பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 16, 2015

பாரதியாரின் வசன கவிதை -- 3

                                     

                                மகாகவி பாரதியாரின் வசன கவிதை          
                                                 இரண்டாம் கிளை –- புகழ்                                                                ஞாயிறு
                                                                   9
            வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னுந் தேவன்
            மணந்திருக்கிறான்.
            அவர்களுடைய கூட்டம் இனிது.
            இதனைக் காற்றுத் தேவன் கண்டான்
            காற்று வலிமை யுடையவன்.
            இவன் வான வெளியைக் கலக்க விரும்பினான்
            ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை
            இவன் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்
            வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன.
            காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
            அவன் அமைதியின்றி உழலுகிறான்.
            அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்;
            ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்;
            ஓடுகின்றான், எழுகின்றான், நிலையின்றி கலங்குகின்றான்.
            வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து
            நகை செய்கின்றன.
            காற்றுத் தேவன் வலிமை யுடையவன்
            அவன் புகழ் பெரிது; அப்புகழ் நன்று.
            ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
            அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன.
            அவை வெற்றியுடையன.
            ஞாயிறே, நீதான் ஒளித் தெய்வம்.
            நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள்.
            உங்கள் கூட்டம் மிக இனிது.
            நீவிர் வாழ்க!

                                                                        10

            ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி
            பெறுகின்றன;
            பூமி, சன்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ்,
            நெப்த்யூன், முதலிய பல நூறு வீடுகள் –
            இவை எல்லாம் நின்கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை
            செய்கின்றன.
            தீப்பந்திலிருன்து பொறிகள் வீசுவது போல,
            இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன
            வென்பர்.
            இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்
            இவை ஒளிகுன்றிப் போயின
            ஒளி யிழந்தன வல்ல; குறைந்த ஒளியுடையன;
            ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை.
            இருளென்பது குறைந்த ஒளி,
            செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றனர்.
            இவை தமது தன்தை மீது காதல் செலுத்துகின்றன.
            அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரைகடவாது சுழல்கின்றன.
            அவனுடைய சக்தி யெல்லையை என்றுங் கடந்து செல்ல மாட்டா.
            அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான்.
            அவனுடைய ஒளி முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே
            இவை உருளுகின்றன.
            அவனொளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்து வைத்துக்
            கொள்ளும்.
            ஞாயிறு மிகச் சிறந்த தேவன், அவன் கைப்பட்ட இடமெல்லாம்
            உயிருண்டாகும்.
            அவனையே மலர் விரும்புகின்றது.
            இவைகள் அவனுடைய அழகிலே யோக
            மெய்தி யிருக்கின்றன.
            அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும்.
            அவனை வான் கவ்விக் கொள்ளும்
            அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர்
            அவன் புகழைப் பாடுவோம்.
            அவன் புகழ் இனிது.

                                                                        11

            புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே,
            சக்திகளே, எல்லோரும் வருவீர்.
            ஞாயிற்றைத் துதிப்போம் வாருங்கள்.
            அவன் நமக் கெல்லாம் துணை.
            அவன் மழை தருகின்றான்,
            மழை நன்று.
            ஞாயிறு வித்தை காட்டுகிறான்,
            கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்,
            அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்,
            மழை இனிமையுறப் பெய்கின்றது,
            மழை பாடுகின்றது.
            அது பலகோடித் தந்திகளுடையதோர் இசைக்கருவி.
            வானத்திலிருன்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன.
            பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.
            வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன.
            அனைத்தும் ஒன்றாதலால்,
            வெப்பம் தவம், தண்மை யோகம்,
            வெப்பம் ஆண், தண்மை பெண்,
            வெப்பம் வலியது, தண்மை இனிது.
            ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
            நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்,
            அது வாழ்க!

                                                                        12

            நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்.
            வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே,
            அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே
            மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே
            பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே
            வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
            சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலகமென்னுங்
            புனங் காக்கச் சொல்லி வைத்துவிட்டுப் போன விளக்கே
            கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன்
            முகத்தை மூடி வைத்திருக்கும் ஒளியென்னும் திரையே,
            ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.
            மழையும் நின்மகள், மண்ணும் நின்மகள்;
            காற்றும் கடலும் கனலும் நின்மக்கள்;
            வெளி நின் காதலி;
            இடியும் மின்னலும் நினது வேடிக்கை,
            நீ தேவர்களுக்குத் தலைவன்
            நின்னைப் புகழ்கின்றோம்.
            தேவர்களெல்லாம் ஒன்றே.
            காண்பனவெல்லாம் அவருடல்
            கருதுவன அவர் உயிர்
            அவர்களுடைய தாய் அமுதம்
            அமுதமே தெய்வம், அமுதமே மெய்யொளி,
            அஃது ஆத்மா
            அதனைப் புகழ்கின்றோம்.
            அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்.
            ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.

                                                                        13

            மழை பெய்கின்றது; காற்றடிக்கின்றது; இடி குமுறுகின்றது;
            மின்னல் வெட்டுகின்றது;
            புலவர்களே! மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.
            மின்னல் ஒளித் தெய்வத்தின்
            ஒரு லீலை – ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம்.
            அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர்.
            மின்னலைத் தொழுகின்றோம்.
            அது நம்மறிவை ஒளியுறச் செய்க!
            மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன.
            மின்சக்தி இல்லாத இடமில்லை;
            எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே;
            கருங்கல்லிலே, வெண் மணலிலே, பச்சை இலையிலே
            செம்மலரிலே, நீல மேகத்திலே,
            காற்றிலே, வரையிலே – எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது.
            அதனைப் போற்றுகின்றோம்.
            நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!
            நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க!
            நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக!
            நமது பாட்டு மின்ன லுடைத்தாகுக!
            நமது வாக்கு மின்போல் அடித்திடுக!
            மின் மெலியதைக் கொல்லும்;
            வலியதிலே வலிமை சேர்க்கும்;
            அது நம் வலிமையை வளர்த்திடுக!
            ஒளியை, மின்னலை, சுடரை, மணியை
            ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை –
            ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
            அனைத்தையும் வாழ்த்துகின்றோம்;
            ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.
           

                                                

No comments: