பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 27, 2013

மொழிபெயர்ப்பு நூல் "ஞானத்திரட்டு" (28-1-2013)

1. மொழிபெயர்ப்பு நூல் "ஞானத்திரட்டு" (28-1-2013)

சுவாமிஜியின் கடிதங்களிலிருந்து சில பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்த மிகப் பழமையான பத்திரிகைகளுள் "லோகோபகாரி" என்பதும் ஒன்று. அதன் ஆசிரியராக இருந்தவர் திரு வி.நடராஜ ஐயர். சுவாமிஜி வாழ்ந்த காலத்திலேயே, அவருடைய சொற்பொழிவுகளையெல்லாம் திரட்டி, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து இரு பகுதிகளாக வெளியிட்டார் நடராஜ ஐயர். அந்த நூல்களுக்கு "ஞானத்திரட்டு" என்று பெயர். அந்த நூலின் முதல் பகுதியை சுவாஜிக்கு அனுப்பி வைத்தார். அந்த நூலைப் பெற்றுக்கொண்டு சுவாமிஜி நடராஜ ஐயருக்கு பதில் எழுதினார். ஆங்கிலத்தில் சுவாமிஜி பேசிய பேச்சுக்களை மாநில மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிட்டது இந்தத் தமிழ் நூலாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சாதனையைப் புரிந்த "லோகோபகாரி" ஆசிரியர் நடராஜ ஐயருக்கு சுவாமிஜி எழுதிய பதில் கடிதத்தை இங்கு பாருங்கள்.

டார்ஜிலிங் 15 ஏப்ரல் 1898

அன்புடையீர்!

உங்கள் 7ஆம் தேதி கடிதமும் எனது சொற்பொழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்கள் பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் பெரிய சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துக்களை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்ற வழி அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

தங்கள் உண்மையுள்ள,
விவேகானந்த

2. சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம்.

சுவாமிஜிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்த பேராதரவு அனைவரும் அறிந்தது. தமிழ் மக்களின்பால் அன்பு மிகக் கொண்டிருந்தார் சுவாமிஜி. தமிழ் அன்பர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்திற்கு ஒரு நிரந்தர மையத்தை ஏற்படுத்த எண்ணி தமது குருபாயியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார் சுவாமிஜி. அவர் 1897 இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். அவர் சென்னையில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு சில அடிப்படை விஷயங்களை இந்தக் கடிதத்தில் விளக்குகிறார் சுவாமிஜி. இப்படி தொடங்கப்பட்டதுதான் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம். இனி அந்தக் கடிதத்தின் சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்.

டார்ஜிலிங் 20 ஏப்ரல் 1897.

அன்பு சசி,

நீங்கள் எல்லோரும் இதற்குள் கட்டாயமாக சென்னை போய்ச் சேர்ந்திருப்பீர்கள். *பிலிகிரி உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார், சதானந்தர் உனக்குச் சேவை செய்கிறார் என்று நம்புகிறேன். சென்னையில் பூஜை, அர்ச்சனை முதலியவற்றை முற்றிலும் சாத்வீக பாவனையில் செய்ய வேண்டும். ரஜோகுணத்தின் சாயலே அதில் இருக்கக்கூடா

து. அளசிங்கன் இதற்குள் சென்னை திரும்பியிருப்பான் என்று நினைக்கிறேன். யாருடனும் விவாதங்கள் செய்யாதே; எப்போதும் சாந்தமாக இரு. இப்போதைக்கு பிலிகிரியின் வீட்டிலேயே குருதேவரைப் பிரதிஷ்டை செய்து பூஜை முதலியவற்றைச் செய்து வா. பூஜையை விரிவாகச் செய்யாதே. அந்த நேரத்தை வகுப்புகள் நடத்துவதிலும், சொற்பொழிவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். உன்னால் முடிந்த அளவு அன்பர்களுக்கு மந்திரோபதேசம் செய்வது நல்லது. இரண்டு பத்திரிகைகளையும் கவனித்துக் கொள். இயறவரையில் அதில் உதவு. பிலிகிரிக்கு இரண்டு விதவை மகள்கள் உள்ளார்கள். அவர்களுக்குக் கல்விப் பயிற்சி அளி. அவர்கள் மூலமாக மேலும் பல விதவைகள் முன்வந்து சம்ஸ்கிருதம், ஆங்கிலம், மதம் இவற்றைக் கற்கட்டும். இந்த விஷயத்தில் விசேஷ முயற்சி செய். ஆனால் இந்தக் காரியமெல்லாம் எட்ட நின்று செய்யப்பட வேண்டும். இளம் பெண்களுடன் பழகும்போது மிகவும் எச்சரிக்கையாக இரு. ஒரு தடவை தவற நேர்ந்தால் அப்புறம் கதியில்லை. அந்த அபராதத்திற்கு மன்னிப்பும் இல்லை.

அதிகாலையில் பூஜை முதலானவற்றைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, பிலிகிரியையும் அவர் குடும்பத்தினரையும் சேர்த்து கீதை முதலான நூல்களைச் சிறிது நேரம் படி. ராதாகிருஷ்ண பிரேமையைப் பற்றி யெல்லாம் கற்பிக்க வேண்டியதே இல்லை. சீதாரமர், அல்லது ஹர பார்வதி இவர்களிடம் தூய பக்தி கொள்ளுமாறு போதனை செய். இதில் எந்தத் தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது. ராதா-கிருஷ்ண லீலை இளம் மனங்களுக்கு விஷம் போன்றது என்பதை நினைவில் வை. அடிலும் முக்கியமாக, பிலிகிரி முதலியவர்கள் ராமானுஜரின் நெறியைப் பின்பற்றுபவர்கள்; ராம உபாசகர்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் சுத்த பக்தியை இழக்கும்படி நேரக் கூடாது.

மாலை நேரத்தில் இதேபோல் சாதாரண மக்களுக்குச் சிறிது கற்பிக்கலாம். இவ்வாறு படிப்படியாக மலையையும் தாண்டிவிடலாம். எப்போதும் பரிபூரணத் தூய்மை நிலவுமாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வாமாச்சாரத்தின் நிழல்கூட மடத்தில் புகுந்துவிடக் கூடாது. மற்றபடி இறைவன் எல்லாவற்றையும் வழி நடத்துவார். பயம் வேண்டாம். பிலிகிரிக்கு எனது விசேஷ வணக்கத்தையும், அன்பையும் தெரிவி. அதேபோல் எல்லா பக்தர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவி.

அன்புள்ள, விவேகானந்த.

பி.கு. டாக்டர் நஞ்சுண்ட ராவுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவி. முடிந்த அளவு அவருக்கும் உதவு. தமிழர்களை, அதாவது பிராமணர் அல்லாதவர்களை சம்ஸ்கிருதம் படிப்பதில் ஊக்கப் படுத்து.

குறிப்பு:-- *இதில் 'பிலிகிரி' என குறிப்பிடப்படுபவர் பிலிகிரி ஐயங்கார் என்பவர். இவர் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு வைஷ்ணவர். உயர்நீதிமன்றத்து வழக்கறிஞர், செல்வந்தர். இவர்தான் இப்போது விவேகானந்தர் இல்லம் எனும் கட்டடத்தை ஐஸ் கட்டிகளைக் கொண்டு வந்து இறக்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு ஆங்கிலேய கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்கியவர். சுவாமி விவேகானந்தரை அந்த இல்லத்தில் தங்கச் செய்தவர். அதனால்தான் அந்தக் கட்டடம் விவேகானந்தர் இல்லம் ஆகியது.












1 comment:

Anonymous said...

Hello! I just want to give you a big thumbs up for your great information
you've got here on this post. I'll be returning to your web site for more soon.
My web site : oil rig pictures