பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 24, 2013

'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)

                            'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)

கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் நன்கு அமைந்துவிடுவதில்லை. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கிய அந்தஸ்து பெற்று விட்டது. டாக்டர் மு.வரதராசனார் இலக்கியங்கள் கடிதம் வாயிலாகவே, தம்பிக்கு, தங்கைக்கு என்று வெளிவந்தன. சி.என்.அண்ணாதுரை அவர்களும் தன்னுடைய 'திராவிட நாடு' பத்திரிகையில் தம்பிக்கு என்று தொடங்கி கடிதங்கள் எழுதித்தான் தனது கொள்கைகளைப் பரப்பினார். அதன் பின்னர் பலரும் அவருடைய பாதையில் செல்லத் தொடங்கினர்.

சுவாமிஜி தன்னுடைய கடிதங்களில் ஒன்றில் எழுதியுள்ள வரிகள் இவை: "இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! யாரோ என் கையைப் பிடித்து இவ்வாரெல்லாம் எழுதச் செய்கிறார்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! அதோ அவர் வருகிறார். அவருக்கு, அவருக்கு அல்ல, அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ, ஏழைகளாக, துன்பப் படுபவர்களாக, பாவிகளாக உள்ளவர்களுக்கு புழுபூச்சிவரையிலுள்ள உயிர்களுக்குச் சேவை செய்ய யார்யார் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார். அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்; அவர்களின் நெஞ்சில் மகா சக்தியான மகாமாயை வாசம் செய்வாள்."

பாலாஜி ராவ் எனும் அன்பர் சுவாமிஜிக்குத் தன்னுடைய மனக் கஷ்டங்களை விவரித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சுவாமிஜி 23-5-1893 அன்றுஎழுடிய பதில் கடிதம் இதோ.

"தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணமாக வந்தேன். திரும்பவும் நிர்வாணமாகவே போகிறேன்; இறைவன் கொடுத்தான், எடுத்தும் விட்டான். அவனது திருநாமம் வாழ்க!"மனிதனுக்கு வரக்கூடியதில் மிகப் பெரிய துன்பங்களில் துவண்டபோது ஒரு புராதன யூதமகான் சொன்ன வார்த்தைகள் இவை; அவர் கலங்கவும் இல்லை. வாழ்க்கையின் முழு இரகசியமும் இதில்தான் உள்ளது. கடலின் மேற்பரப்பில் அலைகள் புரண்டு எழலாம், புயல் சீறிப் பாயலாம். ஆனால் அதன் ஆழங்களில் எல்லையற்ற அமைதி, எல்லையற்ற சாந்தம், எல்லையற்ற ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள். ஏன்? தந்தையின் கதறலையோ, தாயின் புலம்பலையோ பொருட்படுத்தாமல் விதியின் கைகள் இதயத்தை இறுக்கிப் பிழிகின்ற, கவலை மனத்தளர்வு அவநம்பிக்கை இவற்றின் சுமையால் உலகமே காலடியிலிருந்து நழுவிப் போவதுபோல் தோன்றுகின்ற, எதிர்காலமே ஊடுருவ முடியாத துயரமும் அவநம்பிக்கையுமாகக் காட்சி அளிக்கின்ற கணங்கள் நம்மைச் சந்திக்கும்போதுதான் அகக் கண்கள் திறக்கின்றன; திடீரென எங்கும் ஒளி பரவுகிறது, கனவு கலைகிறது, இயற்கையின் மாபெரும் புதிரான வாழ்க்கை என்பதுடன் நாம் நேருக்கு நேர் வருகிறோம். ஆம், சாதாரண மனிதர்களை மூழ்க வைக்கின்ற அளவுக்குச் சுமைகள் அழுத்தும்போதுதான் வலிமைமிக்க, வீரமிக்க மேதை உண்மையைக் காண்கிறான்; எல்லையற்ற, அறுதியான, என்றும் பேரின்ப வடிவான இறைவன் பல்வேறு மக்களால் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படுவதையும், வழிபடப்படுவதையும் காண்கிறான். அப்போதுதான், ஆன்மாவை இந்தத் துயரக் கூண்டுடன் பிணைத்திருந்த சங்கிலிகள் உடைந்து வீழ்கின்றன. ஆன்மா எழுந்து உயரத்தில் இறைவனின் சிம்மாசனத்தை அடைகிறது. அங்கே 'தீயவர்கள் துன்பம் செய்வதில்லை, களைத்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.'

சகோதரா, 'உமது திருவுளம்போல் நடக்கட்டும்' என்று இரவும் பகலும் சொல்வதை நிறுத்தாதீர்கள். இரவும் பகலும் புகார்களை அவருக்கு அனுப்பாமல் இருக்காதீர்கள்.

'ஏன் என்று கேட்பதல்ல நம் வேலை; செய்வதும் செத்து மடிவதுமே நாம் செய்ய வேண்டியது.'

எம்பெருமானே, உமது திருநாமம் வாழ்த்தப் படட்டும். உமது திருவுளம்போல் நடக்கட்டும். இறைவா! சரணடைய வேண்டியவர்களே நாங்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பரம்பொருளே, எங்களை அடிக்கின்ற கை அன்னையின் கைதான் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், 'மனம் அதனைப் புரிந்து கொள்கிறது, உடம்புக்கு அதனைத் தாங்குகின்ற சக்தி இல்லை. அன்புத் தந்தையே, எங்கள் இதய ஆழங்களின் வேதனை ஒன்று உள்ளது. அது நீர் போதிக்கின்ற அந்த அமைதியான சரணாகதியை எதிர்த்துப் போராடுகிறது. உமது கண் முன்னாலேயே உமது குடும்பம் அழிந்துபோவதை, கைகளை மார்பில் இறுகக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறீர். இறைவா, படைவீரன் எதிர்த்துப் பேசக்கூடாது, பணிவதே அவன் செய்யத் தக்கது என்பதைப் போதித்த பரம்பொருளே வருக. உம்மில் தஞ்சம் புகுவதே வாழ்க்கையின் ஒரே இலட்சியம் என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறிய பார்த்தசாரதிப் பெருமானே வருக. அப்போதுதான் நானும் அந்த மாபெரும் மனிதர்களுடன் சேர்ந்து உறுதியாக, உம்மையே தஞ்சமடைந்து, ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து (அனைத்தும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்) என்று சொல்ல முடியும்.

இறைவன் உங்களுக்கு அமைதியை அருளட்டும் என்பதே இரவும் பகலும் எனது பிரார்த்தனை.

விவேகானந்த