பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 23, 2011

மராத்தியர் வரலாறு - Part 15


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 15

ஆற்காட்டு நவாபிடமிருந்து நமது கவனத்தைச் சிறிது தெற்கே திருப்புவோம். முன்பொருமுறை தஞ்சை மகாராஜா ராமேஸ்வரம் போய்விட்டுத் திரும்பும் போது ராமநாதபுரத்தை ஆண்டு வந்த மறவர் குல மன்னர் ஒருவர் வயது முதிர்ந்த பெரியவர் தஞ்சை மன்னனைத் தன் அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்ததைப் பார்த்தோம் அல்லவா. அப்போதிருந்து தஞ்சை மன்னர்களும் ராமநாதபுரத்து மன்னர்களான சேதுபதிகளும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள்.

நாம் சென்ற பகுதியில் சொன்ன ஆற்காட்டு நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையே சண்டை
நடந்த காலத்தில் ராமநாதபுரத்தை வயதில் இளையவரான சேதுபதி ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கும் முகமது அலிக்கும் நட்பு இருந்தது. இந்த நட்பு சாசுவதமானது என்று அவர் கருதினாரோ என்னவோ, தஞ்சை மராத்திய மன்னர்களோடு இருந்த நெருங்கிய நட்பிலிருந்து சற்று வழுவிப் போனார். தஞ்சை மன்னருக்குச் சொந்தமான பகுதிகளை ஆற்காடு நவாப் முகமது அலியின் சம்மதத்துடன் தன் வசப்படுத்திக் கொள்ளலானார். முன்பொருமுறை ராமநாதபுரம் சேதுபதி பிரதாபசிம்மரை அழைத்து மரியாதை செலுத்தினாரல்லவா, அதற்கு பதில் மரியாதையாக தஞ்சை அரசர் தனது ஆளுகைக்குட்பட்ட திருவாடனை எனும் பகுதியை சேதுபதிக்கு வழங்கியிருந்தார். அந்த மூத்த சேதுபதியின் மகன் தான் இப்போது சேதுபதியாக இருந்தவர். இவர் வயதில் இளையவர் என்பதோடு ஆற்காட்டாரின் உதவியோடு சில சில்லரை உபத்திரவங்களைத் தஞ்சை மன்னருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டி பிரதாபசிம்ம ராஜா தனது படையொன்றை மானோஜி ராவ் தலைமையில் தெற்கே அனுப்பி வைத்தார்.

மானோஜி ராவ் வழக்கப்படி தனது வீரம் செறிந்த படையோடு தெற்கே போய் ஹனுமந்த் காட், வரூர், மங்கள், குவடி ஆகிய கோட்டைகளைப் பிடித்தார். திருவாடனையையும் போரிட்டு மீட்டுத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்.

இந்த சமயம் மானோஜி ராவை அவசரமாகத் தஞ்சைக்குத் திரும்பி வரும்படி மன்னர் கட்டளையிட்டார். போர்க் களத்திலிருந்து மானோஜி ராவ் தஞ்சை திரும்பும் செய்தியை அறிந்த ஆற்காட்டு நவாப் ஆங்கில தளபதி மாஸ்டர் ஆஃப்ரி என்பவனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் தஞ்சாவூர் ராஜா ஆங்கிலேயர்களின் கொடியை அவமதிப்பு செய்தார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜேந்திர ராஜாவுக்கு மாடிக் என்பவரின் மகளான ராஜகுமாரிபாயியைத் திருமணம் செய்து வைத்தார். இது இரண்டாவது கல்யாணம். அடுத்து நாலைந்து மாதத்திற்குள் மோத்தேயின் பெண் மோகனாபாயை மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து வைத்தார்.

அப்போது புதுச்சேரியில் லாலி என்பவன் பிரெஞ்சு கவர்னராக இருந்தான். அவன் காலத்தில் அதாவது 1756இல் எந்தவித காரணமும் இல்லாமல், விரோதமும் இல்லாமல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தான். இவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று தஞ்சை மன்னர் விசாரித்த போது சரியான பதிலும் கிடைக்க வில்லை. அது குறித்த செய்தி:--

"His specific object was to recover the amount of the deed which Prathab Singh had given to Chanda Saheb for 56 lakhs but transferred to the French by Reza Saheb in lieu of the expenses incurred for the wars of the Nayaks."

சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டு வெற்றிபெற முடியாமல், தஞ்சை மன்னரிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்குப் போனான் அல்லவா, அப்போது தஞ்சை மன்னரிடமிருந்து ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சென்றான். அந்த பத்திரத்தை சந்தா சாஹேப் பிரெஞ்சு அதிகாரிகளிடம் அந்தப் பணத்தை தஞ்சை மன்னரிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி சம்மதம் தெரிவித்து Made Over பண்ணி கொடுத்துவிட்டான். அந்தப் பணத்தை பெறுவதற்காகத்தான் லாலி இந்த யுத்தத்துக்கு வந்தான்.

பிரெஞ்சுப் படை தஞ்சாவூர் கோட்டையை சூழ்ந்து கொண்டு முற்றுகை இட்டது. முற்றுகை இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்தது. பிரதாபசிம்ம ராஜாவும் கோட்டைக்கு வெளியே வந்து போரிடாமல், உள்ளே இருந்து கொண்டு கோட்டையைக் காவந்து பண்ணிக் கொண்டிருந்தார். தற்காப்பு யுத்தம் நடைபெற்றது. பொறுத்துப் பார்த்துவிட்டு மன்னர் ஒரு முடிவுக்கு வந்தார். தங்களது படைபலம் முழுவதையும் ஒன்று திரட்டிக் கொண்டு ஒரு நாள் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்து பலமாக பிரெஞ்சு படை மீது மோதிப் போரிட்டார்.

பிரெஞ்சு வீரர்கள் ஏராளமானோர் இறந்து வீழ்ந்தனர். பலர் தங்கள் பிரதேசத்துக்குத் தப்பி ஓடிவிட்டனர். பயந்து போன லாலி தன் பீரங்கிகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் காரைக்காலுக்கு ஓடிப்போனான்.

"The Tanjore troops subjected the French to severe hardship and the mutilated army commanded by the unlucky Governor reached Karaikal on 18th August 1758".

இதனை அடுத்து மகாராஜா தன் ராஜ்யத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தியானது: "நமது ராஜ்யத்தில் நாம் கடைப்பிடித்து வரும் வழக்கமானது, ஐரோப்பியர் எவராவது நமது ராஜ்யத்திற்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் நமது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார்களோ அங்காங்கு சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பதுதான். அதன் விவரம் ஐரோப்பியர் நடந்து வந்தால் ஒவ்வொருவருக்கும் ஐந்து வராகன் வீதமும், குதிரைமீது ஏறி வந்தால் அதற்கு அதிகமாகவும், பல்லக்கில் உட்கார்ந்து வந்தால் விசேஷமான வரிவிதிப்பும், சேனை போன்ற பரிவாரங்களோடு வந்தால் மகாராஜாவுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி அவர் முடிவு செய்யும் தொகையை வரியாக வசூலிக்க வேண்டுமென்பது விதி."

"தற்சமயம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் மன்னருக்கு வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அதிலும் படையோடு வருபவர்கள் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். இனி ஐரோப்பியர்கள் எந்தத் துறைமுகத்திலிருந்து வந்தாலும் வரிவிதிப்பு கிடையாது." இதுதான் அரசர் அறிவித்த புதிய உத்தரவு.

இதன் பிறகு புதுச்சேரி கவர்னர் முஸேலாலி சென்னை கோட்டைக்குச் சென்று அதனைப் பிடிக்க முற்றுகை இட்டான். அங்கு கவர்னர் லாரன்சும், கர்னல் டிராப்பரும் கோட்டைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த பிரெஞ்சு கவர்னர் திடுதிப்பென்று தங்கள் கோட்டையைத் தாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவர்கள் தஞ்சை மன்னருக்கு உதவி கேட்டு தூது அனுப்பினார்கள்.

அதையடுத்து பிரதாபசிம்ம ராஜா முகமது யூசுப்கான் என்பவர் தலைமையில் திருச்சினாப்பள்ளியிலிருந்து குதிரைப் படையொன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குதிரைப் படை சென்னை கோட்டையை அடைந்த போது கோட்டையைச் சுற்றி லாலியின் படைகளும், கோட்டைக்குள்ளிருந்து ஆங்கிலப் படைகளும் போருக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. அப்போது வெளியிலிருந்து அங்கு போன திருச்சினாப்பள்ளி குதிரைப் படை கும்மந்தான் முகமது யூசுப்கான் தலைமையில் பிரெஞ்சுக் காரர்களைச் சூழ்ந்து கொணது. இப்படியொரு ஆபத்து வரும் என்பதை எதிர்பார்க்காத லாலியின் பிரெஞ்சுப் படை புதுச்சேரியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது.

சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள் காரைக்காலைப் பிடிப்பதற்காக லார்டு பிகாட் என்பவர் தலைமையில் வந்திருந்தனர். அவர்கள் காரைக்காலைப் பிடிக்க உதவி கேட்டனர். அதற்கும் பிரதாபசிம்ம ராஜா படைகளை அனுப்பி உதவி செய்தார். அதன் பிறகு புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட ஆங்கிலேயர்கள் உதவி கேட்க அப்போதும் மன்னர் உதவி செய்தார். இப்படி ஆங்கிலேயர்களுக்கு அடுத்தடுத்து தஞ்சை மன்னர் உதவிகளைச் செய்து வந்தார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆங்கில கவர்னர் லார்டு பிகாட் (Lord Piggot) இந்தியாவில் தன் பணியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு தூதரைத் தஞ்சாவூருக்கு அனுப்பி தஞ்சை மன்னருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது முதற்கொண்டு ஆங்கிலேயர்களுக்குத் தஞ்சை ராஜ்யத்தின் மீது அக்கறை உண்டாயிற்று. இருவரும் ஒருவருக்கொருவர் ஆபத்துக் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது என்பதை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக் கொண்டனர்.

(இனியும் தொடரும்)




மராத்தியர் வரலாறு - Part 14

                                                                    முகமது அலி

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 14

சந்தா சாஹேப் பாளையம் (கோயிலடி) எனப்படும் கிராமத்துக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த மானோஜி ராவிடம் சரணடைந்ததையும், அவன் பாதுகாப்போடு தஞ்சாவூருக்கு அனுப்பப் பட்டதையும் பார்த்தோம்.

இனி அங்கு திருச்சினாப்பள்ளி போர்க்களத்தில் என்ன நடந்தது பார்க்கலாம். மறுநாள் பொழுது விடிந்தது. ஸ்ரீரங்கத்தில் சந்தா சாஹேபின் படை முகாமிட்டிருந்த பகுதியில் ஒரே பரபரப்பு. சந்தா சாஹேபை காணோம். வீரர்கள் குழப்பமடைந்தார்கள். தளபதிகள் கூடிப் பேசினார்கள். தலைவன் இல்லாமல் படை என்னதான் செய்ய முடியும்? முகமது அலிக்குச் செய்தி போயிற்று. போர்க்களத்திலிருந்து திடீரென்று சந்தா சாஹேப் மாயமாய் மறைந்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவியது. அவன் எங்கு போயிருப்பான் என்று நாலாபுறமும் வீரர்கள் தேடி அலைந்தனர்.

ஒரு நாள், இரண்டு நாள் குழப்பத்தில் கழிந்தன. மூன்றாம் நாள் ஒரு செய்தி கிடைத்தது. சந்தா சாஹேப் மராத்தியப் படை வீரர்களிடம் சரண் புகுந்துவிட்டான். அவன் இப்போது தஞ்சை சிறையில் பத்திரமாக இருக்கிறான் என்பது அந்தச் செய்தி.

முகமது அலி திருச்சியில் இருந்து தளபதி மானோஜி ராவுக்கும், மகாராஜா பிரதாபசிம்மருக்கும் கடிதங்கள் எழுதினான். மிகப் பணிவாக எழுதியிருந்தான் அந்தக் கடிதங்களை. மகாராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் மகாராஜாவின் அனுக்கிரகத்தினால்தான் தான் உயிர் வாழ்வதாகவும், மகாராஜா செய்திருக்கிற உதவியால்தான் தான் இழந்த அரசை மீண்டும் பெற முடிந்தது என்றும், தங்களுக்கு வந்து நேரில் மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்த நேரத்தில் மோதின்கானும், சந்தா சாஹேபும் படையெடுத்து வந்து தொல்லை கொடுத்து விட்டார்கள் என்றும் எழுதியிருந்தான்.

இவர்களால் தங்கள் ராஜ்யத்துக்கும் தொல்லைகள் வந்த போதும், வருவது வரட்டும் என்று நினைத்துத் தாங்கள் எனக்கு உதவி செய்ததால்தான் எனக்கு ஆற்காடு ராஜ்யம் மீண்டும் கிடைத்தது. ஆகையால் இப்பொழுது தாங்கள் தயவு பண்ணி என் தந்தையின் கொலைக்கு நான் பழிவாங்கும்படி, கொலைகாரன் சந்தா சாஹேபைத் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டுமாய்ப் பிரார்த்தனை பண்ணிக் கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் இருந்தது.

அது தவிர, சந்தா சாஹேபை எதிர்த்துப் போருக்கு மைசூரிலிருந்து வந்திருக்கும் நந்திராஜா, மொரார்ஜி கோர்படே ஆகியோரும் சந்தா சாஹேபைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டனர். கிழக்கிந்திய கம்பெனி ஆங்கில அதிகாரிகளோ, மிகவும் அதிகார தோரணையில் மன்னன் பிரதாபசிம்மருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் அவனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி. இவர்களையெல்லாம் மானோஜி ராவ் சந்தித்துப் பேசினார் (Troubleshooter போலிருக்கிறது). இறுதியில் சந்தா சாஹேப் தங்களிடம் சரணாகதி அடைந்து விட்டதாகவும், அவனுக்குத் தாங்கள் உயிர்ப்பிச்சை அளித்திருப்பதாகவும் சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார்.

ஆயினும் ஆங்கிலக் கம்பெனியாரின் கெடுபிடி அதிகரித்தது. முகமது அலியின் குரலும் கெஞ்சலில் இருந்து மாறுபடத் தொடங்கியது. வேறு பல ராஜ்யத்தின் படைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாலும், ஆங்கில அதிகாரிகளின் தொல்லை அதிகரித்ததாலும் இறுதியில் வேறு வழியில்லாமல் முகமது அலியிடம் சந்தா சாஹேபை ஒப்புவிக்க தஞ்சாவூர் மன்னர் சம்மதித்தார்.

சிறையில் இருந்த சந்தா சாஹேப், மானோஜி ராவிடம், தான் சரணடைந்த போதே இந்த உத்தரவாதத்தைத்தான் எதிர் பார்த்ததாகவும், இப்போது தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தி இறக்கும்படி செய்வது சரியா என்று கேட்டான். அப்படி ஒரு நிர்ப்பந்தம் இருக்குமானல், அவர்களிடம் என்னை உயிரோடு ஒப்புவிப்பதற்கு பதிலாக என்னைத் தஞ்சையில் உங்கள் கையால் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சினான்.

அவனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தஞ்சை மன்னர் சந்தா சாஹேபை தஞ்சையில் கொன்று அவன் உடலை முகமது அலிக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். *அதன்படி தஞ்சாவூரில் 17-6-1752 அன்று சந்தா சாஹேபின் தலை வெட்டப்பட்டு, தலை மட்டும் ஆற்காடு நவாப் முகமது அலிக்குத் திருச்சிக்கு அனுப்பப் பட்டது. உடல் தஞ்சையில் முதலில் புதைக்கப்பட்டது, பின்னர் அதுவும் எடுக்கப்பட்டு திருச்சி பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி அங்கு மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டது.

(*இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது.

கொவிலடியில் சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரண் அடைந்த பின், மராத்திய படைகள் பிரெஞ்சுப் படையுடன் வீரமாகப் போராடி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தது.

இந்த காரியங்களுக்காக நவாப் முகமது அலி மராட்டிய மன்னன் பிரதாபசிம்மருக்கு நன்றிக் கடனாக 10 லட்சம் பணமும், திருச்சினாப்பள்ளி ராஜ்யத்துக்கு உட்பட்ட கோவிலடி, இளங்காடு ஆகிய கிராமங்களையும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் ராஜாவுக்கு நன்கொடையாக வழங்கினார். அது போலவே புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானுக்குக் கப்பத் தொகையினை இனி ஆற்காட்டு நவாபுக்குச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு இட்டான்.

யுத்தம் தொடங்கும் முன்பாக முகமது அலி வெற்றி பெற்றால் திருச்சினாப்பள்ளி ராஜ்யத்தை மைசூர் ராஜாவுக்குத் தந்து விடுவதாக வாக்களித்திருந்தார். மைசூர் ராஜாவுக்கு அப்படி திருச்சியைத் தருவதற்கு மனமில்லாமல் இப்போது அதன்படி நடக்க இயலாது என்பதைத் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட மைசூர் ராஜாவும், முரார்ஜி கோர்படேயும் முகமது அலியின் மீது போர் தொடுத்தனர். இப்படியொரு எதிர்பாராத யுத்தம் கூட்டணிக்குள் நேர்ந்துவிட்டதை அடுத்து முகமது அலி வழக்கம் போல தஞ்சாவூர் ராஜாவிடம் உதவி கேட்டார். இவரும் படைகளை அனுப்பி வைத்தார். அப்போது நடந்த போரில் மைசூர் ராஜாவின் படைகளில் இருந்த ஏராளமான யானைகளில் ஒன்று தஞ்சாவூருக்கு ஓடிவந்து விட்டது. போரில் தஞ்சை வீரர்கள் வெற்றி பெற்றார்கள். மைசூர் படையினரிடமிருந்து பீரங்கி ஒன்றையும் தஞ்சை வீரர்கள் கைப்பற்றிக் கொண்டு வந்தனர்.

மைசூர் ராஜாவிடமிருந்து திருச்சியைக் காப்பாற்றி, அதனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, திருச்சியைச் செப்பனிட்டுவிட்டு நவாப் ஆற்காடு திரும்பினார். அங்கிருந்து ஆங்கில அதிகாரிகளைச் சந்தித்து நன்றி சொல்ல சென்னைக்கும் சென்றார்.

அப்படி நவாப் போகிற வழியில் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகையில் மொரார்ஜி கோர்படேயின் தம்பியான புஜங்க ராவ் என்பவனும், அவனது மருமகனும் தங்கள் படையோடு வந்து நவாபை வழிமறித்துத் தாக்கினார்கள். அங்கு நடந்த போரில் நவாபின் சேனை சுட்டதில் புஜங்க ராவும், அவன் மருமகனும் இறந்து போனார்கள். அதன் பிறகு நவாப் வழியில் தொல்லை எதுவும் இல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார்.

இப்படி வழியில் திருவதிகையில் தனது தம்பி புஜங்க ராவும் அவன் மருமகனும் முகமது அலியோடு போரிட்டு மாண்டு போன செய்தியை முரார்ஜி கோர்படே கேட்டு மனம் துக்கப்பட்டான். அவனுக்கு எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. மிகுந்த மன வருத்தத்துடன் தனது சொந்த ஊரான கூட்டி (Gooty) க்குச் சென்று விட்டான். மைசூர் ராஜா நந்திராஜா சில காலம் திருவானைக்காவைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்து விட்டு அவனும் ஊர் திரும்பினான்.

(இன்னும் உண்டு)


மராத்தியர் வரலாறு - Part 13


                                                         Arcot Nawab Mohamad Ali

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 13

ஒரு பிரிட்டிஷ் மேஜர் வெடித்த பீரங்கிக் குண்டு சந்தா சாஹேபின் தோழன் ஆலம் கானின் தலையைச் சுக்கு நூறாக உடைத்ததையும், அவன் படைகள் சிதறுண்டு போனதையும், பலர் முகமது அலியின் படையிடம் கைதாகினர் என்பதையும் பார்த்தோம். இனி, சந்தா சாஹேப் தொடங்கிய இந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைப் பார்ப்போம்.

ஆலம் கானின் மரணம் சந்தா சாஹேபுக்கு பேரிழப்பாக இருந்தது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று எண்ணத் தொடங்கினான் சந்தா சாஹேப். முகமதி அலியைச் சுலபமாக வென்று திருச்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பிரெஞ்சுப் படையின் உதவியோடு இங்கு வந்தால் எத்தனை எதிர்ப்பு நமக்கு. தஞ்சை படைகள் ஒரு புறம்; புதுக்கோட்டை, ராமநாதபுரம் படைகள் ஒரு புறம். மைசூரிலிருந்து வந்திருக்கும் படைகள், போதாதற்கு ஆங்கிலேயரின் படைகள் வேறு. நாம் பிரெஞ்சுக்காரர்களை நம்பினால், முகமது அலி ஆங்கிலேயர்களைத் துணைக்குக் கொண்டு வந்து விட்டானே. இப்போது என்ன செய்வது? பொறியில் அகப்பட்ட எலிபோல தவித்தான் சந்தா சாஹேப்.

என்றாலும் போர் என்று வந்தாகிவிட்டது. வருவது வரட்டும் என்று தொடர்ந்து போர் புரிந்தான். பல நாட்கள் போர் நடந்தது. சந்தா சாஹேப் ஸ்ரீரங்கத்தில் இருந்தான். திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையே காவிரி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வடபுறத்தில் தானும் பிரெஞ்சுக்காரர்கள் படையும் மாட்டிக் கொள்ள, மைசூர் நந்திராஜாவின் படைகள் மேற்கிலிருந்து தாக்க, முரார்ஜி கோர்படேயின் படைகள் ஒரு புறமும், மானோஜி ராவின் மராத்தியப் படைகள் கிழக்கிலிருந்தும் முன்னேறி வர, தெற்கே முகமது அலியின் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் தன்னை நாலா புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க விழி பிதுங்கினான். அவன் படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. நான்கு புறத்திலும் தாக்குதல் கடுமையாக நடந்தது. சந்தா சாஹேப் வெறு வழியில்லை இத்தோடு ஒழிந்தோம் என்று முடிவுக்கு வந்தான்.

சந்தா சாஹேபுக்குத் தெரிந்து விட்டது. இனி வேறு வழியில்லை. நாம் செய்த முயற்சிகளெல்லாம் வீணாகிவிட்டன. தப்பிப் பிழைத்துப் போகலாம் என்றாலோ போக வழியில்லை, எல்லா வழிகளும் எதிரிகளால் சூழப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் நம்மைப் பிடித்து விடுவார்கள். முகமது அலியிடம் என்னை ஒப்படைத்து விடுவார்களானால் அதைவிட கொடுமை வேறு வேண்டியதில்லை. அவன் நம்மைச் சித்திரவதை செய்தே கொன்று விடுவான். அவன் அப்பனை நான் கொன்றிருக்கிறேன் அல்லவா. இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கிற போது, எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி தஞ்சாவூர் மானோஜி ராவின் கொள்ளிதான். ஆகையால் அவரிடம் போய் சரணடைந்து காப்பாற்றச் சொல்லுவது ஒன்றுதான் வழி. அவர் ஒரு மூத்த போர் வீரன். இரக்க குணம் உள்ளவர். சரணாகதி என்று போய்விட்டால் நிச்சயம் அவர் நம்மைக் காப்பாற்றுவார். ஒருக்கால் நாம் அவர்களுக்குச் செய்த தீங்குகளை மனத்தில் வைத்துக் கொண்டு நம்மைக் காப்பாற்றாமல் போனால்? எது எப்படியோ, இவரைத் தவிர நமக்கு இப்போதைக்கு வேறு ஆளும் இல்லை, மார்க்கமும் இல்லை, ஆகவே மானோஜி ராவிடம் போய் சரணாகதி ஒன்றுதான் வழி என்று முடிவுக்கு வந்தான் சந்தா சாஹேப்.

சதாராவில் நம்மை விடுதலை செய்த போது ஷாஜு மன்னர் என்ன சொன்னார்? நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் தஞ்சாவூர் பக்கம் மட்டும் போய்விடாதே, ஏனென்றால் அது நம்முடைய அரசு என்று சொன்னாரே, அதை மனதில் வாங்காமல் இப்படியொரு தவறைச் செய்து பிரதாபசிம்ம ராஜாவையும் பகைத்துக் கொண்டோமே, என்று மனம் கலங்கினான்.

தஞ்சாவூர்க் காரர்களுக்கு முகமது அலியும், பிரிட்டிஷ் படையும் நண்பர்களாக இருக்கின்றனர். நிச்சயம் அவர்கள் நம்மை அவர்களிடம்தான் ஒப்படைப்பார்கள். ஆனால் முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் அவன் நிச்சயம் நம்மை உயிரோடு தோலை உரித்துச் சித்திர வதை செய்து விடுவான். ஆகையால் நடப்பது நடக்கட்டும். நம்மை பலியிடுவதானால் மானோஜி ராவே அந்தக் காரியத்தைச் செய்யட்டும், என்ன ஆனாலும் சரி முகமதி அலியின் கையில் மட்டும் மாட்டவே கூடாது என்று முடிவெடுத்தான் சந்தா சாஹேப்.

அன்று இரவு .....

திருவரங்கத்தில் சந்தா சாஹேப் படைகள் முகாமிட்டிருந்த பகுதியில் எங்கும் ஒரே அமைதி. இரவு நேரத்தில் விளக்குகள் எதுவும் இல்லாத நேரத்தில் தனது கூடாரத்திலிருந்து சந்தா சாஹேப் மட்டும் வெளியே வந்தான். அங்குக் கட்டியிருந்த தனது குதிரையை அவிழ்த்துக் கயிற்றைத் தன் கரங்களால் பிடித்துக் கொண்டான். இருளில் அவனோடு வெளிவந்த பணியாள் ஒருவனையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சத்தம் எழுப்பாமல் நடந்து சென்று பின்னர் அவன் குதிரையில் ஏறிக் கொள்ள, பணியாள் வழிகாட்டிக்கொண்டு ஓடிவர இருட்டில் கிழக்கே காவிரி ஆற்றின் கரையோடு பயணமானார்கள்.

காவிரிக் கரையோடு சில மைல்கள் ஓடிவந்த ஆளைப் பின்பற்றி சந்தா சாஹேபும் தன் குதிரையில் பயணம் செய்து ஓரிடத்துக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பகுதிக்குப் பாளையம் என்று பெயர். காவிரி நதியின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த அந்த இடத்துக்கு இப்போது கோயிலடி என்று வழங்கப்படுகிறது. அங்குதான் அப்பக்குடத்தான் எனும் பெருமாள் ஆலயம் இருக்கிறது. அந்தப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மராட்டியப் படைகள் பாடி இறங்கியிருந்த கூடாரங்கள் இருந்தன. அவற்றின் நடுவில் தஞ்சைக் கொடி பறந்து கொண்டிருந்த கூடாரத்தில்தான் தளபதி மானோஜி ராவ் தங்கியிருந்தார்.

மானோஜி ராவை எழுப்பி தான் சரணடைய வந்திருக்கும் செய்தியைச் சொல்லச் சொல்லி தன்னுடன் வந்த பணியாளை அனுப்பிவைத்தான் சந்தா சாஹேப். அந்த பணியாள் தூங்கிக் கொண்டிருந்த மானோஜி ராவின் கூடாரத்துக்குச் சென்று அங்கு காவல் இருந்த வீரனிடம் தான் வந்திருக்கும் செய்தியைச் சொல்ல தளபதி எழுந்து வந்தார்.

தன்னிடம் சரணடைய சந்தா சாஹேப் வந்திருக்கும் செய்தியறிந்து முதலில் அதிர்ச்சியடைந்தார். என்றாலும் இருட்டில் ஒருவரும் அறியாமல் தன்னைத் தேடி வந்திருக்கும் அவனை எப்படி திரும்பிப் போ என்று சொல்லுவது, அல்லது அவனை கைது செய்வது? ஒன்றும் புரியாமல் அவனைப் போய்ப் பார்த்தார் மானோஜி. அவரிடம் தன் நிலைமைகளை யெல்லாம் எடுத்துச் சொல்லி தன்னுடைய இக்கட்டான இந்த நேரத்தில் மானோஜி ராவ் மட்டும்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதை உருக்கமாக எடுத்துரைத்தான்.

முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் தன்னைச் சித்திரவதை செய்து கொல்வான். அந்த நிலை எனக்கு ஏற்படாமல் தாங்கள்தான் எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் மராத்தியப் படையிடம் சரணடைந்து விடுகிறேன். இனி தஞ்சை மன்னர் விட்ட வழி. நான் கட்டுப்படுகிறேன் என்றான்.

மானோஜி ராவ் அவனிடம், 'நீர் ஏன் தனியாக வந்தீர்? உம்மைக் காப்பாற்ற நம்மாலே ஆகாது. நீங்கள் இதுவரை செய்திருக்கும் காரியங்களினால் எங்கள் மகாராஜா உங்கள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். உம்முடைய சரணாகதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேவையானல் சிறிது பணம் தருகிறேன், அதை வாங்கிக் கொண்டு உங்கள் ஊர் பக்கம் ஓடிவிடுங்கள். அப்படி அங்கே போக விருப்பம் இல்லாவிட்டால் துணைக்கு விசுவாசமான ஆளை அனுப்புகிறேன். தெற்கு திசையில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அங்கு போய் மறைவாக இருந்துவிட்டுப் பிறகு உமக்குச் செளகரியப் படும்போது தப்பிச் சென்று எங்கு போக இஷ்டமோ அங்கு போய்விடலாம். அப்படியில்லை யென்றால் இங்கிருந்து உடையார்பாளையம் பகுதி காட்டுக்குள் போய் அங்கிருந்து வேட்டவலம், திருவண்ணாமலை, காட்டு வழியாக தப்பிப் போய் விடலாம். உமக்கு இதில் எது உசிதமோ அதன்படி செய்யும்', என்று கைகழுவி விட்டார்.

மானோஜி ராவ் சொன்ன எவையும் அவன் காதுகளில் ஏறவில்லை. ஒரேயடியாக மானோஜி ராவ் தான் தனக்கு கதி என்று அழிம்பு பிடித்தான். எனக்கு எதுவும் தெரியாது. உங்களை மட்டும்தான் நம்பி நான் இங்கு வந்தேன். நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய பெரிய உபகாரம் என்ன வென்றால், என்ன நேர்ந்தாலும் என்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்படைத்துவிடக் கூடாது. அப்படியொரு நிர்ப்பந்தம் நேர்ந்தால், அவனிடம் ஒப்படைக்காமல் அதற்கு முன்பாகவே உங்கள் மனிதர்கள் கைகளால் என்னைக் கொன்று போடுங்கள் என்றான் கண்களில் நீர் சோர. நான் உங்கள் அபயம் என்று வீழ்ந்தான் சந்தா சாஹேப்.

அவனது நிலைமை கண்டு இரக்கம் கொண்டார் பெரிய மனது உள்ள மானோஜி ராவ். 'உன்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்புவிக்க மாட்டேன், கவலைப் படாதே என்று அபயம் கொடுத்தார்.பிறகு அவனுக்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொடுத்து, அதனை பிறர் அறியா வண்ணம் ரகசியமாக வைத்திருந்தார். உடனே தஞ்சாவூருக்கு ஒரு தூதனை அனுப்பி மன்னரிடம் விவரமாக எல்லா விஷயங்களையும் சொல்லச் சொல்லி இரவே ஆளை அனுப்பினார்.

தூக்கத்தில் இருந்த ராஜாவுக்கு விஷயம் போனது. அவர் பதறித் துடித்து எழுந்து ஆலோசித்து மானோஜிக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பினார். அதில், சந்தா சாஹேப் நமக்குச் செய்திருக்கும் துரோகத்துக்கு எல்லாம், அவனிடம் இரக்கம் காட்டவே கூடாது; அவனைக் காப்பாற்றக் கூடாது. ஆனால், அவன் இப்போது நாமே கதி என்று சரணாகதி அடைந்திருக்கிறான். ஆகவே அவனை இப்போது நாம் கைவிடமுடியாது. அவனை இந்த நேரத்தில் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே அவனை உடனடியாக பிறர் அறியாவண்ணம் தஞ்சாவூருக்குத் தக்க பாதுகாப்போடு அனுப்பி வைக்கும்படி உத்தரவு அனுப்பினார். மானோஜி ராவ், மன்னர் சொற்படி அவனை பாதுகாப்பாகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார்.

(இனியும் தொடர்ந்து வரும்)

Thursday, September 22, 2011

மராத்தியர் வரலாறு - Part 12

                                              Nawab Anwarddin Khan's death in War

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 12

சதாரா சிறையிலிருந்து ஷாஜு மகாராஜாவினால் விடுதலை செய்யப்பட்ட சந்தா சாஹேப், அதோனிக்குச் சென்று அங்கு முசாஃபர் ஜங் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து ஆற்காட்டைப் பிடித்ததும், அன்வர்தின்கானைக் கொன்றுவிட்டு அவனது மகன் முகமது அலியைத் துரத்தி விட்டான் என்பதைப் பார்த்தோமல்லவா.

இனி அவன் செய்தவைகளைப் பார்ப்போம். சந்தா சாஹேப் புதுச்சேரி சென்று அங்கு பிரெஞ்சுக்காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆற்காட்டிலிருந்து ஓடிப்போய் திருச்சினாப்பள்ளியில் பதுங்கியிருக்கும் முகமது அலியைப் பிடித்துத் துரத்த வேண்டும் அதற்கு அவர்களிடம் உதவி கேட்டுப் பெற்றுக் கொண்டான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுப் பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளியை நோக்கி வந்தான்.

வரும் வழியில் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மருக்கு ஒரு தூது விட்டான். தான் ஒரு பெரும் படையுடன் திருச்சிக்குப் போவதாகவும், தனது படைகளின் வழிச்செலவுக்குக் கணிசமான பண உதவி செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கேட்டு அனுப்பினான். ராஜாவுக்கு அதிர்ச்சி. இது என்ன இவன், நம்மை எதிர்த்துப் போரிட்டு முடியாமல் ஓடிப்போனவன், திருச்சியில் மராத்தா படைகளால் சிறைபிடிக்கப்பட்டு சதாரா சிறையில் இருந்தவன், ஷாஜு மகராஜ் இவனை எச்சரித்து அனுப்பியும் இவன் நம்மிடம் வந்து வாலை ஆட்டுகிறானே என்று கோபப்பட்டார்.

ஆனால், சந்தா சாஹேப் பெரும் படையுடன் வந்திருக்கிறான்; அவனுடைய குறி திருச்சியிலிருக்கும் முகமது அலி, இப்போது அவனிடம் வம்பு எதற்கு என்று எண்ணி, அவனைத் தட்டிக் கழிக்கும் விதமாக திருச்சி முகமது அலி நம்முடைய உதவி நாடி வந்திருப்பவர், அவருக்கு எதிரியான உங்களுக்கு உதவுவது முறையல்ல என்று சொல்லி அனுப்பினார்.

இந்த பதில் சந்தா சாஹேபுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தனது படைகளைத் திருச்சிக்குப் போகாமல் தஞ்சையின் பக்கம் திருப்பினான். அவனும் ராசத் மோதிகானும் படைகளைக் கொண்டு வந்து தஞ்சாவூர் கோட்டையை முற்றுகை இட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்பு:-- "Duplex (French General at Pondichery) proposed to Chanda Saheb that he must next attack Trichinopoly wherein Mohammad Ali had taken refuge and left Pondichery on 28th October 1749 towards Trichinopoly.

On December 13, 1749 the combined forces of Chanda Saheb and Muzaffar Jung crossed the Coleroon river into the Tanjore Kingdom and in a few days reached Tanjore which they began to siege."

பிரதாபசிம்ம ராஜா தனது படைகளோடு கோட்டைக்கு வெளியே வந்து சந்தா சாஹேப் படைகளுடன் இரண்டு மூன்று முறை சண்டை செய்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தா சாஹேபின் படைகள் தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து கொள்ளை அடித்தார்கள். மகாராஜா பிரதாபசிம்மரும் அவ்வப்போது அவன் கூட்டத்தை அடித்து விரட்டிவிட்டு கோட்டையை சீரமைத்து, அவர்கள் ஊருக்குள் புகமுடியாதபடி பாதுகாப்புக்களை பலப்படுத்தினார்கள். இப்படி வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் இவனுடன் போராட வேண்டியிருப்பது குறித்து மன்னர் வருத்தமடைந்தார்.

இப்படி இந்த யுத்தம் இரண்டரை மாத காலம் நடைபெற்றது. இதனால் கோட்டைக்குள் இருந்த மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். அந்த சமயம் ஐதராபாத்திலிருந்து நிஜாமின் இரண்டாவது மகனான நாசிர் ஜங் பெரும் படையொன்றுடன் ஆற்காட்டுக்கு வந்தான். அங்கு நிஜாமின் படைகளை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு படையின் சர்தார் சேஷராயர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த செய்தி தஞ்சையில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சந்தா சாஹேபுக்குத் தெரிய வந்தது. அவன் உடனே தஞ்சை முற்றுகையை நீக்கிக் கொண்டு பிரெஞ்சுக் காரர்களின் பாதுகாப்பைத் தேடி பாண்டிச்சேரிக்கு ஓடிப்போனான்.

ஐதராபாத்திலிருந்து நிஜாமின் மகன் நாசிர் ஜங் படையுடன் வந்திருக்கும் செய்தி அறிந்து, அவர்கள் தங்களை மீண்டும் ஆற்காட்டு நவாபாக ஆக்குவார்கள் என நம்பி திருச்சியில் இருந்த முகமது அலி ஆற்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகும்போது அங்கு சந்தா சாஹேபுடன் மோதல் நிகழ்ந்தால் பாதுகாப்புக்காக முகமது அலி பிரதாபசிம்ம ராஜாவிடம் படை உதவி கேட்டார். மன்னரும் அவனுக்கு உதவியாகத் தஞ்சாவூர் படைகளை அனுப்பி வைத்தார். தஞ்சைப் படைக்கு மானோஜி ராவ் தலைமை வகித்துச் சென்றார். அவர்கள் ஆற்காட்டில் சில காலம் தங்கியிருந்து முகமது அலி அங்கு பத்திரமாக ஆற்காட்டு நவாபாக பதவி ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியையும் படைகளோடும் மானோஜி ராவ் தஞ்சை திரும்பினார். அந்த இடைப்பட்ட காலத்தில் ஐதராபாத்திலிருந்து படையோடு வந்திருந்த நாசிர் ஜங் காலமானார் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.

"At Tanjore their (Chanda Saheb) were not fruitful, the Raja procrastinated. Suddenly news reached that Nazir Jung was fairly well on his march into Carnatic with a huge army. With very great difficulty, the French troops, Muzaafaar Jung and Chanda Saheb retreated to Pondichery."

நாசிர் ஜங் இறந்த போனவுடனே சந்தா சாஹேப்புக்கு தைரியம் வந்தது. இப்போது ஐதராபாத்தின் படை நாசிர் ஜங் இல்லாமல் போரில் இறங்காது. ஆகையால் நாம் போய் திருச்சியைப் பிடித்துக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் கிளம்பிப் போனது. போகும் வழியில் அவர்கள் படை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டது.

அப்போது தஞ்சாவூரில் மராத்திய ராஜாவின் படையில் ஜமேதார் (சுபேதாருக்கு அடுத்தது) ஆலம்கான் எனும் பட்டாணிய முஸ்லீம் (ஆப்கானிய முஸ்லீம்) 100 குதிரைப் படைக்குத் தலைவனாக இருந்தான். இவன் மதுரையிலிருந்து வந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவன். இவனுக்கு ஏதோ காரணமாக மகாராஜா பிரதாபசிம்மரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அவன் ராஜாவிடம் சென்று தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கியை வாங்கிக் கொண்டு வேலையைவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேரே போய் சந்தா சாஹேபின் படையில் சேர்ந்து கொண்டான்.

ஆற்காட்டுக்குப் போய்விட்டு முகமது அலி திருச்சிக்கு வந்திருந்தான். அந்த நேரத்தில் சந்தா சாஹேப் திருச்சி மீது படையெடுக்கும் செய்தி அறிந்து அவன் தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டு தூது அனுப்பினான். தஞ்சை ராஜா 15000 வீரர்களையும், 1000 குதிரை வீரர்களையும், பெரிய பீரங்கிகள், நிறைய உணவுப் பொருட்கள் அனைத்தையும் மானோஜி ராவ் தலைமையில் அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானும் படைகளும் உணவுப் பொருட்களும் அனுப்பி வைத்தார். ராமநாதபுரம் சேதுபதி ராஜாவான உடையத் தேவரும் தனது படைகளை உதவிக்கு அனுப்பி வைத்தார். மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தளவாய் நந்தராஜ் எனும் சர்தாருடன் பெரும் படை உதவிக்கு வந்தது. ஏற்கனவே திருச்சியை ஆண்ட முரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்குத் துணையாக நின்றான். இப்படி பல ராஜ்யத்துப் படைகளோடு சந்தா சாஹேபை எதிர்க்க முகமது அலி தயாராக ஆனார்.

ஒரு புறம் முகமது அலியின் ஆதரவுப் படைகள்; மறுபுறம் சந்தா சாஹேபும் அவனது ஆதரவுக்கு பிரெஞ்சுப் படைகளும் போருக்கு ஆயத்தமாக நின்றன. முகமது அலிக்கு ஆதரவாக தஞ்சையின் மானோஜி ராவ் ஒரு வீரம் செறிந்த போரைச் செய்தார். பீரங்கிகளின் முழக்கம் வெகு தூரம் கேட்டுக் கொண்டிருந்தது. யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஏராளமான யானைகள், குதிரைகள், வீரர்கள் செத்து விழுந்தனர். யுத்த களத்தில் கழுகுகள் பிணங்களைக் கொத்தித் தின்றன.

அப்போது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் படையொன்று வந்து சேர்ந்தது. அந்தப் படையின் மேஜர் மானோஜி ராவிடம் சண்டைக்கு என்ன காரணம் என்று கேட்டார். மானோஜி ராவ் நடந்த வரலாற்றை அவருக்கு எடுத்துக் கூறினார். சந்தா சாஹேப் மீது ஆத்திரமடைந்த அந்த ஆங்கில மேஜர் உடனே ஓடிப்போய் ஒரு பீரங்கியை இயக்கி நாலைந்து முறை சந்தா சாஹேப் படையை நோக்கிச் சுட்டார். அப்போது கூடாரமொன்றில் இருந்த சந்தா சாஹேபின் படைத்தலைவன் ஆலம்கானின் தலை சுக்குநூறாக உடைந்து போயிற்று.

அந்த சமயம் பார்த்து தஞ்சை மராத்திய படைகள் ஆலம்கானின் படைகளின் மீது விழுந்து தாக்கினார்கள். ஆலம்கான் படை சின்னாபின்னமடைந்தது. உயிர் இழந்தவர் போக எஞ்சியிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இப்பையாக ஆற்காட்டு நவாப் முகமது அலியின் வெற்றி தஞ்சாவூர் மராத்திய படையினரால் சாதிக்கப்பட்டது.

(இனியும் தொடரும்)







மராத்தியர் வரலாறு - Part 11


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 11

ஆற்காட்டு நவாப் அன்வதீர்கான் படை திரட்டிக் கொண்டு வந்து தஞ்சாவூர் மீது போர் தொடுப்பதற்காகப் பசுபதிகோயில் கிராமத்துக்கு அருகில் ஒரு திடலில் முகாமிட்டிருந்தான் என்பதையும், அவனை எதிர்த்துப் போரிட தஞ்சை மன்னர் பிரதாபசிம்ம ராஜா ஒரு பெரும் படையை கோவிந்தராவ், மானோஜி ராவ் ஆகியோர் தலைமையில் பசுபதிகோயிலுக்கு அனுப்பினார் என்பதைப் பார்த்தோம் அல்லவா.

இவ்விரண்டு படைகளும் விடியற்காலை நேரத்தில் எதிர் எதிரே வந்து மோதிக் கொண்டன. போர் தொடங்கியது. தஞ்சாவூர் சேனைக்கு மானோஜி ராவ் தலைமை ஏற்றிருப்பது அந்த படை வீரர்களுக்கு தெம்பைக் கொடுத்தது. அவர் ஒரு மாபெரும் வீரன், அவர் தலைமையில் போரிடுவது சாதாரண வீரனுக்குக் கூட பெருமை தரக்கூடியது. போர் உக்கிரமாக நடந்தது. தஞ்சை வீரர்கள் ஆக்ரோஷமாகப் போராடினார்கள். எதிரியின் வஞ்சகம், தேவையில்லாமல் தம் மீது போர் தொடுத்தது இவையெல்லாம் சேர்ந்து தஞ்சை படையை மிக உக்கிரமாகப் போர் செய்யத் தூண்டியது.

அநியாயமாக நம் மீது படையெடுத்து வந்த அன்வதிர்கானின் படை மீது தஞ்சை வீரர்கள் இடிபோல் விழுந்து தாக்கினார்கள். இவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆற்காட்டு வீரர்கள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் போட்டது போட்டபடி ஓடத் தொடங்கினார்கள். தஞ்சை வீரர்கள் அவர்களுடைய பீரங்கிகளை பறித்துக் கொண்டார்கள். ஆற்காட்டு படை வீரர்களைத் தப்பி ஓடவிடாமல் தடுத்து ஏராளமானவர்களைக் கொன்று குவித்தார்கள் தஞ்சை வீரர்கள். ஆற்காட்டு படையில் வந்திருந்த பெரிய பெரிய சர்தார்கள் கூட தஞ்சை தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் துவங்கினார்கள்.

போர்க்களத்தில் ஓர் அதிசயம். ஆற்காட்டாரின் போர் யானை உடலெங்கும் தஞ்சை வீரர்கள் எறிந்த ஈட்டிகள் குத்தியிருக்க அது அசையாது ஓரிடத்தில் நின்றுகொண்டே உயிரை விட்டது. தஞ்சை வீரர்கள் அந்த யானையின் மீது ஏறி, அதன் மீது கட்டப்பட்டிருந்த அம்பாரியை அறுத்து உடைத்து தூர வீசினார்கள். இந்த சந்தடியில் நவாப் அன்வதீர்கான் தஞ்சை வீரர்களிடம் மாட்டிக் கொண்டான். உடனே மராத்திய வீரர்கள் அவனை வெட்ட வாளை ஓங்கிக் கொண்டு பாய, அவன் பயந்து அலறினான். "பிரதாபசிம்ம ராஜா மீது ஆணை! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று ஓலமிட்டான். தங்களது ராஜா மீது ஆணை என்று அவன் கத்தினதும், மராத்திய வீரர்கள் தயங்கி நின்றார்கள் என்ன செய்வது என்று தெரியாமல். அன்வதீர்கான் பிரதாபசிம்ம ராஜாவின் பெயரால் உயிர் பிழைத்தான்.

உடனே தஞ்சாவூர் கோட்டையில் இருந்த பிரதாபசிம்ம ராஜாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் அன்வதீர்கான் நவாபின் சுபேதார் ஆனபடியால் அவனை ஒன்றும் செய்யாதீர்கள், விட்டுவிடுங்கள் என்று உத்தரவிட்டார். தஞ்சாவூர் படைகள் அவனை விரட்டி அடித்துவிட்டு வெற்றி நடைபோட்டு தஞ்சாவூர் திரும்பினார்கள்.

தனக்கு உயிர் பிச்சை கொடுத்து, தன்னை வாழவைத்த பிரதாபசிம்மருக்கு அன்வதீர்கான் வஸ்திரங்களும் கொடுத்தனுப்பி அத்தோடு ஒரு கடிதமும் அனுப்பியிருந்தான். இவற்றை ராஜாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லி வீரர்களிடம் கொடுத்தனுப்பிவிட்டு அவன் ஆற்காடு போய்ச்சேர்ந்தான். இந்த போரில் ஆற்காடு படையில் பங்கு கொண்ட ஒரு வெள்ளை யானை, உயிரோடு தஞ்சாவூர் சேனைக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் அங்கு சதாராவில் சிறையில் கிடந்த சந்தா சாஹேப் என்ன ஆனான் என்று பார்க்கலாமா? அவன் அங்கு நீண்ட காலம் சிறையில் இருந்ததைக் கண்டு சதாரா மன்னர் ஷாஹு ராஜா, கைதியான சந்தா சாஹேபிடமிருந்து ஏழு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அவனை விடுதலை செய்து போகச் சொல்ல உத்தரவிட்டார். அவன் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அவனை ராஜா எச்சரித்து அனுப்பினார். நீ எங்கு போகவேண்டுமோ போ, ஆனால் தஞ்சாவூரில் இருப்பது நம்ம ராஜ்யம், அங்கு போய் வாலாட்டினாயோ, உன்னை சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்து அனுப்பினார் ஷாஜு ராஜா.

விடுதலையான சந்தா சாஹேப் சதாராவிலிருந்து புறப்பட்டு வருகின்ற வழியில் அதோனி (இப்போது ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது) சென்று அங்கு ராஸ்த் மொகிதீன் கான், நிஜாமின் பேரன் முஸாஃபர் ஜங், ஆகியோரோடு சேர்ந்து கொண்டு 25000 வீரர்கள் கொண்ட ஒரு படையை நிறுவினான். இந்தப் படைக்குத் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றோடு படையை நடத்திக் கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களுக்கு தூது அனுப்பி அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். அவர்களைக் கண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, அதன்படி அவர்களுடைய உதவிகளையும் பெற்றுக் கொண்டு ஆற்காடு வந்தான். ஆற்காட்டில் ஆட்சியில் இருந்த அன்வதீர்கானை போருக்கு அழைத்து அவனோடு போரிட்டு அவனைத் தோற்கடித்தான் சந்தா சாஹேப். இந்த சண்டை ஆம்பூர் எனும் இடத்தில் நடந்தது. ஆற்காடு சந்தா சாஹேப் வசம் போயிற்று.

இப்படி அன்வதீர்கானுக்கும் சந்தா சாஹேபுக்கும் ஆம்பூரில் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஆற்காட்டில் இருந்த அன்வதீர்கானின் மகன் முகமது அலி அங்கிருந்து தப்பி ஒருவரும் அறியாமல் நாகப்பட்டினம் வந்தடைந்தான். அங்கு வந்து சந்தா சாஹேபுக்குத் தெரியாமல் தஞ்சை மன்னருக்கு ஒரு தூதுவனை கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

மிகவும் மரியாதையாகவும், மன்னரைப் புகழ்ந்தும் அந்தக் கடிதத்தில் முகமது அலி எழுதியிருந்தான். தன் தந்தை அன்வதீர்கானுக்கு சந்தா சாஹேபினால் ஏற்பட்ட கதியையும், ஆற்காடு அவன் கைக்குப் போய்விட்ட செய்தியையும் சொல்லி, தனக்கு மன்னர்தான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தான்.

என்னதான் இவனுடைய அப்பன் அன்வதீர்கான் நம்மோடு சண்டை செய்ய படையோடு வந்தவன் ஆயினும் போரில் தோற்று உயிர்ப்பிச்சை கேட்டு ஓடிப்போனான். அவனுடைய பிள்ளையான இவனை இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார் பிரதாபசிம்மர்.

இப்போது முகமது அலிக்கு நாம் அடைக்கலம் கொடுப்பதனால் சந்தா சாஹேபின் விரோதம் நமக்கு ஏற்படத்தான் செய்யும். அவன் ஒன்றும் யோக்கியன் இல்லை. அப்படி அவனால் நமக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவனை அப்போது சரியாக கவனித்து விடலாம் என்று எண்ணி, முகமது அலியைத் தஞ்சாவூருக்கு வந்துவிடும்படி செய்தி அனுப்பினார்.

தஞ்சைக்கு வந்த முகமது அலியை மரியாதையுடன் வரவேற்று மகாராஜா தன்னுடைய தோட்டத்திலேயே அவனுக்குத் தங்க இடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார். (அந்த தோட்டம் இப்போதைய தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருக்குமிடம்).

ஓடிவந்த ஆற்காட்டு முகம்மது அலி மூன்று மாத காலம் தஞ்சையில் ராஜாவின் ஆதரவில் தங்கினான். இங்கிருந்தபடியே முகம்மது அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்த தளவாய் தேவராஜனுக்கும், தென்பகுதி பாளையக்காரர்கள் அனைவருக்கும் நிஜாம் நாசர் ஜங் (இவர் ஐதராபாத் நிஜாம், நிஜாம் உல் முல்க் என்பவரின் இரண்டாவது மகன். இவனுக்குப் போட்டியாக முளைத்தவன் தான் நிஜாமின் பேரன். அவன் தான் சந்தா சாஹேபுடன் சேர்ந்து கொண்டிருக்கிற முசாஃபர் ஜங்) கடிதம் எழுதினான். இவர்கள் தவிர காளஹஸ்தி, வேங்கடகிரி பொம்மராஜா முதலானவர்களுக்கும் கடிதம் எழுதினான். இப்படி சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிரதாபசிம்ம ராஜாவிடம் சொல்லிவிட்டுத் திருச்சினாப்பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தான்.

முகமது அலி தஞ்சைக்கு வருவதற்கு சிலகாலம் முந்திதான் பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜா ராஜாவுக்கு மோத்தேயின் மகளை முதல் கல்யாணம் செய்து வைத்தான். மோத்தே என்பவரின் மகளின் பெயர் ராஜேஸ்பாயி சாஹேப். அது முடிந்து சில நாட்களுக்குள் பிரதாபசிம்மரின் மனைவி அகல்யாபாயி காலமானாள். மன்னரின் நான்காம் மனைவியான யஷ்வந்த்பாயிக்கு இரண்டு பெண்கள். அந்தப் பெண்களை மாடிக் என்பவரின் குடும்பத்திலும், நிம்பாளகர் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பினார்.

பிரதாபசிம்மருக்கு ஆசை நாயகிகள் ஏழு பேர் என்று முன்னமே சொல்லியிருக்கிறோம் அல்லவா? இவர்களில் அன்னபூர்ணாபாயி என்று ஒருத்தி. இவளுக்கு ராமசாமி, கிருஷ்ணசாமி என்று இரண்டு மகன்கள். ஒரு ராஜ ரகசியம். இவ்விரு பிள்ளைகளும் ராஜாவுக்குப் பிறக்கவில்லையாம். ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று அரண்மனையில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. இவ்விருவரில் கிருஷ்ணசாமி சீக்கிரம் இறந்து போனான். ராமசாமிக்கு 'அமர்சிங்' என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டான். இந்த அமர்சிங் 1750ஆம் ஆண்டில் பிறந்தவன். இவைகள் எல்லாம் சுமார் ஐந்தாறு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்ற சம்பவங்கள்.

(இனி அடுத்த பகுதியில் பார்ப்போமே)





மராத்தியர் வரலாறு - Part 10


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி X

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது தேவிகோட்டை. இந்த கோட்டை ஒரு மைல் சுற்றளவு உள்ளது. இதன் மதிற்சுவர் பதினெட்டடி உயரமுள்ளது. மதிற்சுவரில் ஆங்காங்கே சதுரமாகவும், வட்டமாகவும் கோபுரங்கள் அமைந்திருக்கும். கடலோரமுள்ள இந்தக் கோட்டைத் தங்களுக்குப் பயன்படும் என்று ஆங்கிலேயர்கள் அதனை வாங்கிக் கொண்டார்கள். அந்தத் தீவினருகில் ஒரு ஆங்கிலேயர்களுடைய கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அந்த கப்பலுக்குள் இருந்தப் பொருட்களை தஞ்சாவூர் ராஜாவின் ஆட்கள் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு ஈடாக அந்த தேவிகோட்டைத் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஆங்கிலேய வியாபாரிகள் அங்கு தங்கிவிட்டனர்.

இந்த தேவிகோட்டை தஞ்சை மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இதில் அன்னியர்கள் வந்து தங்கள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்துக் கொண்டதனால் கோபமடைந்த பிரதாபசிம்ம ராஜா தனது படைத்தலைவர் மானோஜி ராவுடன் ஒரு படையை அனுப்பி தேவிகோட்டையில் தங்கியிருந்த ஆங்கில வியாபாரிகளைத் துரத்திவிட்டு அதனை கையகப் படுத்திக்கொண்டு, அந்தக் கோட்டைக்குக் காவலாக ஜாபர் சாஹேப் என்பவனை நியமித்துவிட்டு வரச் சொன்னார். மானோஜி ராவும் அப்படியே செய்தார்.

சிலகாலம் கழித்து தேவிகோட்டையிலிருந்து விரட்டப்பட்ட ஆங்கிலேய வியாபாரிகள் தங்கள் படை பலத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் தேவிகோட்டையைப் பிடிப்பதற்காக வந்தனர். இந்த செய்தி அறிந்த மன்னர் பிரதாபசிம்மன் தனது படைகளை அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்ட ராஜாவின் படைகள் கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்தனர். பல குதிரைகள் ஆற்று மணலில் புதையுண்டன. படை வீரர்கள் சிலரும் வீரப்பா என்கிற ஒரு தளபதியும் இறந்து போயினர்.

இந்த எதிர்பாராத நிகழ்ச்சியினால் சோர்ந்து போன மன்னர் பிரதாபசிம்மர் ஆங்கிலேய வியாபார கம்பெனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். யுத்த செலவுக்காக ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர் ராஜாவிடம் பணம் கேட்டனர். அந்த உடன்படிக்கையின்படி யுத்த செலவுக்காக பணமும், குப்பியின் மகன் காட்டுராஜா இருந்தானல்லவா, அவனை விரட்டிவிட்ட பிறகு ஆங்கிலேயர்களிடம் புகலடந்திருந்தான், அவன் செலவுக்காக 40000 பணமும் ராஜா கொடுத்தார். தேவிகோட்டையை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்காக ஆங்கிலேய வியாபாரிகள் ராஜாவுக்கு வருஷத்துக்கு 1100 வராகன் வாடகை கொடுப்பதாகவும் உடன்பட்டனர். இந்த நிகழ்ச்சி 1749இல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐதராபாத் நகரத்தில் இருந்த நிஜாம் ஷாஜதீகான் என்பவன், தெற்கே நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் அடைபட்டிருப்பது குறித்து, தான் இருக்கும்போது இப்படியெல்லாம் நடந்து விட்டதே என்று அவனுக்குக் கோபம் இருந்தது. சந்தா சாஹேபும், தோஸ்த் அலிகானின் மகன் சப்தர் அலிகானும் பிரெஞ்சு படைகளின் ஆதரவோடு திருச்சினாப்பள்ளிக்குப் போய் அந்த ராஜ்யத்தின் பெண் அரசியை நீக்கிவிட்டுத் தான் பிடித்துக் கொண்டதும், தஞ்சாவூர் மராட்டிய ராஜா சதாராவிலிருந்து மராட்டியப் படைகளை வரவழைத்து அவர்களுடன் தன் படைகளையும் அனுப்பி போரில் வென்று சந்தா சாஹேபை சதாராவுக்கு சிறையில் அடைக்க அனுப்பி வைத்த செய்தியையும் நிஜாம் கேள்விப் பட்டிருந்தான்.

அந்த நேரத்தில் திருச்சியில் முராரி ராவ் கோட்டையை கவனித்து வந்தான். அந்த நேரத்தில் ஐதராபாத் நிஜாம் தனது படைகளை அனுப்பி திருச்சினாப்பள்ளியை முற்றுகை இட்டார். திருச்சி கோட்டை மிகவும் வலுவானது. சுமார் ஆறு மாத காலம் கோட்டையை முற்றுகை இட்டு, ஒரு வழியாக முராரி ராவை கோட்டையை விட்டு வெளியே வரவழைத்து துரத்திவிட்டு கோட்டையை அன்வர்தின் கான் வசம் கொடுத்து விட்டார் நிஜாம். இப்போது ஆற்காட்டோடு, திருச்சினாப்பள்ளியும் அன்வர்தின்கான் வசம் போயிற்று.

"The success of Marathas greatly perturbed the aged Nizam and he personally undertook an expedition to the South in order to settle matters. When the Nizam arrived with a large army at Arcot in March 1743 all the Chiefs of the Country promptly submitted to him, while Murari Rao was ordered to quit Trichinopoly and Anwarddin was made the Nawab of Arcot."

ஆற்காட்டு நவாப் அன்வர்தின்கான் நிஜாமிடமிருந்து எப்படி ஆற்காட்டையும், திருச்சினாப்பள்ளியையும் பெற்றார் என்பதன் வரலாறு இது.

ஆற்காடு சுபாவும், திருச்சினாப்பள்ளி சுபாவும் தன் அதிகாரத்துக்குள் வந்த பிற்பாடு அன்வர்தின்கானின் தனது மகன் மாபோஸ்கானை தஞ்சாவூர் சென்று தங்களுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை பெற்று வரும்படி அனுப்பினான். திடீரென்று மாறிவிட்ட சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே ஆங்கில வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்து நொடித்துப் போன நிலையில் இப்போது ஆற்காட்டு நவாபுக்கு எப்படி கப்பம் கட்டுவது என்ற பிரச்சினை தலைக்குடைச்சலை தந்தது பிரதாபசிம்மருக்கு. தன்னிடம் இப்போது பணம் இல்லை, சிறிது அவகாசம் கொடுத்தால் கப்பத்தை ஒழுங்காகக் கட்டிவிடுவதாகச் சொல்லி அனுப்பினார் மன்னர்.

ஆற்காடு நவாப் இந்த சால்ஜாப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கொடுத்தால் கப்பம், இல்லையேல் சண்டை என்று தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்துவிட்டான் ஆற்காடு நவாப். படைகளுக்குத் தலையேற்று வந்தவன் மாபோஸ்கான். இப்போது பிரதாபசிம்மருக்கு தன்மானப் பிரச்சினையாக ஆகிவிட்டது. போர் செய்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று முடிவு செய்து, தனது படைகளுடன் கோட்டைக்கு வெளியே வந்து ஆற்காட்டு நவாபின் படைகளோடு சண்டை செய்தார்.

தஞ்சாவூருக்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் சண்டை நடந்தது. கடுமையான சண்டைக்குப் பின் மாபூஸ்கான் படை தோற்று ஓடத் தொடங்கியது. ஓடியவர்கள் சும்மா ஓடுவார்களா. போகும் வழியில் இருந்த கிராமங்களையெல்லாம் சூறையாடிவிட்டு ஓடினார்கள். சிலர் ஆங்காங்கே இருந்த கிராமங்களில் தங்கி விட்டார்கள். மாபூஸ்கான் சிறைப்பட்டான். சிறைப்பட்ட ஆற்காடு நவாபின் மைந்தன் மாபூஸ்கானை மன்னர் பிரதாபசிம்மர் மரியாதையோடு நடத்தி அவனையும், அவனோடு எஞ்சிய வீரர்களையும் விடுவித்து ஊருக்குத் திருப்பி அனுப்பினார். உண்மையில் இந்தப் போரின் முடிவு பிரதாபசிம்மருக்கு வெற்றியையும், மாபூஸ்கானுக்குத் தோல்வியையும் கொடுத்திருந்த போதிலும் தஞ்சை மானுவல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

"In two letters the Nawab speaks in bostful language of victories gained by his troops over those of the King of Tanjore in two separate battles. In the first of these conducted by his eldest son Mapuz khan the Tanjorean army consisted of 5000 horse and 30000 foot composed of natives of Palghat and other Countries and the loss by Tanjore amounted to 200 men killed and 400 wounded and about forty taken prisoners."

இவ்விரு செய்திகளில் எது உண்மை? மரியாதைக்குரிய குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற தலைசிறந்த ஆராச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்ளும்தான் சொல்ல வேண்டும்.

மாபூஸ்கான் தஞ்சாவூரில் தோல்வி அடைந்த விஷயத்தைத் தன் தந்தை அன்வர்தீன்கானுக்கு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். தஞ்சாவூர் ராஜா கப்பம் செலுத்தத் தவணைதானே கேட்டான், இவன் அவனிடம் சண்டைக்குப் போய்விட்டான் என்று அவன் தவறை சரிக்கட்டவோ என்னவோ நடந்தவற்றை மாற்றிச் சொல்லிவிட்டான் ஆற்காட்டு நவாப்.

அன்வர்தீன்கான் ஆற்காட்டில் இருந்து கொண்டு என்ன சொன்னான்? நமது நவாபின் படை தோற்பதாவது. பெருத்த அவமானமாச்சே! என்று கெளரவம் பார்த்து, ஒரு பெரும் படையை, குதிரைப்படை, காலாட்படை இவர்களைத் தயார் செய்து கொண்டு, பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் தஞ்சாவூர் ராஜ்யத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியம் பூண்டு புறப்பட்டான்.

வரும் வழியில் வேங்கடகிரி, வேட்டவலம் முதலான பாளையக்காரர்களையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தான். அன்வர்தீன்கான் தலைமையில் வந்த அந்தப் பெரும் படை தஞ்சாவூருக்கு ஈசானிய திசையில் (வடகிழக்கு) ஆறு மைல் தூரத்தில் பசுபதிகோயில் என்கிற கிராமத்துக்கு அருகில் ஒரு பெரிய மைதானத்தில் முகாமிட்டது. கி.பி.1751இல் நடைபெற்ற செய்தி இது.

ஆற்காட்டு நவாப் அன்வர்தீன்கான் படையெடுத்து வந்து பசுபதிகோயில் அருகில் தங்கியிருக்கும் செய்தி மன்னர் பிரதாப சிம்மருக்குச் சொல்லப்பட்டது. உடனே ராஜா தன்னுடைய படைவீரர்கள் 3000 பேரோடு பீரங்கிகள் முதலான ஆயுதங்களைக் கொடுத்து கோவிந்தராவ் சேட்டிகே, மானோஜி ராவ் ஜெகதாப் ஆகியோர் தலைமையில் போர் செய்ய அனுப்பி வைத்தார். இந்த படையோடு தஞ்சை மராட்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஏழு வீரர்களும் சென்றனர். நான்கு சர்தார்களும் உடன் சென்றனர். பசுபதிகோயில் போர் என்னவாயிற்று?

தொடர்ந்து பார்ப்போம்.







மராத்தியர் வரலாறு - Part 9


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி IX

ஒரு வழியாக பிரதாப சிம்ம ராஜாவுக்கு சர்க்கிலாக இருந்த அண்ணப்பா முதலானோரிடமிருந்து வந்த தொல்லைகள் முடிவுக்கு வர, புதிய பிரச்சினைகள் முளைத்தன. முன்பு திருச்சினாப்பள்ளி கோட்டையை சந்தா சாஹேபிடமிருந்து பிடித்து முரார்ஜி கோர்படே என்பவனிடம் ஒப்படைத்துவிட்டு மராத்திய வீரர்கள் சதாராவுக்குப் போனார்களல்லவா, அந்த முரார்ஜி தொல்லை கொடுக்கத் தொடங்கினான்.

முரார்ஜியிடம் திருச்சியை ஒப்படைத்து விட்டுப் போன பின்பு ராஜாவாக இருப்பதன் சுகம் அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. திருச்சி மட்டுமென்ன, தஞ்சாவூரையும் பிடித்துக் கொண்டால் என்ன? தஞ்சாவூர் நல்ல வளம் மிகுந்த நாடு. நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப்பட்ட ராஜ்யத்தை நாம் கைப்பற்றிக் கொண்டால் என்ன என்பது அவனது எண்ணம். இது குறித்து தனது அந்தரங்க ஆலோசகனான இன்னிஸ் கானுடன் கலந்து ஆலோசித்தான். இதைத்தான் "விநாச காலே விபரீத புத்தி:" என்று சொல்லுவார்கள்.

முரார்ஜியும் இன்னிஸ் கானும் விவாதித்தனர். தஞ்சாவூர் ராஜா நமக்கெல்லாம் எஜமானன், அதுமட்டுமல்ல அவன் இப்போது தன்னை வலுவாக ஆக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடன் இருக்கும் மானோஜி ராவ் மிகச் சிறந்த போர்த்தளபதி. ஆகையால் நேரடியாகப் போய் அவனோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. எனவே தஞ்சை ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதி கிடைத்தால்கூட போதுமே. கொடு என்று கேட்டால் தரமாட்டான். ஆகவே சண்டையிட்டு ஒரு சிறு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு விடலாம். பெரிய யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பிடித்த மட்டும் போதுமென்று ஓடிவந்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.

இரண்டாயிரம் குதிரை வீரர்களைத் தாயார் செய்து கொண்டான் முரார்ஜி கோர்படே. இந்தப் படை ரகசியமாகத் தஞ்சாவூர் ராஜ்யத்தில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவது என்று தொடங்கினார்கள். தஞ்சை படைகள் இருந்தால் ஓடிவிடுவது, இல்லாத இடங்களில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுவது இதுபோன்ற கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டான் முரார்ஜி கோர்படே.

இப்படி இவன் சில்விஷமம் செய்து வருவதைக் கண்டு பிரதாபசிம்மர் தனது படைத் தளபதி மானோஜி ராவ் தலைமையில் ஒரு சிறு படையை அனுப்பி இந்தப் பொடியனுக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டு வருமாறு பணித்தார்.

மானோஜி ராவ் யுத்தத்தில் புலி. பல போர்க்களங்களைக் கண்ட அனுபவஸ்தர். அவருக்கு இவன் என்ன சுண்டைக்காய். மானோஜி ராவின் படைகள் இன்னிஸ்கானைத் தேடி பல இடங்களில் அலைந்தன. அவர்களை ஒரு ஆற்றங்கரையில் கண்டார் மானோஜி ராவ். அங்கு அவர்கள் மீது பாய்ந்து தாக்கி இருநூறு பேருக்கு மேல் கொன்றுவிட்டு, ஐநூறு அறுநூறு குதிரைகளையும், வீரர்களையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தார்.

இன்னிஸ்கான் போரில் மாண்டு போனான். அவன் தொல்லை அதோடு ஒழிந்தது. தஞ்சை மீண்டும் அமைதிக்குத் திரும்பியது.

இது இப்படியிருக்க, திருச்சினாப்பள்ளியிலிருந்து போர்க்கைதியாக்கி சந்தா சாஹேபை சதாராவுக்கு அழைத்துச் சென்ற பத்தேசிங் ரெகோஜி பான்ஸ்லே என்பவர்சதாராவுக்குக் கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்தார். சந்தா சாஹேபின் நண்பன் ஒருவன் மகமது அரப் என்பவன், ஆயிரக்கணக்கான குதிரைகள், ஐந்து யானைகள், கொஞ்சம் துப்பாக்கி ஏந்திய போர் வீரர்கள் ஆகியோருடன் புதுச்சேரிக்கு வந்து அங்கு இருந்த பிரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டான் சந்தா சாஹேபுக்காக. பிரெஞ்சுக் காரர்களும் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் இருப்பது பற்றியும் அதற்குக் காரணமானவன் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மன் என்றும் சொல்லி இவர்களுக்கு எதிராகப் போரிடப்போவதாகச் சொல்லி புறப்பட்டு வந்தான் அந்த மகமது அரப்.

இவன் அங்கிருந்து நேராக உடையார்பாளையம் காட்டுப் பகுதிக்கு வந்தான். அந்த காடுகளில் ஒளிந்து திரிந்து இரவு நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தான். இப்படி அடிக்கடி திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெறுக் கொள்ளை சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தின.

இதுபற்றி புகார்கள் தஞ்சை மன்னர் பிரதாபசிம்மருக்கு வந்து சேர்ந்தன. அவர் தளபதி மல்லார்ஜி காடேராவ், மானோஜி ராவ் ஆகியோருடன் ஒரு சிறு படையை அனுப்பி கொள்ளைக்காரர்களைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார். இந்த தஞ்சாவூர் படை சுமார் ஒரு மாதகாலம் சுற்றித் திரிந்து கடைசியில் திருக்காட்டுப்பள்ளி கோட்டையின் அருகில் மகமது அரபை மடக்கிப் பிடித்தார்கள். அவனுக்குச் சொந்தமாக இருந்த யானைகள், குதிரைகள், விருதுகள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மகமது அரப்பையும் அவனது சேனை வீரர்களையும் கொன்று போட்டார்கள்.

வெற்றி வீரர்களாக ஏராளமான குதிரைகள், யானைகள் இவற்றோடு தஞ்சைக்குத் திரும்பிய இவ்விரு வீரர்களையும் மகாராஜா தக்க மரியாதைகளுடன் வரவேற்றார். அந்த இரு தளபதிகளுடைய வீரத்தைப் பாராட்டி அவ்விருவருக்கும் மகாராஜா அவர்கள் மீட்டுக் கொண்டு வந்த விருதுகள் அவ்வளவையும் அவர்களுக்கே சொந்தமாகக் கொடுத்து விட்டார்.

(இன்னும் வரும்)