பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 4

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 4

கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சி:

ராயர் பழகுவதற்கு இனியவராயினும் நடைமுறையில் நிர்வாக விஷயங்களில் மிகக் கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர். அவருடைய அமைச்சர்களின் பணிகளில் ராயர் கவனமாகப் பார்த்துக் கொண்டார். யாராவது ஏதேனும் தவறு இழைப்பாரானால், கிடைக்கக்கூடிய தண்டனை மிகக் கடுமையானதாக இருந்தது. அவர் காலத்திற்கு முன்பு, திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்று கூட இருந்தது. பல அநியாயமான வரிகளை, இந்தத் திருமண வரி உட்பட பலவற்றை ராயர் நீக்கினார். மக்கள் பட்டினியால் வருந்தக் கூடாது என்பதற்காகவும், விவசாயத்தில் மேலும் ஏராளமானவர்கள் ஈடுபட வேண்டுமென்பதற்காகவும் விளை நிலங்களை அதிகரித்தார். இதற்காக பல புறம்போக்கு நிலங்களையும், காடுகளையும் அழித்து அங்கெல்லாம் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். நீர்ப்பாசன முறைகளை முறைப்படுத்தி எங்கும் எப்போதும் விவசாயத்துக்கும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கும் பயன்படும்படியாக தன்ணீர் விநியோகம் அமைய வழிவகுத்தார். இதுபோன்ற விஷயங்களில் மன்னரே நேரடியாக கவனித்து ஆகவேண்டிய பணிகளைச் செய்து முடிக்க முன் நின்றார்.

இவர் வைணவ பக்தர் என்றபோதிலும் எல்லா மதத்தினரிடமும் பரிவும் அன்பும் கொண்டி ருந்தார். அந்நிய மண்ணில் தோன்றிய மதவழிபாடுகளான போதிலும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதவழிபாடுகளையும் இவர் போற்றி ஆதரித்தார். இவர் காலத்தில் இங்கு விஜயம் செய்த அந்நிய நாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்போஸா உட்பட பலரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மன்னர் கிருஷ்ணதேவ ராயர் பற்றியும் மிக உயர்வாக எழுதியிருக்கிறார்கள். நிர்வாகத் திறமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். மக்கள் வளத்தோடும், அமைதியோடும், திருப்தியாகவும் வாழ்ந்ததாக எழுதுகிறார்கள்.

வாழ்நாள் முழுவதுமே போர், வெற்றி பெற்ற பகுதிகளில் நிர்வாகத்தை முறைப்படுத்துதல், மக்களின் நலன்களைக் காத்தல் போன்ற பல கடுமையான பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும், கிருஷ்ணதேவ ராயர் தான் போரிட்டு வெற்றி பெற்ற பிரதேசங்களை ஒருங்கிணைத்து நாகலாபுரம் எனும் நகரத்தை நிர்மாணிப்பதில் மும்முரம் காட்டினார். ஒரு அயல்நாட்டு பயணி இவருடைய நாட்டில் நிலவிய சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார். பெரிய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது மிகக் கடுமையாக அமல்படுத்தப் பட்டிருக் கிறது என்பதை அயல்நாட்டுப் பயணிகள் புகழ்ந்து பேசுகின்றனர். மேலும் சில கடுமையான குற்றங்களுக்குக் கால், கைகளை வெட்டுதல், கொலைக்கு மரணம் போன்ற பல தண்டனைகள் இருந்ததாக எழுதுகின்றனர். கொலைக் குற்றத்துக்குத் தலையை வெட்டுதல் என்பது மரண தண்டனை.

விஜயநகரம் மிகப் பெரிய நகரமாக விளங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ரோம் நகரத்தைப் போன்றது என்பது பலரது கருத்து. தலைநகரத்தில் சுமார் ஐந்து லட்சம் ஜனங்கள் வசித் திருக்கிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாக வசதிக்காக அங்கெல்லாம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யத்தின் அரசாங்க மொழியாக கன்னடமும் தெலுங்கும் இருந்திருக்கிறது. தமிழ் பேசும் பகுதிகளில் கூட அங்கெல்லாம் நாயக்க மன்னர்கள் ஆட்சி தொடங்கிய பின்னர் முதலில் கன்னடம், தெலுங்கு, மராத்தியர் வருகைக்குப்பின் மராத்த்தி ஆகிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருந்திருக்கின்றன. இவர்கள் காலத்தில் தெலுங்கு மொழியில் பல அற்புதமான இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றன. தெலுங்கு மொழியை உச்சத்துக்குக் கொண்டுபோன பெருமை மாமன்னர் கிருஷ்ணதேவ ராயருக்கே உண்டு.

கிருஷ்ணதேவ ராயர் ஒரு சாம்ராஜ்யாதிபதி மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் அசாத்தியமான அதிகாரமும், மக்கள் மத்தியில் பெரும் புகழும் பாராட்டும் பெற்றவர். நிர்வாகத்தை முழுமையாகக் கவனித்துக் கொண்ட திம்மருசு என்பார் ராஜ்ய நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். பொதுவாக எல்லா வரலாற்று ஆசிரியர்களும் சொல்லக்கூடிய சிறப்புகள் என்னவென்றால் கிருஷ்ணதேவ ராயர் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு தன் ஆட்சியை நடத்தி வந்தார் என்பதாகும். மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்ட வர் கிருஷ்ணதேவ ராயர். தன்னுடைய ராஜ்யம் முழுவதும் பல முறை சுற்றிச்சுற்றி வந்து மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு நிர்வாகம் செய்தவர் ராயர் என்பது அவர்கள் முடிவு. மக்கள் இவரை சுலபமாக அணுகமுடியும், தங்கள் குறைகளை, வேண்டுகோளை அவரிடம் தெரிவிக்க முடியும், அப்படியொரு எளிமையைக் கடைப்பிடித்திருக்கிறார் இவர். எந்த மதத்தைப் பின்பற்றுபவராயினும் அவரவர் மத வழிபாடுகளை செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அது குறித்து யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவர் கடுமையான விதிமுறைகளை விதித்திருந்தார். மீறுபவர்கள் யாராயிருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். 

ராயர் காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சி.

விஜயநகர சாம்ராஜ்யம் கிருஷ்ணதேவ ராயர் ஆண்ட காலத்தில் கலைகளும், இலக்கியங்களும் வளர்ச்சி யடைந்தன. குறிப்பாக தெலுங்கு மொழிக்கும், தெலுங்கு இலக்கியங்களுக்கும் அது ஒரு பொற்காலம். தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், தமிழ் புலவர்கள் அவருடைய அவையை அலங்கரித்திருக்கிறார்கள். மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் பல மொழிகளைப் பேசவும், இலக்கியங்கள் குறித்து விவாதிக்கவும் தெரிந்தவர். அப்படி அவர் பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தால் அவருடைய தாய்மொழி என்பதில்கூட விவாதம் நடைபெற்றி ருக்கிறது, தெலுங்கா, கன்னடமா, துளுவா என்று. அவருடைய அவையை அலங்கரித்த பன்மொழிப் புலவர்கள் ஏராளம் அவர்களில் சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அஷ்ட திக் கஜங்கள் எனும் பெயரில் பெரும்புலவர்கள் இருந்ததாகச் சொல்வர். அந்த எட்டு பேர் யாவர் என்பதில் முழுமையான விடை இல்லை. எனினும் சிலரின் பெயர்கள் கிடைக்கின்றன. அவை அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, மாடவியாகரி மல்லண்ணா, துரியாதி, அவ்வால ராஜு ராமபத்ருடு, பிங்களி சுரானா, ராமராஜ பூஷனுடு, தெனாலி ராமகிருஷ்ணா ஆகியோரைச் சொல்லலாம்.

இவர்களில் ஆந்திரா கவிதா பிதாமஹா எனப் பெயர் பெற்றவர் அல்லசானி பெத்தண்ணா என்பவர். நந்தி திம்மண்ணா என்பவர் 'பாரிஜாத அபஹரணமு' எனும் இலக்கியத்தைப் படைத்தவர். 

ஆலய விஜயங்கள்.

ஒரு முறை ராயர் கலிங்கத்துப் போரின்போது விஜயவாடா வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். விஜயவாடா, கொண்டபள்ளி கோட்டை இவற்றைப் போரிட்டு பிடித்திருந்தார். அப்போது ஸ்ரீகாகுளம் பற்றியும் அங்கிருந்த விஷ்ணு ஆலயம் பற்றியும் கேள்விப்பட்டு அங்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது ஸ்ரீ ஆந்திர விஷ்ணு மன்னருக்குக் காட்சி கொடுத்ததாக ஒரு செய்தி உண்டு. அவர் கண்ட காட்சி பற்றி அவரே சொல்லுகின்ற செய்தி, 'ஸ்ரீகாகுளத்தில் ஆந்திரா விஷ்ணு எனக்குக் கனவில் காட்சி தந்தார். அவர் கருமேகம் போன்ற கருத்த வண்ணத்துடன், கண்கள் இரண்டும் பிரகாசிக்க, முகம் அன்றலர்ந்த தாமரைப் போல விளங்கினார்" என்கிறார். இவர் சிம்மாசலம், அகோபிலம் ஆகிய இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.


No comments: