பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 10

                      வரலாறு பேசும் பயணம் பகுதி 10

1. நாமக்கல்.     
      மேற்சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்றுவந்து சில நாட்களில் விடுமுறை தினங்களில் பாரதி இயக்கத்தினர் அடுத்த பயணத்தைத் தொடங்கினார்கள். திருச்சி, முசிரி, திருஈய்ங்கோய்மலை வழியாக நாமக்கல் சென்றடைந்தார்கள். நாமக்கல் அல்லது நாமகிரி எனும் பெயருடைய இந்த் ஊர் பஸ், லாரி கட்டும் முக்கிய இடம். இங்கு பிறந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு பிரபல தேசியக் கவிஞர். அந்த ஊரினுள் நுழைத்தபோதே அங்கு என்குபார்த்தாலும் உழைப்பின் பெருமை தெரிந்தது. எத்தனை தொழில்கள், எத்தனை தொழிற்சாலைகள், எங்கும் சுறுசுறுப்பும் ஓட்டமுமாக மக்கள் வாழ்க்கை பெருமையுடையதாக இருந்தது.

      நாமக்கல் நகரின் நடுவில் ஒரு சிறு குன்று, அது அந்த ஊருக்கே அழகு சேர்ப்பதாக இருக்கிறது. அதன் அடிவாரத்தில் நாமகிரித் தாயார் ஆலயம், அதன் எதிரில் மிக உயர்ந்த வடிவுடைய ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மேலே வானமே கூரையாக அவர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து கூடுகிறார்கள்.

2. திருச்செங்கோடு.  

      செங்கோடு என்றால் சிவந்த மலை. திருச்செங்கோடு நகரினுள் நுழையும்போதே நம்மை வரவேற்பதைப் போல ஓர் உயர்ந்த மலை. அங்குதான் நமது பாரதி இயக்க நண்பர்கள் நுழைகிறார்கள். அகன்ற வீதி, ஊரின் நடுவில் அந்த மலை. திருச்செங்கோடு நமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி. இந்த மலையின் மேலே கோயில் கொண்டுள்ள ஈஸ்வரன் அன்னை ஒருங்கிணைந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி. சிவ சக்தி ஒருங்கிணைந்த தோற்றம் மிகவும் அபூர்வமானதாகும். அந்தக் காட்சியை திருச்செங்கோட்டில் காணலாம். பண்டைய தமிழிலக்கியமான சிலப்பதிகாரத்தில் இவ்வூர் நெடுவேல்குன்று எனக் குறிப்பிடப்படுகிறது. முருகக் கடவுள் இங்கு செங்கோட்டு வேலவன் என்று வணங்கப் படுகிறார்.

      பழைய காலத்தில் இவ்வூரை திருக்கோடிமாடச்சென்குன்றூர் என்றழைத்தனர். இந்த மலைக்கோயிலின் மீது அமர்ந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் பாதி ஆண், பாதி பெண் உருவில் காணப்படும். இவ்வுலகப் படைப்புகள் அனைத்துமே ஆண், பெண் என இரு பிரிவுகளாக இருப்பதை உணர்த்தும் தத்துவம் இது. இந்த மலைக்கு வாகனங்களில் செல்லும்படியாக மலைப்பாதையொன்று மிக அழகாக இருக்கிறது. இந்த மலை சிவப்பு வண்ணத்தில் இருப்பதால் இதனை செங்கோடன் மலை என்றழைத்தனர். கொங்கு சிவத்தலங்கள் ஏழில் இது நான்காவது தலம்.

      இந்த மலையுச்சியில்தான் கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு பேரியாற்றங்கரையோடு கொங்கு நாடு வந்து இம்மலை உச்சியில் வந்ததும் கோவலன் மேலிருந்து வந்து ஒரு புஷ்பக விமானத்தில் கண்ணகியையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. திருச்செங்கோடு என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய பிரபலமானவர்கள் பட்டியல் அதிகம். ராஜாஜி, பெரியார் ஈ.வே.ரா. டி.எஸ்.பட்டாபிராமன், டி.எம்.காளியண்ண கவுண்டர் இப்படி பலர் உண்டு.

      இவ்வூரையடுத்த ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில்தான் ராஜாஜி மகாத்மா காந்தியடிகள் பெயரில் காந்தி ஆசிரமம் தொடங்கினார். இவ்வூர் ஈரோட்டிலிருந்து இருபது கி.மீ.தொலைவிலும், சேலத்திலிருந்து 46 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது.

3. காந்தி ஆசிரமம்.  

      திருச்செங்கோட்டிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ராஜாஜி காந்திஜியின் கனவு கிராமோதயப் பணிகளை நிறைவேற்ற ஒரு ஆசிரமத்தைத் தோற்றுவித்தார். பி.கே.ரத்னசபாபதி கவுண்டர் என்பார் நன்கொடையாக அளித்த இந்த நிலம் அப்போது கரடுமுரடாக, தண்ணீர் இல்லாமல் வறண்ட இடமாக இருந்தது. இவ்வூரில் வந்து 1925இல் ராஜாஜி ஓர் எளிய ஆசிரமத்தைத் தொடங்கி தானும் அங்கேயே தங்கி கிராம மறுமலர்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதுவரை சேலம் நகராட்சித் தலைவராக இருந்த ராஜாஜி இந்த சிறு கிராமத்தினுள் வந்து இங்கு வாழ்ந்த மக்களுக்கு காந்திய பொருளாதார அடிப்படைகளை செயல்வடிவம் கொடுத்து நடத்தி வந்தார். ராஜாஜி இங்கு 1934 வரை இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

      இந்த ஆசிரமத்தில் காதி கிராமக் கைத்தொழில், கதர் மேம்பாடு, கிராம மக்களுக்கு தொழில் முயற்சி போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டது. இங்கு கதர் நூல் நூற்றல், கதர் துணி நெய்தல், கிராம பொருளாதாரம் மேம்பட, சோப், தேன், கதராடைகள் போன்ற பல பணிகள் செய்யப்பட்டன. ஒவ்வோராண்டும் சற்றேரக்குறைய 12 கோடி ரூபாய்க்கு இங்கு உற்பத்தியாகும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரத்து கிராம மக்கள் சுமார் 1000 பேருக்கு இங்கு வேலை கிடைத்து பணியாற்றுகிறார்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் உற்பத்தி மையங்கள் உண்டு.


      பாரதி இயக்கத்தினர் பஞ்சு மெத்தை தலையணை தயாரிக்கும் இடத்தில் பஞ்சை அடித்து சுத்தப்படுத்தி பிரித்தெடுக்கும் பகுதிக்கு போனபோது அங்கு வயதில் மூத்த கண் பார்வை இல்லாத ஒரு பெண்மணி பணிபுரிவதைக் கண்டு விசாரித்தபோது, இங்கு இந்த வேலை தொடங்கிய காலத்தில் சேர்ந்த இந்த பெண்மணி இன்றளவும் பணிபுரிந்து வருகிறார் என்று சொன்னார்கள். இங்கு பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் அவர் எந்த பதவியில் பனியாற்றினாலும் ஒரே மாதிரியான அடிப்படை சம்பளம், கிராக்கிப்படி, வீட்டு வாடகை படி, பிராவிடண்ட் ப்ஃண்ட், கிராஜியுடி ஆகியவை வழங்கப்படுவதாகச் சொன்னார்கள். இப்படியும் ஒரு ஏற்றத்தாழ்வற்ற பணிமனையா? பாரதி இயக்கத்தினருக்கு அந்த ஆசிரமத்தின் தலைவர் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். அவர்கள் தயாரிக்கும் பல பொருள்களை நினைவுக்காக  இயக்கத்தினர் வாங்கிக் கொண்டனர். உழைப்பின் உயர்வை, சமத்துவத்தை,, கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேரை அந்த ஆசிரமத்தில் பார்க்க முடிந்தது. மிக எளிமையான ஓடு வேய்ந்த கூரையுடைய ஆசிரமம் போன்ற சிறு வீட்டில் ராஜாஜி முதலானோர் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தனர் எனும்போது, அந்த இடத்தை ஒரு கோயிலாக வணங்கி பாரதி இயக்கத்தார் விடைபெற்றனர்.

4. சங்ககிரி          

      சங்ககிரி ஒரு சாதாரண கிராமம். கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கிராமதின் அருகில் மலைமீது ஒரு கோட்டை பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இது 15ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்களால் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். இங்குதான் தீரன் சின்னமலை வாழ்ந்ததாகவும் சொல்கிறார்கள், அதற்கான நிச்சய ஆதாரங்கள் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. திப்பு சுல்தான் இந்த கோட்டையை வலுப்படுத்திக் கொண்டு இருந்ததாகவும், பின்னர் ஆங்கிலேயர் வசம் இது போய்விட்டது என்றும் தெரிகிறது. இங்குதான் தீரன் சின்னமலை பிரிட்டிஷாரால் 1805இல் தூக்கில் இடப்பட்டதாகச் சொல்கிறார்கள். சங்ககிரி கோட்டைக்கு மேல் சென்று வர படிகள் இருக்கின்றன. செங்குத்தான அந்த படிகள் ஏறுவதற்கு அடிவாரத்தில் சரியான வழி இல்லை. படிகள் தொடங்குமிடத்தில் பல உள்ளூர் வாசிகள் நெருக்கமாக வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அவ்விடத்தைத் தாண்டி சிறிது தூரம் வரை அசுத்தமாக இருக்கிறது அதன் பின் மேலே செல்ல படிக்கட்டுகள் இருந்தாலும், அது சற்று தூரத்தில் முடிந்து விடுகிறது. அதன் பிறகு மேடும் பள்ளமுமான பாறைகள் வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. 
                              To be continued............

1 comment:

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்