பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (33)

33. இனியவை முப்பத்திமூன்று 

அந்த இளைஞன் மிகவும் சுறுசுறுப்பானவன். அந்த கிராமத்தில் எந்த பொது வேலையென்றாலும் முன்னின்று செய்யக் கூடியவன். ஓடியாடி அவன் சோம்பலின்றி செயலாற்றும் திறமையை அனைவருமே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவனிடம் ஒரு குறையும் உண்டு. தேவையில்லாத சில கொண்டாட்டங்களை இவன் முன்னின்று நடத்தத் தொடங்குவான். ஏதோ யாரோ ஒரு நடிகரின் பெயரால் ஒரு மன்றத்தை வைத்துக் கொண்டு அவருக்குப் பிறந்த நாள் என்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த கிராமத்தில் கொண்டாடுவான். அந்த நபரின் படத்தைப் பெரிதாகப் போட்ட பேனர்களைக் கட்டுவான். ஊரில் வசூலில் இறங்கிவிடுவான். இவன் நல்லவன் என்பதால் இவன் கேட்கிறானே என்று விரும்பாவிட்டாலும் ஒழியட்டும் என்று ஏதாவது ஒரு தொகையை இவனுக்குக் கொடுப்பார்கள். ஆனால் இவன் நடத்தும் இந்தத் தேவையில்லாத விழாவை மக்கள் விரும்பவில்லை. வேறொரு நல்ல காரியத்துக்கு இவன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டார்கள். பேனர் வைத்து, வாழைமரங்கள், தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை ஒலிபரப்பி இவன் செய்யும் அட்டகாசம் சகிக்கவில்லை. இதை சிலர் அவனிடம் சுட்டிக் காட்டி நல்லவனான நீ ஏன் இப்படி வீணான காரியங்களில் உன் சக்தியைச் செலவிடுகிறாய் என்று சொன்னபிறகு தன் தவற்றைத் திருத்திக் கொண்டு நல்வழிப்பட்டான் அந்த இளைஞன். ஊரில் உள்ளவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்ட அவனது மன எழுச்சி இனிமையுடையது.

மனிதனின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கெடுப்பது சோம்பல். இது குழந்தைப் பருவத்திலிருந்தே உடம்போடு தங்கி விடுகிறது. அந்த சோம்பல் எனும் பேயை உடலைவிட்டு விரட்டினால் மட்டுமே ஒருவன் முன்னேற முடியும். முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் ஒரு பாடல் இருக்கும். அந்தப் பாடல் சோம்பலால் செய்ய வேண்டிய காரியங்களைத் தள்ளிப் போடாதே என்பதை வலியுறுத்தும் பாடல். அது:- "நாளை நாளை என்னாதே! நாளை வீணில் போக்காதே! நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே முடிப்பாயே!" என்று இருக்கும். இப்படி காரியத்தைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் சோம்பல் அல்லவா? ஒரு இளைஞனுக்கு காலையில் தூக்கம் விழித்துப் படுக்கையை விட்டு எழுவது என்பதே பிரம்மப் பிரயத்தனம். அதாவது முடியாத காரியம். அப்படி அவன் எழுந்து விட்டாலும் ஆதவன் உச்சிக்குச் சென்றிருப்பான். அத்தனை நேரம் தூக்கம். இந்தக் கெட்டப் பழக்கம் அவனுக்குப் பல துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. பலமுறை வேலைக்கு இவனுக்கு நேர்காணலுக்கு அருகில் பத்து மைல் தூரத்தில் உள்ள நகரத்துக்கு வரச் சொல்லியிருப்பார்கள். இவன் தூங்கி எழும்போதே அந்த நேரம் முடிந்திருக்கும். இதைக் கண்டு அவனுக்கு வேண்டியவர்கள் உன்னைக் கெடுப்பது இந்த சோம்பல்தான் இதை உதறினாலொழிய நீ முன்னேற முடியாது என்று எடுத்துரைத்தார்கள். அதையடுத்து அவன் இரவு படுக்கப் போகும் முன்பே நாளை காலை சரியாக ஆறு மணிக்குள் எழுந்துவிடுவேன் என்று மனதிற்குள் பலமுறை சொல்லிக் கொண்டு படுப்பான். அன்றே அது முடியாவிட்டாலும் மன உறுதியினால் சிறுகச் சிறுக அவனால் அப்படி எழுந்திருக்க முடிந்தது. காரியங்களைச் சோம்பலின்றி முடிக்க முடிந்தது. தன் மன உறுதி காரணமாக அவன் படிப்படியாக முன்னேறி நல்ல பதவியை அடைகிறான், இது இனிமையானது இல்லையா?

ஒரு சிற்றரசன். அவன் நாட்டுக்கும் அண்டை நாட்டுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் ஒவ்வொரு முறை போர் நடக்கும் போதும் இவனது நாட்டுக் குடிமக்கள் போரில் அதிகம் மடிந்து போவார்கள். இதனால் இவன் நாட்டில் போர் என்றால் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த மன்னனுக்கு மட்டும் ஏன் எதிரிகள் அதிகம் இருக்கிறார்கள். இவன் தன்னுடைய போக்கை, அயலாருடனான உறவை மேம்படுத்திக் கொண்டால் போரைத் தவிர்க்கலாமே, இவன் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்று மன்னனிடமே போய் முறையிட்டார்கள். மன்னனும் தன் தவற்றை உணர்ந்து அண்டை அயல் நாட்டாருடன் நட்புடன் இருக்கப் பழகி போரைத் தடுத்து வந்தான். இப்படி உயிரிழப்பை தவிர்க்கும் நிலைமை இனிமையானது தானே!

"ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே
வாள் மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது."

பொருள்: ஊரார் வெறுக்கும் காரியத்தைத் தவிர்த்துவிடுதல் இனிமை; சோம்பரை நீக்கி சுயமுயற்சியால் தன்னை ஆளும் திறம் இனிமை; உயிர்ப்பலி கொள்ளும் போரைத் தவிர்க்கும் மன்னனின் செயல் இனிது.

No comments: