பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, February 25, 2012

"இனியவை நாற்பது" (20)

20. இனியது இருபது.

நம்மைச் சுற்றி எத்தனை வகை மனிதர்கள். நம்மிடம் உயிருக்குயிராகப் பழகும் நற்பண்புள்ள நண்பர்கள்; நம்மீது அழுக்காறு கொண்டவர்கள்; வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நமக்குத் துணை நிற்பவர்கள்; நமக்கு எப்போது தீங்கு விளைக்கலாம் என்று காத்திருக்கும் வஞ்சகர்கள் இப்படி எத்தனை வகை மனிதர்கள். இவர்களோடு பழகும்போது நமக்கு இவர்களின் ஆழ்குணம் தெரிவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பம் அமையும் போதுதான் யார் எப்படி என்று தெரிந்து கொள்ள முடியும். எதிர் வீட்டில் ஒருவன் யாரோடும் அதிகம் பேச மாட்டான். பார்வைக்கு அவன் ஒரு அகம்பாவம் பிடித்தவன் போல் தோன்றுவான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டுத் தன் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் வேறொரு வண்டி மோதி சாலையில் விழுந்து விட்டான். அங்கு முதலில் ஓடிப்போய் அவனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்து, அவன் நலம் பெறும் வரையில் அவனோடு பாடாய்ப் பட்டான் எதிர் வீட்டுக் காரன். அங்கிருந்த அனைவருக்கும் இது புதிராக இருந்தது. ஆனால் மற்றவர்களோடு நல்லவன் மாதிரி பழகிவிட்டு, பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பிறகு வஞ்சக எண்ணத்துடன் ஒருவன் பல தீய காரியங்களைச் செய்து மாட்டிக் கொண்டான். அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது பார்வையில் ஒருவனை எடை போட முடியாது. அவனுடைய குணங்களை அறிந்துதான் புரிந்து கொள்ள வேண்டுமென்று. தேர்ந்து ஆய்ந்து நல்லவர்களோடு மட்டும் பழக வேண்டும். வஞ்சக குணம் கொண்டோரை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது இனிமையானது என்கிறது பாடல்.

தெருவில் ஒரு பெரியவர். மரியாதைக் குரியவர். அன்பும் பண்பும் உடைய பெரியவர். பலருக்கும் அவர் பல சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளைச் சொல்லியும், அவரே அலைந்து பிறருக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொடுக்கவும் செய்வார். பிரச்சினைகளோடு அவரிடம் செல்பவர்களுக்கு அந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பற்றி அறிவுபூர்வமாக ஆலோசனைகளைச் சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவரின் சொற்களை மரியாதையுடன் ஏற்று நடந்து கொள்வது இனிது.

முதலிலேயே சொன்னபடி நம்மைச் சுற்றி ஏராளமான மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் இப்படி எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. இவை பறவைகள் தானே, அவை மிருகங்கள் தானே, என்று ஒதுக்கிவிட்டுவிடாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும், பாசத்துடன் பழகுதல் வேண்டும். இறைவன் படைத்த உயிர்களில் பாகுபாடு எதற்கு அனைத்துக்கும் என்னென்ன தேவைகளோ அதற்கேற்றாற்போல உதவி புரிதல் வேண்டும். வள்ளலார் பெருமான் சொன்னார், ஆருயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டுமென்று. அதனைக் கடைப்பிடித்தல் இனிது.

அந்தப் பாடல் இதோ:

"சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது."

சலவர்: வஞ்சனை புரிபவர்.

பொருள்: வஞ்சக எண்ணம் கொண்டவர்களை விலக்கிவிடுதல் இனிமை; அறிவுடைய பெரியோர்கள் சொற்களைப் போற்றுதல் இனிமை; உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளிடத்தும் அவற்றிற்கு ஏற்றார்போல அன்பு செய்தல் இனிமை.

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

R.Srishobana said...

அருமையான ஆக்கம் ஐயா...படிப்பதற்கும் இனிமையாக உள்ளது...நன்றி ஐயா...