பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 4, 2015

மெக்சிகோ புரட்சிக்காரன் விவா சபாட்டா

.

"விவா சபாட்டா" எனும் பெயரில் 20th Century Fox கம்பெனியார் ஹாலிவுட்டில் தயாரித்த படம்; இதில் மார்லன் பிராண்டொ எனும் அந்த நாளைய புகழ் மிக்க நடிகர் நடித்திருக்கிறார். படம் வெளியான ஆண்டு 1952. எலியா கசான் என்பார் இதை டைரக்ட் செய்துள்ளார். இந்த கதை "வெல்லமுடியாத வீரன் சபாட்டா" எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், அப்படி அந்தப் படத்தில் குறிப்பிடவில்லை. இந்த படத்தில் மார்லன் பிராண்டோவுடன், ஜீன் பீட்டர்ஸ், அந்தோணி க்வின் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் உண்மையில் ஒரு புரட்சிக்காரன் எமிலியானோ சபாட்டா எனும் பெயரில் இருந்தான். அந்த நாட்டில் ஒரு சர்வாதிகாரி கொடுமையான ஆட்சி நடத்தி, விவசாயிகளிடம் கசக்கிப் பிழிந்து வறட்சிக் காலத்திலும் வரி எனும் பெயரால் விவசாயிகள் வைத்திருந்த விதை தானியத்தைக்கூட பிடுங்கிக்கொண்டு போய்விட்டான். அவனை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சபாட்டா 1900 வாக்கில் அந்த நாட்டின் சர்வாதிகாரியாகவே ஆனான். அது தொடங்கி அவன் காலமான வரையில் அந்த நாட்டை ஆண்டான்.

இந்த கதையின்படி சபாட்டா ஒரு தூதுக் குழுவினருடன் அந்த நாட்டு சர்வாதிகாரி போர்ஃபீரியோ டயஸ் என்பாரிடம் தங்கள் குறைகளை முறையிடச் செல்கிறான். ஆனால் அந்த சர்வாதிகாரி மக்களின் புகாரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விவா சபாட்டா தன்னுடைய சகோதரன் யூஃபேமியோ என்பாருடன் சேர்ந்து கொண்டு கலகத்தை உண்டாக்குகிறார்.

புரட்சியின் விளைவாக அந்த நாட்டு சர்வாதிகாரி டயஸ் வீழ்ந்தான் அவன் இடத்துக்கு விவா சபாட்டாவின் கலகப்படைத் தலைவன் ஃப்ரான்சிஸ்கோ மடேரோ நாட்டின் அதிபர் ஆனான். அப்படியும் நாட்டில் மக்கள் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. புதிய ஆட்சி, பழைய ஆட்சியை விட மிக மோசமாக நடக்கத் தொடங்கியது. விவா சபாட்டவின் சொந்த சகோதரனும் விதிவிலக்கல்ல; அவனும் சட்டத்தை மதிக்காமல் அட்டூழியங்களைச் செய்யத் தொடங்கினான். அப்போதுதான் விவா சபாட்டா தலையிட்டு விவசாயிகளுக்கு நிலங்கள் திரும்பக் கிடைக்கச் செய்தான். இது ஒரு புரட்சிக்காரனின் கதை, அந்த சபாட்டா பாத்திரத்தை மார்லன் பிராண்டோ மிக திறமையோடு கையாண்டிருப்பார்.

இந்த வரலாறு உலக நாடுகளில் அனைத்திலுமே இதே பாணியில்தான் நடந்து கொண்டிருக்கிறது அல்லவா? ஊழலை எதிர்த்து யாரோ நடத்திய உண்ணாவிரதமிருந்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு பிரபலமடைந்த அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் பதவியைப் பிடித்துக் கொண்டு, முந்தைய ஆட்சியாளர்களை நல்லவர்களாக ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும், தமிழகத்தில் டிராஃபிக் ராமசாமி என்பவர் ஊழலை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, இப்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, யார் யாரிடமெல்லாமோ சென்று காலில் விழுந்து ஆதரவு கேட்பதைப் பார்க்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. காலங்கள் மாறலாம், ஆனால் கோலங்கள் மட்டும் மாறவே மாறாது.

No comments: