பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 22, 2013

என்றும் வாழும் இந்தியா (23-1-2013)


                                 என்றும் வாழும் இந்தியா (23-1-2013)

இந்தியாவை விட்டுக் கிளம்புமுன் நான் அதனை நேசித்தேன். இப்போதோ அதன் தூசி கூட எனக்குப் புனிதமாக இருக்கிறது; அங்கு வீசும் காற்று புனிதம்; இப்போது இந்தியா எனக்குப் புனித பூமி, தீர்த்தத் தலம்.

இந்தியா சீரழிந்துவிட்டது என்றெல்லாம் பேசக் கேட்கிறோம். இதை நானும் நம்பிய காலமொன்று உண்டு. ஆனால் இன்று அனுபவம் என்னும் வசதியான இடத்தில் இருந்து கொண்டு, பார்வையை மறைத்த தவறான கருத்துக்கள் நீங்கி, மற்ற நாடுகளைப் பற்றி எண்ணியிருந்த கருத்துக்கள் நான் நேரில் அவற்றைப் பார்த்ததன் மூலம் சரியாகப் புரிகின்ற நிலையில், நான் நம்பியது தவறு என்பதை மிகவும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். நான் அப்படி எண்ணியது தவறு.

ஆரியர்களின் புண்ணிய பூமியே! நீ ஒருபோதும் சீரழியவில்லை. செங்கோல்கள் உடைக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளன. அதிகாரப் பந்து கைக்குக் கை மாறியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அரசர்களும் அரசவைகளும் மிகவும் சிலரைத்தான் பாதித்தன. எனினும் மிக உயர்ந்தவர்களிலிருந்து மிகத் தாழ்ந்தவர்கள் வரை பெரும்பான்மையான மக்கள் தங்கள் வழியிலேதான் சென்று கொண்டிருந்தார்கள். தேசிய வாழ்க்கையென்னும் வெள்ளத்தின் வேகம் சில நேரங்களில் மிக மெதுவாகவும், அரைத் தூக்கத்திலும்தான் இருந்தது. மற்ற வேளைகளில் வேகமாகவும் விழிப்புடனும் இருந்தது.

இடையறாமல் தொடர்ந்து செல்கின்ற பிரகாசமான நூற்றாண்டுகளுக்கு முன்னர் நான் பணிவச்சத்தோடு நிற்கிறேன். அந்தச் சங்கிலித் தொடரில் சற்று மங்கலான சங்கிலிகள் இருக்கலாம். ஆனால் அடுத்த கணம் அவை மிகவும் ஒளியுடன் விளங்கலாம். அதோ என் தாய்நாடு தன் பிரகாசமான இலட்சியத்தை, அதாவது மிருக மனிதனை தெய்வ மனிதனாக மாற்றும் காரியத்தை நிறைவேற்றும் பொருட்டுக் கம்பீர நடை போட்டுச் செல்கிறது. மண்ணிலும் சரி, விண்ணிலும் சரி, அதை எந்தச் சக்தியினாலும் தடுக்க முடியாது.

என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தத் தேசியக் கப்பல் இலட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங்கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இது நல்ல முறையில் இந்தக் கடலைக் கடந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக இலட்சோபலட்சம் பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ, ஒருவேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுது அடைந்துள்ளது. ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா? இந்த உலகத்தில் வேறு எதைவிடவும் அதிகமாக உழைத்துள்ள இந்தத் தேசியக் கப்பலின் மீது சாப மழையைப் பொழிவது உங்களுக்குத் தகுதியானதா?

தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா?நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதயக் குறுதியைக் கொட்டி, மகிழ்ச்சியோடு அந்தக் காரியத்தை முடிப்போம். நம் அறிவால் அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால், அதை ஒருபோதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தை கூடப் பேசாதீர்கள். நான் அதை அதன் கடந்த கால மகோன்னதத்துக்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். நான் எப்படி உங்களைச் சபிக்க முடியும்? ஒருபோதும் முடியாது.

எல்லா ஆசிகளும் உங்கள் மீது பொழிவதாக! என் குழந்தைகளே, என் திட்டத்தைச் சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டால் நானும் உங்களோடு நானும் சேர்ந்து பணிபுரியத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் என்னை உதைத்து இந்தியாவிற்கு வெளியே துரத்தினால்கூட நான் மறுபடியும் உங்களிடம் வருவேன். வந்து, நாம் எல்லோரும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வேன். உங்களோடு ஒருவனாக இருக்கவே நான் வந்திருக்கிறேன். மூழ்கத்தான் வேண்டுமென்றால் நாம் எல்லோருமே சேர்ந்து மூழ்குவோம். ஆனால் நம் உதடுகளிலிருந்து சாபங்கள் வராமல் இருக்கட்டும்.

No comments: