பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 15, 2012

"இனியவை நாற்பது" (11)

11. பதினொன்றாம் இனிமை.

கிராமத்தில் எந்த சொத்தும் பந்தமும் இல்லாமல் வாழ்ந்து வந்தான் ஒருவன். அன்றாடம் உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலைமை. அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் இவனுக்கு யார் தினந்தோறும் உணவளிப்பர்? வேறு வழியின்றி ஊர் ஊராகப் போய் அங்கெல்லாம் கைநீட்டி பிச்சை வாங்கி உண்டு கொண்டிருந்தான். ஒரு நாள் இவன் தன்னுடைய கேவலமான பிழைப்பை எண்ணி வருந்தினான். இப்படி பல ஊர்களுக்கும் சென்று யாசகம் வாங்கி உண்ணும் நிலை இல்லாதிருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? ஆம் பல இடங்களுக்கும் சென்று இரந்து வாழாமை இனிமை தரும் என்கிறது பாடல்.

ஒரு தமிழ்ப் பாடல், அதற்கு நேரடியாக பொருள் கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு வக்கிர புத்திக்காரன் நேரடியாகப் புரியக்கூடிய அந்தப் பொருள் தவறு என்றும், அந்தப் பாடலில் வரும் சொற்களுக்கு மறைவாக வேறொரு பொருள் உண்டு எனவும், சரியான பொருளுக்கு நேர் எதிரான கற்பனையான ஒரு பொருளைக் கற்பித்த்துப் பேசி வந்தான். அப்படிச் செய்தது அவனுடைய வக்கிர புத்தியைத்தான் காண்பிக்குமே தவிர புலமையை அல்ல என்பது ஏனையோர் கருத்து. தவறான வழியில் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்ளாத அறிவின் நுட்பமே இனிமை பயக்கும் என்கிறது பாடல். 

பசி வந்தால் ஏற்கக்கூடிய தகுதி உள்ளவர்கள் கையால் உணவு வாங்கி உண்ணலே சிறந்தது. அப்படியில்லாமல் எந்தத் தகுதியும் அற்ற ஒருவனிடம், தகாத செய்கைகளால் மக்களால் வெறுக்கப்படும் ஒருவனிடம் கையேந்தி அவன் கொடுக்கும் உணவை, உயிர் போவதாக இருந்தாலும் வாங்கி உண்ணாமை இனிமை தரும். அப்படி மறுப்பதைப் போல சிறப்புடைய செயல் வேறு இல்லை என்கிறது இந்தப் பாடல்.

"அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத் துண்ணாப்
பெருமை போற் பீடுடையது இல்."

அதர் = வழி. குதர் = தவறான வழி.

ஊர் ஊராகச் சென்று பலரிடமும் கையேந்தி இரந்துண்டு வாழாமை இனிமை; ஒரு மேன்மை பொருந்திய நூலுக்கு அதன் உண்மைப் பொருளுக்கு மாறாக தவறான பொருளைச் சொல்லாத அறிவின் நுட்பம் இனிமை; உயிரே போவதாக இருந்தாலும் அந்த நிலையிலும் தகாதவர் தந்த உணவை உண்ணாதிருப்பது இன்பம் தரும்.

1 comment:

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இனியவைகளை கேட்பதும், படிப்பதும் கூட இனிமையே...ஒரு சிறிய பாடல்களில் மிக பெரிய கருத்துக்களை தந்துள்ளனர்...நான் பள்ளியில் செய்யுளில் படித்த ஞாபகம்...நான் விரும்பிய தமிழ் செய்யுளிலும் கூட அன்று ரசித்து படிக்காமல்,மதிப்பெண்களுக்காக தான் படித்தேன்...இன்று விரும்பிப் படிக்கின்றேன் ஐயா...உங்களது இந்த சேவைக்கு மீண்டும் எனது நன்றிகள்...