பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 12, 2014

9. மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை

                                                                  “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.


                                         9.  'அன்று அங்கே; இன்று இங்கே'

படிப்பெல்லாம் முடிந்த பிறகு பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்து வந்தார். அப்படியிருக்கும் நாளில் அவருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ்தாபம் நிகழ்ந்தது. அதனாலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருந்தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார்.

"இது என்ன இப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதே!" என்று ஒருவர் கேட்டார்.

உடனே பாரதியார் சொன்னார்: "அன்று இராவணன் ஒரு கவியை (குரங்கை) இம்சித்தான். அதன் பயனாக அங்கே (இலங்கையில்) தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஒரு கவியை (தன்னை) இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது."

சுண்டைக்காய் பூமி
மன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினார் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா? எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் "மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்" என்ற இறுமாப்புக் கொண்டவரன்றோ நம் பாரதியார்?

"எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிறதென்று சொல்" என்று கூறி பாரதியா சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.

கருங்குரங்கு கட்டவிழப் பெற்றது

இப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரராயிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பிள்ளை அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரராயிருக்கும் காலத்தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கியிருந்தார். அது 1921ம் வருஷம். ஸ்ரீ பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றிவிட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்குய் ஏதோ தாம் உபதேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஓதினார்; பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார்:

"ஐயா! இப்பொழுது நம்மிடையே பேசப்படுகிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனாதி திராவிடனைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்த்தீர்களானால் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவாயிருப்பான்" என்றார். உடனே கட்டவிழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்னபடியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலை அடைந்த அந்தக் கருங்குரங்கு.

பெரியோர் மொழி

'இரவி யெழுந்தது முதல் எற்படுவரை
இவ்வுலகு நின் புகழ் கேட்பதாக" -- மெக்காலே.

லக்ஷமண சிங் தேவோ என்பவர் ஒரு பெயவர்; ஆரிய சமாஜி; நேபிள்ஸ், ரோம் ஆகிய பல இடங்கள் சுற்றியவர். ஆப்பிரிக்காவில் வசித்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கிருந்து புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 வரை அவர் எட்டயபுரத்தில் வசித்து வந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை 'மிஸ்டர் பார்பா' என்று கூப்பிடுவார். 'பார்பா' என்றால் தாடி என்று பொருள். அங்கே அளவளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்ததும் "இவர் இன்னும் சில காலத்திற்கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்றாது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக்கோங்கும்" என்றார் லக்ஷ்மண் சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது.

"என்னவோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்" என்றார் லக்ஷ்மண் சிங். ஆனால் பிற்காலத்திலேதான் அது உண்மையாகி விட்டதே!

"ஷெல்லியின் கில்டு"

ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.

1902ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு "ஷெல்லியின் கில்டு" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் "இந்தியா" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம் ஸ்ரீமான் பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர். இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.

அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார்.

மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை

எட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனாலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பணித ஊழியம் புரிந்தார். அது 1904ம் வருஷத்திய நிகழ்ச்சி.

அப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு "மூடசிகாமணிகள் நக்ஷத்திர மாலை" என்று பெயர். நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா? அதே மாதிரி இருபத்தேழு விருத்தப் பாக்களாலே அந்நூலை யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார்.

மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப் பிராமணர்; வேதாந்தி. அத நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை 'பேரையூர் பங்களா'வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். "நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும். ஆனதினாலே இதைக் கிழித்தெறி" என்று பாரதியாரிடம் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.

                                                              (தொடரும்)

No comments: