பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 18, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி IV

"லக்ஷ்மி ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

வேள்விப் படலம்

 விண்ணவர் விரித்திட்ட பூ மழையாலே
தண்ணென் றானதாம் கானகம் முழுதும் – முனி
படைக்கலம் அருளினார் இராமனுக்கே
சடையப்பர் வாரி வழங்குவார் போலே!             115

சரயு வுடன் நதிகோமதி இணை வதும்,
‘கௌசிக’ நதியென்னும் புண்ணிய நதியையும்
தரிசித்த படியே முனியுடன் குமரர்கள்
கடந்தனர் இருகாத தூரங் கள்.                     116

நங்கையாய் புவியில் பிறந்தாலும் – இன்று
நதியாய் கௌசகி பாய்கின்றாள் – என்
முன்னம் பிறந்த தமக்கை யிவள்
இருசிகன் மணந்த துணைவி யிவள்.               117

இல்லறம் சிலநாள் இனிதே நடத்தி,
கடுந்தவம் புரிந்து வரமதைப் பெற்று,
வான்வழி இருசிகன் பிரம்மலோகம் புறப்பட
ஆற்றா தவளாய் ஆனாள் கௌசகி – பின்          118

ஆற்றின் உருகொண்டு பின் தொடர்ந்தாள் – அதைப்
பார்த்திட்ட மாதவர்க் கரசனாம் இருசிகன்
மாநிலத் துறுகண் நீக்கிடவே நீ
பாய்ந்திடு நதியென பகர்ந்து சென்றான்.            119

நதியினை யடுத்த சோலையைக் காட்டி,
‘யாதிது’ வென்று வினவினன் இராமன்.
‘சித்தா ஸ்ரமம்’ இதுதா னென்றும் – இங்கு
திருமாலே தவம்செய்ய பெருமையென்றார்.-பின்    120

சிந்தைத் தூய்மையில் பத்தினி யொத்த
சித்தாஸ் ரமம் பற்றி விளக்கா லானார்.
அசுரனாம் ‘இரணி யாக்கன்’ பற்றியும்,
‘மகாபலி’ பற்றியும் உரை க்கலானார்.              121

புவியைப் பாய்போல் சுருட்டிக் கொண்டு
புகுந்தான் கடலிலே இரணி யாக்கன்,
வராக உருகொண்ட திருமாலும் – புவி
கொம்பினில் தாங்கியே மீட்டு வந்தார்.             122

அத்தகு ஆற்றல் பெற்றது போலே
வையமும், வானமும் அப கரித்து
மாவலி யென்பான் உடைமை கொண்டான். – பின்
மாபெரும் வேள்வியைத் தொடங்கி விட்டான்.      123

வருந்திய தேவர்கள் சித்தாஸ் ரமம்வந்து,
தீயவன் மாவலி வேள்வியைக் கூறி - அவன்
கொடுஞ்செயல் தீர்த்திட வேண்டினராம்
நெடுமால் செய்திட இணங்கின ராம்.               124

முன்பு –
அசுரரை அடக்கவே மகவொன்று ‘தா’வென
காசியப முனியோர் விரதஞ் செய்ய
‘ஆலமரத்தின் சிறுவிதை போலந்த’ திருமாலும்
அதிதி வயிற்றில் அருகுறள்வாமன உருகொண்டார். 125

இன்று –
குறுகிய வடிவுடன் பிரும்மச் சாரியாய்
மாவலி வேள்விக்கு வாமனன் வந்திட,
வியந்தெதிர் கொண்டவன் விளம்பி னனாம்
‘எந்தனில் உய்த்தவர் யாருள’ வென்று?             126

மாவலி மாண்பினை வாமனன் புகழ்ந்ததால்
உவந்தவன் ‘என் செய?’ வினவிட்டான். - என்
‘மூவடி கால்மண்’ போதும் என்றிட,
‘தந்தோம்’ என்றதை தடுத்தானாம் சுக்ரன்.           127

‘குறுவடி யென்றிதைக் கொள் ளாதே!
பிரளயத்தில் அண்டத்தை அடக்கிய இறை’ என்ன,
‘கொள்ளும் கையிது நாரணன் கையெனில்
நன்மையிதைவிட வேறில்லை! தடுக்காதீர் எம்மை!’ 128

‘கொடியவன்’ இவனென்ற மந்திரி மொழிதனை
கொண்டிலன் மாவலி சிறி தளவும் – பின்
‘அடியொரு மூன்றினை அளந்து கொள்வீரென’
நெடுமால் கையினில் நீரைக் கொட்டினான்.         129

ஓரடி அளந்ததில் புவியை யடக்கி,
மறு அடியால்வா னுலகை யடக்கி,
மூன்றா மடிக்கென விடத்தினைத் தேடி – அவன்
தலையில்வைத் தமுக்கினார் புவிக்கடியில். - பின்   130

உலகம் முழுதையும் இந்திர னிடம்
ஈ ந்துவிட் டுபின் பாற்கடல் சென்று,
திருமகள் கரம்தொட, திருவடி சிவந்து,
திருபள்ளி கொண்டனன் ஆதிசேடன் மேலே!         131

திருமா லேவந்து தவஞ்செய்த இடமிது!
காசிப முனிவரும் சித்திபெற்ற இடமிது!
அத்தனை சிறப்புடை ‘சித்தாஸ்ரம’மன்றி
வேறிட மில்லைநான் யாகமி யற்றிட!               132

வேண்டிய பொருட்களை சேக ரித்து – முனி
விண்ணவர்க் காக்கிய வேள்வி யினை,
மண்ணினைக் காக்கும் மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையெனக் காத்தனர்.    133

‘தீத்தொழில் செய்பவர் வருவ தெப்போது?’
மூத்தவன் முனியிடம் கேட்கின்ற பொழுது,
வானத்தில் மேகமாய் சூழ்ந்தனர் அரக்கர்கள்
இடியும் அஞ்சும் படியொலி யெழுப்பியே            134

எய்தனர் அம்பினை! எறிந்தனர் சூலத்தை!
வீசினர் வேலினை! பிளந்தனர் மலையினை! – அதனால்
பெய்திட்ட மாரிபோல் கானகம் மறைத்ததாம்! – பொங்கிய
மீனுடை பொய்கைபோல் வானகம் போர்த்ததாம்!    135

பவள நிறத்துடன், சுழல்கின்ற விழியுடன்,
பிளவுண்ட பற்களுடன், அரக்கர்கள் சூழ்ந்ததை,
இலக்கு வற்கு இராமன் காட்டிட – ‘நாயக!
இனி வீழ்வதிவர் துண்டம்’ தொழுது வணங்கினன்.   136

அரக் கர்கள் சதையும், குருதியும், பிண்டமும்
கனல்மேல் சித றிடக்கூ டாதேயென
அம்பினை வைத்து, கோமுனி இருக்கையை
அமைத்து விட்டான் ராமன் கூடாரம்!                137

அஞ்சின மாதவர் ‘அபயமபயம்’ என
அஞ்சன வண்ண னைத்தொழுத னராம்.
‘அஞ்சீர்’ என்றவன் நாணேற்றி – குவித்தான்
தலையை மலையாய், குருதிக்கடலைப் பாயவிட்டான்.  138

தாடகைப் புதல் வர்கள் இருவரிலே - ராமன்
விட்டொன்ற அம்பால் கடலிலே ஒருவனும்
மற்றவன்யம புரியிலும் சேர்ந்திட – எஞ்சிய
அரக்கரை அழித்திடத்தொடர்ந்தன ரிருவரும்.         139                       
தூவினான் அம்பினை வான் நோக்கி – அது
தூர்த்தது வானத்தை ஓர் கணத்தில்!
மற்றையோர் ஓடினர் தலை தெறிக்க – அம்பு
உரிய இலக்கினை சேர்ந்து அழித்திட!                140

பறவைகள் கூடியே பந்தல் கட்டிட! – தேவர்கள்
சொரிந்த பூக்களதை விலக்கியே வீழ்ந்திட!
துந்துமி வாத்தியங்கள் முகிலாய் முழங்கிட!
திரண்டனன் அமரர்சூழ் இந்திரன் வான்வெளியில். .   141

வேள்வியை முறைப்படி முடித்திட்ட முனிவனும்,
‘லோகம் காத்திடக் கடவிய மால் நீ!
யாகம் காத்திடல் பொருளல்ல! தோற்றம்தான்!
பெரும் பாக்கியம் எனக்கிது’. என்றுரைத்தார்.          142

‘இனி செய்யும் பணி என்ன?’ வினவிட்டான்.
‘அரும்பெரும் செயல் உள செய்வதற்கு – முன்னம்
மருதம்சூழ் மிதிலையின் கோமகன் இன்று
புரிகின்ற வேள்விக்குப் புறப்படுக!’ என்றார்.            143

                     அகலிகைப் படலம்

பெண்ணென கம்பன் போற்றிப் பாடிய
சோணைநதிக் கரை சேர்ந்தனராம் – பின்
சோலை உறைந்து, கங்கை கடந்து,
மிதிலை மாநகர் அடைந் தனராம்!                    144

வயல்களும், சோலையும், கழனியும், பொய்கையும்,
நதிகளும், குளங்களும், கடந்தபின் அவர்கள்
கல்லொன்று வெளியிடைக் கிடப்பதைக் கண்டனர்.
கல்லல்ல அது! இல்லறம் தொலைத்திட்ட பேதைமகள்.145

திருமால் திருவடி எவர் சேர்ந்தாலும்
கரும ந்தொலைந்திட, பெறுவர் தம்முருவம் – அதுபோல்
காகுந்தன் கால்துகள் பட்டவுடன் – அவள்
கல்லுரு மாறிட நல்லுரு பெற்றனள்.                  146

பெண்ணாகியஓர் கல் வணங்கி எழுந்ததை
கண்ணுற்றான் ராமன்! ‘மாமுனி கௌதமன்
துணைவி அகலிகை இவ ளென்று’
இவள் கதை கூற லானார்!                           147

‘கங்கையை புவிதனில் பாயச் செய்த
பகீரதன் குலத்தினில் பிறந்த வனே!
தேவர்கோன் இந்திரன் தீவினை நயந்திட - முனி
கௌதமன் சபித்தான் ‘செங்கண் ஆயிரம்’’             148 

முனிசொன்ன உலகியல் புரியா தவனாய்
‘எதனால் இதுபோல் நிகழ்ந்தது?’ என்றான்.
முந்தைய பிறப்பின் விதியின் வினையா?
கல்லுரு ஏற்பட காரணம் யாது?’                      149

அகலிகை மேலே இந்திரன் கொண்ட
மையலால் இழந்தான் அறிவ னைத்தும்  
சேவல் போலவன்கூவவும், முனிவெளி யேற,
உய்த்திட புகுந்தான் முனி உருவில்!                  150

கணவனே என்றிவள் கலந்திட்டாள் – பின்
உணர்ந்தனள்; உணர்ந்தும், உடன்பட்டாள்.
அக்கணம் நள்ளிர வென்பது புரிந்து
முனிவனும் வந்தான் தன்னகம் விரைந்து!            151

இழிசெயல் புரிந்திட்ட அகலிகையும்,
விதிர்த்தபடி – உடல் வியர்த்தபடி நிற்க,
பூனையாய் உருகொண்ட இந்திரனும் – தான்
போகும்வழி தேடி போக லுற்றான்.                   152

தீப்பொறி கக்கிய விழிக ளுடன்
தீயவன் இந்திரன் மேனியெங்கும்
‘ஆயிரம் மாதர்க் குறிக ளுண்டாக’ ஏயினன்!
இயைந்தன இமைத் திடும் பொழுதினிலே!            153

அளவற்ற பழியுடன், நாணமுடன் அவன்
புறப்பட்டு போய் விட்ட பிற்பாடு
‘விலைமகள் ஆனவள் நீ அதனாலே
கருங்கல் ஆயிடக் கடவ தெ’ன்றான்.                 154

‘பொறுப்பீர்! பொறுத் தெம்மை ஆட்கொள்வீர்!
இதற்கொரு முடிவினை உடன் அருள்வீர்!
சிறியோர் புரியும் பிழைதனை பொறுத்தல்
பெரியோர் கடனென உணர்வீர்!’ என்ன               155

‘தசரத ராமனின் திருவடி துகள்பட
தகர்ந்திடும் உந்தன் கல்லுரு என்றும்,
வருத்தமுடன் மனம் திருந்திய இந்திரனின்
குறிகளும் யிரம் விழிகளாகும்’ என்றார்.            156

‘மழைவண்ணம் கொண்ட பெருமானே! – அன்று
மைவண்ணத் தாடகை வதைக்கையில் உந்தன்
கைவண்ணம் சிறக்க கண்டிட்டேன்! – இன்று
கால்வண்ணம் கண்டு களிப்புற்றேன்.’ குருசொன்னார். 157

தீது அகன்ற அகலிகைப்பெண்ணிடம் ஸ்ரீராமன்
‘கௌதம முனி தாள் பற்றிடுவீரே!
வந்த பழியிது தள்ளிடுவீரே!’ என்ன
தொழுது எழுந்து போயினள் அகலிகை.               158

அருந்தவ கௌதம முனியிடம் சென்று,
‘உருபெற்ற அகலிகை ஏற்பீர்!’ என்ற
அஞ்சன வண்ணனின் கோரிக்கையை – முனி
நெஞ்சம் நிறைந்திட ஏற்றுக் கொண்டார்.              159

(மேலும் வளரும்)