பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 26, 2013

'எழுமின்! விழிமின்! (27-1-2013)


'எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்மின்.' (27-1-2013)

சுவாமிஜி சிகாகோ நகரத்திலிருந்து சென்னையில் இருந்த அழகியசிங்கப் பெருமாள் எனும் அன்பருக்கு 28-5-1894இல் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ.

"அன்பார்ந்த அளசிங்கா,

உனது கடிததிற்கு உடனே பதில் எழுத முடியாமல் போயிற்று. ஏனெனில் நான் நியுயார்க், பாஸ்டன் என்று சுழன்று கொண்டிருந்தேன். நரசிம்மனின் கடிதத்தை எதிர்பார்த்தேன். நான் இந்தியாவிற்கு எப்போது வருவேன் என்பது தெரியாது. என் பின்னால் இருந்து என்னை இயக்கி வருகின்ற ஆண்டவனின் பொறுப்பில் அனைத்தையும் விட்டுவிடுவதே மிகவும் சிறப்பானது. நான் ஒருவன் இல்லாதிருந்தால் எப்படியோ, அப்படியே என்னை விட்டுவிட்டு வேலை செய்வதற்கு முயற்சி செய். யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காதே. உன்னால் முடிந்ததைச் செய்து முடி. யாரையும் நம்பியிருக்காதே.

சொந்த நாட்டில் எனக்குப் போதிய அளவு பாராட்டுகள் கிடைத்துவிட்டது. அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தூங்காதீர்கள், வேகம் தளர்ந்து விடாதீர்கள். நமது திட்டங்களில் ஒரு சிறிதுகூட இதுவரை செயலளவில் நிறைவேற்றப்படவில்லை என்பதை மறக்காதீர்கள்.

படித்த இளைஞர்களிடம் செயல்படு, அவர்களை ஒன்றுபடுத்தி அமைப்புகளை உருவாக்கு. பெரும் தியாகங்களால் மட்டுமே மகத்தான செயல்களைச் சாதிக்க முடியும். சுயநலம் கூடாது, பெயர் கூடாது, புகழ் கூடாது; உனது புகழோ, எனது புகழோ, ஏன் என் குருதேவரின் புகழேயானாலும் கூடாது. செயல்படுங்கள்; நமது கருத்தை, நமது திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்றுங்கள். என் இளைஞர்களே, தைரியம்
மிக்க, உத்தம குணம் வாய்ந்த நல்லவர்களே, செயல் சக்கரத்தை உருட்ட வாருங்கள்; சக்கரத்தை இயக்க உங்கள் தோள்களைக் கொடுத்து உதவுங்கள். பெயர், புகழ் போன்ற அற்ப விஷயங்களுக்காக நின்று திரும்பிப் பார்க்காதீர்கள். சுயநலத்தைத் தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள். 'புல்லானாலும்கூட அதை ஒன்று சேர்த்துக் கயிறு ஆக்கினால், மதம் பிடித்த யானையையே அதனால் கட்டிவிட முடியும்.' இதை நினைவில் வையுங்கள். உங்கள் அனைவர் மீதும் இறைவனின் ஆசிகள் பொழியட்டும். அவரது சக்தி உங்கள் அனைவரிடமும் நிலவட்டும் -- ஏற்கனவே அது இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். 'விழியுங்கள், குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்' என்கின்றன வேதங்கள். எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது, பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலை எழுந்து விட்டது. அதன் பெரு வேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே, வேண்டுவதெல்லாம் உற்சாகம், உற்சாகமே! என் குழந்தைகளே, அன்பு, அன்பு; நம்பிக்கை, எல்லையற்ற நம்பிக்கை இவையே வேண்டும். பயம் வேண்டாம். பாவங்களுள் மிகப் பெரிய பாவம் பயம் என்பதே.

நமது கருத்தை நாலாபக்கமும் பரவச் செய்யுங்கள்; கர்வம் கொள்ளாதீர்கள்; பிடிவாதக் கொள்கை எதையும் வற்புறுத்தாதீர்கள்; எதற்குமே மாறாகச் செல்லாதீர்கள். நமது வேலை இரசாயனப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வைப்பதே; படகம் எவ்வாறு எப்போது உருவாகும் என்பது இறைவனுக்கே தெரியும். அனைத்திற்கும் மேலாக, எனது வெற்றியையோ உங்கள் வளர்ச்சியையோ கண்டு கர்வம் கொண்டு விடாதீர்கள். பெரும் பணிகள் செய்தாக வேண்டியுள்ளன. இனி வரவிருக்கின்ற வெற்றியுடன் ஒப்பிடும்போது, இந்தச் சிறு வெற்றி எம்மாத்திரம்? நம்புங்கள், நம்புங்கள், ஆணை பிறந்துவிட்டது. இறைவனின் கட்டளை பிறந்துவிட்டது. பாரதம் முன்னேறியே ஆக வேண்டும், பாமரர்களும், ஏழைகளும் நலம் பெற வேண்டும். இறைவனின் கையில் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. தடுக்க முடியாதபடி, கங்கு கரைகள் இல்லாதபடி, அனைத்தையும் கவர்ந்தபடி அது நிலத்தின் மீது புரண்டு வருவதை நான் காண்கிறேன். ஒவ்வொரு மனிதனும் முன்னணியில் வந்து நிற்கட்டும். ஒவ்வொரு நன்மையும் அந்த வேகத்தின் ஆற்றலுடன் சேர்த்துக் கொள்ளப்படும்; ஒவ்வொரு கையும் அதன் பாதையைச் சீராக்கும். எல்லா பெருமையும் இறைவனையே சேரட்டும்.

அனல் பறக்கின்ற இளைஞர் குழு ஒன்றை ஆயத்தப் படுத்துங்கள். உங்களிடமுள்ள ஊக்கத் தீயை அவர்களிடம் செலுத்துங்கள். பிறகு படிப்படியாக இந்த அமைப்பைப் பெருக்குங்கள். இதன் பரப்பு மேலும் மேலும் அகன்று விரியட்டும். உங்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்து முடியுங்கள். தண்ணீர் வடிந்த பிறகு நதியைக் கடக்கலாம் என்று காத்திருக்காதீர்கள். பத்திரிகைகள், செய்தித் தாள்கள் எல்லாம் அச்சிடுவது நல்லதுதான், அதில் சந்தேகமில்லை; ஆனால் என் இளைஞர்களே, ஓயாமல் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருப்பதையும் பேசுவதையும்விட, உண்மை வேலை செய்வது என்பது அது ஒரு மிகச் சிறிய துளி அளவே இருந்தாலும் அதுவே உத்தமமானது.

உயிர் போகும் நிலை வந்தாலும் சுயநலமற்றவர்களாக இருந்து வேலை செய். நான் எண்ணுகின்ற அனைத்தையும் எழுத முடியாது. ஆனால் தைரியம் மிகுந்த என் இளைஞர்களே, எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்கான ஆற்றலை இறைவன் உங்களுக்கு அளிப்பார். இந்தப் பணியில் ஈடுபட்டு விடுங்கள்! இறைவனின் புகழ் ஓங்கட்டும்!

அன்புள்ள விவேகானந்த

1 comment:

Dr.Anburaj said...

அருமையாக உள்ளது. நன்றி.