பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 23, 2013

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)


வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)

அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் நாட்டறாம்பள்ளி எனும் ஊருக்கு அருகில் இருப்பது வாணியம்பாடி. இந்த ஊரில் வெங்கடசாமி நாயுடு எனும் அன்பர் ஒருவர் இருந்தார். அந்தக் காலத்தில் அதாவது 1900ஆம் ஆண்டு வாக்கில் அவ்வூரில் இருந்த நாயுடு காரு ஒரு நாத்திகர். தமிழ் நாட்டில் நாத்திகர் என்போர் எப்படி இருந்திருப்பார் என்பது நமக்கெல்லாம் தெரியும் அல்லவா? அப்படிப்பட்ட இவருக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும். அந்த காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டு ஆங்காங்கே சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார். அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனைச் சில பத்திரிகைகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தன. அப்படி வந்த சுவாமிஜியின் சொற்பொழிவுகளை நமது வெங்கடசாமி நாயுடு படிக்கலானார். ஒவ்வொரு சொற்பொழிவையும் தமிழில் படிக்கப் படிக்க நாயுடுகாருவின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சுவாமிஜியின் பேச்சுக்களில், அவருடைய கருத்துக்களில் இவரது மனம் ஆர்வத்துடன் ஈடுபடலாயிற்று. படிப்பதோடு அந்தப் பேச்சின் சிறப்புக்களைத் தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சுவாமிஜியின் கருத்துக்களை ஏகத்துக்கும் பாராட்டிப் பேசிவந்தார். தான் மட்டும் படித்துத் தெரிந்து கொண்ட செய்திகளை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுமென்கிற அவா அவருக்கு. நல்ல நினைவாற்றல் உள்ளவர் அவர். அதனால் சுவாமிஜியின் சொற்பொழிவுகளை மனதில் பதித்துக் கொண்டு, அவற்றை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பிறருக்கும் அப்படியே எடுத்துரைத்தார்.

சுவாமிஜியின் பேச்சுக்கள் மட்டுமல்ல, அவருடைய தோற்றமும், உடையும்கூட இவரை மிகவும் கவர்ந்தன. உடனே இவரும் சுவாமிஜியைப் போல உடை அணிந்து கொண்டு அதே வீரம் ததும்பும் தோற்றத்தோடு அவருடைய பேச்சுக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கலானார். அன்றைக்குப் படித்த சொற்பொழிவை அப்படியே மனனம் செய்து கொண்டு சொல் மாறாமல் அப்படியே ஒப்பிப்பார். பேச்சை முடித்ததும், அமெரிக்க நாட்டில் நமது சுவாமி விவேகானந்தர் இப்படித்தான் உடையணிந்து, இப்படித்தான் பேசினார் என்று அறிவிப்பார்.

ஏழ்மையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்தப் பகுதி மக்களிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. அவர்களுக்குத் தேவையான பல உதவிகளையும் அவர் செய்து வந்தார். தான் தனியொரு மனிதனாக உதவிகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதன் மூலம் உதவிகளை மக்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தில் "விவேகானந்தர் வேதாந்த சங்கம்" எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். தான் இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதையும், அதனைக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்யவிருப்பதையும் ஒரு கடிதத்தில் வெங்கடசாமி நாயுடு அமெரிக்காவில் இருந்த சுவாமிஜிக்கு தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைக் கண்ட சுவாமிஜி நம்மூர் வெங்கடசாமி நாயுடுவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதினார். சுவாமிஜி வாழ்ந்த காலத்திலேயே, அவர் பெயரால் முதன்முதலில் தமிழ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சங்கம் இந்த சங்கம். தோற்றுவித்து வரலாற்றில் இடம்பெற்றிருப்பவர் வெங்கடசாமி நாயுடு.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுவாமிஜிக்கு, முன்பின் பழக்கமில்லாத ஒரு நபர் தமிழ் நாட்டிலிருந்து தங்கள் பெயரால் ஒரு சங்கம் தோற்றுவித்துச் சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியது புதுமையாக இருந்திருக்கலாம். இவர் யார் என்பது தெரியாததனாலோ, அல்லது தன் பெயரால் ஒரு சங்கம் என்றதும் ஏற்பட்ட கூச்சம் காரணமாகவோ, கடிதத்தில் நாயுடுவின் சங்கத்தின் பெயரை முழுமையாக விவேகானந்தர் சொசைட்டி என்று எழுதுவதற்கு பதிலாக சுருக்கமாக ஆங்கிலத்தில் viv.society என்று மட்டும் எழுதியிருந்தார். முழு விவரமும் தெரியாத நிலையில், தன் பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திக்கு என்ன பதில் எழுத முடியும்? அதனால்தான் இந்தக் கடிதமும் மிகச் சுருக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பின்னாளில் நாட்டறாம்பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் உருவாக இந்த வெங்கடசாமி நாயுடுவே இடத்தையும் கொடுத்து உதவினார் என்பது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிற செய்தி. வாழ்க வெங்கடசாமி நாயுடு புகழ்!

சுவாமி விவேகானந்தர் வெங்கடசாமி நாயுடுவுக்கு எழுதிய கடிதம்:--

"கே.வெங்கடசாமி நாயுடு
viv. society

அன்புடையீர்!
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி வாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துக்கள்.

இறைவனில் என்றும் உங்கள்,
விவேகானந்த

(சுவாமிஜி எழுதிய கடிதங்களில் பல தமிழ்நாட்டு அன்பர்களுக்கு எழுதப்பட்டவை. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்)

1 comment:

kmr.krishnan said...

சுவாமிஜி பரிவ்ராஜகராக இந்தியா முழுதும் திரிந்த போது த‌மிழகத்திலிருந்து கர்னாடகா செல்லும் போது நாட்டற‌ம்பள்ளி வந்ததாகவும்
ஓர் இரவு ஒரு தோட்டத்தில் மரத்தடியில் ஓய்வெடுத்ததாகவும் அந்த இடத்தினை மக்கள் பயன் படுத்தாமல் வழிபட ஆரம்பித்ததாகவும் ஒரு செவி வழிச் செய்தி.எனவே நாட்டறம்பள்ளி எளிய மக்கள் தான் இந்தியாவிலேயே முதல் முதலாக சுவாமிஜியின் தெய்வீகத் தன்மையை முதலில் புரிந்து கொண்டவர்கள்.