பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 8, 2014

4. சிறுமை சீறிய வீரன்

                                                               “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                                      4. சிறுமை சீறிய வீரன்


                                   "சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா"

"வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்" என்ற தலைப்பிட்டு ஒரு கவி யியற்றியிருக்கிறார் பாரதியார். அதிலே "சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா" என்பது ஓர் அடி. அந்தச் சிறுமை கண்டு சினங்கொண்டு பொங்கி யெழுந்து கோபிக்கும் குணம் பாரதியாரிடம் அமைந்திருந்தது.

"ஹோம்ரூல்" கிளர்ச்சி நடந்த காலத்திலே திலகரது சிஷ்யர்கள் ஒரு சமயம் அன்னை வசந்தையார் என்று சொல்லப்படும் அன்னிபெஸண்டைக் கண்டிப்பதுண்டு. அந்த மாதிரியான கண்டனக் கூட்டம் ஒன்று சென்னை கடற்கரையிலே நிகழ்ந்தது. அக்கூட்டத்திலே பாரதியார் பேசினார்; பேசும் பொழுது அன்னை பெஸண்டை 'அவள்' என்று குறிப்பிட்டார். அது அன்னிபெஸண்ட் பக்தர் சிலருக்குச் 'சுருக்'கென்று பட்டது போலிருக்கிறது! 'அவள்' என்று குறிப்பிடக் கூடாது; 'அவர்' என்று சொல்லவேண்டும் என்று அவர்கள் ஆக்ஷேபித்தார்கள். 'அவள்' என்பது மரியாதைக் குறைவான பாஷையென்பது அவர்களது எண்ணம்.

உடனே பாரதியாருக்குக் கொPஅம் வந்துவிட்டது. தம்மை யாரோ அவமரியாதை செய்வதாக அவர் கருதிவிட்டார்; தமக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்தே அவர்கள் அப்படிச் சொன்னதாக எடுத்துக் கொண்டார். உடனே அவருக்கு அடங்காத கோபம் வந்தது; முகம் சிவந்தது; மீசை துடித்தது. 'எனக்குத் தெரியும் தமிழ்' என்று கர்ஜித்தார் அவர்; அவ்விதம் அர்ஜித்து ஒரு குதிகுதித்துப் பிளாட்பாரத்தை மிதித்து அதிரச் செய்தார். "அன்னை பெஸண்ட்; அவள்; அவள்; அவள்" என்று கோபத்தோடு பல தடவை சொன்னார். பெண்மணிகளை 'அவள்' என்று குறிப்பது மரியாதைக் குறைவான பாஷையன்று என்பது அவரது எண்ணம். அதை யார் கண்டார்?

பக்கத்திலே யிருந்தவர்கள் எல்லாரும் பயந்து போய்விட்டார்கள். இந்தச் சம்பவம், பாரதியாரின் சுதந்திர இறுமாப்பையும் சிறுமை கண்டு பொங்கும் தன்மையையும் காட்டுகிறது.

                                                             (தொடரும்)

No comments: