பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 25, 2011

மராத்தியர் வரலாறு - Part 20


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 20

துளஜேந்திர ராஜா தனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதால், தன் உறவில் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியை சென்னையில் இருந்த ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதிய செய்தியை முந்தைய பகுதியில் பார்த்தோம். இனி.....

தஞ்சாவூர் ராஜ்யத்தில் அரண்மனையில் துளஜா ராஜா செய்துவந்த இதுபோன்ற செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு இவரது நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இவருடைய நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களது எதிர்பார்ப்புகள் வேறு. துளஜா மிக சீக்கிரத்தில் இறந்து போவார். வாரிசு இல்லாமல் அவர் இறந்து போனதும் ராஜாங்கம் யாருக்கு என்று போட்டா போட்டி நடக்கும். அப்போது அவரவர்க்குக் கிடைத்ததைச் சுருட்டலாம் என்று காத்திருந்தார்கள் அவர்கள். அரண்மனை நிறைய இதுபோன்ற துர்புத்தி படைத்தோர் நிறையவே இருந்தார்கள்.

அவர்களுடைய குறை, முறைப்படியான, எல்லா தகுதிகளும் படைத்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதோடு, அவனை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேறு ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்கு நல்ல கல்வியைக் கற்பித்து, உத்தமமான ராஜாவாக ஆக்கிவிட்டார்களானால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கவலை அவர்களுக்கு. துளஜாவின் இயலாமை காரணமாக அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு கிடைத்ததைச் சுருட்டித் தின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சில சுய நலக்காரர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதானும் மாற்று கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்கள். பிரதாபசிம்மராஜா இருந்த போது அவருடைய ஆசை நாயகி அன்னபூரணாபாயி என்ற ஒருவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தது என்பதையும், அதில் கிருஷ்ணசாமி என்கிற ஒருவன் இறந்து போனதையும் ராமசாமி என்ற மற்றொருவன் அமரசிம்மன் என்ற பெயரில் இருந்து வந்ததையும் பார்த்தோம் அல்லவா? அவன் துளஜா ராஜாவுக்குத் தம்பி முறை ஆகிறது. . இவன் திருவிடைமருதூரில் இருந்து வந்தான். அந்த அமரசிம்மனைத் தேடிப் பிடித்தார்கள் அரண்மனையில் இருந்த தீயமனம் படைத்தோர். இவனுக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்ற போதிலும், இளைய வயதுக்காரன், மேலும் பிரதாபசிம்ம ராஜா விட்டுச் சென்றிருக்கிற ஒரு வாரிசு. இவனை முன்னிருத்தி ராஜாவாகக் கொண்டு வர வேண்டும். அதிலும் துளஜா இருக்கும் போதே அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் துளஜா ராஜா மனச்சோர்வோடு இருந்த ஒரு நாள், அமர் சிங்கை அவர் முன்பாகக் கொண்டு வந்து நிருத்தினார்கள். அந்த அமர்சிங் தான் ராஜாவுக்கு வாரிசு, தனக்குத் தம்பி முறை என்று சென்னை கவர்னருக்கு மன்னர் எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படி கடிதம் எழுதிய மறு நாள் அதாவது 1787 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ராஜா இறந்து போனார்.

மாண்டு போன ராஜாவுக்கு உத்தரகிரியைகளை அமர்சிங்கை விட்டுச் செய்யச் செய்தார்கள். ஒப்புக்காக உடன் சரபோஜியையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு தஞ்சை பேராசைக் காரர்கள் சென்னைக்குச் சென்று கவர்னரை சரிக்கட்டுவதற்காகப் போய் முகாமிட்டார்கள். அங்கு கவர்னர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் அவருடைய மனைவி லேடி ஆர்சிபால்டு கேமல் என்பவரை மெதுவாக நயிச்சியம் பேசி தன்னக் கட்டிக் கொண்டார்கள். அவர் மூலம் கவர்னரையும் சரிக்கட்டி விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. கவர்னர் இந்த விஷயம் குறித்து கல்கத்தாவில் இருந்த அவர்களது தலைமை பீடத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார்.

துளஜா ராஜா இறந்து போன செய்தி குறித்து பியர்சன் என்பவர் எழுதியிருக்கும் பகுதி இது: --

"The next morning Rajah who was rapidly sinking requested the attendance of the Resident Mr.Hudleston, Col. Stuart, the Commandar of the Garrison and Mr.Swartz. The dying prince then sent the following message to them. After stating that in compliance with the suggestion of Mr.Swartz, he has appointed Amar Singh to the Guardian of the Child and regent of the Country, till he should be capable of succeeding to the throne."

"In the course of the evening after the preceding conversation the Rajah's mother visited him and earnestly interceded on behalf of Ramasamy, afterwards called "Amar Singh". This combined with the advice of Father Swartz determined Thulaja Raja to adopt the plan proposed. He accordingly sent for his brother delivered his adopted son into his hands, desired him to be his guardian and earnestly commended him to his care and affection.

But before his death he wanted to adopt some one to succeed him and for that purpose, he chose Serfojee from a collateral branch and appointed his brother Amar Singh as Regent till the boy came of age."

இதற்கு முன்பாக அமர்சிங்கின் ஆதரவாளர்கள் தஞ்சை அரண்மனையில் இருந்த ஆங்கில அதிகாரிகளைச் சரிக்கட்டி வைத்திருந்தார்கள். ஆங்கில அதிகாரிகளும் இவர்கள் எண்ணப்படி நடந்து கொள்ள சம்மதித்திருந்தார்கள். கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், தஞ்சாவூருக்கு வந்து, சரபோஜி, அமர்சிங் இவர்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அழைத்து விசாரித்து விட்டு 12 பேர் கொண்ட ஒரு குழுவை விசாரித்தார்கள். அந்தக் குழு அமர்சிங்கின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள். அவர்கள் எந்த சாத்திரமும், ராஜ்ய சாஸ்திரமும் அறியாதவர்கள். நியாயம், தர்மம் இவற்றையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த பன்னிருவர் குழு தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆளும் உரிமை அமர்சிங்குக்குத்தான் உண்டு என்று கவர்னரிடம் ஒப்புதல் அளித்தார்கள்.

இந்த விசாரணைக்குப் பின் கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், அமர்சிங்கை அழைத்து 1787 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தஞ்சை ராஜாவாக பட்டம் கட்டி அமரவைத்தார்.

அமர்சிங்.

அமர்சிங் தஞ்சாவூர் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார். ராஜாங்க நியாயப்படி சரபோஜிதான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் செய்த சூழ்ச்சியினால் அமர்சிங் அந்தப் பதவியில் அமர்ந்தார். தான் அரசனாக ஆனதும் இந்த அமர்சிங்கினால் சிறுவன் சரபோஜிக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. துளஜா ராஜா தான் இறக்கும் தருவாயில் தனது ஸ்வீகார மகன் சரபோஜிக்கு பாதிரியார் ஸ்வார்ட்சை பாதுகாவலராக நியமித்துவிட்டிருந்தார் அல்லவா? அதனால் அவர் அடிக்கடி அரண்மனை வந்து சரபோஜியைக் கவனித்துக் கொண்டார். அப்படி அவர் அரண்மனையில் இருந்த போது கவனித்த வகையில் அங்கு சரபோஜிக்குச் சரியான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கோண்டு சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதினார்.

அந்த நிலையில் தஞ்சாவூருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னர் புதிய ரெசிடெண்ட் ஒருவரை நியமித்திருந்தார். அவர் மூலம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தின் விவரங்களை கவர்னர் இங்கிலாந்தில் இருந்த கம்பெனி டைரக்டர்களுக்குத் தெரியப் படுத்தினார். அதன் பேரில் கம்பெனியார் பிறப்பித்த உத்தரவு ஒன்று தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த உத்தரவில், சரபோஜியை அமர்சிங்குடைய தொல்லையிலிருந்து விடுவித்து, அந்தச் சிறுவனை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசம் ஒப்படைத்து அவனுக்குத் தனி அரண்மனையை ஒதுக்கி அங்கு அவனுக்குத் துணையாக சில பண்டிதர்களையும் நியமிக்க வேண்டுமென்று இருந்தது.

"The next morning he (Serfojee) for the first time, since his confinement saw the Sun." வெளி உலகைக்கூட பார்க்கமுடியாதபடி உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சரபோஜி அன்றுதான் சூரியனைப் பார்த்தான் என்று எழுதுகிறார்கள் என்றால், அப்போதிருந்த நிலைமையை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா?

"Having noticed that the house, was nearly cleaned out and Serfojee's furniture removed there. I (Resident) conducted him to it and placed a guard of 12 sepoys over him. I have ordered a proper person, recommended by Mr.Swartz, a Maratha Brahman named Dhada Rao to attend to his education." தஞ்சையின் ஸ்தானீகர் (Resident) 1789 அக்டோபர் மாதம் எழுதிய குறிப்பு இது.

கிழக்கிந்திய கம்பெனியார் சரபோஜிக்கும், அவனுடைய குடும்பத்தாருக்கும் செலவுக்கு ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். "An establishment was formed amounting to one thousand and seventy seven star pagodas monthly for Serfojee and his relatives and one thousand star pagodas each to the three widows of the deceased Rajah." இது 24-9-1790இல் எழுதப்பட்ட குறிப்பு.

அதன் பிறகு சரபோஜி வீணாக பொழுதைப் போக்காமல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜியிடம் காட்டிய அன்பும், அரவணைப்பும், பரிவும் ஒரு தந்தை மகனிடம் காட்டிய அன்பைப் போன்றது. இந்த அன்புப் பிணைப்பினால் சரபோஜி பல கலைகளையும், மொழிகளையும், பண்பாடுகளையும் கற்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது.

ஆங்கிலம் தவிர சரபோஜியின் தாய் மொழியான மராத்தியையும் படிக்க, எழுத, பேச மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் மொழியும் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. இப்படி சரபோஜி பல மொழிகளில் பாண்டித்தியம் பெறுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயனுடையதாக இருந்தது.

சென்னை கவர்னரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அமர்சிங் சரபோஜிக்குக் கொடுத்து வந்த தொல்லைகளை நிறுத்தச் செய்தார். இப்படி எத்தனை நாட்கள் சரபோஜியைத் தஞ்சையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு கொடுக்க முடியும். அவனை சென்னைக்குக் கொண்டு வந்து கல்வி பயிற்றுவித்து, வீரம் செறிந்த ஓர் மன்னனாக உருவாக்க வேண்டும் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முடிவு செய்தார். கம்பெனி அதற்கு சம்மதித்தது.

ஸ்வீகாரத் தாயாரும் துளஜாவின் மனைவியுமான சுலட்சணாபாயி காலமானதை அடுத்து அவருடைய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மற்ற இரு தாயார்களுடன் சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் துணையோடு சென்னைக்குச் சென்றனர். அங்கு இவர்கள் கவர்னரின் மாளிகைத் தோட்டத்து பங்களாவில் தங்கிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்.

சென்னையில் கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வசித்து வந்த சரபோஜிக்கு கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு Gerick (கெரிக்) என்பவரை பொறுப்பாளராக நியமித்துவிட்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்குத் திரும்பினார். சென்னையில் புதிய காப்பாளருடன் விடப்பட்ட சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தன்னுடன் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பாரோ, அதே மகிழ்ச்சியுடன் கெரிக் என்பவருடனும் பழகிக் கொண்டு வாழ்ந்தார்.

இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியார், தஞ்சை அரசுக்கு வாரிசு அமரசிம்மனா, சரபோஜியா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு பண்டிதர்களின் குழு பரிசோதித்து அமர்சிங் தான் என்று முடிவு செய்தார்களல்லவா? அந்த குழுவினர் ஆதாரமாகக் காட்டிய சாத்திர நூல்களைக் கொண்டு வாருங்கள் என்றனர் கம்பெனியார். அமர்சிங்கையும் இது குறித்து விசாரித்தார்கள். இந்த ஆவணங்களை யெல்லாம் காசியில் இருந்த மகா பண்டிதர்களுக்கு அனுப்பி அவர்களுடைய முடிவைக் கேட்டிருந்தனர் கம்பெனியார்.

"The Board resolved to call on the most learned Pandits in Bengal and Benaras for answers to the substance of the questions put to the Pandits at Tanjore that those questions were translated by the late Sir William Jones into Sanskrit and transmitted to the Pandits of bengal and Benaras whose answers had been duly received and translated for the use of the Board."

சரபோஜியையும் பாதுகாப்பு கொடுத்து அமர்சிங் தொல்லை கொடுக்க முடியாதபடிக்கு தஞ்சையில் தங்கியிருக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தனர். அவரும் அதன்படி Gerick உடன் சென்னையிலிருந்து கிளம்பி வருகின்ற வழியில் திருக்கழுக்குன்றம் சென்று அங்கு பறவை தரிசனம் (அங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது இருக்கிறது. அங்கு தினமும் கோயில் பிரசாதம் அருந்த இரு கழுகுகள் வந்து அந்த கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும். இதனை மக்கள் கூடியிருந்த தரிசனம் செய்வர்.) செய்து கொண்டு வந்தார்.

முன்பு அமர்சிங்கிடம் இருந்த பயத்தாலும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு எந்த சாஸ்திரமும் தெரியாத 12 பேர் பொய்யான சாஸ்திரங்க்களைச் சாட்சியாகக் காட்டினார்களல்லவா? அவர்களில் இறந்து போனவர்கள் போக, மீதமுள்ளவர்கள் தங்களுக்கு எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது என்றும், பொய்யாக அப்படி எழுதிக் கொடுக்கச் சொன்னபடி எழுதிக் கொடுத்தோம் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டார்கள். இந்தச் செய்தியையும் பாதிரியார் சென்னை கவர்னருக்குத் தெரியப் படுத்தினார்.

பொய்யான தகவல்களைச் சொல்லி சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்தது செல்லாது என்று அமர்சிங்கை அரச பதவியில் உட்கார வைத்த அந்த 12 மகா பண்டிதர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?

1. பாடலாச்சார்யா
2. மாதவாச்சார்யா
3. தாதா ராவ்
4. ஜனாச்சாரி
5. அப்பா சாஸ்திரி
6. ராமா சாஸ்திரி
7. சத்யநிதி ஆச்சார்யா
8. நரசிம்மாச்சாரி
9. ஜனாச்சாரி (2)
10. புஜங்க ராவ்
11. பாப்பண்ணா
12. மாதவாச்சாரின் மருமகன்

இவர்களுள் ஜனாச்சாரி சன்னியாசியாகி விட்டார். தாதா ராவை விசாரித்த போது தான் பொய் சொன்னதாக அழுது கொண்டே சொன்னார். ஜனாச்சாரி (2) தனக்கு உண்மையில் எந்த தர்ம சாஸ்திரமும் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அப்பா சாஸ்திரி தனக்கும் தர்ம சாஸ்திரம் தெரியாது, மற்றவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டதாகச் சொன்னார். இப்படி பலரும் தாங்கள் போலி ஆசாமிகள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

இந்த விவரங்களையெல்லாம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் கம்பெனி அதிகாரிகளுக்கு எழுதினார். அவர்கள் அமர்சிங்கை பதவி நீக்கம் செய்து அனுப்பி விட்டு சரபோஜியை அரசராக ஆக்கும்படி எழுதினார்கள். அதன்படி சரபோஜி 1798 ஜுன் மாதம் சரபோஜி II எனும் பெயரோடு அரச பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில கம்பெனியார் நீதி நெறி முறைகளுக்குப் புறம்பாக அரசபதவிக்கு வந்த அமர்சிங்கை நீக்கிவிட்டு சரபோஜியை அரசராக அறிவித்த செயலுக்கு தஞ்சை ராஜ்யத்து மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

(இன்னும் வரும்)

1 comment:

Unknown said...

வெள்ளையர்களின் செயலும்.. குறிப்பாக பாதிரியார் (சாஸ்திரியார்) விவேகம் அருமை...
காரண காரியம் என்பதுவும் இது தானோ? நடப்பவைகள் யாவும் நன்மைக்கே என்பதாக... இப்படி ஒரு போலி மன்னன் வராவிட்டால்... சரபோஜியும் அத்தனை கலைகளையும் தனது பிர தேசம் விட்டு சென்று ஒரே சிந்தனை குறிக்கோளுடன் கற்று இருக்க நேர்ந்திருக்காது அல்லவா!
ஆவலுடன் அடுத்தப் பகுதிக்கு செல்கிறேன்..