பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 8, 2014

2. புயல்

                                                              “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.                    

                                                                        2. புயல்


                              "வீட்டுக் குலதெய்வம் வீரம்மை காக்குமடா"
புதுச்சேரியில் ஈசுவரன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தார் பாரதியார். அதன் பிறகு அதே தெருவிலுள்ள இன்னொரு வீட்டுக்கு ஜாகை மாறினார். புது வீட்டுக்குக் குடிபோன மறுநாள் பிரமாதமான புயல் அடித்தது. இரவு நேரம். அதாவது நள வருஷம் கார்த்திகை மாதம் எட்டாம் தேதி இரவு. கோரமான புயல். புயல் காற்று அடித்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டது. ஜன்னலின் கீழே பாரதியாரின் குழந்தைகள் படுத்திருக்கின்றன. உடைந்த ஜன்னல் வழியாகத் தூற்றலும் காற்றும் சீறியடிக்கின்றன.

அப்பொழுது பாரதியாரின் பத்தினியாகிய செல்லம்மாள் அவரை எழுப்பி விஷயத்தைத் தெரிவித்தார். அப்போழுது ஒரு ரஸமான கீதம் பாடினார் பாரதியார். அது வருமாறு:-

மனைவி:-- "காற்றடிக்குது கடல் குமுறுது
                         கண்ணை விழிப்பாய் நாயகனே
                        தூற்றல் கதவு சாளர மெல்லாந்
                        தொளைத் தடிக்குது பள்ளியிலே

கணவன்:-- வானஞ் சினந்தது; வைய நடுங்குது
                       வாழி பராசக்தி காத்திடவே
                       தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்குத்
                      தேவியருள் செய்ய வேண்டுகின்றோம்.

இந்தப் பாட்டினாலே கவிஞர் தேவியை ஸ்தோத்திரம் செய்தார்; மறுநாள் கலையிலே எழுந்து வாசலிலே போனார். நேற்றுவரை அவர் குடியிருந்த வீடானது, அன்றிரவு அடித்த புயலிலே வீழ்ந்து நாசமாய் விட்டது. உடனே பாரதியார் பாடினார்.

மனைவி:-- "நேற்றிருந்தோ மந்த வீட்டினிலே இந்த
                        நேரமிருந்தால் என்படுவோம்?
                        காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
                        காத்தது தெய்வ வலிமையன்றோ?"

இந்த விதமாகப் பாரதியாரும் அவரது குடும்பத்தாரும் தேவியின் கருணையைச் சிந்தித்து இருந்தனர். பொழுதும் விடிந்தது. கீழ்க் கடலிலிருந்து கதிரவன் எட்டிப் பார்த்தான். நேற்று இரவு புயலால் நிகழ்ந்த சேதத்தைப் பார்ப்பதற்கோ?

                                                                                                  (தொடரும்)


No comments: