பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 11, 2014

8. தோழமை

                                             “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                        8. தோழமை


    "தோழனுடன் சம்பாஷிப்பதைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை" - சுகிர்லாபம்.

பாரதியாருக்கு நண்பர்களிடத்திலே அபாரமான பிரியம். ஒரு சமயத்திலே தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர் பிரசங்கமொன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். அது சரியான வெயில் காலம். பிரசங்கம் ஐந்து மணிக்கு ஆரம்பம்.

பாரதியார் என்ன செய்தார்! நடு வெயிலில் ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு பகல் சுமார் ஒரு மணிக்குத் தம் நண்பர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

"என்ன! இந்த வெயிலில் புறப்பட்டு வந்தீர்கள்?" என்று விசாரித்தார் நண்பர்.

"தம்பீ! நீ பஞ்சதந்திரக் கதை வாசித்திருக்கிறாயா? 'மித்திரனைவிடச் சிறந்தவன் வேறில்லை; மித்திரனுடன் அளவளாவுவதே இன்பம்' என்று அதிலே சொல்லப்பட்டிருக்கிறதே! தெரியுமா? நீ நல்ல பிள்ளை, அதனால்தான் வந்தேன்" என்றார் பாரதியார்.

பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பாரதி பட்டம் பெற்றது.

எட்டயபுரம் ஜோதிஷ வித்துவான் ஸ்ரீமான் குருகுஹதாஸப் பிள்ளை அவர்கள் வீட்டில்தான் பாரதியார் அடிக்கடி சல்லாபம் செய்து கொண்டிருப்பார். 1896-ம் வருஷத்திலே அவர் திருநெல்வேலி ஸென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தேறவில்லை. அவ்வருஷம் இறுதியிலே, அதாவது 1896ம் வருஷம் நவம்பர் மாதக் கடைசியிலே ஒரு நாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளையவர்கள் வீட்டிலிருந்தார். அப்பொழுது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கே யிருந்தார். அவர், நம் பாரதியார் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய்தார்.

"என்ன! வாய்ப் பேச்சுதான்! பரீக்ஷை தேற முடியவில்லையே" என்றார் அவர்.

"பரீக்ஷை தேறிப்பட்டம் பெறுவதற்காக நான் படிக்கவில்லையே!" என்று பாரதியார் பதில் கூறினார். அந்த வகையிலே நடந்த விவாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக்குச் சவால் விடுத்தார். உடனே அன்றைய மாலையே பொதுக் கூட்டத்தில் "கல்வியின் திறன்" என்பது பற்றிப் பேசப் போவதாக பாரதியார் கூறிச் சென்றார். குறித்த நேரத்தில் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பதினாலு வயது சென்ற நம் பாரதியார் கேட்போர் வியக்கத்தக்க விதமாகப் பேசினார். அன்றைய தினம் தான் குருகுஹதாஸப் பிள்ளை வீட்டில் விருதை சிவஞான யோகியாரால் "பாரதி" என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

                                                                   உலாமடல்

சுமார் 250 வருஷங்களுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக, கடிகை முத்துப் புலவர் என்று ஒருவர் இருந்தார். பெத்தண்ண தளவாய், உமறு புலவர், ஆகியவர்கள் அவரது சிஷ்யர்கள். பெத்தண்ண தளவாய் எட்டயபுரத்தவர் மீது ஓர் "உலாமடல்" பாடியிருக்கிறார். அந்த உலா மடல் மிக்க சொல் நயம் பொருள் நயம் சிறந்து விளங்குவது; அந்த மாதிரி யாராலும் பாடமுடியாது என்று புகழப்படுவது. இவ்வாறு பலரும் அந்த உலாமடலைப் புகழக் கேட்ட பாரதியார் சுமார் 200 வரிகள் அதே மாதிரி ஓர் அழகான "உலாமடல்" பாடினார். பாடி, அதைச் சபையோர்முன் படித்துக் காண்பித்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. ஆனால் சில புலவர்கள் பொறாமை மிகுதியினாலே ராஜ சபையில் புகுத்த மனமில்லாதிருந்தது கண்டு பாரதியாருக்குக் கோபம் வந்தது. அவர்கள் முன்னிலையிலேயே அதைக் கிழித்தெறிந்து போட்டு வந்தார்.

                                                                                     (தொடரும்)



No comments: