பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 11, 2015

“பாரதி லீலை” 1

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதியுள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகளை பாரதி அன்பர்கள் படிப்பதற்கென்று கீழே கொடுக்கிறேன். 1938இல் வெளிவந்த இந்த நூலின் சிறப்பை இதனைப் படிக்கும்போதே தெரியவரும்.
                                                            

                                  “பாரதி லீலை”
(வாழ்க்கைக் குறிப்பு:     எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
                                                வெளியீடு: 1-7-1938. நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.

                                                         அன்னை

                                     அன்னை வடிவமடா - இவள்
                                     ஆதிபராசக்தி தேவியடா - இவள்
                                     இன்னருள் வேண்டுமடா - பின்னர்
                                     யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா.

ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு வீடு. வீட்டின் மாடியிலே திறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார்; ஆகாயத்தை அண்ணாந்து நோக்கியபடியே இருக்கிறார்; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர் போலே பார்க்கிறாரே! அவர் யார்? அவர்தான் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.

இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி "இருளாயி"யுடன் கூத்தாடுகிறாள்; இருட்டு; இருட்டு; மையிருட்டு; அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறந்த வெளியிலே உட்கார்ந்திருக்கிறார் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிறார். திடீரென்று துள்ளிக் குதிக்கிறார் பாரதியார்.

"அடே! சங்கரா! இந்த இருளைப் பாரடா! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண் மாதிரிக் காட்சி தருகிறாள் பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்" என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிறார்.

தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கிவிட்டார். அவ்வளவுதான்! அவர் மெய்மறந்து அந்த இருளிலே ஈடுபட்டார். அப்பொழுது ஓர் அழகான பாட்டுப் பிறந்தது.

"பின்னோ ரிராவினிலே - கரும்
பெண்மை அழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவ மென்றே - களி
கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடி பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா!"

இதுதான் அந்தப் பாட்டு. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார் பாரதியார். முதலாவது  'சரஸ்வதி காதல்';  இரண்டாவது 'லக்ஷ்மி காதல்'; மூன்றாவது  'காளி காதல்'.

இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்த அழகான பாட்டில் அந்தக் காளி காதல்தான் மிகவும் சிறந்தது. 'கன்னி வடிவமென்றே களி கொண்டு சற்றே அருகிற் சென்று பார்க்கையில்' என்னும் அடிவரை தாழ்ந்த குரலில் பாடவேண்டும். பாடிய பிறகு 'அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா! இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா' என்ற வரிகளையெல்லாம் உயர்ந்த ஸ்தாயியில் குரலை உயர்த்திப் பிடித்துப் பாடினால் அற்புத ரஸம் அப்படியே 'கல கல' வென்று உதிரும்.

பராசக்தி நினைவு பாரதியாரின் நெஞ்சில் எவ்வளவு தூரம் வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் போதாதா?

பிழைத்த தென்னந்தோப்பு:

"வறியவ னுடைமை - அதனை
வாயு பொடிக்க வில்லை."

ஊருக்கு வெளியே ஒரு சிறு தென்னந்தோப்பு. அத்தோப்பின் நடுவிலே ஒரு மடு. பாரதியார் தம் மனைவி மக்களுடன் அடிக்கடி அந்தத் தோப்புக்குச் செல்வார். காலையிலே எழுந்திருந்து பாரதியார் தோப்புக்குப் போய்விடுவார். சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு அவர் மனைவியாரும் குழந்தைகளுடன் அந்தத் தோப்புக்குப் போவார். காலையிலே சென்ற பாரதியார் பதினொரு மணிவரை அந்த மடுக்கரையில் உட்கார்ந்து ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். பதினொரு மணியானதும், எழுதுவதை நிறுத்திவிட்டு அந்த மடுவிலே இறங்கி நீராடுவார்; சூரியனைப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரம் இடுப்பளவு ஜலத்தில் நின்றுகொண்டு வேத மந்திரங்களை ஜெபிப்பார். ஸ்நானம் முடிந்தபின் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் இளைப்பாறுவார்; மறுபடியும் ஏதாவது எழுதுவார். சாயங்காலம் எல்லாருமாகத் திரும்பி வீடு சேர்வர். அந்தத் தோப்பு முத்தியாலுப்பேட்டை வெல்லச்சு செட்டியார் என்ற கிருஷ்ணசாமி செட்டியாருடையது.

பாரதியார் உல்லாசமாகக் காலங் கழிக்கவேண்டு மென்பதற்காகச் செட்டியார் அந்தத் தோப்பைப் பாரதியார் உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்தார். பாரதியார் குயில்பாட்டுப் பாடியதும் இந்தத் தோப்பில்தான். நிற்க

புயல் அடித்த மறுநாள் காலை பாரதியார் தமது தோப்பினைப் பார்க்கச் சென்றார். போய்ப் பார்த்தால் பக்கத்துத் தோப்புகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. ஏராளமான சேதம். ஆனால் கிருஷ்ணசாமி செட்டியாருடைய தோப்பிலோ ஒரு மரங்கூட முறிந்து விழவில்லை. அதைக் கண்டவுடனே பாரதியாருக்கு ஆனந்தம் பொங்கியது.  கிருஷ்ணசாமி செட்டியாருக்கு எவ்வித நஷ்டமும் அளிக்கக் கூடாதென்றே கடவுள் அந்தத் தோப்பில் சேதம் விளைக்கவில்லை யென்று நினைத்தார்.

உடனே கடவுளின் கருணையை வியந்து "பிழைத்த தென்னந்தோப்பு" என்ற தலைப்புள்ள பாட்டைப் பாடினார்.

பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!

சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ நுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை.

வீழ்ந்தன சிலவாம் - மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே - அதனை
வாயு பொறுத்து விட்டான்.

தனிமை கண்டதுண்டு - அதிலே
ஸார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம்
பாகு மதுரமன்றோ?

இரவி நின்றது காண் - விண்ணிலே
இன்ப வொளித் திரளாய்
பரவி யங்கணுமே - கதிர்கள்
பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே - சிறிதோர்
நிழலினி லிருந்தேன்
என்றுங் கவிதையிலே - நிலையாம்
இன்ப மறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தீ - நினையே
வாழ்த்திடுவார் வாழ்வார்
வாழ்க பராசக்தீ - இதையென்
வாக்கு மறவாதே.

பாரத ஸமுதாயம் வாழ்கவே!

"தனி யொருவனுக்கு உணவிலை யெனின்
ஜகத்தினை அழித்திடுவோம்"

ஸ்வர்க்கவாசி ஸ்ரீயுத வ.வெ.சு.ஐயர் தலைமையில் சென்னை கடற்கரையில் ஒத்துழையாமைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பாடுமாறு ஸ்ரீயுத ஐயர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது பாரதியார் "பாரத ஸமுதாயம் வாழ்கவே" என்ற பாட்டைப் பாடினார்; அதன்பின் "அல்லா! அல்லா!" என்ற பாட்டுப் பாடினார். பாட்டைக் கேட்ட மக்கள் பரவசமானார்கள். அந்த நாளையிலே மின்சார விளக்குகள் கிடையாது. கியாஸ் லைட் உண்டு. கியாஸ் லைட் கண்டிராக்டரான முஸ்லிம் ஒருவருக்குப் பாரதியாரின் அல்லாப் பாட்டைக் கேட்டதும் அளவற்ற ஆனந்தம் பொங்கிவிட்டது. உடனே அவர் ஓடிப்போய் சோடா வாங்கி வந்து பாரதியாருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து, விசிறி கொண்டு பாரதியாரின் ஆசுவாஸத்தைத் தணித்தார். அதுவே கடைசி முறையாகப் பாரதியார் பொதுக் கூட்டத்திலே தலைகாட்டியதாகும். அதன்பின் அவரது காலம் அருகி விட்டது.

ஸம்ஸார ஸாகரம்.

"ஸம்ஸாரம் என்கிற இந்த மரம் விஷ வித்திலிருந்து முளைக்கிறது. பல வகையான கர்மங்களும் இம்மரத்தின் பல்வேறு கிளைகள்; எண்ணங்கள் இலைகள்; காமமே மலர். இந்த மாதிரியான துயர்க்கடலில் பாபியாகிய யான் தவிக்கிறேன்."     -     சங்கர பகவத்பாதர்.

தாம் ஓர் இராணுவ வீரர் என்ற எண்ணம் பாரதியாருக்கு எப்பொழுதுமே உண்டு. சட்டையின் புஜம் இரண்டிலும் இரண்டு பெரிய 'சேப்டி பின்' குத்திக் கொண்டிருப்பார். மார்புப் பக்கத்திலே சட்டையில் ஒரு பெரிய பின் குத்திக் கொள்வார். இந்த மாதிரி அலங்காரம் செய்து கொள்வதிலே அவருக்கு ஆனந்தம்.

ஒரு நாள் ஆபீஸ் இல்லை. காலை நேரம். பாரதியார் வீட்டிலேயிருந்தார். அப்பொழுது அவர் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்தார். அன்று அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். நண்பரும் பாரதியாரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவியார் வந்தார்; "இந்த மாதிரி வீணாகச் சட்டையிலே 'பின்'னைக் குத்தித் துணியை வீணாக்கலாமா? எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறீர்களே" என்று சொல்லிக் கொண்டு வந்து பின்னை எறிந்து விட்டுப் போனார்.

உடனே பாரதியாரின் முகம் சுண்டிப்போயிற்று. 'ஏதடா! மூன்றாவது மனுஷர் எதிரிலே நமது மனைவி நம்மை இகழ்கிறாளே' என்ற எண்ணமோ தெரியவில்லை. தம் குழந்தையான பாப்பாவைக் கூப்பிட்டார். "பாப்பா! (சகுந்தலா) பாப்பா! அம்மாகிட்ட போயி சட்டையைத் துவைக்க வேண்டாமென்று சொல்லு' என்று உத்தரவு போட்டார்; அப்படியும் அவர் மனம் நிம்மதி யடையவில்லை;    "தம்பீ! சிறிது நேரம் இங்கேயே
உட்கார்ந்திரு. இதோ வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குள் போனார்; போய், சிறு குழந்தை மாதிரி 'விம்மி விம்மி' அழுதார்; அரைமணி நேரம் அந்த மாதிரி அழுத பின்பு கண்ணைத் துடைத்துக் கொண்டு நண்பர் இருக்குமிடத்துக்கு வந்தார். "தம்பீ! ஸம்ஸாரம் பண்ணுவதென்றால் ஸாமானியமா? எவ்வளவோ கஷ்டம்" என்று கூறினார். கவிஞர் மனம் எவ்வளவு இளகியது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இயற்கையில் ஆனந்தம்!

பாரதியார் "சுதேசமித்திரன்" உதவியாசிரியராயிருந்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னை ஜார்ஜ் டவுன், எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்தது. திருவல்லிக்கேணியிலிருந்து பட்டணம் போய் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண்டிக்குமாக அவரது மனைவியார்  பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருக்கோடிக்கு வருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி வீணாகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நடையைக் கட்டிவிடுவார். திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே ஆபீஸ் போவார்; சிற்றுண்டி யருந்தும் பொழுது யாராவது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத்தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார்; இல்லாவிடில் பட்டினிதான்!

மாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் வீழுங்காட்சியைக் காண்பதென்றால் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ்வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமனமாகும் காட்சியை அவர் கவனித்துக் கொண்டேயிருப்பார்; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டுவிடுவார். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத்தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தூரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார்.

பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரியம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களையெல்லாம் தொடுத்து ஒரு மாலையாகக் கழுத்திலே போட்டுக் கொள்வதில் அவருக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசை.

மனை மாண்பு.

"காக்கை குருவி எங்கள் ஜாதி"

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண்டிக்காக கொடுக்கும் காசைக் கண்டபடி செலவழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனைவிக்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும் வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக் கொண்டு காத்திருப்பார். பாரதியார் வீடு வந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டு வந்து கொடுப்பார். 'ஏதடா! நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே! இதை அப்படியே தின்றுவிடுவோம்' என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார்; பூனைக்குக் கொஞ்சம்; காக்காய்க்குக் கொஞ்சம் போக மீதியைத் தின்பார். என்ன மனுஷர்!

தேம்பி அழுதார்.

"இன்றைக்கு எங்கள் வீட்டில் ஸொஜ்ஜி பண்ணியிருக்கிறாள். நீயும் வா! நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். "தம்பீ! நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேண்டுமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். "அதனால் என்ன? பாதகமில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னொரு நாள் தின்றால் போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்" என்று நண்பர் தேறுதல் கூறினார்.

இருந்தாலும் பாரதியார் மேலும் மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடிய பொழுது 'ஸொஜ்ஜி' கிண்ணம் கிடைத்தது. உடனே சிறு குழந்தையைப் போலே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் தாண்டவமாடிற்று.

பாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடையவர். குழந்தை போன்ற மனம் உடையவர்.

தோழமை

"தோழனுடன் சம்பாஷிப்பதைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை" - சுகிர்லாபம்.

பாரதியாருக்கு நண்பர்களிடத்திலே அபாரமான பிரியம். ஒரு சமயத்திலே தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர் பிரசங்கமொன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். அது சரியான வெயில் காலம். பிரசங்கம் ஐந்து மணிக்கு ஆரம்பம்.

பாரதியார் என்ன செய்தார்! நடு வெயிலில் ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு பகல் சுமார் ஒரு மணிக்குத் தம் நண்பர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

"என்ன! இந்த வெயிலில் புறப்பட்டு வந்தீர்கள்?" என்று விசாரித்தார் நண்பர்.

"தம்பீ! நீ பஞ்சதந்திரக் கதை வாசித்திருக்கிறாயா? 'மித்திரனைவிடச் சிறந்தவன் வேறில்லை; மித்திரனுடன் அளவளாவுவதே இன்பம்' என்று அதிலே சொல்லப்பட்டிருக்கிறதே! தெரியுமா? நீ நல்ல பிள்ளை, அதனால்தான் வந்தேன்" என்றார் பாரதியார்.

பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பாரதி பட்டம் பெற்றது.

எட்டயபுரம் ஜோதிஷ வித்துவான் ஸ்ரீமான் குருகுஹதாஸப் பிள்ளை அவர்கள் வீட்டில்தான் பாரதியார் அடிக்கடி சல்லாபம் செய்து கொண்டிருப்பார். 1896-ம் வருஷத்திலே அவர் திருநெல்வேலி ஸென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தேறவில்லை. அவ்வருஷம் இறுதியிலே, அதாவது 1896ம் வருஷம் நவம்பர் மாதக் கடைசியிலே ஒரு நாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளையவர்கள் வீட்டிலிருந்தார். அப்பொழுது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கே யிருந்தார். அவர், நம் பாரதியார் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய்தார்.

"என்ன! வாய்ப் பேச்சுதான்! பரீக்ஷை தேற முடியவில்லையே" என்றார் அவர்.

"பரீக்ஷை தேறிப்பட்டம் பெறுவதற்காக நான் படிக்கவில்லையே!" என்று பாரதியார் பதில் கூறினார். அந்த வகையிலே நடந்த விவாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக்குச் சவால் விடுத்தார். உடனே அன்றைய மாலையே பொதுக் கூட்டத்தில் "கல்வியின் திறன்" என்பது பற்றிப் பேசப் போவதாக பாரதியார் கூறிச் சென்றார். குறித்த நேரத்தில் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பதினாலு வயது சென்ற நம் பாரதியார் கேட்போர் வியக்கத்தக்க விதமாகப் பேசினார். அன்றைய தினம் தான் குருகுஹதாஸப் பிள்ளை வீட்டில் விருதை சிவஞான யோகியாரால் "பாரதி" என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

உலாமடல்

சுமார் 250 வருஷங்களுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக, கடிகை முத்துப் புலவர் என்று ஒருவர் இருந்தார். பெத்தண்ண தளவாய், உமறு புலவர், ஆகியவர்கள் அவரது சிஷ்யர்கள். பெத்தண்ண தளவாய் எட்டயபுரத்தவர் மீது ஓர் "உலாமடல்" பாடியிருக்கிறார். அந்த உலா மடல் மிக்க சொல் நயம் பொருள் நயம் சிறந்து விளங்குவது; அந்த மாதிரி யாராலும் பாடமுடியாது என்று புகழப்படுவது. இவ்வாறு பலரும் அந்த உலாமடலைப் புகழக் கேட்ட பாரதியார் சுமார் 200 வரிகள் அதே மாதிரி ஓர் அழகான "உலாமடல்" பாடினார். பாடி, அதைச் சபையோர்முன் படித்துக் காண்பித்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. ஆனால் சில புலவர்கள் பொறாமை மிகுதியினாலே ராஜ சபையில் புகுத்த மனமில்லாதிருந்தது கண்டு பாரதியாருக்குக் கோபம் வந்தது. அவர்கள் முன்னிலையிலேயே அதைக் கிழித்தெறிந்து போட்டு வந்தார்.

'அன்று அங்கே; இன்று இங்கே'

படிப்பெல்லாம் முடிந்த பிறகு பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்து வந்தார். அப்படியிருக்கும் நாளில் அவருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ்தாபம் நிகழ்ந்தது. அதனாலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருந்தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார்.

"இது என்ன இப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதே!" என்று ஒருவர் கேட்டார்.

உடனே பாரதியார் சொன்னார்: "அன்று இராவணன் ஒரு கவியை (குரங்கை) இம்சித்தான். அதன் பயனாக அங்கே (இலங்கையில்) தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஒரு கவியை (தன்னை) இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது."

சுண்டைக்காய் பூமி

மன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினார் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா? எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் "மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்" என்ற இறுமாப்புக் கொண்டவரன்றோ நம் பாரதியார்?

"எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிறதென்று சொல்" என்று கூறி பாரதியா சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.

கருங்குரங்கு கட்டவிழப் பெற்றது

இப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரராயிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பிள்ளை அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரராயிருக்கும் காலத்தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கியிருந்தார். அது 1921ம் வருஷம். ஸ்ரீ பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றிவிட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்கு ஏதோ தாம் உபதேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஓதினார்; பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார்:

"ஐயா! இப்பொழுது நம்மிடையே பேசப்படுகிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனாதி திராவிடனைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்த்தீர்களானால் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவாயிருப்பான்" என்றார். உடனே கட்டவிழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்னபடியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலை அடைந்த அந்தக் கருங்குரங்கு.

பெரியோர் மொழி

'இரவி யெழுந்தது முதல் எற்படுவரை
இவ்வுலகு நின் புகழ் கேட்பதாக"     --     மெக்காலே.

லக்ஷமண சிங் தேவோ என்பவர் ஒரு பெரிவர்; ஆரிய சமாஜி; நேபிள்ஸ், ரோம் ஆகிய பல இடங்கள் சுற்றியவர். ஆப்பிரிக்காவில் வசித்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கிருந்து புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 வரை அவர் எட்டயபுரத்தில் வசித்து வந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை 'மிஸ்டர் பார்பா' என்று கூப்பிடுவார். 'பார்பா' என்றால் தாடி என்று பொருள். அங்கே அளவளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்ததும் "இவர் இன்னும் சில காலத்திற்கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்றாது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக்கோங்கும்" என்றார் லக்ஷ்மண் சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது.

"என்னவோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்" என்றார் லக்ஷ்மண் சிங். ஆனால் பிற்காலத்திலேதான் அது உண்மையாகி விட்டதே!

"ஷெல்லியின் கில்டு"

ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.

1902ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு "ஷெல்லியின் கில்டு" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் "இந்தியா" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம் ஸ்ரீமான் பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர். இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.

அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார்.

மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை

எட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனாலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பணித ஊழியம் புரிந்தார். அது 1904ம் வருஷத்திய நிகழ்ச்சி.

அப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு "மூடசிகாமணிகள் நக்ஷத்திர மாலை" என்று பெயர். நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா? அதே மாதிரி இருபத்தேழு விருத்தப் பாக்களாலே அந்நூலை யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார்.

மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப் பிராமணர்; வேதாந்தி. அத நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை 'பேரையூர் பங்களா'வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். "நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும். ஆனதினாலே இதைக் கிழித்தெறி" என்று பாரதியாரிடம் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.

பாதிரியார் பாராட்டு

"விளையும் பயிர் முளையிலே தெரியும்"

திருநெல்வேலி ஜில்லாவில் 'நாஸரெத்' என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே ஒரு பாதிரியார் வசித்து வந்தார். அவர் பெயர் ரெவரண்டு ஏ.கானன் மெகாஷியஸ் என்பது. அவர் அக்காலத்தில் இருந்த 'பிரைமரி போர்டு' தலைவராயிருந்தார். அந்தப் பிரைமரி பரீக்ஷை எழுதி சர்டிபிகேட் வாங்குவது ஒரு பெரிய கெளரவம் என்று அக்காலத்திய இளைஞர்கள் எண்ணினார்கள். ஆதலினாலே ஏராளமான பேர்கள் அப்பரீக்ஷைக்குப் போவதுண்டு. பாரதிக்கும் அந்தப் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்பொழுது எட்டயபுரத்தில் ஏ.வி.ஸ்கூல் என்று ஒரு பள்ளிக்கூட மிருந்தது. சங்கர ஐயர் என்பவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் எட்மாஸ்டர். அவரிடம் பாரதியார் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் பாரதியாரின் விருப்பத்துக் கிணங்கிச் சில மாணவர்களுடன் பாரதியாரையும் பரீக்ஷைக்கு அனுப்பினார்.

அந்த வருஷத்திலே சுமார் இருநூறு பேர் அந்தப் பரீக்ஷைக்குச் சென்றனர். எல்லாரும் சாத்தூரில் மேற்படி பாதிரியார் முன் ஆஜரானார். ஒவ்வொருவரையும் தமக்குத் தெரிந்த ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடுமாறு பாதிரியார் கேட்டார். பாரதியார் 'டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்ற இங்கிலீஷ் கவியை மிகுந்த உற்சாகத்துடனும், ரஸாபாவத்துடனும் அபிநய பூர்வமாகப் பாடிக் காட்டினார். அது கண்டு பாதிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டார். சங்கரய்யர் என்பவரிடம் "இந்தச் சிறுவன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் உடனே லண்டனிலுள்ள ஏதாவதொரு சர்வகலாசாலைக்கு இவனை அனுப்புமாறு இவன் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.

இளமையிலேயே பாரதியார் பாட்டிலும் கவிதையிலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

பாரதியாரும் ஸங்கீதமும்

1899 -1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீக்ஷிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீக்ஷிதர் என்பார் 'ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி' என்றதோர் அரிய ஸங்கீத நூலை இயற்றிக் கொண்டிருந்தார். எட்டயபுரம் மன்னர் அதற்கு வேண்டிய பொருளுதவி புரிந்து வந்தார். அந்தச் சமயத்திலே சென்னை சீப் செக்ரிடேரியட் ஆபீஸ் மானேஜராயிருந்தவரும் ' பிராசீன கானம்' (Oriental Music in European Staff Notation) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எம். சின்னசாமி முதலியார் எம்.ஏ. யும் அங்கே இது சம்பந்தமாக வந்திருந்தார். 72 மேளங்களின் தாரதம்யங்கள் பற்றி அங்கே சர்ச்சை நடைபெறும். சின்னசாமி முதலியாரவர்களின் இடைவிடாத நண்பராயிருந்து அவ்வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தவர் எட்டயபுரம் ஸ்ரீ குருகுஹதாஸப் பிள்ளை அவர்களாவர். அவர்களுடனே பாரதியாரும் மேற்படி சங்கீத விவாதம் நடக்குமிடத்துக்குச் செல்வார்; சென்று ராக லக்ஷணங்கள் அவற்றின் சஞ்சாரங்கள் முதலியவைகளைத் தெளிந்து அப்யஸிப்பார்.

இவ்விதமாக பாரதி ஸங்கீதத்தில் விற்பன்னரானார். ஸ்ரீ சுப்பராம தீக்ஷதர் பேரிலே பாரதி ஒரு சரம கவி பாடியிருக்கிறார். பின்னே 1908ல் பாரதி எட்டயபுரம் போயிருந்தார். அப்பொழுது ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர் அவர்களது வீட்டுக்குப் போனார். 'ஸங்கீத ஜோதி மறைந்ததே' என்று வாய்விட்டுக் கூறினார். பாரதியும் தீக்ஷதரும் முன்பு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தைப் பத்து நிமிஷம் உற்று நோக்கினார்; கலகலவென்று கண்ணீர் உகுத்தார். அவ்விடத்தை வீழ்ந்து நமஸ்கரித்து விட்டுப் போய்விட்டார்.

பூ மழை பொழிந்தார்

சுதேசிக் கப்பல் ஓட்டிய தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்த பொழுது பாரதியார் அரசாங்கத்தின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்றார். சிறையிலே தமிழ் நாட்டுத் தேசபக்தர் அடைபட்டுக் கிடந்தார். பாரதியார் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஒரு கூடை நிறையப் பூ வாங்கிக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூடை பூவையும் சிதம்பரம் பிள்ளை மீது வர்ஷித்து ஆனந்த பாஷ்பம் பொழிந்தார் பாரதியார்.

எட்டயபுரத்திலே இருக்கும் பொழுது பாரதியாருக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் அவ்வளவாக மனப்பிடித்தம் கிடையாது. சூரத் காங்கிரசின் போதுதான் இருவருக்கும் அத்தியந்த ஸ்நேகம் உண்டாயிற்று.

குவலயானந்த மொழிபெயர்ப்பு.

ஸம்ஸ்க்ருதத்திலே 'குவலயானந்தம்' என்று ஒரு நூல் இருக்கிறது. அதை ஸ்ரீ சங்கர சாஸ்திரிகள் என்பார் தமிழில் மொழி பெயர்த்தார். எட்டயபுரம் மீனாட்சிசுந்தரக் கவிராயர் அதைப் பாட்டாகப் பாடினார். எட்டயபுரம் சின்ன ராஜாவால் அது அச்சிடப்பட்டது. அப்பொழுது பாரதியார் எட்டயபுரத்திலிருந்தார். தமிழ்மொழி பெயர்ப்பிலே அணி நயத்திலே சில குற்றங்கள் இருப்பதாகவும் மூல நூலிலே அவ்விதம் இருந்திருக்க முடியாதென்றும் பாரதி சாதித்தார். சாதித்த பிறகு அதை மெய்ப்பித்தும் காட்டினார்.

உண்மையில் மூல நூலிலே அக்குற்றம் இல்லை. அப்பொழுது பாரதிக்கு அவ்வளவாக ஸம்ஸ்கிருதம் தெரியாது. இம்மாதிரி நூல் இயற்றுவது பெரிய காரியமில்லை யென்றும் அம்மாதிரி நூல் இயற்றித் தருமாறு தம்மைச் சமஸ்தானம் கேட்டுக் கொண்டால் தாம் இயற்றித்தரச் சித்தமாயிருப்பதாகவும் கூறினார்.


 யாவும் பராசக்தியே!

"அனைத்துயிரினும் அன்னை யுருவாய்
இலங்குந் தாய்திருதேவி யாரோ
அன்னவள் பொற்றி அன்னவள் போற்றி
போற்றி போற்றி!"
- தேவி மகாத்மியம் மொழிபெயர்ப்பு.

சென்னை மத்தியத் தொழிலாளர் சங்கத்துக்குப் பாரதியார் ஒரு சமயம் சென்றிருந்தார். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரும் அப்பொழுது அங்கே இருந்தார். சங்கத்திலே அன்னிபெஸண்ட் படம் மாட்டப்பட்டிருந்தது. "இந்த அம்மாளை எல்லாரும் திட்டுகின்றனரே" என்று அப்படத்தைப் பாரதியாருக்குக் காட்டிக் கூறினார் ஸ்ரீமான் முதலியார்.

"அவளையா திட்டுகிறார்கள்! அவள் பராசக்தியன்றோ?" என்று சொன்னார் பாரதியார். சொல்லிவிட்டுப் பத்து நிமிஷம் அந்தப் படத்தையே உற்றுக் கவனித்தார். கவனித்துவிட்டு

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர் மணிப்ப்பூண்"

என்ற பாட்டைப் பாடினார். அரசியல் கொள்கையிலே மாறுபட்டிருந்த போதிலும் பெண்ணத் தெய்வமாகப் பாரதியார் பாவித்திருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.



























No comments: