பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 9, 2014

7. இயற்கையில் ஆனந்தம்!

                                                                “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                              7. இயற்கையில் ஆனந்தம்!

பாரதியார் "சுதேசமித்திரன்" உதவியாசிரியராயிருந்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னை ஜார்ஜ் டவுன், எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்தது. திருவல்லிக்கேனியிலிருந்து பட்டணம் போய் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண்டிக்குமாக அவரது மனைவியார் நம் பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருகோடிக்கு வருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி வீணாகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நடையைக் கட்டிவிடுவார். திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே ஆபீஸ் போவார்; சிற்றுண்டு யருந்தும் பொழுது யாராவது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத்தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார்; இல்லாவிடில் பட்டினிதான்!

மாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் வீழுங்காட்சியைக் காண்பதென்றால் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ்வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமனமாகும் காட்சியை அவர் கவனித்துக் கொண்டேயிருப்பார்; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டுவிடுவார். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத்தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தூரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார்.

பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரியம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களையெல்லாம் தொடுத்து ஒரு மாலையாகக் கழுத்திலே போட்டுக் கொள்வதில் அவருக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசை.

                                                         மனை மாண்பு.
                                           "காக்கை குருவி எங்கள் ஜாதி"

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண்டிக்காக கொடுக்கும் காசைக் கண்டபடி செலவழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனைவிக்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும் வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக் கொண்டு காத்திருப்பார். பாரதியார் வீடு வந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டு வந்து கொடுப்பார். 'ஏதடா! நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே! இதை அப்படியே தின்றுவிடுவோம்' என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார்; பூனைக்குக் கொஞ்சம்; காக்காய்க்குக் கொஞ்சம் போக மீதியைத் தின்பார். என்ன மனுஷர்!

                                                           தேம்பி அழுதார்.

"இன்றைக்கு எங்கள் வீட்டில் ஸொஜ்ஜி பண்ணியிருக்கிறாள். நீயும் வா! நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். "தம்பீ! நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேந்துமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். "அதனால் என்ன? பாதகமில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னொரு நாள் தின்றால் போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்" என்று நண்பர் தேறுதல் கூறினார்.

இருந்தாலும் பாரதியார் மேலும் மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடிய பொழுது 'ஸொஜ்ஜி' கிண்ணம் கிடைத்தது. உடனே சிறு குழந்தையைப் போலே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் தாண்டவமாடிற்று.

பாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடையவர். குழந்தை போன்ற மனம் உடையவர்.
                                                                                                  (தொடரும்)
                                                                     

No comments: