பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, July 12, 2017

கண்ணம்மா - என் குழந்தை


கண்ணம்மா - என் குழந்தை 
(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
(ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)

ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப 
தநீத - பதப - பா
பபப -பதப - பமா - கரிஸா 
ரிகம - ரிகரி - ஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோ
பாவப்படி மாற்றிப் பாடுக. 

சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! 
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா 
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே 
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா! 
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் 
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம் 
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் 
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! 
உன்மத்த மாகுதடீ! ... 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது 
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு 
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் 
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! 
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா! 
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது 
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் 
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர் 
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் 
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் 
செல்வம் பிறிது முண்டோ ? ... 10 

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கண்ணம்மா என் குழந்தை - என்றும் நினைவில் இருக்கும் வரிகள்.