் துணையும் கிடைக்கும்படி நேர்ந்தது. இவன் மிகக் குறுகிய காலத்தில் அந்த இலக்கிய வட்ட பெரியோர்களுக்குச் சமமாக உட்கார்ந்து விவாதிக்கவும், படித்தும் கேட்டும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியதனால் இவனும் நல்ல பணிதனாக ஆனான். அப்படிப் பட்ட சூழ்நிலையில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு இலக்கியவாதி இவனைத் தனக்குச் சமமாக எண்ணி, இவனோடு பல இலக்கிய விஷயங்களைப் பேசப் பேச இவனுக்கும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து ஏற்படுகிறது. பல நேரங்களில் நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கின்ற அவையில் அவர்களுக்குச் சமமாக இவனையும் பங்கேற்க வைத்தனர். அப்போதெல்லாம் இவனை சில தலைப்புக்களில் கருத்துக்களைச் சொல்லும்படி கேட்பார்கள். இவனும் தான் படித்தறிந்த பல இலக்கியங்களிலிருந்து சான்றுகளுடன் எடுத்துச் சொல்வதை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டனர். இவனும் அவர்களுக்குச் சமமாக இருக்கும் நிலை ஏற்பட்டது குறித்து இவனுக்கும் மகிழ்ச்சி. எத்தனை இனிமையான செய்தி இது!

இப்படி இலக்கியத் தொடர்பால் பல அரிய அறிஞர்களோடு ஏற்பட்ட நெருக்கமும் எத்தனை இனிமை?

இவன் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அவனுக்குப் போதுமானதாக இருந்ததோடு அந்த தொகைக்குள் பல நல்ல காரியங்களுக்கும் இவனால் உதவி செய்ய முடிந்தது. பணியில் இருந்த காலத்தில் பல நேரங்களில் இவன் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இப்போது அவன் தனக்குப் போக மீதத்தை பலருக்கு உதவ பயன்படுத்தினான். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மாணவ மாணவியர் சிலருக்குப் படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும் இவன் உதவி செய்தான். அந்த நிலை எத்தனை இனியது.

"கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது"

இதன் பொருள்: நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் அவையில் தான் கற்ற கல்வியைப் பிழையின்றி எடுத்துரைத்தல் இனிது; தன்னைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தல் மிக இனிது; எள் அளவுகூட பிறரிடம் கையேந்தாமல் தான் முடிந்த மட்டும் தர்மம் செய்யும் குணம் அமைதல் அனைத்தினும் இனிது.

Sunday, February 19, 2012

"இனியவை நாற்பது" (15)

15. பதினைந்தாம் இனிமை. 

அந்த இளைஞனுக்குத் திருமணமாகிவிட்டது. அவனுக்கு வாய்த்த மனைவி நல்ல அழகி அதோடு நல்ல குணவதியும் கூட. கணவனிடம் மாறாத அன்பும் பாசமும் வைத்திருந்தாள். ஆனால் அந்த இளைஞன் அவள் அளவுக்கு அவனுடைய மனைவியிடம் உண்மையாக நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. சற்று சபல புத்தியுள்ளவன். தெருவின் தன் மனைவியோடு நடந்து செல்லும்போதே எதிரில் வரும் அழகியை வெட்கமின்றி வெறித்துப் பார்த்துத் தன் சபலத்தை வெளிக்காட்டும் குணம் படைத்தவன். அவன் மனைவியோ இவன் செயலுக்கு வருந்தினாலும் கடிந்து கொள்வதில்லை. கடிந்து கொண்டால் அவனுக்குத் தன்மீது அன்பு குறைந்து விடுமோ எனும் ஐயப்பாடு. இப்படிப்பட்ட கணவனோடு வெளியில் போவதற்கே அவன் மனைவி ஒரு கட்டத்தில் தயக்கம் காட்ட ஆரம்பித்தாள். என்ன விஷயம் ஏன் இப்படி என்று அவள் தாய் கேட்டபோது அவள் சொன்ன செய்திதான் அதிர்ச்சியளிக்கும்படியாக இருந்தது. ஒரு முறை கடற்கரைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இவள் வற்புறுத்தியதால் வேண்டா வெறுப்போடு மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞன் கடற்கரைக்குப் போனான். போய் மணலில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு சுண்டல் விற்றுக் கொண்டு வந்த சிறுவனிடம் இரு பொட்டணங்கள் சுண்டல் வாங்கிக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து இவர்களைப் போலவே ஒரு இளம் ஜோடி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. ஏதோ வெறு திசையில் சற்று இவன் மனைவியின் கவனம் திரும்பியிருந்த நேரத்தில் எதிரில் வந்த ஜோடியில் பெண்ணிடம் இவன் ஏதோ தகாத வார்த்தை சொல்லியிருக்கிறான். உடனே அந்தப் பெண்ணின் கணவன் இவனை அடிக்காத குறையாகத் திட்டித் தீர்த்துவிட்டு, உன் மனைவியை நான் அப்படிப் பேசட்டுமா என்றதும் இவள் அவமானப்பட்டு தலைகுனிந்து வீடு திரும்பும் வரை பேசாமலேயே வந்து விட்டாள். பின்னரும் அவளது உறவு அவனிடம் முன்போல் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் அந்த இளைஞனின் சபலம். வீண் வம்பு இழுத்து பிறன் மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். அப்படி பிறன் மனை நோக்காத ஆண்மை மிக இனிமை அல்லவா? அதனால்தான் வள்ளுவர் பெருமானும் பிறன் மனை நோக்காமைக்கு 'பேராண்மை' என்று பெயர் சூட்டினார் போலும்.

அந்த ஆண்டில் பருவ மழை சரிவர பெய்யவில்லை. மாதந்தோறும் அவ்வப்போது பெய்யும் மழையும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. எங்கும் பசுமை வற்றி காய்ந்து போய்க் கிடந்தது. ஊரில் விவசாயமும் மழை இல்லாமையால் முடங்கிப் போய் கிடந்தது. அந்த நிலையில் திடீரென்று வானம் கருத்து, இடி மின்னலுடன் பல மணி நேரம் மழை பெய்து பூமி குளிர்ந்து, எங்கும் மழை நீர் ஓடத் தொடங்கினால் அது எத்தனை இனிமை? நீரின்றி வாடும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிமைதான் அல்லவா?

ஒரு மன்னனுக்கு யானைப் படை மிகவும் முக்கியமானது, பெருமையுடையதும் கூட என்பதை முன்பு ஒரு பாடலில் பார்த்தோம். அரண்மனையின் யானைக் கொட்டிலில் ஏராளமான யானைகள் கட்டப்பட்டு, அவற்றின் பிளிறல் கேட்டுக் கொண்டிருந்தால் மன்னனுக்கு இனிமைதான். இல்லையா?

இதோ பாடல்:--

"பிறன் மனை பின்னோக்காப் பீடு இனிதாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மற மன்னர் தங்கடையுள் மாமலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது."

இதன் பொருள்: பிறன் மனை நோக்கா பேராண்மை இனிது; நீர் இன்றி வாடித் துவளும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிது; வீரமுள்ள மன்னனுடைய வாயிலில் யானைகளின் முழக்கம் இனிது.

வறன் = வறட்சி.

Saturday, February 18, 2012

"இனியவை நாற்பது" (14)

14. இனியது பாதினான்கு.

அந்த இளைஞனுக்குத் திருமணம் ஆனது. நற்குணம் வாய்த்த ஒரு பெண் அவனுக்குத் துணைவியானாள். இருவரும் நல்லறமாகக் குடும்பம் நடத்தினர். ஓராண்டில் அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக என்று சொல்வார்களே அப்படி வளர்ந்தது. அந்த குழந்தையின் முதலாமாண்டு நிறைவின் போது அக்குழந்தை மெல்ல எழுந்து தடுமாறி, தளர்நடை நடக்கத் தொடங்கியது. அந்தக் காட்சியைப் பார்த்து கணவனும் மனைவியும் மட்டுமல்ல, அண்டை அயலார் அனைவருமே பார்த்து மகிழ்ந்து போயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர் அடையும் இன்பத்துக்கு ஈடு உண்டா. எப்படிப்பட்ட இனிமை அது?

அந்தக் குழந்தை மெல்ல மெல்ல சொற்களை முதலில் குழறிக் குழறிச் சொன்னாலும் வெகு விரைவில் பளிச்சென்று சொற்களை உச்சரிக்கத் தொடங்கியது. அந்தக் குழந்தையின் மழலையைக் கேட்கத்தான் எத்தனை இனிமை. அதனால்தான் வள்ளுவர் பெருமானும் சொன்னார், "குழலினிது, யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்று. தன் மக்களின் மழலை அமிழ்தினும் இனிது அல்லவா?

ஒருவன் இளம் வயதில் கெட்டவனாகத் திரிந்து கொண்டிருந்தான். அவன் தீச்செயலைக் கண்டு சில நற்குணமுள்ள பெரியோர்கள் அவனுக்குத் தகுந்த புத்திமதி சொல்லி திருத்த முயன்றனர். இளம் வயது என்பதால் அவன் வாயில்லா ஜீவராசிகளுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான். நாய்களைக் கண்டால் கல்லெடுத்து அவற்றை அடித்துத் துரத்துவான். ஓணான் போன்றவற்றை அடித்துக் கொல்வான். இப்படிப்பட்ட ஜீவஹிம்சை செய்தால் உனக்குத் துன்பம் வரும் என்றெல்லாம் பெரியோர்கள் சொன்னது அப்போது அவன் காதுகளில் விழவில்லை. பின்னர் நாட்பட நாட்பட அவன் திருந்தி நல்லவனாக வாழும்போது அவன் முன்பு இளம் வயதில் செய்த கொடிய செய்கைகளாலோ என்னவோ, இவனுக்குப் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்தது. இதற்கெல்லாம் தான் அன்று செய்த பாவங்களே காரணமோ என்று மனம் வருந்தினான். சரி! நான் செய்த வினை எனக்கே வருகிறது என்ன செய்ய முடியும், இனி நம் பிள்ளைகளாவது பாவம் செய்யாமல் இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டான். அவனுடைய அந்த அஞ்சாமை இனிது. அந்தப் பாடல்

"குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது."

இதன் பொருள்: குழந்தையின் தளர்நடை காண்டல் இனிது; அதன் மழலையைக் கேட்பது அமிழ்தத்தை விட இனிது; ஒருவன் தான் செய்த வினைக்குப் பயனாகத் துபம் வந்தடையும்போது மனம் அஞ்சாமல் எதிர்கொள்வது இனிதாகும்.

Friday, February 17, 2012

"இனியவை நாற்பது" (13)

13. பதிமூன்றாம் இனிமை.

ஒரு நல்ல மனிதர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர். தன் ஒரே மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக அவருடைய சக்திக்கு மேற்பட்டு வெளியில் கடன் வாங்கி நகரத்தில் படிக்க வைக்கிறார். அந்த நல்ல மனிதருக்கு ஏற்ற மனைவி. கணவர் சொல்வதைத் தட்டாதவர். மகன் படிப்புக்காக அவர் தவிக்கையில் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் தயங்காமல் எடுத்துக் கொடுத்தவர். அப்படிப்பட்ட நல்ல குடும்பத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. மகனின் கல்வியோ முடியவில்லை. இன்னமும் பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது? ஊரிலுள்ளோர் எவரும் இவரது ஏழ்மை நிலைமையைக் கருத்தில் கொண்டு இவரால் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியுமோ என்று அஞ்சி உதவி செய்ய மறுத்து விட்டனர். வேறு வழியில்லாமல் முன்னமேயே வட்டிக்கு வாங்கியிருந்தவரிடம் கேட்டு மேலும் பணம் வாங்கினார். அந்த நபர் பணத்தைத் திரும்பக் கேட்டு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இவரும் என்ன செய்வார் பாவம். நிலமோ, வீடோ கிடையாது. உதவி செய்யவும் யாரும் இல்லை. மானத்தோடு வாழ்ந்த அவருக்கு இப்படிப்பட்ட கதி ஏற்பட்டுவிட்டது. 

ஒரு நாள் கடன்கொடுத்தவன் வீட்டு வாயிலில் வந்து அவரை மிகவும் கேவலமாகப் பேசித் திட்டித் தீர்த்துவிட்டான். அவர் மனைவி வந்து ஏதோ சமாதானம் சொல்வதையும் கேட்காமல் அந்த அம்மையாரையும் திட்டித் தீர்த்துவிட்டான். உனக்கு மானம் மரியாதை இருந்தால் உடனடியாகப் பணத்தைக் கீழே வை என்றான். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதைவிட சாகலாம் என்று வேறு சொல்லிவிட்டான். அன்று முழுவதும் அதே வருத்தத்தில் இருந்த அந்த நபர் அன்றிரவு தன் மனைவிக்கும் தெரியாமல் எழுந்து சென்று தற்கொலை புரிந்து கொண்டார். அவருக்காக அவர் மனைவியைத் தவிர உளம் நொந்து வேதனைப் பட்டவர்கள் அவ்வூரில் யாரும் இல்லை. தன்னுடைய பெருமை கெட்டு, மானம் போனபின் வாழாமை இனிது என்று அவர் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார்.

அதன் பின் அவருடைய மகன் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, ஊருக்கு வந்து தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான். அவர் எங்கிருக்கிறான், என்ன வேலை பார்க்கிறான் என்பதெல்லாம் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கடன்காரனுக்கு மட்டும் அவனிடம் வாங்கியிருந்த அசல், வட்டி அனைத்தையும் அந்த மகன் அனுப்பி விட்டான். இப்படிப்பட்ட நல்லவர்களுக்குத் தான் செய்த அநியாயத்தை எண்ணி அந்த கந்துவட்டிக்காரன் மனம் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடன்பட்டு தந்தையை இழந்து அவர் பட்ட கடனையும் வட்டியோடு திரும்பக் கொடுத்த அந்த மகன் தான் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கத்தோடு தன் தந்தை கட்டிக் காத்த மரியாதையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வாழ்ந்தான் என்றால் அந்த அடக்கமான வாழ்வு இனிமை அல்லவா?

நாளடைவில் அந்த மகன் நன்கு சம்பாதித்து கணவனை இழந்த தன் தாய் துன்பப்படாமல் நன்கு காப்பாற்றி, ஊரார் மெச்சும்படியாக கண்காணாத ஊரில் சொந்த ஊரின் தொடர்பில்லாமல் தனித்து வாழ்ந்தான். அவனிடம் இப்போது செல்வம் இருந்தது, கண்ணியம் இருந்தது, ஊராரின் மதிப்பு இருந்தது அப்படிப்பட்ட சூழலில் வாழ்வது இனிமை என மனம் மகிழ்ந்தான் அவன். அந்தப் பாடல்.

"மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே
தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனம் ஒன்றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது."

மானம் = பெருமை. தானம் = தான் இருக்கு நிலைமை.

இதன் பொருள்: பெருமை அழிந்த பிறகு ஒருவன் உயிர்வாழாமை இனிதாகும்; தான் வாழ்கின்ற வாழ்க்கையின் சிறப்பு குறையாதபடி வாழ்தல் இனிதாகும்; நல்ல செல்வத்தோடும் கெளரவத்தோடும் வாழ்தல் என்றும் இனிமை.

Thursday, February 16, 2012

"இனியவை நாற்பது" (12)

12. இனியது பன்னிரெண்டு.

வீட்டிலுள்ள குழந்தைகள் பிணியின்றி நன்கு விளையாடிக் கொண்டிருத்தல் போல இன்பம் பயக்கக்கூடியது எதுவும் கிடையாது. அதை விடுத்து நாள் தோறும் ஏதாவதொரு பிணியால் அந்தக் குழந்தை வருந்தி அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது.

கற்றோர் நிறைந்த அவையில் ஒருவர் தவறுதலாகவோ, அல்லது புரிதலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவோ தவறான ஒரு செய்தியைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பெரியவர், அத்தனை பேர் கூடியிருக்கிற அவையில் அவர் சொல்லுகின்ற கருத்துக்கு மறுப்பு சொல்ல அனைவரும் தயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர் சொல்வது தவறு என்று தெரிந்திருந்தும் எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் அவர் சொல்வது தவறு என்பதை உண்மையான ஈடுபாடும், அக்கறையும் கொண்ட ஒருவன் சொல்லுவானானால் அதுவே அவன் கற்ற கல்வி இனிதானதாகக் கருதப்படும். அவைக்கு பயந்து தவறை ஒப்புக்கொள்ளாத தன்மையே ஒருவன் அறிவாற்றலுக்குச் சிறப்பு.

வாழ்க்கையில் எத்தனையோ சருக்கல்கள், தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும் அப்படி எதையும் செய்யாமல், மிகவும் எச்சரிக்கையாக வாழ்க்கையைப் பயணிக்கும் பெரும் அறிவுசால் பெருமகனிடம் செல்வம் சேருமானால், அது அவனைவிட்டு அகலாமல் நிற்கும், அப்படி அந்த செல்வம் தக்கோரிடம் சேர்வது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

"குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவும் தீர்வின்றேல் இனிது."

மழலைச் செல்வங்கள் பிணியற்றோராய் வாழ்தல் இனிது; அவையில் இருப்போர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் உண்மையைப் பேசும் கல்வி இனிது; தவறுகள் இழைக்காத மாண்புடையோரிடம் சேரும் செல்வம் நிலைக்குமானால் அதுவும் இனிது என்கிறது இந்தப் பாடல்.

குழவி = குழந்தை. பிணி = நோய். மயரிகள் = உன்மத்தன் person whose mind is confused அல்லது காமுகன், அறிவீனன் or ignorant person.

Wednesday, February 15, 2012

"இனியவை நாற்பது" (11)

11. பதினொன்றாம் இனிமை.

கிராமத்தில் எந்த சொத்தும் பந்தமும் இல்லாமல் வாழ்ந்து வந்தான் ஒருவன். அன்றாடம் உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலைமை. அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் இவனுக்கு யார் தினந்தோறும் உணவளிப்பர்? வேறு வழியின்றி ஊர் ஊராகப் போய் அங்கெல்லாம் கைநீட்டி பிச்சை வாங்கி உண்டு கொண்டிருந்தான். ஒரு நாள் இவன் தன்னுடைய கேவலமான பிழைப்பை எண்ணி வருந்தினான். இப்படி பல ஊர்களுக்கும் சென்று யாசகம் வாங்கி உண்ணும் நிலை இல்லாதிருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? ஆம் பல இடங்களுக்கும் சென்று இரந்து வாழாமை இனிமை தரும் என்கிறது பாடல்.

ஒரு தமிழ்ப் பாடல், அதற்கு நேரடியாக பொருள் கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு வக்கிர புத்திக்காரன் நேரடியாகப் புரியக்கூடிய அந்தப் பொருள் தவறு என்றும், அந்தப் பாடலில் வரும் சொற்களுக்கு மறைவாக வேறொரு பொருள் உண்டு எனவும், சரியான பொருளுக்கு நேர் எதிரான கற்பனையான ஒரு பொருளைக் கற்பித்த்துப் பேசி வந்தான். அப்படிச் செய்தது அவனுடைய வக்கிர புத்தியைத்தான் காண்பிக்குமே தவிர புலமையை அல்ல என்பது ஏனையோர் கருத்து. தவறான வழியில் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்ளாத அறிவின் நுட்பமே இனிமை பயக்கும் என்கிறது பாடல். 

பசி வந்தால் ஏற்கக்கூடிய தகுதி உள்ளவர்கள் கையால் உணவு வாங்கி உண்ணலே சிறந்தது. அப்படியில்லாமல் எந்தத் தகுதியும் அற்ற ஒருவனிடம், தகாத செய்கைகளால் மக்களால் வெறுக்கப்படும் ஒருவனிடம் கையேந்தி அவன் கொடுக்கும் உணவை, உயிர் போவதாக இருந்தாலும் வாங்கி உண்ணாமை இனிமை தரும். அப்படி மறுப்பதைப் போல சிறப்புடைய செயல் வேறு இல்லை என்கிறது இந்தப் பாடல்.

"அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத் துண்ணாப்
பெருமை போற் பீடுடையது இல்."

அதர் = வழி. குதர் = தவறான வழி.

ஊர் ஊராகச் சென்று பலரிடமும் கையேந்தி இரந்துண்டு வாழாமை இனிமை; ஒரு மேன்மை பொருந்திய நூலுக்கு அதன் உண்மைப் பொருளுக்கு மாறாக தவறான பொருளைச் சொல்லாத அறிவின் நுட்பம் இனிமை; உயிரே போவதாக இருந்தாலும் அந்த நிலையிலும் தகாதவர் தந்த உணவை உண்ணாதிருப்பது இன்பம் தரும்.

Monday, February 13, 2012

"இனியவை நாற்பது" (10)

10. பத்தாம் இனிமை

அவர் ஒரு கடைநிலை ஊழியர். தனியார் நிறுவனமொன்றில் நிரந்தரம் செய்யப்படாத ஊழியராகப் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. என்ன செய்வார் பாவம். அந்த அலுவலகத்தில் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிட்டார். அதனால் புதிதாக எவரிடமும் இவரால் கடன் கேட்க முடியவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். வேறு வழியின்றி கந்துவட்டிக் காரர் ஒருவரிடம் கைநீட்டி கடன் வாங்கிவிட்டார். அலுவலகத்தில் இருப்பவர்கள் போல அந்த கந்துவட்டிக்காரர் சும்மா இருப்பாரா. சம்பளம் வாங்கும் நாளில் வந்து வட்டியைக் கட்டாயமாக வசூலித்துவிடுவார். அதன் பிறகு வீட்டுக்குக் கொண்டு செல்ல என்ன இருக்கும்? அரைப் பட்டினி, கால் பட்டினியாகக் குடும்பம் நடத்தலானார். அண்டை அயலார் இவரைப் பார்த்து இரக்கப் படுவதற்கு பதில் கேலி பேசினர். கடன் வாங்கி இப்படி வட்டி கொடுத்து விட்டுப் பட்டினி கிடக்க வேண்டுமா? என்ன பிழைப்பு இது. கடன் வாங்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்றனர். ஆம், கடன் வாங்கி தூக்கம் கெட்டு, கெட்ட பெயர் எடுப்பதிலும் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது நூல்.

இவன் தன் தகுதிக்கு மேல் இவனுடைய மனைவி வாழ நினைத்தாள். பலன் அவள் பார்வை வசதி படைத்த சிலரின் பக்கம் சாய்ந்தது. மனைவி வேலிதாண்டிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதற்குத் தன் வறுமையும் கடனும்தான் காரணம் என்பதால் இனி அவளோடு வாழ்வது இயலாது என்பதைப் புரிந்து கொண்டு அவளைவிட்டு விலகிவிட்டான். இனியாவது தான் நல்ல வழிகளைப் பின்பற்றி கடன் இல்லாமல், வாழ்க்கையில் அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருக்க முடிவு செய்து கொண்டான். இந்த முடிவுக்கு வர அவன் தன் மனைவியை நீங்கியதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கற்பிழந்த பெண்ணுடன் வாழ்வதினும் அவளை விட்டு விலகுவதே இனிமை என்பதைப் புரிந்து கொண்டான்.

தான் கடன்காரன் ஆவதற்கும், வாழ்க்கையில் தோல்வி கண்டதற்கும் தான் மட்டுமா காரணம் என்று சற்றி நிதானமாகச் சிந்தித்தான். தன்னைச் சுற்றி நல்ல குணங்கள் இல்லாதவர்களும், தீயவர்களும் சூழ்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். தன் மனைவியே தன்னை ஏமாற்றிவிட்ட பிறகு இதுபோன்ற தீயவர்களைப் பற்றி கேட்பானேன். அத்தகைய தீய சூழலைவிட்டுப் பிரிந்து சென்றான். தனித்து வாழ்ந்தான். நேர்மையாகவும் கடன் இல்லாமலும் வாழ்ந்து தன் வாழ்க்கை இப்போது இனிமை என்பதைத் தெரிந்து கொண்டான். இனி பாடல்.

"கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
திறை மாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பு இலாதவரை அஞ்சி யகறல்
எனை மாண்புந்தான் இனிது நன்கு."

இந்தப் பாடலின் கருத்து: வாழ்க்கையில் கடன் வாங்கி வாழாதிருத்தல் இனிமை; கற்பில்லாத மனைவியை நீங்கிவிடுவது இனிமை; வக்கிர மனம் கொண்டவர்களை அஞ்சி நீக்கிவிடுதல் எல்லா மாண்புகளிலும் இனிமை பயக்கும்.

"இனியவை நாற்பது" (9)

9. ஒன்பதாவது இனிமை. 

ஊரில் ஒரு பெரிய மனிதர். நல்ல செல்வமும் செல்வாக்கும் படைத்திருந்ததோடு இரக்க குணமும், பிறருக்குப் பயனுள்ளவராக இருக்க வேண்டுமென்றும் பாடுபட்டுக் கொண்டிருந்தவர். அவரைத் தேடி தினமும் பலர் வருவார்கள். அப்படி வருகின்றவர்கள் எல்லோருமே அவரிடமிருந்து ஏதாவது உதவிகள், நன்கொடை, சிபாரிசு என்றுதான் வருவார்கள். அவரும் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் ஓர் புதிய மனிதர் அவரைத் தேடி வந்தார். வந்தவர் தோற்றதில் நல்ல செல்வந்தராகவும், வசதி படைத்தவராகவும் காணப்பட்டார்.

ஓகோ! இவர் நிச்சயம் நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார். கெளரவமான தோற்றமுடையவர். செல்வந்தர் போலவும் தோன்றுகிறது. முகத்திலும் நல்ல அறிவாளி என்பதும் புலனாகிறது. சரி வந்தவரை வரவேற்று உட்காரவைத்துவிட்டு வந்தவரைப் பற்றிய விவரங்களை வினவினார். வந்தவர் சொன்னார், தான் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் என்றும், இந்த ஊரில் இவர் செய்துவரும் உபகாரங்கள், நற்பணிகள் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்த சுயநல உலகில் இப்படியும் ஒருவரா என்று பார்த்துப் போகவும், முடிந்தால் அவரைப் பற்றித் தன் பத்திரிகையில் எழுதுவதற்காகவும் வந்திருப்பதாகச் சொன்னார்.

நம் ஊர் பெரியவருக்கு மகிழ்ச்சி. பல காலத்துக்குப் பிறகு உதவி கேட்பதற்கில்லாமல் நம்மைப் பாராட்டிப் போக ஒருவர் வந்திருக்கிறார் என்பதில் அவருக்குத் திருப்தி. வந்தவரை நன்கு உபசரித்துத் தனக்கு எந்த விளம்பரமும் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள், என் மனதுக்கு நல்லது என்று தோன்றியதைத் தான் செய்து வருவது அப்படியே நடந்து கொண்டிருக்கட்டும். விளம்பரம் என் பணிக்குக் குந்தகம் விளைக்கும் என்று அவரை வழிஅனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. அது தன்னிடம் வந்து சேர்ந்த ஒருவர் நல்ல செல்வம் படைத்தவராகவும், நல்லவைகளைப் பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருந்தமையால் இது தனக்கு இனிமை என்று நினைத்தார்.

அமைதி வேண்டி பெரியவர் ஒருநாள் ஒரு மலை வாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த தன் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மாலையானதும் மலைப் பிரதேசத்தில் வெட்டவெளியில் புல் தரை பரவிக் கடந்த ஒரு பெரிய திடலுக்குச் சென்றார். தூரத்தில் மலைகள் யானைகள் படுத்திருப்பதைப் போல கருமையாகக் காட்சியளிக்க சுற்றிலும் பசும்புல் தரையும், மற்றொரு புறம் வனாந்தரம் போல அடர்ந்த மரக் காடுகளும் மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது சூழ்நிலை. அப்போது பகல் போது முடிந்து இரவு தொடங்கும் நேரம். அன்று பெளர்ணமி. முழு நிலவு கீழ் வானில் வட்டவடிவில் ஆரஞ்சு பழ நிறத்தில் தோன்றியதும் இவருக்கு மகிழ்ச்சி. அடடா! இதுவன்றோ இனிமை என நினைத்தார். ஆம், அந்த காட்சி இனிமைதான்.

வீடு திரும்பிய பின் முதலில் சென்னையிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் எழுதிய கடிதம் வந்திருந்ததைப் பார்த்தார். அதில் அவர் இவருடைய பெருந்தன்மை, வள்ளன்மை, குற்றமற்ற செயல்களைச் செய்து மக்களின் அன்பைப் பெற்றது இவற்றையெல்லாம் பாராட்டியிருந்தார். ஆம் அந்த நினைவே இனிமையானது அல்லவா? இனி பாடலைப் பார்ப்போம்.

"தங்கண் அமர்புடையார் தாம் வாழ்தல் முன் இனிதே
அங்கண் விசும்பின் அகல் நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயர்க்கும்
அன்புடைய ராதல் இனிது."

இந்தப் பாடலின் பொருள்: நம்மிடம் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கும் நண்பர்களுக்கு உதவுதல் இனியது; தன்னுடைய பகைவர்களோடு சேராமல் ஒதுங்கி இருப்பவர்களை நமக்கு நண்பர்களாக ஆக்கிக் கொள்வது இனியது; பல தானியங்களைப் பயிர் செய்து பஞ்சமின்றி வாழ்வதும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்வது இனிமை பயப்பதாகும்.

நட்டார்: நட்பு பூண்டவர். ஒட்டார்: ஒதுங்கி வாழும் பகைவர்.

Saturday, February 11, 2012

"இனியவை நாற்பது" (8)

8. எட்டாவது இனிமை.

ஒரு மன்னன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு அந்த பிரம்மாண்ட அணிவகுப்பின் முன்னால் அந்த மன்னன் ஒரு வெண்புரவியின் மீது அமர்ந்து செல்கிறான். அது ஒரு அரேபிய நாட்டுக் குதிரை. நல்ல உயரமும், அதன் தோற்றம், நடை இவைகளைப் பார்த்தவர்கள் கண் இமைக்க மறுப்பார்கள். அப்படிப்பட்ட தரமான குதிரை. இதுபோன்ற நேரங்களில் வீரம் செறிந்த மன்னர்களுக்கு அமைய வேண்டிய குதிரை இதுபோலத்தான் இருக்க வேண்டும். அப்படி அமைந்து விட்டால் அது இனிமையானதாகும்.

போர் தொடங்குகிறது. யானைகளும் யானைகளும் மோதுகின்றன. சிதறி ஓடும் காலாட்படை வீரர்களைச் சில யானைகள் துரத்துகின்றன. குதிரைகள் பாய்ந்து எதிரிகளின் மீது விழுந்து தாக்க முயலுகையில் யானைகள் அந்த குதிரைகளின் மீது கோபத்துடன் வந்து மலைகள் மோதுவதைப் போல மோதுகின்றன. பெரும் பாறையில் மோதிய அலை சிதறி துகள் துகளாக வீழ்வது போல அந்தக் குதிரைப்படை சிதறிப்போவதைப் பார்ப்பது இனிமை.

அறிஞர்கள் கூடிய சபையில் ஒரு பெரியவர் நல்லதொரு சொற்பொழிவை நிகழ்த்தி முடித்துவிட்டு இதுவரை நான் சொன்ன செய்திகளில் கூடியிருப்பவர்களுக்கு ஏதேனும் ஐயப்பாடு இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நான் சொன்ன செய்திகள் உங்கள் மனங்களைச் சென்றடைந்ததாகக் கருத முடியும் என்றார். அப்போது ஒருவன் எழுந்து அந்தக் கூட்டத்தில் இருக்கும் அறிவுசால் பெரியோர்கள் வெட்கும்படியாக இதுவரை நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை விளக்க முடியுமா என்று கேட்டால் எப்படி இருக்கும். அவர் சொன்ன செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதில் ஏற்படும் ஐயப்பாடுகள் நியாயமாகவும், சொன்ன செய்திகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அல்லவா இருக்க வேண்டும். ஆக அறிஞர்கள் கூடியுள்ள சபையில் எழுந்து கேள்வி கேட்பதற்கு நல்ல மாணவனாகவும் இருதல் அவசியம். அதுவே இனிது.

"ஊருங் கலிமா உரனுடைமை முன் இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதம் காண்டல் முன் இனிதே
ஆர்வமுடையார் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது."

இந்தப் பாடலின் பொருள்: மன்னன் ஏறிச் செல்லுகின்ற குதிரை வலிமையுடையதாக இருத்தல் இனிது; மன்னர்களுக்குப் போர்க்களத்தில் மலைபோன்ற யானைகள் சினந்து செய்யும் போரைக் காண்பது இனிது; நல்ல கேள்விகளை மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது.

ஊரும் கலிமா: ஏறிச் செல்லும் குதிரை. கதம்: சினம்.

Wednesday, February 8, 2012

"இனியவை நாற்பது" (7)


7. ஏழாவது இனிமை.

வளமான கிராமம். வயல் வெளிகளும், தோப்பும் துரவுமாக கொப்பளித்து ஓடும் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த அழகிய சிறு ஊரில் அந்தணர்கள் வாழும் தெரு ஒன்று. அதன் மேற்குக் கடைசியில் வைணவ ஆலயமும் கிழக்குக் கடைசியில் ஒரு சிவன் கோயிலும், ஆற்றின் படித்துறை அருகில் ஒரு விநாயகர் கோயிலும் உண்டு. இந்த இடங்களில் ஏதாவதொரு இடத்தில் தினந்தோறும் விடியற்காலையில் சில அந்தணச் சிறுவர்கள் இடையில் ஒரு நான்கு முழத் துண்டும், அதன் மேல் இறுகக் கட்டப்பட்ட மேல்துண்டும், உடலை மறைக்கும்படியான மற்றொரு துண்டுமாக சுமார் பத்து பேர் வந்து உட்கார்ந்து வேத பாராயணம் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு கணபாடிகள் எனப்படும் வேதம் நன்கு பயின்ற ஆசிரியர் வேதத்தை நல்ல ஸ்வர ஞானத்தோடு சொல்லிக் கொடுப்பார். 

வேதம் என்பது என்ன? இது எப்போது யாரால் இயற்றப்பட்டது என்பதற்கு வேதத்திலேயே பதில் இருக்கிறது. வேதங்கள் எந்தக் காலத்திலும் எவராலும் தனிப்பட்ட முறையில் இயற்றப்பட்டது அல்ல. மனித இனம் பக்குவப்பட்டு, ஊர், நாடு, நகரம் என்று அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த சில ரிஷிகளுக்கு ஒரு அபாரத் திறமை இருந்ததாம். அது என்ன?

இப்போது வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒலி, ஒளி அலைகளை வாங்கி வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி இவற்றில் ஒலியையும், ஒளியையும் கேட்கவும், பார்க்கவும் செய்கிறதல்லவா அப்படி அன்று வான வெளியில் பரவியிருந்த ஒலி அலைகளிலிருந்து அந்த வாக்கியங்களை வாங்கி மனத்தில் இருத்திக் கொண்டு அதில் நன்கு தேர்ச்சி பெற்றபின் வாயால் பிறருக்கு ஓதி, அவர்கள் காதால் அவற்றை வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்த தெய்வீக வாசகங்கள் வேதம். இதை நான் ஏதோ கற்பனையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். வேதத்தின் மூலம் அதுதான்.

சரி கிடக்கட்டும்! இப்போது இது பிரச்சினை அல்ல. வேதத்தை முறையாக ஓதி அதில் பாண்டித்தியம் பெற்ற அந்தணர்கள் வேதத்தை மறக்காமல் இருப்பதே இனிமை என்கிறார் ஆசிரியர். 

பிறரிடம் அன்பும் மரியாதையும், மற்றவர்களுடைய சுக துக்கங்களில் அக்கறையும் கொண்டவனாக இருப்பவன் ஒரு படையைத் தலைமை தாங்கி நடத்துவானானால் அவனுடைய செயல்பாடுகள் நிச்சயம் இனிமையாக இருக்கும்.

தந்தை தன் மக்களுக்கு வழிகாட்டியாக இருத்தல் அவசியம். தந்தையே மகனை அழைத்து, அடே, மகனே ஓடிப்போய் கடையிலிருந்து நான்கு சிகரெட் வாங்கி வா என்று விரட்டி அவன் வாங்கிக் கொண்டு வந்த சிகரெட்டை அவன் எதிரிலேயே பற்ற வைத்துப் புகைப்பானாகில், அடுத்த நாள், அந்த மகனே ஒன்றை எடுத்து இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தானே புகைக்கத் தொடங்குவான். அது போலவேதான் வீட்டில் மது புட்டிகளைக் கொண்டு வந்து வைத்து, மகனைவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லியோ, அல்லது வேறு தின்பதற்குக் கொண்டு வரச் சொல்வதோ, அந்த மகனையும் அந்த பழிக்கு ஆளாக்குகிறான் என்றுதான் பொருள். அத்தகைய தந்தை சொல்வதை, நல்ல மகனாக இருப்பவன் செய்ய மறுப்பதோ, தந்தைக்கு எதிராக நடந்து கொள்வதோ தவறே இல்லை, அது மிகவும் இனிமை என்கிறார் பாடல் ஆசிரியர். அந்தப் பாடல் இதோ.

"அந்தண ரோத்துடைமை ஆற்ற மிக இனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே
தந்தையே ஆஇனும் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா நாகல் இனிது."

இதன் பொருள் அந்தணராக இருப்பவன் வேதத்தை மறக்காமல் இருப்பது இனிது; மக்களிடம் அன்பு கொண்டவன் படைத் தலைமை கொள்வது இனிது; தந்தை தீயவழியில் செல்பவனாக இருந்தால் மகன் அவன் சொற்படி கேட்டு நடக்காமல் இருத்தல் இனிது.

Tuesday, February 7, 2012

"இனியவை நாற்பது" (6)

6. இனியது ஆறு. 

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். மிக எளிமையானவர். பிறருடன் அன்போடு பழகுபவர். அனைவரிடத்தும் நன்கு பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பவர். அப்படிப்பட்டவரிடம் பெரிய அளவில் வசதிகள் இல்லாவிட்டாலும், தன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவுவதைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார். அப்படிப்பட்டவர் வாழ்க்கை இனிமை உடைத்தது அல்லவா?

முற்றும் துறந்து காவியணியா விட்டாலும் பந்த பாசங்கள் நீக்கி, விருப்பு வெறுப்பு அற்றவராகத் துறவி போல வாழ்ந்து வந்த அந்த ஆசிரியர் பிறரிடம் பேசும்போது வெற்றுப் பேச்சுக்களைப் பேசமாட்டார். பயனுடைய சொற்களைத்தான் பேசுவார். அவர் அப்படிப் பேசும் அறிவார்ந்த மொழிகள் இனிமை பயக்கக் கூடியவை.

தனக்கென்று நல்ல வசதிகள், வாய்ப்புகள் இருந்த நிலையில் தகுதியில்லாத, வல்லமை அற்ற மக்களைத் தனது பாதுகாப்புக்காகக் கொள்ளுதல் தவறு அல்லவா? அப்படிப்பட்ட மக்களை நீக்கிவிட்டு தகுதி படைத்த வல்லவர்களைப் பாதுகாப்பாகக் கொள்ளுதல் இனிமை தரும். அந்தப் பாடல்.

"ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே
வாய்ப்புடையராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது."

பாற்பட்டார்: துறவு பூண்டவர்கள்.
பயமொழி: பயனுடைய சொற்கள்
வலவைகள்: வல்லமை

+2 மாணவர்களுக்கு.......


அன்பிற்கினிய +2 மாணவர்களுக்கு.......

இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும், தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து எந்தத் துறையை எடுத்துப் படிக்க வேண்டுமென்பது குறித்தும் மாணவர்களும், பெற்றோர்களும் யோசிக்கத் தொடங்கும் நேரம் இது. உங்களுக்கு இந்தத் துறையில் வழிகாட்டப் போவது யார்? எந்தத் துறையில் படிக்க விருப்பம்? எதில் படித்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளையும் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை விவரமாக உங்களுக்குத் தெரிவிக்கிறார் சு.அகிலன். அவருடைய "+2; பிறகு.." எனும் தலைப்பிலான நூல் உங்களுக்கு உதவ காத்திருக்கிறது. இந்த நூலின் நோக்கம் "பாதைகள் தெளிவானால், பயணங்கள் பாரமில்லை!" என்பதுதான்.

"+2 படிக்கும் மாணவர்களின் மனநிலையை மனதில் வைத்தே இந்தப் புத்தகம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது என்பது அதன் நடையில் இருந்து புரிகிறது. எளிய தமிழ், என்ன படிப்பு படித்தால் என்ன வேலைவாய்ப்புக் கிடைக்கும். உயர்கல்வி படிப்பதற்கு உதவித் தொகைகள் ஏதேனும் உண்டா போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு ப.சங்கரநாராயணன் தன்னுடைய முன்னுரையில்.
இந்த நூலின் சிறப்பம்சமாக திரு சங்கரநாராயணன் குறிப்பிடுவது, ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணாக்கர்களை மட்டும் மனதில் கொள்ளாமல் அறுநூறு மதிப்பெண் பெறும் மாணாக்கர்பாலும் அக்கறை காட்டியுள்ளது என்பதுதான். ஆகவே ஒவ்வொரு +2 மாணவனும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அடங்கியது இந்த நூல்.

அடடா! படிப்பில்தான் எத்தனைப் பிரிவுகள்? பாருங்கள் ... அசந்து போவீர்கள்.

சட்டம் படிக்க வேண்டுமா? அனிமேட்டராக என்ன படிக்க வேண்டும்? ஓவியம், மீடியா போன்ற பொழுதுபோக்குத் துறைக்கு? காப்பி ரைட்டராக வேண்டுமா? வணிகவியலில் தேறவேண்டுமா? அல்லது கட்டடக் கலை வல்லுனராக வேண்டுமா? கலைப் படிப்புகள் கிரிமினாலஜி, காவல்துறை நிர்வாகம் ஓவியம், கைவினைப் படிப்பு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு மருத்துவம் ஃபேஷன் டிசைனர் கப்பலில் வேலையா வேளாண்துறை சார்ந்த படிப்பு பொறியியல் துறைகள் அறிவியல் தொழில் முனைவோர் விளையாட்டுகள் சம்பந்தமான படிப்புகள் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புகள் பைலட் ஆகவேண்டுமா மல்டி மீடியா, அனிமேஷன் & கேமிங் மேலாண்மைப் படிப்பு இசைப் படிப்பு இதழியல் படிப்பு கணக்காயர் ஆகவேண்டுமா நிர்வாகவியல் படிப்பு கால்நடை மருத்துவம் இன்னும் என்னென்ன துறைகள் உண்டோ அத்தனை துறைகளைப் பற்றியும் ஓர் அறிமுகம் கிடைக்கும் இந்த நூலில்.

கல்லூரி படிப்புக்குத் தயாராகும் நிலையில் மாணவர்கள் எவற்றையெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்? ஒரு பட்டியலைத் தருகிறார் ஆசிரியர். 

மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சில ஊர்களில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். அங்கு சென்று மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதற்கு முன்பு +2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை முடிவு செய்துகொள்ள பயன்படக் கூடிய நூல் இது "+2; பிறகு...."

வெளியிட்டிருப்பவர்கள்: ஆசிரியர்: சு.அகிலன்

பொன் புத்தகாலயா, 7, தங்கையா தெரு, காந்திநகர், நாகல்கேணி, சென்னை 600 044. தொலைபேசி: 91 44 22380694; 91 9444414694.

"இனியவை நாற்பது" (5)


5. இனியது ஐந்து.

அந்த சிற்றரசனுடைய ராஜ்யம் சிறியதாயினும் வளம் நிரம்பிய நாடு. விவசாயமும், கால்நடைகளும் மண்டிக் கிடக்கும் பிரதேசம். ஆடு, மாடுகள் வளர்ப்பின் மூலம் மக்கள் நன்மைகளை அனுபவித்து வந்தனர். கோழி வளர்ப்பும் அதிகமாக இருந்ததால் செல்வச் செழிப்பில் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திடீரென்று மக்கள் மத்தியில் தங்கள் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சம் தோன்றியது. காரணம் அது மிக சிறிய ராஜ்யம் என்பதால் மக்கள் அதிகமாக புலால் உண்பதனால் ஆடு, கோழி இவைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதைக் கண்டனர். என்ன செய்வது? மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னன் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டான். கால்நடைகளின் எண்ணிக்கைக் குறைவதற்கு அவர்களது புலால் உணவுப் பழக்கமே காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, உயிர் வதையைத் தடை செய்வது ஒன்றே அதற்கு வழி என்று உத்தரவு பிறப்பித்தான். ஏராளமாக சத்துள்ள மரக்கறி உணவு வகைகள் இருக்கும்போது உயிருள்ள பிராணிகளை எதற்காகக் கொல்ல வேண்டும் என்று அரசன் சொன்னது மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர்தான் மக்கள் உணர்ந்து கொண்டார்கள் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது இனிமையானது என்று.

ஒவ்வோராண்டும் அந்த மன்னனின் பிறந்த நாளன்று அவன் சமஸ்தானத்தில் இருந்த சாதனையாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் இவர்களுக்கு விருதுகளைக் கொடுத்து கெளரவப் படுத்துவது வழக்கம். அது போன்றே ஒரு ஆண்டு அவன் விருது பெறுவோர்களின் பெயர்களை அறித்தான். அந்த பட்டியலைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து ஒரு சிலரின் பெயர்கள் சிறப்புக்குரியவர்கள் பட்டியலில் இருக்கும் தகுதி இல்லாதது அறிந்து வருந்தினர். யார் போய் மன்னனிடம் சொல்வது? அப்படிப்பட்ட தகுதியில்லாதவர்கள் அரசாங்க பதவிகளில் இருந்து கொண்டே மன்னனுக்கு எதிராக மோசடிகளில் ஈடுபட்டு அரசாங்க கஜானா பணத்தைத் தனக்கும் தான் சார்ந்த உறவினர்களுக்கும் கையாடல் செய்து எடுத்துக் கொண்டதை மக்கள் அறிவார்கள். ஆனால் மன்னனிடம் போய் யாரும் சொல்லவில்லை. அத்தகைய ஊழலில் ஈடுபட்டவனுக்கே அரசன் விருது வழங்கி கெளரவிக்கலாமா. மக்கள் கூடிப் பேசினர். ஊர்ப் பெரியவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அரசனிடம் சென்று உண்மையை விளக்கிச் சொல்லி, அத்தகைய ஊழல்பேர்வழிகளுக்கு மரியாதை செய்வது மரபல்ல என்பதை எடுத்துச் சொல்லச் செய்தனர். மன்னனுக்கு உண்மை விளங்கியது. அத்தகைய கருப்பாடுகளை பட்டியலில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துத் தண்டித்தான். அரசன் என்போன் நடுவு நிலைமை தவறி நடக்கும் தன்னிடம் பணியாற்றும் நபர்களைச் சிறப்புச் செய்யாதிருத்தல் இனிது என்பதை புரிந்து கொண்டான். 

மக்களுக்கு மகிழ்ச்சி. செங்கோல் தவறாமல் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நடக்கும் மன்னன் மீது அபார மதிப்பும், மரியாதையும் கொண்டனர். ஒரு மன்னன் என்பவன் செங்கோல் ஆட்சி புரிவது என்பது இனிமை அல்லவா? இதனை மக்கள் மட்டுமல்ல, அந்த அரசனும் புரிந்து கொண்டான்.

ஒவ்வொரு பருவம் தோறும் மன்னன் மக்கள் மன்றத்தைக் கூட்டுவான். இடைப்பட்ட காலத்தில் தன் ராஜ்ஜியத்தில் நடந்த செய்திகளை அரசாங்க அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள். அப்போது யார் தவறு செய்தவர்கள், யார் திறமையாகப் பணியாற்றினார்கள் என்பதெல்லாம் மன்னருக்குத் தெரிந்திருந்தாலும், யாரைப் பற்றியும் மன்னன் எந்த குறையும் இந்நாள் வரை சொன்னதில்லை. குறைகளை நீக்கி நல்ல முறையில் திருத்திக் கொள்ள மட்டும் ஆலோசனைகள் சொல்வதுண்டு. யாரையும் புறம்பேசியதுமில்லை. இத்தகைய தகுதி இருப்பது அந்த மன்னனுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே இனிமை அல்லவா? இதைத்தான் ஐந்தாவது பாடலில் சொல்கிறார். அது இதோ.

"கொல்லாமை முன் இனிது, கோல்கோடி மாராயம் 
செய்யாமை முன் இனிது, செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப, யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு."

மாராயம்: தவறு செய்தோருக்கு சிறப்பு செய்தல்.

Monday, February 6, 2012

"இனியவை நாற்பது" (4)

4. நான்காம் இனிமை. 

அவன் ஒரு குறுநில மன்னன். ஆளும் நாடு மிகச் சிறியதானாலும், விசாலமான அறிவும், ஞானமும் படைத்தவன் அந்த சிற்றரசன். அவன் நாடு செல்வத்தில் சிறந்து விளங்கியது. காடு நிரைந்து, கழனி விளைந்து அரசரின் கஜானா நிரம்பிக் கிடந்தது. இந்த வளமையைக் கண்டு பொறாமையால் சுற்றுப்புற நாட்டு மன்னர்களுக்கு இந்த நாட்டின் மீது ஒரு கண் விழுந்தது. மன்னன் தளர்ந்த நேரம் பார்த்து நாட்டை அபகரிக்க வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அறிவுசால் அமைச்சர்கள் அந்த குறுநில மன்னரிடம் சொன்னார்கள், "மன்னா, நீ நாட்டை நேர்மையாக ஆள்வது மட்டும் போதுமானதல்ல, நாட்டில் வளம் பெருகிக் கிடக்கிறது. இந்த நாட்டைப் பாதுகாக்க நீ படைபலத்தை அதிகரித்துக் கொள்" என்றனர். ஆம், மன்னனும் அவர்கள் சொன்ன உண்மையைப் புரிந்து கொண்டு ரத, கஜ, பதாதி படைகளைப் பெருக்கிக் கொண்டான். காலாட்படை, குதிரைப்படை இவைகளைப் பெருக்கிக் கொள்வதில் அதிகம் சிரமம் இருக்கவில்லை. ஆனால் யானைப் படையை அதிகரிக்க அதிகம் பாடுபட வேண்டியிருந்தது. அப்படியொரு யானைப் படையை அவன் தயாரித்துக் கொண்டதும் எதிரிகள் அஞ்சி நடுங்கலாயினர். தாங்கள் படையெடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள திட்டமிட்டது போக, அவன் எங்கே நம் நாட்டைப் பிடித்துக் கொள்வானோ, அத்தகைய யானைப் படையை வைத்திருக்கிறானே என்று அஞ்சத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட யானைப் படையை ஒருவன் ஏற்படுத்திக் கொள்ளுதல் இனிதாகும் என்கிறது "இனியவை நாற்பது" நூல். 

எதிரிகளிடமிருந்து எப்போது ஆபத்து வரும் என்று இருந்த மன்னனுக்கு இப்போது நிம்மதி. எதிரிகள் பயந்து போயிருக்கிறார்கள் என்றதும் போர் பயம் நீங்கி வாழ்க்கையை நன்கு அனுபவிக்கத் தொடங்கினான். அதற்காக பல்லுயிர்களைக் கொன்று அவற்றை உணவாக்கி உண்ணத் தொடங்கினான். உணவுப் பிரியனாக மாறியதால் பிற உயிர்களின் ஊனைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளலானான். இதனால் அவனுக்கு சோம்பலும், உடல் உபாதைகளும் தோன்றின. இந்த சூழலைப் புரிந்து கொண்ட எதிரிகள் இவன் மீது பாயத் திட்டமிட்டனர். இதை அறிந்த அமைச்சர்கள் மன்னனின் இந்த உயிர்க்கொலையையும், ஊன் விரும்புதலையும் நிறுத்தச் சொல்லிவிட்டனர். நல்ல காலம் அவனும் பிழைத்தான். பிற உயிர்களின் தசையினைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளாமை மிக இனிமை என்பதையும் அவன் உணர்ந்தான். 

அவன் ஊரில் ஒரு முறை தண்ணீர் பஞ்சம். சுற்றுவட்டாரத்தில் பல கல் தூரத்துக்கு ஆறுகள் எதுவும் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. விவசாயம் பாதித்தது. நாட்டின் வளம் குறைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகரைவிட்டு போகத் தொடங்கிவிட்டார்கள். பார்த்தான் அரசன், இப்படி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் தலைநகரைக் கட்டியதால் வந்த நிலை என்பதை உணர்ந்து அவன் ஒரு ஆற்றின் கரையில் தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். நாடு மீண்டும் வளம்பெறத் தொடங்கியது. வற்றாத ஆற்றின் கரையில் அமைந்த ஊரில் இருத்தல் மிக இனிது என்பதை அவன் உணர்ந்தான்.

மன்னன் மக்கள் மனம் அறிந்து நல்ல நடத்தையோடு ஆட்சி புரிந்தான். மானத்தை உயிரினும் மேலாக மதித்து நடந்து வந்தான் அப்படிப்பட்ட மானம் உடையவனான மன்னைன் கொள்கை இனிது என்கிறது இனியவை நாற்பது. இனி நான்காம் பாடலைப் பார்ப்போம்.

"யானை உடைய படை காண்டல் முன் இனிதே
ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே
கான் ஆற்றடை கரை ஊர் இனிதாம் இனிதே
மானம் உடையார் மதிப்பு."

"இனியவை நாற்பது (3)"

3. மூன்றாம் இனிமை.

அது ஒரு கிராமம். அங்குள்ள மக்களின் ஜீவாதார தொழில் விவசாயம். விவசாயத்தைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்த குடும்பத்தில் வந்தவர் அவர். அவருடைய மனைவி, மக்கள் அனைவருமே நல்ல கல்வி கற்று, விவசாயத்திலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். ஊரார் பார்த்து பொறாமைப் படுமளவுக்கு ஒற்றுமையும், பிறர்க்கு உதவும் பண்பும் கொண்ட குடும்பம் அது. அடுத்த வீட்டு முதியவருக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. சில கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூருக்குச் சென்று மருத்துவரை அழைத்து வர அவர்கள் வீட்டில் இல்லை. நம் விவசாய நண்பரின் மகன் சைக்கிள் வைத்திருந்தான். செய்தியைக் கேள்விப்பட்டதுமே அவனே முன்வந்து தானே ஓடிப்போய் மருத்துவரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் என்று சென்று காரியத்தை நிறைவேற்றுகிறான். சொல்லாமலே செய்யும் அவனிடம் சொன்னால், எள் என்றதும் எண்ணெயாக நிற்பான் அத்தகைய நல்ல குணம் அமைந்த செல்வன் அவன். அப்படிப்பட்ட மகன் கிடைக்க அந்த விவசாயப் பெருமகன் என்ன தவம் செய்தாரோ? அப்படிப்பட்ட மகனைப் பெற்றது அவருக்கு இனிமை. அல்லவா? 

விவசாயம் செய்கிறோம் என்பதால் அந்தக் குடும்பத்தினர் கல்வி கற்பதில் தயக்கம் காட்டியதில்லை. பெரு நகரங்களில் கிடைக்கும் வசதிகள் இந்த கிராமத்தில் இல்லாதபோதும், கிடைக்கும் ஊடகங்கள் மூலம் குடும்பத்தார் கல்வி கற்று சான்றோராகத் திகழ்ந்தனர். அதுவும் அந்த குடும்பத்துக்கு இனிமைதான் அல்லவா?

இந்த விவசாயி பெருந்தனக்காரர் இல்லையாயினும், ஓரளவு தன்னிறைவு பெற்ற விவசாயி. தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பயிர் விளைத்துப் பயன் பெற்று வருகிறார். தனக்கென்று உழவுக்கு நல்ல ஏரும், எருதுகளும், வீட்டில் பசுக்களும் வைத்திருக்கிறார். உழவுத் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமாக இருக்கிறது. பிறகு வேறு என்ன வேண்டும்? அதுதான் இனிமை.

அதுமட்டுமல்ல, இவருடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தோமானால், இவருக்கு அண்டை அயலாருடன் மட்டுமல்ல, இவர் போகுமிடங்களில் எல்லாம், பழகும் அனைவரும் இவரிடம் அன்பு பாராட்டும் அளவுக்கு நன்னடத்தையும், நாகரிகமும், பண்பாடும் படைத்தவர். ஆகையால் அவர்கள் இவரிடம் நட்பு பாராட்டுவதில் என்ன அதிசயம் இருக்கிறது. ஆகவே இவரது வாழ்க்கையே இனிமை அல்லவா? இப்படிச் சொல்கிறது மூன்றாவது பாடல். அது இதோ.

"ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மை தான் இனிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

Saturday, February 4, 2012

"இனியவை நாற்பது" (2)



2. பிறர்க்கு ஈதல் இனிது:

அவர் ஒரு செல்வந்தர். ஏழ்மை நிலையில் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்த பிறகு நன்றாக சம்பாதித்து "ஈ உறிஞ்சும் கஞ்சனாக"*வாழ்க்கையை நடத்தி நிறைய பணம் சேர்த்துவிட்டார். இங்கு சிக்கனமாக இருப்பதற்கும் கஞ்சனாக இருப்பதற்குமுள்ள வேற்றுமையை நாம் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் மறுபடியும் விளக்க விரும்புகிறேன். தன் தேவைகளுக்கு மட்டும் செலவிடுபவன் சிக்கனம். தன் சுய தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருப்பவன் கஞ்சன். இவர் இரண்டாவது ரகம். இவரது அதிர்ஷ்டம், ஒரு நிலப் பிரபுவுக்கு இவர் ஏஜெண்டாக இருந்து அவர் நிலத்தைப் பிரித்து லே அவுட் போட்டு விற்க உதவி புரிந்தார். மிக குறைவான விலையில் வந்த அந்த லே அவுட்டில் சில பிளாட்டுகளைக் குறைந்த செலவில் வாங்கி வைத்திருந்தார். சில காலம் கழிந்தபின் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து அதன் மதிப்பு நூறு மடங்குக்கு மேலும் அதிகரித்து விட்டது. இருந்தாலும் அவர் உடையிலோ, வாழ்க்கை முறையிலோ 'பளிச்' மட்டும் கிடையாது. அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் பெண்ணை இவருக்கு எந்த செலவுமே இல்லாமல் ஒரு வரன் வந்து திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அப்படியிருந்தும் இவர் பார்ப்பவர்களிடமெல்லாம், பெண் கல்யாணத்தில் பணமெல்லாம் செலவாகிவிட்டது என்று அலுத்துக் கொள்வார். குளிர் காலத்தில் வெந்நீர் போட்டுக்கூட குளிக்க மாட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்களில் மூன்று வேளைகளில் புழுங்கலரிசிக் கஞ்சி. 

(ஈ உறிஞ்சும் கஞ்சன் என்றால் என்ன விளக்கம்? வாரியார் சுவாமிகள் சொல்லும் விளக்கம் இது. நாம் அருந்தும் காபி அல்லது டீயில் ஈ விழுந்துவிட்டது என்றால் நாம் அதனைக் கொட்டி விடுவோம். சிலர் குவளையைச் சாய்த்து அந்த ஈ இருக்கும் வரை கொட்டிவிட்டு மிகுதியை அருந்துவார்கள். சிலர் ஈயை எடுத்துப் போட்டுவிட்டு டீயைக் குடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஈ உறிஞ்சும் கஞ்சன் ஈயைக் கையால் எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் டீ அல்லது காபியை நன்கு உறிஞ்சிவிட்டு ஈயைத் தூரப் போட்டுவிட்டுக் காப்பி/டீயைக் குடிப்பார்களாம்.)

குடும்பம் நடத்தினால் செலவு அதிகம் என்று மனைவியை அடிக்கடி அவள் ஊருக்கு அனுப்பி விடுவார். தானே சோறு பொங்கி சிறிதளவு சாப்பிடுவார். கணவன் மனைவி உறவு எப்படி இனிதாக இருக்கும் இவருக்கு. அகப்பற்று புறப்பற்று எதையும் நீக்கிவிடாமல், அதிலும் ஆசை, காசிலும் ஆசை, இப்படிப் போய்விட்டது இவரது வாழ்க்கை.

ஒரு நாள் அலுவலகம் சென்றவர் மார் வலி என்றார் படுத்துவிட்டார். மருத்துவமனையில் இவர் உடலில் இருந்த உயிர் பிரிந்து போய்விட்டதென சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். திருமூலர் "திருமந்திரம்" சொல்லும் பாடலைத்தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே."

"ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

"பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே"

சரி! யாக்கை நிலையாமை குறித்துப் புரிந்து கொண்டோம். அதற்கு நாம் இப்போது என்ன செய்ய வேண்டுமாம்? என்ன சொல்லுகிறார் திருமூலர். இதோ

"அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே."

"வஞ்சகம் பேசாமல், பொய் சொல்லாமல், பிறர்க்குத் துன்பம் தராமல், தீய சொற்களைப் பேசாமல், அறநெறி மீறாமல், பேராசையால் பிறர் பொருள் விரும்பாமல் நல்ல பண்பாளராக ஆகுங்கள். நீங்கள் உண்ணும் போது யாரேனும் வந்து விட்டால் ஓர் அகப்பை உணவை அவர்க்குப் படைத்துவிட்டுப் பின்பு உண்ணுங்கள்."

திருமூலருக்கு என்ன? அவர் சொல்லிவிட்டார். அகப்பட்டது நானல்லவா? எப்படி முடியும். இப்படிக் கொடுத்துக் கொண்டிருந்தால் மலையும் கரைந்து போகும். செல்வமும் இல்லாமல் போகும். ஆகவே சிக்கனம், கஞ்சத்தனம், அதுதான் இன்பம் தரும் என்று வாழ்ந்தார் நம் கதாநாயகர்.

இவர் போன்றவர்களுக்கென்றுதான் "இனியவை நாற்பது" இரண்டாவது பாடல் சில நீதிகளைச் சொல்லுகிறது. கேட்போமா?

"உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு."

என்ன சொல்கிறது இந்தப் பாடல்? செல்வம் படைத்தவன் அதனைப் பிறருக்கும் கொடுத்து அந்த அறச் செயல்களின் காரணமாக இன்பமாக வாழ்தல் இனிது. கணவனும் மனைவியும் மனம் ஒப்பி வாழ்ந்தால் மனையறம் இனிது. உடல் நிலையாமையை உணர்ந்து பற்றுகளை நீக்கி வாழ்வாங்கு வாழ்தல் இனிது.
பார்ப்போம், இந்த அறவுரை எத்தனை பேர் செவிகளில் படுகிறது, மனங்களில் பதிகிறது என்று. நன்றி.