பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 10, 2021

பாரதியின் தேசியம்.

 

                                                  

“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி                                                     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,                                                                    பொறிகளின் மீது தனியரசாணை,                                                             பொழுதெலாம் நினது பேரருளின்                                                             நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்                                                      நிலைத்திடல் என்று இவை அருளாய்,                                                                குறி குணம் ஏதுமிலதாய் அனைத்தாய்க்                                                             குலவிடும் தனிப்பரம் பொருளே!”

          பாரதி என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்தில், நம் உள்ளத்துள் ஓர் ஒளி பிறக்கிறது. மனங்களில் தேசியம் எனும் உணர்வு பிறக்கிறது. தமிழும் தேசியமும் இணைந்தது என்றால் அது நம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.  

சுதந்திரப் பள்ளு என்ற பாடலை முதலில் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டின் சுதந்திரத்தை அவன் வாழ்ந்த காலத்தில் காண கொடுத்து வைக்கவில்லை. என்றாலும் மனத்தால் இந்திய சுதந்திரத்தை அவன் கண்டு, மகிழ்ந்து பாடிய பாடல் இன்று நம் குழந்தைகளெல்லாம் பாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே,                                                                    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்                                                        எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு  என்று தொடங்கி சுதந்திரத்தின் களிப்பை வெளிப்படுத்துகிறான். தொடர்ந்து வரும் வரிகளில்                                                  

  நாமிருக்கும் நாடு       நமதென்பதறிந்தோம்,                                                                                       இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்ற வரிகளை நாம் பலமுறை கேட்டிருந்தாலும் அதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் போதுதான் அதிலுள்ள ஒரு சூட்சுமம் நமக்குத் தெரிய வருகிறது. அந்த வரிகளில் இழையோடிக் கொண்டிருக்கும் உட்பொருளை நாம் ஆழமாகச் சிந்தித்திருக்கிறோமா என்பது தெரியவில்லை.

நாம் இருக்கும் நாடு நமது இல்லாமல் வேறு யாருடையது? அதற்கு விடைதேடப் போகும்போதுதான் நமக்குப் புரிகிறது, அவன் காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிக் கிடந்த அறியாமையில் “இந்த நாடு ஆங்கிலேயர்களுடையது, இதில் அவர்கள் தயவில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் பாரதி அடித்துச் சொல்கிறான், “நாம் இருக்கும் இந்த நாடு நம்முடையது, இது நமக்கு மட்டுமே உரிமையானது” என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நம்முடையது என்கிற எண்ணம் கூட இல்லாமல், அந்நியர்களின் கருணையினால் நாம் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதாக பாமர மக்கள் நினைக்கும் வகையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள்.

 “பாரத மக்களே, நீங்கள் வாழ்கின்ற இந்த பூமி, இந்த நாடு, உங்களுக்குச் சொந்தமானது, இதன் முழு உரிமையும் உங்களுடையது, நீங்கள் நினைப்பது போல அந்நியர்களின் தயவால், அவர்கள் மண்ணில் நாம் அடிமைப்பட்டு வாழ்வதாக எண்ணல் வேண்டா. விழித்தெழுங்கள், இது உங்கள் நாடு, நமது புராதன புண்ணிய தேசம்”  என்று தட்டி எழுப்பியிருக்கிறான்.

அடுத்து வரும் வரிகளில் காணப்படும் கருத்து

 “கல்வியில் உயர்ந்த தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு”

அந்நியர்கள் வந்து ஆக்கிரமித்து நமது கல்வி, கலாச்சாரம், பண்பாடு அனைத்திலும் ஊடுறுவி நம்முடைய பாரம்பரிய கல்வியை ஒழித்துவிட்டு லார்டு மெக்காலேயின் கல்வி முறையைக் கொண்டு வந்து புகுத்தி, நம்மை அவர்களுக்கு ஊழியம் செய்யும் சேவகர்களாக ஆக்கிய நிலை இந்த வரியில் வெளிப்படுகிறது.

சுதந்திரமடைந்த பாரத சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரதி கோடிட்டுக் காட்டுகிறான்.  இது முப்பது கோடி ஜனங்களின் சங்கமாக இருக்கும், ஓர் ஒப்பிலாத சமுதாயமாக இருந்து உலகத்துக்கு ஒரு புதுமையாக விளங்கும் என்பது பாரதியின் கனவு.

இங்கே “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இருக்காது.                                மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இருக்காது” என்று சொல்லி

இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் என்கிறான். அது என்ன விதி?       

 “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

சோற்றுக்கு இல்லையென்று ஒருவன் கூட இந்த நாட்டில் வருந்தக் கூடாது. அந்த நிலைமையை உருவாக்குவோம் என்பது அறைகூவல்.

இங்கே “எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்”

இந்த உணர்வு மட்டும் இங்கே நிலைத்து விட்டால், பூசல்கள் அழிந்துபோகும், வேற்றுமைகள் மறைந்து போகும்.

பாரதியே ஒருமுறை குவளைக் கண்ணனிடம் சொன்னாராம், “கிருஷ்ணா, நான் காலத்தால் முந்திப் பிறந்து விட்டேன், இந்த மக்கள் என்னைப் புரிந்து கொள்ள இன்னும் பல காலமாகும்” என்று சொன்னது எத்தனை உண்மை என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பாரதி “சத்ரபதி சிவாஜி தன் சைனியங்களுக்குச் சொன்னது” எனும் தலைப்பில் ஒரு நீண்ட பாடலை இயற்றினார்.

அதில் பாரத நாட்டின் பழம்பெருமைகளை யெல்லாம் சொல்லி, அத்தகு பெருமைமிக்க பாரத நாட்டில் அந்நியர் வந்து ஆக்கிரமித்திருக்கிற செயலைச் சொல்லி, நாட்டை மீட்கத் தன் சைனியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். சத்ரபதி சிவாஜி சொல்வது போல, பாரதி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு விடுக்கும் அழைப்பு அது.

அவர் சொல்கிறார்

“பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்                      பாரத நாடு பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! 

 என்றெல்லாம் சொல்லி இந்த நாடு எப்படிப்பட்ட நாடு தெரியுமா? என்று கேட்டு அவரே விடையும் சொல்கிறார்.

“தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோடு அடையும் அரும்புகழ் நாடு!  ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி! வானவர் விழையும் மாட்சியர் தேயம்!       பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ?” என்று சொல்லி துவண்டு கிடந்த தன் படை வீரர்களுக்குச் சொல்வது போல இந்த நாட்டு மக்களுக்குச் சொல்கிறார்.

“நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்!” என்று அழைப்பு விடுப்பது சிவாஜியின் சைனியத்துக்கு மட்டுமல்ல, அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியர்களாகிய நமக்கும் தான்.

1906ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை மக்களிடையே பேதங்களை உண்டாக்கவென்று இரண்டாகப் பிரித்தார்கள்.

அப்போது உருவான மக்கள் எழுச்சி -- இந்திய மக்கள் அந்நியர்களுக்கு எதிராக களத்தில் இறங்கிய முதல் போர்க்களம் –

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் வாய் மூடி, ஊமைகளாய், செவிடர்களாய்  அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத் திருநாட்டு மக்கள் விழித்துக் கொண்டார்கள். எச்சரிக்கை மணி ஒலித்தார்கள் இந்திய தேசிய வாதிகள்.

வங்கப் பிரிவினையின் விளைவு, இந்தியாவில் ஒரு புதிய மதம், புதிய மார்க்கம், “தேசிய உணர்வு” “தேசபக்தி” என்ற சக்தி உருவானது. வங்கப் பிரிவினை தோற்றுவித்த இந்திய ஒருமைப்பாட்டின் மறு பெயர் இந்திய தேசியம்.

வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் எழுதிய புதினமொன்றில்  “வந்தேமாதரம்” என்றொரு பாடலை புகுத்தினார்.  அது அப்போது உருவான தேசபக்தி எனும் மார்க்கத்துக்கு ஒரு ‘மந்திரச் சொல்லாக’ பயன்பட்டது.

ஆனால் அதே காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் தோன்றிய பாரதியாரின் உணர்வில் இந்த பாரத புண்ணிய பூமி ஒரே தேசம், ஒரே நாடு, என்று வணங்க வேண்டுமென்றுதான் அவன் கவி உள்ளமும் தூண்டியிருக்கிறது.

இமயம் தொடங்கி குமரி வரையிலான இந்திய நிலப் பகுதியைத் தன் கவிதைகளில் வைத்துப் பாடினார்.  முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் இந்த தேசத்தை “பாரத மாதா” வாக இந்த மண்ணின் அன்னையாகப்  பார்த்து வணங்கியிருக்கிறார் பாரதி.

பாரதியாருக்கு தேசப் பற்று என்பது தெய்வப் பற்றுக்குச் சமமாகும்.

அவர் சொல்கிறார், “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்த தனவே” என்று.

உலகில் செல்வத்தில் கொழிக்கும் நாடுகளும் உண்டு. ஒரு வேளை சொற்றுக்கு வழியின்றி எலும்பு தெரிய மாண்டுபோன மக்கள் வாழும் பல ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு.

தான் பிறந்த நாட்டை தெய்வமாகக் கருதி பாடிய கவிஞர் பாரதி மட்டும்தான். அவர் சொல்கிறார்

“பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு”

“ஞானத்திலே பர மோனத்திலே, உயர் மானத்திலே, அன்ன தானத்திலே,  கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு இந்த நாடு”

இறை வழிபாட்டாளர்கள் அவரவர்களுக்குப் பிடித்தமான கடவுளர்களை வணங்குகிறார்கள்.

தேசத்தையே தெய்வமாக எண்ணிப் பாடியவன் பாரதி. அவன் வணங்குகின்ற தேசமென்கிற தெய்வத்துக்கு ஒரு மந்திரம் வேண்டாமா?

அதுதான் “வந்தே மாதரம்” எனும் மந்திரம். “தாயை வணங்குவோம்” “பாரதத் தாயை வணங்குவோம்”

“வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்         ஜாதி மதங்களைப் பாரோம், உயர் ஜன்மம் இந்த தேசத்தில் எய்தினராயின்   வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே.                  ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?                        ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

“வந்தேமாதரம்” என்கிற ஒரு சொல்லில் அடங்கியிருக்கும் அத்தனை உணர்வுகளையும் இந்தப் பாடலில் வடித்துக் காட்டியிருக்கிறார் பாரதி.  “வந்தேமாதரம்” எனும் சொல், பாரதியிடம் ஒரு மந்திரமாகவே பயன்பட்டது.  

தேசபக்தர்களைப் போலீசார் தடி கொண்டு தாக்கும் போது கூட இந்த “வந்தேமாதரம்” எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொண்டார்கள். இந்த மந்திரம் அவர்கள் பெறும் தடியடியின் வலியைக் கூட போக்கிடும் மருந்தாக அவர்களுக்கு விளங்கியிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி இந்த மண்ணை விட்டுப் பிரிந்து இறந்து போனாலும், அவன் மனம் மட்டும் கற்பனையில் இந்திய விடுதலைக் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறது.

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று சொல்லி ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்று கூத்தாடச் செய்தது.

அரவிந்தர் ஒரு முறை சொன்னார், “தேசியம் என்பது ஒரு மதம். அது கடவுளால் அளிக்கப் பட்ட மதம். அதற்கு அழிவு இல்லை அந்த தேசியம் எனும் கடவுளுக்கு ஆராதனை செய்வதற்கென்றே சுப்பிரமணிய பாரதியாரை இறைவன் படைத்தான்” என்கிறார் அரவிந்தர்.

அன்றைய இந்திய மக்களின் நிலை கண்டு பாரதி மனம் புழுங்கினார்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் அஞ்சி அஞ்சிச் சாவர், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே!            வஞ்சனைப் பேய்கள் என்பார், இந்த மரத்தில் என்பார், அந்தக் குளத்தில் என்பார்,   துஞ்சுது முகட்டில் என்பார், மிகத் துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!

ஆம்! மூட நம்பிக்கைகளும், மூட பழக்க வழக்கங்களும் மண்டிக் கிடந்த இருண்ட நாட்கள் அவை. அப்படிப்பட்ட நிலைமையை மாற்றுதல் என்பது எளிதான காரியமா என்ன? அவர்களது நிலைமை கண்டு பரிதாபப் படுகிறான் பாரதி.

“சிப்பாயைக் கண்டு அஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்” 

ஆம்! இது ஏதோ பாரதியார் கற்பனையில் கண்டு சொன்ன செய்தியாக எண்ணுதல் வேண்டாம். நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் என் இளமைக் காலத்து வாழ்க்கை அமைந்தது. 1945 அப்போது எனக்கு 8 வயது. தெருவில் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவர் இந்திய சிப்பாய் உடையில் தன் உடைமைகளோடு தெருவில் வந்தார். சிறுவர்களாகிய நாங்கள் ஓடி ஒளிந்தது மட்டுமல்ல, தெருத் திண்ணைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் கூட உள்ளே சென்று கதவுகளைத் தாளிட்ட காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அத்தனை பிற்போக்கான காலமாக அப்போது இருந்திருக்கிறது. ராணுவத்தில் பணியாற்றிய அந்த ஊர் தலைமை ஆசிரியரின் மகன் யுத்தம் முடிந்து வீடு திரும்பியபோது கண்ட காட்சி அது.

“துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார்       அப்பால் எவனோ செல்வான், அவன் ஆடையக் கண்டு எழுந்து நிற்பார்,       எப்போதும் கைகட்டுவார், இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்.

நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்    கொஞ்சமோ பிரிவினைகள்? ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ?”

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்        பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே                         துஞ்சி மடிகின்றாரே, இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.”

 “அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருள் அவனியில் இல்லை”.

இதைவிட என்ன கேவலம் வேண்டும். அன்னியனின் வெள்ளைத் தோலைக் கண்டதும் “துரை” “துரைசாணி” என்றும் “எஜமான்” என்றும் உடலை வளைத்து நம்மவர்கள் வணங்கிடும் கொடுமை அவன் மனத்தைத் துன்பப்படுத்தி யிருக்கிறது.

“இறைவனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பிக் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் இந்த தேசத்தின் நிலைமை கண்டு விளித்து “உறங்காதே விழித்தெழு!”  என்று இந்த நாட்டுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவன் பாரதி.

“நீடுதுயில் நீக்கப் பாடி வந்த பாவலன்” என்று பாரதிதாசனால் புகழப்படும் பாரதி “சுதந்திரம்” எனும் ஒளியைக் காட்ட, திருப்பள்ளி எழுச்சி பாடினான்.

பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால், புன்மை இருட்கணம் போயின யாவும்               எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,      தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்  விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே! வியப்பிதுகாண் பள்ளி எழுந்தருளாயே!”

கிராமப் புறங்களில் மார்கழி மாதங்களில் பஜனை செய்வது தமிழ்நாட்டில் நிலவி வந்த பழக்கம்.  இறைபக்தி பஜனைகளைத் தேசபக்தி பஜனையாக மாற்ற ஊக்குவித்தான் பாரதி.         

நாடு என்பது என்ன? நிலமும், நீரும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், வயல்களும், வீடுகளும் வெட்ட வெளிகளும் கொண்ட நிலப்பரப்பு! மட்டும்தானா?

மலைகளும், மடுக்களும், காடுகளும் மண்டிக் கிடக்கும் மண்வெளி மட்டும் தானா?

இந்த தேசம் என்பது, இதில் வாழ்கின்ற பல்லாயிரக் கணக்கான மக்கள்  வழிபடும் ஒரு தெய்வம் என்று உருவகப்படுத்தியவன் பாரதி.

தாயின் மடியில் கிடப்பதைப் போல சொந்தத் தாய் மண்ணின் மீது கிடப்பது இன்பம் தருவது என்று அவன் கருத்து வியப்புக்குரியது அல்ல.

நாட்டைப் பற்றிய எண்ணங்களும் அப்படித்தான். என் நாடு, என் மக்கள், என்று தேசத்தைக் கடவுளாக வழிபடும் வழக்கம் தான் பாரதியின் தேசியம்.

 “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே”                      "முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே                     “அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே”.                    இதை வந்தனை கூறி மனத்தில் இறுத்தி என் வாயுற வாழ்த்தேனோ?             "இதை வந்தே மாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?”  

என்று நாம் வாழும் மண்ணின் பெருமையை, புனிதத்தை, உயர்வை மனமார புகழ்ந்து பாடுகிறான். அடுத்த பகுதியில் அவன் சொல்லும் கருத்து நம் மனங்களை இதமாக மெல்ல வருடிக் கொடுக்கும் வரிகளாக அமைத்திருக்கிறான்.

இன்னுயிர் தந்து, எமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே! எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே! அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே! தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே” என்று பெருமைப் பட்டுக் கொள்கிறான்.

நம் தாய்மார்கள் இம்மண்ணில் மதலையராய்ப் பிறந்தது மட்டுமா, நிலவினில் இங்கு ஓடியாடி விளையாடியதும் இங்குதான், நீர்நிலைகளுக்குச் சென்று தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி வீடு திரும்பியதும் இந்த மண்ணில்தான்.

அப்படிப்பட்ட இந்த புனிதமான மண்ணை “தாயே வணக்கம்” “தாயே வணக்கம்” என்று போற்றி வணங்க வேண்டாமா என்கிறான்.

நம் முன்னோர்கள் இங்கே பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், முடிந்தார்கள். முடிந்த பின் அவர்கள் எங்கே போனார்கள்? இதோ, இந்த மண்ணில், மண்ணோடு மண்ணாகக் கலந்து, இங்கேதான் வாழ்கிறார்கள்.

அவர்கள் மாண்டு போக அவர்களுடைய உடல்கள் இந்த மண்ணில் ஒன்றாகக் கலந்து இங்கு பரவிக் கிடக்கும் மண்ணோடு மண்ணாக ஆகிப் போனார்களே, இந்த புனிதமான மண்ணை நான் வணங்க வேண்டாமா? இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று சொல்லி போற்ற வேண்டாமா? என்கிறார்.

நம் மண்ணில் நாம் நடந்து செல்கையில், நாம் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் கிடக்கும் மண்ணிலும் என்றோ இந்த மண்ணில் வாழ்ந்த நம் முன்னோர்களின் தூசு படிந்து கிடக்கிறது அல்லவா?

ஒரு தேசம் என்பது வெறும் மண், மலை, காடு, நதிகள் மட்டுமல்ல, நம் உணர்வு பூர்வமான நம் முன்னோர்களுடனான உறவு, பந்தம் பாசம் அனைத்தும் இணைந்தே இருக்கிறது என்பதை பாரதி விளக்கிக் கூறுகிறார்.

தேசத்தின் மீது கொண்ட பக்திதான் “தேசியம்”. தேசிய உணர்வு என்றால் நம் தேசத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வும், சமூக நல்லிணக்கமும், அண்டை அயல் நாடுகளோடு நாம் கொண்டிருக்கும் உறவும், அதன் மேன்மையுமே நமது தேசியம். தாயையும், தந்தையையும், தான் பிறந்த மண்ணையும் நேசிக்காத உயிர்கள் உலகில் இருக்க முடியாது.

நம் தேசத்தில் பண்டைய நாட்களில், கல்வி மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதற்கு நம் சங்க கால புலவர்களுடைய வரலாறுகளும், அவர்கள் படைத்துச் சென்றிருக்கின்ற இலக்கியங்களுமே சான்று பகர்கின்றன. உலக மக்களெல்லாம் நாகரிகமற்று காடுகளில் திரிந்த காலத்தில் நமது மக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் உயர்ந்தும், கல்வி கலாச்சாரத்தில் சிறந்தும் வாழ்ந்து வந்த வரலாறு நம்முடையது.

நமது பாரம்பரிய சுதேசிக் கல்வி எப்போது யாரால் மாற்றப்பட்டது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?  அந்நியர்கள் இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் வரை நாம் நமது பாரம்பரிய கல்வியைப் பயின்று, நாகரிகத்தின் உச்சத்தில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

அந்நியர்கள் காலடி எடுத்து வைத்த பிறகு, அவர்களுடைய நாகரிகத்தை மேலானதாகக் கருதிக் கொண்டு நாம் நமது பண்டைய பெருமைகளையெல்லாம் தொலைத்துவிட்டு அவர்களைப் பின்பற்றத் தொடங்கியதன் விளைவு? நம் கல்வி அழிந்தது நம் நாகரிகம் அழிந்தது, வாழ்க்கை முறை தாழ்வுற்றது.

லார்டு மெக்காலே என்பவரைக் கொண்டு இந்தியர்களுக்கு ஒரு கல்வித் திட்டத்தை புகுத்தினார்கள். அவர்களது நோக்கம் இந்திய மக்களை மேன்மையடையச் செய்வது அல்ல, அவர்களுக்குச் சேவகம் செய்வதற்கு ஒரு கூட்டம் தேவைப்பட்டது, அதனால் தான் மெக்காலே கல்வித் திட்டத்தில் உருவானவர்களைத்  தங்களுக்கு ஊழியம் செய்ய பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்கள்.

1885இல் ஏ.ஓ.ஹ்யூம் தொடங்கிய காங்கிரசும் அடிப்படையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவது என்பது அல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் மன்றாடிச் சில சலுகைகளைப் பெறுவதற்காகத்தான்.           

அதன் நோக்கம், பயன்பாடு இவை சுய முன்னேற்றத்துக்கானது அல்ல, அவர்கள் கற்ற கல்வி அந்நியர்களுக்குச் சேவகம் செய்ய உதவும் அடிமைக் கல்வி. 1885இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1906க்குப் பிறகுதான் -- பால கங்காதர திலகர் காலத்தில்தான், தங்கள் நிலைமையை உணர்ந்து, அந்நியரின் நுகத்தடியை அகற்றி சுயாட்சி பெறவேண்டும் எனும் உத்வேகத்தைப் பெற்றார்கள். அந்த காலகட்டத்தில் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் எனும் மூவரும் இந்திய சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

1907இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்ற தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளில் பாரதியாரும் ஒருவர். அப்போது காங்கிரசில் பெரும்பாலும் மிதவாதிகள் தான் தலைவர்களாக இருந்தார்கள். திலகர் போன்ற ஒரு சிலரே தீவிர போக்குடைய தலைவர்கள். தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் பொன்றவர்கள் திலகரைப் பின்பற்றும் தீவிர தேசபக்தர்கள். அந்த மாநாட்டில் மெக்காலே கல்வித் திட்டத்துக்கு மாற்றாக இந்திய தேசிய கல்வித் திட்டமொன்று அறிமுகம் செய்தார்கள். அந்த மாநாட்டுக்குச் சென்றிருந்த போதுதான் பாரதி, நிவேதிதா அம்மையாரை தரிசித்தார், அவரிடம் புதிய தேச உணர்வை பெற்றார்.

கல்கத்தா மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு பாரதியார்  “தேசியக் கல்வி” பற்றி ஒரு கட்டுரைத் தொடரை “சுதேசமித்திரனில்” எழுதினார்.  அதுபற்றி சொல்வதற்கு முன்பு பாரதி தன் சுயசரிதையை கவிதையாக எழுதிய பகுதியில் சொல்லும் கருத்தினை இப்போது பார்க்கலாம்.

அந்த கவிதையின் முக்கியத்துவம் கருதி அதனை முழுமையாக இங்கே தருகிறேன்.

“நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்,            புல்லை உண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்         நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும், எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை,  ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை நரியுயிர்ச்சிறு சேவகர், தாதர்கள், நாயெனத் திரி ஒற்றர், உணவினைப்               பெரிதெனக் கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர், பிறர்க்கு இச்சகம் பேசுவோர்                        கருதும் இவ்வகை மக்கள் பயின்றிடும் கலை பயில்கென என்னை விடுத்தனன் அருமை மிக்க மயிலைப் பிரிந்தும் இவ் அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ?

கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்   அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்,                      வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழு நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்,               துணியும் ஆயிரம் சாத்திரம் நாமங்கள் சொல்லுவார் எட்டுணை பயனும் கண்டிலார்.

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும்          உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததோர்  பாஸ்கரன் மாட்சியும்                நம்பரும் திறலோடு ஒரு பணினி ஞால மீதில் இலக்கணம் கண்டதும்                       இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்            சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவர் வான்மறை செய்ததும்     பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்துத் தர்மம் வளர்த்ததும்                             பேரருட் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்       வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்  அன்ன யாவும் அறிந்திலார் பாரதத் தாங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்.

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும், மூண்டிருக்கும் இந்நாள் இகழ்ச்சியும்       பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்                   என்ன கூறி மற்று எங்கணுர்த்துவேன், இங்கு இவர்க்கெனது உள்ளம் எரிவதே.

மெக்காலேயின் கல்வியை பாரதி எந்த அளவுக்கு வெறுத்தான் என்பதும், மாறாக இந்திய தேசியக் கல்வி எப்படி இருக்க வேண்டுமென்று பாரதியே ஒரு கட்டுரைத் தொடரை வெளியிட்டிருக்கிறான்.

பாரதி சொல்லும் தேசியக் கல்வி எப்படிப்பட்டது?

ஒவ்வொரு துறையிலும் என்னென்னா பாடங்கள் நடத்த வேண்டுமென்பதை விரிவாக விளக்கிக் கூறுகிறான். வரலாறு என்று எடுத்துக் கொண்டால், மாணவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதியின் வரலாற்றை முதலில் சொல்லுங்கள்.    

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் பெரிதும் மிதவாதிகளால் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. பால கங்காதர திலகர் போன்ற தீவிர தேசபக்தர்களின் ஆதரவாளர்களாக தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா, சக்கரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி ஐயர், ஹரி சர்வோத்தம ராவ்  போன்ற மிகச் சிலரே இருந்தனர்.

கல்கத்தாவில் இருந்த தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய விபின் சந்த்ர பால் அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து கடற்கரையில் ஒரு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தவர் பாரதியார்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை முதன்மை மொழியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலம் மூலமாக பயிற்சி அளித்து தமிழை ஒரு துணை மொழியாக வைத்துக் கொண்டால், அது தேசியம் எனும் சொல்லுக்கு முழுதும் விரோதமானது என்கிறார். இன்று ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளிகளில் சேர்ப்பதென்பது சாதாரணமாகி விட்டதே.

 “ தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது “தேசியம்” என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது.”  என்பதுதான் அவர் கருத்து.

 “அந்தந்த தேசத்தில் மக்கள் பேசுகின்ற மொழியே முதன்மையானது என்பது தேசியக் கல்வியின் கொள்கை, இதை மறந்து விடக் கூடாது. அவரவர்களது தாய் மொழியை பேணிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ்நாட்டிலிருந்து முழுவதும் தமிழ் மொழியையே முதன்மை மொழியாக வைத்திருக்க வேண்டும். பாரதி சொல்லும் புதிய கல்வித் திட்டத்தில் ஒருசில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறான். அவை

தமிழ்நாட்டில் உருவாகும் தேசியப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக வருபவர்களுக்கு திருக்குறள், நாலடியார் முதலான தமிழ் நூல்களில் தகுந்த புலமை இருக்க வேண்டும்.” “சிப்பாய்கள் கலகம்” என்பது முதல் சுதந்திரப் போர், அது கலகம் அல்ல. சத்ரபதி சிவாஜியை ஒரு கலகக் காரன் என்று சொன்னதை மாற்றி ஒரு சுதேசி வீரன் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.

1857 இல் நடந்த புரட்சியில் உயிர்நீத்த மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், தாந்தியா தோபே போன்றவர்களை புரட்சிக்காரர்கள் அல்ல, முதல் சுதந்திரப் போர் வீரர்கள். வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். இந்தியாவின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்றத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்களைப் போற்ற வேண்டும்.

தேசியக் கல்வியில், சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் எழுத்து, படிப்பு, கணக்கு, இவை தவிர லேசான சரித்திர பாடங்கள் ஆகியவை தாய் மொழியில் இருத்தல் வேண்டும் என்கிறார். சரித்திரம் என்றால் நாம் இன்று படிக்கும் சரித்திரம் அல்ல. தேசியக் கல்வியில் புவியியல், மதங்கள் பற்றிய விளக்கங்கள், ராஜ்ய சாத்திரம் எனும் தலைப்பில் இப்போதைய பொலிடிகல் சயின்ஸ், பொருள் நூல் எனப்படும் எகனாமிக்ஸ், அறிவியல் பிரிவுகள், ஆகியவை தவிர கைத்தொழில், விவசாயம், தோட்டக் கலை, வர்த்தகம் ஆகியவை பற்றிய கல்வியும், நடைமுறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். சரீரப் பயிற்சி அதாவது உடற்பயிற்சி என்பதை வலியுறுத்துகிறார்.

இந்திய பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வர்த்தகம் இவைகள் எப்படி இருந்தன, யாரை நம்பி இருந்தன என்பது போன்ற விவரங்களையெல்லாம், சுதந்திரத்துக்குப் பிறகு அதன் வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்த்தால்தான் சுதந்திரப் பெருமை புரியும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக 16ஆம் நூற்றாண்டு வரையில் எப்படி இருந்தது . அதுவே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிற்பட்ட பொருளாதாரம் எப்படி வளர்ந்தது என்பதை  ஒருசேர கவனித்தால் தான் அடிமை இந்தியா எப்படி இருந்தது என்பதும், சுதந்திர நாடான பின்பு நாடு எப்படி முன்னேறியது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

சுரண்டல் எனும் சொல்லுக்கு இலகணமாய் ஆங்கிலேயர்கள் நமது வளம் பொருந்திய மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டு போய் அவற்றை பொருள்களாக்கி நம் தலையில் கட்டி லாபம் சம்பாதித்த வரலாறு ஏராளமாக உண்டு.

1850 தொடங்கி இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 வரையிலான காலகட்டத்தில், விவசாயத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்திய நாடு பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக மாபெரும் பஞ்சமும் நம் நாட்டை வாட்டி எடுத்தது.இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் திட்டமிட வேண்டியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை இந்தியர்கள் ஆளத் தொடங்கிய பின் அந்தப் பணி நம் அரசின் கைகளுக்கு வந்த பிறகுதான் ஐந்தாண்டு திட்டங்கள் 1952இல் தொடங்கப்பட்டு, திட்டக்குழு அமைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

பாரதியார் காலத்தில் இந்தியாவின் மொத்த மக்கட் தொகை 30 கோடி. இதில் இப்போதைய பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா ஆகியவைகளும் அடங்கும். இன்றைய நிலைமையில் பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா இவைகள் நம்மிடம் இல்லாத நிலையில் அது 136 கோடி அளவுக்கு பெருகிக் கிடப்பதையும் நாம் அறிவோம். இந்த அளவு உலகின் மக்கட் தொகையில் சுமார் 18 சதவீதமாகும்.

அத்தனை பேருக்கும் அடிப்படை வசதிகளையும், உணவுப் பொருட்கள் உற்பத்தியையும், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு இவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐந்து அல்லது ஆறு மடங்கு அனைத்தும் அதிகரித்து விட்டது தெரிகிறது.  

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பஞ்சம் வாட்டியதைப் போல மக்களைப் பட்டினி போடும் நிலைமை சுதந்திரம் பெற்ற பிறகு இல்லை என்பதே வளர்ச்சியின் அடையாளம். அந்நியரின் சுரண்டல் இல்லை, இவற்றையெல்லாம் கருதியே அன்றைய சுதந்திரப் போராளிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்கள். அப்படி சுதந்திரம் பெறுவதற்கு தேச உணர்வை ஊட்ட வேண்டியிருந்தது. அதுதான் தேசிய உணர்வு.

பாரதி சுதந்திரத்துக்காக போராடியது அடிமைத் தளை நீங்குவதற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும், மக்கள் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்பதற் காகத்தான். சுதந்திரம் பெற்ற பாரத தேசம் எப்படி பாரதி விரும்பிய புதிய பாரதம் இன்று உருவாகி வருகிறது என்பது நாம் பாரதியின் நினைவுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

 

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

 

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

 

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

 

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

 

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

 

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

 

புதிய பாரதம் தான் பாரதி கண்ட கனவு என்பதால் அவன் காண விரும்பிய புதிய பாரதம் உதயமாகி விட்டது, இது மேலும் வளர்ச்சி பெறும்.         

    தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற காந்தி திரும்பி இந்தியாவுக்கு 1914இல் வந்த பிறகு,  அதாவது 1919இல் அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு மகாத்மாவாக ஆகிவிடுவார் என்பதைக் கணித்து அவர் அப்போது இயற்றிய பாடலில் சொல்கிறார்:

“வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்,                                                              தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்                                                     பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை                                                                       வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க! 

காந்திஜி இந்திய அரசியலில் ஈடுபடுமுன்பாகவே, அவர் மகாத்மாவாக போற்றப்படுவார் என்பதை உணர்ந்து சொன்னவர் மகாகவி பாரதியார். காந்தியடிகளை மகாத்மா என புகழ்ந்தது ரவீந்திரநாத் தாகூர் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நேரத்தில், 1919இல் பாரதி பாடிய இந்தப் பாடலில் அவரை மகாத்மா என்று போற்றுவதை நாம் நிச்சயம் குறிப்பிடத்தான் வேண்டும்.

அவருடைய “சுதந்திர தாகம்” எனும் பாடல் மனதை உருக வைக்கும் தன்மையுடையது என்பதால் தான் “கப்பலோட்டிய தமிழன்”என்ற படத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் மூச்சு நிற்குமுன் இந்தப் பாடலைக் கேட்க விரும்பியதாகச் சொல்வார்கள். அந்தப் பாடல்

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?                                                                                            என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?                                                                 என்றெம  தன்னைகை விலங்குகள் போகும்?                                                                   என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?                                                                     பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?                                                                          தஞ்ச மடைந்த பின் கைவிடலாமோ?                                                                                       தாய் உந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

மகாகவியின் இந்தப் பாடல் வரிகளுடன் என்னுடைய உரையை நிறைவு செய்து கொள்கிறேன். தேசபக்தி, தேசியம் எனும் சொற்களுக்கு விளக்கமாக விளங்கிய மகாகவி பாரதியின் புகழ் ஓங்குக! வந்தே மாதரம்.

                                     

 

 

         

           

 

தமிழகத்தில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம்.

                 வரலாற்றுப் பெருமைகள் அதிகம் பெற்றதும், முதுபெரும் நாகரிகத்துக்குப் பெயர் பெற்ற பாரதத் திருநாட்டில் ஐரோப்பியர்கள் காலடி எடுத்து வைத்த பிறகு இங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. காலங்காலமாக நாம் கடைபிடித்து வந்த கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, இவை அத்தனையும் தலைகீழாகப் புறட்டிப் போடப்பட்டு ஒரு கலவை சமுதாயமாக இந்த நாடு மாற்றப்பட்டுவிட்டது.  பாரதத் திருநாடு நாலா புறங்களிலும் இயற்கை அரண்களால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், வடமேற்கு திசையிலிருந்து அந்நிய நாட்டவர்கள் இங்கே உள் நுழைந்து இங்கே தங்கள் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல நிலைநிறுத்தி, ஒரு காலகட்டத்தில் இந்த அருமைத் தாய் நாடு பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு தவித்துக் கொண்டிருந்தது. அந்த நிலைமை இருபதாம் நூற்றாண்டில்தான் மாறி இங்கு அந்நியர்களே அதிகாரத்தில் இல்லை, நம்மை நாமே ஆண்டுகொள்ளும் ஒரு முழு இந்திய சமுதாயமாக மாறி நம்மை நாமே ஆண்டுகொள்ளும் ஜனநாயக அமைப்பிற்குள் வந்திருக்கிறோம்.

            பழம்பெருமை வாய்ந்த நம் பாரதத்தில் உள் நிழைந்த அந்நிய சக்திகளில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் இந்த நாட்டைத் தங்கள் வேட்டைக்காடாக மாற்ற வீறுகொண்டு எழுந்து வந்தார்கள். இவர்கள் இந்த புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைத்த பொது இங்கே தங்கள் நாட்டு வாணிபப் பொருட்களை விற்கவும், நம் நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்லவுமாகச் சொல்லித்தான் அன்றைக்கு துண்டு துண்டாக ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர்களின் சம்மதத்தைப் பெற்றுத் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள்.

            முதலில் நம்பக்த் தன்மை உடையவர்களைப் போல வேடமிட்டு, நம் நாட்டு சமஸ்தானங்களின் ராஜாக்களின் அனுமதியோடு இங்கே தொழிலைத் தொடங்கியவர்கள், போகப்போக இந்த வளம் மிக்க நாட்டின் செல்வச் செழிப்பால் கவரப்பட்டு நாடு பிடிக்கும் ஆசைகொண்டு ஆங்காங்கே வன்முறையைக் கடைபிடித்து போர்க்களங்களை உருவாக்கித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

            அந்நியர்கள் தமிழ்நாட்டில் நுழைந்து நாடுபிடிக்கத் தொடங்கியவர்களில் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் வருகையால் அமைதி தவழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தில் ஆங்காங்கே சிறு பூசல்களும், சண்டைகளும் நடந்தேறி வந்தன.

            அந்நியர்களின் காலடி படாத புண்ணிய பூமியாக தென் இந்தியப் பகுதிகள் இருந்து வந்தன. அந்நிய படையெடுப்புகளால் வட இந்தியாவின் பெரும்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தென் தமிழ் நாடு பாதிப்படையாமல்தான் இருந்து வந்தது. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் ஒரு திருப்பு முனை நேர்ந்தது. வாணிபம் செய்யும் நோக்கில் இங்கே ஐரோப்பியர்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கினார்கள்.  அவர்களுடைய சாமர்த்தியம் எடுத்த எடுப்பில் இங்குள்ள மன்னர்களோடு பொர் தொடுத்து, அதில் வெற்றி பெற்று நாடுகளைக் கைப்பற்றுவதில்லை. மாறாக நம் மன்னர்கள் அறியாத அபூர்வமான பொருட்களைக் கொணர்ந்து வர்த்தகம் புரிவதாகச் சொல்லி மெல்ல மெல்ல நாடு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டு சிற்றரசர்கள், எதையும் உண்மையென நம்பி இவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரிக்கவும் தொடங்கினார்கள். அப்படி காலடி எடுத்து வைத்த பெரும்பாலான மேற்கத்தி நாட்டுக் காரர்கள், குறிப்பாக தமிழ் நாட்டின் கடற்கரைப் பிரதேசங்களில் முதலில் தங்கள் மதத்தை இங்குள்ள மக்களிடம் பரப்பத் தொடங்கினர். அவர்களை மதமாற்றம் செய்வது அதிகரித்தது. ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் ஒரு மேலைநாட்டுப் பாதிரியார் வந்து தான் கோயில் கட்டிக் கொள்வதாகச் சொல்லி இடம் கேட்டு ஆங்கோர் தேவாலயம் கட்டி, கடற்கரை ஓரமாக வாழ்கின்ற மீனவர்களை ஒட்டுமொத்தமாக மதம் மாற்றினார். அது நாளடைவில் அதிகரித்து, மறவர் நாட்டின் அரசுரிமை உடைய ஒரு மன்னரிடமே அதைச் செய்தபோது கிழவன் சேதுபதி விழித்துக் கொண்டு, அந்த பாதிரியாரை சிறைபிடித்ததாக ராமநாதபுரத்து வரலாறு சொல்கிறது.

            கிழவன் சேதுபதி போல ஒருசில மன்னர்கள் விழித்துக் கொண்டாலும், பெரும்பாலான சிற்றரசர்கள் இதனைக் கண்டு கொள்ளமல் விட்டுவிடவே, ஐரோப்பியர்கள் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை மதமாற்றம் செய்து வைத்தனர்.

            போர்த்துகீசியர்கல் முதலில் மேற்குக் கடற்கரையில் கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கி அங்கு தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் போது கூட கோவாவில் அவர்கள் ஆட்சி தொடர்ந்து வந்ததை நாம் அறிவோம். அப்படி இந்தியாவில் முதன் முதல் காலடி எடுத்து வைத்த போர்த்துகீசியர்கள் வாணிபம் செய்ய வந்திருப்பதாகச் சொல்லித்தான் ஆங்காங்கே இருந்த சுதேச மன்னர்களிடம் இடம் வாங்கி வாணிபத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் இங்கு விளையும் சில பொருட்களை வாங்கிக் கொண்டும், அவர்களிடம் இருந்த பல ஆடம்பரப் பொருட்களை இங்கே விற்றும் முதலில் பண்டமாற்று வழியைப் பின்பற்றினர். இந்த போர்த்துகீசியர்கள் மேலைக் கடற்கரையில் வந்து இறங்கி அவர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதி மேற்குப் பகுதிதான்.

            தமிழ்நாட்டுப் பகுதியான மதுரையில் நாயக்க மன்னர்கள் ஆண்டுவந்த காலத்தில் பெர்னாண்டஸ் பாதிரியார் இங்கே ஒரு கிறிஸ்தவ சபையைத் தொடங்கினார். வீரப்ப நாயக்கர் என்பவர் காலம் அது. இந்த பெர்னாண்டஸ் பதினான்கு ஆண்டுகள் இங்கே மதமாற்றம் செய்து ஏராளமானவர்களை மதமாற்றம் செய்வித்தார். அப்போது நம் தமிழ் மக்கள் இவர்களைப் பறங்கியர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவர்களுடைய பசு மாமிச உணவுப் பழக்கத்தையும், மதுபான பழக்கத்தையும் நம் மக்கள் விரும்பவில்லை. நம் மக்களின் வெறுப்புணர்வு காரணமாக இங்கு குடியேறின போர்த்துகீசியர்கள் இங்கே காலூன்றமுடியவில்லை. மதுரையில் அவர்கள் எடுத்த முயற்சி வீணானதாயிற்று.

 

 

 

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு வித்திட்ட ராபர்ட் கிளைவ்

 

             

         இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை தென்னாட்டில் நிலைபெற வைத்தவர் ராபர்ட் கிளைவ். ஆசிய நாடுகளில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக வந்து நம் நாட்டில் இறங்கியவர் இவர்.  இங்கே இருந்த குறுநில மன்னர்களின் அனுமதியோடு கோட்டையைக் கட்டிக் கொண்டு இந்தியாவில் அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்து, இங்கிருந்து ஏராளமான செல்வங்களை அள்ளிச் செல்லத் தொடங்கிய காலம் கிளைவின் காலம்.

          அப்போது சென்னைப் பட்டணத்தில் ஆங்கிலேயர்களும், புதுச்சேரியில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் கால் பதித்துத் தங்கள் முகாம்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  இந்தியாவில் ஆங்காங்கே சின்னஞ்சிறு ராஜ்யங்கள் அரசர்களாலும், பாளையக் காரர்களாலும் ஆளப்பட்டு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, மெல்ல அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருள்களைக் காட்டி, தங்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்தி,  தங்கள் ஆதிக்கத்தைச் சிறிது சிறிதாக இங்கே நிலைநிறுத்தத் தொடங்கினார்கள்.

தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சு கம்பெனியாருக்கும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டெல்லியில் இருந்த முகலாயர்களின் ஆட்சி புகழ் மங்கிவரும் நேரம் அது. அப்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான சுதேச சமஸ்தானங்கள் சிறுசிறு பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாதிக்க அரசாக மத்தியில் முகலாயர்களுடைய அரசு இருந்து வந்தது. இந்தியாவின் வளம், செல்வம் இவற்றைக் குறிவைத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியும், பிரான்ஸ் நாட்டின் கிழக்கிந்திய கம்பெனியும் இந்தியாவை வேட்டைக் காடாக்கி டெல்லி முகலாய சக்ரவர்த்தியின் ஆதரவோடு இங்கு வந்து தங்கள் வியாபாரத்தைத் தொடங்கி தங்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

ஐரோப்பாவிலிருந்து பல்வேறு பொருட்களைக் கொணர்ந்து இங்கே விற்று, இங்கிருந்து அரிய பல பொருட்களையும், செல்வங்களையும் அவரவர்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். டில்லி முகலாய சக்கரவர்த்தி ஆட்சியில் தென்னிந்தியாவில் வரிவசூல் செய்ய ஐதராபாத் நிஜாமும், அவருக்குக் கீழே தமிழ்நாட்டுப் பகுதிகளில் வரிவசூல் செய்ய ஆற்காடு நவாபும் நியமிக்கப் பட்டிருந்தார்கள். ஆற்காட்டு நவாப் தெற்கே ஆங்காங்கே பாளையக்காரர்களை நியமித்து அவர்களைக் கொண்டு மக்களிடம் வரிவசூல் செய்து நிஜாமுக்கும் அவர் மூலமாக முகலாய மன்னருக்கும் அளித்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில் தென்னிந்திய வரலாற்றில் ஆற்காட்டு நவாப் முக்கியத்துவம் பெறுகிறார். பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக் கம்பெனியாரும் இங்கே வந்து தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முயன்ற நேரத்தில் ஆற்காட்டு நவாபின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் ஆற்காடு முக்கியத்தும் பெற்ற இடமாக ஆனது.

இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்த பல நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பில் இருந்தார்கள். பிரான்ஸ் கம்பெனி புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டு தங்கள் வியாபாரத்தை நடத்தினார்கள். அந்தந்த கம்பெனிகள் அவர்கள் பிரதேசத்திலும், அண்டை அயலிலும் இருந்த சுதேச மன்னர்களோடு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு தங்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவந்தார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்வதாகச் சொல்லி உட் புகுந்திருந்தாலும், அவர்கள் இந்த பிரதேசங்களை எப்படியேனும் கவர்ந்து கொள்வது என்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். ஆற்காடு நவாபைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் தங்கள் நோக்கம் நிறைவேற ஏதுவாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஐரோப்பாவில் அப்போதெல்லாம் விரோதம் நிலவி வந்தது என்பது வரலாற்றில் காணுகின்ற செய்தி. அங்கு நிலவிய அவர்களது விரோதம், வியாபாரம் செய்ய வந்த இந்தியாவிலும் விரோதமும், போட்டியும் இருந்ததால், அந்தந்த பகுதிகளில் இருந்த நவாப்புகளுடன் நட்பு கொண்டு, அவர்களது ஆதரவைப் பெற எல்லா முயற்சிகளும் செய்து வந்தனர். நம் நாட்டில் இருந்த இந்த சுல்தான்களுக்கெல்லாம் இவ்விரு ஐரோப்பிய வியாபாரிகள் ஆயுதங்களையும், ஆடம்பரப் பொருட்களையும் கொடுத்து,  இதர உதவிகளையும் செய்து அவர்களுடைய ஆதரவைப் பெற்று வந்தார்கள்.

தட்சிண பிரதேசத்தில் ஐதராபாத் நிஜாமாக ஆசஃப் ஜா என்பவர் தனது குடும்ப அரசாட்சியை நடத்திக் கொண்டு, டெல்லி நவாபுக்கு வரிவசூல் செய்து அனுப்பும் பிரதிநிதியாகவும் இருந்து செயல்பட்டார். இவருடைய ஆளுகைக்கு உட்பட்ட தென் இந்திய பகுதிகளை கர்நாடகப் பிரதேசம் என்றழைத்தார்கள். இவருக்கு தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த சுதேச மன்னர்கள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் இவர்களிடமிருந்தெல்லாம் வரி வசூல் செய்ய ஆற்காட்டு நவாபை நியமித்திருந்தார்.

ஆற்காட்டு நவாபுக்கு வரிவசூலில் உதவி செய்திட தென் இந்தியா நெடுக ஏராளமான பாளையக்காரர்கள் இருந்தார்கள். அப்போது வளர்ந்து வந்த விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கே வலிமையான அரசாக உருவான சமயம், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்களுடைய பிரதிநிதிகள், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய இடங்களில் ஆட்சி புரிந்து வந்தார்கள். நாயக்க மன்னர்கள் என்று இவர்களை அழைப்பார்கள். இந்த அரசாங்கங்கள் எல்லாம் சுயேச்சையான அதிகாரமுடைய நாடுகளாகவே இருந்து வந்தன. தஞ்சையில் கடைசி நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்கர்களால் போரில் கொல்லப்பட்ட பிறகு பிஜப்பூர் சுல்தானின் விருப்பப்படி மராத்திய தளபதி ஏகோஜி என்பவர் தஞ்சையில் மராத்திய ஆட்சியைத் தொடங்கினார்.

1748இல் ஐதராபாத் நிஜாம் ஆசஃப் ஜா காலமானார். அவருடைய இடத்துக்கு இருவர் போட்டியிட, ஒருவருக்கு பிரிட்டிஷ் கம்பெனியும், இன்னொருவருக்கு பிரான்ஸ் கம்பெனியும் ஆதரவுக் கரம் நீட்டின. இதில் பிரான்ஸ் ஆதரவளித்தவர் வெற்றி பெற்று ஐதராபாத் நிஜாமாக ஆனார். தெற்கே ஆற்காட்டில் ஆண்டு வந்த ஆற்காடு நவாப் பதவிக்கு சந்தா சாஹேபை பிரான்ஸ் கம்பெனியும், முகமது அலிக்கு இங்கிலீஷ் கம்பெனியும் ஆதரவு கொடுத்தன. பிரெஞ்சுப் படையின் ஆதரவுடன் ஆற்காட்டு நவாபாக உட்கார்ந்த சந்தா சாஹேப், அவருக்குப் போட்டியாக ஆற்காட்டு நவாபாக ஆகவேண்டிய முகமது அலி கான் வாலாஜா என்பவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.

சந்தா சாஹேப் ஒரு மிகப் பெரிய படையுடன் புறப்பட்டுப் போய் முகமது அலிகான் தங்கியிருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை முற்றுகை இட்டார். அங்கு முகமது அலிகான் தன்னுடைய சிறிய படையுடனும், 600 பிரிட்டிஷ் படைவீரர்களுடன் சந்தா சாஹேபை எதிர் கொண்டார். முகமது அலியின் பலவீனமான நிலைமையைப் பார்த்து பிரிட்டிஷ் கம்பெனி திருச்சிராப்பள்ளியையும், தென் இந்தியாவையும் கைகழுவிவிட்டு விடலாம் என்று எண்ணினார்கள் . அந்த சமயம் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்த ராபர்ட் கிளைவ் போர் வீரனாக மாறி முதல் கர்நாடக யுத்தத்தில் பங்கெடுத்தவர், தங்கள் கம்பெனியின் தோல்வி மனப்பான்மையைக் கண்டு மனம் கொதித்து, அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் சாண்டர்ஸ் என்பவரிடம் முறையிட்டார். அதாவது சந்தா சாஹேப் ஆற்காட்டை விட்டு நீங்கி முகமது அலி வாலாஜாவை எதிர்த்துத் திருச்சிக்குப் போய் அங்கு முற்றுகையிட்டிருக்கிற நேரத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகள் ஆற்காட்டை முற்றுகையிட வேண்டுமென்று விரும்பினார். அப்படிச் செய்தால் சந்தா சாஹேப் ஆற்காட்டைக் காப்பாற்ற இங்கே ஒடிவருவார் என்பது அவர் கருத்து. இந்த ஆலோசனையை கவர்னர் சாண்டர்ஸ் ஏற்றுக் கொண்டாலும், கிளைவுடன் தங்கள் படையில் இருந்த 350 பிரிட்டிஷ் படைவீரர்களில் 200 பேரை மட்டுமே அழைத்துச் சென்று ஆற்காட்டை முற்றுகையிட ஆலோசனை சொன்னார்.

இந்த 200 வீரர்களுடன், ஒரு 300 இந்திய சிப்பாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆற்காடு நோக்கி படையெடுத்தார் ராபர்ட் கிளைவ். இது நடந்தது 1751 ஆகஸ்ட் 26ஆம் தேதி. 29ஆம் தேதி காலையில் அந்தப் படை புறப்பட்டு சென்னையிலிருந்து 42 மைல் (68 கி.மீ) தூரத்தில் இருக்கும் காஞ்சிபுரம் வந்தடைந்தது. கிளைவின் ஒற்றர் படை ஆற்காடு நிலவரத்தைப் போய் பார்த்து வந்து, ஆற்காட்டில்  உள்ள படையில் தங்கள் படையை விட இரு மடங்கு வீரர்கள் இருப்பதாகத்  தெரிவித்தனர். காஞ்சிபுரத்திலிருந்து 27 மைல் (43 கி.மீ) தூரத்தில் இருந்த ஆற்காட்டுக்குச் செல்லும் வழியில் பயங்கர இடியுடன் கூடிய மழை, புயல் தாக்கி கிளைவின் பயணம் தடைப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து ஆற்காட்டைச் சென்றடைந்தது.

அங்கு ஆற்காட்டில் கோட்டையைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சந்தா சாஹேபின் படைக்கு, ராபர்ட் கிளைவின் படை திடீரென்று வந்து தாக்கும் என்பது தெரியாது.  கோட்டைக்குள் காவலில் இருந்த சந்தா சாஹேபின்  படை பலம் அதிகமாக இருந்த போதிலும், சென்னையிலிருந்து வரும் ஆங்கில கம்பெனியாரின் படைபலம் அதிகமாக இருக்குமென்று கருதி, கோட்டையை விட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.  இப்படி ஆற்காட்டைப் பிடிக்க எதிர்ப்பே இல்லாமல் போனதால், கிளைவ் மிக சுலபமாக ஆற்காட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு துப்பாக்கி குண்டைக் கூட வீணடிக்காமல் அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார். ராபர்ட் கிளைவிடம் ஆற்காடு விழுந்து விட்டது என்ற செய்தி திருச்சியில் முற்றுகையில் இருந்த சந்தா சாஹேபுக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் தன் படைவீரர்கள் 4000 பேரையும், உடன் 150 பிரெஞ்சுப் படை வீரர்களையும் தன் மகன் ரஸா சாஹேப் என்பவன் தலைமையில் ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்தார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி ரஸா சாஹேப் தன்னுடைய படை வீரர்கள் 2000 பேரையும், புதிய சிப்பாய்கள் 5000 பேரையும் 120 ஐரோப்பியர்கள் 300 குதிரைப் படை வீரர்களுடன் ஆற்காடு கோட்டையைக் கிளைவிடமிருந்து  மீட்பதற்காகச் சென்றான்.   அந்த காலகட்டத்தில் ஆற்காட்டில் ஜனத்தொகை ஒரு லட்சம் இருந்தது. அந்த கோட்டையைப் பிடித்திருந்த ராபர்ட் கிளைவ் ஆற்காட்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக, தன் படை வீரர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான தொல்லைகளையும் தரக்கூடாது, கொள்ளையிடக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, மக்களிடமிருந்து சந்தா சாஹேப் பறிமுதல் செய்த அனைத்து சொத்துக்களையும் அதனதன் உரிமையானவர்களிடமே திரும்பக் கொடுத்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டார்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளினால் உள்ளூர் மக்களிடம் கிளைவ் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள முடிந்தது. போன சூட்டில் அந்த கோட்டையினுள் தண்ணீர் பஞ்சம் தீர வழி செய்துவிட்டு, கோட்டையைப் பாதுகாக்கவும் ஆட்களைத் தயார் செய்தார். அப்போது கோட்டைக்குள் இரண்டு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் மட்டுமே இருந்தது. ஆற்காட்டு கோட்டையின் சுற்றளவு ஒரு மைல் தூரம் இருக்கும். கோட்டை சுவர் உயரம் குறைவாகவும், சிலவிடங்கள் இடிந்தும் கிடந்தது. கோட்டை பாதுகாப்புக்கான பீரங்கி அமைப்புகள் அறவே இல்லை. சுற்றிலும் இருந்த அகழிகள் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் பெரும்பாலும் வறண்டு கிடந்தது. இதற்கிடையே கிளைவின் படை வீரர்களில் சிலர் உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாக ஆனார்கள். மிகுந்தது 120 ஐரோப்பிய வீரர்களும் 200 சிப்பாய்களும் மட்டும்தான். இவர்களை வைத்துக் கொண்டு சந்தா சாஹேபின் படையை எதிர்த்து நின்று கோட்டை அவர்கள் வசம் விழுந்துவிடாமல் காக்க வேண்டியிருந்தது.

சந்தா சாஹேபின் படை கோட்டைக்கு வெளியே சில மைல் தூரத்தில் முகாமிட்டது. சென்னையில் இருந்து கிளைவுக்கு உதவி புரிய ஆங்கிலப் படை எதுவும் வராமல் இருக்க வழி மறித்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உணவுப் பொருட்களும் கோட்டைக்குள் போக முடியாமல் தடைகளை ஏற்படுத்தினார்கள். கோட்டை மீது இருமுறை படைகள் சென்று  மோதிய போதிலும், இரண்டு முறையும் தோல்விதான் மிச்சம். நிலைமைகளை ராபர்ட் கிளைவ் பார்த்து விட்டு செப். 14 இரவு நேரத்தில் கோட்டைக்கு வெளியில் தங்கியிருக்கும் சந்தா சாஹேப் படைகள் மீது தாக்குதல் நடத்தினார். எதிர்பாராத இந்த தாக்குதலால் அச்சமடைந்து சந்தா சாஹேப் படை வீரர்கள் சிதறி ஓடினார்கள். கிளைவ் படையில் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கவர்னர் சாண்டர்ஸ் கிளைவின் பாதுகாப்புக்காக, இரண்டு பெரிய பீரங்கிகளை ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த பீரங்கிகளை ஆற்காட்டு கோட்டைக்குள் கொண்டு செல்ல உதவிட,  தங்கள் படையின் பெரும் பகுதியை உடன் அனுப்பி வைத்தார். குறைந்த அளவிலான படை வீரர்களுடன் கோட்டைக்குள் இருந்த ராபர்ட் கிளைவ், இரவு நேரத்தின் இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு, கோட்டைக்கு வெளியே முகாமிட்டிருந்த சந்தா சாஹேப் படையின் மீது தாக்குதல் நடத்த அனுப்ப, கிளைவின் படை மிகப் பெரியது என்று கருதி, அவர்கள் சிதறி ஓடினார்கள். குறைவான வீரர்களுடன் ராபர்ட் கிளைவ் சுலபமாக வெற்றியை ஈட்டினார்.

சந்தா சாஹேப் அனுப்பிய ரசா சாஹேபின் படைகள், மதில் சுவற்றை ஒட்டிய உயர்ந்த கட்டடத்தினுள் புகுந்தது. கிளைவ் இவர்களை விரட்ட ஏற்பாடு செய்த போதிலும்,  எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் கிளைவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கிளைவ் தாக்குதல் நடத்தியதில் பிரெஞ்சு படை வீரர்களில் பலரும் மாண்டு போனார்கள். இந்த தாக்குதலில், ஆங்கிலேய வீரர்கள் பதினைந்து பேரும் இறந்தார்கள். கிளைவின் பிரிட்டிஷ் படைகள் நாலா புறமும் சூழந்துகொண்ட நிலையில், பதுங்கியிருந்த ரசாவின் படைகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். வெளியுலக தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு உயர்ந்த கட்டடங்களுக்குள் பொறியில் மாட்டிக் கொண்ட எலிகள் போல, உண்ண உணவு, குடிக்க தண்ணிர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அழுக்கு படிந்த தேங்கிய தண்ணீர் தான். அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து உணவை வலிய பறித்து உண்டார்கள். இப்படி எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியும், அவர்கள் ஓய்ந்து போனார்கள். இதற்கிடையே சென்னை ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் சாண்டர்ஸ் புதிதாக சிப்பாய்களை நியமித்தும், இங்கிலாந்திலிருந்து புதிய படைவீரர்களை வரவழைத்தும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார்.

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 130 பிரிட்டிஷ் வீரர்களும் 100 இந்திய சிப்பாய்களும் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அக்டோபர் இறுதியில் பீரங்கிப் படையொன்று பிரான்ஸிலிருந்து புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது. அந்தப் படை ஆற்காட்டை நோக்கி வந்து, கிளைவ் இருக்குமிடத்துக்கு வடமேற்கே நிலை நிறுத்தப்பட்டது. அந்தப் படை கிளைவின் ஒரு பீரங்கியைத் தாக்கி அழித்துவிட்டு இன்னொன்றை பழுதாக்கி விட்டது. ஆறு நாட்கள் பிரெஞ்சு படை கோட்டையைக் கடுமையாகத் தாக்கியது. அந்தத் தாக்குதலால் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த பிரிட்டிஷ் படை இந்த உடைப்பை சரிசெய்ய முயன்றது. இதற்கிடையே கோட்டையின் இன்னொரு பகுதியிலும் பிரெஞ்சு படையால் சுவர் உடைக்கப்பட்டது. கோட்டை முற்றுகை நீண்டுகொண்டே போயிற்று. உணவுப் பொருட்களும், வெடி மருந்துகளும் கிட்டத்தட்ட தீர்ந்து போகிற நிலைமை. கோட்டை முற்றுகையின் ஐம்பதாவது நாளும் நெருங்கி வந்தது. கிளைவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை மராத்திய படையின் தலைவன் மொராரி ராவ் வாக்களித்தபடி, அவர்கள் படையின் உதவியைத்தான். அந்நாள் வரை தஞ்சை மராத்தியர்கள் முகமது அலியின் படைகளுக்கும், சந்தா சாஹேபின் படைகளுக்கும் இடையில் நடந்த போரில் நடுநிலை வகித்து வந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் படைகளின் பக்கம் தங்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு இப்போது உதவி செய்ய தயாராகிவிட்டார்கள்.

மராத்திய படை மொராரி ராவ் தலைமையில் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவ தயாராக இருப்பதறிந்து, சந்தா சாஹேபின் தம்பி ரசா சாஹேப் எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து கொண்டான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட அவன் கிளைவுக்கு ஒரு தூது அனுப்பினான். பரிசுப் பொருட்களை அனுப்பி, கிளைவ் இனி தப்பிக்க வழியில்லை, அதனால் சரணாகதி அடைந்து விடுவதே நல்லது என்பதைச் சொல்லி அனுப்பினான். ஆனால் ராபர்ட் கிளைவ் மறுத்து விட்டார். உடனே ரசா சாஹேப், தான் உடனடியாக கோட்டையைத் தாக்கி உட்புக இருப்பதாகத் தகவல் அனுப்பினான். இதனால் கிளைவின் படை எதிர்வரும் கோட்டை முற்றுகையை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகளில் இறங்கியது.

இதற்கிடையே கிளைவ் ரசா சஹேபுக்கு அனுப்பிய பதிலில் தான் கோட்டையைப் போரிட்டுப் பிடித்துக் கொண்டவன் என்றும், தன்னுடைய படை வீரர்கள்  ஈவிரக்கம் இல்லாத முரடர்கள் என்றும், அப்படியிருக்கும் போது, ரசா தன் படைகளை விட்டுத் தாக்குவதற்கு முன்பு நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி செய்தி அனுப்பினான். ரசா சாஹேப் துணிந்து நவம்பர் 14ஆம் தேதி  தாக்குதலை துவக்குவதென்று முடிவெடுத்தான். காரணம் அன்று ரம்ஜான் பண்டிகை. ஆனால் நவம்பர் 13இல் ஒரு ஒற்றன் கிளைவிடம் வந்து ரசா சாஹேப், அடுத்த நாள் கோட்டையைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் சொன்னான். மறுநாள் எதிரிகளின் படை கோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது. தங்கள் படைக்கு முன்னால் ஏராளமான யானைகள் அடங்கிய ஒரு யானைப் படையை அனுப்பினார்கள். அதன் முகபடாமில் இரும்பு தகடுகள் பொறுத்தப்பட்டிருந்தன. அந்த யானைகள் வேகமாக வந்து கோட்டைக் கதவுகளை முட்டித் தகர்த்தால் மரக் கதவுகள் உடைந்து திறந்து கொள்ளும் அபாயம் இருந்ததை உணர்ந்து கொண்டார் கிளைவ்.  அப்படி கோட்டையை முட்டி உடைக்க வேகமாக வந்து கொண்டிருந்த யானைகளின் மேல் கிளைவின் பீரங்கிகள் தாக்குதல் நடத்தின.

தாக்குதல்களுக்கு உள்ளான யானைகள் மிரண்டு போய் திரும்பி ஓடத் தொடங்கின. அப்படி ஓடுகின்ற போது அவற்றை நடத்தி வந்த ரசாவின் வீரர்களைத் துவம்சம் செய்துகொண்டு ஓடின. ரசாவின் வீரர்கள் அகழியின் மீது மரப் பலகைகளை வீசி பாலம் அமைக்கத் தொடங்கினார்கள். அந்த மரப் பாலத்தைத் தாண்டி கோட்டையைப் பிடிப்பது அவர்கள் திட்டம். இதனைப் புரிந்து கொண்ட கிளைவ் சாமர்த்தியமாக அந்த மரப் பாலத்தைத் தகர்த்து அந்த முயற்சியைத் தடுத்து விட்டார். ரசாவின் படை வீரர்கள் கோட்டை அகழியின் வறண்ட பகுதிகளைக் கண்டறிந்து அதன் மூலமாய் கோட்டைக்குள் புக முயற்சி செய்தார்கள். ஆனால் கோட்டைக் குள்ளிருந்து கிளைவின் பிரிட்டிஷ் படைகள் கடுமையாக பீரங்கித் தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இன்னொரு பிரிவினர் கோட்டையைக் காப்பதில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். ரசாவின் முன்னால் செல்லும் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடி மருந்துகள், குண்டுகள் இவற்றை பின்னால் இருக்கும் படை அனுப்பிக் கொண்டே இருந்தது. இப்படி தாக்குதல் நடத்திய ரசா படையை உள்ளே இருந்த கிளைவின் பிரிட்டிஷ் படை அடித்துத் துரத்தியது.

ரசாவின் வீரர்கள் ஓடத் தொடங்கினார்கள். இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. தாக்குதல் நடத்திய ரசாவின் படையில் நானூறு பேர் உயிரிழந்தனர். கிளைவின் படையில் ஐந்தாறு பேர்கள் மட்டுமே இறந்தார்கள். கோட்டை முற்றுகை பயங்கரமான இரவு முழுதும் தொடர்ந்தது எந்த நேரத்திலும் ரசாவின் படைகள் மறுபடியும் கோட்டையைத் தாக்கலாம் என்ற ஐயம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் கோட்டைக்கு வெளியே எதிரியின் படைகளின் நடமாட்டத்தையே காணோம். முந்தைய இரவு முன் பொழுதில் நடந்த பீரங்கித் தாக்குதலுக்கிடையே ரசா தன் வீரர்களை மெல்ல முற்றுகையை நீக்கிக் கொண்டு பின்வாங்க ஆணையிட்டிருந்தான். அவன் படை வேலூருக்குச் சென்றடைந்தது. அப்படி அவர்கள் பின்வாங்கி ஓடுகின்ற போது ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் இவற்றை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

பிரெஞ்சுப் படையின் ஆதிக்கம் ஓங்கிவிடும், பிரிட்டிஷ் கம்பெனியார் தென்னிந்தியாவை பிரான்சுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த சூழ்நிலையில், படைவீரர்களின் எண்ணிக்கையில் பிரெஞ்சு படை அதிகம் இருந்தாலும் கிளைவின் சாமர்த்தியத்தால் போரின் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார். ஆள்பலம் மட்டும் போதாது, வெற்றிக்கு வேறு பல தந்திரங்களும் உண்டு என்பதை கிளைவ் நிரூபித்து விட்டார். கிளைவின் இந்த வெற்றி இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்ததென்றால் அது மிகையில்லை. ராபர்ட் கிளைவின் வரலாற்றை எழுதிய மார்க் பென்ஸ் ஜோன்ஸ் என்பார் எழுதுகிறார், “கிளைவின் இந்த சாதனை, அவருடைய அதிர்ஷ்டமாகவோ, எதிரிகளின் தவறான நடவடிக்கைகள் மூலமாகக்கூட இருக்கலாம், இந்த நிகழ்வானது இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், தாங்கள் தோற்கடிக்கப் பட முடியாதவர்கள் என்கிற எண்ணத்தையும், இந்தியாவில் தாங்கள் நிரந்தரமாக நிலைத்து விடலாம் என்ற எண்ணத்தை இந்த வெற்றி கொடுத்தது” என்கிறார்.

இந்த ஆற்காடு வெற்றிக்குப் பிறகு ஏராளமான இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய படையில் சேர்ந்தார்கள். எதிரிகளின் படைவீரர்களும் கட்சி மாறி கிழக்கிந்திய கம்பெனி படையில் சிப்பாய்களாகச் சேர்ந்து கொண்டார்கள். ஆங்கில படையின் வலிமை அதிகரித்துக் கொண்டே போன நிலயில் பிரான்சின் காலனி ஆதிக்க ஆசைக் கனவு, மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பின்னர் ஐரோப்பாவில்  நடந்த ஏழாண்டு போரில் பிரான்சின் தோல்விக்குப் பிறகு அவர்கள் இந்தியாவை காலனியாக ஆக்கும் கனவை அறவே மறந்துவிட வேண்டி இருந்தது.  ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இங்கே நிலையாக காலூன்றி ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.  அப்படி இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியார் இங்கு காலூன்ற காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ்.