பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 9, 2014

6. தனி யொருவனுக்கு உணவிலை

                                                                 “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                           6.. பாரத ஸமுதாயம் வாழ்கவே!


                                                        "தனி யொருவனுக்கு உணவிலை யெனின்
                                                          ஜகத்தினை அழித்திடுவோம்"


ஸ்வர்க்கவாசி ஸ்ரீயுத வ.வெ.சு.ஐயர் தலைமையில் சென்னை கடற்கரையில் ஒத்துழையாமைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பாடுமாறு ஸ்ரீயுத ஐயர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது பாரதியார் "பாரத ஸமுதாயம் வாழ்கவே" என்ற பாட்டைப் பாடினார்; அதன்பின் "அல்லா! அல்லா!" என்ற பாட்டுப் பாடினார். பாட்டைக் கேட்ட மக்கள் பரவசமானார்கள். அந்த நாளையிலே மின்சார விளக்குகள் கிடையாது. கியாஸ் லைட் உண்டு. கியாஸ் லைட் கண்டிராக்டரான முஸ்லிம் ஒருவருக்குப் பாரஹியாரின் அல்லாப் பாட்டைக் கேட்டதும் அளவற்ற ஆனந்தம் பொங்கிவிட்டது. உடனே அவர் ஓடிப்போய் சோடா வாங்கி வந்து பாரதியாருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து விசிறிக்கொண்டு பாரதியாரின் ஆசுவாஸத்தைத் தணித்தார். அதுவே கடைசி முறையாகப் பாரதியார் பொதுக் கூட்டத்திலே தலைகாட்டியதாகும். அதன்பின் அவரது காலம் அருகி விட்டது.

                                                         ஸம்ஸார ஸாகரம்.

"ஸம்ஸாரம் என்கிற இந்த மரம் விஷ வித்திலிருந்து முளைக்கிறது. பல வகையான கர்மங்களும் இம்மரத்தின் பல்வேறு கிளைகள்; எண்ணங்கள் இலைகள்; காமமே மலர். இந்த மாதிரியான துயர்க்கடலில் பாபியாகிய யான் தவிக்கிறேன்." - சங்கர பகவத்பாதர்.

தாம் ஓர் இராணுவ வீரர் என்ற எண்ணம் பாரதியாருக்கு எப்பொழுதுமே உண்டு. சட்டையின் புஜம் இரண்டிலும் இரண்டு பெரிய 'சேப்டி பின்' குத்திக் கொண்டிருப்பார். மார்புப் பக்கத்திலே சட்டையில் ஒரு பெரிய பின் குத்திக் கொள்வார். இந்த மாதிரி அலங்காரம் செய்து கொள்வதிலே அவருக்கு ஆனந்தம்.

ஒரு நாள் ஆபீஸ் இல்லை. காலை நேரம். பாரதியார் வீட்டிலேயிருந்தார். அப்பொழுது அவர் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்தார். அன்று அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். நண்பரும் பாரதியாரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவியார் வந்தார்; "இந்த மாதிரி வீணாகச் சட்டையிலே 'பின்'னைக் குத்தித் துணியை வீணாக்கலாமா? எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறீர்களே" என்று சொல்லிக் கொண்டு வந்து பின்னை எறிந்து விட்டுப் போனார்.

உடனே பாரதியாரின் முகம் சுண்டிப்போயிற்று. 'ஏதடா! மூன்றாவது மனுஷர் எதிரிலே நமது மனைவி நம்மை இகழ்கிறாளே' என்ற எண்ணமோ தெரியவில்லை. தம் குழந்தையான பாப்பாவைக் கூப்பிட்டார். "பாப்பா! (சகுந்தலா) பாப்பா! அம்மாகிட்ட போயி சட்டையைத் துவைக்க வேண்டாமென்று சொல்லு' என்று உத்தரவு போட்டார்; அப்படியும் அவர் மனம் நிம்மதி யடையவில்லை; "தம்பீ! சிறிது நேரம் இங்கேயே
உட்கார்ந்திரு. இதோ வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குள் போனார்; போய், சிறு குழந்தை மாதிரி 'விம்மி விம்மி' அழுதார்; அரைமணி நேரம் அந்த மாதிரி அழுத பின்பு கண்ணைத் துடைத்துக் கொண்டு நண்பர் இருக்குமிடத்துக்கு வந்தார். "தம்பீ! ஸம்ஸாரம் பண்ணுவதென்றால் ஸாமானியமா? எவ்வளவோ கஷ்டம்" என்று கூறினார். கவிஞர் மனம் எவ்வளவு இளகியது என்பதை இதிலிருந்து அறியலாம்.

                                                                 (தொடரும்)


No comments: