பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 8, 2014

3. பிழைத்த தென்னந்தோப்பு

                                                             “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.                     

                                              3. பிழைத்த தென்னந்தோப்பு


                                              "வறியவ னுடைமை - அதனை
                                                வாயு பொடிக்க வில்லை."

ஊருக்கு வெளியே ஒரு சிறு தென்னந்தோப்பு. அத்தோப்பின் நடுவிலே ஒரு மடு. பாரதியார் தம் மனைவி மக்களுடன் அடிக்கடி அந்தத் தோப்புக்குச் செல்வார். காலையிலே எழுந்திருந்து பாரதியார் தோப்புக்குப் போய்விடுவார். சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு அவர் மனைவியாரும் குழந்தைகளுடன் அந்தத் தோப்புக்குப் போவார். காலையிலே சென்ற பாரதியார் பதினொரு மணிவரை அந்த மடுக்கரையில் உட்கார்ந்து ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். பதினொரு மணியானதும், எழுதுவதை நிறுத்திவிட்டு அந்த மடுவிலே இறங்கி நீராடுவார்; சூரியனைப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரம் இடுப்பளவு ஜலத்தில் நின்றுகொண்டு வேத மந்திரங்களை ஜெபிப்பார். ஸ்நானம் முடிந்தபின் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் இளைப்பாறுவார்; மறுபடியும் ஏதாவது எழுதுவார். சாயங்காலம் எல்லாருமாகத் திரும்பி வீடு சேர்வர். அந்தத் தோப்பு முத்தியாலுப்பேட்டை வெல்லச்சு செட்டியார் என்ற கிருஷ்ணசாமி செட்டியாருடையது.

பாரதியார் உல்லாசமாகக் காலங் கழிக்கவேண்டு மென்பதற்காகச் செட்டியார் அந்தத் தோப்பைப் பாரதியார் உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்தார். பாரதியார் குயில்பாட்டுப் பாடியதும் இந்தத் தோப்பில்தான். நிற்க

புயல் அடித்த மறுநாள் காலை பாரதியார் தமது தோப்பினைப் பார்க்கச் சென்றார். போய்ப் பார்த்தால் பக்கத்துத் தோப்புகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. ஏராளமான சேதம். ஆனால் பாரதியாரின் தோப்பிலோ ஒரு மரங்கூட முறிந்து விழவில்லை. அதைக் கண்டவுடனே பாரதியாருக்கு ஆனந்தம் பொங்கியது. ஏழையாகிய பாரதியாருக்கு எவ்வித நஷ்டமும் அளிக்கக் கூடாதென்றே கடவுள் அந்தத் தோப்பில் சேதம் விளைக்கவில்லை யென்று நினைத்தார்.

உடனே கடவுளின் கருணையை வியந்து "பிழைத்த தென்னந்தோப்பு" என்ற தலைப்புள்ள பாட்டைப் பாடினார்.

பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!

சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ நுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை.

வீழ்ந்தன சிலவாம் - மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே - அதனை
வாயு பொறுத்து விட்டான்.

தனிமை கண்டதுண்டு - அதிலே
ஸார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம்
பாகு மதுரமன்றோ?

இரவி நின்றது காண் - விண்ணிலே
இன்ப வொளித் திரளாய்
பரவி யங்கணுமே - கதிர்கள்
பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே - சிறிதோர்
நிழலினி லிருந்தேன்
என்றுங் கவிதையிலே - நிலையாம்
இன்ப மறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தீ - நினையே
வாழ்த்திடுவார் வாழ்வார்
வாழ்க பராசக்தீ - இதையென்
வாக்கு மறவாதே.




No comments: