பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 20, 2013

உலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)

                             உலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)

நமது தாய்த் திருநாட்டிற்கு இந்த உலகம் பட்டுள்ள கடன் அளவற்றது.

நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப் போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதை நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. என் நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம், "நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள்" என்பதுதான்.

உங்கள் மதம் காலத்தால் முந்தியது என்பதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? உங்கள் மதம் சிந்தனையில்கூட உதிப்பதற்குக் குறைந்தது முன்னூறு வருஷங்களுக்கு முன்பாவது எங்கள் மதம் இருந்திருக்கிறது.

விஞ்ஞானங்களைப் பொறுத்தவரையிலும் இது பொருந்தும். சிந்தனைக்கு எட்டாத காலத்திலிருந்தே இந்தியா விஞ்ஞானிகளைப் படைத்துள்ளது. விகாரமான காது, மூக்கு போன்றவற்றைச் சரிசெய்வதற்கான இரசாயனங்களைக் கண்டிபிடித்துத் தந்ததன் மூலம் இந்தியா நவீன மருத்துவத் துறைக்குக்கூடத் தனது கொடையை அளித்துள்ளது என்று கூறுகிறார் சர் வில்லியம் ஹண்டர். கணிதத் துறையிலும் அது தனது கொடையை அளித்துள்ளது. அல்ஜீப்ரா, ஜியோமிதி, வானவியல், நவீன விஞ்ஞானத்தின் வெற்றி முத்திரையான கலவைக் கணிதம் (mixed mathematics) போன்றவையெல்லாம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய எல்லா நாகரிகங்களுக்கும் அடிப்படையான பத்தின் மடங்கை வைத்துக் கணக்கிடுகின்ற முறையும் இந்தியாவின் கொடைதான். இவற்றைக் குறிக்கின்ற வார்த்தைகள் எல்லாமே சம்ஸ்கிருத வார்த்தைகள்.

ஜெர்மானியத் தத்துவ அறிஞரான ஷோபனேர் ஒத்துக்கொள்வது போல் தத்துவத்தைப் பொறுத்தவரையில் நாம் மற்ற எந்த நாடுகளையும் விட மிக உயர்ந்த இடத்திலேயே இருக்கிறோம். இசையை எடுத்துக் கொண்டால், ஏழு ஸ்வரங்களுடன்கூடிய இசையை உலகிற்கு வழங்கியது நாம்தான்.

மொழியியலை எடுத்துக் கொண்டால், எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் அடிப்படையாக இருப்பது சம்ஸ்கிருதமே என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். நமது இதிகாசங்களும் கவிதைகளும் வேறு எந்த மொழியிலும் உள்ள இலக்கியத்தினும் தரம் வாய்ந்தவையே. நமது 'சாகுந்தலம்' ஜெர்மனியின் மாபெரும் கவிஞரால் "வானமும் பூமியும் தொடுகின்றன" (Heaven and Earth united) என்ற பெயரில் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது.

ஈசாப்பின் கதைகளை உலகிற்குக் கொடுத்தது இந்தியாவே. பழைய ஏதோவொரு சம்ஸ்கிருத நூலிலிருந்து ஈசாப் அதை எழுதிக் கொண்டார். அரேபிய இரவுகள், ஏன், சின்ட்ரல்லா (Cinderella), பீன் ஸ்டாக்ஸ் (Bean Stalks) கதைகளையும் இந்தியாவே அளித்தது. பஞ்சு, சாயம் ஆகியவை இந்தியாவின் கண்டுபிடிப்பு. பலவித ஆபரணங்கள் செய்வதிலும் இந்தியா முதலிடம் வகித்தது. சர்க்கரை (Sugar) என்ற பொருளும், ஏன், அந்த வார்த்தைகூட இந்தியாவில் தோன்றியதே. சதுரங்கம் (Chess) சீட்டு, தாயம் (Dice) முதலான விளையாட்டுக்கள் இந்தியா கண்டுபிடித்தவையே. ஒவ்வொரு துறையிலும் இந்தியா இத்தனை மகோன்னமாக இருந்ததால்தான் ஐரோப்பியப் படைகள் அதை நாடி வர நேர்ந்தது. இந்த முயற்சியில்தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது.

உலகத்தையே ஆட்டி வைக்கக்கூடிய ஆன்மிகச் செல்வர்கள் இல்லாத காலம் இந்தியாவில் எப்பொழுதாவது இருந்ததுண்டா? சொல்லுங்கள் என்று நான் எல்லோருக்கும் சவால் விடுகிறேன். இந்தியாவின் பணி ஆன்மிகமயமானது. இதைப் போர் முரசுகளாலோ படைகளின் அணிவகுப்புக்களாலோ செய்ய முடியாது. எப்படிப் பனி, சத்தம் இன்றியும் விழுந்த இடம் தெரியாமலும் உலகின் அழகிய மலர்களில் வீழ்ந்து அவற்றை மலரச் செய்கிறதோ, அவ்வாறே இந்தியாவின் ஆதிக்கமும் உலகம் முழுவதும் செயல்படுகிறது.

No comments: