பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 27, 2017

விருதுநகர் சதி வழக்கு. (1942)

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் மீது பேசும்போது காந்தியடிகள் சொன்னார் இதுவே நமது இறுதிப் போர், இதில் ஒன்று செய்து முடிப்போம் இன்றேல், செத்து மடிவோம் என்றார். அன்று 8 மணிக்கு மாநாட்டில் பேசி முடித்து அவர் தங்குமிடம் செல்லும்போது கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சி தடை செய்யப்பட்டது, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாநாட்டுக்கு உடல் நலம் சரியில்லாததால் பாட்னாவில் தங்கியிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைதானார். நாடே கொந்தளித்தது. அந்த நிகழ்வின் 75ஆம் ஆண்டு  வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள். அதனை நினைவுகூரும் வகையில் அப்போது 1942 ஆகஸ்டில் நடந்த சில கலவர நிகழ்ச்சிகளை இங்கே பதிவிடுகிறேன்.   தஞ்சை வெ.கோபாலன்


விருதுநகர் சதி வழக்கு. (1942)

அந்தக் காலத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் தீவிர காங்கிரஸ்காரர்களாக விளங்கிய கு.காமராஜ், அவருடைய நண்பர் கே.எஸ்.முத்துச்சாமி ஆகியோர் சுதந்திரப் போர் எழுச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிகழ்ச்சியொன்றை இப்போது பார்ப்போம்.

ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விருவரும் காங்கிரசில் பிரபலமாக வளர்ந்து வந்தார்கள். கு.காமராஜ் அவர்களின் பெற்றொர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார். கே.எஸ்.முத்துச்சாமி அவர்களின் பெற்றோர் கே.சங்கரநாராயண ஆச்சாரி, அன்னபூரணத்தம்மாள்.

1933இல் உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வங்காள மாநிலத்தின் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்வதற்காகச் சதி நடந்ததாகவும் அதில் கே.அருணாசலம் (அருண்), சபாபதி, கண்ணாயிரம், ஹைதர் அலி என்கிற சங்கர், வாங்கார்டு இன்சூரன்ஸ் கம்பெனி அதிபர் ஹெச்.டி.ராஜா இவர்களோடு வங்கத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்கார், கோவை சுப்பிரமணியம் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டு 'சென்னை மாகாண சதி வழக்கு' என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. (இந்த வழக்கு குறித்த நமது கட்டுரை "சென்னை சதி வழக்கு" எனும் தலைப்பில் நமது வலைத்தளம் http://www.tamilnaduthyagigal.blogspot.com வெ ளியாகியிருக்கிறது. தயவு செய்து அதனைப் பார்க்க வேண்டுகிறேன்.)

இந்த வழக்கில் அப்போது தமிழகத்தில் தீவிரமாக இருந்த தேசபக்தர்கள் சிலரில் காமராஜ் போன்றவர்களையும் இணைக்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால் பாவம், அவர்களால் முடியவில்லை. காமராஜ் அவர்களை அந்தச் சதிவழக்கில் பிரிட்டிஷ் அரசு சேர்க்க விரும்பியதற்கு முக்கிய காரணம் இருந்தது. அதாவது காமராஜ் 1930இல் உப்பு சத்தியாகிரகத்தை ஆதரித்துப் பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்தார். அப்போது அதே சிறையில் அடைபட்டிருந்த லாகூர் சதி வழக்கில் ஷாஹீத் பகத் சிங்கின் தோழர்கள் காமராஜ் அவர்களுக்கு பழக்கமாகினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜ் அவர்களையும் சதி வழக்கில் பிணைக்க முனைந்தனர்.

உண்மையில் வங்க கவர்னராக இருந்த ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்யவும், வங்கியைக் கொள்ளை அடிக்கவும் புரட்சிக்காரர்கள் திட்டமிட்டது உண்மைதான். இதில் பங்கு பெற்ற தமிழ் நாட்டு வீரர்களில் கே.அருணாசலம் (அருண் - இவர் பிந்நாளில் 'ஆனந்தவிகடன்' இதழில் தொடராகப் பல தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார்) விருதுநகர் சென்று காமராஜ் அவர்களை சந்தித்தார் என்பது ஒரு காரணம். அருணாசலம் புதுச்சேரி சென்று இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார். ஆனல் இதில் எதிலும் காமராஜ் பங்கு பெறவில்லை என்பதுதான் உண்மை.

'சுதந்திரச் சங்கு' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர் இந்த அருணாசலம். இவரையும் இவரோடு தொடர்புடைய மற்ற புரட்சிக்காரர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர். இந்த முயற்சியில் காமராஜ் அவர்களையும் சேர்த்துவிட அவர்கள் செய்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை.

எனவே அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர் போலீசார். காமராஜரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்பது அவர்களது திட்டம். அந்த சமயம் பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. போதாதா போலீசாருக்கு காமராஜரை மாட்டிவிட. இந்த நிகழ்ச்சிகளுக்கு காமராஜ், முத்துச்சாமி இவர்கள்தான் காரணம் என்று சந்தேகித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர மாரியப்பன் எனும் பத்திரிகை நிருபர், நாராயணசாமி, வெங்கடாசலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது நடந்த அந்த வழக்கில் கே.எஸ்.முத்துச்சாமிதான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக கு.காமராஜ் பெயர் இருந்தது. மற்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிப்பதில் போலீசார் திணறினர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கெல்லாம் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாவம்! எப்படியாவது இவர்களை இதில் மாட்டிவிட வேண்டுமே என்ன செய்வது? ஒரு முடிவுக்கு வந்தனர். ஐந்தாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்த வெங்கடாசலம் என்பவரை மிரட்டி அப்ரூவராக ஆக்கிவிட முயன்றனர். இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டவர் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார். (பிந்நாளில் பெருந்தலைவர் காமராஜ் முதலமைச்சராக இருந்த சமயம் இவர் சென்னை நகரத்தின் போலீஸ் கமிஷ்ணராக இருந்தார் என்பதும், இதற்கு முன்பு நடந்த திருவாடனை கலவர வழக்கில் டி.எஸ்.பி,யாக  இருந்த இவர் காங்கிரஸ் தொண்டர்களை அடித்துத் துவைத்தவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.)

இவர் பிந்நாளில் காமராஜ் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை நகர் போலீஸ் கமிஷனராக இருந்தார் - இவருக்கு காமராஜ் அவர்களிடமிருந்து எந்தவித தொல்லையும் நேர்ந்ததில்லை - பழி வாங்கப்படவில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். மற்றொரு முறை இவர் சென்னையில் பணியாற்றிய சமயம் ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக சென்னைக்கு விஜயம் செய்தார். காமராஜ் உட்பட பலரும் அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அனுமதிச்சீட்டு கொண்டுவரவில்லை என்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜை பார்த்தசாரதி ஐயங்கார் விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். அதற்காகவும் அவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையை காமராஜ் எடுத்ததில்லை. அதுதான் காமராஜ் அவர்களின் பண்பு)

காமராஜ், முத்துச்சாமி ஆகியோர் மீதான இந்த வழக்கு தென் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து இவர்களை வெளிக்கொணர தலைவர் சத்தியமூர்த்தி, குமாரசாமி ராஜா போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அப்போது ராஜபாளையம் விஜயம் செய்த காந்திஜி டி.எஸ்.எஸ்.ராஜனிடம் இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.

ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.

அடி, உதை தாங்காமல் அப்ரூவராகி பொய்யான வாக்குமூலம் கொடுத்த வெங்கடாசலமும் சத்தியத்துக்கும், மனச்சாட்சிக்கும் பயந்து தான் பொய் வாக்குமூலம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

நீதிபதி மன்றோ தனது தீர்ப்பில் அரசாங்கத் தரப்பு நம்பத்தகுந்த வாதங்களை முன்வைக்கவில்லை. மகா புத்திசாலிகளான இந்த இளைஞர்கள் வெடிகுண்டு வீச இப்படிப்பட்ட கேலிக்கூத்தான நடவடிக்கைகளைச் செய்திருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். முடிவில் ஐந்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த பொய் வழக்கு காமராஜ், முத்துச்சாமி ஆகியோரின் புகழை தமிழகம் முழுவதும் பரவும்படி செய்தது. காமராஜ் இந்த வழக்கை எந்தவித புலம்பலோ அல்லது குற்றச்சாட்டுகளோ சொல்லாமல், தன் மடியில் கனமில்லை என்பதால் தீரத்தோடு எதிர்கொண்டு முறியடித்தார். வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடையாது; கோழைகளுக்குத்தான் அனைத்துமே என்பதை நிரூபித்தார். வாழ்க காமராஜ்--முத்துச்சாமி புகழ்!!


No comments: