பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 10, 2011

'இலங்கேஸ்வரன்' ஆர்.எஸ்.மனோகர்.

'இலங்கேஸ்வரன்' ஆர்.எஸ்.மனோகர்.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.


சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம். இவருடைய நாடகங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", போன்ற படங்களைச் சொல்லலாம்.


1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.

அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார்.

திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். அவை எல்லாவற்றையும் சொல்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அந்த படங்களின் பெயரை யெல்லாம் வெளியிட முடியவில்லை. வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்!

1 comment:

Anonymous said...

Rs manohar sir is an excellent actor Tanx for the details.you have given.no one can fill his place