பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 23, 2013

பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?



                   பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி சில மனித மிருகங்களின் வெறிச்செயலுக்கு ஆளாகி, அதனால் உயிருக்குப் போராடி இறுதியில் உயிரிழந்த செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்வின் எதிர்வினையாக டெல்லி மற்றும் அருகிலிருந்த நகரங்கள், கிராமங்களிலிருந்தெல்லாம் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் புது டெல்லி இந்தியா கேட் அருகேகூடி தங்களது கோபத்தையும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் போராட்டம் நடத்தினர்.

இந்த இளைஞர்களின் நியாயமான கோபத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அரசு நிர்வாகம், காவல்துறை அவர்களைக் கண்மூடித் தனமான முறையில் தாக்கிக் கலைந்து போகவைத்தனர். இந்த நிகழ்வில் குற்றமிழைத்து ஓர் உயிரைக் குடித்த மனித வெறித்தனத்தைக் கண்டிக்க வேண்டுமா? அல்லது அந்த வெறித் தனத்தை எதிர்த்துத் தங்கள் ஒருமித்த குரலை வெளிப்படுத்திய இளைஞர் சமுதாயத்தை ஆறுதல் அடையும்படியான நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் கொடுத்து சமாதானம் செய்து, சரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டுமா? இந்த இரண்டையும் செய்யாமல், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி, தண்ணீரைப் பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் இந்த நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களை ஓடஓட விரட்டியடித்த காவல்துறை சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது? பாராட்டுவதா, குறை சொல்வதா? 

இந்த கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைவிட, இளைஞர் சமுதாயத்தின் பிரதிநிதிகளான சில கல்லூரி மாணவிகளைப் பேட்டி கண்டு ஒரு தினசரி பத்திரிகை தனது "சண்டே ஸ்பெஷல்" எனும் தலைப்பில் தமிழில் வெளியாகும் வாராந்தர வெளியீட்டில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த கட்டுரையில் நோக்கத்தை அவர்கள் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

"காமுகர்களின் பிடியிலிருந்து பாதுகாப்பு வழங்குவது குறித்து, மாணவிகளின் கண்ணோட்டத்தைத் தெரிந்து கொள்ள ஒரு மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தோம்" என்று தொடங்கி அவர்கள் மேலும் சொல்லும் செய்தியினைப் பார்ப்போம்.

அந்தக் கல்லூரி மாணவியர் சிலரை நிருபர்கள் சந்தித்து சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் பதிலையும் பெற்று வெளியிட்டிருக்கின்றனர். அதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் முதலில் ஒரு பெண் கூறுகிறார்: "பெண்களைக் கண்கள் என போற்றும் தமிழகத்திலேயே, பெண் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லை. டெல்லியில் நடந்த நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும், அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். தமிழகத்தில் இதுபோல நடக்கும் பல நிகழ்ச்சிகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்று அந்தப் பெண் ஆதங்கப் பட்டிருக்கிறார். 

அதுமடுமல்லாமல், சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் காமுகர்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் கடுமையான தண்டனை இல்லாததே. தூக்குத் தண்டனை வழங்குவதைக் காட்டிலும், அந்தக் குற்றவாளிக்கு சமூக உரிமைகள் அனைத்தையும் பறித்துவிடுவது ஒன்றே சரியான தண்டனை என்கிறார் அந்தப் பெண். அதாவது அவர்களுடைய குடியுரிமை, குடும்ப அட்டை, வாக்களிக்கும் உரிமை, வண்டியோட்டும் உரிமம் என அனைத்து வசதிகளையும் பறித்துவிட வேண்டும் என்கிறார். 

இந்த யோசனை சரியாகத் தோன்றினாலும், அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அவன் அனைத்தையும் இழந்து வருந்துவான் என்பதை எப்படிச் சொல்ல முடியும்? ஓரளவு முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் அவன் சமூகத்தில் நடமாடமுடியாமல் செய்வதுதான் பாதுகாப்பு தரும் என்பதால் இந்த யோசனை நடைமுறைக்கு ஒவ்வாது.

அடுத்த பெண் சொல்லும் கருத்து, சில தலைவர்கள் சொன்னபோது பெண்களின் கடுமையான எதிர்ப்பையும் குற்றச்சாட்டையும் பெற்றது. அந்தப் பெண் சொல்கிறார், 'பெற்றோர் பேச்சைக் கேட்காமல், கலாச்சார மாற்றம், புதுமை எனும் பெயரால் பெண்கள் சிலர் பண்பாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரவு நேரங்களில் ஆண்களைப் போலவே இவர்களும் துணிந்து நடமாடுவதும் இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ காரணமாகின்றன என்பது இவர் கருத்து. இந்த உண்மையை ஒரு பெண் சொல்லும்போது அதில் இருக்கும் நியாயத்தையாவது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா? மாட்டார்கள். காரணம் ஆண்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா என்பார்கள். சரி இவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. ஆண்களைப் போலவே இவர்களும், ஆண்கள் செய்வதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், இரவில் தனித்து நடமாடும் ஆண்களுக்கு இவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் போல எதுவும் நடப்பதில்லையே. எங்காவது தனித்து நடந்து வந்த ஒரு ஆணைப் பல காமவெறி பிடித்தப் பெண்கள் பிடித்துக் கொண்டு அவனுக்குத் துன்பம் விளைவித்ததாக எங்காவது செய்தி வந்தது உண்டா? அப்படி பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றால், இவர்களுக்கும் எந்தவித ஆபத்தும் வராத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காலகட்டத்தில், நாங்கள் ஆண்களுக்குச் சமம், இரவில் தனித்தே போவோம் என்றெல்லாம் சொல்வது சரியானதாக இருக்குமா?

ஒரு சமூகத்தில் இதுபோன்ற கொடுமைகள் ஒரு சாராருக்கு மட்டும் நடக்கிறது என்றால், அந்த சாரார் பலவீனமானவர்கள், பாலியல் வன்முறைக்கோ, அல்லது ஆதாயம் கருதி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் போன்றவற்றைப் பறிப்பதற்கோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதுதான் பொருள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் அத்தனை பேருக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டால், குற்றம் நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு எப்படி செய்ய முடியும். அப்படியானால் ஒவ்வொரு பெண்ணோடும் ஒரு காவலர் சென்று கொண்டிருக்க முடியுமா? குற்றம் நடைபெற்றால், அல்லது நடப்பதற்கு முயற்சிகள் நடந்தால் அதை எப்படி எதிர் கொள்வது, உதவிக்கு எப்படி ஆட்களைக் கூப்பிடுவது போன்ற தற்காப்பு செயல் முறைகளை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

பலவீனமான பிரிவினர் என்று பெண்கள் தங்களைக் கூறிக் கொள்ளும் போதே, அவர்கள் ஆண்களைப் போல குற்றச் செயல்களால் பாதிக்கப் படாமல் தங்களாலும் இருக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். எதிர்த்துப் போராட முடியுமா என்றும் பார்க்க வேண்டும். சில காவல்துறை அதிகாரிகள் சிபாரிசு செய்வது போல கையில் மிளகாய்த் தூள் பொட்டணத்தை வைத்துக் கொண்டு, தாக்குதல் நடத்த முயற்சி செய்யும்போது அதை அவர்கள் மீது தூவி தற்காத்துக் கொள்ள வேண்டும். கூச்சலிட்டு உதவிக்கு ஆட்கள் வரும்வரை குற்றம் புரிவோரோடு போராடத் துணிய வேண்டும். 

இவர்கள் முக்கியமாக ஒரு சமூக நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி அறிவு இன்றைய நாள் போல வளர்ச்சியடையாத நாட்களில் ஆங்காங்கே விடலைப் பையன்களும், காமுகர்களும், சமூக விரோதிகளும் போகிற வருகிற பெண்களைக் கேலி செய்வது, ஏதாவது புண்படும்படியான சொற்களைப் பேசுவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். இன்று படித்த நற்பண்புகள் உள்ள இளைஞர்கள் அப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதில்லை. முன்பெல்லாம் பெண்களும்கூட சக மாணவர்கள்கூட பழகவோ, பேசவோ மாட்டார்கள். ஒதுங்கியே போவார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை. மாணவர்களும் மாணவியரும் நன்றாகப் பழகி இரு ஆண் நண்பர்களைப் போல அவர்களுக்குள்ளும் பேசிப் பழகி நாகரிகத்துடன் நடந்து கொள்கிறார்கள். அதையும் மீறி சில கீழ்புத்தி உள்ளவர்களோ, அல்லது பேதமில்லாமல் பழகும் ஆண் பெண் நட்பைக் கண்டு பொறாமைப் கொண்டவர்களோ அவர்களைத் தரக்குறைவாக பேசுவதோ, அந்தப் பெண்ணைத் தனிமையில் வரும்போது அவனோடுதான் பேசுவாயோ, என்னோடு பேசமாட்டாயோ என்பது போன்ற தொல்லைகளைக் கொடுப்பதும் நடக்கிறது. பொதுவாக ஈவ் டீசிங் படித்த நாகரிக இளைஞர்கள் மத்தியில் கிடையாது. இன்னமும் எங்காவது இருக்கிறது என்றால், படிப்பறிவு இல்லாத சமூக விரோதிகளால்தான் நடக்கின்றன. இந்தப் பெண்கள் சொல்வதைப் போல நடவடிக்கைகள் எடுக்க முடியாவிட்டாலும், அல்லது கடுமையான தண்டனை ஏற்படுத்தினாலும், இதற்கெல்லாம் தீர்வு ஏற்படப்போவதில்லை. நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிற தற்காப்பு முறைகள் மட்டுமே சரியான வழிமுறையாக அமைய முடியும். அவை

1. பெண்கள் தற்காப்புக் கலை பயில்வதோ, ஆண்களைப் போல ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றையும் டீ ஷர்ட்டும் அணியும்போது, அதே போல உள்ளத்தில் தைரியத்தையும், எதிர்த்துப் போராடக்கூடிய திராணியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது திரைப்படங்களில் பார்த்தால் தெரியும், வில்லன் கதாநாயகியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவான், கதாநாயகன் வந்து அவனோடு போராடுவான், அப்போது கதாநாயகி தனக்காகப் போராடும் கதாநாயகனுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டாள், மாறாக வீல் வீல் என்று கத்திக் கொண்டிருப்பாள். கதாநாயகன் இவளைப் பாதுகாப்பானா, அந்த வில்லனோடு போராடுவானா? இந்த சினிமா கதாநாயகி தனது கையாலாகாதத் தனத்தை விட்டுத் தன்னைத் தான் காத்துக் கொள்ளும் வல்லமை பெற வேண்டும்.

2. உடைகளால் மட்டும் மாடர்ன் ஆகிவிட்டால் போதாது. உள்ளத்தால், ஆண்களைக் கண்டு அநாவசியமாக சிணுங்குதல், தெருவில், அல்லது பேருந்தில் போகும் அனைவரும் இவர்களை ஏதோ செய்துவிடத் துடிப்பவர்கள் போல ஒதுங்குதல், வெறுப்புப் பார்வையை வீசுதல் இவற்றால் குற்றமற்ற பலரையும் இவர்கள் பால் வெறுப்புக்கொள்ளச் செய்யாதிருத்தல். ஒன்றை மட்டும் இவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தெருவில் சாதுவான நல்ல நாய்களும் போகும், வெறிபிடித்த நாய்களும் போகும் இவற்றை இனம் கண்டு கொள்ளும் திறமை இவர்களுக்கு வேண்டும். தெருவில் போகும் எல்லா ஆண்களும் கார்த்திகை மாதத்து நாய் என்று எண்ணுவதும், அவர்கள் அனைவருமே தங்களை குறிவைத்து ஏதோ செய்ய நினைக்கிறார்கள் என்று நினைப்பதையோ போன்ற ஹைதர் காலத்து மனப்பாங்கை விட்டொழிக்க வேண்டும்.

3. ஆபத்து எனும்போது உதவிக்கு மற்றவர்களை உரத்தக் குரல் எடுத்து கூப்பிட வேண்டும். அப்படி குரல் எழுப்பினாலே குற்றம் செய்ய நினைப்பவன் ஓடிவிடுவான். அப்போதும் வாய்மூடிக் கொண்டு இருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பிறகு கூக்குரல் இட்டுப் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

படித்த பெண்களுக்குத்தான் இப்படிப்பட்ட தொல்லைகள். படிப்பறிவில்லாத தொழிலாளிகள், காய்கறி, பூ விற்போரிடம் யாராவது வாலாட்டினால், அவர்கள் பேச்சாலேயே அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார்கள். மானம் போய் ஓடிவிடுவார்கள். அந்த தைரியம் இவர்களுக்கு இல்லை, அதுதான் தொல்லைகளுக்குக் காரணம்.

பொதுவாக பெண்களின் முன்னேற்றம் மேற்கண்ட வழிமுறைகளில் இன்னமும் மிகுந்த மாற்றமடைய வேண்டியிருக்கிறது. தோற்றத்தில், படிப்பில், வெளியில் சுற்றும் முறையில், விடுமுறை நாட்களில் தங்கள் ஆண் பெண் நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும்போது, பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்கள் காட்டும் நாட்டம், அறிமுகமில்லாத அன்னியர்களிடமும் சகஜமாக நடந்து கொள்ளப் பழகினால் தொல்லைகள் இருக்காது. இவர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்துக் கொண்டிருப்போர், இவர்கள் இன்னமும் கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளலாமே என்றுதான் நினைப்பர், காரணம், மற்றவர்களை இவர்கள் பூச்சி புழுக்களைப் போல பார்ப்பதும் ஒரு காரணம். ஆகையால் இவர்களது பழக்க வழக்கங்களில் இன்னமும் மாற்றம் தேவை.

இவைகளைச் சொல்லும்போது கசப்பாக இருக்கலாம். இப்படிச் சொல்வது தவறு என குற்றம் சாட்டலாம். ஆனால் என்ன செய்வது, இதுதான் உண்மை எனும்போது, உரக்கச் சொல்கிறேன். இவைகளை மட்டும் கடைபிடித்தால் மட்டுமே பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு இருக்கும்.

No comments: