பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 16, 2017

தமிழில் உருவான திரைப்படங்கள்

                தமிழில் உருவான திரைப்படங்கள் எல்லாமே தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இந்தியாஇலங்கைசிங்கப்பூர்மலேசியா மட்டுமல்லாது கனடாஇங்கிலாந்துஅமெரிக்காஜப்பான்தென்னாபிரிக்காஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் வரவேற்பைப்பெற்றிருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம். ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து இந்திய சினிமாக்கள்தான் உலகளாவிய வரவேற்பு இருந்திருக்கிறது. சினிமா மக்கள் உள்ளங்களைக் கெடுக்கிறதா? அல்லது வளர்ச்சிக்கு உதவுகிறதா? என்கிற வினா எந்தக் காலத்திலும் கேட்கப்பட்டுதான் வந்திருக்கிறது. உள்ளூர் டூரிங் டெண்ட் கொட்டகையில் உட்கார்ந்து கொண்டு எத்தனை வகையான உணர்வுகளை சினிமா கதாபாத்திரங்கள் வாயிலாம மக்கள் உணர்கிறார்கள். சினிமாவில் ஒரு பெண் கண்ணீர் சிந்தினால், திரை அரங்கில் அத்தனை பெண்களும் தன் புடவை தலைப்பால் அவரவர் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்கள். எம்.ஜி.ஆர். வாள் வீச்சைப் பார்த்து வரிசையில் உட்கார்ந்திருக்கும் சிறுவன் எழுந்து வெறுங்கையை வாள்வீச்சு போல சுற்றுகிறான். காதல் இளம் வட்டங்கள் படத்தின் காதலர்களை மனத்தில் நிறுத்தி தத்தமது காதல் துணையை நினைத்து மனம் மகிழ்ந்து போகிறார்கள். அதுதான் திரையுலகு சாதித்த சாதனை.
              19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.  1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, 'மவுண்ட் ரோடு' என்று அப்போது அறியப்பட்ட அண்ணா சாலையில் "வார்விக் மேஜர்" என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் 'எலெக்ட்ரிக்' திரையரங்காகும். மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.
              1905 இல் திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்து வந்த "சுவாமிக்கண்ணு வின்சென்ட்" என்பவர், 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இந்தத் திரையரங்கு விளங்கியது. "சுவாமிக்கண்ணு வின்சென்ட்" பல ஊர்களுக்குச் சென்று "இயேசுவின் வாழ்க்கை" என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினார்களாம்.) போன்ற பல துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் "வெரைட்டி ஹால்" என்ற அரங்கை அமைத்து, "வள்ளி திருமணம்" போன்ற படங்களைத் தயாரித்து இவர் வெளியிட்டார்.
நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார்.  இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார்.
             1914 ஆம் ஆண்டு சென்னையில் "வெங்கையா" என்பவரால் கட்டப்பட்ட "கெயிட்டி" சினிமா அரங்கே இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு. இந்தத் திரை அரங்கு சமீப காலம் வரையிலும் கூட மவுண்ட் ரோடில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
              இப்படி பல டூரிங் டாக்கீஸ்கள் நிறைய வந்த நிலையில் ஆங்காங்கே நிரந்தரத் திரையரங்குகள் பல ஊர்களில் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன.  இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916இல் "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.
             1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் "ஏ.நாராயணன்". "ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலில் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கினார். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ்தெலுங்குமலையாளம் ஆகிய மொழிகளில் விளக்கங்களைத் தெரிவிக்கும் அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான "மார்த்தாண்டவர்மன்" என்ற ஒரு படம் இன்றுவரைவெளியில் வரவில்லை . திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது.  இந்திய ஒளிப்பதிவு சட்டம் என்ற ஒரு சட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பில்ம் லீக்" எனும் அமைப்பு நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக சுதந்திரப் போராட்ட வீரரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
                தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள "சாகர் மூவிடோன்" என்ற நிறுவனத்தால் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. "குறத்திப் பாட்டும் டான்ஸூம்" என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம். அதே வருடம் "எச். எம். ரெட்டி' என்பார் முயற்சியினால் அவருடைய இயக்கத்தில் முழுநீள தமிழ்ப் படமான "காளிதாஸ்" வெளிவந்தது.
               முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படவில்லை. மும்பையிலும், கொல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் அப்போதெல்லாம் இல்லாத நிலையில், இங்கு படங்கள் தயாரிக்கப்பட வில்லை. 1934 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பேசும் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாயிற்று.  ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) திரைப்படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதன் முதலாக கையாளப்பட்டது.  அதாவது ஒரே நடிகை இரு வேஷங்களில் ஒரு காட்சியில் வருவது, அது  நடிகை சிவபாக்கியம், ஒரு ராணியாகவும்,  கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது.
                முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்  தமிழ்த் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளை மையமாக வைத்துதான் எடுத்து வெளிவந்தன. அதிலும், நாடகக் குழுக்கள்  மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே அதிகம்.
               இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமூகக் கதையொன்று தயாரிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு சமூகப் பிரச்சனைகளைக் கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திகில் படமும் இதையடுத்து,  பிரபல நாவலாசிரியரும் எழுத்தாளருமான வடுவூர் துரைசாமி  aய்யங்காரின் நாவலான மேனகாடம்பாச்சாரி போன்ற கதைகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி” எனும் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஒரு திரைப்படம்,  ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டில் வாஹினிஜெமினி போன்ற பிரபலமான சினிமா நிறுவனங்கள் சென்னையில்தொடங்கப்பட்டன.  தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.
              ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தணிக்கை வாரியம் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. 1918 ஆம் ஆண்டு ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய பல்வேறு காந்திய இயக்கம் வலுப்பெற்றிருந்த  ஆண்டுகளில் கடுமையானதாக ஆக்கப்பட்டது.  தேச சுதந்திரம் சம்பந்தமான படங்களை வெளியிட அனுமதிக்கவில்லை. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே , புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் எடுக்க முடிந்தது.
                  சென்னை மாகாணத்தில்1937 முதல் 1939 வரை ராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தியாக பூமி,மாத்ருபூமி போன்ற தேசபக்தித் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன.  இத்திரைப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் மறைமுகமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை முறை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்கள் வெளி வந்தபோது போலீஸால் எதுவும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில்,ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியபோது அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கும் தடை விதித்தது.    இந்த தியாக பூமி கதையை டைரக்டர் கே.சுப்ரமண்யம் எடுத்தார். அதில் கதாநாயகி சுதந்திரப் போரில் கலந்து கொள்வதாகக் கதை. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவரை டைரக்டர் திருமணம் செய்து கொண்டார். போர்க்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தன.
              திரைப்படத்துறையை அதன் தொடக்க காலங்களில் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. 1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம் என்பவர் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் இதழ். (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935 இல் தான் முதல் தமிழ் திரைப்பட இதழான “சினிமா உலகம்  வெளிவர ஆரம்பித்தது.  பிறகு "சில்வர் ஸ்கிரீன்" என்ற வார இதழும், ஆடல்-பாடல்” என்கிற  இதழும் தோன்றின.  பல சினிமா இதழ்களுக் கிடையே குண்டூசிபேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்பாக விளங்கின. பேசும் படம் மாதாந்தர பத்திரிகை. சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களும் அதில் வந்துவிடும். ஏ.ராம்நாத் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். குண்டூசிக்கு கோபால் என்பவர் ஆசிரியர், அவரை குண்டூசி கோபால் என்றே அழைப்பார்கள். இது தவிர தினத்தாள் போல “தமிழ் சினிமா” என்றொரு பத்திரிகை ஏ.கரீம் என்பார் நடத்தி வந்தார். அதில் தூரத்துப் பார்வை எனும் தலைப்பில் அவர் கழுகு எனும் பெயரில் எழுதி வந்த கட்டுரை எல்லோராலும் படித்துப் பாராட்டப்பட்டது.  எக்ஸ்பிரஸ் குழுமம் ஆங்கிலத்தில் “ஸ்க்ரீன்” என்றொரு இதழை வெளிக் கொணர்ந்தது. அப்போதெல்லாம் சினிமாவுக்கென்று தனிப் பத்திரிகைகள் இருந்தன. ஆனால் இப்போதோ, குடும்பப் பத்திரிகைகள் அனைத்தும் சினிமாவையே எழுதுகின்றன. பிழைக்க வழி.
அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது.  ஒரு படத்தில் பத்து முதல் இருபது பாடல்கள் வரைகூட இருக்கும். கதை என்ற பெயரில் ஒரு வரியில்  கதையும் அதில் உண்டு.  பின்னணி இசைக்குக் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது. பாடுவார்களே தவிர அது கேட்கும்படியாக இருந்தது என்று சொல்ல முடியாது.      பி. யு. சின்னப்பாஎம். கே. தியாகராஜ பாகவதர், டி. ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் அன்று புகழ்பெற்ற நடிகர்கள். அவர்கள் அனவரும் நல்ல பாடகர்கள்கர்நாடக சங்கீதம் நன்கு பயின்றவர்கள். கர்நாட்க இசைக் இசைக் கலைஞர்களான எம். எம். தண்டபாணி தேசிகர்,  ஜி. என்.பி. எனும் ஜி.என். பாலசுப்பிரமணியம்எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பாடியும் நடித்தும் சிறப்பாகப் பிரகாசித்தனர். பி.ஏ.பெரியநாயகி எனும் நல்ல பாடகி, சில படங்களில் பாடியும், நாரதராக நடித்தும் இருக்கிறார். அவர் குரலில் ஒரு அழுத்தம் இருக்கும் அதனால் அவர் பாடல்கள் பெரிதும் வெற்றி பெற்ற பாடல்களாக இருந்தன. என்.சி.வசந்தகோகிலம் என்ற கர்நாடக இசைப் பாடகியும் கச்சேரிகளும் செய்துகொண்டு திரையிலும் பாடி நடித்து வந்தார். இவரும் பெரும்பாலும் நாரதர் வேஷம் தான் போடுவார்.
பின்னணிக் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னணி பாடகர்கள் கதாநாயகர்கள் கதாநாயகிகள் ஆகியோருக்குப் பாட ஆரம்பித்தவுடன் , இசைக் கலைஞர்கள் நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.  டி.எம்.சவுந்தரராஜன் அருணகிரிநாதர் என்ற படத்திலும், எம்.எம்.தண்டபாணி தேசிகர் “நந்தனார்” படத்திலும், அதே படத்தில் இன்னொரு கர்நாடக இசை மேதையும் நடித்ததை நினைவுகூரலாம். தமிழில் டி.எம்.சவுந்தரராஜன் தூக்குதூக்கி என்ற படத்தில் பாடிய பாடல்கள் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. அதன் பின் அவர் முதுமை அடையும் வரை திரையில் அவர் குரல் ஒலிக்காத நாளே இல்லை. அப்படியொரு குரல். அவருக்கு இணையாக வெண்கலக் குரலில் சீர்காழி கோவிந்தராஜனும் பாடத் தொடங்கினார். இவரும் “அகத்தியர்” போன்ற படங்களில் நடித்தார். சிதம்பரம் ஜெயராமன், இசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டவர். அவருடைய குரலே ஒரு தனி அழகு. வாயில் வெற்றிலைப் பாக்கை வைத்துக் கொண்டு பாடுவது போல ஒரு உணர்வு. எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஏ.எம்.ராஜா, திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், சந்திரபாபு, இப்படி எத்தனையோ பாடகர்கள்.
திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த காலம் மாறி, கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலைதிரைப்படத்திற்கு சோமையாஜுலு என்பாரும்1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி” என்கிற எம்.கே.டி. நடித்தத் திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் புகழ்பெறத் தொடங்கினர். இளங்கோவன் கதை வசனம் எழுதிய “கண்ணகி” படத்தில் பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா உச்சரிக்க அதன் பெருமை நாடெங்கும் பரவத் தொடங்கியது. அதிலும் கண்ணாம்பா தமிழ் தெரியாத தெலுங்கு பேசும் பெண், என்றாலும் தமிழ் நடிகைகளைக் காட்டிலும் தமிழை சுத்தமாக உச்சரித்துப் பெருமை பெற்றார் கண்ணாம்பா. திரைப்படங்களில் வசனம் இருபொருளில் பேசவும், அடுக்கு மொழியில் பேசவும் தொடங்கிய பிறகு வசனகர்த்தாக்களின்ஆதிக்கம் வளர்ந்தது. இன்றளவும் கதை ஓட்டத்தைக்கூட பாதிக்கும் அளவுக்கு உரையாடல் அதிகம் இருப்பது தமிழ் திரைப்படங்களில் திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. சிலர் பேசியே அறுத்துவிடுவார்கள். வி.எஸ்.ராகவன் என்றொரு மூத்த நடிகர். அவர் பேச ஆரம்பித்தால் “வளவள” வென்று பேசுவார் என்று பெயர் பெற்றிருந்தார். அதே போல மேஜர் சுந்தரராஜன் நாடகத் தமிழ் திரையிலும் தொடர்ந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஸ்பெஷாலிடி  ஆங்கிலத்தில் பேசிவிட்டு அதையே மீண்டும் தமிழிலும் சொல்லும் வழக்கம், கேலி செய்யப்பட்டது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியவைகளும், வசனம் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் சிறப்புப் பெற்றன. 1950இல் வெளிவந்த “பராசக்தி”, பிறகு “மனோகரா” போன்ற படங்கள் வசனத்துக்காக ஓடிய படங்கள். பராசக்தியில் மு.கருணாநிதி வசனம் எழுதியது மட்டுமல்ல, அவர்களுடைய நாத்திகக் கொள்கைகளை அதில் பரப்பவும் செய்தார். அதிலிருந்து இளைய சமுதாயத்தினர் கோயில் பூசாரிகள் எல்லாம் பெண்களைக் கையைப் பிடித்து இழுப்பார்கள், பக்தர்கள் அயோக்கியர்கள், நாத்திகர்களே நேர்மையாளர்கள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தினார்கள். அது முதலாக நாத்திகம் எங்கும் பரவி கோயில் பூசாரிகளையும், பக்தர்களையும் இழிவாகப் பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கான ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுமானால் சமுதாயம் கெட்டு நாற்றமெடுக்கத் தொடங்கும் என்பது இதன் மூலம் தெரியவந்தது. 1953 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் திரைப்படம் ஒரு பிரம்மாண்டம் என்பதோடு, அதில் கதை அம்சம் சிறப்பாக இருந்ததும் அதன் வெற்றிக்கு ஒரு காரணம். பராசக்தி மூலம் கருணாநிதி பிரபலமான வசனகர்த்தாவாக ஆனது போல , ஏ.பி.நாகராஜன் தன்னுடைய புராண சினிமாக்கள் மூலம் மிக நுணுக்கமான விஷயங்களையும் சொல்லி தனித் திறமையோடு பிரகாசித்தார். அவருடைய புராணப் படங்கள் தவிர அவருடைய “தில்லானா மோகனாம்பாள்” போன்ற அமரத்துவம் வாய்ந்த திரைப்படங்களும் அவர் பெயரை இன்றளவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நாடகத் துறையில் திறமை வாய்ந்த ஏ.பி.நாகராஜனின் படங்களில் ரியலிசம், புராண படங்களில் நவீனத்துவம் புகாமல் பழைய நாட்கள் போல வசனங்கள் தூய்மையாக இருந்தது. அவர் படமான “பெண்ணரசி” எனும் படத்தின் தலைப்பை விவாதப் பொருளாக ஆக்கினார்கள். அரசி என்றாலே பெண் தானே, அப்புறம் என்ன பெண்ணரசி என்று கேள்வி எழுப்பினர். அவர் பதில் சொன்னார், அரசன் இருந்தால் அவன் மனைவி அரசி எனப்படுவாள். அதே பெண் மன்னனுக்கு பதில் நாட்டை ஆளும் ராணியாக இருப்பாளானால் அவளைப் பெண்ணரசி என்பது தவறில்லை என்றார். இதன் பின்னணியில் அரசியல் எதிருப்புணர்வு காரணமாக இருந்தது. ஏ.பி.என். ம.பொ.சியின் தமிழரசுக் கழகம். எதிர்த்தவர்கள் தி.மு.க.வினர். இன்னொரு வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் இவர் ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியவர்.
 இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற டாகுமெண்டரிப் படம் ஏ. கே. செட்டியார் என்பார் தயாரித்து வெளியிட்ட படம். அதுதான் 1940 இல் வெளிவந்த மகாத்மா காந்தி படம். ஏ.கே.செட்டியார் தென்னாப்பிரிக்காஅமெரிக்காஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட 1953 இல் ஹாலிவூட்டில் எடுக்கப்பட்ட இதன் ஆங்கிலப் படியானது டாக்டர் வெங்கடாசலபதி என்பவரால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படம் பிறகு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு  ஜனவரி 192006 இல் சென்னையில் திரையிடப்பட்டது.
தமிழ்நாட்டில் டாகுமெண்டரி படம் எடுப்பது, சலனப்படக் காலத்திலேயே தோன்றியிருந்தாலும், அதன் வளர்ச்சி குன்றிப் போயிருந்தது. ஆவணப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரொஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீரிய செய்தி டாகுமெண்டரிப் படங்களை தயாரித்தது. இவை தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்டன. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், பொதுமக்களின் ஆர்வமின்மையாலும் திரைப்படங்களுக்கு முன்பாக டாகுமெண்டரி எனும் நியூஸ் ரீல் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் செய்திப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. டாகுமெண்டரிப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும்  ஞான. ராஜசேகரன்,  சிவகுமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். பிரபல சங்கீத வித்வான்களைப் பற்றிய டாக்குமெண்டரி படங்கள் மக்கள் விரும்பிப் பார்த்தவைகள். டாக்குமெண்டரி போல இருந்தாலும் ஜி.வி.ஐயர் போன்றவர்கள் எடுத்த ஹம்சே கீதே, ராமானுஜர், ஆதிசங்கரர் போன்றவை வெற்றிப் படங்கள். அது போலவே ஞான ராஜசேகரனும் பல டாகுமெண்டரி படங்களை முழுநீளப் படமாக எடுத்தார், அவை பாரதி, பெரியார் போன்றவை.
உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின.  எஸ். எஸ். வாசன் இயக்கிய  சந்திரலேகா (1948)  பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார்.  நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி. என். அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு. கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.
 கருணாநிதி திரும்பிப்பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலி மாறன்ஏ. வி. பி. ஆசைத்தம்பிகண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது அரசியலுக்கு அவர்களுக்கு ஆதாயமாக அமைந்தது.  திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.
 1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே. பி. சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.
 1918 இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் "சினிமாட்டோகிராப்" சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படமான "காடு" சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது.
 1959 ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின.
             ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம். ஜி. இராமச்சந்திரன்சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன்ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்திபாசவலைபோன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார். இவர்களுக்கெல்லாம் முன்பாக நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பல பாடலாசிரியர்கள் பலர் இருந்தனர். உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், கவி கா.மு.ஷெரீப், மருதகாசி இப்படிப் பலர் இருந்தனர். இவர்களும் பல சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கா.மு.ஷெரீபின் “ஏரிக்கரை மேலே” பாட்டு இன்றும் ரசிக்கப்படுகிறது.
           1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன்தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது.  ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்களும் தொடர்ந்து வெளிவந்தன. வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்து திரைப்படப் பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது.
            1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை பிறகு காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை.
 இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன. இவருடைய படங்களின் பெயர்கள் எல்லாமே “ப” எனும் எழுத்தில் தொடங்கும், அது ஒரு சென்டிமெண்ட் போலிருக்கிறது.  நாடகங்களில் வளர்ந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்தார். அதே போல அமைச்சூர் நாடக ஆசிரியராகத் திகழ்ந்த கே. பாலசந்தர்நீர்க்குமிழி(1965) படத்தின் மூலம் இயக்குனரானார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன்ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநருக்காக ஓடிய படங்கள் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது.  ஜெயகாந்தனின் குறுநாவலான  உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து விருதைப் பெற்றது.  இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.  ‘நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டிய இவரது முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே,  இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் வழங்கத் தொடங்கினர் எம்.ஜி.ஆரின் “காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம். அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ். சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி. நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என். எஸ். கிருஷ்ணன்,கே. ஆர். ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.
 1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா தி.மு.க. என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றைகொண்டு வந்தார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
 தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ஜி.உமாபதி எடுத்த ராஜ ராஜ சோழன்  (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை.  எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜாபாக்கியராஜ்இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். நாடக நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர்  இன்று ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்கிறார்.
               ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது). புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜாமகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோர் வரவால் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது.ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து புகழ் வாங்கினார் . இவரது தனித்துவம் ஆடம்பர திரையமைப்பு, அடுக்கு மொழி வசனங்கள் இவையே. எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும் அரசியல் அங்கதம் நிறைந்த படம்.  சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான். அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்ரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்னம்பல்லவி அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன்ரோஜா  பம்பாய் ஆகிய படங்கள். 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானார். அதன் பிறகு பல நடிகர்களுக்கும் முதலமைச்சர் ஆசை வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
              1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனமான ஜி.வெங்கடேஸ்வரன் "ஜி.வி.பிலிம்ஸ்" என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன்கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் புரியாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்து கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் கிராமப்படங்களை தயாரிக்கத் தொடங்கினர்.  இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெயில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில்  நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு புகழ்ப்பெற்றது.

               இப்போது சினிமா தியேட்டர்கள் குறைந்து போனாலும், திரைப்படம் பார்ப்பவர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. சினிமாக்களை இப்போது எல்லோரும் வீட்டிலேயே பார்க்கத் தொடங்கி விட்டனர். சினிமாவால் பொழுது போக்கு அதிகமாயிற்று. ஆனால் அரசியலில் இவர்கள் புகுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவோம். நன்றி.

No comments: