பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 19, 2013

பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)


           பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)

இந்த உலகத்தில் புண்ணியபூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத் தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்து சேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால், மென்மையிலும் தாராள மனப்பான்மையிலும் புனிதத்திலும் அமைதியிலும், இவையனைத்திற்கும் மேலாக அக நோக்கிலும், ஆன்மிக நோக்கிலும், மனித சமுதாயம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டு என்றால், அது பாரதத் திருநாடே.

அரசியல் மகோன்னதமோ இராணுவ அதிகாரமோ நம் இனத்தின் தனிச் செய்தி அல்ல; அப்படி இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் -- இனி இருக்கப் போவதும் இல்லை.

இந்திய இனம் ஒரு போதும் செல்வத்திற்காக வாழ்ந்தது இல்லை. பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராளமான செல்வத்தை ஈட்டிய போதிலும், அது செல்வத்தைப் பெரிதென்று கருதியதில்லை. காலங்காலமாக வீரமும் தீரமும் கொண்ட ஆற்றல் மிகுந்த நாடாக இருந்து வந்திருந்த போதிலும், வீரமே பெரிதென்று போற்றியதில்லை. வெற்றி வெறி பிடித்துப் பிற நாடுகளுக்குச் சென்றதில்லை. தன் நாட்டிலேயே, தான் வகுத்த தனது எல்லைக்குள் இருப்பதிலேயே அது மன நிறைவு கண்டது. யாருடனும் அது போர் செய்ததில்லை. இந்திய நாட்டிற்கு ஏகாதிபத்திய மோகம் என்றுமே இருந்ததில்லை. செல்வமும், செல்வாக்கும் அதன் குறிக்கோள்கள் அல்ல.

ஓ! என் சகோதரர்களே! இது மிகவும் பிரகாசமான இலட்சியம். உபநிஷத காலத்திலேயே நாம் உலகிற்கு சவால் விடுத்தோம்; 'ந ப்ரஜயோதனேன தியாகேனைகே அம்ருதத்வ மானசு: -- சந்ததியால் அல்ல, செல்வத்தால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அமரத்துவம் அடையப்படுகிறது'. எத்தனையோ இனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, ஆசை என்னும் கோணத்திலிருந்து உலகப் புதிரை அவிழ்க்க எத்தனையோ காலம் முறன்றன. அவையெல்லாம் அன்றே தோற்றன. பழைய நாடுகள் பதவிக்கும் பணத்திற்கும் உள்ள ஆசையின் காரணமாக ஏற்பட்ட கொடுமை, துன்பம், இவற்றின் பளுவைத் தாங்க முடியாமல் அழிந்தன; புதிய நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

சமாதானம் நிலைக்குமா? யுத்தம் நிலைக்குமா? பொறுமை நிலைக்குமா? பொறுமையின்மை நிலைக்குமா? நல்லது நிலைக்குமா? கெட்டது நிலைக்குமா? தோள் வலிமை நிலைக்குமா? அறிவு நிலைக்குமா? உலகியல் நிலைக்குமா? ஆன்மிகம் நிலைக்குமா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

நமது பிரச்சினைகளுக்கு நாம் எப்போதோ தீர்வு கண்டுவிட்டோம். நல்ல காலத்திலும் சரி, கெட்ட காலத்திலும் சரி, அதைப் போற்றி வந்திருக்கிறோம்; காலம் முடியும் வரை அதைப் போற்றி வருவோம். நாம் கண்ட தீர்வு உலகப் பற்று இல்லாமை -- தியாகம்.

மனித இனத்தை ஆன்மிக மயமாக்குவதுதான் இந்தியாவின் வாழ்க்கைப் பணியினுடைய உட்பொருள், அதன் அமர கீதங்களின் பல்லவி, அதன் வாழ்க்கையின் முதுகெலும்பு, அதன் அஸ்திவாரம், அது இருப்பதற்கான காரணம். தார்த்தாரியர் ஆண்டாலும் சரி, இஸ்லாமியர் ஆண்டாலும் சரி, முகமதியர்கள் ஆண்டாலும் சரி, ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் சரி, அது தனது இந்த வாழ்க்கைப் பணியிலிருந்து ஒரு நாளும் தவறியதில்லை.

கீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டின் அளவு கோலால் மதிப்பிடுவது சரியானது அல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய். தாய்மைக் கருத்தை இந்தியர்கள் போற்றுகிறார்கள். தாயின் முன்பு துறவியர்கூட வீழ்ந்து வணங்க வேண்டும். கற்பு இந்தியாவில் மிகவும் போற்றப்படுகிறது.

இந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய். நமது இலட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய். எனவே தாய் நமக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவூல் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். நமது கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான், "தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு" என்று நாம் சொல்கிறோம். பிரார்த்தனையின் மூலம் பிறந்தவனே ஆரியன், காமத்தின் மூலம் பிறந்தவன் ஆரியன் அல்லன்.

இந்தக் கருத்து நம்மிடம் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. பிரார்த்தனையில் நிறைவுறாத திருமணத்தை நாம் இழி செயலாகவே கருதுகிறோம் ... கற்பு - இதுதான் இந்து இனத்தின் இரகசியம்.

மிகவும் பழமை வாய்ந்த சிறந்த இரண்டு இதிகாசங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பழங்கால இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், சமூக நிலை, நாகரீகம் போன்றவற்றை இவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இந்த இரண்டில் மிகப் பழமையானது இராமாயணம். 'இராமனின் வாழ்க்கை வரலாறு'.... இராமனும் சீதாபிராட்டியும் இந்திய நாட்டின் இலட்சியங்களாகும். எல்லா குழந்தைகளும், முக்கியமாக எல்லா சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றனர். தூயவளௌம் தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டவளுமான சீதையைப் போல வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசையாகும்.

மகாபாரதம் என்றால் 'பெரிய இந்தியா அல்லது பரதனின் பெரிய சந்ததியரின் கதை'..... இந்த இதிகாசம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்களின் மீது ஹோமரின் கவிதைகள் எத்தனை செல்வாக்கு பெற்றுள்ளதோ அத்தனை செல்வாக்கை இது இந்தியர்கள் மீது பெற்றிருக்கிறது. பக்தியுள்ள ஆனால் மன உறுதி இல்லாத பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனின் மனத்தில் தர்மத்துக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்; பிதாமகர் பீஷ்மரின் மகோன்னதமான குணச்சித்திரம்; யுதிஷ்டிரனின் சிறந்த பண்பும் தர்மமும்; நான்கு சகோதரர்களின் விசுவாசமும் வீரமும்; கிருஷ்ணரின் பரிசுத்தமான பண்பும்; ஈடு இணையற்ற பொது அறிவும்; இனி, ஆண்களுக்குச் சளைக்காத பெண்களின் பாத்திரங்கள் -- கம்பீரமான காந்தாரி, அன்புத்தாய் குந்தி, அடக்கமே உருவானவளும் துவள்பவளுமான திரெளபதி, இன்னும் நூற்றுக்கணக்கான மகாபாரதக் கதாபாத்திரங்களும், இராமாயணக் கதாபாத்திரங்களும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களின் சொத்தாக இருந்து வருகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கும் நற்பண்புகளுக்கும் தார்மிகக் கருத்துக்களுக்கும் அடிப்படையாக உள்ளன. உண்மையில், இராமாயணமும், மகாபாரதமும் பழங்கால ஆரியர்களின் வாழ்க்கையும் அறிவும் அடங்கிய அறிவுக் களஞ்சியங்கள். இவை விரிக்கின்ற இலட்சிய நாகரிகத்தை மனித குலம் இன்னமும் எட்டிப் பிடிக்கவில்லை.

இவர்களைப் பற்றியெல்லாம் படிக்கும்போது மேலை நாட்டு இலட்சியம் இந்திய இலட்சியத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்பதை நீங்கள் உடனடியாக உணரமுடியும்......... 'செய், செயலால் உன் சக்தியைக் காட்டு' என்று மேலை நாடு சொல்கிறது. 'பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக் கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு மேலை நாடு தீர்வு கண்டுள்ளது. அவன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற பிரச்சினைக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது.

No comments: