பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 23, 2015

பழ.கருப்பையாவின் "தினமணி" இதழின் நடுப்பக்க கட்டுரை

For ready reference, the article is given below for spot reading.

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

First Published : 23 September 2015 01:33 AM IST
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
 "தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
 முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
 அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
 தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
 அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
 சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
 தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
 1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
 ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
 ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
 தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
 அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
 கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
 கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
 அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
 ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
 வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
 வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
 காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
 வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
 ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
 இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
 ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
 அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
 அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
 வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
 காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
 ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
 பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
 சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
 "எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
 "தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
 ""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
 அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
 பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
 தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
 "சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
 பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
 வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
 ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
 காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
 இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
 காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
 நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
 எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
 காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
 1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
 காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
 ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
 சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
 1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
 1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
 காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
 இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
 செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
 பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
 பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
 காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
 பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
 அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
 அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான *காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!

 கட்டுரையாளர்:
 சட்டப்பேரவை உறுப்பினர்.


 Our note:--  பெருந்தலைவர் காமராஜரை "திராவிட இயக்கத்தின் குழந்தை" என்றால் அவரேகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்; இவர் ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறார்.
Our Comments.

இன்றைய (23-9-2015) "தினமணி" இதழின் நடுப்பக்க கட்டுரையைப் படித்தேன். இதை எழுதியவர் பழ.கருப்பையா என்பதால் அவர் மீதிருந்த மரியாதை யின் காரணமாக முழுவதும் படித்தேன். படித்தபின் இது "தினமணி"தானா அல்லது "விடுதலை" பத்திரிகையா என்ற சந்தேகம் எழுந்தது. கட்டுரையாசிரியரின் முந்தைய கட்டுரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அவர் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அப்போதெல்லாம் இல்லாத ஒரு ஜாதி வெறி இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென்று யோசித்ததில் சில பதில்கள் கிடைத்தன.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெருந்தலைவர் காமராஜ் ஏக காலத்தில் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் மீது வெறுப்பை உண்டாக்கி அவரை ஒரு பிராமண எதிரி என்பது போல படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார் செட்டியார். பெருந் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் பலரும் ஆர்.வெங்கட்டராமன் போன்ற பலரும் செட்டியார் மொழியில் "பார்ப்பனர்"களே. இவர் எந்தக் காலத்திலும் தன்னையொரு பிராமண எதிரியாகக் காட்டிக் கொண்டதுமில்லை, நடந்து கொண்டதுமில்லை. இவரது ஆசான் தீரர் சத்தியமூர்த்தியும் ஒரு பிராமணரே. பெருந்தலைவர் முதல்வராக பதவி யேற்றுக் கொள்ளச் செல்லுமுன் அவர் மகள் இல்லம் சென்று சத்தியமூர்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டுத் தான் சென்றார் என்பதை இவர் அறிவாரா?

செட்டியார் இனத்தைச் சேர்ந்த தேசபக்தர் தேவகோட்டை சின்ன அண்ணாமலை திருவாடனை சிறையில் அடைக்கப்பட்ட போது 1942இல் அங்கு சிறை உடைக்கப்பட்டு கலவரம் நிகழ்ந்தது. அப்போது அங்கு துணை காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார், சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையில் காவல்துறை கமிஷணராக இருந்தார். அப்போது பெருந்தலைவர்தான் முதல்வர். திருவாடனையில் ஐயங்கார் காங்கிரஸ்காரர்களை மிருகத்தனமாக அடித்து துவைத்திருந்தார். அந்த வன்மத்தை போலீஸ்காரர் என்பதற்காகவே, அவர் பிராமணர் என்பதற்காகவோ அவரிடம் தலைவர் எந்த வெறுப்பும் வைத்துக் கொள்ளவில்லை. ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதையேற்ற பின் சென்னைக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பெருந்தலைவர் விமான நிலையம் வந்தார். அவரை உள்ளே விட இதே பார்த்தசாரதி ஐயங்கார் மறுத்துவிட்ட நிலையில் அவர் வெளியிலேயே நின்று கொண்டார், அப்போதும் ஐயங்காரின் பதவிக்கு வேட்டு வைக்க முயற்சி செய்யவில்லை தலைவர். இதெல்லாம் செட்டியாருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.

இவருக்கு பெருந்தலைவர் காமராஜரை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்கிற எண்ணத்தைவிட, ஒரு ஜாதியாரை முடிந்தவரை இழிவாகப் பேசவேண்டும், அவர்களது கடந்த கால செயல்பாடுகளைத் தூற்ற வேண்டுமென்பதுதான் ஒரே நோக்கம் என்பது தெளிவாகிறது. இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் இந்த கொலைவெறி என்று எண்ணும்போதுதான் ஒரு உண்மை புலனாயிற்று. அது, இவர் சார்ந்திருக்கும் கட்சியில் தொடக்கத்தில் செல்வாக்கோடுதான் இருந்தார். துறைமுகம் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார். சபாநாயகராக ஆவார் என்றுகூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் இவர் ஓரம் கட்டப்பட்டார். சட்டமன்றத்தில் முதல் வரிசையில் இருந்தவர் பின்னால் ஒதுக்குப்புறமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து வருந்தியவர்கள் உண்டு, நானும்கூட. இவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், காலம் மாறும், தன்னுடைய நிலைமையில் மாற்றம் வரும் என்று, ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. தலைமையை எதிர்த்து நேரடியாகப் பேச தைரியம் இல்லை என்பதாலோ என்னவோ, மறைமுகமாக அவர் பிறந்த ஜாதியைச் சாடினால், அது அவருக்கு வலிக்காமலா போய்விடும் என்ற நோக்கில் இதை எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியில்லாவிட்டால், தலைவியை இவர் "செயலலிதா" என்று எழுதுவாரா. இதுவரை ஜெயலலிதா என்றுதானே சொல்லி வந்தார். இப்போது ஏன் இவர் இப்படி பச்சைத் தமிழராக ஆனார் என்பதுதான் மர்மம்.

அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு இதே "தினமணி"யில் விஜயகாந்த் கட்சியிலிருந்து வெளியேறி அ.தி.மு.க. ஆதரவாளர்களாக இருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவர் எங்களையும் சேர்த்துக் கொள்வது எப்போது என்று கேட்டுவிட்டார் என்பதற்காக, இவர்களைப் போன்று ஒரு கட்சியிலிருந்து ஓடிவந்தவர்களைச் சேர்த்துக் கொள்வது கூடாது என்பது போல கட்டுரை எழுதியிருந்தார். இது என்ன தன் கட்சிக்கே "சுய கோல்" போடுகிறாரே என்று நினைத்தோம்.

இன்னொன்று ராஜாஜியை எல்லோரும் ராஜாஜி என்றுதான் எழுதுகிறார்கள். இந்தப் பச்சைத் தமிழனுக்கு மட்டும் அவர் ராசாசி. முன்பெல்லாம் "முரசொலி"யில் ராஜாஜியை இப்படித்தான் எழுதி வந்தார்கள். ராஜாஜி ஒரு அஞ்சல் அட்டையில் ஆசிரியருக்கு ஒரு வரியில் கடிதம் எழுதினார். "உங்கள் கட்சியில் இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரனை எம்.சி.ஆர் என்று எழுதினால் என் பெயரையும் ராசாசி என்றே எழுதலாம்" என்று. அதுமுதல் "முரசொலி"யும் அவரை ராஜாஜி என்றே எழுதத் தொடங்கியதாம்.

போகட்டும் சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் மிதவாதிகள் கையில் இருந்தது என்பது வாஸ்தவம்தான். இவர் சொல்லும் சிலர் ஆங்கிலேயர் சார்புடையவர்களாக இருந்தபோதும் பெரும்பாலான பிராமண இனத்தவர் (இவர் மொழியில் பார்ப்பனர்) சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்கள்தான். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஜாதியால் மேல் கீழ் என்பது இருக்கும் என்பது தெரிந்துதான் பெரியார் வெள்ளையனுக்கு சார்புநிலை எடுத்தாராம். அவரே சொல்லாத புதிய கருத்து நம் செட்டியாருக்குத் தோன்றியதுதான் ஆச்சரியம். 

ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை நாளை துக்க நாள் என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு வந்ததும் இந்த அச்சம் தானாம். என்னே கண்டுபிடிப்பு. ஒரு முறை வாரணாசியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் சென்றனர். அவர்களில் மேற்படி நாயக்கரும் ஒருவர். காசியில் ஒரு பிராமண சத்திரத்தில் உடன் வந்த காங்கிரஸ் மிதவாத தலைவர்கள் சாப்பிடப்போய்விட்டார்களாம். அப்போதைய சமூக சூழ்நிலையில் அவரவர் சத்திரங்களில் அந்தந்த ஜாதியாருக்கு உணவு தரப்படுவது வழக்கமாக இருந்தது. தன்னைப் பசியில் வாடவிட்டுவிட்டு இந்த "பார்ப்பனர்கள்" தங்கள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கப் போய்விட்டார்கள் என்ற கோபம் தான் அவரை பிராமண எதிர்ப்பில் கொண்டு விட்டுவிட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். செட்டியாருக்குத் தெரியுமோ இல்லையோ தெரியவில்லை.

இவர் சார்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நாடு முழுவதும் புண்ணியத் தலங்களில் தர்ம சத்திரங்கள் உண்டு. அப்படி வாரணாசி போன்ற இடங்களிலும் இருக்கிறது. ஒரு முறை நான் காசியில் ஒரு ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த நான்காம் நாள் நடந்து சென்று கொண்டிருந்தேன். வழி நெடுக நகரத்தார் நிரம்பியிருந்தனர். என்னை தமிழ்நாட்டு வேட்டி சட்டையில் பார்த்த சிலர் இன்னைக்கு அன்னபூரணி கோயில் குடமுழுக்கு, நம்ம சத்திரத்துக்கு வந்துடுங்க சாப்பாட்டுக்கு என்று அழைத்தனர். இந்த செட்டியாரை ஒன்று கேட்கிறேன், என்னைக் கேட்டது போல, அந்தக் காலத்தில் இவர்கள் சத்திரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தாரை அழைத்து இவருடன் உட்கார வைத்து சாப்பாடு இவர் போட்டிருப்பாரா? செய்திருந்தால் பாராட்டுகிறேன்.

வ.வெ.சு. ஐயரின் விவகாரம் அவர் காலத்திலேயே முடிந்து போன கதை. ஐயரின் விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டு பெரியார் தன் பத்திரிகையில் விவகாரத்தை முடித்து வைத்து எழுதியது செட்டியாருக்குத் தெரியாதோ என்னவோ? இவர் எழுதுவது போல பார்ப்பனப் பிள்ளைகள் ஓரிடத்திலும், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளை வேறு இடத்திலும் வைத்து உணவளித்தார் என்பது சுத்த சுயம்பிரகாச பொய். எப்படி பெரியார் காங்கிரஸ் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து விட்டுத் திரும்ப கேட்டார் என்று எழுதுகிறாரோ அதைப் போல பல பிராமணர்களும் நன்கொடை கொடுத்தனர். அவர்களில் ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்குத் தனியாக உணவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களை மட்டும் தனியாக உட்கார வைத்து உணவளித்தாரே தவிர எல்லா பிராமணப் பிள்ளைகளையும் அப்படி உட்கார வைக்கவும் இல்லை, தான் அனைவரோடும் கூட அமர்ந்து சாப்பிட்டார் என்பது உலகறிந்த உண்மை, பாவம் இவருக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனதோ தெரியவில்லை.

வ.வெ.சு.ஐயரும், வாஞ்சிநாதனும் நாட்டுப் பற்றில் குறைந்தவர்கள் அல்லர், தியாகத்தில் பின் வாங்கியவர்களும் அல்லர் என்று ஒரு சான்றிதழ் வழங்குகிறார் செட்டியார். ஆனால் 'சா'தியில் மேல், கீழ் என்று பார்ப்பவர்கள் என்ற கோணத்தில் இவர் அவர்களைத் தூற்றுகிறார். போகட்டும், அவர்கள் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த நிலைமையை இந்தச் செட்டியார் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அதனால் இப்படி எழுதுகிறார்.

சமீபத்தில் இவர் பெரியார் மாளிகையில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியதை ஒரு காங்கிரஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதிலும் இதே திராவிட பக்தி, திராவிட வாசனையோடு பேசினார். இது என்ன புது அவதாரம் என்று நினைத்த போதுதான், இவர் மோதுவது பிராமணர் (பார்ப்பனர்) மீதல்ல, இவர் சார்ந்த கட்சியின் தலைமையின் மீது என்பது புரிந்தது. அவர் வாசகத்தை மீண்டுமொரு முறை பாருங்கள் "செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறு வகையானது. அது தனி ஆய்வுக்குரியது" என்கிறார். அப்படியென்றால் இவர் என்ன சொல்ல வருகிறார். ஜெயலலிதாவும் பார்ப்பனர்தான், ஆனால் ஒரு திராவிடக் கட்சிக்குள் நுழைந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார். ஆகையால் இவர் ஒரு திராவிடக் கட்சியின் தலைவி என்பதும் தனி ஆய்வுக்குரியதுதான் என்கிறார். 

இதையெல்லாம் பார்க்கும்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மீது தாக்குதல் தொடுக்க தைரியமில்லாமல், ஊர் மீது கோபித்துக் கொண்டு, மனைவியை அடித்துத் துவைக்கும் கோழையைப் போல இவர் திடீரென்று பார்ப்பனத் தாக்குதலில் இறங்கியிருக்கிறார். இவரது சூழ்ச்சியை அ.தி.மு.க. தலைமை புரிந்து கொள்ளாமலா இருக்கும். இவருடைய அரசியல் நிலைமையைப் பார்த்து ஐயோ வென்று இரக்கப் பட்டவர்கள் கூட, இப்போதைய இவருடைய புதிய அவதாரத்தைப் பார்த்து இவரை எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

இதுபோன்ற தரக்குறைவான கட்டுரைகளை தினமணி வெளியிட்டது கண்டனத்துக் குரியது.

No comments: